மோடி-அதானி சாம்ராஜ்ய ஊழல் – சீத்தாராம் யெச்சூரி
அதானி குழுமம் தன்னுடைய கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை எப்படிக் கட்டி எழுப்பியிருக்கிறது என்பதையும், 2014இல் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் எப்படி கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறி சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. மோடி அரசாங்கம் எப்படி பிபிசி ஆவணப்படமானது “காலனிய மனோபாவத்தின் உற்பத்தி” (“products of a colonial mindset”) என்று முத்திரை குத்தியதோ அதேபோன்று அதானியும், தன்னுடைய கார்ப்பரேட் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டுள்ள விதம் குறித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, “இந்திய தேசத்திற்கு எதிரான தாக்குதல்” என்று கூறிக் கொண்டிருக்கிறார். இவர்களின் தில்லுமுல்லுகள் ஏதாவது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டால் உடனே அதை “இந்தியாவின் மீதான தாக்குதல்” (“attack on the ‘Indian Nation) என்று வகைப்படுத்துகின்றனர். கூட்டுக் களவாணி முதலாளித்துவம்தான் (crony capitalism) இவ்வாறு இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றது என்று இவர்களால் நியாயப்படுத்தப்படுகிறது. மோடி அரசாங்கத்துடன் நெருக்கமாகவுள்ள கூட்டுக் களவாணிகள் நாட்டின் சொத்துக்களை எப்படியெல்லாம் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் நலத் திட்டங்களுக்கு அளித்துவந்த செலவினங்களையெல்லாம் வெட்டிச் சுருக்கி தங்களின் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட மடைமாற்றம் செய்யப்படுவதன் மூலம் தாங்க முடியாத சுமைகளை சாமானிய மக்கள் மீது ஏற்றியிருக்கிறார்கள், எனக் கூறும் அனைவரும் ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்தி முழு அளவிலான எதேச்சாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இவற்றிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நடைபெற்றுள்ள வெட்கங்கெட்ட துற்செயல்கள் குறித்து எந்தவிதமான விசாரணையும் தேவையில்லை என்று மோடி அரசு கருதுகிறது. கூட்டுக் களவாணி முதலாளித்துவத்துடன் உள்ள இந்தப் பிணைப்பு எவ்வாறு தகாத வகைகளில் செயல்பட்டிருக்கிறது, பொதுத்துறை நிதி நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்ஐசி ஆகியவற்றிலிருந்து மக்களின் கடின உழைப்பில் சேமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று விசாரணை மேற்கொள்ள, ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைப்பதற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஓர் உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து இந்த முறைகேடுகளை விசாரிக்கவோ மோடி அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தின் தாராள உதவிகள் இக்குழுமத்திற்கு கிடைத்துள்ளன. அரசு நிலங்கள் சொற்ப விலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றால் ஏற்படும் காலநிலை சீற்றங்களை கருத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழல் உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசுசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் சொத்துக்களை இக்குழுமம் வாங்க அரசு உதவி செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களையும், துறைமுகங்களையும் வாங்குவதற்கு அரசின் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதியங்கள் மூலம் செயல்பட்டது மட்டுமல்லாமல், உள்பேர வர்த்தகம் (Insider trading) ஒரு நிறுவனத்தின் கூருணர்வு மிக்க ரகசியத் தகவல்களை தனது சுயலாபத்திற்காக வெளியிட்டு தவறாக செயல்பட்டு வர்த்தகம் புரிதல்), ‘ரௌண்ட் டிரிப்பிங்’ (round tripping) எனப்படும் சுற்றிவளைத்த வர்த்தகம் (அதாவது, தனது சொத்துக்களின் மூலம் வரும் வருமானத்தை சட்டவிரோத முறையில் ஊதிப்பெரிதாக்கிக் காட்டுவது), சூழ்ச்சி முறையில் பங்குகளை கையாள்வது போன்ற நடவடிக்கைகளில் அதானி குழுமம் ஈடுபட்டபோதிலும், இவற்றை சந்தை ஒழுங்குமுறை அமைப்புகள் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்துள்ளன.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்த பிறகு, அதானியின் சாம்ராஜ்ய மதிப்பானது 200 பில்லியன் டாலர்களிலிருந்து சரிபாதியாகக் குறைந்துள்ளது. அதானி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள்.
இந்தப் பின்னணியில்தான் இவர்களின் கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறிக் கூட்டணி எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும், அது இந்திய அரசு எந்திரத்தை முழுமையாகத் துஷ்பிரயோகம் செய்து கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தை ஊட்டி வளர்த்துக்கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியமாகும். இந்தத் திசை வழியில் ஒரு முயற்சியே இச்சிறு புத்தகமாகும்.
மோடி- அதானி சாம்ராஜ்ய ஊழல் இன் நூல் முன்னுரையில் இருந்து
சீத்தாராம் யெச்சூரி
பொதுச் செயலர் சிபிஐ(எம்)
விலை : ரூ.₹30/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
ஊடக உலகில் பெரும் முதலாளிகளின் ஊடுருவலும் ஊடக சுதந்திரமும் – பேரா.அருண்கண்ணன்
கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அன்று அதானி குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்டிடிவியின் (NDTV) 29% பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்தது. மேலும் அந்த அறிவிப்பில் கூடுதலாக 26% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அதானி அவர்களுடைய குழுமத்தின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடையசெய்தது. மேலும் மோடி அவர்களின் நெருக்கமானவராக அறியப்பட்ட அதானியின் குழுமம் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தை வாங்குவதன் மூலம் இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் பெரிதும் பாதிக்கபடும் என்கிற அச்சத்தைப் பலரும் வெளிபடித்தியுள்ளனர்.
இந்நிலையில் அதாணி குழுமத்தால் எப்படி என்டிடிவியின் பங்குகளை வாங்க முடிந்தது? ஏற்கனவே அம்பானி போன்ற பெரும் கார்பரேட் நிறுவனங்கள் ஊடக வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அதானியின் இந்த முயற்சி என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து ஆங்கில ஊடகங்களில் பலரும் விவாதிப்பதைப் பார்க்க முடிகிறது. அதைத் தமிழ்ச் சூழலில் புரிந்து கொள்வதற்கான சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை.
