Aruththu Kattinava Short Story by Natchiyal Suganthi Synopsis 77 Written by Ramachandra Vaidyanath. நாச்சியாள் சுகந்தியின் அறுத்துக் கட்டினவ சிறுகதை - ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 77: நாச்சியாள் சுகந்தியின் அறுத்துக் கட்டினவ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




தான் எழுதுவதற்கு ஓர் அழுத்தமான சமூகக் காரணம் மட்டுமே இருக்கிறது என உணர்ந்தே தான் எழுத வேண்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அறுத்துக் கட்டினவ
                                    நாச்சியாள் சுகந்தி

செல்லம்மாவுக்கு  நுணாப் பழத்தை பிளந்து அதனுள் நாக்கை துலாவி சுவைத்தபோது பாவாடை சட்டைப் பருவம் மனதுக்குள் வந்து குதியாட்டம் போட்டது.  மீண்டும் ஒரு முறை அதே போல் செய்தாள்.  வீட்டில் அம்மா சோறாக்காத பொழுதுகளில் இந்த நுணாப் பழம்தான் கொஞ்சம் வயிற்றுப் பசியை ஆற்றும்.

புள்ளையார் கேணி வயலில் நின்று கொண்டிருந்தவளுக்கு அங்கிருந்து நூறு அடி தூரத்தில் இருக்கும் மண் ரோட்டில் கண்ணம்மா நடந்து போவது தெரிந்தது.  நின்ற இடத்திலிருந்தே குரல் கொடுத்தாள் செல்லம்மா

“எட்டீய கண்ணம்மா, நாளைக்கி எங்க காட்டுல கொழ மெதிக்க வர்றீயா?”

“ஏய் திமிரெடுத்தவளே, நீனு என்னமோ சொல்ற.  வௌங்களடீ.  அவசரமாக வீட்டுக்குப் போறேன்.  அப்புறமாக வீட்டுக்கு வாடீ செல்லம்மா” என்று பதில் சொல்லிக் கொண்டே ஓட்டமும் நடையுமாகப் போனாள்.  

என்னமோ வீட்ல பால் குடிக்கிற கொழந்தைய விட்டுட்டு வந்தமாதிரித்தான் பறப்பாளுங்க என்று முணுமுணுத்துக் கொண்டே நாளைக்கு குழை மிதிக்க யாரைக் கூப்பிடுவது என்று யோசித்துக் கொண்டே தண்ணீர் நிரம்பிக் கிடந்த வயலில் இறங்கி வயல், குழை மிதிக்க தோதாக இருக்கிறதா என்று பார்த்தாள்.  மத்தியான நேரம் என்பதால் தண்ணீர் காலுக்கு இதமான சூட்டில் இருந்தது.  அங்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக முளைத்திருந்த புளிச்சைக்கீரைச் செடியில் இருந்து கொஞ்சம் தழையைப் பறித்து முந்தானையில் போட்டுக் கட்டிக் கொண்டாள்.  

சூரியன் ஆரஞ்சும் மஞ்சளுமாக இருந்தது.  சிவந்திருக்கும் வானம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.  அவள் பிறந்தது இப்படி வானம் சிவந்திருந்த நேரத்தில்தான்.  அவள் பெரியவள் ஆனதும் இதே சிவந்த வான் நேரத்தில்தான்.  அவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறியதும் இதே வான் சிவந்த நேரத்தில்தான்.  வெள்ளந்தாங்கியம்மன் கோயிலில் தாலி கட்டிக் கொண்ட போதும் வானம் சிவந்து இருந்தது.  தன் வாழ்நாளின் நல்ல விஷயங்கள் எல்லாம் வானம் அழகாக இருக்கும்போதுதான் நிகழ்கிறது.

தனக்குத்தானே பேசிக்கொண்டு வந்தவன் வழியில் சின்னப்பாறை இருப்பது தெரியாமல் காலை வைக்க பெருவிரலில் கல் கீற ரத்தம் வந்தது.  சுருக் என வலி எடுக்கவே குனிந்து பார்த்தாள்.  ரத்தம் கொஞ்சம் அதிகமாகவே வழிந்து கொண்டிருந்தது.  சட்டென தரையில் உட்கார்ந்தவள் கையில் கொஞ்சம் மண்ணெடுத்து வழிந்து கொண்டிருந்த ரத்தத்தின் மேல் வைத்து அழுத்தினாள்.  எழுந்து நடந்தாள்.  அப்போது சூரியன் இன்னும் கொஞ்சம் சிவந்திருந்தது.

