பகத்சிங்- சுகதேவ்- ராஜகுரு| போராளிகள்|Bhagatsingh- Sugadev- Rajaguru

ஏகாதிபத்தியத்திய எதிர்ப்பு போராளிகள் – பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு

இளம் புரட்சியாளர்களின் நாயகனாக போற்றப்படும், தெளிந்த சிந்தனையும்,தீரம் மிக்க போர்குணமும் கொண்ட தோழர் பகத்சிங் அவர்கள், சுகதேவ்,ராஜகுரு என்ற தனது தோழர்களுடன் தூக்கு கயிற்றை முத்தமிட்ட நாள் இன்று. அப்போது அவருக்கு வயது 24. இன்றைய.பாகிஸ்தான்,லைலாபூர் மாவட்டம்,பங்கா எனும் கிராமத்தில், கிஷண்சிங்,வித்யாபதி…
புரட்சியாளர் பகத்சிங் கட்டுரை சிவவர்மா – தமிழில்: ச.வீரமணி

புரட்சியாளர் பகத்சிங் கட்டுரை சிவவர்மா – தமிழில்: ச.வீரமணி



சிவவர்மா
(தமிழில்:ச.வீரமணி)

(பகத் சிங் பற்றி தோழர் சிவவர்மா எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. சிவவர்மா, பகத்சிங்கின் தோழர். அவருடன் இணைந்து வெள்ளையருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். பகத்சிங் கைதான வழக்கில் குற்றவாளியாக இணைக்கப்பட்ட சிவவர்மா வயதில் இளையவர் என்பதற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். பகத்சிங் வரலாறு குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்.)

bhagat singh!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்

1980களில் ஒரு நாள், நான் கான்பூரிலிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து முடித்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அது, பகத்சிங் எழுதிய ‘‘நான் ஏன் நாத்திகன்?’’ ஆகும். ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘இந்த அளவிற்கு ஆழமான விஷயங்களை எழுதக்கூடிய அள விற்கு, உண்மையில் அவன் திறமை படைத்தவனா?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாள ராகப் பணியாற்றுகிறாராம். ஒரு புரட்சியாளன் பற்றி அவர் வைத்திருந்த மதிப்பீடே அலாதியானது. உயரமாக, உறுதிமிக்கவனாக இருப்பான், அவன் மண்டையில் ஒன்றும் இருக்காது, நிறைய வெடிகுண்டுகளும், ரிவால்வர்களும் வைத்திருப்பான், தன்னல மறுப்பும் தைரியமும் கொண்டிருந்தாலும் மனிதர்களைக் கொல்வதில் இன்பம் காணும் பேர்வழி, ரத்த தாகம் எடுத்த அதிதீவிரவாதி. ஆயினும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இளைஞர்கள் அவ்வளவு அறிவு பெற்றிருக்க மாட்டார்கள். இதேபோன்று பலர் புரட்சியாளர்கள் குறித்துச் சொல்லும் கதைகளையே இவரும் இதுவரை கேட்டிருந் திருக்கிறார். இத்தகைய மனிதர்கள் குறித்து இரக்கப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்? ஆனாலும் நம் வீரத்தியாகிகள் குறித்து வேண்டும் என்றே சீர்குலைவுப் பிரச்சாரம் மேற்கொள்வோர் குறித்து நாம் என்ன நிலை எடுப்பது?

ஒரு சமயம், 1950களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப் புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். அதில் ஆசாத் குறித்து ஓர் ஐந்தாறு பத்திகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ‘‘சந்திரசேகர் ஆசாத்’ என்னும் உள் தலைப்பில், ஆசாத் ரத்தம் சிந்துவதிலும், கொள்ளையடிப்பதிலும் நம்பிக்கை கொண் டவன் என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நாடு அவனது போராட்டப் பாதையை ஏற்றுக் கொள்ளாமல் காந்திஜியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும் அதை எழுதிய நபர் குறிப்பிட்டிருந்தார். ஏ.எல். ஸ்ரீவஸ்தவா என்கிற அந்த நபர், புரட்சியாளர்கள் குறித்து இவ்வளவு இழிவாக எழுதியிருந்ததை என் னால் நம்புவதற்கே மிகவும் கடினமாக இருந் தது. இந்த நபர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தயவால், புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகக் கருதப்பட்டவர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று விட்டாலும், அவர்கள் உருவாக்கிய அடிமை கள் அடிமைப்புத்தியுடன் இன்னும் இருந்து வருகிறார்கள் என்பதும், வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய அடிமைப்புத்தி இன்றும் அவர்களை விட்டு நீங்கிடவில்லை என் பதும் இதிலிருந்து தெளிவாகிறது. அதனால் தான் இப்பேர்வழி, புரட்சியாளர்களை ரத்த தாகம் எடுத்த பேய்கள் என்றும், இவர் களுக்கு வாழ்க்கையில் எவ்விதமான கொள் கையும் லட்சியமும் குறிக்கோளும் கிடை யாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.