இந்தியாவில் செய்தித் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்தியாவில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி ஒரு சோதனை முயற்சியாக தூர்தர்சன் என்னும் பொதுத்துறை நிறுவனத்தின் வாயிலாக தொலைக்காட்சி ஒளிபரப்புத் தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1965-ம் ஆண்டு முதன் முதலில் தூர்தர்சன் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இப்படி தொடங்கிய இந்திய செய்தித் தொலைக்காட்சி யின் வரலாற்றில் அடுத்து 30 ஆண்டுகள் தூர்தர்சன் மட்டுமே முழுமையான ஆதிக்கம் செலுத்திவந்தது. இந்தியாவில் 90களுக்குப் பிறகுப் பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவும் 1995-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அலைக்கற்றைகள் தொடர்பாக வழங்கிய முக்கியமான தீர்ப்பின் காரணமாகவும் தனியார் தொலைக்காட்சியின் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த பின்னணியில் 1998-ம் ஆண்டு என்டிடிவி ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியதுதான் இந்தியாவின் முதல் தனியார் செய்தித் தொலைக்காட்சி நிறுவனமாகும்.
என்டிடிவியின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்தியாவின் சில நகரங்களுக்கு மட்டுமே இருந்த தூர்தர்சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை 1982-ல் தேசிய ஒளிபரப்பாக விரிவாக்கப்படுகிறது. அதே காலகட்டத்தில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் தனியார் நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்படியான ஒரு நிகழ்ச்சி தாயரிப்பு நிறுவனமாக 1988-ம் ஆண்டு பிரனாய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர்களால் தொடங்கப்பட்டது தான் என்டிடிவி நிறுவனம்.
முதல்கட்டமாக அதே ஆண்டு “உலகம் இந்த வாரம்” என்கிற நிகழ்ச்சி தயாரித்தது என்டிடிவி இந்நிகழ்வு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. உலகில் நடந்த சில மிக முக்கியமான நிகழ்வுகளை அலசும் செய்தித் தொகுப்புதான் இந்நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பைப் பெற்றதுடன் இந்திய செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் இந்நிகழ்ச்சித் தொகுப்பை ஒரு புரட்சிகரமான மாற்றம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர்.
அதற்குப் பிறகு தேர்தல் முடிவுகளைத் தொகுத்து வழங்குவது பட்ஜெட் தொடர்பான விவாதங்களை நடத்துவது என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தூர்தர்சன் தொலைக்காட்சிக்குத் தயாரித்து கொடுத்தது என்டிடிவி நிறுவனம். மேலும் 1995-ம் ஆண்டு முதல் முறையாக தினமும் இரவு எட்டு மணி செய்தியை நேரடி ஒளிபரப்பாகத் தயாரித்து கொடுத்தது என்டிடிவி. இந் நேரடி ஒளிபரப்பிற்கு அரசு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததாகவும் இருப்பினும் என்டிடிவி நேரடி ஒளிபரப்பைச் சாமார்த்தியமாகத் தொடர்ந்து ஒளிபரப்பியதாக என்டிடிவியின் இருபத்தைந்து ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்டப் புத்தகத்தில் பிரனாய் ராய் குறிப்பிட்டுள்ளார்.
1998-ம் ஆண்டு ரூப்பர்ட் மர்டாக்கின் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து முதல் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது என்டிடிவி. நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமாக 6 பணியாளர்களுடன் தொடங்கி 1998-ல் 300 பணியாளர்களுடன் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது என்டிடிவி நிறுவனம். 1999-ல் ndtv.com இணையதளம் தொடங்கப்பட்டது மேலும் அதே ஆண்டில் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பையும் ஆரம்பித்தது. மத்திய அரசின் முன்னாள் தகவல் ஒலிபரப்பு துறை செயலராக இருந்த ரதிகாந்த் பாசு ஸ்டார் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்தவரை ஸ்டார் என்டிடிவி இடையேயான உறவில் பெறும் சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் அவர் இடத்தில் பீட்டர் முகர்ஜி வந்த பிறகு இரு நிறுவனங்களுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை அடுத்து 2003-ம் ஆண்டு தனியாக என்டிடிவி 24×7 என்கிற ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சியும் என்டிடிவி இந்தியா என்கிற இந்தி செய்தித் தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டன. என்டிடிவி ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி தொடங்கிய சில வாரங்களில் ஹெட்லயன்ஸ் டுடே (தற்போதைய இந்தியா டுடே டிவி) ஆரம்பிக்கப்பட்டது இருப்பினும் அது என்டிடிவி சேனலுக்கு எந்த வகையிலும் போட்டியாக அமையவில்லை.
ஆனால் 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட டைம்ஸ் நொவ் (Times Now) அதற்க்கு அடுத்த ஆண்டு தொடங்கப்பட்ட சிஎன்என் (CNN) போன்ற செய்தி சேனல்கள் அதுவரை தனியார் செய்தித் தொலைக்காட்சிப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்த என்டிடிவியைப் பின்னுக்குத் தள்ளியது. தொடங்கிய சில வருடங்களிலேயே முதல் இரண்டு இடங்களையும் இந்த சேனல்கள் கைப்பற்றின. என்டிடிவியில் பயிற்சி பெற்றவர்களான ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அர்னாப் கோஸ்வாமி ஆகிய இருவரும் இச் சேனல்களின் வளர்ச்சிக்குப் பெறும் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப நிறுவனமாக இருந்த என்டிடிவி 2004-ல் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனமாக மாறுகிறது. அதற்கு அடுத்த ஆண்டு ராய் இணையரால் ஆர்ஆர்பிஆர் என்கிற பெயரில் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டு அதில் உடனடியாக என்டிடிவியில் தங்களுக்கு இருந்த 60% பங்குகளில் 29% பங்குகள் மாற்றுப்படுகிறது. அதே நேரத்தில் என்டிடிவி நிறுவனம் அசுர வேகத்தில் விரிவாக்க முயற்சிகளைத் தொடங்கியது. 2005-ம் ஆண்டு என்டிடிவி ப்ராபிட் (NDTV Profit) என்கிற வணிகச் செய்தி சேனல் தொடங்கப்பட்டது. பிறகு மெட்ரோ நேஷனல் உடன் இணைந்து கொல்கத்தா மும்பை போன்ற நகரங்களில் பிராந்திய மொழியில் செய்திச் சேனல்களைத் தொடங்க முயற்சி செய்யப்பட்டது ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. மேலும், உலக அளவில் செய்தி சேனல்கள் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றும் தொடங்கப்பட்டது. அதன் வழியாக மலேசியா நாட்டில் அஸ்ட்ரோ என்கிற 24×7 செய்தி சேனலைத் தொடங்குவதற்கு உதவியது. 2006-ம் ஆண்டில் ரேடியோ சேனல் ஒன்றை தொடங்குவதற்காகச் செய்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. மேலும் தொலைக்காட்சி சேவையைத் தாண்டி தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து சேவை வழங்குவதற்குத் தொடங்கப்பட்ட என்டிடிவி லேப்ஸ் (NDTV Labs) நிறுவனமும் நீண்ட காலம் தொடர்ந்து நடத்தப்படவில்லை.
இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களின் பெரும்பான்மையான வருமானம் என்பது விளம்பரங்கள் மூலமே கிடைத்துவருகிறது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு சந்தையில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக என்டிடிவியின் விளம்பர வருமானம் பெறும் சரிவைச் சந்திக்க தொடங்கியது. அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்நிலைமையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது. ஒரு புறம் வருமானத்தில் நெருக்கடி உருவான அதே நேரத்தில் பல விரிவாக்க முயற்சிகள் தோல்வியடைந்ததின் காரணமாகவும் 2005 வரை லாபம் ஈட்டி வந்த என்டிடிவி நிறுவனம் அடுத்த வந்த சில ஆண்டுகளில் லாபம் இன்றி நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது.
அதானி குழுமம் என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் வரலாறு
இப்படியான சூழலில் 2007-ம் ஆண்டு குளோபல் இன்வெஸ்ட்மென்ட் என்கிற நிறுவனத்திடம் இருந்த 7 சதவீத பங்குகளை வாங்கும் முயற்சியில் ராய் இணையர் இறங்கினர். இதற்குப் போதுமான நிதி இல்லாததால் இந்தியா புல்ஸ் (India Bulls) என்கிற நிதி நிறுவனத்திடம் இருந்து 501 கோடி ரூபாய் கடன் பெற்றனர் ராய் இணையர். அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி அடைகிறது 400 ரூபாயாக இருந்த என்டிடிவியின் பங்குகள் 100 ரூபாயாக சரிந்தது.
இத்தகைய சூழலில் இந்தியா புல்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நிலை உருவாகிறது. எனவே அக்கடனை அடைப்பதற்கு ஐசிஐசிஐ வங்கியிடமும் (ICICI Bank) இருந்து 350 கோடி ரூபாய் கடனை 19% வட்டியுடன் பெறுகின்றனர் ராய் இணையர். பிறகு வங்கி கடனை அடைப்பதற்கு அம்பானியின் பினாமி நிறுவனம் என்று நம்பப்படுகிற விபிசிஎல் (VPCL) நிறுவனத்திடம் இருந்து 2009-ம் ஆண்டு 403 கோடி ரூபாய் வட்டி இல்லா கடனை ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் வழியாகப் பெற்றுள்ளனர். மேலும் ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடனைத் திருப்பித்தராமல் போகும் பட்சத்தில் அதனிடம் உள்ள என்டிடிவியின் 29% பங்குகளை விபிசிஎல் நிறுவனம் எடுத்துக்கொள்ளலாம் என்கிற ஒப்பந்தத்துடன் தான் அக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விபிசிஎல் நிறுவனத்தின் கணக்கில் கடன் வழங்கும் அளவிற்குப் பணம் இல்லை என்பதும் இது ஒரு ஆலோசனை நிறுவனமாகத்தான் பதியப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் பின்னால் தான் பொது வெளிக்கு வந்தது. இதனுடன் விபிசிஎல் நிறுவனம் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்திடம் கடனை வழங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு சிநோனா (Shinano) நிறுவனத்திடம் இருந்து அதே அளவு தொகையைக் கடனாக பெற்றுள்ளது தெரியவருகிறது. மேலும் விபிசிஎல் நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதேபோல் சிநோனா நிறுவனமே ரிலையன்ஸின் ஒரு கிளை நிறுவனம் என்பதும் தெரியவருகிறது. இதனுடன் சிநோனா மற்றும் விபிசிஎல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரே அலுவலக முகவரியில் இயங்கிவந்தது என்பதும் வருமான வரித்துறை அறிக்கையின் வாயிலாக அறிய முடிகிறது.
அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் விபிசிஎல் நிறுவனத்தை எமினென்ட் குழுமம் வாங்குகிறது இதன் முலம் என்டிடிவியின் 29% பங்குகளை எடுத்துக்கொள்ளும் உரிமத்தைப் பெறுகிறது அக்குழுமம். அந்த நிறுவனமும் கூட அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராக உள்ள மகேந்திர நகாத்தா ( Mahendra nhata) அவர்களுடையதுதான். இந்த நிறுவனத்தைச் சில ஆண்டுகள் கழித்து சுரேந்திர லுனிய என்கிற நிறுவனம் வாங்கியுள்ளது. சமீபத்தில் அந்நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியது. இந்த பின்னணியில்தான் அதானி குழுமம் என்டிடிவியின் 29% பங்குகளைப் பெற்றுள்ளது. இதனுடன் கூடுதலாக மேலும் 26% பங்குகளை வாங்க உள்ளதாகவும் அதானி குழுமம் கூறியுள்ளது. ஒருவேளை இதில் அதானி குழுமம் வெற்றி பெறும் பட்சத்தில் என்டிடிவியின் கட்டுப்பாடு ராய் இணையரிடம் இருந்து அதானி குழுமத்திடம் சென்றுவிடும்.
என்டிடிவி நிறுவனத்தின் நிதி மேலாண்மை
என்டிடிவி நிறுவனத்தின் நிதி மேலாண்மை தொடர்பான சச்சரவுகள் என்பது அதனுடைய தொடக்க காலகட்டந் தொட்டே இருந்து வருகிறது. 1997-ம் ஆண்டு பாராளுமன்றக் குழு என்டிடிவி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தூர்தர்சன் தொலைக்காட்சிக்கும் இடையிலான நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்றுள்ளதா என்பதை விசாரித்தது. அதனைத் தொடர்ந்து 1998-ம் ஆண்டு சிபிஐ பிரனாய் ராய் மற்றும் தூர்தர்சனில் பணிபுரிந்த ரதிகாந்த் பாசு உள்ளபட பல அதிகாரிகள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இவ் வழக்கை நீண்ட காலம் விசாரித்த சிபிஐ 2013-ம் ஆண்டு முடித்து வைத்தது. இதில் முன்வைக்கப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் கடைசி வரை நிரூபிக்கப்படவில்லை.
