கவிஞர் கவிதா பிருத்வி அவர்களின்
“ஓவியம் வரையும்
தூரத்து நிலா ” ஹைக்கூ நூல் கிடைக்கப்பெற்றேன். தமுஎகச-அறம் கிளையுடன் இணைந்து அகநி வெளியீடாக வெளிவந்துள்ளது.
அழகிய ஓவியத்தோடு அட்டைப்படம் மிக அருமையாக உள்ளது. 64 பக்கங்களில் மிக அருமையான ஹைக்கூ நூல்.
செம்பருத்தி பூத்திருக்கிறது/
தேன்சிட்டைக் காணவில்லை/
அடை மழை
என்ற மிக மென்மையான அழகிய ஹைக்கூவைப் படைத்திருக்கிறார். இப்படி ஹைக்கூவை படிக்கும்போதே நமக்குள் செம்பருத்தி யையும் தேன்சிட்டையும் அடை மழைத் தூறல்களையும் அதன் குளிரையும் நமக்குள் கொண்டு வருவதே சிறப்பானது. நாம் படிக்கும் போது கோடைகாலமானாலும் நம்மை அடைமழை காலத்திற்குக் கொண்டு செல்லும் இது போன்ற ஹைக்கூக்கள் வரவேற்கத்தக்கது.
அடிவானம் கருக்கையில்/ கருவண்ணம் பூசிக் கொண்டன/
தூரத்து மரங்கள்
தேங்கிய நீரில்/
நிலவின் நடனம்/
மழை விட்ட இரவு
இது போன்ற அழகிய காட்சிகளை ஹைக்கூவாக புத்தகம் எங்கும் பதிவு செய்திருக்கிறார்.
கூடடைய விரையும்/ பறவைக் கூட்டம்/ தொடரும் மழையோசை
காட்சிகளோடு மழையின் ஓசையையும் மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். பலரும் காட்சிகளை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் போது இப்படி ஓசையை வித்தியாசமாகக் கூறியிருப்பது மிகச் சிறப்பானது. ஹைக்கூவின் நுட்பங்களை உணர்ந்தவர்கள் மட்டுமே இது போன்ற காட்சிகளையும் ஓசைகளையும் பதிவு செய்கிறார்கள். அந்த வகையில் கவிஞர் இதை சிறப்பாக இந்த ஹைக்கூவில் செய்திருக்கிறார்.
நூலில் ஆங்காங்கே மிக அருமையான ஹைக்கூகளைப் படைத்திருக்கிறார். ஆனாலும் சென்ரியுவும் அங்கங்கே கலந்தே இருக்கின்றன. பல ஹைக்கூக்களிலும் மூன்று வரிகளை இரண்டு இரண்டு சொற்களாக
அமைத்திருப்பதை, நடு வரி கொஞ்சம் நீளமாக உள்ளவாறு மாற்றி அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
கவிஞர் கவிதா பிருத்வி அவர்கள் நல்ல முயற்சி எடுத்து எழுதி புத்தகமாகப் வந்திருப்பது பாராட்டுகளுக்குரியது. இன்னும் சிறப்பாக உணர்ந்து மேன்மேலும் மிக அருமையான ஹைக்கூக்களையும், ஹைக்கூ நூல்களையும் படைத்திட நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
குறிப்பு: ஹைக்கூ படைப்பாளர்கள் மற்றும் ஹைக்கூ ரசிகர்கள் இது போன்ற நூல்களை வாங்கி ஆதரித்து ஹைக்கூ வளர ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
கவிஞர். தனபால்
முசிறி.