இதேபோன்ற கருத்துக்கள் பரப்பப்படு வதற்கு நம்முடைய பழைய புரட்சியாளர்கள் சிலரும் காரணமாவார்கள். நம் மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக நம் இளைஞர் களில் சிலர், நம் வீரத் தியாகிகளின் வீரத்தையும், அவர்கள் நாட்டிற்காகப் புரிந்திட்ட வீரசாகசங்களையும் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக, நம் பழைய புரட்சியாளர்கள் குறித்து மிகைப் படுத்தி – பல சமயங்களில் மிகவும் அபத்தமான அளவிற்கு – கதைகளை அளக்கத் தொடங்கினார்கள். உண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கும் இவர்கள் விட்ட சரடு களுக்கும் சம்பந்தமே இருக்காது. எனவே, ஒட்டுமொத்த விளைவு என்பது, அநேகமாக அதே போன்றதுதான். பகத்சிங் உண்மையில் எப்படிப்பட்ட நபர் என்பதை சாமானிய மக்கள் அறிய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பகத்சிங், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவர் என்றும், லாலாஜியைக் கொன்றதற்காக, சாண்டர்ஸ் என்கிற வெள்ளை அதிகாரியைப் பழிக்குப்பழி வாங்கிய வீரர் என்றும்தான் அறி வார்கள். அதே பகத்சிங், பல்வேறு திறமைகள் பெற்றிருந்த ஒரு மாபெரும் அறிவுஜீவி என்பது பலருக்குத் தெரியாது. அதன் காரணமாகத்தான் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த் தப் பகுதியை – அதிலும் குறிப்பாக பகத்சிங் நிலையினைச் சீர்குலைப்பது என்பது பல ருக்கு எளிதாக இருக்கிறது. தங்களுக்கேற்ற வகையில் புரட்சி இயக்கத்திற்கு உருவம் கொடுப்பதற்கு இறங்கியிருக்கிறார்கள். எனவே அத்தகைய சீர்குலைவு நடவடிக் கைகளை எதிர்த்துப் போராடுவதென்பது இன்று நம்முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நம் அனைவரையும் விட பகத்சிங் ஒரு மாபெரும் அறிவுஜீவியாவார். தூக்குக் கயிற்றில் ஏற்றுபவன் அவர் வாழும் உரிமையைப் பறித்தெடுக்க வந்த சமயத்தில் வாழ்வின் 24ஆவது வசந்தத்தை அனுபவிக்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், வாழ்வின் அந்தக் குறுகிய காலத்திற்குள்ளேயே, அரசியல், கடவுள், மதம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்து விட்டார். அவர் புரட்சி இயக்கத்தின் வரலாற்றை, அதனுடைய தத்துவார்த்தப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்து, அவற்றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வந்திருந்தார். பகத்சிங்கை முறையாகப் புரிந்து கொண்டு, சரியாகப் பாராட்ட வேண்டுமானால், அவர் வாழ்ந்த பின்னணியையும் நாம் சற்றே ஆழ்ந்து பரிசீலித்துப் பார்க்க வேண்டியது அவசியம். இதற்கு நாம், புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி வரலாறு குறித்து குறைந்தபட்சமாவது தெரிந்து கொள்வது அவசியம்.

புரட்சி இயக்கத்தை, புரட்சியாளர்களை எவ்வாறு விளிப்பது? பலவிதமான கட்டுரையாளர்கள் பல பெயர்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பயங்கரவாதிகள், புரட்சிகரப் பயங்கரவாதிகள், பயங்கரவாதப் புரட்சியாளர்கள், தேசியப் புரட்சியாளர்கள், அராஜகவாதிகள் – இப்படி எண்ணற்ற பெயர்களில் விளித்திருக்கிறார்கள். இவை எதுவுமே பொருத்தமான சொற்றொடராக நான் கருதவில்லை. புரட்சியாளர்கள் மிகவும் பரவலாக ‘பயங்கரவாதிகள்’ என்றே விளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வேண்டும் என்றே கறை பூச வேண்டும் என்று நினைத்தவர்கள் மட்டுமல்ல, அவர்கள் மீது உளமார மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர்கள் கூட அவ்வாறு விளித்தார்கள். ஓர் இயக்கம் என்பது, தான் ஏற்றுக் கொண்டிருக்கிற அடிப்படைக் கொள்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படையிலேயே அழைக்கப்பட வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது மேற்கொண்ட நடவடிக் கைகளின் அடிப்படையில் அழைக்கப்படக் கூடாது. சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் நடவடிக்கைகளும் மாறுபடும். ஆனால் அடிப்படைக் கொள்கை மாறாது. மேலும், பயங்கரவாதம் என்பது புரட்சியாளர்களின் இலக்காக எப்போதும் இருந்தது கிடையாது. பயங்கரவாதத்தின் மூலமாக மட்டுமே சுதந்திரத்தை அடைந்துவிட முடியும் என்று அவர்கள் எப்போதும் நம்பியதுமில்லை. ஓர் இடைக்கால ஏற்பாடாகத்தான் எதிர்-பயங்கரவாத நடவடிக்கையை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

