Posted inPoetry
அம்சப்ரியா கவிதைகள்
கவிதை 1
ஒரு பூங்கொத்தோடு
ஒரு குவளை தேநீரோடு
கூடை நிறைய சொற்களோடென
ஏதோவொரு வகையில்
வலுவில் இணைகிறார்கள்
பிறகு எதன் பொருட்டென அறியத்தராத புதிரோடு
காணாமல் போகிறார்கள்
கனவில் கூட
விழித்துக் கொண்ட மனமோ
தேடியலைகிறது
இவ்வளவு பெரிய உலகில்
ஒரு சின்னஞ்சிறு கிளைக்கு
கவிதை 2
சதுரமாய் ஒரு லட்டு
***
ஆறேழு உழவு
மண் புழு உரம்
இருபத்தி நான்கு மணி நேர கவனிப்பு
பொருத்தமான நாளில் அறுவடை
கைப்பட உறித்த நிலக்கடலையை
விடியற்காலையில் உலக்கையிலிட்டு இடித்து
தேர்ந்த கைப்பக்குவத்தில்
கூடுதல் குறையின்றி
சேர்த்த வேண்டியதைச் சேர்த்து
ஒரு லட்டைத் தயாரித்தேன்
பொடிப் பொடியாக்கி பிசைந்து
சதுர வடிவில் அதையே மாற்றி
இது சந்தையில் புதிதென
வியாபாரத்திற்கு வைத்தான்
நல்ல விலை போயிற்று.
