Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

நூலகாலஜி – 2 நூலகமே வெல்லும்… – ஆயிஷா. இரா. நடராசன்



Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்
விளாதிமிர் வெர்னாட்ஸ்கி

ரஷ்ய – உக்ரேனிய  யுத்தத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் விளாதிமிர் வெர்னாட்ஸ்கியை  நினைக்கிறேன். சார்லஸ் டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இணையாக நான் மதிக்கும் பெயர். பலரையும் போல வெர்னாட்ஸ்கியை  எனக்கு தேடி எடுத்து அறிமுகம் செய்தவர் தோழர் சிங்காரவேலர்தான். பூகோள-விஞ்ஞானி என்று வெர்னாட்ஸ்கியை  பற்றி நான்கு பாரா அறிவியல் கட்டுரையை நம் சிங்காரவேலர் தொகுப்பில் பார்க்கலாம். தந்தை பெரியாரின் குடியரசு இதழில் அது வெளிவந்திருந்தது. பிஜி தீவுகளில்  தோழர்கள் எஸ். ஏ. டாங்கே, சவுகத் உஸ்மானி, சுபானிமுகர்ஜி  ஆகியோரோடு வெர்னாட்ஸ்கியை  சந்தித்த சிங்காரவேலர்…. டார்வினுக்கு இணையான அறிவியல் மகாஅறிஞர் என்று அவரை ஏற்றதோடு இந்தியா வருமாறு அந்த மாமனிதருக்கு அழைப்பு விடுத்தார் என்று தோழர் எம். பி. டி. வேலாயுதம் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். 

Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

டார்வினின் உயிரிகள் தொடர்பான பரிணாவியல் தத்துவத்தை யாருமே இன்று மறுக்கமுடியாது. ஆனால் ஒரு காலத்தில் அவரது ‘உயிரிகளின் தோற்றம்’  நூல் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்ட புத்தகமாக இருந்தது. அதைப்போலவே வெர்னாட்ஸ்கியின் ‘பயோஸ்பியர்’ நூலும்   தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நாட்களில் அந்த இரண்டு புத்தகங்களுமே சிங்காரவேலரிடம் இருந்தது மட்டுமல்ல… மேலும் இரண்டு பிரதிகளை ‘எப்படியோ’ வரவழைத்து அவர் பெரியாருக்கு ஒரு செட் மற்றும் நம்மால் நம்ப முடியாதபடி வீரத்துறவி விவேகானந்தருக்கு ஒரு செட் (இருவரின் நூலையும்) வழங்கி வாசிப்பு ஒரு அரசியல் செயல்பாடு என்பதை செயலில் காட்டியதை வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது. அதுசரி யார் இந்த வெர்னாட்ஸ்கி?.

பரிணாமவியல் வளர்ச்சியை முழுதும் புரிந்து கொள்ளாமல் வெர்னாட்ஸ்கியை நாம் நெருங்கக்கூட முடியாது. பரிணாமவியல்  எனும் அறிவியல் சித்தாந்தத்தை  டார்வின் புவியியல்  உயிரிகளின் தோற்றம்- இன்றுள்ள பல்லுயிர் பெருக்கமாக எப்படி மாறுபாடு அடைந்தது என்பதன்  புதிரை விடுவித்த ஒற்றை சரடாக கண்டடைந்ததை பார்க்கிறோம். பலபல ஆயிரம் ஆண்டுகளாக தங்களது மூதாதை உயிரினங்களில் இருந்து  பலவகை கிளைப்பாதைகள் வழியே இன்றுள்ள தங்களது நிலையை உருவத்தை வாழ்க்கை சுழற்சியை புவியின்  உயிரினங்கள் அடைந்துள்ளன என்று அவரது கோட்பாடு விவரிக்கிறது. பிற்காலத்தில் மரபணுவியல் டார்வின் விட்டுச்சென்ற இடைவெளிகளை மிகக் கச்சிதமாக தனது டி.என்.ஏ வரையறைகள் கோட்பாடுகள் மூலம் நிறைவடைய வைத்து அதை நிரந்தர வளர்ச்சி அறிவியல் துறையாக மாற்றியது. ஆனால் வெர்னாட்ஸ்கி செய்தது என்ன?

வெறும் புவிசார்ந்து மலர்ந்த இந்த கோட்பாட்டை அவர் இந்த முழு பிரபஞ்சம் சார்ந்தும் பொருத்துகிறார். டார்வின் கோட்பாட்டை உள்வாங்கிய பிறகு அதனை அவர் பிற்பாடு விரிவாக்கினார் என பல வரலாற்றாலர்கள் தவறாக பதிவு செய்கிறார்கள். மரபியல்-வேதியியல், வேதிப்பொருட்களின் பரிணாமவியல் வளர்ச்சி, உயிர்ப்பு வேதியியல், வானிலை-நிலவியல் என பல புதிய துறைகளுக்கே வித்திட்ட சோவியத் அறிஞர் வெர்னாட்ஸ்கியின் கண்டுபிடிப்புகள் முழுக்க முழுக்க தன்னிச்சையானவை. அவர் நிலப்பண்பியல் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்தபோது புவி வளர்இயல்  எனும் துறையே பிறந்தது. அவரது கோட்பாடு எதுவும் டார்வின் வழி வந்தது அல்ல. ஆனால் டார்வின் தத்துவத்திற்கு அது உறுதுணையாக நிற்கிறது.

பரிணாம வளர்ச்சி என்பது உயிரிகளோடு மட்டுமே வைத்து பார்க்கப்பட முடியாது என்பதை டார்வினும் ஒப்புக்கொள்கிறார். கார்லைலின் புவிசார்ந்த உருவாக்க நூலை தனது கப்பல் பிரயாணத்தில் வாசித்த அனுபவம்தான் டார்வினையே டார்வினியவாதி ஆக்கியது. ஆனால் அந்த விஷயத்தில் கார்லைல் விட்ட இடத்தில் இருந்து புரிதலை பல படிநிலை மேலே உயர்த்திச் சென்றவர் வெர்னாட்ஸ்கி. புவியின்  பரிணாமம் அவரது நூஸ்பியர் (Noosphre) கோட்பாட்டின் படி மனிதகுரங்கு மனிதனாக மாறிய படிநிலையில் முடிந்துவிடவில்லை. மனிதனால் மனிதனின் தலையீடுகளால் புவியியல் ஏற்படும் விபரீத மாற்றங்களை அவர் 1930-களிலேயே புவி பரிணாமத்தின் அடுத்த படிநிலையாக அறிவித்து சுற்றுச்சூழலியல் புவிவெப்பமடைதல், பருவநிலை மாறுபாடு என     நம் 21-ஆம் நூற்றாண்டு சிக்கல்களை முன் அறிவித்தவர். அதுவும் புவி சார்ந்த பரிணாம படிநிலைகளின் ஒருபகுதி என்று அதிர்ச்சி அளித்தவர் அவர்.

அவரது பயோஸ்பியர் மட்டுமல்ல- நூஸ்பியர், உயிரிகள் குறித்த கல்வியும் புதிய இயற்பியலும் போன்ற நூல்களை நான் வாசித்திருக்கிறேன். மேஹன் ரவுலியார்டு மொழிபெயர்ப்பில் அவை ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. அந்த நூல்கள் எல்லாம் பலரும் நினைப்பதுபோல ரஷ்ய மொழியில் எழுதப்படவில்லை. அவை உக்ரேனிய மொழியில் எழுதப்பட்டவை. புவியின் வாழியல் சூழல் மனிதனின் தோற்றத்தை பரிணாமம் அடைய வைத்த நிலை மாறி மனித தலையீடுகளால் அடுத்த பரிணாமம் தொடங்குவதையும் இவை இரண்டுமாக ஒன்றன் மீது ஒன்று ஏற்படுத்தப்போகும் தாக்குதலையும் வெர்னாட்ஸ்கி முன்மொழிந்த அத்தனை அறிவியல் ஆய்வு கட்டுரைகளும் உக்ரேனிய மொழியில் தான் எழுதப்பட்டன.

