Paadal Enbathu Punaipeyar Webseries 10 Written by Lyricist Yegathasi தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




ஒரு பாடலை எழுத எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என ஒவ்வொரு பாடலாசிரியரிடமும் கேட்கப்படும் கேள்விக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சொன்ன பதில் அழகானது அதே நேரம் ஆச்சரியமானது. அதிக பட்சம் அரை மணி நேரம் என்கிறார். சில பாடல்களை பத்து நிமிடங்களில் எழுதியதாகவும் பதிவு செய்திருக்கிறார். அது அந்தத் துறையில் அவருக்கு இருக்கும் பேராற்றல். நானெல்லாம் பாடல்களை எழுதுகிற அவஸ்தையை அருகில் இருந்து நீங்கள் பார்த்தீரேயானால் என் தெரு இருக்கும் திசையைக் கூட திரும்பிப் பார்க்க மாட்டீர்கள். காரணம், எழுதும் பாடலுக்குள் ஓர் எழுத்தும் எனக்குப் பிடிக்காமல் இருக்கக் கூடாது என்கிற எனது தீவிரம், மற்றும் குப்பைத் தொட்டியில் போடுவதற்கொரு பாடல் வேண்டும் என்று கேட்டாலும் அதை அழகான பாடலாகவே எழுதித்தரும் பழக்கம் என்னிடம் உண்டு. அதனால் அந்த அவஸ்தையை நான் விரும்பியே ஏற்றிருக்கிறேன்.

Paadal Enbathu Punaipeyar Webseries 10 Written by Lyricist Yegathasi தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

எழுதி மெட்டமைப்பதில் மெட்டுக்கொரு பரிமாணமும், மெட்டுக்கு எழுதுவதில் எழுத்துக்கொரு பரிமாணமும் உண்டு. இதை அனுபவத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மெட்டுக்கு எழுதும் போது எனக்கு நேரம் கொஞ்சம் அதிகம் தேவைப்படுகிறது. மெட்டில்லாமல் எழுதுகிறபோது நேர மிச்சமும் சுதந்திரமும் கிடைக்கிறது.
ஒரு பாடல் எப்படி எழுதப் பட்டாலும் அதற்கு இசை அத்துணை முக்கியம். இசை தான் எழுத்துக்களை தேனில் ஊறவைத்து தேரேற்றுகிறது. இசை தான் எழுத்துக்களுக்கு போதை ஊற்றிக் கொடுக்கிறது, அதன் தள்ளாட்டமே நடனமாகிறது. இதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான்,

“கவிதை
மொழிக்கு ஆடை கட்டுகிறது
இசை தான் றெக்கை கட்டுகிறது” என்பார்.

திரைப்படங்களில் ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வது பலருக்கும் பிடித்தமான விசயமாக உணர்கிறேன் காரணம், நான் கல்லூரிகளுக்கு விருந்தினராகப் போகிற போதும், நண்பர்கள் வட்டாரத்திலும் நான் பாடலாசிரியரான காலந்தொட்டே கேட்டு வருகிறார்கள் இந்தக் கேள்வியை.

கதையை உருவாக்கும் போதே ஒரு இயக்குநர் பாடலுக்கான இடங்களையும் முடிவு செய்து விடுகிறார். தயாரிப்பாளரிடத்திலும் கதாநாயகன் கதாநாயகியின் முன் கதை சொல்லும்போதும் பாடல் வருகிற இடங்களைக் குறிப்பிடுகிறார். பின்னர் இசை அமைப்பாளரிடம் கதை சொல்லி முடித்து பாடலுக்கான சூழலையும் சொல்லுகிறார். இசையமைப்பாளர் இயக்குநர் திருப்தி கொள்ளும்படியான அளவுக்கு மெட்டுக்களைப் போட்டுக் காட்டுகிறார். இறுதியாக ஒரு படத்திற்கு ஐந்து அல்லது ஆறு பாடல்களுக்கான மெட்டுக்களைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பாடலையும் யார் எழுதினால் நன்றாக இருக்கும் என்று கவிஞர்களின் சமீபத்திய வெற்றிப் பாடல்களை வைத்துக்கொண்டு திட்டமிடுகிறார்கள். அதன்படியே ஒவ்வொரு மெட்டையும் அந்தந்த கவிஞர்களுக்குக் கொடுத்து எழுத வைக்கிறார்கள்.