வீட்டுக்குள் செல்லம்மா காலை வைக்கும் முன்னே திண்ணையில் உட்கார்ந்திருந்த அவளுடைய அம்மா மாரியம்மா அழ ஆரம்பித்தாள்.  “எட்டீயே அந்த தலையாரி வந்துட்டுப் போனான்”.

“ம்..ம்..ம்.. என்ன சொல்றான்?”

“என்ன சொல்வான்.  புள்ளையார் கேணி வயலையும், காட்டயும் அந்த பாவிகளுக்கு எழுதிக் கொடுத்தே ஆகணுமாம்.”  

“கொடுக்காட்டி என்ன பண்ணுவானுங்களாம்?  கொன்னுப்புடுவானுங்களா?  அதுக்கு எதுக்கு நீனு அழுதுகிட்டு இருக்க?  பொம்பளய மெரட்டுனா பயந்து ஒடனே எழுதித் தந்துருவாங்கன்னுதானே அந்த திருட்டுப்பயலுங்க மெரட்டுறானுங்க, வரட்டும் நா பார்த்துக்கிறேன்.”  உள்ளுக்குள் லேசாக பதற்றம் வந்தது.  இவுனுங்களுக்கெல்லாம் பயந்தா இந்த ஊருல வாழ முடியுமா?  எந்த ஊர்லேயோ இருந்து வந்தவனுங்க இந்த பெரம்பலூர் சங்குப்பேட்டயிலயே பெறந்து வளந்த என்ன மெரட்டுவானுங்களா என்று தனக்குத்தானே தைரியம் ஊட்டிக் கொண்டாள்.  

“யெம்மா, யெம்மா” என்று மகன் கூப்பிட இந்த உலகத்துக்குள் வந்தாள்.  

“ஏம்ப்பா பள்ளிக்கூடம் போய்ட்டு வந்துட்டியா?  ஆயா ஏதாச்சும் சாப்பிடக் குடுத்திச்சா” என்று கேட்டுக் கொண்டே மகனின் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டாள்.  பத்தாவது படிக்கும் மகன் அவள் கண்ணுக்கு குழந்தையாகத் தெரிந்தான்.

இந்த பயலுக்காவது இந்த காடுகரையெல்லாம் நா கட்டிக் காப்பாத்தனுமில்ல.  எங்காலத்துக்குப் பெறகு இவன் என்ன பண்ணுவான்.  குந்துறதுக்காவது கையகல நெலம் இருக்கணுமில்ல மகனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே யோசித்து ஏதோ முடிவுக்கு வந்தாள்.

“மாரிமாக்கா, மாரிமாக்கா” காலில் பட்டையான கொலுசும் மின்னும் கல் மூக்குத்தியும் காதில் இரண்டு சரடுடைய மாட்டலும் போட்டிருந்த பெண்ணொருத்தி அலறும் குரலில் கூப்பிட்டாள்.

“என்ன வூடுவரைக்கும் வந்து கூச்சப் போடுற.  அன்னிக்கே சொல்லிட்டேனே காடெல்லாம் கொடுக்கறதா இல்ல.  ஒங்கூட பேச ஒண்ணுமில்ல.  போயிட்டு வரலாம்”  என்று முகத்தில் கடுமையைத் தேக்கி வைத்துக் கொண்டு சொன்னாள்.  

நகர்வதாய் இல்லை.  “ஒனக்கு சொல்றது புரிலயா?  ஒங்காட்ட சுத்தியிருக்குற காடு வயலு எல்லாம் வித்துப்புட்டாங்க.  ஒம்பெரியப்பங்கூட வித்துட்டாரு.  நீ ஒருத்திதான் கெடந்து ஆடுற.”

“இங்க பாரு, எங்க பெரியப்பன் வித்துட்டா நானும் வித்துட்டு சும்மா உக்காந்து ஊருவம்பு பேசிட்டுத் திரிணணுமா?” 

“இப்ப மட்டும் என்ன வாழுதாம்.  கட்டுன புருஷன அறுத்துக் கட்டிட்டு வாழ வெட்டியாத்தானே கெடக்குற.  எதோ ஆளும் பேருமா வாழறவ மாதிரி பேசாத.  ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரு கூடாது.  அவ்வளவுதான் சொல்லுவேன் அப்புறம் ஒன் இஷ்டம்” கடகடவென சொல்லிவிட்டு கொலுசு அதிர அதிர நட,ந்து போனாள்.  