இது ஒரு புறம் இருக்க தூர்தர்சனின் இயக்குனராக இருந்த ரதிகாந்த் பாசு (IAS Officer) 1996-ம் ஆண்டு திடீரென பணியில் இருந்து விலகுகிறார். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் ஸ்டார் நிறுவனத்தின் இந்திய பொறுப்பாளராகப் பதவி ஏற்கிறார். அதனைத் தொடர்ந்து என்டிடிவி மற்றும் ஸ்டார் இடையிலான ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையைழுத்தனாது. ஸ்டார் உலக அளவில் பெரிய நிறுவனமாக இருந்த பொழுதும் இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்டிடிவிக்குச் சாதகமாக இருந்ததாகவும் அதற்கு ரதிகாந்த் பாசு ஒரு முக்கியமான காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதன் காரணமாகவே பாசுவிற்குப் பிறகு ஸ்டாரில் பொறுப்பேற்ற பீட்டர் முகர்ஜி கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் இதன் விளைவாகவே என்டிடிவி உடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்ற விதமும் பல கேள்விகளையே நமக்கு எழுப்புகிறது. வாய்ப்பு இருந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் என்டிடிவியின் பங்குகளை வாங்கவில்லை போன்ற கேள்விகளுக்குப் பதில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் 2009-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக லாபி செய்த ராடிய மற்றும் முன்னாள் எக்கானிமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் பணிபுரிந்த வேணுவிற்கும் இடையில் நடந்த உரையாடலில் அம்பானியின் நெருக்கமானவராக கருதப்பட்ட மனோஜ் மோடி டெல்லிக்கு வர உள்ளதாகவும் நாம் பிரனாய் ராய்க்கு உதவு வேண்டும் என்று சொல்லும் ஆடியோ வெளியானது. இந்த பின்னணியில் தான் விபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து ராய் கடன் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும் என்டிடிவியின் 25-ம் ஆண்டு விழாவில் 25 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது அதில் அம்பானியும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலையில் என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளில் அதானி நிறுவனத்திடம் 29% பங்குகளும் ராய் இணையருக்கு 32% பங்குகளும் எல்டிஎஸ் இன்வெஸ்ட்மென்ட் என்கிற நிதி நிறுவனத்திடம் 9.75% பங்குகளும் விகாஸ் இந்தியா என்கிற நிறுவனத்திடம் 4.42% பங்குகளும் 29,691 தனிநபர்களிடம் 23.85% பங்குகளும் உள்ளன. எல்டிஎஸ் மற்றும் விகாஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மொரிசியஸ் நாட்டில் இருந்து செயல்படுகின்றன. இதில் எல்டிஎஸ் நிறுவனத்தின் மொத்த இந்திய முதலீடுகளில் 98% சதவித முதலீடுகள் அதானியின் நான்கு நிறுவனங்களில் உள்ளது. இது இருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தைக் காட்டுகிறது. எனவே என்டிடிவியில் அதானி குழுமத்தால் கூடுதல் பங்குகளை எளிதாக பெற முடியும் என்றே தோன்றுகிறது
இந்தியாவில் ஊடகங்களின் இன்றைய நிலை
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பொதுவாக ஊடகங்கள் அரசிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளன. இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் போது இந்தியன் எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட சில பத்திரிக்கைகள் அரசை எதிர்த்து செய்திகளை வெளியிட்டன. இந்திய ஊடக வரலாற்றில் இது போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் 2014-க்கு பிறகு நிலைமை முற்றிலும் வேறுமாதிரியாக உள்ளது. பிரதான ஊடகங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியை முழு பாய்ச்சலுடன் இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அமைச்சகத்தின் எந்தக் கோப்புகளும் பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டதாக ஸ்க்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டது.
அதேபோல் வழக்கமாக அரசின் முக்கியமான முடிவுகள் அனைத்தும் பத்திரிக்கைகள் வழியாக தெரிவிக்கப்படும் ஆனால் பிரதமர் உள்ளபட அமைச்சர்கள் பலரும் சமூக ஊடகத்தின் வழியாகத்தான் செய்திகளை வெளியிடுகின்றனர். திட்டக்குழுவைக் கலைத்து விட்டு நிதி அயோக் என்கிற அமைப்பை உருவாக்கியது போன்ற விடயங்களைப் பிரதமரின் சமூக ஊடகத்தில் வந்த பிறகே ஊடகங்கள் செய்தி வெளியிடும் நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது. இது போன்று தகவல்களைத் தர மறுப்பதின் மூலம் மக்களுக்கு இருக்கும் பிரதான ஊடகத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைத்து கொண்டிருக்கிறது இந்த அரசு. அதேபோல் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி பெரும்பாலான பிரதான ஊடகங்களை அரசின் ஊதுகுழல்களாக மாற்றுவதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளது இந்த அரசு.
இதில் இருந்து மாறுபட்டு செயல்படும் ஊடக நிறுவனங்களும் பத்திரிக்கையாளர்களும் பெறும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இப்படி இந்த அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டதற்காக நேரடியாகவோ அல்லது நெருக்கடி கொடுத்தோ பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ல் எடிட்டராக இருந்த பாபி கோஷ் 2017-ல் இந்திய சீன எல்லை பகுதியில் நடந்த உரசல்கள் தொடர்பாக அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டபோது நிர்வாகம் அவரை எச்சரித்தது. அதற்குப் பிறகும் அரசை விமர்சிக்கும் வகையில் சில செய்திகளை வெளியிடுகிறார் இதனால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.
கொரோனா இரண்டாம் அலையின் போது அரசு செயல்படவில்லை என்பதை விமர்சிக்கும் வகையில் காணவில்லை என்கிற தலைப்பின் கீழ் தேடப்படும் நபர் இந்திய அரசாங்கம் என்றும், அதன் வயது 7 என்றும், அதை தேடுபவர்கள் இந்திய குடிமக்கள் என்கிற அட்டைப் படத்துடன் அவுட்லூக்கின் இதழ் ஒன்று மே மாதம் 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் காரணமாக அப்பத்திரிக்கையின் எடிட்டர் ரூபன் பானர்ஜியை வேலையில் இருந்து நீக்கியது அவுட்லூக் நிர்வாகம். கடந்த எட்டு ஆண்டுகளில் இப்படி பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பட்டியில் நீண்டு கொண்டே செல்கிறது. அரசின் மிகவும் நெருக்கமான பத்திரிகையாகக் கருதப்பட்ட தைனிக் பாஸ்கரும் (Dainik Bhaskar) கொரோனா இரண்டாம் அலையின் பொழுது அரசைக் கடுமையாக விமர்சித்தது. அதன் எதிரொலியாக சில நாட்களுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் ரைடு நடத்தப்பட்டது. அரசை விமர்சித்து செய்திகளை வெளியிட்ட நியூஸ் கிளிக் இணையதளத்தின் அலுவலகத்திலும் இது போன்ற ரைடு ஒன்று நடத்தப்பட்டது.
