தொடர்-15 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்
தொடர் 13: சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்
தொடர் 12: சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்
சமூக வளர்ச்சியை முன்னெடுப்பது எது ?
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு,வேலூர் புரட்சி.வேலூர் புரட்சி 1806 ஆம் ஆண்டு மே மாதத்தில் துவங்கி,பின்னர் ஜூலை மாதத்தில் வெடித்தது.
அன்றைய பிரிட்டிஷ் ராணுவ தலைமை புதிய இராணுவ விதிமுறைகளை கொண்டு வந்தனர்.இராணுவ வீரர்கள் சீருடைகளில் இருக்கும் போதும், அணிவகுப்பின் போதும் திருநீறு,நாமம் போன்ற மத,சாதி குறிகளை வெளிப்படுத்தக் கூடாது என்றும்,முகத்தை சுத்தமாக மழித்திருக்க வேண்டுமென்றும் விதிகளை கொண்டு வந்தனர்.முன்பாக, வீரர்களின் தலைப்பாகையை மாற்றி, வட்டமான,விலங்குத் தோலாலான பட்டை கொண்ட தொப்பி அணிய வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தனர்.
இதனை இந்து,இஸ்லாமிய மத நம்பிக்கையின் மீதான தலையீடுகளாக இராணுவ வீரர்கள் கருதினர்.1806 மே 6ஆம் தேதி வீரர்கள் ஆயுதங்களை ஏந்த மறுத்தனர். மே 7ஆம் தேதி புதிய தலைப்பாகை அணிய மறுத்தனர். இதனால் 10 இஸ்லாமிய வீரர்கள் 11 இந்து மதம் சார்ந்த வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.அவர்களுக்கு சவுக்கடி,பணி நீக்கம் என தண்டனை கொடுக்கப்பட்டது.
கோட்டையை கைப்பற்றிய வீரர்கள்
1806 ஜூலை 10 அன்று இந்திய வீரர்கள் ஆயுத, வெடி மருந்து கிடங்குகளுக்கு சென்று, துப்பாக்கிக் குண்டுகள் ஆயுதங்களை கையகப்படுத்தி, ஐரோப்பிய அதிகாரிகளையும்,ஐரோப்பிய வீரர்களையும் சுடத் தொடங்கினர். ஐரோப்பிய குடியிருப்புகளை தீ வைத்து எரித்தனர்.
இந்த சம்பவங்களின் போது 15 ஐரோப்பிய அதிகாரிகளும் 119 ஐரோப்பிய வீரர்களும் கொல்லப்பட்டனர். வேலூர் கோட்டை,இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இது நீடிக்கவில்லை.
ஆங்கிலேயர்கள் மிகக் கொடூரமான கொலைவெறியுடன் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள், பீரங்கி வாயில் வைத்து உடல் சிதறி கொல்லப்பட்டவர்கள், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டவர்கள் என சுமார் 800-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.பெரும் உயிர்ப்பலிகளுக்கு இடையே மீண்டும் வேலூர் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வேலூர் புரட்சி பிந்தைய காலங்களில் நடைபெற்ற பல எழுச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.இது 1857ஆம் ஆண்டில் நடந்த இந்திய ராணுவ வீரர்களின் மகத்தான எழுச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்தது.
இதற்கான வரலாற்றுக் காரணங்களை மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தால்தான் துல்லியமான மதிப்பீட்டிற்கு வர இயலும்.எதிர்கால படிப்பினைகளுக்கும் இது அவசியம்.
மார்க்சிய மதிப்பீடு
பேரா. கா.அ. மணிக்குமார்”முதல் விடுதலைப் போரின் முன்னோடி: வேலூர் புரட்சி”என்ற கட்டுரையில் இந்த எழுச்சியை ஆராய்கிறார்.(“தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும்” நூல் : பாரதி புத்தகாலயம் வெளியீடு).
புத்தகம் வாங்க இங்கே கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/thamizhnaattu-varalaru-paathaigalum-paarvaigalum/
புரட்சிக்குப் பின்னணியாக இருந்த பொருளாதார நிலையையும்,சூழலையும் அவர் விளக்குகிறார்.
