Posted inPoetry
அமைதி சாலை கவிதை – ச.லிங்கராசு
வெண் புறாவின் சிறகடிப்பு
வீதிகளில் தோன்றட்டும்
புண் பட்ட மன மெல்லாம்
புத்துணர்ச்சிப் பெறும் மெல்ல
கண் கலங்கும் வேளை இனி
காற்றாகப் பறக்கட்டும்
பண் பட்ட மனிதர் கூட்டம்
பாரினிலே பெருகட்டும்
அடக்குமுறை ஆட்டம் இனி
ஆட்டம் காணச் செய்யட்டும்
சொடக்கு போடும் அதிகாரம்
சொரணையற்றுப் போகட்டும்
எடக்குப் பேச்சை எல்லாம்
ஏனிங்கு நாம் கேட்போம்?
மடக்கி வைத்திடுவோம்
மண்ணை நாம் காத்திடுவோம்
ஆயுத சாலை வந்தால்
அழிந்திடுமே ஊர் உலகம்
தாயவள் எண்ணம் கொண்டால்
தரணியில் தங்கும் இன்பம்
தூய நல் கொள்கை கொண்டு
துவங்கினால் அமைதி கொள்கை
பாய்ந்திடும் உலகமெல்லாம்
பரவசம் பொங்கி வரும்
– ச.லிங்கராசு