டாக்டர் ஜி. அதிகாரி மற்றும் சிலர் அவர்களை ‘தேசியப் புரட்சியாளர்கள்’ என்று விளிக்கிறார்கள். இந்தச் சொற்றொடரும் தவறான பொருளைத் தருவதாகவே கருதுகிறேன். இந்தியப் புரட்சியாளர்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் தேசியவாதிகளாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் சர்வதேசியத்திற்கும் சம்பந்தமே இல்லை என்ற கருத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு இத்தகைய சொற்றொடர் ஓர் எளிய ஆயுதமாகக் கிடைத்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது. அராஜகவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் எந்தவிதமான அரசமைப்பையும் ஏற்கவில்லை. புரட்சியாளர்கள், இவர்களின் பார்வையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதுகளில், புரட்சியாளர்கள் ‘வெடிகுண் டின் தத்துவம்’ என்று அழைக்கப்பட்ட அவர்களுடைய அறிக்கையின் மூலமாக, தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரத்துக்காக நிற்கிறோம் என்று பிரகடனம் செய்தார்கள். மேலே குறிப் பிட்ட அனைத்துக் காரணங்களினாலும், இன்னும் சரியான சொற்றொடர் கிடைக்காதத னாலும், நாம் அவர்களை மிக எளிய வார்த்தைகளில் ‘புரட்சியாளர்கள்’ அல்லது ‘இந் தியப் புரட்சியாளர்கள்’ என்றே அழைத்திடலாம்.

பகத்சிங் குறித்து தந்தை பெரியார் கட்டுரை – ச. வீரமணி

பகத்சிங் குறித்து தந்தை பெரியார் கட்டுரை – ச. வீரமணி



(பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும், தந்தை பெரியார் அவர்கள் ‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்)


தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே ! | வினவு

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி அனுதாபங்காட்டாதவர்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம். இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப் பிரதிநிதி திரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கை தூக்கிலிடக்கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறுகின்றன.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படி தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவது, திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்களும் நடைபெற்றன. ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்கின்ற கூச்சல்களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக்கொடிகளும் அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன. இவைகளை யெல்லாம் பார்க்கும்போது, அரசியல் விஷயமாய்ப் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவுமிருக்கிறது.

எது எப்படி இருந்தபோதிலும், திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே, இக்கிளர்ச்சி மக்களுக்கோ, தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே, பகத்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியுமிருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து தேசத்தவர்களில் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார்களும் ‘‘திரு. காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்து விட்டார், சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே தன்காரியங்களைச் செய்கின்றார், திரு. காந்தி ஒழியவேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்’’ என்று ஆகாயமுட்டக் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் நமது தேசிய வீரர்கள், தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல், பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதுபோலவும், பந்தயங் கூறிக்கொண்டு பாறையில் முட்டிக்கொள்வது போலவும் தலை கிறுகிறுத்துக் கண் தெரியாமல் கூத்தாடினார்கள், அதன் பயனாய் சிறை சென்று வீரர்களை ‘‘வாகை மாலை சூடி’’ திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்துவிட்டு, ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நிற்க, நம்மைப் பொறுத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொறுப்பும் கவலையும் அற்ற மூட மக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கௌரவம் கிடைத்தால் போதுமென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு வினாடிதோரும் வேதனைப் பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர் தன் உயிரை விட்டு மறைய நேர்ந்தது, பகத்சிங்கிற்கு மெத்த ‘‘சாந்தி’’ என்றும், நன்மை யென்றுமே கருதுதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடைய முடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.

ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காலமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சிங் கொள்கைக்கு காலமும் இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம், அதுவேதான் உலகத்தின் சாந்தநிலைக் கொள்கையாகும். நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள்தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்து கொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்துகொண்டபடியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லுவோம்.

இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு பகத்சிங்கிற்கு பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது:-‘‘பொதுஉடைமைக் கட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்துகொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்துவிடாது. அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத்திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடையவர் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றோம்.

 ஆகவே இந்தக்கொள்கையானது எந்த சட்டத்தின்படியும் குற்றமாக்கக்கூடியது அல்லவென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடாது என்று உறுதிகொண்டிருக்கின்றோம். அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது, தனி வகுப்புகளிடமாவது, தனி தேசத்தார்களிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக்கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத்தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கின்றது. தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டும், அதுபோலவேதான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதானாக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத்தன்மை பொதுஉடமைத் தன்மை என்பவைகளை ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கைகள்தான் திரு பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாயமானவை யென்றும், அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே, காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது.

திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தீயம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள். இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகும். திரு பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றுகூடச் சொல்லுவோம். சுலபமாக, தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப் பட்டு செத்துச் சாம்பலாகி இருக்க வேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயாரா, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம் !! பாராட்டுகின்றோம் !!!

இதே சமயத்தில் ந்மது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4 பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம்.

(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள குறுந்தகட்டிலிருந்து, வெளிக்கொணர்ந்திருப்பவர்: ச. வீரமணி)

பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்: ச.வீரமணி

பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்: ச.வீரமணி



1. பகத்சிங் பிறந்தநாள் ஆண்டுவிழா:

(பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன)

சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்: ச.வீரமணி)

2020 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 113ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.

விடுதலை நாயகன் பகத்சிங் 2

பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.

தில்லி வெடிகுண்டு வழக்கு

இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.

இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:

சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.

புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):

பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: “எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் – மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மள அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்”

ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத் சிங்! – Malaysiakini

பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர் அவர்களைப் பார்த்து, இந்த முழக்கத்தின் பொருள் என்ன என்று கேட்டார். புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள் என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

 ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக்கொண்டுள்ள இப்போதை சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான். உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமானமுறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது.  ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்

இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.

‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.

இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.

எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.

சுதந்திரப் போராட்ட விடிவெள்ளி பகத் சிங் - Puthiya Vidial, Puthiya Vidiyal

சமூக அமைப்புக்கு எதிராகவே,
எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல

தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …”  “நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

“இந்திய மக்களாகிய நாம்,” என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய  இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.

வகுப்புவாதம் (எதிர்) மதச்சார்பின்மை

1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.

விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து – முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.

இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.

இதற்கு மாற்றுமருந்து என்ன? . ‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். “மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை,” என்று அவர்கள் நம்பினார்கள்.

தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.

மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.”

எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:

“இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர்.  கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.”

Remembering Udham Singh: The avenger of the Jallianwala Bagh Massacreஊடகங்கள்

மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:

“நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.”

“இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில்  வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன.  ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.

“செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், “இந்துஸ்தான் என்னவாக மாறும்?” என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.”        

இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.

Introduction of electoral bond is violation of Constitution: Sitaram Yechury

சமூக நீதி

பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:

“… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் – தீண்டமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது.  அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?”

பகத்சிங், “நான் ஏன் நாத்திகன்” கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!

இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.

பகத்சிங் வாழ்க்கைச் சுருக்கம் கட்டுரை – அ.பாக்கியம்

பகத்சிங் வாழ்க்கைச் சுருக்கம் கட்டுரை – அ.பாக்கியம்



1907 ஆம் ஆண்டு  செப்டம்பர் 28 பஞ்சாப் மாநிலம் லாகூருக்கு அருகில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில் உள்ள பாங்கா என்ற கிராமத்தில் பகத்சிங் பிறந்தார். இவரது தந்தை பெயர் சர்தார் கிஷன் சிங் சாந்து. தாயார் பெயர் வித்யாவதி. இவர் உடன் பிறந்தவர்கள் எட்டு பேர்கள்.

பகத்சிங் பிறந்த காலம், பிறந்த மண், அவனது குடும்ப பாரம்பரியம் அவனுடைய எதிர்கால செயல்பாட்டிற்கு தீனி போடுவதாகவே அமைந்திருந்தது.

