மூலதனத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு உயிரை பறிகொடுத்த TMB வங்கியின் இளம்ஊழியரின் அகால மரணம்! நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? – மா.சிவகுமார்

மூலதனத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு உயிரை பறிகொடுத்த TMB வங்கியின் இளம்ஊழியரின் அகால மரணம்! நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? – மா.சிவகுமார்

      ஒருவர் "நாள்தோறும் இத்தனை முறை அடித்து இத்தனை அடி நடந்து, இத்தனை தடவை மூச்சுவிட்டு, இவ்வளவு வேலை செய்து, சராசரி ஐம்பது ஆண்டு வாழ முடியும் எனலாம். நாள்தோறும் இன்னும் இத்தனை முறை கூடுதலாய் அடித்து, இன்னும்…
முதலாளித்துவ சகதியிலிருந்து எதிர்காலத்தை வெளிக்கொணர்வோம்  உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பிரகடனம் கட்டுரை – ச. வீரமணி

முதலாளித்துவ சகதியிலிருந்து எதிர்காலத்தை வெளிக்கொணர்வோம் உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பிரகடனம் கட்டுரை – ச. வீரமணி




[சோவியத் யூனியன் தகர்ந்தபின், சர்வதேச அளவில் இயங்கிவந்த சுதந்திரமான தொழிற்சங்கங்களின் சர்வதேச மகா சம்மேளனத்திலிருந்து(International Confederation of Free Trade Unions), வர்க்கப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து, உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (WFTU-World Federation of Trade Unions) 2005 இல் அமைக்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளராக இருந்த கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் மாவ்ரிகோஸ் இத்தனை ஆண்டு காலமும் இதன் பொதுச் செயலாளராக இருந்து இதனை சிறப்பாக நடத்தி வந்தார். இந்தியாவில் இயங்கும் சிஐடியு, ஏஐடியுசி முதலான சங்கங்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற மாநாட்டின் விவரங்கள் வருமாறு]   Let's Uncover the Future From the Capitalist Crisis World Federation of Trade Unions Declaration Article - Ch. Veeramani முதலாளித்துவ சகதியிலிருந்து எதிர்காலத்தை வெளிக்கொணர்வோம்  உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பிரகடனம் கட்டுரை - ச. வீரமணி

எதிர்காலம் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கானது என்றும், தொழிலாளர்களின் போராட்டங்கள் மூலமாக முதலாளித்துவ சகதியிலிருந்து தொழிலாளர்களுக்கான எதிர்காலத்தை வெளிக்கொண்டுவருவோம் என்றும் மே 6-8 தேதிகளில் ரோம் நகரில் நடைபெற்ற உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் 18ஆவது மாநாடு பிரகடனம் செய்துள்ளது. மேலும் அது, உலகத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, வர்க்கப் போராட்டத்தையும் தொழிலாளர் வர்க்க சர்வதேசியத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அது அறைகூவல் விடுத்துள்ளது. மேலும், புரட்சிக் கவிஞன் விளாடிமீர் மாயகோவ்ஸ்கி கூறியதுபோல, தொழிலாளர்களுக்கான எதிர்காலம் தானாக வந்துவிடாது, அதனை முதலாளித்துவ சகதியிலிருந்து வெளிக்கொணர்ந்திட வேண்டும் என்றும், தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்காலம் முதலாளித்துவமாக இருக்க முடியாது என்றும் பிரகடனம் செய்துள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் உலக அளவில் அதிகரித்துள்ள போதிலும்கூட, உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் 18ஆவது மாநாடு நம்பிக்கை மற்றும் ஆர்வத்துடன் கூடிய சூழ்நிலையில் ரோம் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. உலகத்தின் அனைத்து முனைகளிலும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதும், குறிப்பாக இந்தப் போராட்டங்களில் இளைஞர்களும், பெண்களும் கணிசமாகக் கலந்துகொண்டிருப்பதும், நம்பிக்கையை பிரதிபலித்தது. மாநாட்டின் முழக்கமாக, “ஒற்றுமையைத் தொடர்வோம்! நம் தேவைகளைப் பெறுவதற்காகவும், ஏகாதிபத்திய காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராகவும், நம் ஒற்றுமையைத் தொடர்ந்திடுவோம்!” என்பதாக இருந்தது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று இன்னமும் உலகின் பல பகுதிகளில் தொடர்வதால் அது மாநாட்டிலும் பிரதிபலித்தது. மொத்தம் உள்ள 133 நாடுகளில் உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தில் இணைந்துள்ள 93 நாடுகளிலிருந்து 430 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றார்கள். இவர்களில் 330 பேர் நேரடியாகவும், 100 பேர் இணையவழியாகவும் பங்கேற்றார்கள்.