பாவிப்பய, என்ன நல்லபடியா வச்சு வாழ்ந்திருந்தான்னா நாயி பேயி எல்லாம் நாக்குமேல பல்லப் போட்டு இப்படி பேசுமா?  செல்லம்மாவுக்கு தன் கணவனின் நியாபகம் வந்தது.  நீனு எம் புருஷனே இல்லேன்னு அறுத்துக் கட்டிடட்டு வந்திருந்தாலும், ஊரும் உலகமும் அவனை ஒம்புருஷன் ஒம்புருஷன் என்று சொல்வது ஆத்திரத்தைக் கொடுத்தது.  

“செல்லம்மா, நீனு என்னக் கட்டிக்கிட்டா உன்ன எப்படி பாத்துக்குவேன் தெரியுமா?  ஒனக்கு என்ன வேணும்னாலும் வாங்கித் தருவேன் செல்லம்மா எங்க வூட்டுக் குதிர்ல எப்பவும் நெல்லுக் கொறையாம இருக்கும்னா பாத்துக்கோயேன்.  அஞ்ச ஏக்கர் நெலத்துக்கும் எங்க பங்காளிய வூட்டு காட்டுக்கும் எங்க கேணியிலிருந்துதான் பாசனம்.  அதுல ரெண்டு ஏக்கரு வெள்ளந்தாங்கியம்மன் ஏரிகிட்டய இருக்குன்றதால ரெண்டு போகமும் நெல்லுதான்”.  அவன் சொல்ல சொல்ல எப்போதும் நிறைந்தேயிருக்கும் அந்த குதிர்மேல் செல்லம்மாவுக்கு பெரும் காதல் உருவானது.  குதிர்மேலிருந்த காதலை இவன் மேலான காதலாக அவன் நினைத்துக் கொண்டான். 

பச்சபசேலென விரிந்து பரந்து கிடக்கும் வயலும் நிறைந்த கிடக்கும் குதிரும்தான் செல்லம்மாவுக்கு கனவு.  லட்சியமெல்லாம்.  செல்லம்மா பிறந்ததே வயலில்தான்.  மாரியம்மாள் களையெடுக்க போன அன்று அங்கேயே பிரசவ வலி எடுக்க கேணிக்குப் பக்கத்தில் நுணா மரங்களும் சின்ன வேப்பமரமும் சூழ்ந்திருந்த இடத்தில் பிறந்தாள்.  அதனால் என்னவோ அந்த மண்ணைவிட்டு நகர்வரை ஒரு நாளும் விரும்புவதில்லை.  

காதல் வயப்பட்டு ஊரைவிட்டுப் போனதற்குகூட அவன் கூறிய வயல் கதைகள்தான் காரணம்.  ஆனால் பெரம்பலூரில் ஏரிப்பாசனத்தில் விளையும் வயல்போல் இல்லை செட்டிக்குள வயல்.  இருந்தாலும் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட காரணத்தால் கணவனுக்காக அந்த ஊரில் வாழப் பழகினாள்.

நாடகம் போட ஊர் ஊராக திரியும் கணவன் ஒரு நாள் கூட நடிக்கும் ஒரு பெண்ணைக் கூட்டி வந்தான்.  அவள் ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தாள்.  எல்லாம் நடந்து முடிந்தபிறகு சண்டை போட்டோ, ஊரைக்கூட்டி நியாயம் கேட்டோ ஒன்றும் பெரிதாக நிகழ்ந்துவிடப் போவதில்லை என்று முடிவெடுத்து இரண்டு வயது குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு வந்தவள்தான்.  இன்றுவரை அவன் வாசல் மிதித்தது இல்லை.  பெண்களுக்கு வைராக்கியம்தான் கூடப் பிறந்த சொத்து.  அந்த வைராக்கியம்தான் வயலிலும் காட்டிலும் சந்தோஷத்துடன் பாடுபட வைக்கிறது.  

புருஷன் வீட்டை விட்டு வெளியேறியதும், நேரே வெள்ளந்தாங்கியம்மன் கோயிலுக்குப் போய் தாலியைக் கழட்டி உண்டியலில் போட்டாள்.  இன்றுவரை வெறும் கழுத்தாக திரிகிறாள்.  ஆனால் கழுத்தளவு சந்தோஷத்துடன் அவளை வாழ வைப்பது இந்த வயலும் காடும்தான்.  

