நூல் அறிமுகம் வெள்ளி மயிலிறகு டாக்டர் சிரி தமிழாக்கம்: பாலசுப்ரமணியம் nool arimugam vellimayiliragu doctor siri thamizhakam:balasubramaniyam

நூல் அறிமுகம்: வெள்ளி மயிலிறகு – பெரணமல்லூர் சேகரன்


ஆசிரியர்: டாக்டர் சிரி
தமிழில்: ஏ.ஆர்.பாலசுப்பிரமணியம்
பக்கங்கள்: 112
விலை: ₹110
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க இங்கே கிளிக் செய்யவும்: https://thamizhbooks.com/product/velli-mayiliragu/

இன்றைய உலகம் உயர்தொழில்நுட்ப உலகமாக உள்ளது. சிறுவர்கள் கைகளிலும் திறன்பேசிகள் தவழும் காலமிது. இந்நிலையில் வாசிப்பை வசப்படுத்த இளம் பிராயத்தில் இருந்தே துவங்க வேண்டியுள்ளது.

‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’ எனத் துவங்கி கதை சொல்ல வீடுகளில் மூத்த குடிமக்கள் குறிப்பாக பாட்டிகள் இல்லை. ஒன்று முதியோர் இல்லத்தில் பாட்டிகள் இருக்கும் நிலை. இரண்டு தனியாகவே வாழும் நிலை. மூன்று அபூர்வமாக பாட்டியுடன் வாழும் வாய்ப்பிருந்தாலும் பாட்டி கதை சொல்லவும் குழந்தைகள் அதைக் கேட்கவும் தயாரில்லை.

தாங்க முடியாத புத்தகச் சுமை யுடன் பள்ளிக்குச் சென்று திரும்பும் குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக ட்யூஷன், பாட்டுக்கிளாஸ், டான்ஸ் கிளாஸ், இந்தி கிளாஸ், கராத்தே கிளாஸ் என ஏதேனும் சிலவற்றில் குழந்தைகளைச் சேர்த்துவிட்டு பெற்றோர்கள் குழந்தைகளைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது.

இந்நிலையில் குழந்தைகள் பாடப்புத்தகங்களைத் தவிர்த்து கதைகளை, பாடல்களை, கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்களை வாசிக்க வேண்டுமெனில் பெற்றோர்கள் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். ஆனால் வேலைக்குப் போகும் பெற்றோர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டலில் உழன்று வீட்டுக்கு வந்தவுடன் ஓய்வும் உறக்கமுமே தழுவும் யதார்த்த நிலை. இவற்றையெல்லாம் மீறி குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”
வார விடுமுறை தினத்திலாவது இத்தகைய பணியை மேற்கொள்ளலாம்.

நூல்களை வாசிக்கக் கொடுக்கும்போது அவை கதைகளாகவும் பாடல்களாகவும் இருப்பதே உகந்தது. அத்தகைய கதைகளை உள்ளடக்கி வந்துள்ள நூல் வரிசையில் ‘வெள்ளி மயிலிறகு’ குறிப்பிடத் தக்க சிறுவர் இலக்கியம் எனின் மிகையன்று.

இந்நூலில் உள்ள 20 கதைகளும் சிறுவர்கள் ஆர்வமாகக் கேட்கவும் படிக்கவுமானவை. வாசிக்கக் கேட்பதும் வாசிப்பதும் சிறுவர்களின் அந்தந்த வயதைப் பொறுத்தது.

அறிவுரை சொன்னாலே பிடிக்காத சமுதாயமாக இன்றைய இளைஞர்கள் சமுதாயம் உள்ளது கண்கூடு. எனினும் அப்படியே இளைஞர்களின் போக்கிலேயே விட்டுவிடவும் முடியாது. எனவேதான் கதையைச் சொல்லி அதன் மூலம் இறுதியில் நீதியையோ அறிவுரையையோ சொல்லும்போது அது ஏற்கத்தக்கதாக அமைகிறது.

அத்தகைய கதைகளைக் கொண்ட நூலாக அமைந்துள்ளது ‘வெள்ளி மயிலிறகு’.

முதல் கதையையே நூலின் தலைப்பாக்கியுள்ளார் நூலாசிரியர். அத்தகைய முதல் கதையான ‘வெள்ளி மயிலிறகு’கதை மூலம் ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்து அதன்மூலம் மகிழ்ந்து வாழ்வதால் ஏற்படும் நன்மையை விலங்குகள் மற்றும் பறவைகள் மூலம் பசுமரத்தாணியாய் சிறுவர்கள் மத்தியில் பதிய வைக்கிறார்.