இன்று நீங்கள் கேட்கும் பிரபலமான பாடல்களின் மெட்டுக்கள் அனைத்தும் முதன் முதலில் கேட்கும்போது பாடலை எழுதப்போகிறவர்களுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்று இருக்கும் . ஆரம்ப காலத்தில் தத்தகாரம் புரியாமல் அண்ணன் இயக்குநர் அருள்ராஜன் அவர்களிடம் அவரின் படப்பிடிப்பிற்கு நடுவில் கேட்டுத் தெரிந்திருக்கிறேன். அதன் பின் என் நண்பர் இசையமைப்பாளர் செல்வ தம்பியிடம் சந்தேகத்தை கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறேன்.

இப்படி அல்லல்பட்டு தத்தகாரத்தை உள்வாங்கி பின் சொன்ன சூழலுக்கு மீட்டர் பிசகாமல் எழுதவேண்டும். ஒரு பாடலுக்கு ஒன்பது பாடல் எழுத வேண்டும். அப்போது தான் ஒரு பாடல் உருவாகும். இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு பல்லவியிலும் ஒவ்வொரு சரணத்திலும் இரண்டு இரண்டு வரிகளாகப் பொறுக்கி ஒன்று சேர்த்து ஒரு பாடல் உருவாகும். அப்படித்தான் “பீமா” படத்தின் “மெகு மெகு” பாடலுக்கு நண்பர் நா. முத்துக்குமார் 20 பல்லவி நாற்பது சரணம் வரை எழுதினார். ஆடுகளம் படத்தின் “ஒத்த சொல்லால” பாடலுக்கு நண்பர் வெற்றிமாறன் அவர்கள் கேட்காமலேயே 15 பல்லவி, 15 சரணம் எழுதிக் கொடுத்தேன். அவர்களுக்கு எல்லாம் பிடித்துப் போய் எதை வைப்பது எதை ஒதுக்குவது என்பதில் சிரமம் இருந்ததாக இசை அமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமார் சொல்லியிருக்கிறார்.

ஒரு பாடலுக்குத் தேவையான ஒரு பல்லவி இரண்டு சரணங்களை எடுத்துக் கொண்டு இயக்குநரும் பாடலாசிரியரும் இசையமைப்பாளரிடம் செல்ல, அங்கே வரிகளை இசையமைப்பாளர் அந்த மெட்டிற்குப் பாடிப் பார்ப்பார். எங்காவது மீட்டர் இடித்தால் பாடலாசிரியரை அதை சரிசெய்து கொண்டு பின் ட்ராக் சிங்கர் வைத்து அல்லது இசையமைப்பாளரே ட்ராக் வாய்ஸ் பாடி வைத்துக் கொள்வர். அவசரமாகப் படப்பிடிப்பிற்குக் கிளம்பும் இயக்குநர்கள் ட்ராக் வாய்ஸை மட்டும் பெற்றுக்கொண்டு செல்வதுண்டு. அவசரமில்லையெனில் இந்தப் பாடலுக்குத் தேவையான பாடகரைத் தேர்வு செய்து குரல் பதிவு நடத்தி தேவையான இசைக் கோர்வைகளைச் செய்து மிக்ஸிங் மாஸ்டரிங் செய்யப்பட்டு பாடல் இறுதி நிலை அடைகின்றது.