அதேபோல் என்டிடிவியில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்த சண்டை தொடர்பாக வெளியிட்ட செய்திகள் தேசப்பாதுகாப்பிற்கு எதிராக இருந்ததாக சொல்லி என்டிடிவியின் இந்தி சேனலின் ஒரு நாள் ஒளிபரப்பைத் தடை செய்தது இந்த அரசு. இதே கால கட்டத்தில் நிதி முறைகேடு தொடர்பாக ராய் இணையரின் வீடுகளில் சிபிஐ சோதனையும் நடத்தப்பட்டது. எனவே இந்த அரசை விமர்சித்து செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு நடுவிலேதான் செயல்படும் நிலை உள்ளது என்பதுத் தெளிவாகிறது.
இறுதியாக
என்டிடிவிக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் தொடக்க காலம் தொட்டே நெருக்கமான உறவே இருந்து வந்துள்ளது. 1998-ம் ஆண்டு நடந்த என்டிடிவி செய்தி நிறுவனத்தின் தொடக்க நிகழ்வு அப்போதைய பிரதமராக இருந்த ஐகே குஜராலின் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் என்டிடிவியின் 25-ம் ஆண்டு விழா ஜனாதிபதியின் அலுவலகமான ராஷ்டிர பதி பவனில் நடைபெற்றது இதுவே அந்த அலுவலகத்தில் நடந்த முதல் தனியார் நிறுவனத்தின் நிகழ்வாகும்.
ஆனால் தற்போதைய அரசுக்கும் ராய் இனையருக்கும் இடையிலான உறவு அவ்வளவு இணக்கமானதாக இல்லை என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்களை என்டிடிவி காட்டிய விதங்களை அன்றைய ஆளும் அரசாக இருந்த மோடி அவர்கள் தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் கடுமையாக விமர்ச்சித்ததுடன் அதனுடைய ஒளிபரப்பையும் தற்காலிகமாகக் குஜராத்தில் நிறுத்திவைத்தது. பிரதமர் ஆவதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய மோடி அவர்கள் அரசு புலிகளைப் பாதுகாக்க ஒதுக்கிய நிதியில் தான் சில சேனல்கள் நடத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்தார். அதே காலகட்டத்தில் என்டிடிவி புலிகளைப் பாதுகாப்போம் என்கிற நிகழ்ச்சி ஒன்றை நடத்திவந்தது. இந்நிகழ்ச்சி தனியார் நிறுவனம் ஒன்றின் ஸ்பான்சர் செய்ப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் மோடி அவர்கள் மறைமுகமாக என்டிடிவியையே விமர்சித்தாக பலரும் கூறுகின்றனர்.
மேலும் 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான முன்னனி செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டி அளித்த மோடி என்டிடிவிக்கு மட்டும் பேட்டி அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு மோடி அவர்கள் தலைமயிலான அரசு பொறுப்பேற்ற பிறகு என்டிடிவி பலவகைகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஒரு செய்தி நிறுவனமாக உள்ளது. அதேபோல் அரசின் சில விடயங்களை விமர்சனப்பூர்வமாக அணுகியதற்காகக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பல சிக்கல்களை என்டிடிவியும் அதில் பணிபுரியும் பல பத்திரிக்கையாளர்களும் சந்தித்து வருகின்றனர். இதில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் ரவிஸ் குமார் போன்றவர்கள் சந்தித்த இன்னல்கள் ஏராளம்.
இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும் பொழுது என்டிடிவியை ராய் இணையர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன என்றே சொல்ல தோன்றுகிறது. என்டிடிவியின் செயல்பாடுகளில் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருப்பினும் இன்னும் அது அகில இந்திய அளவில் நம்பத்தகுந்த ஒரு செய்தி நிறுவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ராய்ட்டர்ஸ் (Reuters) நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையிலும் இந்தியாவில் அதிகமான நபர்களால் (76%) நம்பத்தகுந்த ஊடகமாக என்டிடிவி திகழ்கிறது. இந்நிலையில் தற்போதைய ஆளும் அரசின் மிகவும் நெருக்கமாகக் கருதப்படுகிற அதானியின் கட்டுப்பாட்டிற்கு என்டிடிவி செல்லும் பட்சத்தில் அதனுடைய அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதுதான் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
பேரா. அருண்கண்ணன்
இயக்குநர்- தொழில் கல்விக்கான லயோலா கல்விக்கழகம்,
லயோலா கல்லூரி,
சென்னை
நன்றி: வளரி, ஜெம்சென் சென்னை இயேசு சபை ஊடக மையம்,
காட்சி தகவலியல் துறை, இலயோலா
கல்லூரி
அம்பானி அதானி ராஜ்யங்களிலே உய்யலாலா கட்டுரை – இரமணன்
மோடிஜி! மோடிஜி! என்று அரசியல் அரங்கில் குரல்கள்
கூச்சலிட்டுக்கொண்டிருக்கும்போது கார்ப்பரேட் அரங்கில் 5ஜி! 5ஜி! என்று குரல்கள் கேட்கின்றன. இதுவரை நிலக்கரி, மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் என்றிருந்த அதானியின் சாம்ராஜ்ஜியம் தொலைதொடர்புக்குள் நுழையப்போகிறது. தொலைதொடர்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, நுக ர்வோர் துறை என்றிருக்கற அம்பானியின் சாம்ராஜ்ஜியத்திற்கும் அதானியின் சாம்ராஜ்ஜியத்திற்கும் பயங்கர மோதல் நிகழப் போகிறதா என்று ஒரு கட்டுரை கேட்கிறது.கேவலம் வெறும் 2டாலர்களுக்கா அதானி மிகப் பெரும் தொகையை ஒதுக்குவார் என்றும் கேட்கிறார்கள்.அதென்ன 2 டாலர் என்று தெரிந்துகொள்ளு முன் 5ஜி பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
5ஜி என்றால் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் என்று புரிந்துகொள்ளலாம். 4ஜி எல்லா இடங்களுக்கும் இணைப்பு கொடுப்பது குறித்து கவனம் செலுத்தும்போது 5ஜியானது அதை கிளவுட் தொழில்நுட்பம் மூலம் செய்கிறது. அதிக வேகம், செல்லுலார் முறையிலிருந்து வைஃபை முறைக்கு எளிதாக மாறுதல் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
அதிக வேகம் பயனாளர்களுக்கு நல்லதுதானே என்று கேட்டால் நம்மைப் போன்ற சாதாரண பயனாளர்களுக்கு 5ஜி யில் கிடைக்கும் வேகம் தேவையில்லை. சில எடுத்துக்காட்டுகள் மூலம் நமக்கு தேவையான இணைய வேகங்களைப் பார்க்கலாம்.
1.நெட் பிளிக்ஸ், டிஸ்னி, அமேசான் பிரைம் போன்ற தளங்களை பார்ப்பதற்கு 2 முதல் 6Mbps. நேரடி ஒளிபரப்பு என்றால் 8Mbps.