ஒரு சமூகம் முன்னேறவும் ஒரு குடும்பம் மகிழ்வுடன் வாழவும் உழைப்பு இன்றியமையாதது. அத்தகைய உழைப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டிய மன்னனே உழைப்பைப் பற்றிக் கவலைப்படவில்லையென்றால் அந்நாடு வளர்ச்சி காணாது. மன்னனையும் உணரச்செய்து மக்களையும் உணரச் செய்து முன்னேற்றம் கண்டதை ‘உண்மையான அரசன்’ கதை மூலம் அறிய முடிகிறது.

நேர்மை என்பது வாழ்வின் ஓர் அங்கம். அதை சிறுவயதிலிருந்தே நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதைத்தான் செய்துள்ளது ‘முத்துநிலவனின் நேர்மை’ எனும் கதை.

பிறக்கும்போதே திருடர்களாய் யாரும் பிறப்பதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக மாறினாலும் திருடனின் தவறை திருடனையே உணரச் செய்து திருந்தி வாழச் செய்தல் குறிப்பிடத்தக்க முக்கிய சேவை. ‘மாறிய திருடன்’ எனும் கதை அதைச் செய்து காட்டியுள்ளது.

‘இடைவிடாத பயிற்சி’ மூலம் எண்ணியதை சாதிக்கலாம் என்பதையும், ‘பட்டாம்பூச்சிகள்’ மூலம் அன்பாக இருக்க வேண்டும் என்பதையும் கற்பித்துள்ளார் நூலாசிரியர்.

கல்வி, கலை எதுவாயினும் தொடர்ந்து கற்று வர வேண்டும். அதன்மூலம் அவற்றில் சிறந்து விளங்க முடியும் என்பதை ‘உண்மையான சிற்பி’ கதை உணர்த்துகிறது.

கழுதையானாலும் அதை மதிப்பவரிடத்தில் அது மகிழ்வுடன் உழைக்கிறது என்னும் கதை மூலம் பிறரை மதித்து நடக்க வேண்டும் என்னும் நல்ல விதைகளை விதைத்துள்ளது பாராட்டத் தக்கது.

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் அனுபவக் கல்வி, வாழ்க்கைக் கல்வி போன்றவற்றை சிறுவர்கள் கற்க வேண்டும் என்பதை ‘வெற்றிச் செல்வன் கற்ற பாடம்’ மூலம் கற்பிக்கிறார் நூலாசிரியர்.

‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பது முதுமொழி. அதை ‘கண்ணுக்குத் தெரியாத உண்மை’ என்ற கதையில் போதிக்கிறார் நூலாசிரியர்.

‘நல்லதை மட்டும் கேள். தீயதாக இருந்தால் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிடு’ என்பர் பெரியோர். அதைத்தான் சொல்கிறது ‘கடத்தி-கடத்தி அல்லாதது’ எனும் கதை.

மக்கள் எண்ணங்களை அறிய மாறுவேடத்தில் அரசர்கள் நகர்வலம் வருவது வழக்கம். சில கதைகளில் இது கையாளப்பட்டுள்ளது. அதில் ஒரு கதைதான் ‘அரசர்-அமைச்சர்’. அதே போன்றுதான் அரசனாக இருந்தாலும் குடியானவன் கூறிய அறிவுரையால் சாப்பாட்டுப் பிரியனாய் இருந்த அரசன் மக்கள் பிரியனாய் மாறியதை ஒரு கதையின் மூலம் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர்.

‘சிவநேசன் சத்திரம்’ எனும் கதை ‘உழைப்புக்கேற்ற ஊதியம்’, ‘பணிச்சுமைக்கேற்ற பணியாளர்’ அவசியம் என்னும் தொழிற்சங்க பாலபாடத்தைப் போதிக்கிறது.

இப்படியாக இருபது கதைகளும் சிறுவர்களுக்கான கதைகளாக வடித்திருந்தாலும் பெரியவர்களும் மனதிற் கொள்ள வேண்டிய கதைகளாகவே உள்ளன.

டாக்டர் சிரியின் தெலுங்கு மொழியிலான இந்நூலை ஏ.ஆர். பாலசுப்ரமணியம் சிறப்பாக மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு கதைக்கும் படங்களை இடம் பெறச் செய்து அழகிய முறையில் அச்சிட்டு வழங்கியுள்ள பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியது. இந்நூலை வாங்கி சிறுவர்களுக்கு வழங்குவதும் அவர்களை வாசிக்கச் செய்வதும் இந்நூல் வீட்டு நூலகத்தில் இடம் பெறச் செய்வதும் பெற்றோரின் தலையாய கடமை.

முடிவுகள் எடுக்க கற்றுக்கொள்வோம்! கட்டுரை – இல.சுருளிவேல்

முடிவுகள் எடுக்க கற்றுக்கொள்வோம்! கட்டுரை – இல.சுருளிவேல்




வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் முடிவுகள் எடுப்பதில் குழப்பங்களை சந்திக்கிறோம். குழந்தை பருவம் முதல் முதுமை வரையில் ஒவ்வொரு கட்டத்திலும் வரக்கூடிய சவால்களை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பதை பொறுத்து மனிதனுக்கு அமைதியும், துக்கமும் அமைகிறது. இது நாம் எடுக்கும் சரியான முடிவை பொறுத்து அமைகிறது. அந்த முடிவுகள் எடுக்க ஏன் குழப்பங்கள் வருகின்றன. அதற்கு காரணம் என்ன என்பதை அறியத் தொடங்கி விட்டாலே சரியான முடிவுகள் எடுக்க தொடங்கி விட்டோம் எனலாம். உதாரணமாக, குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது, குழந்தையை எந்த பள்ளியில் சேர்ப்பது, என்ன படிப்பில் சேர்க்க வேண்டும், எந்த வேலையை தேர்ந்தெடுப்பது, சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி, காதலா, கல்யாணமா, எங்கு வீடு வாங்குவது, எந்தப்பொருள் நல்லது, எங்கு மருத்துவம் பார்ப்பது, வயதான பின்பு எங்கு இருப்பது, யாருடன் இருப்பது போன்ற விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். விருப்பத்தேர்வு (Options) எங்கு இருக்கிறதோ அங்கு குழப்பங்கள் வருவதும், அதனை தேர்வு செய்வதில் ஜாதகங்கள், சம்பிரதாயங்கள், இடம் பெறுவதும் இயல்பு. உதாரணமாக பசியுடன் இருக்கும் ஒருவனுக்கு கிடைக்கும் உணவு எதுவாகினும் அதை உட்கொள்ள தயாராக இருப்பான். அவனுக்கு விருப்பத்தேர்வு பல வகையான உணவு இருக்கும் போது அவற்றில் எது சிறந்த உணவு, விருப்ப உணவு என்ற சிறிய குழப்பங்களுக்கு ஆளாகிறான். அங்கு சரியான முடிவு எடுக்க வேண்டியுள்ளது. அதேபோன்று வீடு இல்லாத ஒருவனுக்கு ஜாதகங்கள், சம்பிரதாயங்கள், வாஸ்துகள் தேவை இருக்காது. அதிக வருமானம் இருந்தால் முடிவு எடுப்பதற்காக, மனநிறைவுக்காக வாஸ்துகளுக்காக அதிக செலவு செய்ய தயாராக இருக்கிறான். இதில் அறிவியல் உண்மை என்னவென்றால் யாருக்கு விருப்பத்தேர்வு அதிகமாக இருக்கிறதோ அவர்கள் முடிவெடுப்பதில் குழப்பம் கொள்வது இயல்பு. ஒரு விஷயத்தில் அனுபவம் இல்லாதவர்கள் தவறான முடிவு எடுத்து விடக்கூடாது என்பதற்காக சரியான நபரிடம் ஆலோசனைகள் பெறுவது நன்மையைத் தரும்.

சிலர் வாழ்க்கை பயணத்தின் நோக்கம் என்னவென்றே தெரியாமல் பயணம் செய்வதும் உண்டு. எந்த ஊருக்கு செல்கிறோம். நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு நேரம் எடுக்கும், எதில் பயணம் செய்யலாம் போன்ற எந்த ஒரு திட்டமும் இல்லாதவர்கள் எந்த ஒரு முடிவும் வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் வாழ்க்கை தானாக கடல் அலைகளில் ஒதுங்குகிற பொருளை போலதான். அவர்களின் வாழ்க்கை பயணம் இனிதாகவும், மனநிறைவுடனும் அமைய வாய்ப்பில்லை. அதனால் அவர்களுக்கு பண விரயம், கால விரயம் மட்டும் மிஞ்சும். அங்கு வறுமை நீடிக்கும். எனவே முடிவெடுக்கும் திறமையை வளத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நல்ல நூல்களை படிப்பது, நல்ல மனிதர்களிடம் நடப்பு கொள்வது மிக அவசியம். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சில நிர்வாகிகள் எடுக்கும் முடிவுகள் மிகச் சரியாக இருக்கும். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதையும் பார்க்க முடியும்.

பிரச்சனைகள் வரும் போது பொதுவாக நான்கு முடிவுகள் எடுக்கின்றோம். 1. பிரச்சனையைக் கண்டு ஓடி விடுவது; 2. பிரச்சனையைக் கண்டு உருகி விடுவது; 3. பிரச்சனையை தீர்க்க சண்டை போடுவது; 4. சரியான தீர்வு காண்பது. பிரச்சனைக்கு பயந்து ஓடி விடுவதாலும், உருகி விடுவதாலும், வன்முறையில் இரங்குவதாலும் நிரந்தர தீர்வு காண முடியாது. அப்பிரச்சினை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பதை பொறுத்து வெற்றி இருக்கிறது.

ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அதனை முழுமையாக ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுக்குப் பின் வருந்துவது இழுக்கான செயலாகும். அது அமைதியின்மையை ஏற்படுத்தி விடும். முன்னேற்றத்துக்கும் தடையாகவும் அமையும்.

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு” என்பது வள்ளுவர் வாக்கு. முடிவு எடுப்பதற்கு முன் ஆழ்ந்து யோசிப்பது நல்லது. முடிவு எடுத்த பின்பு வருத்தப்படக்கூடாது. அதை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் முடிவுகள் எடுக்கவே பயப்படுகிறோம். பலரிடம் ஆலோசனை கேட்கிறோம். சரியான முடிவு எடுப்பதற்காக நேரத்தை வீணாக்குகிறோம். ஆலோசனை செய்கிறேன் என்ற பெயரில் காலத்தை தள்ளி போடுகிறோம். அதனால்தான் பல நேரங்களில் வருத்தப்படுகிறோம். இழந்த பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாரித்து விடலாம். ஆனால், நிச்சயம் இழந்த நேரம் எவ்வளவு கொடுத்தாலும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. உரிய நேரத்தில் எடுக்கப்படாத சரியான முடிவினால் பல இழப்புகளை சந்திக்கிறோம்.

நமது முடிவுகளில் பலர் தலையிடுகின்றனர். நீதி மன்றங்களில் பல வழக்குகள் தேங்கிக் கிடப்பதை மனதில் கொள்ள வேண்டும். சரியான நபர்களிடம் ஆலோசனை கேட்காத போது தவறான முடிவுகளை ஏற்படுகிறது. ஆழ்ந்து, ஆராய்ந்து சுயமாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், பிறரால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் வேறுபாடு நிறையவே இருக்கிறது. ஆராய்ந்து, பிறரை எந்த விதத்திலும் பாதிக்காமல், சுயமாக முடிவெடுப்பவர்களே முன்னேற்றம் அடைகின்றனர். பிறருக்கு முன்மாதிரியாக இருக்கின்றனர். சுயமாக எடுக்கப்பட்ட முடிவுகள் சில நேரங்களில் தவறாகவும் இருக்கலாம். அதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். அந்தத் தவறு மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள முடியும். தன்னால் எடுக்கப்பட்ட முடிவு அதற்கு நானே பொறுப்பு என்ற மனநிறையுடன் வாழ முடியும். இதனால் முடிவெடுப்பதில் ஒரு தெளிவு ஏற்படுத்துகிறது. குடும்பமாக இருந்தால் கணவன் மனைவி சேர்ந்து முடிவு எடுக்கலாம். சமூகமாக இருந்தால் ஒற்றுமையாக கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரையும் பாதிக்காத ஒரு முடிவு எடுக்கலாம். முடிவெடுக்கும் போது நன்மையை விட தீமைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த முடிவை விட்டு விடலாம். நன்மை தீமை என்று அலசி ஆராய்ந்து நன்மைகள் அதிகம் இருக்கும் விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் தரலாம். இந்த வாழ்க்கை பயணத்தில் முடிவு எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வாழ்க்கை என்பது வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே. ஒரு முடிவு எடுத்த பின்பு அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தலாம். உடனடி திருப்திக்காக(Instant gratification) ஒருபோதும் முடிவெடுக்காதீர். அது நீண்டகால நிம்மதியை கெடுக்கவும் வாய்ப்பு உள்ளது. நன்மை தீமைகளை பகுத்தாய்ந்து தொலைநோக்கு சிந்தனையுடன் முடிவெடுக்க பழகிக்கொள்ள வேண்டும். நமது முடிவுகள் பெரும்பாலும் சுயநலனுக்காக மட்டுமல்லாமல் பொதுநலனுக்காக இருந்தால் உடலும், மனமும் என்றும் இளமையாக இருக்கும். எனவே காலங்களை வீணாக்காமல் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுப்பதில் தெளிவுடன், உறுதியுடன், துணிச்சலுடன் இருப்போம். வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்ந்து காட்டுவோம்.

– இல.சுருளிவேல்

தொடர்புக்கு:
முனைவர் இல.சுருளிவேல்,
உதவிப் பேராசிரியர்,
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி-601204