ஒரு பொறுப்பு மிக்க பாடலாசிரியராக நான் பாடல் பதிவின் போது பாடகரின் மொழி உச்சரிப்பை மிக உற்று கவனிக்கிறேன். மொழி சிராய்ப்பு நடக்கவிடாமல் முடிந்த அளவு சரி செய்கிறேன். பாடல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று எழுபது சேனலுக்கு பேட்டி கொடுக்கிறோனோ இல்லையோ, பாடல் பதிவில் கலந்து கொள்ள பெரும்பாலும் தவிர்ப்பதில்லை. எனக்கு அதைவிட இதுதான் முக்கியம், காரணம் பாடல் பதிவின் போதுகூட பாடலின் மெருகேற்றலுக்காக சில வார்த்தைகளை மாற்றம் செய்வேன். இப்படித்தான் நண்பர்களே ஒரு பாடல் உருவாகிறது.

எழுதுகிற எல்லா பாடல்களும் ஒலிக்கூடத்தின் பதிவுவரை செல்வதில்லை. ஒலிப்பதிவு செய்த எல்லா பாடல்களும் திரைக்கு வருவதில்லை. திரைக்கு வரும் எல்லா பாடல்களும் வெற்றி பெறுவதுமில்லை. அதே போல் வெற்றிபெறும் பாடல்கள் எல்லா நல்ல பாடல்களும் அல்ல வெற்றி பெறாத பாடல்கள் எல்லாம் மோசமும் அல்ல. ஏனெனில் பெரிய ஹீரோக்களுக்கு எழுதப்படுகிற சுமாரும் சூப்பராகிவிடும். புது முகங்களுக்கு எழுதப்படுகிற சூப்பரும் சுமாராகிவிடும்.

திரைப்படப் பாடல்களைப் பொறுத்தவரை பல்லவியின் முதல் இரண்டு வரிகள், மக்கள் முணுமுணுப்பதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்வது வழக்கம். என்னைப் பொருத்தவரை எல்லாவரிகளுக்கும் மெனக்கிடுகிறேன். ஆனாலும் மக்கள் பாடலின் முதல் இரண்டு வரிகளைத் தாண்டி அந்தப் பக்கம் போகமாட்டார்கள். பாடல்களை மனனம் செய்துவந்து பாராட்டுகின்ற சில ரசிகமணிகள் இந்த லிஸ்டில் அடங்கார். ஒரு பாடலின் சரணங்களுக்கே இந்தக் கதி என்றால், “ராக்கமா கையத் தட்டு” பாடலின் இடையே வரும் ‘குனித்த புருவமும்” போன்ற துண்டு வரிகளைப் பிழைக்க வைப்பது பெரும் பாடு. ரஜினி படம் என்பதால் நாவுக்கரசர் எழுதிய தேவாரம் தப்பித்தது. அப்படியான பாடல்கள் எனக்கும் பல அமைந்ததுண்டு அவற்றில் சில உங்களுக்காக.

“ஈட்டி” படத்தில் ‘பஞ்சு மிட்டாய் மேல தீயப் பத்த வச்சாடா”‘ எனும் பாடலின் நடுவே, இளம் பெண்கள் குழுவாகக் கூடி மையத்தில் நின்றாடும் நாயகியின் அழகைப் பாடுவதாக,

“பேரழகாள் வருகின்ற
தெருவை அறிவானோ
கார்முகிலாள் தருகின்ற
அமுதம் குளிப்பானோ
கூர் விழியால் ஒருநாளிவன்
குத்திச் சரிவானோ”

“மதயானைக் கூட்டம்” படத்தில் புஷ்பவனம் குப்புசாமி பாடிய “கொம்பு ஊதி கொட்டடிச்சு கெளப்புங்கடா சக்க” என்கிற ஒரு திருமண விழா பாடலில், மணமக்களுக்கு திருமணம் முடிந்து முதலிரவுக்கு அனுப்பி வைக்கும் போது மணமகனின் நண்பர்கள் பாடுவதாக அமைந்த வரிகள்,

“சாமந்திப் பூவா
சக்கரப் பாகா
பாத்திட்டு வந்துதான்
சொல்லுங்க…

மூச்சுல வெயில்
கொட்டுறா குயில்
எதுக்க ஆம்பள
நில்லுங்க…

ஒத்தடம் போலத்தான்
நடந்தாள்
ஒருத்தரும் பாக்காத
தடந்தான்

தாழம்பூ அவளோட
நெறந்தான் – அவன்
தன்னையே மறந்து
கெடந்தான்”