2.சூம், மைக்ரோசாப்ட் டீம், கூகுள் மீட் போன்ற காணொளி கூட்டங்களுக்கு 1-3Mbps.
3.நமது பிராதன கவலையான வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்புகளுக்கு 0,1-0,25Mbps
இந்தியாவில் 4ஜி சேவை வேகம் சராசரியாக 14Mbps. (நாம் இதில் உலக நாடுகள் தர வரிசையில் 115ஆவது இடத்தில் இருக்கிறோம் என்பது வேறு விஷயம்). ஆகவே நமது இப்போதைய தேவைகளுக்கு 4ஜி சேவை வேகம் போதுமானது. இதைவிட 10 மடங்கு வேகமான 5ஜி சாதாரண மக்களுக்கு எதற்கு?
இங்குதான் 5ஜியானது பிரச்சனைகளை தேடும் தீர்வு என்று சொல்லப்படுகிறது. முதலாளித்துவம் மக்களிடையே தேவைகளை உண்டாக்கி தனது லாபகரமான பண்டங்களை விற்கும். அது மக்களின் இயல்பான தேவைகளை நிறைவேற்றுவதில் இலாபம் இல்லையென்றால் அதில் இறங்காது. அதைத்தான் கொரோனா காலத்தில் மருத்துவ மனைகள் மூடிக்கிடந்ததையும் தடுப்பு ஊசி தயாரிப்பில் போட்டி போட்டுக்கொண்டு இறங்கியதையும் பார்த்தோம்.
5ஜி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெறாது என்பதற்கு இன்னும் சில காரணங்கள் உண்டு. ஒன்று அதன் கட்டணம் அதிகமாக இருக்கும். முதலில் சொன்ன 2 டாலர் விவகாரம் இதைத்தான் பேசுகிறது.. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சராசரியாக ஒரு நுகர்வோரிடமிருந்து மாதம் ஒன்றிற்கு பெறும் வருவாய் 2 டாலர்கள்தானாம். அதை ரூபாயில் பார்த்தால் மன்மோகன் காலம் என்றால் ரூ 130-140 என்று இருந்திருக்கும். நமது மோடிஜி காலம் என்றால் 140-160 ஆக இருக்கும். இன்னும் ரூபாய் சதம் அடிக்கும் என்கிறார்கள். அப்படியானால் தொலை தொடர்பு நிறுவனங்களின் வருமானம் மாதம் ஒன்றிற்கு ரூ 200/. மிக சொற்பமாக தெரிந்தாலும் இந்திய நுகர்வாளர்களின் எண்ணிக்கை 100கோடி என்பதையும் பார்க்க வேண்டும்.. தேவையான வேகம் 4ஜியிலேயே கிடைக்கும்போது அதிக கட்டணம் செலுத்தி சாதாரண மக்கள் 5ஜிக்கு மாற மாட்டார்கள். மேலும் அதற்கான கைபேசிகள் சராசரியாக ரூ 30000/ வரை இருக்கும். ஆக 5ஜி இணைப்புகள் பொதுமக்களுக்கு இப்போதைக்கு பயன்படாது. அது நிறுவனங்களின் தேவைகளுக்கே பொருத்தமானது. அப்படியானால் ஏன் அதானி அம்பானியுடன் போட்டி போடுகிறார்?
அவரது நிறுவனங்களுக்குத் தேவையான 5ஜி அலைக்கற்றையை அவர் பிரத்தியேக உபயோக ( captive private network) திட்டத்தின் கீழ் மிக மலிவாக பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம் தனது பயன்பாட்டிற்கு மட்டும் என்றால் வெறும் ரூ 50000 / மட்டும் செலுத்தி 10 வருடங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எவ்வளவு சலுகை கட்டணம் பாருங்கள்! உரிமக் கட்டணமும் கிடையாதாம்; அலைக்கற்றைக் கட்டணமும் கிடையாதாம். இந்தக் கட்டணம் ஒரு வருடத்திற்கு ரூ 5000/ என்று ஆகிறது.சாதாரண பொது மக்களே இதைவிட அதிகம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
வணிக பயன்பாட்டிற்கு வேண்டுமென்றால் ஏலத்தில் பங்கு பெற்று அங்கு நிர்ணியிக்கப்படும் கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில்தான் அதானி நுழைகிறார். அவரது நிறுவனமே பெரும் கடன் தொகையை சர்வீஸ் செய்ய வேண்டியதிருக்கிறது. அந்த நிலைமையில் இலாபமில்லாத ஒரு முதலீட்டில் பெரும் தொகையை அவர் ஏன் முடக்குகிறார் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அம்பானியின் எடுத்துக்காட்டையே கூறுகிறார்கள். அவர் 2016இல் தொலைத்தொடர்பு துறையில் நுழையும்போது அலைக்கற்றைகளை வாங்கி வைத்துக்கொண்டார். ஐந்து ஆண்டுகளில் அந்த துறை வளர்ச்சி அடைந்து இப்போது இலாபம் சம்பாதிக்கிறார். அது போல அதானியும் சிந்திக்கலாம் என்கிறார்கள். தள்ளாடிக்கொண்டிருக்கும் வோடோபோன் ஐடியா நிறுவனத்தை கபளீகரம் செய்யலாம்.
இரண்டு பெரும் சாம்ராஜ்ஜியங்கள் மோதிக்கொண்டிருக்கட்டும். பொதுமக்களுக்கு பி எஸ் என் எல் 4ஜி அலைக்கற்றை சேவையை தொடங்க அரசு உதவ வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
கட்டுரைக்கு உதவிய இணைப்புகள்
5G in India – does the common man even need it? – Crast.net
https://economictimes.indiatimes.com/industry/telecom/telecom-policy/no-license/entry-fee-for-enterprises-seeking-5g-spectrum-for-captive-networks-dot/articleshow/92499835.cms
https://telecom.economictimes.indiatimes.com/news/adani-vs-ambani-are-indias-richest-men-about-to-battle-over-2-customers/92882234?action=profile_completion&utm_source=Mailer&utm_medium=ET_batch&utm_campaign=ettelecom_news_2022-07-17&dt=2022-07-17&em=cmFtYW5hbnNhdHR1cjUzQGdtYWlsLmNvbQ==
மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது – அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு
பிரதமர் நரேந்திர மோடி 2022 பிப்ரவரி 07 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் திரும்பிப் பார்க்கின்ற போது அந்த உரை அவருக்குப் பெருமை சேர்த்திருப்பதாகத் தெரியவில்லை. பிரதமர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசுகின்ற போது குடிமக்கள் அவரிடமிருந்து நாட்டின் மீது அரசியல்வாதி ஒருவர் கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வையையே எதிர்பார்ப்பார்கள்; அனைத்துக் கட்சிகள், எம்.பி.க்களிடம் அடிப்படையான மரியாதையை அவர் வெளிப்படுத்துவார் என்றே அவரிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தில் பிரதமர்தான் அவையின் தலைவர். அவர் அங்கே தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் தலைவராக இருப்பதில்லை. அவரையும், அவரது அரசாங்கத்தின் செயல்பாட்டையும் விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. எதிர்க்கட்சியினர் எழுப்புகின்ற கேள்விகளின் மூலமாக பாராளுமன்றம் மற்றும் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாகவே பிரதமரும், அவரது அரசாங்கமும் இருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளும் நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்றாலும் பிரதமர் வேறு தரத்திலேயே வைக்கப்பட்டிருக்கிறார். திமிர் பிடித்தவராக அல்லது விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவராக பிரதமர் இருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக இத்தகைய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பிரதமர் மோடியின் அன்றைய பேச்சு பொய்யாக்கியுள்ளது. தன்னுடைய பொறுமையை இழந்து போன அவருடைய பேச்சின் தொனி ‘என்னை விமர்சிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்?’ என்று கேட்பதாகவே இருந்தது. மேலும் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை அதாவது எதிர்க்கட்சியை மிகவும் மலினமாகவே அவர் நடத்தியிருந்தார்.