மாரியம்மாளும் செல்லம்மாளும் அந்த ஏசி ரூமில் ஆங்காரத்துடன் உட்கார்ந்திருந்தார்கள்.   எதிரே சேரில் முப்பது வயதைக்கூட தாண்டாத ஒருத்தர் பிறக்கும்போதே விறைத்திருக்கும் வெள்ளைச் சட்டையுடன் பிறந்தவரைப் போல உட்கார்ந்திருந்தார்.  நெற்றியில் தாழம்பூ வாசமடிக்கும் குங்குமப் பொட்டு.  அதற்குமேல் திருநீறு.  இவனா அடிதடிக்கெல்லாம் போறவன் என்கிற சந்தேகத்தை செல்லம்மாவுக்க உண்டாக்கியது.  

“இங்க பாருங்க நீங்க யாரு என்னன்னு தெரியும்.  செட்டிக்குளத்தில வாக்கப்பட்டு புருஷன விட்டுட்டு ஓடியாந்துட்டீங்க.  வயசுப் பையன் இருக்கான்.  வீணா வம்பு வேண்டாம்.  சொன்ன பணத்த விட நாலஞ்சு லட்சம் கூடத் தர்றென்.  சீக்கிரம் எழுதித் தர வழியப் பாருங்க.”

அவள் கொஞ்சமும் கலங்காமல் “அண்ணே நீ சொல்றதெல்லாம் சரிதா.  ஆனா நா பொறந்து  வளர்ந்ததுல இருந்து அந்த காட்டுலயயும் வயல்லயும்தான் பழியா கெடக்குறேன்.  எனக்கு அந்த காடு, ஒழுவு அடிக்கிறது, கொழ  மெதிக்கறது, நாத்து நடறது,  களையெடுக்குறது, தண்ணி பாய்ச்சுறது, மருந்து அடிக்கிறது, கதிர் அறுக்குறது, களத்துல நெல் அடிக்கிறதுன்னு இது மட்டும்தான் தெரியும்.  வேற ஒண்ணும் தெரியாது.  இப்ப கூட நீனு எனன மெரட்டிட்டு இருக்குற.  ஆனா எம்புத்தியில மனசுல அய்யோ இன்னிக்கு வயலுல கொழ அடிக்கணுமே தழையெல்லாம் அறுத்தாந்து அப்படியே கெடக்குதேன்னுதான் ஓடிட்டி இருக்கு.

உன்ன மாதிரி நானு படிக்கல.  ஊரு ஒலகம் எல்லாம் சுத்தல.  எனக்குத் தெரிஞ்சுது எல்லாம் இந்த வயலும் வெள்ளாமையும்தான்.  இதத்தவிர எனக்கு ஒண்ணும் தெரியாது” என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் சொருகியிருந்த அருவாளை எடுத்தாள்.  அதைப்பார்த்ததும் அவன் மிரண்டான்.  சுழலும் நாற்காலியில் இருந்து ஆத்திரத்தோடு எழுந்தான்.  

“இந்தாண்ணே நானும் எங்க அம்மாவும் சாகத் துணிஞ்சுத்தான் இங்கயே வந்தோம். யார் யாரோ என் வூட்டுகிட்ட வந்தது அவரு அப்படி கொன்னுடுவாரு, இப்படி கொன்னுடுவாருன்னு விதவிதமா மெரட்டிட்டுப் போறாங்க.  அதான் ஏ வூட்டு அருவாளையே எடுத்தாந்தேன். இந்தாங்க கொல்றதுன்னா இப்பயே இங்கயே கொன்னுருங்க” தீர்மானத்துடன் அரிவாளை மேஜையின் மேல் வைக்கும்போது அவளுடைய கருத்த கரங்களின் நரம்புகள் புடைத்திருந்தன. அவள் கண்களிலும் குரலிலும் அசுர உறுதி இருந்தது. இதுவரை அவன் வாழ்நாளில் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் பார்ததேயிராத உறுதியாக இருந்தது.

தினம் தினம் பயந்து பயந்து சாவதை விட ஒருநாள் அந்த சாவை சந்தித்தேவிட்டால் என்ன என்கிற ஆதித்திமிர் அவள் கண்களில் ஜொலித்தது.  அந்த ஜோதிக்கு முன்னால் அவனால் உறுதியாக நிற்கக்கூட முடியவில்லை.

மேற்கில் வானம் அழகாக சிவந்து இருந்தது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.