 இத்தனைக்கும் வெர்னாட்ஸ்கிக்கு ரஷ்ய மொழி கசாக்கிய மொழி, பிரெஞ்சு ஆங்கிலம், ஜெர்மன் உட்பட எட்டு மொழிகள் தெரியும். தன் அறிவியலை தன் தாய்மொழியில் மட்டுமே எழுதியது அவரது அரசியல் போராட்டம் என்று அறிந்தபோது அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீள பலநாட்கள் ஆனது.

உக்ரேனிய கசாக்கிய முன்னோடி குடும்பத்தில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் பற்றி பிறந்து தாதுஇயல் என்னும் புத்தம் புதிய துறையில் தனது ஆசிரியர் அலெக்ஸி பாவ்லோவால் பட்டப்படிப்பில் இணைய ஊக்குவிக்கப்பட்டவர் அவர். உலகெங்கும் பயணம் செய்த அற்புத விஞ்ஞானி. அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போதும் அறிய பல புகைப்படங்களை காணும்போதும் ஏற்படும் பிரமிப்பு இந்த பூகோளமே என் ஆய்வுக்கூடம் என்று அறிவித்த அவரது துணிச்சலை பறை சாற்றுகிறது. சுவிட்சர்லாந்து, பாரிஸ், லண்டன், முனிக், ஆஸ்திரியா உட்பட ஒரு தனது ஆய்வு நாட்களில் 2 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவை சர்வ சாதாரணமாக நிலவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தியவர் படிகங்களின் ஒளியியல், வெப்பவியல், இழுவை மற்றும் காந்த புலப்பண்புகள்  குறித்து முனிச் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வுகூடத்தில் தனது முதல் கோட்பாட்டை அவர் நிறுவிய ஆண்டில் ரஷ்ய ஜார் மன்னன் உக்ரேனிய  மொழியில் புத்தகங்கள் அச்சிட தடை விதித்ததையும் பெட்ரோ லாவ்ரோ நடத்திய முன்னோக்கி எனும் உக்ரேனிய நாளிதழையும் முடக்கியதையும் அறிந்து கொதிக்கிறார். ரஷ்யமொழியே ஆட்சி மொழி என அறிவித்து ஜார் மன்னன்  இரண்டாம் நிக்கோலஸ் அதை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து அலுவல்களுக்குமான மொழியாக திணித்து அரசாணை வெளியிடுகிறான். உடனடியாக தன் தோழர் உக்ரேனிய எழுத்தாளர் ஷெவ்ஷென் கோவோடு  இணைந்து உக்ரேனிய புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து திரட்டி பாதுகாக்கும் பணிக்காக அவர் நாடு திரும்பினார்.

ஜார் மன்னன் அந்த உக்ரேனிய நூல்களை கைப்பற்றி அழிப்பதற்குமுன் ஆயிரக்கணக்கான நூல்களை தன் அயல் நட்பு வட்டாரத்தின் மூலம் நாட்டுக்கு வெளியே எடுத்துச் சென்றுவிட்டார்.  வெர்னாட்ஸ்கி. உக்ரேனிய மொழிக்கு சம அந்தஸ்து பெறுகிற பிரம்மாண்ட போராட்டத்தில் ஒருபுறம் பங்கேற்றாலும் மறுபுறம் தன் தாய் மொழியான அதனை செம்மைப்படுத்திட உலக கவனத்தைப் பெற பல்வேறு இலக்கிய அறிவியல் முயற்சிகளை மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார் அவர். தோழர் லெனினை சந்தித்து சோவியத் புரட்சிக்கு பிறகு அனைத்து மொழிகளுக்கும் சமஉரிமை பெற்றதோடு அவரது கல்வி மற்றும் பொது எழுத்தறிவு அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அரசின் ஆலோசகர் ஆகிறார். மாஸ்கோவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்  பல்கலைக்கழகம் உக்ரேனிய மொழியில் பேராசிரியர் இன்மையால் பாடத்தை நடத்தமுடியாது என நீக்கிட நிர்வாகம் முடிவுவெடுத்தபோது ஒரு குறிப்பிட்ட மொழியில் பயின்றிட  ஒருவர் இருவரால் கூட முடியாத நிலை இருந்தாலும் அந்த பல்கலைக்கழகத்தையே மூடிவிடுங்கள் என்று லெனின் அறிவித்தது என்ன ஒரு அற்புதம்!. சோவியத் மொழிக்கொள்கையை வகுத்துக் கொடுத்தவர் வெர்னாட்ஸ்கி. அவரவர் மொழியில் கல்வி என்பது முதல் பிரகடனம். போல்ஷிவிக்குகளின்  அக்டோபர் (1917) புரட்சிக்குப் பிந்தைய அரசு சோவியத் மாகாணங்கள்  தேசிய இனங்களின் 130 மொழிகளுக்கும் சமஉரிமை வழங்கும் இரண்டாம் பிரகடனம் சற்றே வித்தியாசமானது. சோவியத் அரசியல் சாசனத்தின்படி மொழி அடிப்படையில் யாரும் யார் மீதும் பாகுபாடு காட்டுவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டது.

 உக்ரேனின் கீவ் நகரில் தினெய்பபர் நதிக்கரையில் டெமிவ்கா எனும் பகுதியில் வெர்னாட்ஸ்கி தனது பிரம்மாண்ட கனவை விதைத்தார். 1918 ஆகஸ்ட் 2 அன்று மிக சிறிய அளவில் தொடங்கிய நூலகம் அது. ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸின் பேரழிவு தடை சட்டத்திடமிருந்து தான்  காப்பாற்றி நாடு கடத்தியும் ரகசியமாக பத்திரப்படுத்தியும்  வைத்திருந்த உக்ரேனிய  புத்தகங்களை அங்கே அவர் அடுக்கத்தொடங்கினார் நாலண்டுகளில் மூன்று லட்சம் புத்தகங்களாக பிரம்மாண்ட கட்டிடமாய் அது வளர்ந்தது. தனது ஆய்வு கட்டுரைகள் நூல்களை ஆண்டுதோறும் கீவ்-தேசிய நூலகத்திலிருந்தே அவர்  வெளியிட தொடங்கினார். பாவ்லோ ஸ்கோரோ பாட்ஸ்கி எனும் ஒப்பற்ற உக்ரேனியா அறிஞரை நூலகராக அவர் கட்டாயப்படுத்தி ஏற்கவைத்தார் 1940ல் கீவ் தேசியநூலகம் உலகப்பிரசித்தி பெற்றது. காரணம் மக்கள் பதிப்பகம், ராதுகா பதிப்பகம் மற்றும் மீர் பதிப்பகம் தனது வெளியீடுகளின்  முதல் பிரதிகளை அந்த நூலகத்தில் காட்சிக்கு வைத்தன. ஒரு புத்தகம் அச்சிடப்பட்டால் அது தமிழ் உட்பட 171 மொழிகளில் வந்த அதிசயம் வேறு எப்போதாவது நடந்திருக்கிறதா?

