Bharathi Kavithanjan Suthanthiram Enbathu Summa (சுதந்திரமென்பது சும்மா) Poetry in Tamil Language Book Day is Branch of Bharathi Puthakalayam

சுதந்திரமென்பது சும்மா – பாரதி கவிதாஞ்சன்



ஒரு துளிப்பவுணுக்கு
வழியில்லை என்றாலும்
மூக்குத்திக்கு பதிலாக
இன்னும் துடைப்பக்குச்சி

நேற்று பூப்பெய்திய பெண்டுகளுக்கும்
காதறுந்த பாட்டிகளுக்கும்
ஒதுங்க கழிப்பறையின்றி
இன்னும்
கருவேலங்காடும்
கள்ளிச்செடிமறைவும்

சோற்றுக்கு கதியற்று தெருவில் நிற்கும்
அன்றாடங்காய்ச்சியின்
வறுமைக்கோட்டை அழித்துவிட்டதாய் கூவும் கார்ப்பரேட்டுகளின் சந்தைக்கூச்சலில்
இருப்பதையெல்லாம் இழந்துவிட்டு
வாழப்பழகிக் கொண்டிருக்கிறோம்
ஒளிரும் டிஜிட்டல் இந்தியாவின் பெருமிதத்தில்

மாற்றுடையின்றி
உழைக்கும் பெண்ணின்
கிழிந்த ஆடைக்குள் தெரிவது
தேகமல்ல
இந்த தேசம்.

மனிதர்களாக அற்றபோதும்
ஒரு புழு பூச்சியாக கூட
வாழ அனுமதிக்காத இந்த நாடென்பது
சுதந்திர நாடல்ல
திறந்தவெளி சுடுகாடு.

வெறும் வாக்குறுதிகளின் தூரல்கள்
வந்து நிரப்பிவிட முடியாது
கஞ்சிக்கு வழியற்று
ஈரத்துணி கட்டியிருப்பவனின்
பசித்த வயிற்றை

வந்தும் விடியாத
இரவுகளின் நிறமென்பது
துக்கமல்ல
ஒரு பொழுது சிவப்பாய் விடியுமென
காத்திருக்கும் போர்குணத்தின் நிறம்.

இதுவரை
உழைக்கும் மக்களுக்கல்ல
ஆனந்த சுதந்திரமென்பது
அம்பானிகளுக்கும்
அதானிகளுக்கும்

வாய் கட்டப்பட்டிருக்கும் நீதிதேவதையின்
கையில் வைத்திருக்கும் தராசுத்தட்டுகள்
வலுத்தவனின் பக்கமே
சாய்ந்துக்கிடக்கின்றன எப்போதும்
ஊமையாக்கப்பட்ட
அரசியலமைப்புச் சட்டத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும்
இராமராஜ்ஜியத்தில்
மக்களை வேட்டையாடிக்கொண்டிருக்கின்றன
மனுசட்டத்தின் கொடுங்கைகள்.

நிலத்திற்காகவும்
நீருக்காகவும்
காற்றுக்காகவும்

இன்னும்
வாழுவதற்காகவும் போராடுகிறவர்களை
காணாமல் போனவர்களுக்கான கொலைப்பட்டியலில் அல்லது மனம் பிழன்றவர்களாக்கி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருக்குமொரு
சனாதன மண்ணில்

சுதந்திரம் வந்துவிட்டதாய்
வாய் கிழியக் கதைத்துக்கொண்டிருப்பதெல்லாம்
சும்மா தான்.

– பாரதி கவிதாஞ்சன்

கவிதை: *அவர்கள் வருகிறார்கள்* – பாரதி கவிதாஞ்சன் 

கவிதை: *அவர்கள் வருகிறார்கள்* – பாரதி கவிதாஞ்சன் 

அவர்கள் வருகிறார்கள்  ~~~~~~~~~~~~~~~~~~~~~~ மலைகளை சமவெளியாக்கிவர்கள் சமவெளிகளை நிலங்களாக்கியவர்கள் மாடுகளோடு மாடாய் மல்லுக்கட்டி உழுத சேற்றில் விதைகளாய் புதைந்து உங்கள் சாப்பாட்டுத் தட்டுகளில் தானியங்களென முகங்காட்டியவர்கள் வீதிகளில் நிற்கிறார்கள் விளையாத வயல்களும் பசித்த வயிறுகளும் வேறு வேறல்ல சோற்றுக்கு போராடுகிறவனின் வயிற்று…
பாரதி கவிதாஞ்சன் கவிதைகள்

பாரதி கவிதாஞ்சன் கவிதைகள்

தனித்திருத்தலின் பெருவலி : தனித்திருக்கும் மனமென்பது வெளியேறிவிட்டப் பறவையொன்றின் கூடு தனித்திருக்கும் இவ்வாழ்வென்பது துயரங்களின் வாசிக்கப்படாத புத்தகங்களால் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புராதனமொன்றின் நேற்றைய அலமாரி தனித்திருக்கும் இந்நாளென்பது உடைந்து சிதறிய கண்ணாடியொன்றின் சில்லினைப்போல ரசம்மழிந்த இன்றின் சிதைந்த முகம் தனித்திருக்கும் இப்பாழ்வெளியில் நாற்புறமெங்கும்…