சிறுகதைச் சுருக்கம் 98 : க்ருஷாங்கினியின் ‘படம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 98 : க்ருஷாங்கினியின் ‘படம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




தலைமுறை மாற்றத்தை இடைவெளியை நுட்பமாக கையாண்டிருக்கிறார்,

படம்
கிருஷாங்கினி

அந்த எண்ணம் யாரின் மூலம் முதலில் வெளியாயிற்று என்ற ஆராய்ச்சி தேவையின்றி அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஸ்தூலமாகப் பார்க்க இயலாமல் போன தாத்தாவை படமாக்கிமாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கையால் எழுதுவது தவிர்த்த உருவப்படங்கள் பெரிது பண்ண இயலாமல் இருந்த காலம். ஆதலால் ஒரு நல்ல சிறிய உருவப் படத்தைக் கண்டு பிடிக்க முதலில் ஏற்பாடு ஆயிற்று.

ஒரு குழுப்படத்தில் இருந்து அவரைத் தனித்து பிரித்து எடுத்த அதன் மூலம் உருவ அளவில் ஓவியம் எழுதத் தீர்மானித்து அதற்கான ஓவியரையும் அணுகியாயிற்று. தாத்தாவின் உருவ வர்ணணை அம்மாவின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அவருடைய கண்கள் மிக முக்கியம் என்பதாக ஓவியருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவர் கண் ஊசி மாதிரிக் குத்தும். தப்பு செஞ்சிட்டு அவர் முன்னாலே போக முடியாது. பொய் சொல்ல முடியாது, ஒரு சாயங்காலம். ஒத்தையடிப்பாதைலே அப்பா வந்துண்டு இருக்கார். வர வழிலே பாதைலே ஒரு புலி, கண் இரண்டும் நெருப்புத் தணல் மாதிரி. அப்பா கண்ணும் நெருப்புதான். புலியை பார்த்தபடி அதனோட பார்வையோட தன் பார்வையை இணைச்சுத் தைச்சுட்டார். தன் காலை பின்புறமாக வச்சு வச்சு வந்த வழியே காலாலே விழிங்கிண்டு வரார். புலி அப்பாவோட பாதையைத் தன் காலாலே விழிங்கிண்டு முன்னே முன்னே வரது. இப்படியே மெதுவா நடந்து ஊர் எல்லைக்குக் கொண்டு வந்தார் அந்தப் புலியை. மனுஷாளப் பார்த்த புலி மிரண்டது. புலியை அப்பாவோட பார்த்த மனுஷா மிரண்டால் புலி திரும்பி காட்டைப் பார்த்து ஓடிடுத்து. கண் அப்படி இருக்கணும், ஈர்க்கணும்.

இது போல பல அத்யாயங்கள் தாத்தா சம்பந்தப்பட்டவர்கள் மூலம்.

படம் எழுதி முடியும் வரை எங்களுடனேயே தங்க ஓவியரும் இசைந்தார். வீடு மஹா பெரியது, அவரின் இருப்பு மற்றவர்களைப் பாதிக்காது. ஆனால் அவரால் செய்யப்படுவது மற்றவர்களை அதிகம் பாதித்தது. அவரின் அறையில் அந்த வீட்டுக்குப் புதிதான ஆயில் மணம் தொடக்கத்தில் ரசம் குழம்பில் காபியில் துணிகளில் என்பதாக அனைத்திலும் முன்னின்று தொந்தரவு செய்தது. தெரியாமல் ஒரு நாள் பழகிவிட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. படத்தின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் கண்டுபிடிக்கப் போட்டி வைக்கப்பட்டது. பள்ளியில் இருந்து நேரே வீட்டிற்கு வரவைத்தது. அந்த அறைக்குள் நுழைவது புனிதம்போல் பட்டது, இரவில் பயமாக இருந்தது நுழைய, அதில் நுழைந்து வெளிவரும் ஓவியர் மஹா பலசாலி எனத் தோன்றினார்.

முடிவாக ஒரு நாள் படமும் முடிக்கப்பட்டது. ஓவியத்தை மாட்டுவது பற்றி இடம் பற்றி திரும்பவும் ஒரு முறை கலந்து ஆலோசிக்கப்பட்டது. எல்லோராலும் படம் பெரியவர் போல இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அனைத்துச் சிறுவர்களுக்குமே அந்தப் படம் என்னவோ பயத்தை உண்டு பண்ணியது. அமானுஷ்யம் பற்றிய பயம். சிறுவர்கள் அனைவருக்கும் அந்தப் படம் இருந்த இடத்தில் தனியே நிற்க சிறிது நேரம் அதை தொடர்ந்தாற்போல உற்றுப் பார்க்க முடியாது. அந்தப் பெரிய கூடத்தில் நான்கு பக்கச் சுவரின் தொடரில் வாசல் கதவிற்கு நேரே வீட்டின் பின்கட்டைப் பிரிக்கும் சுவரின் நடுவில் படம் மாட்டப்பட்டது. வாசலில் படி ஏறுவதிலிருந்து பின்கட்டு வரும்வரை பல நிலைப்படிகள் கடந்து வரும்வரை அந்த ஓவியம் வருபவரை கூர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கும்.

பகல் வானத்தை நோக்கி கண்மூடிக் கொண்டு கிடக்கும் போது இமைகளுக்குள் ஏற்படும் மிக மிருதுவான மென்மையான சமமான பரந்த சிவப்பு அந்தக் கூடத்தின் தரையில் இருக்கும், அதன் நடுவில் பெரிய தாமரைப்பூ மலர்ந்து இருக்கும். மலர்ந்த தாமரையில் நடனம் ஆடிக்கொண்டு இருக்கும் போது மிகத் திரளான மக்கள் நாற்புறமும் நின்று நடனத்தில் நளினத்தையும் இசையைன் இனிமையையும் எனது அழகையும் பாராட்டி வியப்பதாக கற்பித்து மகிழ்வேன்.