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் கீதம், ஆங்கிலத்திலும், ஸ்பானிஷ் மொழியிலும் பாடப்பட்டதைத் தொடர்ந்து மாநாடு தொடங்கியது. பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஷ் துவக்கவுரையை ஆற்றினார். அவர் தன் உரையில் சமீப காலத்தில் சம்மேளனத்தால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களைப் பதிவு செய்தார். அதன் விவரம் வருமாறு:

“சம்மேளனத்திற்கு தற்போது அனைத்துக் கண்டங்களிலும் உள்ள 133 நாடுகளிலிருந்து 105 மில்லியன் (10 கோடியே 50 லட்சம்) உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்தந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த, திருத்தல்வாத கருத்தியல்களுக்கு எதிராகக் கூட்டாக செயல்பட்டதன் மூலமாகவும், எந்தவொரு பிரச்சனையிலும் விமர்சனம்-சுயவிமர்சனம் என்னும் கொள்கையின் அடிப்படையில் விவாதித்து முடிவெடுத்ததன் அடிப்படையிலுமே இது சாத்தியமானது. இதுவே நம் சொத்து. இதுவே நம் எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஆயுதம். சம்மேளனத்தின் 15ஆவது மாநாட்டில் முன்வைக்கப்பட்ட முழக்கம், ‘செயல்படு (action), செயல்படு, செயல்படு’ என்பதாகும். அதுதான் நம் சம்மேளனத்தை உயிரோட்டமானதாக மாற்றி இருக்கிறது. பல்வேறு பிரச்சனைகள் மீது தொழிலாளர்கள் மேற்கொண்ட செயலூக்கமுள்ள நடவடிக்கைகள்தான் நம் அமைப்பைப் பெரிய அளவில் விரிவுபடுத்திடப் பங்களிப்பினைச் செய்திருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமை இன்றைய காலகட்டத்தில் அவசியத் தேவையாகும். எனினும், ஒற்றுமை என்னும் வார்த்தையை நாம் மட்டுமல்ல, நம் எதிரிகளும்கூட உச்சரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். உதாரணமாக, பாலஸ்தீனர்கள் தங்களுக்கென சுதந்திரமான நாடு வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஒற்றுமையும், சர்வதேச ஆதரவும் கோருகிறார்கள். அதேபோன்றே பாலஸ்தீனர்களை விரட்டியடிப்பதற்குத் தங்களுக்கு ஒற்றுமையும் சர்வதேச ஆதரவும் தேவை என்று இஸ்ரேலும் கோரிக்கொண்டிருக்கிறது. கியூபாவிற்கு ஆதரவாக ஒற்றுமையும் சர்வதேச ஒருமைப்பாடும் தேவை என்று நாம் கூறுகிற அதே சமயத்தில் அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்தியவாதிகளும் கியூபாவைத் தனிமைப்படுத்துவதற்கான ஒற்றுமை வேண்டும் என்கிறார்கள். எனவே ஒற்றுமை என்கிறபோது எப்போதும் யாருடனான ஒற்றுமை என்பதையும், எந்த லட்சியத்திற்கான ஒற்றுமை என்பதையும் கேட்க வேண்டும். ஒற்றுமை என்பது வர்க்க ஒற்றுமையாக இருக்க வேண்டும், தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஏழை விவசாயிகளுடனான, முற்போக்கு சக்திகளுடனான ஒற்றுமையாக இருக்க வேண்டும். முதலாளித்துவ சுரண்டலைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில் சமூக மாற்றத்திற்காகப் போராடும் அனைத்துத் தொழிலாளர்களின் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

மாறாக, சீர்திருத்தவாதிகள் கோரும் போலி ஒற்றுமை, முதலாளித்துவத்தை அழகுபடுத்துவதற்கானதாகும், வர்க்க சமரசத்தைக் கோரும் ஒற்றுமையாகும், ஏகாதிபத்தியத்துடன் ஒருங்கிணைந்த போகவேண்டும் என்று கோரும் ஒற்றுமையாகும். இதற்கு எதிரானதே உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம். இந்த அமைப்பு நடுநிலை வகிக்கக்கூடிய ஒன்றல்ல. இது முழுமையாக வர்க்கப் போராட்டத்தைத் தூக்கிப்பிடிக்கக்கூடிய அமைப்பு. தொழிலாளர் வர்க்கத்தை முதலாளித்துவத்தின் சுரண்டலிலிருந்து விடுவிப்பதற்கான அமைப்பு. அதனால்தான் ஏகாதிபத்தியவாதிகள் உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தைக் கண்டு அலறுகிறார்கள். 1952இல் அமெரிக்கா, இதன் தலைவர் தங்கள் நாட்டிற்குள் வரக்கூடாது எனத் தடை விதித்தது. அதேபோன்று 2018இல் இதன் பொதுச் செயலாளருக்கும் தடை விதித்தது. உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் உழைக்கும் வர்க்கத்திற்கும், வர்க்கப் போராட்டத்திற்கும் உறுதியாக இருப்பதால், அது ஏகாதிபத்தியவாதிகளால் மதிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை, அவ்வாறு அது மதிக்கப்படாததால், சம்மேளனம் அஞ்சப்போவதுமில்லை. சம்மேளனத்திற்கு மூன்றாவது பாதை என எதுவும் கிடையாது.

அநேகமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் நடைபெற்று சில பலன்களையும் எய்தியிருக்கின்றன. இத்தகைய போராட்டங்கள் இல்லாமல் இருந்திருந்தால், தாங்கள் வாங்கிக்கொண்டிருந்த ஊதியத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த இழப்புகளைத் அவை தடுத்திருக்க முடியாது, அது மேலும் அதிகமானதாக இருந்திருக்கும். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாத்திருக்க முடியாது. தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியாது. பணிநீக்கம் (retrenchment) மற்றும் வேலைநீக்கம் (dismissal) போன்றவற்றைக் கணிசமான அளவிற்குத் தடுத்திருக்க முடியாது.

ஆனாலும் இவை எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமான ஆதாயம் என்னவெனில், தொழிலாளர்கள் சாதியை மறந்து, மதத்தை மறந்து, மொழி-இன-பேதத்தை மறந்து வர்க்கரீதியாக ஒன்றுபட்டு நின்று போராடினால் மட்டுமே வெற்றிக்கனியைப் பறித்திட முடியும் என்பதைப் புரிந்துகொள்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாகும்.

முதலாளித்துவ அமைப்பின் வரையறைகளைத் தொழிலாளர் வர்க்கமும், சமூகத்தின் இதர பிரிவினர்களில் ஒருசிலரும் தங்கள் அனுபவங்களின் மூலம் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவேதான் தங்களைச் சுரண்டும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையை மாற்றியமைத்திட வேண்டும் என்கிற உணர்வுமிக்கவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

   Let's Uncover the Future From the Capitalist Crisis World Federation of Trade Unions Declaration Article - Ch. Veeramani முதலாளித்துவ சகதியிலிருந்து எதிர்காலத்தை வெளிக்கொணர்வோம்  உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பிரகடனம் கட்டுரை - ச. வீரமணிஇத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன் உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் 18ஆவது மாநாடு, தன் எதிர்கால லட்சியங்களை வகுத்துள்ளது. இந்த லட்சியங்களில் மிகவும் முக்கியமான ஒன்று, அனைவருக்கும் இலவச சுகாதாரத்திற்கான உரிமை, நாகரிகமான வீட்டு வசதிக்கான உரிமை, தூய்மையான குடிதண்ணீருக்கான உரிமை, உயிர்ப்பாதுகாப்பிற்கான உரிமை, நம்பகமான மற்றும் மலிவான பொதுப் போக்குவரத்துக்கான உரிமை, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்விக்கான உரிமை போன்ற உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளைப் பெறுவதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாகும். இன்றைய தினம் தொழில்நுட்ப வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ள நிலையில் இவற்றை தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமேயொழிய, லாபத்தைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்தக் கூடாது.

எனவே, தொழிலாளர்கள் ஊதியங்களை அதிகரிப்பதற்காப் போராடும் அதே சமயத்தில் வேலை நேரத்தைக் குறைத்திடவும் போராட வேண்டியிருக்கிறது. அதாவது வாரத்திற்கு ஐந்து நாட்கள் 35 மணி நேரம் என்கிற முறையில், வேலை நேரம் இருந்திட வேண்டும். உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தில் இணைந்துள்ள அனைத்து சங்கங்களும் முழு நேர வேலை, நிரந்தர வேலை மற்றும் நாகரிகமான ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கான போராட்டங்களையும், தனியார் மயம், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களையும், பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான போராட்டங்களையும், குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிரான போராட்டங்களையும் தொடர்ந்திட வேண்டும். இத்துடன் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாக விளங்கும் வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களையும் தொடர்ந்திட வேண்டும்.”

