இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்




1.
உங்கள் சாதிப் பாலுணர்வின் வன்பசியைப் போக்குமெனில்
என் அம்மணம் ஒன்றும் அசிங்கமாகிவிடுவதில்லை.
நீங்கள் வரிசை கட்டி
ருசி பார்க்கும்
என் சதைத் துண்டங்களில்
ஒழுகும் குருதியில்
அழிந்து கொண்டிருக்கும்
தீண்டாமை வலிகள்.
வாருங்கள் என் உடல் மீது
மேயும் உங்களின் தேகத்தில்
பாலெனக் குருதியைப் புகட்டி
பண்பாடுகள் கட்டிக்காக்கும்
அவரவர் அம்மாக்களைத்
தேடிப் பார்க்கிறேன்.

2.
பனியைப் பருகும்
பகலவனின் வேகமென
உன் மௌனத்தை மொழிபெயர்க்கும்
என் மனவோட்டம்
எப்படியோ பொருந்திப் போகிறது
உன் புறக்கணிப்போடு.
உனக்கான சூரியனாக
உதிக்கும் என்னை
பார்வையில் பனியாக்கி விடுகிறாய்.
உனக்கான பாடுபொருளாகவோ
தேடுபொருளாகவோ
மாறிப்போன பின்னே
நானாக இல்லாத என்னை
எவ்விடம் தேட?

3.
பாலைவனத்திற்குள்
தேடிக் கொண்டிருக்கிறது
பறக்கும் பட்டாம்பூச்சி
மலரும் மரத்தை
மழை நீரில் மின்னும் வண்ணங்களை
தன்னோடு உலா வரும் பூச்சிகளை
எல்லைகளைக் காட்டும் பசுந்தடங்களை.
மணல் வெளிக்குள்
நுழைந்த பின்னும்
தன்நிலை மறவாமல்
போகுமிடமெங்கும்
வனத்தைச் சுமந்து செல்லும்
பட்டாம்பூச்சியின் அன்பை
வானம் மழையென நீட்டுகிறது.

இளையவன் சிவா
மடத்துக்குளம்

என்ன செய்து தொலைத்தாய்? கவிதை – புதியமாதவி

என்ன செய்து தொலைத்தாய்? கவிதை – புதியமாதவி




எரித்தாயா புதைத்தாயா
என்ன செய்து என்னைத் தொலைத்தாய்?
எரிக்கும்போது
தீயின் நாக்குகளில்
பட்டுத்தெறித்த முத்தங்களை
என்ன செய்தாய்?
புதைத்த மண்ணில்
பூத்த பூக்களை விட்டுவிடு.
அந்த வாசனையில்
வாழட்டும்
தீண்டாமையின் காமம்.
என்ன செய்தாய் என்னை?
நீச்சல் பழகிய ஆற்றுவெள்ளத்தில்
மூச்சுத்திணறிய விடுதலை.
இறுகப்பற்றிய விரல்களின்
தீராத பசி.
பார்த்துக்கொண்டிருந்த
ஆற்றங்கரைப் படிக்கட்டுகளில்
இப்போதும்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
பச்சை மஞ்சளின் நிறம்.
ஹே சென்னிமல்லிகார்ஜூனா..
என்ன செய்தாய் ?
என்ன செய்து
என்னைத் தொலைத்தாய்!

– புதியமாதவி

Pavalar Karumalai Thamizhazhanin Poems பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்

பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்




என்று முடியும் இந்தக் கொடுமை
****************************************
கயர்லாஞ்சி மகாராட்டிர மாநிலத்தில்
கயமைக்குக் காட்டாக நிற்கும் ஓர்ஊர்
வயலினிலே தினமுழைத்தே அந்த ஊரில்
வாழ்ந்திட்ட சுரேகாஓர் தலித்துப் பெண்ணாம்
உயர்தற்குக் கல்விநல்ல ஏணி என்றே
உணர்ந்ததனால் ஓரளவு கற்றி ருந்தாள்
தயக்கத்தைத் தகர்த்தெறிந்தே கணவ னோடு
தன்சாதிக் கீழ்மையினை எதிர்த்து நின்றாள் !

ஆதிக்கச் சாதிவெறி அரக்கர் தம்மின்
அடக்குமுறை கொடுமைக்குப் பதிலு ரைக்க
சாதிமாறி அம்பேத்கார் சென்ற தைப்போல்
சார்ந்திட்டாள் புத்தமத அரவ ணைப்பில்
வீதியிலே குடிசையாக இருந்த தன்னின்
வீட்டைக்கல் வீடாக்க முனைந்த போது
மோதியுயர் சாதியர்கள் தடைகள் செய்தே
மொத்தமாக வெளியேற்ற முனைந்து நின்றார் !