அந்தப் பெரிய காலியான கூடத்தில் அந்த நீள சதுர படம் மாட்டப்பட்டுவிட்ட பின் நாற்புறமும் சுழன்று முன் போல பாடிக்கொண்டு ஆட முடியாதவாறு போயிற்று, அந்தக் கூடத்தில் காலையில் மாலையில் வெயில் சுடர் பட்டு மாரிச்சன் தங்கமென மின்னி இளம் மனதில் குதூகலம் நிரம்பி வழிய வைக்கும். ஆனால் படம் மாட்டிய பின் கண் விழிக்க முதலில் படுவது ஜன்னல் தவிர பெரிதான படத்தின் நீள் சதுரம் கண் விழிக்கும் முன்பே பயப்படுத்தும் கூர்மை.

அந்தக்கூடத்தின் மங்கிய ஒளியில் மனம் மிரண்டு அம்மாவின் அருகில் இடம் தேடும். அம்மாவின் தொடல் தேவை ஏற்படும். “பயம்மா இருக்கும்மா.” “ச்சி என்ன பயம் தாத்தா பாரு நம்மோட இருக்கார் அவர் இருக்கற இடத்திலே பயம் அப்படீங்கற வார்த்தையே கிடையாது. தாத்தாவை நெனச்சுண்டே தூங்கு.” பயமே படத்தால்தான் என்று எப்படிப் புரிய வைப்பது ?

ஒருநாள் வயிற்று வலி, மருந்து கொடுத்த பின் தாத்தா படத்தின் முன் விபூதியும் இடப்பட்டது. அதுவே பின்னால் மருந்துக்கு முன்பும் பின்பும் செய்யும் சடங்காயிற்று. சில புரியாத வெளியாக முடியாத பிரச்சினைக்கு சத்யம் வாங்கிக் கொள்ள சாட்சியாயிற்று அந்தப் படம். சத்தியத்தின் காரணம் பொய்யின் பின் விளைவுகள் பற்றின பயம்தான். எது எப்படியோ மிகப் பெரிய அந்த அகலக் கூடத்தின் பிரதிபலிப்பாக எப்போதும் கூட்டம் கொண்ட விசேஷம் போன்ற வாசனையையும் அந்தப் படம் அதிகம் ஆக்கிக் காட்டியது.

தலைமையில் மாற்றம். தலைமை வேர் செயலிழந்து பக்க வேர்களில் பலம் அதிகமாயிற்று. மேடு பள்ளமற்ற சமமான மேல் தளம் சமமான தரை மிகச் சமமான சுவர்களின் இடையே சமமான கலர் கண்ணாடிச் சதுரங்கள் எல்லாம் இல்லாமல் ஆயிற்று. நிரந்தரம் என்று எண்ணி அதிக நேர யோசனைக்குப் பின் மாட்டப்பட்ட பெரிய நீள் சதுரமான அந்தப் படமும் கழற்றப்பட்டது. நிகழ்கால இருப்பிடத்தில் மல்லாந்து படுத்தாலும் தெரியும் சிறு கண்ணாடி வண்ணமற்று. சிறிய சதுரமாக வீட்டில் நடுவே வெளிச்சத்திற்காக தரையில் சிவப்புத்தான். ஆனால் இது செங்கல் சிவப்பு.

வீடு கூடம் என்ற வார்த்தைகளின் அர்த்தமே அகலமான என்பது இல்லாமல் அதன் அர்த்தமும் அகலமும் மிகக் குறுகியதாக ஆயிற்று. அந்த அகலமான நீள் சதுரப்படம் மாட்ட நிகழில் சுவர் இல்லாமல் போனது மட்டும் அல்லாமல் அதன் இருப்புக்கே இடம் இல்லாமல் போனது. மிகப் பெரிதாகத் தோற்றம் அளிக்கவாரம்பித்தது. படுக்க வைக்கவும் அகலமற்று நீட்டி மாட்டவும் சுவரற்று சாய்த்து வைக்கவும் இடமற்றுப் போயிற்று. வீட்டில் அது துருத்திக் கொண்டே நின்றது.

காலத்தின் அதிக நேரம் ஆட்கொண்டிருக்கும் உணர்வுகளான எரிச்சல் ஏழ்மையைப் பெரிதாக்கிக் காட்ட அந்த நீள் சதுரம் அடிக்க வடிகால் ஆயிற்று. அந்த நீள் சதுரத்தின் இடம் ஒவ்வொரு படியாக இறங்கி கடைசிக் கட்டுக்குச் சென்றது. அதற்கு இரண்டு கால்கள் பொருத்தப்பட்டன. தனிமைத்தேவை காரணமாகவும் அதற்கு ஒரு உபயோகம் கருதியும் அதை மறைப்பாகப் பயன்படுத்தத் தொடர்கினர்.

இவ்வளவில் அதன் துணிப் பரப்பில் பலதரப்பட்ட நீண்ட கீரல்கள் ஆங்காங்கே துளைகள் ஏற்பட்டு விட்டிருந்தன. கால்கள் நட்டுத் தடுப்பான பின்பும் துணியின் துளைகள் காரணமாக தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் மறுபடியும் காலுடன் கூசி எரிச்சலாக நின்றது.