“ஆங்கிலேயரின் நிலவரிச் சுரண்டல் கொள்கையினால் கடும் வறட்சி, உணவுப் பற்றாக்குறை என உருவாகியிருந்த கடுஞ்சூழலில், ஆட்சியை இழந்ததால் பாதிக்கப்பட்டிருந்த சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், அவர்களது சந்ததியினர், குறிப்பாக ஆந்திரா, ஒரிஸா மாநிலங்களுக்கிடையேயான பகுதிகளில் கம்பெனி அரசுக்குக் கப்பம் செலுத்தி வந்த கிட்டத்தட்ட பத்துப் பாளையக்காரர்கள்,ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த தருணத்திற்காகக் காத்திருந்தார்கள்.”
இந்த எதார்த்த நிலைமைகளில், இந்திய ராணுவ வீரர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தின் மீது வெறுப்படைந்து இருந்ததை அவர் சுட்டிக்காட்டி, மதம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் விளக்குகிறார்.
“….புதிய இராணுவ விதிகள், தலைப்பாகை, உடை, கிறித்தவ மதமாற்றத்திற்கான முயற்சி என்ற பீதி பரப்பப்பட்டு, அதன் மூலம் தென்னிந்தியாவில் உருவாகியிருந்த மக்களுடைய அதிருப்தியைப் பயன்படுத்தி, ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, மைசூர் சுல்தானின் ஆட்சியை மீண்டும் நிறுவத் திட்டமிடப்பட்டது. தென்னிந்தியப் படை வீரர்களும் அந்நியர் ஆதிக்கக் கொள்கையை வெறுத்து, வட்டார, அதிகாரிகளும், மொழி, சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கியெறியத் திட்டமிட்டனர்.போர் வீரர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்தி இறுதி முயற்சியை மேற்கொள்ள, ஆயுதங்களில் ஒன்றாக மதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.”
அன்றைக்கு ஆங்கிலேய சுரண்டல் கூட்டத்திற்கும்,மக்களுக்குமான முரண்பாடுகள் தீவிரமடைந்ததன் வெளிப்பாடுகளாகவே எழுச்சிகள் வெடித்தன.இவை இறுதியாக இந்திய விடுதலைக்கு இட்டுச் சென்றன.
வர்க்க முரண்பாடுகள் சமூக இயக்கத்தை முன்னெடுக்கின்றன என்ற மார்க்சிய கோட்பாட்டை வேலூர் புரட்சி வரலாற்றிலும் காண முடிகிறது.
வரலாற்றுப் பொருள் முதல்வாதம்
சமூக இயக்கத்தில் அடிப்படையானது பொருளுற்பத்தி.ஒரு சமூகத்தின் உற்பத்திக் கருவிகள்,உற்பத்தி உறவுகள் உள்ளடங்கிய பொருளாதார இயக்கம்தான் சமூகத்தின் அடித்தளம்.உற்பத்தியில் கட்டுப்பாடும் மேலாதிக்கமும் செலுத்தும் உடைமை வர்க்கங்களுக்கும், உழைப்பைச் செலுத்தி வாழும் உடைமையற்ற வர்க்கங்களுக்கும் நடக்கும் வர்க்கப் போராட்டம்,வரலாற்று மாற்றத்தை உந்தித் தள்ளும் சக்தியாக விளங்குகிறது.
பொருளுற்பத்தியும் அவற்றால் எழும் உற்பத்தி உறவுகளும் சமூக இயக்கத்தை தீர்மானிக்கின்றன.எனவே அவை அடித்தளமாக உள்ளன.இலக்கியம், தத்துவம்,பண்பாடு,கருத்துக்கள்,ஒழுக்க வரையறைகள்,மதம்,கலை,நீதி, சட்டம் உள்ளிட்ட அனைத்து சிந்தனை வெளிப்பாடுகளும் பொருளாயத உறவுகளை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும் மேல்கட்டுமானமாக உள்ளன.
மார்க்சிஸ்ட்கள் பேசுவது வறட்டுத்தனமான பொருளாதாரவாதம் என்று சிலர் விமர்சிப்பதுண்டு.பொருளாதார சுரண்டலை மறைப்பதற்காகவும் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு.
அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்குமான உறவை எந்திரகதியாக பார்க்க கூடாது என்று ஏங்கல்ஸ் வலியுறுத்தினார்.பொருளாதார காரணி மட்டுமே சமூக இயக்கத்தினை தீர்மானிக்கும் ஒரே காரணி என்று பார்ப்பது, “திசைதிருப்பும் வேலை” “பொருளற்றது”என மார்க்ஸும் எங்கெல்சும் குறிப்பிட்டனர்.