இவ்வாறு அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்வதேஷ் தேவ் ராய்

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்வதேஷ் தேவ் ராய் (சிஐடியு) ‘ரோம் பிரகடனத்தை’ மாநாட்டில் அறிமுகப்படுத்தினார். அதன் சாராம்சம் வருமாறு:

“உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் 18ஆவது மாநாடு பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாட்டை மீளவும் தெரிவித்துக்கொள்கிறது. அதேபோன்று கியூபா மக்களுக்கும் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், கியூபாவிற்குப் பொருளாதாரத் தடை விதித்திருக்கும் அமெரிக்காவைக் கண்டிக்கிறது. கவுண்டநாமோவை மீளவும் கியூபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வெனிசுலா, பொலிவியா, பிரேசில் மற்றும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் போராடிக் கொண்டிருக்கும் சிரியா மற்றும் ஈரான் மக்களுக்கும் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஏகாதிபத்திய யுத்தங்களுக்கும் சம்மேளனம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்ததாலும், ஐரோப்பாவில் இருந்த சோசலிச நாடுகள் தகர்ந்ததாலும் இனிவருங்காலங்களில் சர்வதேச அளவில் அமைதி ஏற்படும் என்று கூறியவர்களின் கூற்று எந்த அளவிற்குப் போலித்தனமானது என்பதை காலம் மெய்ப்பித்துள்ளது. ஐரோப்பாவில் யுகோஸ்லேவியாவிலும், தற்போது ரஷ்யா-உக்ரேனுக்கு இடையேயும் யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதேபோன்று ஈராக், ஆப்கானிஸ்தான், மாலி, லிபியா, சிரியா, அஜர்பைஜான் முதலான நாடுகளில் நடைபெறும் யுத்தங்களும் மேற்கண்ட கூற்றுக்களைப் பொய்ப்பித்துள்ளன. இவை அனைத்தும் மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆபத்தை விளைவிப்பது ஏகாதிபத்தியம்தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

உலகில் உள்ள இயற்கை வளங்கள், எரிசக்தி மார்க்கங்கள், துறைமுகங்கள், கடல்கள் போன்ற புவிசார் அரசியல் பகுதிகளைத் தமதாக்கிக்கொள்ள இத்தகைய ஏகாதிபத்திய யுத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ரஷ்யா-உக்ரேன் யுத்தத்திற்கு முடிவு கட்ட வேண்டும். உலகம் முழுதும் யுத்தத் தீயை மூட்டிக்கொண்டிருக்கும் நேட்டோ அமைப்பு கலைக்கப்பட வேண்டும்.

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம், ஒவ்வோராண்டும் செப்டம்பர் 1 அன்று உலக மக்கள் மத்தியில் சமாதானமும் நட்புறவும் பேணுவதற்காக தொழிற்சங்கங்களின் சர்வதேச நடவடிக்கை தினம் (International Action Day of Trade Unions) அனுசரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கிறது. நாஜி ஜெர்மனி இரண்டாவது உலகப் போரைத் துவங்கிய நாள் 1939 செப்டம்பர் 1 ஆகும். அன்றைய தினத்தை இவ்வாறு சர்வதேச நடவடிக்கை தினமாக அனுசரித்திட வேண்டும் என்று முன்பு 1980களில் நடைபெற்ற உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இப்போது மீளவும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.”

ஸ்வதேஷ் தேவ் ராய் முன்மொழிந்த ரோம் பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் 99 பிரதிநிதிகள் பங்கேற்றனர். சிலர் இணைய வழி தங்கள் அறிக்கைகளை முன்வைத்தனர். சிஐடியு சார்பில் ஹேமலதா உரையாற்றினார். ஹேமலதா, ஸ்வதேஷ் தேவ் ராய், இளமாறம் கரீம், அனதி ஷாஹூ ஆகியோர் நேரடியாகவும், கருமலையான் உட்பட 15 பிரதிநிதிகள் இணைய வழியிலும் சிஐடியு சார்பாகக் கலந்து கொண்டார்கள்.

இதேபோன்று ஏஐடியுசி சார்பிலும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

பின்னர் ஐந்து கண்டங்களையும் சேர்ந்த 50 நாடுகளிலிருந்து புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். இதுவரை பொதுச் செயலாளராக இருந்த ஜார்ஜ் மாவ்ரிகோஸ் கௌரவ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் மெவாண்டில் மக்வேயிபா (Michael Mzwandile Makwayiba) தலைவராகவும், சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பாம்பிஸ் கிரிடிஸ் (Pampis Kyritsis) என்பவர் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இத்துடன் இந்தியாவிலிருந்து சிஐடியு-வைச் சேர்ந்த ஹேமலதாவும், ஏஐடியுசி-யைச் சேர்ந்த அமர்ஜீத் கவுரும் துணைத் தலைவர்களாகவும், சிஐடியு-வைச் சேர்ந்த ஸ்வதேஷ் தேவ ராய் மற்றும் ஏஐடியுசி-யைச் சேர்ந்த சி. ஸ்ரீகுமார் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏழுபேர்களைக் கொண்ட நிதிக் கட்டுப்பாடுக் குழுவில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சிஎச்.வெங்கடாசலமும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.