பின் இருக்கும் நீர்த்தோட்டியில் அடிக்கடி தூசி நிறைந்து நீரை உபயோகிக்க முடியாமல் செய்தது காற்று. ஒரு சிறிய குருவி அதில் விழுந்து இறந்தது. காக்கைகள் அடிக்கடி திறந்த நீர்த்தொட்டியில் முங்கி நீர் அருந்தின. மீண்டும் நீள் சதுரப்படம் காலற்றதாயிற்று. தொட்டியின் நீரின் சுத்தத்தைப் பாதுகாக்கும் தடுப்பாக பறவைகளின் தாகத்தையும் தடுத்து குறுக்காக வைக்கப்பட்டது. ஓவியம் நீரைப் பார்த்து மூடப்பட்டிருக்கும் போது அதில் படும் நீர்த்திவலைகள் அதில் ஒட்டாமல் வெயில்படும்போது மின்னிக் கொண்டு இருக்கும். படத்தின் பின்புற வெள்ளைப் பகுதி நீரில் படுவதல் ஈரம் தாக்கி துணியின் நிறம் மாறுபட்டு பழுப்பாயிற்று.

நாளடைவில் துணி முற்றுமாய் கிழிந்துவிட அந்த நீள் சதுரப்படம் எதற்கும் உபயோகமற்று நீரில் ஊறி முகம் மாறி உடல் மாறி உளுத்துப் போன நிலையில் கட்டைகள் கழற்றப்பட்டு இந்த துணி அகற்றப்பட்டு தீக்கிரையாகிக் கரியாகின.

கணையாழி – அக்டோபர் 1990

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

நூல் பதிப்புரை : ந.செல்வனின் ’ஒளிப்படக் கலையும் கலைஞனும்’ – ப.ஜீவகாருண்யன்

நூல் பதிப்புரை : ந.செல்வனின் ’ஒளிப்படக் கலையும் கலைஞனும்’ – ப.ஜீவகாருண்யன்




வித்தியாசமானதொரு நூல் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒளிப்படக் கலை மீது காதல் கொண்ட இளைஞர் ஒருவர் அந்தக் கலை மீதான தீராக் காதலுடன் 36
ஆண்டுகள் அளவில் நிகழ்த்தியிருக்கும் நெடும் பயணத்தில் அடைந்த அரிய அனுபவங்களை, வாசிக்கும் நெஞ்சம் வியப்புற அளவற்ற தரவுகள்-தகவல்களுடன் சுய
வரலாறாகச் சொல்கிறது இந்த நூல்.

பிறந்தது சேலம் மேச்சேரி அருகில் ‘அமரம்’ என்னும் சிறிய கிராமத்தில். வாழ்க்கைத் துவக்கம் பொறியாளத் தந்தை (சுரங்க நகரம்-நூலாசிரியர் நடேசன்) மற்றும் தாயுடன் ஆறுமாதக் குழந்தையாக நெய்வேலியில். பள்ளிக் கல்விக் காலத்திலேயே தெரிந்தவரின் பழைய கேமராவில் படமெடுத்துக் கழுவிய பிலிம்களில் காட்சிகளில்லா உண்மையில் துவளாத இளைஞர், கும்பகோணம் நுண்கலை ஓவியக் கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டில் 1984ல்-தந்தையிடம் வலியுறுத்தி 750 ரூபாய் விலையில் பழைய 100 /. Manual ZENITH கேமராவைச் சொந்தம் கொள்கிறார்.

‘இவ்வுலகை ஒவ்வொருவரும் வெவ்வேறு பார்வையில் பார்க்கிறார்கள். பெரும்பாலோர் வெறும் பார்வையாளராகவே இருந்து விடுகின்றனர். அதில் இவ்வுலகைப் பார்த்து, இரசித்து, உள்வாங்கி அதைக் கலைவடிவமாக எவன் வெளிப்படுத்துகிறானோ அவனே கலைஞனாகிறான்.’ என்னும் எண்ணத்துடன் கலைஞரின் கலைப் பயணம் துவங்குகிறது.

கல்லூரிக் காலத்தில் தீபாவளி, பொங்கலுக்கு ஆடைகள் வாங்கிக் கொள்ள அப்பா அனுப்பும் பணம் பிலிம் ரோல்களாக மாறுகிறது. மேட்டூர் அருகே கொண்டலாம்பட்டியில் கல்லூரி நண்பனின் அண்ணன் திருமணத்தைப் படமாக்கி பிலிமைக் கழுவிப் பார்க்கையில் காட்சிகளற்றுப் போகும் அவலம் கலைஞருக்கு வாழ்க்கையில் இரண்டாம் முறை நேர்கிறது. திருமண நேரத்துக் காட்சிகளைப் பதிவாக்க இயலாமல் போன குறையில் சில நாட்கள் கழித்து அந்தத் தம்பதியரை இயற்கை வெளியில் அற்புதமாகப் படமாக்கி அவர்களுக்கு வழங்குகிறார். (1988- ல் திருமணம் செய்து கொண்ட அந்தத் தம்பதியரின் மகள் நிச்சயதார்த்த நிகழ்வை 18 ஆண்டுகள் கழித்து விசித்திரத்திலும் விசித்திரம் என்னும் வகையில் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி 2020 ஆம் ஆண்டில் படமாக்கிப் பரவசப்படுகிறார்.) அதன் பிறகு அரங்கக் காட்சிகளிலும் புறவெளிக் காட்சிப் பதிவுகளில் அதிகம் ஆர்வம் கொள்கிறார்.