 ஆனால் 1941 நாஜி வெறியரான ஹிட்லர் ஆபரேஷன் பார்பரோஸா எனும் ராணுவ நடவடிக்கை மூலம் சோவியத் மீது ஆக்ரோஷமாக படையெடுத்தார்.  கீவ்-வின்  சில மைல்கள் வரை உள்நுழைந்த ஜெர்மனிய நாஜிப்படை வெர்னாட்ஸ்கியின் உலக பிரசித்திபெற்ற நூலகத்தை தரைமட்டமாக்குவதை தனி நோக்கமாக அறிவித்தது. நான்கு இரவுகள்- வெர்னாட்ஸ்கியும் அவரது தோழர்களுமாக  செய்த வேலையை வரலாறு மறக்காது. சோவியத் ராணுவத்தால் கைவிடப்பட்ட ஒரு வெறும் 32 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் புத்தகங்கள் அனைத்தையும் ஏற்றி ஆறுமுறை வான்வழி குண்டு தாக்குதல்களின் ஊடாக  ஆயிரம்மைல்களுக்கு  அப்பால்  பாஷ்கோடோஸ்தான் எனும் பிராந்தியத்தின்  தலைநகரமான உஃபா (Ufa)வுக்கு ஒரு பள்ளி வளாகத்தில் நூல்களை ரகசியமாக கடத்தினார்கள். இப்பெரும்பயணத்தில் தனது 27 தோழர்களை தீவிர வாசகர்களை மாணவர்களை வெர்னாட்ஸ்கி இழந்தார். நூலகக் கொலைகள் என்றே அவைகளை மக்கள் அழைத்தார்கள்.

ஹிட்லர் படைகளுக்கு எதிராக தனது காலியான கீவ் நூலக வளாகத்தில் இருந்தபடியே பிரம்மாண்ட மக்கள் யுத்தத்தை அவர் தோழர் ஜோசப் ஸ்டாலினோடு தோளோடு தோள் நின்று துவக்கினார். வெறும் சோவியத் படைகள் தனக்கு எதிராக நிற்கும் என்று நினைத்த ஹிட்லரும் அவனது தளபதிகளும் மக்கள் யுத்தம் என்னும் புதிய வகை எதிராளியின் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. 890 நாட்கள் சுற்றிவளைத்து உணவின்றி மக்கள் செத்து மடியட்டும் என்று ஆணையிட்டான். ‘பசித்தே இறத்தல்’ என்பது அந்த ராணுவ நடவடிக்கைக்கு பெயர். ஆனால் மக்கள் நடத்திய முற்றுகைப்போர் (War of Attrition) தாய்மார்கள், குழந்தைகள், கூலி தொழிலாளர்கள், விவசாயிகள், ஓட்டுநர்கள், ஆசிரியர்கள் இன்னும் பிளம்பர், தொழிற்சாலை பொறியாளர், மருத்துவர் என்று யாவரும் நாஜிப் படைகளுக்கு எதிராக கிடைத்ததை எல்லாம் எடுத்து அடித்து நொறுக்கி துப்பாக்கி குண்டுகளால் துளைத்தாலும் கிளர்ந்தெழுந்து  யுத்தத்தை தேசபக்த போராக (Patriotic War) மாற்றி வென்றது வரலாறு. மூன்றாண்டுகள் தொடர்ந்த கொடிய ரத்தவெறி பிடித்த மகா யுத்தத்தில் மண்ணைக் காத்திட கீவ் நூலக வளாகம் ஒரு போர்படை பாசறையாக அறிவியல் அறிஞர் வெர்னாட்ஸ்கியால் திறம்பட செயல்படப்பட்டது. அப்போது அங்குதான் ரஷ்ய அணு சோதனைகள் செய்வதற்கான வெர்னாட்ஸ்கியின் மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் எழுதப்பட்டன.

 இந்த கட்டுரையின் ஆரம்ப வரிக்கு திரும்புவோம். உக்ரேன் ரஷ்ய யுத்தம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த கேள்வி சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாய் நடந்த நம் இந்திய மாணவர் சங்க கல்விக் கருத்தரங்கில்  உரையாற்றி விட்டு வெளியே வந்தபோது மாணவர் சங்க தோழமைகளில் ஒருவரான ஒரு லயோலா கல்லூரி மாணவரால் சாதாரண உரையாடலில் என்னிடம் கேட்கப்பட்டது. வரலாறு முழுவதும் தோளோடு தோள் நின்று களத்தில் வென்ற இரு சகோதரர்கள் அல்லவா உக்ரேனும்-ரஷ்யாவும். ரஷ்யாவுக்கு எதிரான தனது வெறுப்பு ராஜதந்திரத்தின் மூலம் தனது அடிமையான நேட்டோ படையில் பழைய சோவியத் பிராந்தியங்களை ஒவ்வொன்றாய் இணைத்து பணியவைத்த அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் இறுதியாக உக்ரேனையும் இழக்கிறார்கள். தனக்கு எதிரான நேட்டோ படைகளின் கூட்டமைப்பில் தன்னை பிராந்திய நில ரீதியில் மூன்று பக்கமும் சூழ்ந்த உக்ரேனும் இணைந்தால் அது தனது பாதுகாப்பு என்ன ஆகும் என பரிதவித்தபடி களம் இறங்கிய ரஷ்யாவை ஆதரிப்பதா அல்லது ரத்தவெள்ளத்தில் இறந்த உக்ரேனிய போர் வீரர்களுக்காக அழுவதா….. ஆனால் இந்த சகோதர-யுத்தத்தின் வழியே ரத்தம் குடிப்பதும் தனது ஆயுத-சந்தையை திறந்து விட்டு முதலை கண்ணீர் வடித்து உலக ஊடக நாடகத்தை நடத்துவதும் யார் என்று எல்லோருக்கும் தெரியும். 

Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

1945 இல் உஃபா விலிருந்து பிரபலமான ’நூலக பெரும் பயணம்’ மூலம் மூன்று கப்பல்களில் கீவ் நூலக நூல்கள் -திரும்பியதும் தனது மாபெரும் கனவான தனது பிரம்மாண்ட நூலகத்தில் ஹிட்லரின் குண்டுகளால் சிதலமடைந்த பகுதிகளை சீர் செய்ய மறுபடியும் கட்டிட வேலைகள் தொடங்கி பீடு நடைபோட்ட நாளில் மக்கள் வெற்றியின் சின்னமான தனது நூலகத்தை கடைசியாக வலம்வந்த பின் ஜனவரி ஆறாம்  நாள் அறிஞர் வெர்னாட்ஸ்கி காலமானார். இன்று உலகின் பிரம்மாண்ட நூலகங்களில் ஒன்றாக போற்றப்படும் கீவ் நகரின் வெர்னாட்ஸ்கி தேசிய நூலகம் உக்ரேனிய ரஷ்ய தோழமையின் அடையாளமாக  விரைவில் இருவரும் இணைந்து  ஏகாதிபத்தியத்திற்கு பதில் கொடுக்கும் நாள் வரும் என பறைசாற்றியபடி உயர்ந்து நிற்கிறது., வரலாறு சொல்லும்,, நூலகமே வெல்லும்.,,

முந்தைய கட்டுரையை வாசிக்க:

நூலகாலஜி – 1 தற்கொலைக்கு உகந்த இடம் நூலகமல்ல… – ஆயிஷா. இரா. நடராசன்

நூலகாலஜி – 1 தற்கொலைக்கு உகந்த இடம் நூலகமல்ல… – ஆயிஷா. இரா. நடராசன்

நூலகாலஜி – 1 தற்கொலைக்கு உகந்த இடம் நூலகமல்ல… – ஆயிஷா. இரா. நடராசன்




சமீபத்தில் மூன்று வெவ்வேறு மாவட்ட கல்லூரிகளில் நான் ஓக்.மாண்டினோ-வை பற்றி பேசியபோது பெரிய வாசிப்பு அலையையே அது உருவாக்கியதை உணர்ந்தேன். சுய– முன்னேற்ற நூல்கள் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயமே கிடையாது. ஓக்-மாண்டினோ எழுதிய எல்லா 32 நூல்களுமே சுய-முன்னேற்றம் எனும் வகை சார்ந்தவைதான். ஒரு புத்தகமாக, டிஜிட்டல் நூலாக, ஆடியோவாக என லட்சக்கணக்கில் அவை இன்னமும் அசுர சாதனை படைத்து – 1996லேயே இறந்துபோனவருக்கு தற்போதும் கடிதம் எழுதி, மெயில் அனுப்பி, சந்திக்க அனுமதிகேட்டு….. சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் தான் வாசித்த நூல் பட்டியலில் சேர்க்கும் அளவுக்கு உலகெங்கும் வாசகர்கள்.