பொருளாதார நிலைமைகள் “இறுதியாக தீர்மானிக்கும் காரணியாக” இருக்கும் என்றும் அரசியல்,கலை இலக்கிய சமய,தத்துவ காரணிகளும் பொருளாதார இயக்கத்தில் வினையாற்றும் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.இந்த தளங்கள் அனைத்திலும் வர்க்கப் போராட்டம் இடையறாது நடக்கிறது.
இந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை பாட்டாளி வர்க்கம் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான சித்தாந்த ஆயுதமாக திகழ்கிறது.
(தொடரும்)
சமகால நடப்புகளில் மார்க்சியம் – தொடர்-11 -என்.குணசேகரன்
எது சரியான வரலாற்று ஆய்வு முறை?
இன்று,வரலாறுகள் திருத்தப்படுவது மிக மோசமான வகையில் தொடர்கிறது. இந்து தேசிய மதவெறி கண்ணோட்டத்துடன் வரலாற்றுத் துறையில் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன.என்.சி.ஆர்.டி பாடப் புத்தகங்களில் மத்திய அரசு செய்து வரும் மாற்றங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
அறிவியல் ரீதியாக எழுதப்பட்ட வரலாற்றுப் படைப்புகளை “சரி செய்வதாக” கூறி, ஒன்றிய பாஜக அரசும், அதன் ஆதரவாளர்களும் வரலாற்றை உருக்குலைத்து வருகின்றனர்.”மகத்தான இந்து மத அடிப்படையிலான கடந்த கால வரலாற்றை” மீட்டு வருவதாக அவர்கள் கூறிக் கொள்கின்றனர்.
அவர்களின் இந்த “சரி செய்யும் முயற்சி” எதிர்கால இளம் தலைமுறையை மூடத்தனம் நிறைந்த மதவெறியர்களாக மாற்றுமே தவிர, சமூக அக்கறை,பகுத்தறிவு,மனிதநேயம் கொண்ட இளைஞர்களை அது உருவாக்கிடாது.
வரலாறு அபினியாக…..
மறைந்த வரலாற்று அறிஞர் எரிக் ஹாப்ஸ்வாம் தேசியவாதத்தை பற்றி கூறுகிறபோது போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு எப்படி அபினி மீது மோகம் இருக்குமோ, அதே போன்று தேசியவாதம் பேசுபவர்களுக்கு வரலாறு இருக்கிறது என்று குறிப்பிட்டார். இன்றைய நடப்புகள் இந்தக் கூற்றினை மெய்ப்பித்து வருகின்றன.
இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு இருந்தபோது அன்றைய ஆளுகிற கூட்டம் தன்னுடைய நலனுக்கு ஏற்றவாறு வரலாற்று நூல்களை வெளியிட்டது. தங்களது மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் வகையிலான நூல்கள் அன்றைக்கு வெளிவந்தன. 1817 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் மில் எழுதிய “பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு” காலனியவாதிகளின் பார்வையிலிருந்து வரலாற்றை விளக்கும் ஒரு நூல்.
இந்தியாவின் வரலாற்றை “இந்து நாகரிகம்” “இஸ்லாமிய நாகரிகம்” “ஆங்கிலேயர் காலம்’ என்ற வகையில் கால வரையறை செய்து ஜேம்ஸ் மில் வரலாற்றை விளக்கினார்.நாட்டை ஆண்ட மன்னர் பரிவாரங்களின் மத சாய்மானத்தை வைத்து வரலாறு விளக்கப்பட்டது.இந்து, இஸ்லாம் என மத அடிப்படையில் வரலாற்றை விளக்குவதற்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை.
இந்திய வரலாறு இந்து தேசம் இஸ்லாமிய தேசம் என்று தனித்தனியானது எனவும், இரண்டும் எப்போதுமே முரண்பட்டு மோதிக் கொண்டு இருந்ததாகவும் ஜேம்ஸ் மில் சித்தரிக்கிறார். தொன்மைக் காலம் இந்துக்களின் காலமாகவும், அன்று இந்து மதம் கோலோச்சியதாகவும், அடுத்து இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதாகவும், மூன்றாவது காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இந்தியா வந்ததாகவும் ஜேம்ஸ் மில் விவரிக்கிறார்.
எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் மதம் என்கிற ஒரே ஒரு காரணியை மையப்படுத்தி அவர் வரலாற்றை விளக்கினார். ஆர்எஸ்எஸ் தற்போது அமைக்க முற்படுகிற இந்துராஷ்டிரா என்பது அன்றைக்கு ஆங்கில வரலாற்று ஆசிரியர்களின் கண்ணோட்டம்தான்.
ஆக,காலனிய காலகட்டத்தில் அந்நிய ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த நிகழ்ச்சி நிரலையே இன்றைக்கு இந்துத்துவாதிகள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இன்றைய இந்து பெரும்பான்மைவாத கருத்தியலுக்கு வித்திட்டது ஆங்கிலேய அறிவுஜீவிகள்தான்.
இந்தியாவை சீரழித்தது மேற்கத்திய தத்துவங்கள் என்று தமிழக ஆளுநர் பேசினார்.ஆனால், மத அடிப்படையில் பிளவுபட்டு இருக்க வேண்டும் என்ற ஆங்கிலேயர் கனவை ஆர்எஸ்எஸ் அமலாக்கத் துடிப்பது ஏன்?
ஜேம்ஸ் மில்லின் வரலாற்றுக் கண்ணோட்டம் இன்றைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.மத தேசியவாதம் அடிப்படையில் இந்து கண்ணோட்டத்தோடும் இஸ்லாமிய கண்ணோட்டத்தோடும் வரலாற்றை பார்க்கிற பார்வை வலுப்பட்டு வருகிறது.
இதற்கு நேர் மாறானது இந்திய தேசியம் என்பது. இந்த இந்திய தேசியம் இந்திய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது. இது விடுதலைப் போராட்ட காலத்தில் அனைத்து குடிமகன்களையும் மத, சாதி வேறுபாடின்றி ஒன்றிணைத்து, நவீன இந்தியாவை உருவாவதற்கு வித்திட்டது .
இந்திய தேசியம் ஜனநாயக, மதச்சார்பற்ற அடிப்படையைக் கொண்டது.இந்திய தேசியம் கட்டமைத்த மகத்தான மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையை தகர்ப்பதுதான் மத அடையாளம் சார்ந்த தேசியவாதம்.இதன் வெளிப்பாடாக வரலாற்றைத் திரிக்கிற முயற்சிகள் தீவிரமாகி வருகின்றன.
இந்தியாவை மதம் சார்ந்த இந்து, இஸ்லாம் தேசங்களாகப் பார்க்கும் அழிவுப் பாதையை இந்து தேசியம் முன்னிறுத்துகிறது.
வரலாற்று ஆய்வு நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதனை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் விளக்கிட வேண்டும். பழைய, புதிய மொழிகளை அறிந்து, தொல்லியல், மொழியியல் உள்ளிட்ட வேறுபட்ட பல துறை சார்ந்த ஆதாரங்களைத் திரட்டி விளக்கங்களை முன்வைக்க வேண்டும்.இது உண்மையான வரலாற்று ஆசிரியரின் கடமை.
ஆனால்,எந்தவிதமான ஆதாரங்களையும் அடிப்படையாக எடுத்துக் கொள்ளாமல், வலதுசாரிக் கண்ணோட்டத்துடன் வரலாறு எழுதப்படுகிறது.காலனியவாதிகளன் கண்ணோட்டத்தை அப்படியே சுவீகரித்து வரலாற்று மோசடிகளை வகுப்புவாதிகள் செய்து வருகின்றனர்.
மார்க்சிய ஆய்வு முறை
மார்க்சிய தத்துவம் மிகச்சிறந்த வரலாற்று ஆய்வு முறையை வழங்குகிறது.
இதனை ஏங்கல்ஸ் ” கம்யூனிஸ்ட் அறிக்கை” முன்னுரையில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
“…..அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன.
“ஆகவே, (புராதன நிலப் பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது.
“எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும்.
“அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்”
இது மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம். வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் வழிகாட்டுகிற மிகச் சிறந்த கருவியாக இது விளங்குகிறது.
(தொடரும்)