ஐந்தாண்டு கல்லூரிக் கல்விக்குப் பிறகு நெய்வேலி தனியார்ப் பள்ளியில் ஓவிய ஆசிரியப் பணி கிடைக்கிறது. வேதாரண்யம் ஆற்காட்டுத் துறை அருகே தேத்தாக்குடியில் பெண் அமையத் திருமணம் நிகழ்கிறது. ஓவிய ஆசிரியப் பணியுடன் மனைவி, இரு மகள்கள் ஆன குடும்ப வாழ்க்கையுடன் திருமண நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்ச்சிப் பதிவுகளெனக் கலைஞரின் ஒளிப் படப் பயணம் தொடர்கிறது. விதம் விதமாக கேமராக்கள் மாறுகின்றன. இந்த நூலாக்க நேரத்தில் கலைஞர், ‘இப்பொழுது தன் கைவசத்தில் இருக்கும் கேமராவின் விலை 1.5 லட்சம்’ என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

தனியார்ப் பள்ளியில் அரிதாகக் கிடைக்கும் ஓரிரு விடுமுறை நாட்களில் மேச்சேரி அருகிலிருக்கும் தாய்மாமனின் அமரம் கிராமத் திருவிழாவில் பங்கேற்று அழகு மிகும் கிராமத்துத் திருவிழாக் காட்சிகளைப் பதிவு செய்யும் கலைஞர், புதிய முயற்சியாகப் பள்ளி முதல்வர் அனுமதியுடன் 175 ஆவது உலக ஒளிப்படத் தினத்தில் எம். திவாகரன் என்னும் பள்ளி மாணவனை இயக்குபவராக நின்று காலை முதல் மாலை வரை மாணவன் பதிவு செய்த நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களின் அழகை, மக்களின் வாழ்வியலை நூற்றுக் கணக்கான காட்சிகள் என்னும் அளவில் தொகுப்பாக்க்கியிருக்கிறார்; தொகுப்பாக்கிய அந்த அரிய படங்களைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு, மாணவ- மாணவியருக்குக் கலை விருந்தாக்க்கியிருக்கிறார்; தொடர்ச்சியில் 2013 கால கட்டத்தில் நெய்வேலியில் ஒளிப்படப் பயிற்சிப் பட்டறையையும் நடத்தியிருக்கிறார்.

ஆண்டுதோறும் கிடைக்கும் கோடை விடுமுறை நாட்களில் மனைவியின் பிறந்த ஊருக்கு அருகிலிருக்கும் ஆற்காட்டுத்துறையின் அழகிய கடற்கரை, கோடியக்கரை, வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி உப்பளங்கள் ஆகியவையும் மலை வேம்பு மரங்களால் ஆன கட்டுமரங்களுடன் கூடிய கடற்கரைக் கிராம மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களின் உழைப்பு மிகு வாழ்க்கையும், ‘நிஜத்தைப் பிரதியெடுக்கும் வேலையல்ல புகைப்படக்கலை’ என்னும் தெளிவுடன் கலைஞரின் காட்சிக் கூர்மையில் அவரது கேமரா வழியில் செழுமை கொள்கின்றன.

‘தமிழகத்தின் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிப்பது வேதாரண்யம் (திருமறைக்காடு). திருமறைக் காட்டின் கடற்கரையை ஒட்டியுள்ள சுமார் 11,000 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ள உப்பு வயல்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி, கடுநெல்வயல் போன்ற கடற்கரைக் கிராமங்களில் பெரும்பாலான உப்பு வயல்கள் அமைந்துள்ளன. / சுமார் 25,000 தொழிலாளர்கள்

உப்பள வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். ஓர் ஆண்டின் அதிகப்படியான உப்பு உற்பத்தி, வேதாரண்யத்தில் 4.5 லட்சம் டன், குறைந்தது 3.5 லட்சம் டன்னாகும். / பரந்து விரிந்து கிடக்கும் இந்த 11,000 ஏக்கர் உப்பளத்தில்300 ஏக்கர் நிலம் 700 விவசாயிகளுக்குச் சொந்தமானது. மீதம் உள்ள நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.’

‘1930- ஏப்ரல் 30-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக உப்புச் சத்தியாகிரகம் என்னும் பேரில் காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட காலத்தில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் உப்புச் சத்தியாகிரகம் நிகழ்ந்தது.’

‘நெய்வேலி நகரம் 35 சகிமீ பரப்பு கொண்டது. இதில் 30 வட்டங்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ச.கிமீக்கும் சற்றுக் குறைவு. மொத்தம் 365 சாலைகள். ஒவ்வொன்றுக்கும் ஊசி முதல் பல உலக நாடுகள் வரை பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஒரு சாலையைப் பார்க்க வேண்டுமென்று வைத்துக் கொண்டாலும் எல்லா சாலைகளையும் பார்க்க ஒரு வருடம் ஆகிவிடும். இங்குள்ள இரட்டை வழிச் சாலைகளின் மொத்த நீளத்தை அளந்தால் 130 கிலோ மீட்டரும்
உட்சாலைகள் அல்லது கிளைச் சாலைகளின் நீளம் 320 கி.மீ நீளத்திற்கு வரும்.

1950- களின் பிற்பகுதியில் நிலக்கரிச் சுரங்கத்தின் கட்டமைப்பைப் பார்வையிட ஜெர்மன் சென்ற நெய்வேலி அதிகாரிகள், அங்கே அமைக்கப்பட்டிருந்த நகர அமைப்பை மாதிரியாகக் கொண்டு சீனிவாசன் (Civil Engineer- Tech & Works) தலைமையில் 1957-ல் நெய்வேலி நகரம் அமைக்கப்பட்டது. நெய்வேலியில்
திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரங்களில் நெய்வேலியும் ஒன்று. (பக்கம் – 117, அத்தியாயம்- ‘மழைக்கால நெய்வேலி நகரம்’)

இப்படி நூலின் அத்தியாயத் தலைப்புகளின் அவசியத்திற்கேற்ப குறிப்பிட வேண்டியவற்றைப் பதிவு செய்திருக்கும் பாங்கு, நேற்றும் இன்றுமாகக் கலைஞர்களுக்கு ஒளிப்படக் கலையில் உதவும் கேமராக்கள் குறித்த தகவல்கள், ஒளிப்படமாக்கலைக் குறித்து உலகப் புகழ் பெற்ற பல அறிஞர்கள் கூறியிருக்கும் அரிய கருத்துகள், தனது மனம் கவர்ந்த காட்சிகள் குறித்து கவித்துவமான வர்ணனைகள் எனப் பன்முக முனைப்பில் வாசிப்பவரை நூலாசிரியர் மிகவும் வியப்பிலாழ்த்துகிறார்.

மனவெளிப் பயணங்கள் எனத் துவங்கி, பெருந்தொற்று (கோவிட்19) இரண்டாம் அலையும் ஒளிப்படக் கலையும் என 28 அத்தியாயங்களைக் கொண்டிருக்கும் நூலில் அத்தியாயங்களின் தலைப்புக்கேற்ப ஆசிரியரின் ஒளிப்படக் கலைத்திறனைப் பறைசாற்றும் வகையில் 82-பக்கங்களில் அரிய- அழகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.

நூலுக்கு அழகு சேர்க்கும் அந்த அரிய படங்களில் அகரம் திருவிழாவில் ஆசிரியர் பதிவு செய்துள்ள பல காட்சிகளில், இரு சின்னஞ் சிறு மகள்கள் கேட்கும் மிக மலிவான பொருளையும் வாங்கிக் கொடுக்க முடியாமல் பரிதவித்து நிற்கும் ஏழைத் தாய் குறித்த ஆசிரியரின் விளக்கத்துடன் கூடிய காட்சிப் பதிவு, களத்தில் ஊடாடி, காட்சிகளை உள்வாங்கிப் படைப்புகள் வழங்குவதில் புகழ் பெற்ற ராஜம் கிருஷ்ணன் அவர்களின் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்த ‘கரிப்பு மணிகள்’ (இந்த வார்த்தையை நூலாசிரியர் செல்வன் உப்பளத் தொழிலாளரின் வாழ்வியலை விளக்கும் பகுதியில் ஓரிடத்தில் பொருத்தமுறக் கையாண்டிருப்பது மிகவும் கவனம் கொள்ளத் தக்கதாக உள்ளது) புதினத்தை நினைவுபடுத்தும் வகையில் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் கொளுத்தும் வெய்யிலில் உப்பளங்கள் மற்றும் உப்புக் குவியல்களுடன் வாழ்க்கையை சுழற்றும் ஆண், பெண் தொழிலாளர்கள் குறித்த பதிவுகள், நெய்வேலி நகரத்தின் மெயின் பசாரில் ஆலமரத்தின் கீழ், மழை நாள் ஒன்றில் சுற்றுப்புறத்தை மறந்தவராகக் குடை தைப்பதில் கவனத்தைச் செலுத்தியிருப்பவரின் காட்சிப் பதிவு போன்றவற்றுடன் ஆற்காட்டுத் துறைப் பகுதியில் பட்டா பட்டி அரைக்கால் சட்டை, தலைப்பாகையுடன் வற்றி வாடிய தேகத்துடன் சக்கரம் சுழற்றும் ஏழைக் குயவர், கோவணம், தலைப்பாகைக் கோலத்துடன் சேற்று வெளியில் கலப்பை- நுகத்தடியைச் சுமந்து செல்லும் விவசாயி, கதவற்ற ஓலைக் குடிசையின்

உள்ளமர்ந்து படுத்த வாக்கில் முகமுயர்த்தித் தன்னைக் கூர்ந்து நோக்கும் நாயைக் கனிவுடன் நோக்கும் எளிய மனிதர் எனக் கலைஞர் செல்வனின் கூர்ந்த கவனத்தில் உருவாகியிருக்கும் ஒளிப்படக் கலைக் கொடையை வரிசைப்படுத்தி நிறையச் சொல்லலாம்.

நூலாசிரியரின் ஒளிப்படக் கலை முன்னோடியான நெய்வேலி ஆழ்வார், ஒளிப்படக் கலைப்பயணத்தில் உடன் பயணித்த-பயணிக்கும், உடன் நின்று உதவிய-உதவும் நண்பர்கள் குறித்த தகவல்கள் கும்பகோணம் நுண்கலைக் கல்லூரியில் படிக்கும் நாட்களில் திரைப்படங்களில் சாதிக்கும் மோகத்துடன் நண்பருடன் திரைக் கலைஞர் பாக்யராஜ் அவர்களைச் சந்திக்கக் காத்திருந்து (பாக்யராஜ் அறையிலிருந்த நிலையிலும்) அவரைப் பார்க்காமலே திரும்பியது குறித்த தகவல், நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் வெளியீடு செய்யும் நிகழ்வின் வழியில் ஒளிக்கலைஞர் மற்றும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்களுடன் தனது குறும்படங்கள், ஆவணப்படங்கள் குறித்து அளவளாவியது – பாலு மகேந்திரா பாராட்டியது பற்றிய தகவல் என நூலில் ஆசிரியரின் கலைப்பயண அனுபவங்களாக ஏராளம் செய்திகள் விரவிக் கிடக்கின்றன.