பிரதமரின் பேச்சிற்கு சில நாட்களுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு மிகவும் காரசாரமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பிரதமரை ‘ராஜா’ என்று அன்றைய தினம் ராகுல் விளித்திருந்தார். நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகளை பிரதமர் சிறுமைப்படுத்தி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். பன்முகத்தன்மையைப் புறக்கணிப்பது, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான பலவீனமான உறவைச் சிதைப்பது குறித்து ராகுலால் மோடி மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்தியாவை ஒன்றிய அரசால் மட்டுமே ஆள முடியாது என்றும், மாநிலங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுப்பது மிகவும் அவசியம் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாகப் பேசியிருந்தார். அரசியலமைப்பு ரீதியாக இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கிறது என்றும், பாஜகவின் பார்வையில் இருப்பதைப் போல அது ஒரு தேசமாக இல்லை என்றும் பிரதமருக்கு ராகுல் நினைவூட்டிக் காட்டினார்.
ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர்கள் செல்வந்தர்களுக்கு மற்றொன்று என்று இரு வகை இந்தியா இருந்து வருகிறது என்று ராகுல் கூறிய போது அது பிரதமரைச் சற்றே அசைத்துப் பார்த்தது; அம்பானி, அதானி ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசிய ராகுல் மூலதனத்தின் மோசமான மையப்படுத்தல் மோடி பொறுப்பேற்றதிலிருந்தே இந்தியாவில் மிகவும் யதார்த்தமான ஒன்றாகி விட்டது என்று கூறினார்.
ராகுல் காந்தி இன்னும் கண்ணியமாகப் பேசியிருந்திருக்கலாம் என்று சொல்பவர்கள்கூட பிரதமர் அவ்வாறாகப் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மோடி நுணுக்கம் அறிந்தவரில்லை. யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் நெட்டித் தள்ளுகின்ற அணுகுமுறையே அவருடைய தனிச்சிறப்பான ஆளுமையாக இருந்து வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாயைப் போல மோடி ஒன்றும் பாராளுமன்ற மரபுகளால் வளர்த்தெடுக்கப்பட்டவர் இல்லை. பாராளுமன்றத்திற்குள்ளே முதன்முறையாக அவர் பிரதமரான 2014ஆம் ஆண்டில்தான் மோடி நுழைந்திருந்தார். ஆனால் ஏற்கனவே பாராளுமன்றத்தில் பேசியதன் மூலமும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இருந்த மகத்தான தலைவர்களுடன் உறவாடியதன் மூலமும் தனது அரசியல் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டவராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார். அப்போதெல்லாம் சிறுபான்மையினராக இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் குரல் கவனித்துக் கேட்கப்பட்டது மட்டுமல்லாமல் உரிய மரியாதையும் தரப்பட்டது. நாடாளுமன்ற அமைப்பு முறையின் சுமூகமான செயல்பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் மிகவும் தேவையென்று கருதப்பட்ட அந்த நேருவிய காலத்தின் தயாரிப்பாகவே வாஜ்பாய் இருந்து வந்தார். நேருவைக் கடுமையாக விமர்சித்த போதிலும் நேருவின் பாசத்தை வாஜ்பாயால் பெற முடிந்தது.
ஆனால் இப்போது மோடி வித்தியாசமான காலகட்டத்தின் தயாரிப்பாக இருக்கிறார். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகத் தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் முதலமைச்சராக இரும்புக்கரம் கொண்டு குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்தார்; சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை அவர் பொருட்படுத்தியதே இல்லை. தான் தவறு செய்யவே முடியாதவர், கட்சியில் அல்லது வெளியில் இருந்து ஒருபோதும் யாராலும் விமர்சிக்கப்படக் கூடாதவர் என்ற மனநிலையுடனே அவர் இருந்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை – நான் எந்தத் தவறும் செய்வதில்லை; என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்; நாட்டை எப்படி நடத்துவது, எப்படி நடந்துகொள்வது என்பது பற்றி யாரும் எனக்குக் கற்றுத் தர முயற்சி செய்யக்கூடாது என்ற மனநிலையிலேயே இருந்து வருகிறார். ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க முழுக்கப் பொதுக் கண்ணோட்டத்தில் பிரதமரின் அந்த பிம்பத்தை உடைப்பதற்கான முயற்சியாகவே இருந்தது. மோடியின் ஆளுமையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே ராகுல் காந்தியின் அந்தப் பேச்சு அமைந்திருந்தது. அதை அலட்சியப்படுத்துவது பிரதமருக்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்திருக்கிறது.
ராகுல் காந்தி அவரிடமிருந்து தகுந்த பதிலைப் பெறுவார் என்று மோடி பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். நிச்சயம் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதலை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆரம்பத்தில் பிரதமர் அமைதியாக இருக்கவே முயன்றார் என்றாலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறுக்கிட்ட பிறகு அவர் பொறுமையிழந்து விட்டார். தான் இதுவரை யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும், இப்போது காங்கிரஸின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதாகவும் அவர் அப்போது கூறினார். அது தரம் தாழ்ந்த அவரது பேச்சின் ஆரம்பமாக மாறியது. அவர் கோபத்தில் கொதித்துக் கொண்டிருப்பதை எளிதில் காண முடிந்தது.