வீட்டிற்கு மின்சாரம் துண்டித் தார்கள்
வீட்டினிலே வளர்த்துவந்த ஆடு மாட்டை
கேட்காமல் பலர்சேர்ந்தே தடுத்த போதும்
கேள்விமுறை இல்லாமல் ஓட்டிச் சென்றார்
வீட்டோடு விவசாயம் செய்வ தற்கும்
விட்டிடாமல் கால்வாய்நீர் தடுத்து நின்றே
கூட்டாக வயலையுமே பொதுப்பா தைக்குக்
குறிவைத்தே வன்முறையால் பறித்துக் கொண்டார் !

எதிர்த்திட்ட சுரேகாவின் குடும்பந் தன்னை
எழுபதிற்கும் மேற்பட்ட கிராமத் தார்கள்
குதித்துவந்து குண்டுகட்டாய்த் தூக்கி வந்து
குரூரமாகத் தெருவினிலே நிற்க வைத்து
விதித்திட்டார் அவள்மகனைத் தங்கை யோடு
விலங்கைப்போல் உறவுகொள்ள துன்பு றுத்தி
மிதித்திட்டார் ! மறுத்ததனால் அவன்உயிர் நிலையை
மிருகம்போல் நசுக்கியுயிர்ப் பறித்துக் கொன்றார் !

இலங்கையிலே தமிழர்க்கு நடந்த போன்றே
இங்கேயும் சுரேகாவை பெற்றெ டுத்த
குலமகளைப் பகற்பொழுதில் பல்லோர் காணக்
குதறிட்டார் கூட்டாக உறவு கொண்டு
நலமாக சுயமானம் கொண்டு வாழ
நற்கனவு கண்டவளைக் குடும்பத் தோடு
நிலம்மீது பிணமாக வீழ்த்தி விட்டார்
நின்றெரியும் உயர்சாதி வெறித்தீ யாலே !

மதிகாண சந்திராயன் அனுப்பி யென்ன?
மங்கல்யான் செவ்வாய்க்கு விடுத்து மென்ன?
விதிமாற்றி வல்லரசாய் இந்தி யாவை
வியக்கின்ற படிஉயர்த்த முயன்று மென்ன?
மதிதன்னில் சாதியத்தை நீக்கி விட்டு
மனந்தன்னில் மனிதத்தைப் பதிய வைத்துப்
புதுமாற்றம் சாதியற்ற இந்தி யாவாய்ப்
புலராத வரையெந்த புகழும் வீணே !

( மகாராட்டிர மாநிலத்திலுள்ள கயர்லாஞ்சி ஊரினிலே நடந்த நெஞ்சை உருக்கும் உண்மை நிகழ்ச்சி )

தூக்கிலிட்டால் சாமோ சாதி
************************************
பெரியாரின் அயராத உழைப்பி னாலே
பெரும்மாற்றம் தமிழ்நாட்டில் வந்த போதும்
விரியாத மனந்தன்னைக் கொண்டி ருப்போர்
விட்டிடாமல் பிடித்துள்ளார் சாதி தன்னை
நெரிக்கிறது கழுத்துதனைக் காதல் செய்தோர்
நிம்மதியாய் வாழ்வதற்குச் சேர்த்தி டாமல்
செரிக்காத உணவுடலைக் கெடுத்தல் போல
செய்கிறது சாதியிந்த சமுதா யத்தை !

நகரத்தில் இருகுவளை போன தென்று
நாம்பெருமை பேசினாலும் கிராமத் துள்ளே
நகராமல் தேநீரின் கடைக ளுக்குள்
நாட்டாமை செய்கிறது இன்னும் நின்றே
முகம்மழிக்கும் நிலையத்துள் தலித்க ளுக்கே
முடிவெட்டின் கடைதன்னை உடைப்போ மென்றே
அகவெறியில் கன்னடத்தின் ஊப்ளி ஊரில்
அறிவித்தே தடுக்கின்றார் சாதி யத்தால் !

தீண்டாமை பெருங்குற்றம் என்றே சட்டம்
தீட்டியிங்கே வைத்தென்ன நாளும் நாளும்
வேண்டாத மருமகளின் கைபட் டாலே
வெறுக்கின்ற மாமியாரின் முகத்தைப் போல
காண்கின்றோம் உயர்சாதி வெறியர் செய்யும்
கலகத்தை வன்முறையை நாட்டி லெங்கும்
தூண்டுவோரை துணையாக உடன்நிற் போரைத்
தூக்கிலிட்டால் தான் இந்த சாதி சாகும் !