‘உலகின் தலை சிறந்த விற்பனையாளன்’ (The greatest salesman in the world) புத்தகம் வெறும் சுய-முன்னேற்ற பிதற்றல்கள் மட்டுமல்ல. ஒரு ஃபேண்டசி-ரகத்தில் புனையப்பட்ட மகா இலக்கிய நீரோட்டம். நான் ஓக்.மாண்டினோவை மட்டும் குறிப்பிட்டு தேர்வு செய்து வாசிக்க பல காரணங்களில் இந்த புனைவு இலக்கிய மயக்கமும் ஒன்று. பிரெயின் டிரேசி, ஜாக் கான்ஃபீல்டு, டி.ஜே.ஹாய்சிங்டன் என்று பெரிய கூட்டமே இந்த சுய – முன்னேற்ற நூல் வகையறாவின் பெருவெற்றி பெற்ற பட்டியலில் இருந்தாலும் ஓக்.மாண்டினோ-வை நான் தனித்தெடுத்ததற்கு வேறு ஒரு சிறப்புக் காரணம் எதுவாக இருக்கும் என்று நானே யோசித்து இருக்கிறேன். உண்மையில் அவனிடம் நான் வசமாக சிக்கிக் கொண்டேன். அவன் என்னை உறங்க விடாதுசெய்த இரவுகளும் உண்டு.

‘உங்களால் முடியும்’, ‘ஒரே வருடம் ஒன்பது வழிகள்’ அது இது என்று (தற்போது தமிழிலும் கிடைக்காதது இல்லை) ஒரு ஆயிரம் ‘விற்பனையில் சாதனை’ வகையறா நூல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நம்ம நாட்டில் ‘ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி’ ராபின் சர்மா, ஷிவ்கேரா போல இவை இல்லாத புத்தகக் கடையே இல்லை. எந்த புத்தகக் கண்காட்சியிலும் சமையல் புத்தகங்களுக்கு இணையான விற்பனை ஆதரவு இந்த சுய-முன்னேற்ற ‘படியுங்கள் – தேடி அடையுங்கள் கோடி’ என்று போய்க்கொண்டிருக்கிறது. ஒருவரின் உழைப்பை ஒட்டச் சுரண்டி தனிமனித ‘அந்தஸ்து’ வகையறாக்களை குறுக்கு வழியில் ‘முதலாளி’ ஆவது எப்படி என்று ஒரு அறிவியலைப் போலவே-முன்வைக்கும் முதலாளித்துவ உலகின் பகடிகளை அறிய மக்கள் அதீத எதிர்பார்ப்போடு இந்தப் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறார்கள் இது ஒரு புறம்.

காலே இல்லாமல் இமயமலை ஏறியவர், எய்ட்ஸ் நோய் வந்த பிறகும் கின்னஸ் சாதனை படைத்தவர்… சாகஇருப்பதாக அடுத்தநாள் வரை மருத்துவரால் கெடு நிர்ணயிக்கப்பட்டவர் ஒலிம்பிக் பதக்கம் பெற்றது என ‘நம்பிக்கை’ துளிர்க்க வைக்கும் சாதனை மனிதர்கள் அவர்களது வழிகள் வலிகள் வாழ்க்கை என பல நூறு புத்தகங்கள். எல்லாமே நம்ப வேண்டியதில்லை. போலிகள் உண்டு. ஆனால் நான் சொல்ல வருவது வேறு. அவற்றின் அட்டையை கிழித்து விட்டால் போதும் நூலாசிரியர் யார் என்பதை கண்டுபிடிக்கமுடியாது. எல்லாமே ஒரே மாதிரி இருக்கும். இதுபோன்ற புத்தகங்களின் அமைப்பு கூட மாறாது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பு போல படி எங்கே லிப்ட் அங்கே என்று சொல்லி விட முடியும். ஆனால் ஓக்.மாண்டினோவின் புத்தகங்கள் அப்படி அல்ல. அவன் ஒரு வித்தியாசமான கட்டமைப்பாளன். வகைப்படுத்த முடியாத வனவாசி போல ஆகாமல் அவனது புத்தகங்களுக்குள் நுழைய முடியவில்லை என்பதே உண்மை.

டி.ஜே. ஹாய்சிங்டன் என்ற எழுத்தாளருடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் சொல்கிறேன். ‘நீங்கள் நினைத்தால்… நீங்கள் வெல்ல முடியும்’ (If you think you can win) என்று பல லட்சம் பிரதிகள் விற்ற ஒரு பிரதியை நான் வாசிக்க நேர்ந்தது. பள்ளிக் குழந்தைகளை சந்திக்கப் போகும்போது நிறைய சவால்கள், சரித்திரங்களை அறிந்துகொண்டு சென்று கொட்டித் தீர்ப்பதற்காக நான் எதை வேண்டுமானாலும் வாசிப்பேன். அப்படி வாசித்தது இந்த நூல். அதே அடுக்குமாடி…. பாணிதான். ஆனால் பிரான்சின் பிரபலமான டூர்-டி-பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் தொடர்ந்து ஏழாண்டுகள் தங்கம் வென்ற லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங் பற்றி இரண்டு பக்கம் எழுதி இருந்தார். 25 வயதில் புற்றுநோய் தாக்கியும் அதை வெற்றிகரமாக கடந்து ஆம்ஸ்ட்ராங் சாதித்த கதை. ஆனால் ஆம்ஸ்ட்ராங் ஊக்க மருந்து எடுத்ததையும் அதனாலேயே புற்றுநோய் வந்ததையும்- நான் குறிப்பிட்டு டி.ஜே.ஹா-வுக்கு- இப்படி செய்யலாமா என்று கண்டித்து ஒரு கடிதம் எழுதினேன் (இ-மெயிலில்…) புதிய பதிப்பில் மாற்றி விட்டோம் என்று இரண்டு மாதம் கழித்து பதில் வந்தது. இப்படி பல வித தவறுகள்; ஆனால் அவற்றைக் குறிப்பிட்டு எழுதினால் டி.ஜே.ஹா போல எல்லோரும் பதில் சொல்வது இல்லை என்பதும் உண்மை.