பகத்சிங் பாட்டனார் அர்ஜுன் சிங் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். பகத்சிங்கின்  தந்தை கிஷன் சிங்கும் அவருடைய சகோதரர்கள் அஜித் சிங், சுவரண் சிங் ஆகியோரும் பகத்சிங் பிறந்த போது வீட்டில் இல்லை. விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்ததால் பர்மாவின் மாண்டலே சிறையில்  இருந்தார்கள். பகத்சிங் பிறந்து சில தினங்கள் கழித்து அவருடைய தந்தை ஜாமினில் விடப்பட்டு வீட்டிற்கு வந்து தன் மகனை பார்த்தார்.

எனவே பகத்சிங்கின் குடும்ப பாரம்பரியம் விடுதலைப் போராட்ட பாரம்பரியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கிஷன் சிங்கின் சகோதரர் அஜித் சிங் விடுதலை அடைந்த பின்பும் கூட சொந்த ஊருக்கு திரும்ப வில்லை. விடுதலை உணர்வை வெளிநாடுகளில் வலுவடையச் செய்யும் நோக்கத்தோடு மாண்டலேயிலிருந்து நேராக ஜெர்மனிக்கு சென்று விட்டார். மற்றொரு சகோதரர் சுவரன் சிங்  பகத்சிங் பிறந்த அதே ஆண்டு சிறைச்சாலையிலேயே மரணம் அடைந்து விட்டார்.

பகத்சிங் வீட்டு சூழலும் நாட்டுச் சூழலும் அவரை தேசப்பற்று மிக்கவராகவே உருவாக்கி வந்தது. கல்வி என்பது ஒரு மனிதனின் உருவாக்கத்தில் மிக முக்கியமானது.

அவரது தந்தை எனது மகனை சீக்கிய குழந்தைகளுக்கு உரித்தான அந்த கிராமத்தில் இருந்த கால்சா ஹை உயர்நிலை பள்ளியில் சேர்க்க வில்லை. காரணம் அந்த பள்ளி  ஆங்கிலேயருக்கு அடி பணிந்து கிடந்ததால் அந்தப் பள்ளியில் சேர்க்காமல்  லாகூருக்கு அருகாமையில் உள்ள தயானந்த வைதிக பள்ளியில் சேர்த்தார்.

பகத்சிங் தயானந்த உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதுதான் லாகூரின் முதல் சதி வழக்கு (1909-1915) நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த வழக்கைப்பற்றி வெளியிலும் வீட்டிலும் விவாதம் நடந்தது. வழக்கின் முக்கியமாக கருதப்பட்ட கத்தார் சிங் சராபா பற்றி பலரும் பேசினர். 13. 9.1915 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டு 17. 11.1915 அன்று கத்தார் சிங் சராபா தூக்கில் ஏற்றப்பட்டார்

Kartar Singh Sarabha - The Freedom fighter who was Hanged at the age of 19 and inspired Bhagat Singh - Satyaagrah - Online News Portal

உயர்நீதிமன்றத்தில் நீங்கள் ஏன் அப்பில் செய்யக்கூடாது என்று கேட்கப்பட்டபோது எதற்காக நான் அப்பில் செய்ய வேண்டும். எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்கள் இருக்குமானால் அவைகளையும்  என் நாட்டிற்கு தியாகம் செய்யும் பெருமையே என் விருப்பம் என்று கத்தார் சிங் பதில் அளித்தார்.

இந்த தியாகமும் துணிவும் கத்தார் சிங்கின் புகழை உயர்த்தியது மட்டுமல்ல பகத்சிங் போன்ற  இளைஞர்களுக்கு மானசீக வழிகாட்டியாக மாற்றியது.

பகத்சிங் 12 வயதை அடைந்த பொழுது ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடைபெற்றது. 13.4.1919 அன்று அமிர்தசரத்தில் பொற்கோயிலுக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில்  பஞ்சாபின் துணை ஆளுநர் ஓட்வையர் உத்தரவின் பேரில்  ஜெனரல் டயர் தலைமையில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது.  1650 தடவைகள் சுடப்பட்டன. 1000 பேர்கள் கொல்லப்பட்டனர். 2000 பேர்கள் படுகாயம்டைந்தனர். உள்ளே இருந்த கிணற்றில் மட்டும் 120 பேர் விழுந்து மரணமடைந்தனர். பிரிட்டிஷ் இந்தியாவின் சரித்திரத்தில் அது ஒரு கருப்பு நாள் என்று குறிப்பிடப்படுகிறது.