நூலில் வகுப்புத் தோழர் நெய்வேலி மருத்துவர் அ.செந்தில் அவர்களின் உதவியுடன் தமிழறிஞர் இரா.இளங்குமரனார் குறித்து 82 நிமிடங்கள் நீட்சி கொண்ட ஆவணப்படத் தயாரிப்பைத் தமிழறிஞரின் வாழ்விடத்தில் ( திருச்சி கரூர் சாலையில் முக்கொம்பு அருகில் அல்லூர்) ஏழு – ஏழு மாதங்கள் இடைவெளியில் மூன்று சந்திப்புகள் மூலம் இயக்கி முடித்த தகவல் பதிவை வாசிக்கையில் வியப்பேற்படுகிறது. தொடர்ச்சியில் நூலாசிரியர் இதுவரை இயக்கியிருக்கும் குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களின் பெயர்கள்- நிழல் சலனங்கள் (2005) குறும்படம் 10 நிமிடங்கள், வானவில் நாட்கள் (2006) 20 நிமிடங்கள், தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் வாழ்வும் பணியும் (2007) ஆவணப்படம் 82 நிமிடங்கள், இருட்டறை வெளிச்சங்கள் (2008) ஆவணப்படம் 20 நிமிடங்கள், ஆசிரியைக்கு அன்புடன் (2009) ஆவணப்படம் 46 நிமிடங்கள், ஒரு சிற்பத்தின் கதை (2010) ஆவணப்படம் 15 நிமிடங்கள், திரு குறிஞ்சி வேலன் குறித்த ஆவணப்படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தொகுப்பாகக் காத்துள்ளது-என்று நூலாசிரியரின் ஒளிப்படத் துறை சார்ந்த உழைப்பை வெளிச்சப்படுத்தும் வகையில் வரிசை கண்டுள்ளன.

ஆங்கிலக் கலை இதழ் மிரர், ஜூவி, விகடன் மற்றும் பல பத்திரிகைகளில் ஒளிப்படப் பங்களிப்புச் செய்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றிருக்கும் கலைஞர் ந.செல்வன், ‘ஒளிப்படக்கலை சிறப்புற கலைஞர்களுக்கு காத்திருத்தல் தவம் மிகவும் அவசியம்’ என்கிறார். கூடவே, இன்றைய காலச் சூழலில் ஒளிப்படத் துறையில் தமிழக அளவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான அளவில் செயல்படும் கலைஞர்களின் நிறை-குறைகள் மற்றும் அவர்களின் வாழ்வியல்-பொருளாதார நிலை குறித்தும் அரிய கருத்துகளை வழங்குகிறார்.

304 பக்கங்கள் அளவில் விரிவு கொண்டிருக்கும் நூலில் நூலின் கருப்பொருளுக்கு இசைந்து சேர்க்க வேண்டிய அவசியத்தில் ஊருணி நீர் நிறைந்தற்றே, இருட்டறை வெளிச்சங்கள், கற்றது கையளவு, யாதுமாகிய ஒளி, உப்பள ஓவியங்கள் போன்ற கவித்துவமான தலைப்புகள் வாசகரின் கவனத்தைக் கூர் தீட்டும் வகையில் அழகுற அமைந்துள்ளன. ‘ஒளிப்படக் கலையும் கலைஞனும் மனசாட்சியும்’ என்னும் அத்தியாயத்தின் வழியில் ஒளிப்படக்கலையில் உழைப்பால்

உயர்ந்துள்ள கலைஞர் வசந்த குமாரை முன் வைத்து, ‘சமூக அக்கறையுடன் இயங்கும் ஒளிப்படக் கலைஞன் தன் காலத்தை மீறி நிற்கும் சக்தியைப் பெற்று விடுகிறான்’ என்று நூலாசிரியர் சொல்லும் கருத்து அவருக்கும் நூற்றுக்கு நூறும் பொருந்தும் என்பதைத் தெள்ளென உணர முடிகிறது.

ராஜஸ்தான் மாநிலம் சிரோகியில் நண்பருடன் சேர்ந்து செய்த சேட்டு வீட்டுத் திருமணப் பதிவு நிகழ்வு உட்பட நூலாக்கக் காலம் வரையில் 300 சுப நிகழ்வுகளை மற்றும் 1250 க்கும் அதிகமாக ‘விஷுவல்’ படங்களைக் கேமரா வசமாக்கி மக்களுக்குக் கலை விருந்தாக்கியிருக்கும் கலைஞர் ந. செல்வன், இந்த நூலின் வழியில் தன்னைப் போல் தமிழக அளவில் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கும் ஒளிப்படக் கலைஞர்கள் பலரை வாசகர் நமக்கு அடையாளப்படுத்துகிறார்; நூலாக்கக் கால அளவிலும் தன்னையொத்த அந்தக் கலைஞர்களுக்கென நல வாரியம் ஒன்றில்லாத குறை குறித்துக் கவலைப்படுகிறார்.

குஜராத் கலவரத்தின் போது உறவினர்களை இழந்த இஸ்லாமிய இளைஞன் கண்ணீர் மல்க கையெடுத்துக் கும்பிட்டு அழும் காட்சி, சுனாமியின் சீற்றத்தால் மடிந்த உறவின் முன் தலை விரித்தபடி அழும் தாயின் கதறல், கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்து போன 94 இளம் பிஞ்சுகள் குறித்து நூலில் பதிவாகியுள்ள கலைஞரின் வார்த்தைச் சித்திரத்தை வாசிக்கையில் கலைஞருடன் சேர்ந்ததாக வாசகர் நமது நெஞ்சமும் கலங்குகிறது; கரைந்துருகுகிறது.

தமிழக அளவில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் மற்றும் கும்பகோணம் தாராசுரம் கோயில் ஆகியவற்றின் அழகை ஆராதிப்பவராக இருக்கும் கலைஞர் ந. செல்வன் சாகித்திய அகாதமி விருதாளர் குறிஞ்சி வேலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இருபது ஆண்டுகளாகத் தொய்வின்றித் தொடர்ந்து வெளிவரும் – நல்லி திசை எட்டும்- மொழியாக்கக் காலாண்டிதழின் அட்டைப் படங்கள் மற்றும் அதன் அழகியல் கூறுகளில் செய்துள்ள-செய்து வரும் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.

இலக்கிய ஆர்வலர் வேர்கள் மு.இராமலிங்கம் மற்றும் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம் இருவரும் வழங்கியிருக்கும் முன்னுரை நூலுக்குப் பெருமை சேர்க்கும் பான்மை கொண்டுள்ளன.

அரிய கருப்பொருள், அழகிய படங்கள் கொண்டதாகத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வித்தியாசமான வரவாகியிருக்கும் இந்த ஒளிப்படக் கலையும் கலைஞனும் நூல், ஏற்கனவேம் ஓவியனின் ஒளிப் பயணங்கள், அறியப்பட வேண்டிய ஆளுமைகள் ஆகியவற்றின் ஆசிரியராக அடையாளம் கொண்டிருக்கும் கலைஞர் ந. செல்வன் ஒளிப்படக் கலை மீது கொண்ட காதலின் நல் விளைவு என்பதும் இந்த நூல் வாசகர்களுக்குள் ஒளிப்படக் கலை குறித்து புதிய வெளிச்சங்களைப் புகுத்தும் என்பதும் மிகையற்ற உண்மை.

நூல் மதிப்புரை – ப.ஜீவகாருண்யன்
ஒளிப்படக் கலையும் கலைஞனும்

ந. செல்வன்
பக்கங்கள்: 304,
விலை: ரூ.300/-
வெளியீடு: உயிர் பதிப்பகம்,
4, 5-வது தெரு, சக்தி கணபதி நகர்,

திருவொற்றியூர், சென்னை–600019.
பேசி: 98403 64783,
மின்னஞ்சல்:uyirpublication@gmail.com.

Azhindha Piragu Novel written by Sivaram Karandh in tamil translated by Sithalingaiya book review by Idangar Pavalan சிவராம் காரந்தின் அழிந்த பிறகு | தமிழில்: சித்தலிங்கய்யா - இடங்கர் பாவலன்

நூல் அறிமுகம்: சிவராம் காரந்தின் அழிந்த பிறகு | தமிழில்: சித்தலிங்கய்யா – இடங்கர் பாவலன்




கன்னடத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்த்த சிவராம் காரந்த் அவர்களின் அழிந்த பிறகு என்கிற புதினத்தின் தலைப்பே நமக்குள் ஓர் கிளர்ச்சியை உண்டு பண்ணிவிடுகிறது. அதென்ன அழிந்த பிறகு? எல்லாமும் அழிந்த பின்னால், மனிதனே இல்லாமல் அழிந்து போன பின்னால் என்ன இருக்கிறது? அதற்கான தேடலின் விடையை இந்நாவல் சொல்ல முயன்றிருக்கிறது.

மனிதன் இறந்த பின்பு என்னாவான்? அவன் செய்தவற்றிற்கெல்லாம் மோட்சம் கிடைக்குமா? இறப்பிற்கு பின் மறுபிறவி சாத்தியமிருக்கிறதா? என்கிற தேடல் காலங்காலமாக இருந்து கொண்டே வந்திருக்கிறது. தன் வாழ்வின் மீதான அதீத பற்றின் காரணமாக மனிதனுக்குள் இறப்பிற்குப் பிறகும் சுவர்க்கமோ நகரமோ ஏதோவொன்று வாழ்வதற்குத் தேவையாகிறது. அதற்கு உதவுபவர்களாக கடவுளர்களையெல்லாம் மனிதன் கணக்குப்பிள்ளையாகவே இன்றுவரையிலும் அவன் வைத்திருக்கிறான். ஆனால் இப்புதினம் இறப்பிற்கு பின்பான மனிதனின் மெய்யான வாழ்வின் அர்த்தத்தைத் தேடிச் செல்கிறது. உண்மையில் இதுவொரு பயண நாவலைப் போலத்தான் இருக்கிறது. அதிலேதான் இந்நாவல் நமக்கு கூடுதலான சுவாரசியத்தையும் தருகிறது.

யசவந்த் என்கிற ஒருவரை தன் ரயில் பிரயாணத்தினூடே எதார்த்தமாக சந்தித்துக் கொள்கிற கதைசொல்லிக்கு சில காலத்திற்குப் பிறகாக தந்தியொன்று வருகிறது. “அவசரம், உடல்நிலை சரியில்லை, உடனே கிளம்பி வரவும்” என்று முடிந்த அந்த தந்தியை தாங்கிக் கொண்டு மும்பை செல்வதற்குள் அந்த யசவந்த் மாண்டும் போகிறார். அவர் இறப்பதற்கு முன்பாகவே காரந்திற்கு ஒரு கடிதத்தையும், 15000க்கான(1960களில்) காசோலையையும் பெட்டிக்குள் பத்திரப்படுத்திவிட்டு அதை நல்வழியில் செலவு செய்வதற்கான சில குறிப்புகளையும் வைத்துவிட்டு செல்கிறார்.

அதில் சில நபர்களுக்கு மட்டும் மாதாமாதம் 25 ரூபாய் அனுப்பிவிடவும் அதில் கனிவுடன் சொல்லியிருப்பதைத் தொடர்ந்து இவர்கள் யார், நம் நண்பரின் பின்புலம் என்ன, இவர்களுக்கும் நம் நண்பருக்கும் எத்தகைய தொடர்பு, நண்பர் ஏன் இப்படி யாருமற்று அனாதையாக இறந்து போனார், அவர் வாழ்ந்த வாழ்வுதான் என்ன என்று தேடத் ஆரம்பிப்பதில் இருந்து நாவல் சிறகு விரிக்கத் துவங்குகிறது.

நான் புத்தகம் வாசிக்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில் ஜென் கதைகளில் வருகிற பத்து மாடுகள் பற்றிய வரைப்படமும் அதன் விளக்கமும் என்னை மிகவும் ஈர்த்திருந்தன. ஒவ்வொரு வரைபடத்தின் மூலமும் நம் வாழ்க்கையை இழுத்துப் பிடித்திருக்கிற கண்ணியை ஆராய்ச்சி செய்யும் மெய்யியல் தேடலைத் தூண்டிவிடும் அற்புதத்தை அதிலே நான் பல சந்தர்ப்பங்களில் சிந்தித்துப் பார்த்து உணர்ந்திருக்கிறேன்.

இந்நாவலில் இறந்து போன அதாவது நாவல்படி அழிந்து போன யசவந்த் என்பவர் ஒரு ஓவியர். கோணல் மாணலாக வரையப்பட்ட அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவரின் நாட்குறிப்புகளை வைத்து தேடலைத் துவங்குகிறார் நண்பர் காரந்த். இக்கதையே காரந்த், யசவந்த் அவர்களைப் பற்றிய தேடுவலையும், அவர் வாழ்வு பற்றிய உண்மைகளைக் கண்டறிவதைப் பற்றியுமாகவே இருக்கும்.

மணியாடர் அனுப்பச் சொல்லியிருந்த நபர்களின் பெயர்களெல்லாம் ஏதோ குறியீடு வைத்து அவரது நாட்குறிப்பில் எழுதியவற்றை வைத்து ஏதாவது துருப்பு கிடைக்குமா என்று பக்கங்களை புரட்டியபடியே இருக்கிறார். ஒவ்வொரு பக்கங்களிலும் தன்னுடைய வாழ்வில் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் அதன் வழியே அவர் கண்ட வாழ்வின் அர்த்தங்களையும் குறித்து குறித்து வைத்திருக்கிறார். ஒருகட்டத்தில் தான் மணியாடர் அனுப்ப இருக்கிற மனிதர்களும், அந்த நாட்குறிப்பில் குறியீட்டு வடிவத்தில் இருப்பவர்களும் அவர்களது கதையைத் தான் அவரது ஓவியங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன என்பதையும் ஒருசமயத்தில் காரந்த் கண்டு பிடிக்கிறார்.

இப்படி அந்த ஒவ்வொரு மனிதர்களைத் தேடித் தேடி தனது இறந்து போன நண்பர் யசவந்த் அவர்கள் யார், அவர் வாழ்க்கையின் தேடல் என்ன என்று தெரிந்து கொள்கிற மையம் தான் இப்புதினத்தின் அற்புதமே!

மெலிந்த தாய்ப்பசுவின் பால் சுரக்காத மடியில் கருப்பு நிற எருமைக்கன்று குடிப்பது போலான ஓவியத்தையும், எட்டு வயதிலே விதவையாகிவிட்ட பார்வதியம்மாளிடம் வளர்ப்புப் பையனாக யசவந்த் வளர்ந்த விதத்தையும் ஒருசமயத்தில் பொறுத்திப் பார்க்கிறார். அதில் மடி வற்றிப்போன தாய்ப்பசு பார்வதியம்மாளாகவும் பொருத்தமில்லாத கருப்பு எருமைக் கன்று யாசவந்த்தாகவும் இருப்பதை அவர் நாவலின் வழியே நேரில் சென்று அறிந்து கொள்கிறார்.

அதேபோல மாட்டின் மீது அமர்ந்த மைனா தோலிலுள்ள உன்னியை பொறுக்குகிறேன் என்று கொத்தி அங்கே புண்ணாக்குவது போலவும், மாமரத்தை கொடியொன்று ஒட்டுண்ணியோல சுற்றிப் படர்வதைப் போலவுமான ஓவியங்கள் வழியே பல தேடல்களும் அற்புதமான திறப்புகளும் இந்நாவலின் வழியே நமக்கு கிடக்கின்றன.

இந்நாவலை படிக்கும் போதே ஒரு திரைப்படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது என்று நான் சொல்வது சத்தியமாக பொய்யல்ல. இந்நாவல் மட்டும் திறப்படமானால்??? இப்படியொரு கேள்வி உள்ளுக்குள் ஆரம்பத்திலிருந்து கிளர்ந்து கொண்டேயிருக்கிறது. உண்மையில் இப்புதினம் இதுவரையிலும் படமாகவில்லையென்றால், இனிமேலாவது படமாக்குவது பற்றி திரைத்துரையினர் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

Ganesh: An auto worker who evolved into a multifaceted artist - Pralayan Shanmugasundaram. Book Day is Branch of Bharathi Puthakalayam.

கணேஷ்: பன்முகம் கொண்ட கலைஞனாய்ப் பரிணமித்த ஓர் ஆட்டோ தொழிலாளி

சென்னை கலைக்குழுவின் தொடக்ககால உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விடைபெறுகிறார்கள். முதலில் கே.பி பாலச்சந்தர், பிறகு டி.ஏ.விஸ்வநாதன், தற்போது கணேஷ். ஓர் ஆட்டோ ஓட்டுகிற தொழிலாளியாக இருந்துகொண்டு பன்முகம் கொண்ட கலைஞனாக பரிணமித்த தோழர். கணேஷ் ,2021 மே 4ஆம் தேதி , வடசென்னை…