ஓக்.மாண்டினோவிடம் அப்படி ஒன்றையும் காணமுடியாது. காரணம் அவரது நூல்களின் கதையாடல் அம்சம். இண்டு இடுக்குகளில் கூட அரேபியப் பாலைவனங்களின் வரட்டுமனமும் மனித மனங்களின் மனிதநேய தூறலும்.. துயரங்களைக் கடக்கும் துணிச்சலும் சேர்ந்து கொத்துக்கொத்தாக அடுக்கப்படும் அத்தியாயங்கள் அவை. தனது ஒட்டகசாலை முதலாளி விற்றுவரக் கொடுத்த விலையுயர்ந்த கம்பளியை ஆட்டு கொட்டகையில் பசித்த தம்பதிகளின் பிஞ்சு மழலை குளிர்போக்க கொடுத்துவிட்டு இரவோடு இரவாக முதலாளியிடம் வந்து ‘தேவை எனில் ஒட்டகம் மேய்த்து பராமரித்துக் கழிக்கிறேன்’ – என்று வாதாட முடிவு செய்யும் ஹாபீது போன்ற கதாபாத்திரங்களை விட்டு உங்களால் மீளவே முடியாது.

ஆனால் ஓக்.மாண்டினோ எனும் எழுத்தாளனின் சொந்த வாழ்க்கை வரலாறை நான் படித்து அறிந்தபோது அவரது நூல்களைவிட அது என்னை ஓங்கி அறைந்தது. இத்தனை காலம் வாசிக்காமல் விட்டோமே என்று என்னைப் பதற வைத்த வாழ்க்கை அது. எல்லோரும் ‘உயரச் செல்லுங்கள்‘ (Grow Higher) என்று எழுதும்போது அவர் ‘கீழ்நோக்கி செல்லுங்கள்’ (Go Below the surface) என்று எழுதியவர். எத்தனை துயரமான வாழ்க்கை எத்தனை அற்புதமான செய்தி.

‘ஓக்.மாண்டினோ என் உண்மையான பெயரல்ல’ எனும் தலைப்பில் தனது புத்தகங்களில் ஒன்றில் ஒரு முன்னுரையை அவர் எழுதுகிறார். ஆமாம்; அவர் பெயர் அகஸ்தியன். அமெரிக்காவில் பர்மிங்ஹாம் என்கிற கிராமத்தில் பிறந்தவர். பிறகு ‘இல்லை, ஊர் பெயர் நாடிக்’ என்று எழுதினார். பிறகு ‘வருடம், நாள் எல்லாம் மறந்துவிட்டது’ என்று எழுதினார். அம்மா மட்டும்தான். அப்பா தெரியாது, இத்தாலியில் இருந்து புலம்பெயர்ந்த ஒற்றைத்தாய், ஊர் இத்தாலி, பேசியது ஐரிஷ் மொழி, வாழ்ந்தது அமெரிக்கா, அம்மாவின்- ஒரே கேளிக்கை பொழுதுபோக்கு நூலகம். விபரம் தெரிந்த நாளில் இருந்தே குட்டி அகஸ்தியனுக்கு புத்தக வாசிப்பு ஒட்டிக்கொண்டது. இருவரும் சேர்ந்து முடிவு செய்த அவரது எதிர்கால விருப்பம் எழுத்தாளர் ஆவது. பள்ளி இறுதி ஆண்டின் சிறப்பான மதிப்பெண் கடந்து மிசோரிப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை ஊடக படிப்பில் இடம் கிடைத்தவரை எந்தச் சலனமும் இல்லை. கல்லூரியில் சேர வேண்டியதற்கு முந்தின நாள் சமைத்தபடியே சுருண்டு விழுந்து மாரடைப்பால் அவரது தாய் இறந்தபோது சிதைத்தது கல்லூரிக் கனவு மட்டுமல்ல எழுத்தாளர் ஆவது, வாசிப்பு எல்லாமே.

இரண்டாம் உலகப்போர் காலமான அப்போது ‘ஆள் எடுக்கிறார்கள்’ என்று அறிந்து அமெரிக்கப் படை போர் விமானி ஆவதற்கு முன் கொஞ்ச காலம் ஒரு காகித உற்பத்தி தொழிற்சாலையில் பளு தூக்கும் வேலை. உலகப்போரில் நேசப்படைகள் சார்பில் பி 24 ரக குண்டு வீசும் விமானத்தில் வெற்றிகரமாக முப்பது முறை ஜெர்மனியின் மேல் பறந்து குண்டு மழை பொழிந்து, போருக்குப் பிறகு ஒரு காப்பீட்டு நிறுவன சிப்பந்தி வேலை. விமானியாக இருந்தபோதே பழகிய ஒருத்தியோடு திருமணம்- அவள் ஏற்கனவே மணமாகி மணமுறிவு பெற்றவர் என்றாலும் மகள் பிறந்து இயல்பாய் போன நாட்களின் ஊடாக அவரது மகள் இத்தாலிய சாகச போர் வீரன் நினைவாக அப்பாவை அழைத்த புது பெயரால் மாண்டினோ ஆனார் அவர். நாள் தவறாமல் சாகசக் கதைகள் பல சொல்வார் செல்ல மகளுக்கு.

அப்படிப்பட்ட மகளுக்கு ஆறே வயதானபோது புதுவிதமான மன-உளைச்சல் நோய் – அவரை- மாண்டினோவை தாக்குகிறது. ஒருலட்சம் போர் வீரர்களில் ஒருவரை தாக்கும் குற்ற உணர்வு நோய். ஜெர்மனியில் தன்னால் குண்டு வீசப்பட்டு எத்தனை குழந்தைகள் மரித்திருக்கும். எத்தனை தாய்மார்கள் அலறியபடி இறந்திருப்பார்கள் என நினைத்து நினைத்து பதறியபடியே உடல்நடுங்க வைக்கும் மனச்சோர்வு நோய் அவரை செயலிழக்க வைத்தது. ரத்த நிறத்தில் எதைப் பார்த்தாலும் திடீர் திடீரென்று சித்தம் கலங்கி ‘நிறைய பேரைக் கொன்றுவிட்டேன்’ என்று ஓலமிட்டவரைத் துறந்த மனைவியோடு மகளும் அவரைத் தவிக்கவிட்டுச் சென்றுவிட எத்தனித்தபோது மாண்டினோ தனது மகளது காலில் விழுந்து ‘போக வேண்டாம்’ என்று கதறினார். என்ன புரியும் அந்தக் குழந்தைக்கு.

ராணுவ-மருத்துவ-உளவியலாளர்கள் அவரை விரைவில் ஜெர்மனிக்குப் பறக்க வைத்தார்கள். எங்கெங்கும் சுற்றி யார் யாரையோ சந்தித்து பள்ளி கல்லூரி உணவு சாலை மருத்துவமனை என ‘மன்னித்து விடுங்கள்’ ‘மன்னித்து விடுங்கள்’ என கதறியபடியே மனச்சுமை இறக்கிட முயன்ற ஆண்டுகளை அவர் எப்படிக் கடந்திருப்பார் என்று கற்பனை செய்ய முடியவில்லை. ஒரு வழியாக சிகிச்சை முடிந்து ஒரு உணவு விடுதியில் இழப்புகளை எண்ணி பரிதவித்தபடியே பில் போடும் வேலை. மாலை முழுதும் துயரம் போக எல்லாரையும் போல குடிபோதை. வீதியில் இருக்கிறோமா விடுதியில் இருக்கிறோமா என்று தெளிவற்ற போதைக்கால உலாவின்போது ஒரு கல்லூரி வாசலில் தன்னைக் கடந்து சென்ற கல்லூரியுவதிகளில் ஒருத்தி தன் கையில் பெரிதாக ஓக்.மாண்டினோ என்று பச்சை குத்தி இருந்ததைக் கண்டார். சந்தேகமே இல்லை. அது அவரது மகள்தான். பதற்றம் தெளிந்து அழைத்தும் தன்னை அடையாளமே காணாமல் அவள் கடந்து போய்விட்டதுதான் அவரை இறுதியாக வீழ்த்தி இருக்கவேண்டும். ஓக்.மாண்டினோ என்றால் ‘எங்கே மாண்டினோ’ என்று அர்த்தம்.