நண்பர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், தர்புகா சிவா இசையில் “கிடாரி” படத்தில் மூன்று பாடல்கள் எழுதியுள்ளேன், அதன் முழு அனுபவத்தை வேறொரு கட்டுரையில் சொல்ல இருக்கிறேன், அதற்கும் முன்னதாக அந்தப் படத்தில் வரும், “வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும்” எனும் நண்பர் அந்தோனிதாஸ் பாடிய பாடலின் குறுக்காக, சசிக்குமாரும் அவரது காதலி நிகிதா விமலும் ஒரு சிறு வீட்டிற்குள் திட்டமிட்டுச் சந்தித்துக் கொள்கிறார்கள். அவள் முழு மூர்க்கத்தில் காதலனை சுவற்றில் சார்த்தி முத்தம் வைத்து முதலடி எடுத்து வைக்கையில் மனதின் தவிப்பை மருகலாய் எழுதினேன்.

“விரல் தொடும் தூரத்தில்
வர மிருக்கு
போதும் போதுமே நா வாழ
விடிய மறந்திடு ராத்திரியே
வேற எதுவும் வேணா
உருவம் பாத்தே
உசுரு போதே
என்ன மாயந்தான் நீ செஞ்ச

யாத்தே தாங்கல
தூத்தக் காட்டுல
போத ஏத்துதே மீச
தீபம் ஊமையா
போக சாபந்தான்
நானும் போடத்தான் ஆச

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

Paadal Enbathu Punaipeyar Webseries 6 Written by Lyricist Yegathasi தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




பாடல் என்கிற சொல் மூன்று எழுத்துக்களைத் தொடுத்த வெறும் கோலமல்ல. எந்த ஒரு உணர்வையும் பிரதிபலிக்காத கோலம் கூட கோலமல்ல தான். மண்ணில் வாழுகிற சீவராசிகளின் துயரத்தைச் சொல்லும் பாடல் என்பது பாடலல்ல அது கண்ணீரின் பிரதி. பாடல் என்பது புனைபெயர் தான்.

பல்லவி:
வாக்கப்பட ஆச – நா
வளவிதொட ஆச
அப்பன் வீட்டப் பிரிஞ்சு கொஞ்சம்
அழுதுபாக்க ஆச

கோபுரமா நா கேட்டேன் சாமி
குயில் ஒக்கார கூடுஒண்ணு காமி

சரணம்:
செத்துப்போன அண்ணன் போல பெத்துக் கொள்ள ஆச
சீமையிலே இல்லாத
பேரு வைக்க ஆச
வீட்டுக்கொரு கடுதாசி
போட்டு விட ஆச
வெள்ளச்சாமி வாத்தியாரக்
கேட்டு விட ஆச
வச்சுவிட்டு வந்த செடி
போயிப் பாக்க ஆச
தங்கச்சிக்கு மூக்குத்தி
வாங்கிப் போக ஆச

ஜாதியால வெட்டிக்கிட்ட
ஊரு கத பேச
சீர்வரிச செய்ய வீட்ட
வித்த கதப் பேச
எனக்கெப்போ வருமந்த
திருநாளு
தெனந்தோறும் கிழியுதுங்க
தேதித் தாளு

வாங்கி வந்த வரமா – நா
கருவேல மரமா

இந்தப் பாடலுக்கு கரிசல் குயில் கிருஷ்ணசாமி அண்ணன் அமைத்த மெட்டு என் உயிரை நனைத்தது. இதுவரை அமைத்திருக்கும் அவரின் நூற்றுக்கணக்கான பாடல்களில் இதற்கு முதலிடம் கொடுக்கலாமென்றே தோன்றுகிறது.
திரைப்படங்களில் பெரும்பாலும் காதல் பாடல்களே வாய்ப்பாக வருகின்ற சூழலில்தான் நான் என் விருப்பங்களை தனி இசைப் பாடல்கள் வழியாக நிறைவேற்றிக் கொள்கிறேன்.

ஒவ்வொரு இயக்குனரும் ஒரு கதையை உருவாக்குகையில், சொல்லிப் பார்க்கவும் அபிப்பிராயம் கேட்கவும் ஒரு நண்பரையோ ஒரு உதவி இயக்குனரையோ கூடவே வைத்துக் கொள்வர். ஆயிரம் பேர் இருப்பினும் ஒவ்வொருவருக்கும் ஒருவர் நெருடலின்றி பொருத்திப் போவர். அப்படி எனக்கு ஒருவர் எங்கள் ஊரைச் சேர்ந்த தம்பி செந்தில்குமார். நான் திரைப்பட உதவி இயக்குனராக இருந்தபோதே அவர்களது தோட்டம் நிறைய தென்னம்பிள்ளை நடப்பட்ட நாளில் மரங்கள் பெரிதானபின் இவையின் நிழலில் நாம் கதை விவாதம் வைத்துக்கொள்ளலாம் என்றவர். பிற்காலத்தில் அவரும் உதவி இயக்குனராக பணிசெய்து அனுபவம் பெற்றார். நான் இதுவரை சொன்ன கதையிலும் சொல்லயிருக்கும் கதையிலும் என் தம்பி செந்தில்குமாரின் தலையசைப்பும் கேள்விகளும் இருக்கும்.

நான் ஆகஸ்ட் 18, 1999 வருடம் லட்சியம் வெல்ல வாழ்த்தியவர்கள் ஏராளம். எங்கள் வீட்டுக் கூரை இற்றுப் பிய்ந்து கிடப்பதை சாலையில் போகும்போது எதார்த்தமாக பார்த்தவிட்டு மறுநாளே தென்னங் கிடுகுகளை வண்டிகட்டி ஏற்றிவிட்ட என் நண்பனும் பள்ளித்தோழனுமாகிய லோகநாத்.

நான் சென்னைக்கு கிளம்பும் போது என் கையில் இருபது ரூபாயை கொடுத்த ஜெயராஜ் மாப்பிள்ளை, நான் மதுரை வந்து சென்னை திரும்பும் போதெல்லாம் பால்விற்ற காசு நூறோ இருநூறோ கையில் அகப்படும் காசுகளை அள்ளி எண்ணாமல் கொடுத்த நண்பர் துளசி, எனக்கு திருமணமாகும்வரை இந்த நண்பர்கள் தான் நான் மதுரை வந்தபோதெல்லாம் வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் தான் சீட்டுப் பிடித்து உட்காரவும் வைப்பார்கள். அப்போதெல்லாம் நான் ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்வதில்லை. நண்பர்களே எல்லாமாவும் இருந்தார்கள்.
Paadal Enbathu Punaipeyar Webseries 6 Written by Lyricist Yegathasi தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசிநண்பர் இயக்குநர் ரவிஅரசு அவர்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் உதவியாளர். சாதிக்க வேண்டும் என்பதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அகத்தில் தீவிரம் காட்டும் அன்புக்காரர். எஸ். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவான “ஈட்டி” எனும் திரைப்படம் நண்பர் ரவிஅரசுக்கு முதல்படம். நான் மேல் பத்தியில் சொன்னவை போன்ற அனுபவம் இந்த படத்தில் உணரக் கிடைத்தது. நண்பர்கள் சூழ்ந்த சென்னை நாயகன் அதர்வா. தஞ்சாவூர் பெண்ணான ஸ்ரீ திவ்யாவைக் காதலிக்கிறான். முகம்பாரா காதல். கைப்பேசி வழியாக மட்டுமே காதலுருகும் சிறகுகளின் வாசமே இந்தப் பாடலின் சூழல். தன் காதலின் அழகைச் சிலாகிக்கும் நாயகனும் கலாய்க்கும் நண்பர்களும்.

பல்லவி:

நாயகன்:
பஞ்சுமிட்டாய் மேல தீய
பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன
சுத்த வச்சடா

மேலே மேலே
அவ மின்னலத்தான்
போலே போலே
கீழே கீழே என்ன
கொன்னுபுட்டாளே

கையில சிறகை
கட்டி விட்டாளே
பறவையாய் ஆனேனே

நண்பர்கள்:
சங்கத் தமிழா தங்கச் சிலையா
ஒத்து வருமாடா – அவ
சோழ நாட்டு சொர்ண கிளியா
சொல்லித் தொலடா

சரணம் – 1

நாயகன்:
மயிலா குயிலா தெரியாது
மணி குரல் என்ன வாட்டுதடா

நண்பர்கள்:
கொல்லுறான் கொல்லுறான் தத்துவம் சொல்லுறான்
ஐயோ தாங்கலடா – இவன்
ஓவரா பேசுறான் கேக்குற காதுல
ரத்தம் ஊத்துதடா

நாயகன்:
இரவு பகலும் பாக்காம
பேயப் போல ஆட்டுதடா

தஞ்சை கோபுர நிழலோ
நிலவுக்கு சித்தப்பன் மகளோ
நதி தந்தாளே அலை தந்தாளே பாராமலே

சரணம் – 2

நாயகன்:
ஓசி கனவு வரும் போது
ஒரு நொடி கூட தூங்கலையே

நண்பர்கள்:
பரோட்டா தின்னுட்டு கொறட்ட விட்டியே பொய்க்கொரு அளவில்லையா
கொசுக்கடி தாங்கல நீயும் தூங்கல
அள்ளி விடுறடா

நாயகன்:
நிறுத்தம் தாண்டி தூங்கிபுட்டேன் பஸ்ஸுல விசிலு கேக்கலையே
ஒலையென கொதிக்குது மனமே
அணைத்திட வாங்கடா சனமே
மழபேஞ்சாலும் வெயிலடிச்சாலும்
எருமை போலானேன்

நண்பர்கள்:
சங்கத் தமிழா தங்கச் சிலையா
ஒத்து வருமாடா – அவ
சோழ நாட்டு சொர்ண கிளியா
சொல்லி தொலடா

இதே படத்தில் இன்னொரு பாடல். அது டூயட். நாயகனும் நாயகியும் கைப்பேசி வழியாக காதல் வளர்ப்பது பாடலின் சூழல். ஏழு பல்லவி எழுதியதில் இயக்குநர் ஒன்றைத் தேர்வு செய்தார். ஆனால் ரவிஅரசின் குருவான இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு, “மரிக்கொழுந்து வாசப்புள்ள” எனத் தொடங்கும் பல்லவியே பிடித்திருந்தது. ஆனால் படத்தின் இயக்குநர் ரவிஅரசு தேர்வு செய்ததும் பாடல் பதிவானதும் கீழ்வருவது.
Paadal Enbathu Punaipeyar Webseries 6 Written by Lyricist Yegathasi தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசிபல்லவி:

ஆண்:
நாம்புடிச்ச மொசக்குட்டியே
ஏம்மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாத
வேல் குத்தி கொல்லாத
போகாது ஓங்கிறுக்கு

பெண்:
ஏ உசுர திருடிப்புட்டு
ஏன்டா பையா அடகு வச்ச
கண்ணாடி பொம்மை நான்
பாத்துக்க பாத்துக்க
கையால என்ன தான்
போத்திக்க போத்திக்க
சாச்சாயே சொல்லால
மூச்செல்லாம் உம்மேல
காத்தாகி ஒன்னத் தொடுவேன்