ஆனால் பகத்சிங் போன்ற இளைஞர்களுக்கு அது புதிய வெளிச்சத்தை காட்டியது. 12 வயது நிரம்பிய பகத்சிங்  இந்த படுகொலை செய்தியை கேள்விப்பட்டவுடன் பள்ளிக்குச் செல்லாமல் புகைவண்டி பிடித்து அமிர்தசரஸ் சென்று அந்த இடத்தை பார்த்தான். அந்த இடத்திலேயே உயிரற்றவன் போல் பல நிமிடங்கள் நின்று, ரத்தம் தோய்ந்த  மண்ணை எடுத்து தன் நெற்றியில் பூசிக் கொண்டதோடு கொஞ்சம் மண்ணை எடுத்து சின்ன கண்ணாடி புட்டியில் போட்டுக் கொண்டான். அவன் வீடு திரும்பியதும் உணவு உண்ணாமல் இரத்தம் நிறைந்த மண்ணை பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் அந்த மண்ணிற்கு தினசரி புத்தம் புதிய மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி தனக்கு எழுச்சி ஏற்றிக்கொண்டான் என்று அவனது உற்ற நண்பன் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக 27 ஆண்டுகள் கழித்து லண்டனில் துணை ஆளுநர் ஓட்வையரை பழிவாங்கிய சர்தார் உத்தம் சிங் தெரிவிக்கிறார்.

மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளும் பகத்சிங்னுடைய நாட்டுப்பற்றையும் விடுதலை வேல்வியில் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கியது. அதன் பிறகு படிப்பில் அவனுடைய நாட்டம் செல்லவில்லை. எப்படியோ படித்து மெட்ரிகுலேஷன் வகுப்பில் தேர்வு பெற்றுவிட்டார் அதன்பிறகு தேசிய கல்லூரியில் மாணவராக சேர்ந்தார்.

தேசிய கல்லூரியில்  பகத்சிங்கிற்கு சுகதேவ், பகவதி சரண் வோரா, யாஷ்பால் போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இவர்கள் பகத்சிங்குடன் கடைசி வரை இயக்கத்தில் ஈடுபட்டனர்

கல்லூரியில் பகத்சிங் முதலாம் ஆண்டு வெற்றி பெற்ற பிறகு அரசியலில் முழுமையாக ஈடுபட்டார். இதற்கிடையில் 1923 ஆம் ஆண்டு அதாவது அவரது 16 வது வயதில் வீட்டில் திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். பகத்சிங் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னால், காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சீக்கியர்கள் நடத்திய போராட்டத்திற்கும் தனது உதவியை செய்தார். ஒரு கட்டத்தில் காந்தியாரின் அகிம்சை அரசியலில் நம்பிக்கையற்று பப்பர் அகாலி  என்னும் ரகசிய சங்கத்தில் உறுப்பினராக இருந்து செயல்பட்டு இருக்கிறார்.

மேற்கண்ட நிகழ்வுகளுக்கு பிறகு தான் அவர் முழு நேர அரசியலுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். மீண்டும் பகத்சிங் வெகு மக்களை திரட்டி குறிப்பாக இளைஞர்களை திரட்டி பிரிட்டிஷ் அரசருக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

இதற்காக 1926 ஆம் ஆண்டு தனது 19 வது வயதில் நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த காலகட்டத்தில் தான் ஏராளமான இளைஞர் அமைப்புகள், ஜனநாயக இளைஞர் அமைப்புகள் இந்தியாவில் தோன்றி கொண்டே இருந்தது என்பதை ஜவஹர்லால் நேரு தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்

நவ ஜவான் பாரத் சபாவை உருவாக்குவதற்கு பகவதி சரண் ஓரா, தன்வந்தி மற்றும் பலர் பகசிங்கிற்கு உதவி செய்தனர். இந்த அமைப்பின் முதல் செயலாளராக பகசிங்கும், தலைவராக ராமகிருஷ்ணாவும் கொள்கை பிரச்சார செயலாளராக பகவதி சரண் வோராவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அமைப்பிற்கு அன்றைய தினம் காங்கிரஸில் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் சைபுதீன் கிச்சலு, கேதார்நாத் சேகல், லாலா பிண்டி தாஸ் போன்றவர்கள் ஆதரவாக இருந்தனர்.மக்களைத் திரட்டி விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற முறையினை கைவிடக் கூடாது என்பதை இதன் மூலம் நடத்திக் காட்டினார்.

சுதேசி பொருட்களை வாங்குவது, தேக ஆரோக்கியத்தை காப்பது, சகோதரத்துவம் வளர்ப்பது, இந்திய மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்பட செய்வது, இந்திய இளைஞர்களின் இதயத்தில் தேசபக்தி மற்றும் இந்திய ஒற்றுமை உணர்வை உருவாக்குவது, தொழிலாளர்களை விவசாயிகளையும் அணி திரட்டுவது, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மட்டுமல்ல அனைத்து ஏகாதிபத்திய சக்தியிடம் இருந்து நாட்டை விடுவிப்பது என்று வகையில் தனது அமைப்பின் கொள்கை பாதையை உருவாக்கிக் கொண்டார்கள்.

சபாவின் செயல்பாடு தீவிரமடைந்தது. தியாகிகளுடைய தினத்தை கொண்டாடினார்கள். இளைஞர்களுக்கு வகுப்புகளை எடுத்தார்கள், சபாவின் சார்பில் தேசிய வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. சபாவின் செயல்பாடுகள் லாகூரை சுற்றி இருந்தது விரிவடைந்து பஞ்சாப் மாநில நவஜவான் பாரத்சபா என்று செயல்பட ஆரம்பித்தது பகத்சிங் இந்த செயல்பாடுகள்  ஆங்கிலேயர்களின் கண்னை உறுத்தியது. லாகூரில் தசரா விழாவில் நடைபெற்ற ஒரு குண்டுவெடிப்பை  காரணம் காட்டி கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதிக அளவு ஜாமீன் தொகை கொடுத்து விடுதலை பெற்றார்.

விவசாயிகள் மத்தியில் சபா செயற்பட்டது. கோதுமை சாகுபடி நடக்காததை கண்டித்து 1928 ஆம் ஆண்டு இயக்கங்களை நடத்தியது. செப்டம்பர் மாதம் விவசாயிகள் தொழிலாளர்கள் மாநாட்டை சபா நடத்தியது.

 சபாவின் செயல்பாடுகள் பஞ்சாபில் அதிகரித்துக் கொண்டிருந்த பொழுது நாட்டின் இதர பகுதிகளிலும் இளைஞர்களை திரட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. பகத்சிங் சிந்தனை இவை நோக்கி நகர்ந்தது.

இதே காலத்தில் சோசலிசம் தொடர்பான இலக்கியங்களையும் பகத்சிங் படிக்க ஆரம்பித்தார். நாடு முழுவதும் செயல்படக்கூடிய இளைஞர்களை ஒன்று திரட்டி புதிய அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டினார்.

ஏற்கனவே ராம் பிரசாத் பிஸ்மில், யோகேஷ் சட்டர்ஜி, சுசீந்திரநாத் சன்யால்  ஆகியோர் கான்பூரில் 1924 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்துஸ்தான் குடியரசு சங்கம்(HRA. )என்ற அமைப்பை உருவாக்கினர். ஆயுதப் போராட்டத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினர். இந்திய ஐக்கிய குடியரசு அமைப்பது என்று லட்சியமாக அறிவித்தனர் இச்சங்கத்தின் முதல் நடவடிக்கையாக சந்திரசேகர் ஆசாத் தலைமையில் லக்னோ விற்கு அருகில் உள்ள காக்கோரி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து 25 பேர்களை அரசு கைது செய்தது. சந்திரசேகர் ஆசாத், குண்டன் லால் இருவரும் தப்பி சென்றனர். அஷ்பக் உல்லாகான்,ராம் பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங் ,ராஜேந்திர லகிரி, நாலு பேர்கள் தூக்கிலிடப்பட்டனர். நாலு பேர்கள் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர் 17 பேருக்கு நீண்ட கால சிறை தண்டனை வழங்கப்பட்டது இதை தொடர்ந்து இந்த அமைப்பு பலவீனப்பட்டது.

இந்த அமைப்பை புனரமைத்து புதிய வடிவத்தில் உருவாக்க பகத்சிங் முயற்சித்தார். உத்தர பிரதேசத்தில் இருந்து பிஜய் குமார் சின்ஹா, சிவ வர்மா, ஜெய தேவ், பகத்சிங், பகவதி சரண்வோரா, சுகதேவ் ஆகியோர்கள் ஆதரவுடன் 1928 செப்டம்பர் 8,9 தேதிகளில் ஹிந்துஸ்தான் சோசியலிஸ்ட் குடியரசு சங்கம்(HSRA) என்ற அமைப்பை டெல்லி கோர்ட்லா மைதானத்தில் உருவாக்கினார்கள். இதன் கொள்கையாக சோசலிசத்தை ஏற்றுக் கொள்வது என்பதை பகிரங்கமாக அறிவிக்க முடிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஆசாத், குண்டலாலும் இதில் கலந்து கொண்டனர்.

30.10.1928 அன்று சைமன் கமிஷன் வருகையை  எதிர்த்து லாலா லஜபதி ராய், மதன் மோகன் மாளவியா தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தின் முடிவில் போலீஸ் அதிகாரிகள் ஸ்காட், சாண்டர்ஸ் ஆகியோரால் தலைவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு லாலா லஜபதிராய் 17.11.1928 அன்று காலமானார்.

மிகப்பெரும் தலைவரை சாகடித்த சாண்டர்ஸை பழிவாங்க வேண்டும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய சமதர்ம குடியரசு ராணுவம் முடிவின்படி சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு, ஜெயகோபால், ஆகியோர் உதவியுடன் பகத்சிங் சான்டர்ஸை சுட்டுவிட்டு தப்பிவிட்டனர். அன்று முதல் பகக்சிங் தலைமறைவாக செயல்பட்டார்.

08.04.1929  இந்திய நாட்டு மக்களின் சுதந்திர போராட்ட நடவடிக்கைகளை சுருக்கும் சட்டத்தை எதிர்த்தும், தொழிலாளர் விரோத சட்டத்தை எதிர்த்தும் மத்திய சட்டசபையில் சத்தம் எழுப்பும் குண்டு வீசும் பணியில் பகத்சிங்கும, பட்டுகேஸ்வர் தத்தும்  ஈடுபட்டார்கள்.

ஆசாத் முதல் எல்லா தோழர்களும் இந்த பணிக்கு பகத்சிங் அனுப்புவதை விரும்பவில்லை. பகத்சிங்கின்  கட்டாயத்தின் பேரிலும், சுகதேவ் விருப்பத்தின் அடிப்படையிலும்  பகத்சிங், பி.கே. தத்  இருவரையும் அனுப்புவது என மத்திய கமிட்டி முடிவு எடுத்து அனுப்பியது.

குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடுவதை காட்டிலும் தாங்களே கைதாக சம்மதித்து பிறகு நீதிமன்றங்களை தன் கொள்கை பரப்பு மேடைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற பகத்சிங் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரலாற்று புகழ்மிக்க இந்த இரண்டாம் லாகூர் சதி வழக்கு 10.07.1929 அன்று லாகூரில் தொடங்கியது. ராஜா சாகிப் பண்டிட் ஸ்ரீ கிஷன் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

32 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது அவர்களின் ஜெயகோபால் ஹன்ஸ்ராஜ், முதலான ஏழு பேர் அப்ருவராக மாறிவிட்டனர். ஆசாத், பகவதி சரண், யஷ்பால் போன்ற ஒன்பது பேரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, பி.கே.தத் ஜே,என்,தாஸ் முதலான 16 பேர் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டனர். லாகூர் நகரத்தின் மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் ஜார்ஜ் அமில்டன் ஹேண்டிங் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.கார்டன் நோட் என்பவர் அரசு தரப்பு வக்கீலாக வந்திருந்தார்.

Breaking News in English | National Politics News In English

7.10.1930 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் சாண்ட்ர்ஸ் கொலை வழக்கிற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. வெடிகுண்டு வீசியதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. கிஷோரிலால், மகாவீர் சிங், பிஜயகுமார் சிங், சிவா வர்மா ஜெயா பிரசாத், ஜெயதேவ, கமல்நாத் திவாரி, ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், குந்தன் லாலுக்கு ஏழு ஆண்டுகளும், பிரேம் கர்த்தருக்கு மூன்று ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அஜய் குமார், ஜே என் சன்னியால், எஸ் ராஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

17 10 1930 அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருந்தாலும் பல்வேறு காரணங்களால் தூக்கு தண்டனை தள்ளி போய் 23 3 1931 அன்று இரவு ஏழு முப்பத்தி மூன்று மணிக்கு மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

மனிதனின் வாழ்வு சாவில் முடிகிறது ஆனால் மாவீரர்களுக்கு அது மேலும் தொடர்கிறது பகத்சிங் வாழ்ந்தது 23 ஆண்கள் 5 மாதம் 16 நாட்கள் மட்டுமே. அன்றைய இதியாவில் காந்திக்கு நிகராக புகழ்பெற்றவராக இருந்தார். இன்றும் தனது நாட்டுப்பற்று, தியாகத்தின் வழியாக  இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

அ.பாக்கியம்.
Writer
Editor: Book day.in
Former state president DYFI and editor youth magazine illaighar muzhakkam.

சிவ சுப்பிரமணியத்தின் பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?

சிவ சுப்பிரமணியத்தின் பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?




நூல் : பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்? 
ஆசிரியர்கள் : சிவ சுப்பிரமணியம்
விலை: ரூ.45/-
பக்கம் : 56

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் , ஓங்கில் கூட்டம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]