இரவுமுழுதும் கதறிஅழுது குடித்துக் குடித்து மறுநாள் விடிந்தபோது தற்கொலை செய்து கொள்ள அவர் முடிவெடுத்தார். பலவாறு யோசித்து அலைந்து திரிந்தவர் கண்ணில் அந்த துப்பாக்கி விற்கும் கடைபட்டது. அமெரிக்காவில் தடுக்கிவிழுந்தால் துப்பாக்கிக் கடைகள் இருபத்திநான்கு மணி நேரமும் திறந்திருக்கும். சட்டைப்பையில் இருந்த மொத்தக் காசையும் போட்டு ஒரு கைத்துப்பாக்கியும் இரண்டு தோட்டாக்களும் வாங்க முடிந்தது. அருகே தென்பட்ட ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்தார். மேசை நாற்காலிகள்… அடுக்கப்பட்ட அலமாரி முழுதும் புத்தகங்கள். அது ஒரு நூலகம். ஒரு இருக்கையில் அமர்ந்து துப்பாக்கியைப் பிரித்து வெளியே எடுத்து தோட்டாவை நிரப்பிக் கொண்டிருந்தபோது கவனித்தார்…. அவர் அமர்ந்து இருந்த மேசையில் அவர் கண் முன் அந்தப் புத்தகம். யாரோ பாதிபடித்து அப்படியே போட்டுவிட்டுப் போய் இருக்க ‘நான் இறந்து போவதற்கு முன்…. (Before I die) என்கிற அந்தப் புத்தகத் தலைப்பு அவரைக் கவர்ந்திழுத்தது. துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு புத்தகத்தைக் கையில் எடுத்தார். அந்தப் புத்தகத்தை எழுதியவர் கிளமெண்ட் ஸ்டோன். நூலகம்…. கிளேவ்லாந்து பொது நூலகம். அதை வாசிக்கத் தொடங்கியவர் பிறகு வெறித்தனமாக அந்த குட்டி நூலகத்தின் ஏறக்குறைய எல்லா புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினார் அந்த நூலகத்திலேயே வாழத் தொடங்கி ஓக்.மாண்டினோ என்னும் பெயரில் தன் மகளுக்கு தான் கதை சொல்வது போலவே எழுதத் தொடங்கினார் அவர்… விரைவில் கிளமெண்ட் ஸ்டோன் நடத்தி வந்த சக்சஸ் அன்-லிமிடெட் என்னும் இதழில் அவை வெளிவரத் தொடங்கின… அப்புறம் ஒருநாள் அதே இதழ் ஆசிரியரானார் ஓக்.மாண்டினோ.

ஓக்.மாண்டினோ கிளைவ்லாந்து பொது நூலகத்தை லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட பிரம்மாண்டமாக்கியது வரலாறு. அவரது புத்தகங்கள் ராபின் சர்மா, ஷிவ் கேரா போன்றவர்கள் உட்பட யாவரிடமிருந்தும் வேறுபடுவதற்கு காரணம். எல்லா புத்தகங்களிலும் தனது மகளோடு பேசுவது போலவே அவர் அமைக்கும் நெஞ்சைப் பிழியும் ஒரு தொனி.

தன் தொழிற்சாலையை தன் தொழிலாளர்கள் பெயருக்கே எழுதிவைக்கும் ரேனேவும், தனது உறுப்புகளை தன் நோயாளிகளுக்கே தானம் செய்யும் மருத்துவர் பால் வெரேன்-னையும் எழுதி அதை சுய-முன்னேற்ற நூல் என அழைக்க வேறு யாருக்கு தைரியம் வரும்.

தலைசிறந்த எழுத்தாளராக பல லட்சம் பிரதிகள் கடந்து எழுத்து ஜாம்பவானாக பல கோடிகளுக்கும் பல கோடி வாசகர்களுக்கு தகுதியானவராக பிற்காலத்தில் உயர்ந்த ஓக்.மாண்டினோ, புத்தகங்கள் பற்றிய வெறித்தனமான பேச்சாளராக, நூலக மேதையாக, உயர்ந்து சர்வதேச பேச்சாளர் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ உறுப்பினர் ஆனது உட்பட யாவும் அந்த கிளைவ்லாந்து நூலக ‘தற்கொலை மேசையில்’ தொடங்கியதுதான்.

இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள், வாசகர்கள் கிளைவ்லாந்து நூலகத்தை நாடி வந்த வண்ணம் இருக்கிறார்கள் யாராக இருந்தாலும் ஓக்.மாண்டினோவின் கல்லறையைக் கடந்து தான் அந்த பிரமாண்ட நூலகத்திற்குள் நுழைய முடியும். ஓக்- மாண்டினோ வின் வாழ்க்கைக் கதையை விட பெரிய சுய-முன்னேற்ற நம்பிக்கைப் பாடம் வேறு இருக்க முடியுமா என்ன?.

– ஆயிஷா. இரா. நடராசன்

நூல் அறிமுகம்: ஆயிசா இரா. நடராசனின் “வாசிக்கலாம்”

நூல் அறிமுகம்: ஆயிசா இரா. நடராசனின் “வாசிக்கலாம்”




நூல் : வாசிக்கலாம்
ஆசிரியர் : ஆயிசா இரா. நடராசன்
விலை : ரூ. ₹60/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
இன்று முதல் நான், 20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன். எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள். எமது பேரக்குழந்தைகள் குடும்ப நூலகத்தை 2000 புத்தகங்களாக்குவார்கள். நான் எங்களுடைய நூலகத்தை வாழ்க்கை முழுமைக்குமான செல்வமாகவும் விலைமதிப்பற்ற சொத்தாகவும் கருதுகிறேன். நாங்கள் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து படிப்பதற்கு குடும்ப நூலகத்தில் குறைந்தது 1 மணி நேரம் செலவழிப்போம் – கலாம் அவர்களின் கனவுகளில் ஒன்று இது.

நோபல் பரிசு ஏன் இந்தியர்கள் இல்லை? – ஆயிஷா இரா. நடராசன்

நோபல் பரிசு ஏன் இந்தியர்கள் இல்லை? – ஆயிஷா இரா. நடராசன்




சிறுமி ஒருத்தி (1970) சாதாரண அஞ்சலட்டையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபலம். ஆங்கிலேயர் காலகட்டக் கல்வி சி.வி.ராமன், மேக்நாட் சாகா, சத்தியேந்திரநாத் போஸ் போன்ற அறிவியலாளர்களை உருவாக்கியதுபோல், நமது கல்வி முறையால் யாரையும் உருவாக்க முடிந்ததா என்பது அந்தச் சிறுமியின் கேள்வி. புதுடெல்லியில் உள்ள பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் சிலருக்குப் பிரதமர் இந்திரா காந்தி அதை அனுப்பி, உண்மையில் அப்படி உருவானவர்கள் குறித்து அந்தச் சிறுமிக்கு எழுதி உதவுமாறு கேட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அந்தச் சிறுமி என்ன ஆனார் என்பதும் தெரியாது என்றாலும், நாடு விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டிலும்கூட அந்தக் கேள்விக்குச் சரியான பதில் நம்மிடம் இல்லை. இந்த ஆண்டும் இந்தியர் எவரும் நோபல் பரிசு பெறவில்லை என்பதை எந்தச் சலனமும் இன்றி நாம் எளிதாகக் கடந்துவிட்டோம். நோபல் பரிசை விடுங்கள்; பொதுவாகவே நம் பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிகள் எந்த நிலையில் உள்ளன என்பது ஆய்வுக்குரியது.

ஆங்கிலேயர் ஆட்சியில் அறிவியல்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது ராமன், சாகா, போஸ் போன்ற இந்திய அறிவியலாளர்கள் கேம்பிரிட்ஜிலும் ஆக்ஸ்போர்டிலும் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை. கல்கத்தாவின் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட இந்தியக் கல்விக்கூடங்களில்தான் இயங்கினர். அவற்றுக்குச் சுதந்திரப் போராட்டச் சதி நடப்பதாகப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொடுக்காத தொல்லை இல்லை. போதுமான நிதி ஆதாரம் என்றைக்குமே கிடைத்திடாத நிலையில்தான் அறிவியல் ஆராய்ச்சி இங்கு பல சாதனைகளைப் படைத்தது. சுதந்திரத்துக்கு முன்பே சர்வதேச அறிவியல் ஆய்விதழ்களில் இந்தியப் பல்துறை அறிவியலாளர்களின் 6,000 ஆய்வுகள் வெளிவந்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலை: இந்திய அறிவியலில் அடிப்படை ஆய்வின் இன்றைய நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வேலைக்குச் செல்வது எனும் சமூக அழுத்தம் இன்றைய இளைஞர்களை ஆய்வு வட்டத்துக்கு வெளியே நிறுத்திவிட்டது. அதையும் மீறி உள்ளே வருபவர்களைப் பல்கலைக்கழக ஆய்வுச் சூழல் விரட்டியடிக்கிறது; சிலர் தற்கொலை வரைகூடப் போகிறார்கள். ஆய்வு நிதியைப் பங்கிட்டுக்கொள்வது எப்படி என்ற மோசமான அதிகாரச் சுரண்டலாலும் ஊழல்களாலும் கருத்தரங்கங்கள் வெறும் சடங்குகளாகச் சுருங்கிவிட்டன. ஆய்விதழில் வெளிவரும் அளவுக்குத் திறம்பட அறிவியல் ஆய்வுகளை எழுதும் மாணவர், அவர் பெயரில் அந்த ஆய்வை வெளியிட்டுவிட முடியாது. ஆய்வுக்கு வழிநடத்தும் பேராசிரியர்கள் பலர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அந்த அற்புதங்களைத் தாம் வெளியிட்டுக்கொள்ளும் வெட்கக்கேடான சூழலே இந்தியப் பல்கலைக்கழகங்களில் நிலவுகிறது. கடந்த 20, 30 ஆண்டுகளாக ஆய்வுத் துறையைப் புறக்கணித்து, பொருளீட்டுவதே வெற்றி எனப் பொறியியல், மருத்துவம் படிக்கச் சென்று, பலர் காணாமல் போனது உண்மை. ஆய்வுத் துறைகளான இயற்பியல், வேதியியல் என அடிப்படை அறிவியலுக்குள் தப்பித்தவறி நுழைபவர்கள் காண்பது என்ன? இந்தியாவில் இன்று முனைவர் பட்ட ஆய்வுகளில் மூன்றில் இரண்டு போலியானவை. தரம்வாய்ந்த ஆய்வுகளுக்கு அரசின் நிதியுதவி பெருமளவு குறைந்துவிட்டது. அறிவியல் சார்ந்த ‘பட்நாகர் விருது’ உட்பட 300 விருதுகளை நீக்கிவிட்டு, நோபல் போன்று ஒரே விருதாக வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் நம் ஆய்வுச் சூழலை மேலும் நீர்த்துப்போகச் செய்யும்.

நோபல் அறிஞர்களின் பின்னணி: இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிரான்ஸின் அலான் ஆஸ்பெக்ட், அந்நாட்டின் 72ஆவது நோபல் அறிஞர். பிரான்ஸின் பள்ளி, பல்கலைக்கழகக் கல்வியில் மதிப்பெண்கள் கிடையாது; ஆறு படிநிலைத் தரச்சான்று தரப்படுகிறது. அறிவியல் பட்டப்படிப்பு, ஆறு மாத ஆய்வக உதவியாளர் பணியிடப் பயிற்சியை உள்ளடக்கியது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாந்தே பேபு, அந்நாட்டின் 32ஆவது நோபல் அறிஞர். ஸ்வீடனில் கல்லூரிக் கல்வி வரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்களைத் தத்தெடுத்து உலகெங்கும் செல்வதற்கான செலவை அரசே ஏற்கிறது. வேதியியலில் நோபல் பரிசு பெறும் மோர்டன் மேல்டால் டென்மார்க்கைச் சேர்ந்தவர். அங்கே பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டில் குறைந்தபட்சம் 100 பக்கம் கொண்ட ஆய்வறிக்கையை விருப்பமான அறிவியல் துறை சார்ந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். இதுவரை 14 நோபல் அறிஞர்களைத் தந்த டென்மார்க்கில் மொத்தம் எட்டுப் பல்கலைக்கழகங்களே உள்ளன. ஆஸ்திரியா நம்மைவிடப் பல மடங்கு சிறிய நாடு. இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டிருக்கும் ஆண்டன் ஸாய்லிங்கர் ஆஸ்திரியாவின் 23ஆவது நோபல் விருதாளர். இங்கு பாக்சோ சூலன் கல்விச் சீர்திருத்தம் அறிமுகமான பிறகு, பயன்பாட்டு அறிவியல் ஆய்வுக்கூடங்கள் பல திறக்கப்பட்டன. அவற்றில் பல பள்ளிகளோடு நேரடித் தொடர்புடையவை. பள்ளிப் பருவத்திலிருந்தே கோடை விடுமுறையில் மாணவர்கள் அங்கு சிறப்புப் பயிற்சிகள் பெறவும் முடியும். அறிவியல் என்பதே ராக்கெட்டும் ஏவுகணையும் மட்டும்தான் என்கிற நிலை அங்கு இல்லை.

கல்லூரி – பள்ளி இணக்கம் எப்போது?: நாம் நமது கல்லூரி, பல்கலைக்கழகங்களை மட்டுமே குறை கூற முடியாது. நம் பள்ளிக் கல்வி பொதுத்தேர்வு மையக் கல்வியாக இருப்பது முதல் சிக்கல். பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட அறிவியல் பிரிவுகளான இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க ஆளில்லை. பள்ளிக் கல்வித் துறைக்கும் உயர்கல்வித் துறைக்கும் ஒரு இணக்கமும் பிணைப்பும் ஏற்பட வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆய்வுத் திறனை மேம்படுத்த ‘இன்ஸ்பயர்’, ‘மானக்’ போலவும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு போலவும் பல திட்டங்களோடு அந்தந்த ஊர்களின் கல்லூரிகள் பள்ளிக்குள் நுழைய வேண்டும். புத்தக அறிவைக் கடந்து செயல்பட பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். உண்மையான முனைவர் பட்ட ஆய்வு முயற்சிகளும் நோபல் பெறும் அளவுக்கான திருப்புமுனைக் கண்டுபிடிப்புகளும் சுயசிந்தனை, தேடல் சார்ந்தவை. வெற்று மனப்பாடப் பொதுத்தேர்வு மதிப்பெண் கல்வியைத் தூக்கி எறியாதவரை பிரதமர் இந்திராவிடம் அந்தச் சிறுமி அன்று எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நம்மால் சரியான பதிலைத் தர முடியாது என்பதே துயரமான உண்மை.

ஆயிஷா இரா.நடராசன்
கல்வியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

நன்றி: இந்து தமிழ் திசை

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘ஈரடிப்போர்’

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘ஈரடிப்போர்’




நூல் : ஈரடிப்போர்
ஆசிரியர் : ஆயிஷா இரா. நடராசன்
விலை : ரூ.₹10/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

(ஆர்.எஸ். எஸ்.) ஆளுநர் ரவி திருக்குறளை இந்துத்துவ நூலாகவும் திருவள்ளுவரைக் காவிச் சாமியாராகவும் காட்ட முனைகிறார். எட்டினால் குடுமியைப் பிடிப்பதும் எட்டாவிட்டால் காலைப் பிடிப்பதும் ஆரியருக்குக் கைவந்த கலை.

திருக்குறளை அழிக்கவும் திரிக்கவும் ஆரியர் செய்த சூழ்ச்சிகளை விளக்கியுள்ளதோடு அதைப் போராடி முறியடித்த வரலாற்றைப் பதினாறு பக்கங்களில் ஆயிஷா இரா. நடராசன் நச்சென எழுதியுள்ள கட்டுரையே “ஈரடிப் போர்-திருக்குறளுக்கு நடந்த 100வருட யுத்தம்”.
தெளிவாக எழுதப்பட்ட இக் கட்டுரை திருக்குறளின் சிறப்புகளையும் பெருமைபடச் சொல்லுகிறது .

இது அளவில் சிறியது தான்.
ஆனால் சிறு பொறியை உண்டாக்கும்
தீக்குச்சி.
தமிழர்களையும் தமிழர் பண்பாட்டையும் கலை இலக்கியங்களையும் ஒழிக்கத் துடிப்போரை எரிக்கும் காட்டுத் தீயை மூட்ட வந்த சிறு பொறி

அந்தமான் தமிழ்ச் சங்க செயலாளர் காளிதாஸ் முகநூல் பகிர்விலிருந்து…

உயர் கல்விக் கனவு கைக்கு எட்டுமா? – ஆயிஷா இரா. நடராசன்

உயர் கல்விக் கனவு கைக்கு எட்டுமா? – ஆயிஷா இரா. நடராசன்



உயர் கல்விக் கனவு கைக்கு எட்டுமா?

ஒரு சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை உயர் கல்வியில் எட்டப்படும் வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. வளரும் நாடான இந்தியா, உயர் கல்வி சார்ந்த வளர்ச்சியில் எங்கே இருக்கிறது? அதற்கு முன்னர் உயர் கல்விக்கு முக்கியத்துவம் தரும் சில நாடுகளின் நிலையைப் பார்ப்போம்.

டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் போன்ற இந்தியாவைவிடச் சிறிய நாடுகள். இந்த நாடுகளில் உயர் கல்வி கற்பதற்கான கல்லூரி-பல்கலைக்கழகம் இரண்டிலுமே கல்விக் கட்டணம் கிடையாது. மக்கள்தொகையிலும் பொருளாதார நிலையிலும் நம்மை ஒத்த ஜெர்மனியில் உயர் கல்வி வரை எந்தக் கட்டணமும் இல்லை.

அமெரிக்காவின் நியூயார்க் கிராஸ்மன் மருத்துவக் கல்வியகத்தில் கடந்த ஆண்டு வித்தியாசமான ஒரு முயற்சி நடந்தது. தங்களது கல்வியகத்தின் முதுநிலை மருத்துவ (எம்.டி.) படிப்பிற்கான அனைத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், பொது நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் வசூலித்து, அந்தக் கல்வியகமே செலுத்திவிட்டது.

டென்மார்க்கில் கடந்த ஆண்டு முதல் ஐரோப்பியக் கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்து வந்து உயர்கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கட்டணம் நிர்ணயித்துச் சட்டம் இயற்றப்பட்டது.

இதேபோல அயல்நாடுகளிலிருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு மட்டும் பல்கலைக்கழகக் கட்டணத்தை நிர்ணயிக்க பின்லாந்து அரசு முயன்றபோது ‘கல்வி கற்கக் கட்டணமா, கூடவே கூடாது’ என்று பொது விவாதம் மூலம் மக்கள் அந்த முயற்சியைத் தோற்கடித்தனர். உடனடியாக பின்லாந்து அரசும் உத்தரவைத் திரும்பப் பெற்றது.

கட்டணமற்ற கல்வியும் மகிழ்ச்சித் தரவரிசையும்

மக்களுக்குக் கட்டணமின்றித் தரமான கல்வியை வழங்கும் பின்லாந்து, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மூன்று விஷயங்களில் நம்மைவிடப் பல மடங்கு உயர்ந்து நிற்கின்றன. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் அவைதான் முதல் ஆறு, ஏழு இடங்களை ஆண்டுதோறும் பிடிக்கின்றன (கடந்த ஆண்டு இந்தியா 129-வது இடத்தைப் பெற்றது).

உலக கல்வித் தரவரிசைப் பட்டியலிலும் கட்டணமற்ற கல்வி தரும் நாடுகளே முதல் 10 இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன (இந்தியா 132-வது இடத்தில் உள்ளது). அவர்களுடைய சமூகங்களில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அதிகபட்ச மாதச் சம்பளம் பெறுகிற அளவுக்கு பட்ஜெட்டில் போதிய தொகையைக் கல்வித் துறைக்கு அந்நாடுகள் ஒதுக்குகின்றன.

கட்டணக் கல்வியின் பின்விளைவுகள்

இந்தப் பின்னணியில் உயர் கல்வித் துறை சார்ந்து இந்திய அளவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது ஏமாற்றமே ஏற்படுகிறது. நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான தனிப் பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

பொறியியல் படிப்புக்கான குறைந்தபட்சக் கல்விக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திய, அகில இந்திய பொறியியல் கல்வி கவுன்சிலின் (AICTE) சமீபத்திய அறிவிப்பு அதிர்ச்சியைத் தருகிறது. ஒருவர் தொழிற்கல்விப் படிப்பை முடிக்கும் முன்பே வங்கிக் கடனாளி ஆகும் நிலை நிதர்சனமாக உள்ளது.

இந்தியக் கல்வித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு 2014-ல் 17 சதவீதமாக இருந்தது, தற்போது 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. பள்ளிக்குள் நுழையும் 100 மாணவர்களில் இந்திய அளவில் 19 பேர் மட்டுமே கல்லூரிக்குச் செல்கிறார்கள். தமிழகம் அதிகபட்சமாக 50 பேருக்கு மேல் கல்லூரிக்கு அனுப்புகிறது.

ஆனால், உயர்ந்துவிட்ட கல்விக் கட்டணத்துக்காகக் கடன் பெற்றும் நிலபுலனை விற்றும் பெறப்படும் கல்வியால், ‘போட்ட பணத்தை எப்படியாவது திரும்ப எடுத்துவிட வேண்டும்’ எனும் மனநிலையில் எதிர்கால வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பட்டதாரிகள் உருவாகிறார்கள்.

சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு, சமூக நலன் சார்ந்த உழைப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. இந்நிலையில், உயர் கல்விக்கும் சேர்த்து ஒரு மாற்று வழியைத் தமிழக அரசு நியமித்துள்ள மாநிலக் கல்விக் கொள்கைக் குழு வழங்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

– ஆயிஷா இரா. நடராசன், கல்வியாளர், எழுத்தாளர்

நன்றி: இந்து தமிழ் திசை