மோடி எப்போதும் தேர்தல் களத்திலேயே இருக்கும் அரசியல்வாதி. வாக்காளரிடம் பேசுகின்ற வாய்ப்பை ஒருபோதும் அவர் நழுவ விடுவதே இல்லை. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தில் ஆற்றுகின்ற உரை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதால் அவரைப் பொறுத்தவரை அது வாக்காளர்களிடம் உரையாடுவதற்கான சிறந்த வாய்ப்பாகும். எனவே, மக்களவையில் தனது பேச்சில் அறுபது சதவிகிதத்திற்கும் மேலான நேரத்தை காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க மட்டுமே அவர் பயன்படுத்திக் கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ‘காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கும் கட்சி. மாநிலங்களுக்கும், நாட்டிற்கும் எந்தவொரு நன்மையும் அந்தக் கட்சி செய்திருக்கவில்லை, அதனால்தான் பல மாநிலங்களில் காங்கிரஸ் அழிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாக்காளர்களிடம் அவர் அந்த உரையின் மூலம் கூறினார்.
ஆனாலும் மத்தியில் தனக்குச் சவால் விடக் கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று மோடி கருதுவதையும் அவரது பேச்சு வெளிப்படுத்தவே செய்தது. காங்கிரஸிற்கு மாற்றாக மத்தியில் பாஜக எதிர்ப்பு முன்னணியாக தன்னுடைய கட்சி உருவெடுத்துள்ளதாகக் கூறி வருகின்றது என்பதாக மம்தா பானர்ஜியின் சாகச அரசியல் பேச்சுகள் இருந்த போதிலும், ‘காங்கிரஸை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது; காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும்; இடைவிடாது தொடர்ந்து அந்தக் கட்சியை மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்ய வேண்டும்; மத்தியிலும், மாநிலங்களிலும் இருந்து அந்தக் கட்சி நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும்’ என்பதில் மோடி மிக உறுதியாக இருந்து வருகிறார். மக்களவைக்குப் பிறகு மாநிலங்களவை என்று மீண்டும் மோடியின் உரையில் பெரும்பான்மை பங்கை காங்கிரஸ் கட்சியே ஆக்கிரமித்துக் கொண்டது ஒன்றும் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. ஆனால், பரம்பரை அரசியல், 1984 கலவரங்கள், நெருக்கடி நிலை, ஏழ்மை என நாட்டில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் காங்கிரஸே காரணம் என்று வெறியுடன் அவர் குற்றம் சாட்டியது அவரது சிந்தனைச் செயல்பாட்டின் பின்னணியில் உள்ளவற்றையே நமக்கு நினைவூட்டியது.
காங்கிரஸின் மீது மோடி கொண்டிருக்கும் ஆவேசம், காங்கிரஸின் மீதான அவரது மனவேதனை அல்லது வெறுப்பின் பிரதிபலிப்பாக அல்லது நேரு-காந்தி குடும்பத்தின் மீதான வெறுப்பின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கவில்லை. மிகப் பெரிய அரசியல் தந்திரத்தின் பகுதியாகவே அவரது பேச்சு பொதுவாக இருக்கிறது. தனது ‘புதிய பாஜக’ (தி நியூ பிஜேபி) என்ற புத்தகத்தில் காங்கிரஸுக்கு எதிரான பாஜகவின் இடைவிடாத வெறித்தனமான பேச்சுகள் குறித்து மிகவும் சுவாரஸ்யமான தரவுகளை நளின் மேத்தா தந்துள்ளார். பாஜக தனது வெளியுலகத் தொடர்புகளில் – அதாவது பேச்சுகள், கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகளில் – காங்கிரஸையே அதிகம் குறிப்பிட்டு வருகிறது என்று அவர் எழுதியிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டிருந்த தரவரிசையில் காங்கிரஸ் என்ற வார்த்தையே அவர்களுடைய பேச்சுகளில் முதலிடத்தைப் பெற்றது. மோடி, பாஜக, வளர்ச்சி போன்ற வார்த்தைகள் பின்தங்கி காங்கிரஸ் என்ற வார்த்தைக்குப் பின்னரே இடம் பெற்றுள்ளன. ‘இந்த பெரிய அரசியல் தொடர்பு மாற்றம் 2016ஆம் ஆண்டில் தொடங்கியது, அதற்குப் பிறகு காங்கிரஸ் தொடர்பான பாஜகவின் பேச்சுகளில் வியத்தகு மாற்றத்தை நம்மால் காண முடிந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸுக்கு எதிரான பேச்சை படிப்படியாக பாஜக அதிகரித்துக் கொண்டே வந்தது. பாஜகவின் தகவல் தொடர்புகளில் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது காங்கிரஸிற்கு எதிரான பேச்சு மற்ற அனைத்து விஷயங்களையும் முந்திவிட்டது’ என்று நளின் மேத்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ‘காங்கிரஸின் முதன்மையான சித்தாந்த எதிர்ப்பாளராக, தனது போட்டியாளரைப் பற்றி பாஜக அதிகம் பேசுவது மிகவும் இயல்பானது என்றாலும் பாஜகவை காங்கிரஸுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற முக்கிய அரசியல் பாடத்தை கட்சியின் நடவடிக்கைகளைத் திட்டமிடுபவர்கள் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுவதாகவே காங்கிரஸுக்கு எதிரான அதன் பேச்சுகளில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்பு இருக்கிறது’ என்று எழுதியுள்ளார்.
எனது பார்வையில் பிரதமர், அவரது கட்சியினரிடம் உள்ள இந்த வெறுப்பு வரப் போகின்ற எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஏனென்றால் பாஜகவிற்கு எதிரான ஆட்சி எதிர் மனோநிலை மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகரித்து வருவதால், மோடி தன்னை பாதிக்கப்படக்கூடியவராகவே உணருவார். மேலும் காங்கிரஸ் இழைத்துள்ள தீமைகளை வாக்காளர்களும் நாட்டு மக்களும் மறந்து விடக் கூடாது என்றும், அவர்கள் தன்னுடைய தலைமையின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர் நிச்சயம் விரும்புவார். அதற்காக நாகரீகமான விவாதங்கள், உரையாடல்களுக்கு நமது பிரதமர் அதிக அளவிலே தடையை ஏற்படுத்துவார் என்றே நாம் எதிர்பார்க்கலாம். அவர்களிடமிருந்து வேறு என்ன நமக்கு கிடைக்கப் போகிறது?
(‘ஹிந்து ராஷ்டிரா’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள அசுதோஷ் satyahindi.com என்ற இணையதளத்தின் ஆசிரியராக உள்ளார்)
https://www.ndtv.com/opinion/pms-speech-reveals-rahul-gandhi-got-under-his-skin-2755902
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு