Manathil Ganatha Sambal Poem By AdhiSakthivel. ஆதித் சக்திவேலின் மனதில் கனத்த சாம்பல் கவிதை

மனதில் கனத்த சாம்பல் கவிதை – ஆதித் சக்திவேல்




உயிர்கள் வேறாயினும்
சாம்பல் என்றே சொல்கின்றோம்
உடல் எரியக் கிடைக்கும் மீதத்தை
துளிகள் வேறாயினும்
மழை என்பதைப் போல்

தந்தையின் சாம்பலைத்
தலை மகன் என்னைக்
கரைக்கச் சொன்னது மரபு

அவரது இறுதி மூச்சின் சுருதி
இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது
இசையாய் அச்சாம்பலில்

இரு கரை தொட்டு ஓடிய நொய்யலின்
தென்கரையில் மூன்று படிக்கட்டுகள்
இன்னும் மூழ்காமல்
ஓடிய பிரவாகத்தில் மிதந்தார்
காட்சி அடுக்குகளாய் அப்பா
எனக்குத் தெரிந்த நாள் முதல்
மரணம் மறைந்து தாக்கிய நாள் வரை

வெண்ணிறச் சாம்பலில்
எரியாது இருந்த
அடர் துயரத்தின்
விரிசலில் முளைத்த
அப்பாவின் நினைவுகள்
கைகளில் கனத்தது

காலத்தின் மரத்தில்
அனுபவ ஊஞ்சல் கட்டி ஆடியவர்
இன்று உறங்குகிறார்
அம்மர நிழலில்
சாம்பலாய்

காலங்களின் தொலைவை
காலத்தால் கடந்த அவர் இறந்ததை
எந்தக் காலத்தில் குறிப்பிடுவேன் நான்?

தாய்மை பொங்கி வழியும்
தந்தையென
ஈரம் நிறை ஆன்மாவின் கதவுகளை
அகலத் திறந்து வைத்து – அதில்
எரியும் மெழுகுவர்த்தியாய்
உருகும் பனிக்கட்டியாய்
தன்னைக் குவித்து
குறையாக் குளிரை
அணையா ஒளியை அள்ளிக் கொள்ள
வாருங்கள் என அழைத்தவர்

பசுந்தரையிலும்
பாறைகளிலும்
எதிரொலிக்கிறது
அவரது அழைப்பு

ஆண்டுகள் ஒரு நூறு ஆயிடினும்- நாம்
பெற்றுக் கொள்ள எத்தனையோ
அவரிடம் இன்னும்
சாம்பலைக் கரைக்கையில்
கழுவிட முடியாக் கரையாய்
என் இரு கைகளில் பரவியது
அவரது ஞானத்தின் கரை

காற்றில் கரையும் வாசனையாய்
நீரில் கரைந்த சாம்பல்
இன்னுமோர் உயிரைச் சேர்த்தது
நொய்யலின் உயிரோட்டத்தில்

திரும்பிப் பார்த்தேன்
நின்று கரைத்த
மூன்று படிக்கட்டுகளையும்
மூழ்கடித்து ஓடத் தொடங்கியிருந்தது
வெள்ளம்
எங்கிருந்தோ
நுங்கும் நுரையுமாய்ப் பொங்கிப்
பாய்ந்து வந்தது நொய்யல்
சாம்பலைத் தனதாக்கிக் கொள்ள

இப்போதும்
கரைந்த சாம்பலில்
இசையாய் ஒலித்தது
அவரது இறுதி மூச்சு
நொய்யல் ரசித்தது அதை
மேலும் கீழும் தலையசைத்து

நீண்ட நாட்களுக்குப் பின் கண்டேன்
நொய்யலின் முகத்தில்
ஒளிரும் புன்னகையை
கைகளில் கனத்த சாம்பல்
இப்போது
மனதில் கனத்தது

Anandha Isaiyana Azhugai Oli Poem By Adhi Sakthivel. ஆதித் சக்திவேலின் ஆனந்த இசையான அழுகை ஒலி கவிதை

ஆனந்த இசையான அழுகை ஒலி கவிதை – ஆதித் சக்திவேல்




காலம் மெதுவாகப்
பருகிக் கொண்டிருந்த அந்த இரவு
என் வாழ்க்கையின்
மிக நீண்ட ஒன்றானது
எதிர்பார்ப்பின் எச்சங்கள்
மூழ்கடித்திருந்தன என்னை

கைகளும் மனமும்
போட்டியிட்டுப் பிசைந்து கொண்டன
போர்க்கள பரபரப்பில் இயங்கிய
அந்த பிரசவ அறையின் வெளியே

தன் முழு பாரத்தையும்
இறக்கி வைத்திருந்தது அமைதி
அந்தக் காத்திருப்பு அறையில்
என்னைச் சுற்றி

ஆதியில்
பள்ளத்தாக்குகளின் புல் வெளியில்
பாலையின் மணற்பரப்புகளில்
பரவிய அதே ரத்த நெடி
உயிரை உந்தித் தள்ளிய
தாய்மை வலியின் அதே இன்பக் கதறல்
பிறப்பின் அதே சுகமான மணம்

குகைகளின்
கருங்கற்களில் முட்டி
இருட்காடுகளின்
பெருமரங்களில் பட்டு எதிரொலித்த
அதே முதல் அழுகை ஒலி
ஆனந்த இசையெனக் கசிந்தது
வாழ்வின் முடிச்சு ஒன்று
அவிழும் ஓசையின் பின்னணியில்
மூடிய கண்ணாடிக் கதவின் இடுக்குகளில்

கருவறை உலைக்களத்தின்
குறையாச் சூட்டில்
உருகா பனிக் குவியலாய்
தாய்மையில் மிதந்த
அணையா ஒளிப் பந்து ஒன்று
அசையா மேகப் பொதியென
நம்பிக்கையின் ஏராளமான சாயலுடன்
என் கைகளில் பூப்போல

முழுப் பரிமாணத்தில் நிறைந்து
பொங்கி வழிந்த நீல ஒளிச் சுடர்
அதன் கண்களில்
என் வாழ்வின்
ஒரு புதிய பாதைக்கு வெளிச்சம் ஊட்ட

கன்றிடுமோ கன்னம் – முத்தம்
ஒன்று தரின் என அஞ்சி
உச்சந்தலையில் நான் அதைத் தர
என்னை நிரப்பியது அது
இன்பத்தின் துண்டுகளாய் உடைந்து

மனைவியைப் பார்த்தேன்
மகிழ்ச்சியும் வலியும்
மாறி மாறி மையமிட்ட அவளது முகம்
சிவப்பும் வெளுப்பும் ஆனது
மாறி மாறி

நிலம் கிழித்து
மேல் வரும் முளையில்
அதே நிலம் துளைத்து
கீழ் இறங்கும் வேரில்
கவுரவம் கொண்ட விதையானாள்
தாய் என
தன் அடையாளம் மாறியதில்

என் மனமெங்கும் மகிழ்வு மழை
கண்களில் வழிந்தது அது
சில சொட்டுகளாய்த்
தன்னைச் சுருக்கி
வாழ்வின் சாரமென

வான் நிலா தான் தேயும்…… – ஆதி சக்திவேல்

வான் நிலா தான் தேயும்…… – ஆதி சக்திவேல்

  உன் பாடல்கள்   தன்னில் மிதந்து பரவியதில் கவுரவப்பட்ட காற்று- இன்று கவலைப்பட்டு கலங்கி நிற்கிறது உன் மறைவுச் செய்தி அதனில் பரவியதை எண்ணி   இசை தன் சுரம் இழந்து அழுகிறது -தமிழகமோ தன் இசைக்கரம் இழந்து துடிக்கிறது  …