சரணம் :1

ஆண்:
மீசை கொண்டு
ஊசி நான் போடணும்

பெண்:
ஆசை வச்ச
ஆளத்தான் பாக்கணும்

ஆண்:
பாய்க்கு லீவு விட்டாயே

பெண்:
நோயிக்கு டோக்கன் தந்தாயே

ஆண்:
நாற்காலியா நான் மாறவா
தேவதையே உட்கார வா

பெண்:
தூரம் தானே ஈரம் பேசும்
அருகே வந்தால் மோசமாய் போகுமே

சரணம் – 2

ஆண்:
ஃபோனு நம்பர்
போதைய ஏத்துது

பெண்:
பேச்சு இப்ப
பாதைய மாத்துது

ஆண்:
நூலின்றி
ஊசி கோர்த்தேனே

பெண்:
மீன் வாங்கி
சாம்பார் வச்சேனே

ஆண்:
ஹைக்கூ பேச்சா ஆரம்பிச்சு
நாவல் போலே ஆகிப்போச்சு

பெண்
பட்டாம் பூச்சி றெக்கை வாங்கி
இதயம் ரெண்டு வண்ணங்கள் பூசுதே

இந்தப் பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் காதல் போதையை மூளைக்கேற்றிப் பாடியிருப்பார். ஷக்திஸ்ரீ கோபாலன் அவர்கள் ஈடுகொடுத்துப் பாடி எல்லோரின் இதயங்களையும் சல்லடையாக்கும் வேலையைச் செவ்வனே செய்திருப்பார்.

நண்பர்கள் காலகாலமாக காதலுக்குத் துணைபுரிந்து வந்திருக்கிறார்கள் என்பதை தமிழ் சினிமா மூலம் அதிகமும் இலக்கியத்தில் கொஞ்சமும் அறியப்பட்டிருப்போம். நண்பர்கள் வாழ்விற்கும் துணையாய் தூணாய் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு நானும் என் நண்பர்களும் கூட சாட்சிதான் என்னை மருத்துவராக்கி அழகு பார்க்க ஆசைப்பட்டு கடைசியில் நான் கவிஞனாகிப் போனதில் கவலையுறாமல் கண்மலரந்த என் தாய்மாமன் மாமா பாண்டி அவர்களும், என் சகல கலை அனுபவங்களுக்குள்ளும் வாஞ்சையோடும் வழிகாட்டுதலோடும் இருந்த என் அண்ணன் சுந்தரபாண்டியனும், வெளிநாட்டிலிருந்து என்னை எல்லா வகையிலும் ஊக்கப்படுத்திய ருக்மணி அக்காவும், நான் சென்னையில் தங்குவதற்காக போரூரில் அறை பார்த்து வைத்தது தொடங்கி நான் இயக்குனராகும்வரை அன்பை அள்ளித்தந்து அரவணைத்துக் கொண்ட மாமா மலர்க்கொடி அக்கா மணிமேகலை தம்பதியரும், நான் சாப்பிடவில்லை என்றால் கட்டிவைத்து அடிக்கும் பரணி ஸ்டுடியோ அண்ணன் பாண்டி அக்கா இந்திராணி அவர்களும், மற்றும் செக்காணூரனி தமுஎகச நண்பர்களும் என்னைப் பொருத்தவரை பூ பூத்து காய் காய்த்து கனிதரும் மரங்கள். இந்த மரங்களின் கிளைகளிலெல்லாம் அமர்ந்து அழகாகியிருக்கும் வானம்பாடி நான். இலையுதிர் காலத்தில் அந்த மரங்களுக்கெல்லாம் என் இறகுகளை இலைகளாக்கியும் இருக்கிறேன்.

என் பாட்டுப் பயணத்தில் மிக அருகிருந்த ஒருவன். தன்னுடன் பிறந்த நான்கு அண்ணன் தம்பிகளையும் தள்ளிவைத்து என்னை அண்ணனாய் ஏற்றுக் கொண்டவன். என்னிடம் புகைப்படம் எடுப்பதையும், கடவுள் மறுபையும் கற்றுக்கொண்டவன் வாழ்வின் சிக்கலை அவிழ்க்க இயலாமல் போனவன். நான் என் முதல்படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காக திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த நள்ளிரவில் அவன் கைப்பேசியிலிருந்தே அவன் இறந்துவிட்ட சேதி. அவன் பெயர் விஜயக்குமார். நான் கதைகளில் பாத்திரங்களை உருவாக்கிக் கொண்டு சென்ற வேளைகளில் நண்பர்களும் தோழர்களும் உதிர்ந்துகொண்டிருந்த நிகழ்வுகளை மறக்கத்தான் முடியுமோ.

முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி