புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: நிகழ்கால மனிதர்களின் வாழ்க்கை பேசியவர் – இரா. தினேஷ் பாபு
“எனது எழுத்துகளில் பழைய இலக்கியங்களின் சாரம்சம் இருக்கும். நிகழ்கால மனிதர்களின் வாழ்க்கை இருக்கும். தொழிலாளி வர்க்கத்துக்கு விடுதலை கிடைக்கும் போதுதான் முழு சமூகத்திற்கும் விடுதலை கிடைக்கும்” என்று கூறும் தோழர் டி.செல்வராஜ் அவர்கள் தன் இறுதிக்காலம் வரை உழைக்கும் மக்களுக்காகவே எழுத்தாளராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றினார். எழுத்தாளர் டி.செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் அருகில் உள்ள மாவடி எனும் ஊரில் 14.01.1938 அன்று பிறந்தார். தாயார் ஞானம்மாள். தந்தையார் டேனியல். திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தான பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்து, திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் 1959 ஆம் வருடம் பி.ஏ. (பொருளாதாரம்) பயின்றார்.
கேரளாவில் தேவிகுளம் பீர்மேடு பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் செல்வராஜ் அவர்களின் அப்ப, தாத்தா, சித்தப்பா அனைவருமே கங்கானிகளாகப் பணிபுரிந்தார்கள். இப்போது கண்ணன் தேவன் எஸ்டேட்டாக இருக்கும் நிறுவனம், அப்போது ஜேம்ஸ் ஃபின்லே நிறுவனமாக இருந்தது. அங்கு அலுவலகப் பணிபுரிந்தவர்களின் குழந்தைகளுக்காக அந்நிறுவனமே ஆங்கிலப் பள்ளிகளை நடத்தி வந்திருக்கிறது. இப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்தான் டி.செல்வராஜ். தோழர்கள் தி.க.சிவசங்கரன், தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை போன்ற இடதுசாரி இலக்கியவாதிகள் இணைந்து நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். கல்லூரியில் பயிலும் காலத்திலேயே இந்த அமைப்போடு தொடர்பில் இருந்தார் டி.செல்வராஜ். அங்குதான் ரஷ்ய இலக்கியங்களும், புதுமைப்பித்தன் போன்ற தமிழில் எழுதிக் கொண்டிருந்தவர்களின் படைப்புகளும் அறிமுகம் ஆயின. வெளிநாட்டு கதைகள் போல, தமிழிலும் சிறுகதைகள் எழுத ஆர்வம் கொண்டார் டி.செல்வராஜ்.
ஜனசக்தி வாரமலரிலும், சிதம்பர ரகுநாதன் அவர்களின் “சாந்தி” இலக்கிய இதழிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. 1962 இல் சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டம் பயின்ற போது கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான “ஜனசக்தி” மற்றும் இலக்கிய இதழான “தாமரை”யிலும் பகுதிநேரமாக பணியாற்றியுள்ளார். அந்நாட்களில் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களோடு நெருங்கி பழகியுள்ளார். அவருடைய நட்பின் மூலம் எண்ணற்ற நூல்களை படிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் டி. செல்வராஜ் அவர்கள் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஏழு நாவல்களையும், ஐம்பது நாடகங்களையும், இரு கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். முற்போக்கு நாவல்களில் பெரிதும் மதிக்கப்படுகின்ற முன்னோடி நாவலாக “மலரும் சருகும்” என்ற இவரது நாவல் நெல்லை வட்டார தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும், அவர்களால் நடத்தப்பட்ட “கள்ள மரக்கால்” போராட்டத்தையும் மையமாகக் கொண்டது.
இவரது தந்தையார் தேயிலை தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றியதால் இவர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை முழுவதும் அறிந்தவர். இத்தொழிலாளர்களின் உழைப்பை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நாவல் “தேநீர்” ஆகும். இந்நாவல் “ஊமை ஜனங்கள்” எனும் பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை “தோல்” எனும் நாவலாக எழுதியுள்ளார். இந்நாவல் 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளது.இலக்கிய உலகில் சிறுகதை, நாவல் மட்டுமல்லாது நாடகத் துறையிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. “யுக சங்கமம்”, “பாட்டு முடியும் முன்னே” போன்ற புரட்சிகர நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். “பாட்டு முடியும் முன்னே” நாடகத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாடகத்தை நடிகர் டி.கே. பாலச்சந்திரன் அவர்கள் தன்னுடைய மக்கள் நாடக மன்றம் மூலம் தமிழகமெங்கும் எடுத்துச் சென்றுள்ளார்.
தன் சிறுகதைகள் நாவல்கள் என அனைத்திலும் பெண்களை வீராங்கனைகளாகவே படைத்துள்ளதாக கூறும் இவர் அக்காலத்திலேயே சாதி, மத மறுப்புத் திருமணம் புரிந்தவர். இவரது இணையர் பாரத புத்திரி. இவர்களுக்கு சித்தார்த்தன் பிரபு, சார்வாகன் பிரபு என இரு மகன்களும், வேத ஞான லட்சுமி என ஒரு மகளும் உள்ளனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை 1975 ஆம் ஆண்டில் தொடங்கிய 32 எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இலக்கியத்தில் மட்டுமல்லாது அடித்தட்டு மக்களுக்காக வழக்கறிஞராகவும் பணியாற்றிய இவர் கலை இலக்கிய பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் போன்ற இடதுசாரி அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். தனது 81வது வயதில் “அடுக்கம்” எனும் நாவலை எழுதியுள்ளார். இந்நாவல் இன்னும் அச்சுக்கு வரவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்காகவே இலக்கிய பணியிலும் வழக்கறிஞர் பணியிலும் செயல்பட்ட இவர் 20.12.2019 இல் தன் பணியை முடித்துக் கொண்டார்.
படைப்புகள்
நாவல்கள்
* மலரும் சருகும்.
* தேநீர்
* அக்னிகுண்டம்.
* மூலதனம்
* தோல்
* பொய்க்கால் குதிரை
* அடுக்கம் (மலையக மக்களின் வாழ்க்கை)
சிறுகதைகள்
* நோன்பு
* டி செல்வராஜ் கதைகள்
* நிழல் யுத்தம்
* தாழம்பூ
* ஊர்குருவியும் பருந்தும்
* கிணறு
* தொண்டன்
வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள்
* தோழர் ஜீவா வாழ்க்கை வரலாற்று நூல்
* சா. சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்று நூல்
இரா. தினேஷ் பாபு
புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: ச.செந்தில்நாதன் – தமிழ் முற்போக்குச் சிந்தனை மரபின் புதிய பரிமாணம் – சைதை ஜெ
‘எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்து விட்டான்’ என்று அறிவித்து விட்டு, பொது உலகிலிருந்து தனது தொடர்புகளை துண்டித்துக் கொண்டார் எழுத்தாளர் பெருமாள்முருகன். 2015, ஜனவரியில் இது நடந்தது. எழுத்தாளர் பெருமாள்முருகனின் இந்த அறிவிப்பால் எண்ணற்ற எழுத்தாளர்களைப் போல தானும் அதிர்ந்து போனதாகக் குறிப்பிடும் தோழர் ச. செந்தில்நாதன், ‘தானே மனுதாரராக இருந்து பொதுநல வழக்கு போடலாமா என்று நினைத்தேன். ஆனால் ஒரு அமைப்பில் இருந்து கொண்டு அப்படிச் செய்வது முறையாக இருக்காது என்று என்னுள் ஒரு குரல் கேட்டதால்… தமுஎகச அமைப்பின் பேரில் பொதுநல வழக்குப் போட்டதாக’ கருத்துரிமை போற்றுதும் சிறப்பு மலரில் குறிப்பிடுகிறார்.
எப்போதும் தன் செயலின் மூலம் தனக்கு மட்டும் பெருமை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் தனது அமைப்பிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அமைப்பை முன்னிலைப் படுத்தி சிந்தித்து முடிவுகளை எடுக்கிறவர் தோழர் ச.செந்தில்நாதன்.
அந்த வழக்கில், ‘பேராசிரியர் பெருமாள்முருகன் பயத்தில் ஆழ்ந்துவிடக் கூடாது. அவர் இனி எழுதுவதோடு, தனது எழுத்தின் வீச்சை மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்… அவர் எதில் சிறந்தவரோ, அதைச் செய்ய அவருள் இருக்கும் எழுத்தாளர் புத்துயிர் பெறட்டும்.’ என்ற வாசகங்கள் அடங்கிய தீர்ப்புரை உலகமுழுவதுமுள்ள கருத்துரிமைப் போராளிகளால் மகிழ்ந்து கொண்டாடி வரவேற்கப்பட்டன. ‘கருத்துரிமைக்கான போராட்டத்தின் உயிர்த் துடிப்பு மிக்க வரலாற்று ஆவணம்’ என்று தீர்ப்புரையை மதிப்பிடும் தோழர் ச. செந்தில்நாதன், தான் வாதாடிய இந்த வழக்கை தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக நினைப்பதாக தனது நேர்காணலில் பதிவு செய்துள்ளார். வழக்கறிஞர் மற்றும் இலக்கியவாதி என்கிற வாழ்நாள் அனுபவச் செறிவிலிருந்து அந்த வழக்கை நடத்தி வெற்றி கண்டார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த வழக்கை நடத்தியதன் மூலம் தனக்கும் தமுஎகச அமைப்பிற்கும் பெருமை சேர்த்தவர் தோழர்.
2022, ஜூன் 5 ம் நாள் நடைபெற்ற தமுஎகச தென்சென்னை மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போது, ‘இது வரை எழுதியது முன்னோட்டம் தான் இனிமேல் தான் என் எழுத்தின் முழு வீச்சையும் வாசிக்கப் போகிறீர்கள். எனது கட்டை விரலில் கைப்பிடித்து எழுதும் வலு உள்ளவரை நான் எழுதிக் கொண்டிருப்பேன்’ என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
‘தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு’ அவர் எழுதிய முதல் நூல். 1967 ம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் வெளிவந்த, தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய முதல் விமர்சன நூல் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பதிப்பாளரின் இரண்டாண்டு கால தாமதத்தால் நூல் வருவது தள்ளிப்போய் விட்டது. அதற்கிடையில் இலங்கைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி, சாலைஇளந்திரையன் ஆகியோர் எழுதிய நூல்கள் வெளி வந்து விட்டன. முதலில் எழுதப்பட்டாலும் பின்னால் வெளிவந்தது என்றாகி விட்டது.
1975 ம் ஆண்டு தமுஎச வை உருவாக்கிய எழுத்தாளர்கள் 32 பேரில் ச.செந்தில்நாதன் இல்லை என்கிற வரலாறு கூட கால தாமதத்தால் ஏற்பட்டது தான். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அழைப்புத் தாமதமாகக் கிடைத்ததும், பயணம் செய்த வாகனம் ஏற்படுத்திய தாமதமும் சேர்ந்து அந்த வரலாற்றுக்குக் காரணமாகி விட்டது.
கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்ட அவசர நிலை காலத்தில் பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டே வெளி வர அனுமதிக்கப்பட்டன. பல பக்கங்கள் மை பூசப்பட்டு கறுப்பாகவே இருக்குமாம். அப்போது தணிக்கைக்கு ஆட்படாமல் தப்பித்த முற்போக்கு இதழ் ‘சிகரம்’ மட்டும்தான். அதை நடத்தியவர் தோழர் ச.செந்தில்நாதன். சி.பி.ஐ.(எம்) கட்சியின் இலக்கியப் பத்திரிகையான செம்மலர் உள்ளிட்ட பல முற்போக்கு இலக்கிய இதழ்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வெளிவர முடியாத காலத்தில் சிகரம், அவர்களின் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தது. ஐந்தாண்டு காலம் வெளி வந்த சிகரம், தமிழ்நாட்டிலிருந்தும் அதற்கு வெளியிலிருந்தும் தமிழில் எழுதும் பல எழுத்தாளர்களுக்கு புதிய வாசலைத் திறந்தது. அது வெளிவந்த காலத்தின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியது. தோழர் ச. செந்தில்நாதனுக்கு, சிகரம் ச. செந்தில்நாதன் எனும் அடைமொழியை வழங்கியது.
சிகரம் இதழ் ஆரம்பிப்பதற்கு முன்பே 1969 செப்டம்பரில் ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ உருவாகி விட்டது. அதன் செயலாளர் தோழர் ச.செந்தில்நாதன். கந்தர்வன், கவிஞர் கண்ணதாசனின் தம்பி இராம. கண்ணப்பன், கார்க்கி மற்றும் ம.ந.ராமசாமி ஆகியோர் நிர்வாகக் குழுவினர். பெயர் பெற்ற எழுத்தாளர்களான அகிலன், தீபம் நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துக்களெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. எழுத்தாளர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையிலேயே அவர்களின் எழுத்துக்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. விமர்சனத்தின் வெக்கை தாளாமல் வெளிநடப்புகளும் நடந்திருக்கின்றன. மக்கள் எழுத்தாளர் சங்கம் இலக்கியவாதிகள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1975 ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவான போது, மக்கள் எழுத்தாளர் சங்கம் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டது. த.மு.எ.ச உருவாவதற்கானத் தேவையை உணர்த்தியதாக, மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் வீச்சான செயல்பாடுகளை மதிப்பிடலாம்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளராக 17 ஆண்டுகளும் அதன் மாநிலத் தலைவராக 9 ஆண்டுகளும் வழிநடத்தி இருக்கிறார்.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழ், தமிழ்வழிக் கல்வி போன்ற கோரிக்கைகளுக்காக தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு போராட்டக் களத்தில் முன்நின்றார். எழுத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு, வாழ்ந்தவர் முற்போக்காளர் வல்லிக்கண்ணன் அவர்கள். அவரது குடும்பச் சூழல் பொருளாதாரத்தில் நலிவுற்ற போது நண்பர்கள் தோழர்களுடன் இணைந்து குடும்ப நிதி திரட்டி வழங்கியதில் மிக முக்கியப் பங்கேற்றார். அதை தனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நிறைவான நிகழ்வாகவும் கருதுகிறவர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறுகதை மேதை புதுமைப்பித்தன் பெயரில் அறக்கட்டளை அமைத்தது…
பெரிதும் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு அமைத்து தொடர்ந்து செயல்படுத்தி வருவது…
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் வாழ்வின் இறுதி நாட்களில் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட போது, அவரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கும் கோரிக்கையை உரிய முறையில் அரசுக்குக் கொண்டு சென்று பண உதவியைப் பெற்றுக் கொடுத்து நம்பிக்கையூட்டியது…
என தனித்து மிளிரும் அவரது இலக்கியச் செயல்பாடுகள் பல.
இடதுசாரிகளும் முற்போக்கு இலக்கிய அமைப்புகளும், தமிழ் பக்தி இலக்கியங்களுக்குள் குறுக்கீடு செய்து அதன் வரலாற்றுப் பரிணாமத்தைப் புரிந்து கொண்டு களமாட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் பல அரிய ஆய்வு நூல்களை எழுதி வருவது மிக முக்கியக் கருத்தியல் செயல்பாடாகும். இந்துத்துவத்தை பண்பாட்டுத் தளத்தில் எதிர்கொள்ள, அதனுடன் முரண்படும் தமிழர் சமய மரபின் பல அடுக்குகளில் படிந்திருக்கும் ஜனநாயகச் சக்திகளை இணைக்கும் செயலுக்கு முன்னுரிமை வழங்கிடச் சுட்டுகிறார். களத்தில் அதற்கான பல முயற்சிகளையும் மேற்கொண்டார்.
தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் இந்து சமய வழிபாட்டு முறைகளில் – வட மொழி வேதமும் வைதிக சமயமும் எவ்வித பெரிய அளவிலான எதிர்ப்புமின்றி நேரடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. வடமொழி வேதத்தையும் வைதிக சமயத்தையும் எதிர்த்து நிறுத்திய ஒரு வளமிக்க வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு. அது ஒரு தனித்துவமிக்க வரலாறு. பேணி பாதுகாக்கப்பட வேண்டியதும் கூட.
கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சியில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராகிவிட முடியும். ஆனால் மலையாளத்தில் அர்ச்சனை செய்ய முடியாது. அர்ச்சனை வடமொழியில்தான். தமிழ்நாட்டில் தலித் அர்ச்சகராகவும் முடியும். தமிழில் அர்ச்சனை செய்யவும் முடியும். தமிழ் இலக்கியத்தின் பெரும் பரப்பை தனதாக்கி வைத்திருக்கும் பக்தி இலக்கியத்தின் கொடை அது. தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் வேத விதிகளின் படி கட்டப்பட்டவை அல்ல. தமிழ் ஆகமங்களின் படி கட்டப்பட்டவைகளாகும்.
தமிழ்நாட்டில், வேத சமய வித்தகர்களுக்கும் தமிழ் வழி வழிபாட்டாளர்களுக்கும் இடையே கூர்மையான முரண்பாடுகள் உண்டு. அம் முரண்பாடுகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை என்பது தோழர் ச. செந்தில்நாதன் ஆய்வு முடிவுகள். இந்தத் தளத்தில் ‘அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறு வாசிப்பு’, ‘சைவ வைணவப் போராட்டங்கள் ஒரு மறு வாசிப்பு’, ‘தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்’ ஆகிய ஆய்வு நூல்கள் மைல் கற்களாக அமைந்தவை. தமிழ் சிந்தனை மரபின் புதிய பரிமாணம் தோழர் சிகரம் ச.செந்தில்நாதன்.
– சைதை ஜெ
திரை விமர்சனம் : வாய்தா – முருகையன்
வாய்தா திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளிவந்தபோது ஒரு உணர்வு கொந்தளிப்பில் நான் சிக்கி இருந்தேன். இதோ தீர்வு வந்துவிட்டது என்று நம்பி ஒவ்வொரு முறையும் கிடைக்க விடாமலேயே தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிற சமூக அவலத்தை நேரடியாகப் படம் விளக்கியிருந்தது. அது, எனது 43 ஆண்டுகால தொழிற்சங்க வாழ்க்கையை எனக்குள்ளேயே இன்னொரு திரைப் படம் போல ஓட்டியது.
1979ல் மகாலட்சுமி மில்லில், 130 கேஷுவல் தொழிலாளரை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை விளக்கி பேசியதுதான், எனது முதல் வாயிற் கூட்டம். பல்லாண்டுகாலம் அந்த பிரச்சனை இழுத்து, அந்த ஆர்பிட்ரேஷன் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படவில்லை என்பதால் செல்லாது என்று எதிர் வழக்கு நிர்வாகம் போட்டு… அதன்மீது ஆண்டுக்கணக்கில் விவாதம் நடந்தது. கடைசியில் மில்லே மூடப்பட்டுவிட்டது.
செங்குன்றம் அருகே இருக்கும் அலமாதியில், ஒன்றிய அரசுக்கு சொந்தமான கால்நடைப் பண்ணை ஒன்று உள்ளது. அதில் பணி செய்த நூற்றைம்பது தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர். தோழர் சி.கே.மாதவன், சங்கத் தலைவராக இருந்தார். அவர் வழக்கை நடத்தி தொழிலாளிக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தது. அதன் மீது நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. சிகெஎம் மறைந்த பின்பு, தோழர் ஜெகன் தலைவர் பொறுப்பேற்றார். அவர் காலத்திலும் வழக்கு நடந்தது. அவரது மறைவுக்கு பின்பு நான் பொறுப்பேற்றேன். இப்போதும் நடக்கிறது. 25 லிருந்து 30 வயதுக்குள்ளாக இருந்த அன்றைய வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சரி பாதிக்கு மேல் இறந்துவிட்டனர். இந்த வழக்குகளைப் பற்றிய கூட்டங்களில் ஏதாவது தீர்வு வந்துவிடாதா என்று அவர்கள் கண்களில் நிறைந்திருந்த ஏக்கம் என் நெஞ்சில் இருந்து அகலவில்லை. தொழிலாளர் நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரை வழக்கு ஏறி இறங்கிக் கொண்டே இருக்கிறது. இன்னும் முடியவில்லை.
கீழடிக்கு அருகே இருக்கும், சிலைமான் ருக்மணி மில்லில் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க மறுத்ததால், 35 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் பி.டி.நாராயணன் அவர்களும் நானும் வழக்கு நடத்தினோம். வழக்கு வெற்றிதான். ஆனால் பல மேல்முறையீடுகள். 2001ல் மில் மூடப்பட்டது. 11கோடி ரூபாய் கடன் கொடுத்திருந்த ஸ்டேட் வங்கி, இயந்திரங்களையும் ஒரு பகுதி நிலத்தையும் ஏலம் விட்டு சுமார் 70 கோடி வரை வசூலித்து இருக்கிறது. மிச்சமுள்ள 27 ஏக்கர் நிலத்தையும் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையும் தனது கடனுக்குப் போதாது என்று சொல்கிறது. தீர்ப்புப்படி பணிக்கொடை கொடுக்க முன்னுரிமை தர வேண்டும் என தொழிலாளர்கள் சார்பில் சங்கம் தொடுத்த வழக்கு நடந்து கொண்டே இருக்கிறது. மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் இறந்து விட்டனர். அவர்களது குடும்பங்கள் ஏதாவது பணம் கிடைத்து விடாதா என்ற பெரும் எதிர்பார்ப்போடு சங்க அலுவலகத்திற்கு இன்னும் வந்து செல்கிறார்கள். என்னையும் அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து பேசுவார்கள்.
இதெல்லாம் எந்த திரைப்படத்திலும் இதுவரை வந்ததில்லை. #வாய்தா திரைப்படம் அதனை ஆழமாகத் தொட்டிருக்கிறது.
ஆதிக்க சக்திகள், சாதி வெறி சக்திகள், பெரும் பணக்காரர்கள், அதிகாரத்துக்கு வர எதையும் செய்யத் துணிந்த பாதகர்கள், ஆளும் வர்க்கத்தை சார்ந்த வழக்கறிஞர்கள், எந்த மனசாட்சியும் குற்ற உணர்ச்சியும் இன்றி, தமது பேதங்களை எல்லாம் மறந்து, சாமானியர்களை நசுக்குவதற்கு சட்டென்று சமதளத்தில் ஒன்று சேர்வது, மிகுந்த கலைநயத்தோடு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சாதி கடந்த காதல், சாதி கடந்த நட்பு, நீதிக்காக போராடும் வழக்கறிஞர்கள் என இன்றைய சமூகத்தில் ஆரோக்கியமான பகுதிகள் வாழ்வதையும் எடுத்துரைக்க படம் தவறவில்லை.
சலவைத் தொழிலாளியாக பேராசிரியர் மு.ராமசாமி வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவரது பெரும் நடிப்பு திறமைக்கு வர்ணனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரது வாய் துடுக்கு மிக்க மனைவியாகவும், சாதிக்குரிய வேலையை செய்து வருடக் கூலியை வணங்கிப் பெற்றுக்கொண்டு, அதே நேரத்தில் தனது கணவனும் மகன்களும் நல்வாழ்வு பெற வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையைத் தேக்கிக் கொண்டு, அது நிறைவேறாத போது அவர்கள் மீதே வெடித்துச் சிதறி கோபத்தை கொட்டுபவராக வரும் பெண் பாத்திரம் மிக வலிமையானது. அதில் நடித்தவர் -பெயர் கூட தெரியவில்லை- மிகச்சிறப்பாக, நடிப்பு என்றே தெரியாத வகையில், தனது கடமையை நிறைவேற்றி இருக்கிறார்.
தறிப்பெட்டியில் (நூல்) கண்டுகளை நிரப்பும் பெண் தொழிலாளியாக கதாநாயகி. தனது காதலைச் சொன்னால் காதலனுக்கு மரணம் நிச்சயம் என்று உணர்ந்து சொல்லவும் முடியாமல் மருகும் போது ஜொலிக்கிறார்.
விசைத்தறி தொழிலாளியாக, சாதியின் பெயரால் சமூகம் நிகழ்த்தும் இழி செயல்களை ஏற்கப்பொறாதவராய், அதனால் அந்தத் தொழிலையே புறக்கணிக்க நினைப்பவராய், சாதிய அடுக்குகளின் வன்மத்தை உணர்ந்து வேறு சாதிப் பெண் வெளிப்படுத்தும் காதலை ஏற்க தயங்குபவராய், புறம் தள்ள முடியாமல் அதற்கு இணங்குபவராய், இழிவுபடுத்த வருடம் மோதுவதற்கு உள்ளம் துணிந்தவராய், நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் தந்தைக்கு துணை நிற்பவராய்- பன்முக உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாநாயகனாக புகழ் மகேந்திரன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இது தனிநபர் பராக்கிரமங்களை இயற்கைக்கும், எதார்த்தத்திற்கும் மாறாக வெளிப்படுத்தாத இயல்பான கலைப்படைப்பு. அவமானங்களையும் வலியையும் தாங்கிக் கொண்டே தீரவேண்டிய, அதனால் எழும் துயரத்தையும் வெளிக்காட்ட முடியாத, அதேநேரத்தில் மனிதனாகத் தான் மதிக்கப்பட வேண்டும் என்ற விழைவை அடக்கமாக வெளிப்படுத்துகிற சிக்கலான கதாபாத்திரம். அறிமுக நிலையில் இது போன்ற வலுவான கதாபாத்திரம் வேறு நடிகர்களுக்கு கிடைத்திருக்கிறதா எனத் தெரியவில்லை. தன்னைக் காதலித்தவளுக்கு திருமணம் என்ற செய்தி வரும்போது, மிகக்குறைந்த ஒளி கொண்ட காட்சி அமைப்பில் ஒரே ஒரு கண்ணில் மட்டும் வெளிச்சம் பட, அந்த ஒரே கண் வழியே தனது உணர்வுகள வெளிப்படுத்தும் காட்சி ஒன்று போதும். புகழ், அடுத்த தலைமுறையிலும் பேசப்படும் நடிகராக மென்மேலும் வளரட்டும்.
அருமையான படப்பிடிப்பு. பகல், மாலை, முன்னிரவு, நள்ளிரவு என வானத்தின் ஜாலங்களையும், மலை முகடுகளின் பேரழகையும், மனிதர்களின் எண்ண ஓட்டங்களையும், உடல் மொழியையும் முகச் சுளிப்புகளையும், ஏன் சீமைக்கருவேல புதர்களையும் கூட துல்லியமாக, பார்ப்பவர்களின் மனதில் பதியும் வண்ணம் காமரா காட்சிப்படுத்தி இருக்கிறது.
துருத்திக் கொள்ளாத இயல்பான இசை காட்சிகளுக்கு கூடுதல் அழுத்தம் சேர்க்கிறது. இரண்டு பாடல்கள் கேட்கச் சுகமாக இருந்தன. பலமுறை கேட்பதற்கு வாய்ப்பு வந்தால் நிச்சயம் நெஞ்சில் நிற்கும்.
இயக்குநர் மகிவர்மனுக்கு சல்யூட்!
கட்டாயம் பார்த்து விடுங்கள்.
இது போன்ற படங்களின் வருகையை
இப்படத்தின் வெற்றி கூடுதலாக்கும்.
– முருகையன்



