நூல் அறிமுகம்: தாழை இரா.உதயநேசனின் “பூவோடு பேசும் பூஞ்சிட்டு” – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம்: தாழை இரா.உதயநேசனின் “பூவோடு பேசும் பூஞ்சிட்டு” – பாரதிசந்திரன்



“நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு”

”தொன்மத்திற்கும் இலக்கியத்திற்கும் உள்ள உறவு ஒன்றிலிருந்து மற்றது வருவது என்ற நிலையில் மட்டுமல்ல. இந்த உறவு இலக்கியங்களில் கட்டுக்கோப்பு சம்பந்தப்பட்டது. மூலப் படிவங்கள், படிமங்கள் சம்பந்தப்பட்டவை மட்டுமல்ல. இலக்கிய வகைகள் சம்பந்தப்பட்டவையும் ஆகும்” என்பார் நார்த்ராப் ப்ரை (Northrop Frye)

பரந்து விரிந்த நிலையில், இலக்கியக்கூறுகளும் வடிவங்களும் மாறுபட்ட வளர்ச்சியினைக் கொண்டிருக்கிறது எனினும், அதன் உள்ளீடுகள் துன்பத்தின் கூறுகளாகவே அமைந்திருக்க வாய்ப்புண்டு. மானுட சமூகத்தின் கற்பனை ஓட்டத்தின் முடிவும், தொடக்கமும் தொல்மூலப்படிவங்களோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் என்பதே உளவியல் வெளிப்பாடாகும்.

முதன் முதலாக எழுந்த நாட்டுப்புற இலக்கியங்களே, இன்றைய பல்வேறு இலக்கிய வடிவங்களின் ஆதி வடிவமாக இருந்திருக்க முடியும். சிந்திக்கவும், எண்ணத்தைப் பரிமாறவும், விளைந்த மகிழ்ச்சியும் ஏற்படுத்திய உளக்கூறுகள் தான் எக்காலமாயினும் வெளிப்படும். அதனடிப்படையில், நாட்டுபுற இலக்கியத்தின் சாயல், இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பட்டு நிற்கும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில், நாட்டுப்புற இலக்கியங்கள், பல்வேறு அறிஞர்களால் தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன. மற்றொருபுறத்தில் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் களஆய்வில் பெறப்பட்டு மாபெரும் பதிவுகளைப் பெற்றிருக்கின்றன. கலைஞர்கள் ஒருபுறம் மீட்டெடுத்து, மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும், நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இக்காலத்திலும் நிறைந்து கிடக்கின்றன.

’நாட்டுப்புறப்பாடல்கள்’ எனும் வகையில், உலக அளவில் 1831 ஆம் முதல் சேகரிக்கப்பட்டுள்ளன. 1871 இல் சார்லஸ் இ கோவர் (Charles E. Gover) எனும் ஆங்கிலேயர் “FOLK SONGS OF SOUTH INDIA” எனும் தலைப்பில், தாம் சேகரித்த நாட்டுப்புறப் பாடல்களை வெளியிட்டார். இந்நூலில் தமிழ் நாட்டுப்புற பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் இப்பாடல்கள் சென்றன. இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு அறிஞர்கள் பல நூறு தொகுப்புகளைத் தமிழில் கொண்டு வந்தனர். தமிழகம் முழுவதுமான சேகரிப்புக்களாக நாட்டுப்புற பாடல்கள் இருந்தன.

நா.வானமாமலை, கி.வ.ஜ. க.கிருஷ்ணசாமி, ஆறு, இராமநாதன், செ.அன்னகாமு, தமிழண்ணல், சு.சண்முகசுந்தரம், த.கனகசபை, சா.சவரிமுத்து போன்றோரின் கடும் உழைப்பால் நாட்டுப்புற இலக்கியங்கள் பெருமளவு பாதுகாக்கப்பட்டு தொகுப்புகளாக நூல் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டுப்புற இலக்கியங்கள் தமிழில் பெருமளவு கிடைப்பதற்கு மேற்கண்ட அறிஞர்கள் காரணமாவார்கள்.

நாட்டுப்புறவியல் ஆய்வு எனும் நூலைத் தொகுத்தவர் சு.சக்திவேல் ஆவார். இவருக்குப் பின், தொகுத்த நூல்படைப்புகளை ஆய்வு செய்து அவைகள் வெளியிடப்பட்டன. மக்களின் வாழ்வாதார நிலைகள் எவ்வாறு பாடல்களில் ஊடுருவியுள்ளன. கற்பனை நயம் மிக்கதான முன்மாதிரிகள் இவ்வாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற பல நூறு நாட்டுப்புற ஆய்வுகள் நடத்தப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.

இவற்றின் பாதையில் தொடர்ந்து தமிழ் இலக்கிய வரலாறு நாட்டுப்புற இலக்கியங்களையும் கவனித்து தன்னில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் தனித்தனியாகப் பாடிய பாடல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்யும் பழக்கத்தில், மாறுபாடாகத் தொகுப்பு முழுவதும் தாமே இயற்றிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக்கம் செய்வதும், 21- ஆம் நூற்றாண்டில் தொடங்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க வாழ் தமிழரான, பன்முகத் திறமை வாய்ந்த தாழை இரா உதயநேசன் அவர்கள் எழுதிய ”பூவோடு பேசும் பூஞ்சிட்டு” எனும் அரியதொரு நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இதில் உள்ள அனைத்துப் பாடல்களும் இவரே எழுதியது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், மண்மனம் மாறாது, பண்பாடு மாறாது, கலாச்சாரம் மாறாது, உணர்வுகள் மாறாது இத்தொகுப்புப் பாடல்களை எழுதியுள்ளார்.

ஒவ்வொரு பாடலும், தனித்தனியாக இசையமைத்துப் பாடி, இசைத்தமிழுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய தொகுப்பாக இது வந்துள்ளது.

நவீன புத்தகக் கட்டமைப்பில், பழம்பெறும் உணர்வுகளைப் பேசும் அற்புதமான பாடல்களின் தொகுப்பே இந்நூலாகும். கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான வாழ்வை வாழும் கிராமத்தாரின் வாழ்வியல் கட்டமைப்பை அப்படியே நூலின் முகப்பு ஓவியமாக வரைந்து, அதில் நவீனத்துவ அச்சுப்பதிப்பை அச்சடித்து வெளியிட்டு இருக்கிறார் தாழை இரா. உதயநேசன்.

”பூவோடு பேசும் பூஞ்சிட்டு” நூலில் உள்ள இருபாடல்கள் ”சாமக்கோழி கூவிடுச்சு” ”மாமன் மக” எனும் இரு இசை ஆல்பமாகத் தற்பொழுது வெளிவந்துள்ளன என்பது ஒரு சிறப்பாகும். இது போன்று இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களும், தனி இசை ஆல்பமாக வெளி வந்தால் தமிழிசை இன்னும் பெருமைக்குரியதாக மாறும்.

மனதை அப்படியே நாட்டுப்புற உணர்வுகளுக்கு அழைத்துச் செல்லும் பாடல் வரிகளைக் கொண்டுள்ளது இந்த இரண்டு இசை ஆல்பங்களும். தனித்துவமிக்க ரசனையும். மேலான அன்பும், காதலும், இவ்விரு பாடல்களிலும் மிகுந்திருக்கின்றன.

”பூவோடு பேசும் பூஞ்சிட்டு” நூலில் உள்ள நாட்டுப்புறப் பாடல்கள், படிப்போரின் உள்ளத்தைக் கரைத்துத் துள்ளிக் குதித்துக் கிராமத்துச் சாயலை நமக்குள் ஊட்டித் தன்னிலை மறக்கச் செய்கின்றது என்று கூறினால் அது தவறாகாது. படிப்பவர்கள் யாரும் இந்த உணர்விலிருந்து மாற முடியாது என்பதும் தவறாகாது. இலக்கியத்தின் பாதிப்பு இல்லாதவர்கள் ரசனை உடையவர்களாக இருக்க முடியாது.

இப்பாடல்களில், காதல் பாடல்கள் அதிகமாக உள்ளன. அதில் தலைவன் கூற்றாக அமையும் பாடல்கள் மிகுதியாக உள்ளன. திருமணத்திற்கு முந்தைய காதல் எதிர்பார்ப்பும், உற்சாக மனநிலையும், அழகை மெச்சும் ரசனையும், உண்மை மனப்போக்கை வெளிப்படுத்தும் வெளிப்பாடும், ஆங்காங்கு கொட்டிக் கிடக்கின்றன. அள்ள அள்ளக் குறையாத காதல் ரசம் இழையோடுகின்றன. குறிப்பாக இந்நூலில் காணலாகும் நாட்டுப்புறப் பாடல்களைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம் அவையாவன:

1.காதல்
2.அம்மா
3.விவசாயி
4 கிராம அழகு
5. சமூகப் பிரச்சனை

என்பதாகும். இதில் சமூகப் பிரச்சனையில் பெண்ணுரிமை குறித்த பாடலான ’வளையல் குலுங்கக் கும்மியடி’ எனும் பாடல் மிகச் சிறப்பான பாடல் ஆகும். வெறும் வெற்று வார்த்தைகளாக அமைந்து விடாமல், எதிர்காலச் சிந்தனை, சமூகத்தீர்வுகள், காலமாற்றம், மகிழ்ச்சி இவைகளோடு கூடியவைகளாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

ஆத்தோர ஆலமரம், நுங்கு வண்டி, ஊர்த் திருவிழா, தென்னை மரம், காய்கறிக்காரம்மா போன்ற காட்சிகளின் வெளிப்பாடுகள் கிராம அழகைப் போற்றிப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளன. நவீன உலகச் சாயல் மற்றும் உவமை எண்ணப்போக்கு போன்றவை எங்கும் பயன்படுத்த ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கிராமத்து வார்த்தைகளான வெசனப்பட்டு, மொறச்சு, சீர்செனத்தி, வெரசா என்பன போன்ற வார்த்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சங்க இலக்கிய மரபில் முழுத்தொகுப்பும் அமைந்துள்ளன. இதனைத் தனிப்பெரும் ஆய்வாக ஆய்வு செய்யலாம். சமூகப் பிரச்சனைகள் இல்லாத நாடாக நம் நாடு இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் பெரும் கனவாக இருக்க வேண்டும் என்பதை உணர முடிகின்றது. அதனை,

”மேல் ஜாதி கீழ் ஜாதி
கல்யாணம் செஞ்சுப்புட்டா
ஆத்திரம் பெருகுது
ஆணவக் கொலை நடக்குது”

எனும் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன.

காதலியைப் பல்வேறு உவமைகளால் உருவகங்களால் காதலன் அழைக்கின்றான். அவை சொல்ல வரும் செய்திகளுக்கு மிகப் பொருத்தமானவைகளாக அமைந்திருக்கின்றன. அவ்வாறு எழுதும் வார்த்தைகளை மட்டும் தனியே எடுத்து அவை பொருந்துமாற்றைத் தனித்த பெரும் ஆய்வாக ஆய்வு செய்யும் அளவு பொருத்தமான தன்மைகளைப் பெற்றிருக்கின்றன. அவைகளில், தங்கரதமே, செந்தேனே, அன்னக்கொடியே, பொன்மானே, பூவிழியே, ஆவாரம்பூவே, கண்மணியே, தும்பை பூச் சித்திரமே, செங்காட்டு முந்திரியே, கோவைப்பழ உதட்டழகி, கொய்யாப்பழ நிறத்தழகி, தோகை மயிலு நடனக்காரி, செவ்வாழை சிரிப்புக்காரி, வஞ்சரம் மீனு கண்ணுக்காரி என்பன சிலவாம்.

தேர், ரத்தினம், மரிக்கொழுந்து, கொலுசு, நதி, அலை போன்ற சொல்லாடல்கள், பாடல் தொகுதி முழுவதும் மிகுதியாகக் கையாளப்பட்டுள்ளன. இவை தாழை இரா.உதயநேசன் அவர்களின் மந்திரச்சொற்களாக இனம் காணலாம். காதலர்களுக்குள் அடங்காத அன்பு இருப்பதை,

”நெஞ்சுக்குள்ள உன்னத் தானே
நெனைப்பாக வச்சேண்டி

உன் மேல தூசி பட்டா
கருவாடா காயி ரேண்டி”

சிரிப்புல சிக்கி தான்
செலந்தியா தவிக்கிறேன்டி

கட்டிவச்ச மல்லி யாட்டம்
வஞ்சிக்கொடி வாழுறேனே

உதட்டோரச் சிரிப்பால
பச்ச குத்திப் பாக்குறியே

என ஆசிரியர் பாடல்புனைந்துள்ளார். புனைவுகள் எதார்த்த புனைவுகளாக அழகூட்டி நிற்கின்றன.

“’சொல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்

வல்வரவு வாழ்வார்க்குரை” ( குறள்-1151)

எனும் திருக்குறளுக்கு ஒப்ப காதலி காதலனைப் பார்த்து,

”ஆச மச்சானே
ஏங்க வைக்காத
ஒத்தையில தவிக்க விட்டு \
வேடிக்க பார்க்காத”

என்னும் பாடல் வரிகள் காதலின் வலியை உணர வைக்கின்றன. இதே போன்ற வேதனையை அனுபவிக்கும் காதலி,

”அத்தமக பூத்திருக்கேன்
ஆத்தோரம் காத்திருக்கேன்
சேத்துக்குள்ள மீனாட்டம்
செவ்வந்தி துடிக்கிறேனே

வெளக்க அணைச்சுப்புட்டு
விடல புள்ள உறங்கினாலும்
வளச்சுப் புடிச்சுகிட்டு
வெரலால வருடுறியே”

என்று தன்னுடன் இல்லாத தலைவனின் இல்லாமையால் தான் படும் வேதனையை அப்படியே ஆசிரியர் வார்த்தைகளால் வடித்துள்ளார்.

தனித்த நிலையில் ஒவ்வொரு பாடலும், சங்க இலக்கியப் பாடல்களின் தன்மையைப் பெற்றுள்ளன என்னும் வகையில் தனித்த ஆய்வு செய்யும் அளவு சிறந்த கட்டமைப்பை இத்தொகுப்பின் பாடல்கள் ஒவ்வொன்றும் பெற்றிருக்கின்றன.

இலக்கிய வரலாற்றில் தனித்து நாட்டுப்புறப்பாடல்களைப் பாடித் தொகுத்த நூல்களில் முதலாவதாக இந்நூல் எண்ணப்படவும் பதிவு செய்யப்படவும் வேண்டும். பாடல்கள் அனைத்தும் தனித்த தமிழிசை ஆல்பமாகவும் வெளிவந்து தமிழிசைக்குப் பெரும் வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும்.

குறிச்சொற்கள்: நாட்டுப்புற இலக்கியங்கள், காதல் பாடல்கள், இசை ஆல்பம், பூவோடு பேசும் பூஞ்சிட்டு, தாழை இரா உதயநேசன்,

நூல் பெயர்: பூவோடு பேசும் பூஞ்சிட்டு
ஆசிரியர்: தாழை இரா உதயநேசன்
வெளியீடு: கலை உதயம் பதிப்பகம்,
விலை : 150/-
பக்கங்கள் : 148
10- முதல் தெரு, ஸ்ரீ ராமாபுரம்
ஆம்பூர் -635820

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேக்ரன்)
தமிழ்ப்பேராசிரியர்
திருநின்றவூர்

காணாமல் போனவை கவிதை – பாரதிசந்திரன்

காணாமல் போனவை கவிதை – பாரதிசந்திரன்




அவர் அவற்றைக் குறித்து எதுவும் சொன்னதும் இல்லை.

பெரிதாகவோ, சிறிதாகவோ பாராட்டியதாக ஏதுமில்லை.

உள் உணர்ந்து கொண்டாரா என்பதும் தெரியவில்லை.

அவருக்குப் பிடித்திருக்காதோ?

சொல்லியிருக்கலாமே.

பிடித்திருந்தால் ஏதாவது வந்திருக்கலாம்.

படித்தபோது என்னதான் நினைத்திருப்பார்?

ஒருவேளை பிறகு சொல்ல இருந்திருப்பாரோ?

படித்து முடிக்கும் பொழுது குமட்டல் எதுவும் வந்திருக்குமோ?

அவை அவரை மயக்கி விட்டனவா?

இனி வேண்டாம்.

அவற்றோடு நிறுத்தி விடலாம்.

உனக்குக் கூறவேண்டும் எனும் தேவையில்லையென ஆகியிருக்கலாம்.

படித்தால் எதுவும் கூறத்தான் வேண்டுமா?

சம்பிரதாயத்திற்காகவாவது நன்று என்று சொல்லியிருக்கலாமே.

சிறிதாய் ஒன்று புரிகிறது

அவையெல்லாம்

அவர் குறித்த எதுவுமாக இல்லை என்பதாக இருக்குமோ?

காணாமல் போனவை

அவையும்- அவரும்.

பாரதிசந்திரன்
[email protected]
9283275782

நூல் அறிமுகம் : தாழை. இரா. உதயநேசனின் விடை தேடும் விடியல் – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம் : தாழை. இரா. உதயநேசனின் விடை தேடும் விடியல் – பாரதிசந்திரன்




விடியலை- வெளியிலும் உள்ளுமாகத் தொடர்ந்து உலகம் வெகு காலமாய்த் தேடிக்கொண்டே இருக்கிறது. சிலர் எண்ணத்தில் விடியலைத் தேடுகின்றனர். சிலர் நிகழ்வுகளில் விடியலைத் தேடுகின்றனர். சிலர் பொருளாதாரத்தில் விடியலைத் தேடுகின்றனர். இதிலிருந்து மாறுபட்டு தம் கவிதைகளில் தமக்கானதாய் விடியலைத் தேடாமல், மானுட முன்னேற்றத்திற்கான விடுதலையைத் தேடுகிறார் கவிஞர் தாழை இரா. உதய நேசன்.

“விடை தேடும் விடியல்” நூல், தொண்ணூற்று ஆறு சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வகையினதாக அமைந்திருக்கிறது. சமூகத்தின் மாற்றங்களை உணர்ந்து மேன்மைக்கான விதைகளை ஒவ்வொரு கவிதைகளிலும் பதியமிட்டு சென்றிருக்கின்றன கவிஞனின் எழுத்துக்கள்.

எந்த எல்லையையும் தொட்டுச் சென்று மிகப்பெரும் சாதனைகளைச் சாதிக்கும் என்பதைக் கவிஞர் உதயநேசனின் அனைத்து கவிதைகளும் சான்று பேசுகின்றன.

குறிப்பாகக் கவிஞர் உதயநேசனின் கவிதைகள், எளிமையான சொற்களையும், ஆழமான பொருள் வீச்சையும் கொண்டவை. உளவியல் சார்பானவை. சமூகப் பிரச்சனை சார்பானவை, அழகியல் சார்பானவை, தனி மனித ஒழுகலாறுகள் சார்பானவை, பெண்ணியம் சார்பானவை என பல நிலைகளில் கவிதையின் நிஜங்களை நாம் பாகுபாடு செய்து அடுக்கிக் கொண்டே போகலாம்.

எல்லையற்ற வெளியெங்கும் பறந்து திரியும் பறவை போல் கவிதை உலகின் எல்லா திசைகளிலும் இவரின் பார்வைகள் அலைமோதித் திரிகின்றன. இவரின் இலக்கியப் பார்வை வேறு வேறு கோணங்களில் படிப்போர் அனைவரையும் சிந்திக்க வைக்கின்றன.

இலக்கியப் பார்வை குறித்து ‘வில்பர் ஸ்காட்’ (Wilbur Scott) கூறும்பொழுது, இலக்கியப் பார்வைகளை ஐந்தாகப் பிரிப்பர். அது உலகளாவிய தரமான இலக்கியத் திறனாய்வு அமைந்த ஒன்றாகும். அல்லது இலக்கியப் பார்வை குறித்த வெளிப்பாடாகும். அந்த வகையில் இலக்கிய பார்வைகளை,

1.அறநெறி சார்பானது

2.சமுதாயப் பார்வை சார்பானது

3.உளவியல் பார்வை சார்பானது

4.வடிவ இயல் பார்வை சார்பானது

5.தொன்ம மூல படிவ பார்வை சார்பானது

என ஐந்து பார்வைகளில் காணலாம்.

இவ்வகைகளில் இலக்கியத்தை ஒவ்வொருவரும் அணுகும் பொழுது படைப்பாளனின் படைப்புத்திறனை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். கவிஞர் உதயநேசனின் கவிதைச்சோலையில் உள்ள கவிதைகள் இந்த ஐந்து வித பார்வைக்கும் தீனி போடுகின்றன. பலப் பல ஆயிரம் சிந்தனைகளுக்கு வழி விடுகின்றன. தீராத பசியுடன் உள்நுழைய வருபவருக்கு வயிறு முட்ட உணவு அளிக்கின்றன.

96- தலைப்புக்களின் பெயர்களிலேயே கவிதைகள் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றன. பல தலைப்புகள் கவிதைகளாகவும் அடையாளப்படுத்தி நிற்கின்றன. முழுக் கவிதையின் உள்ளார்ந்த பொருளை அதன் தலைப்பிலேயே உணர்த்தி விடுகின்றன. இவ்வாறான தலைப்புகள் சில இடங்களில் தீயாய் சுடுகின்றன. காதல் மேடையமைத்துச் சில தலைப்புகள் குளிர் காற்றாய் இதம் வருடுகின்றன. உதாரணமாய்,

’மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை’

’அந்தந்த நேரம் மாறும் முகங்கள்’

‘நினைவுகளில் நனையும் காகிதக் கப்பல்’

‘விடியலே வந்துவிடு’

‘ஏர்முனையும் எதிர்முனையும்’ எனும் தலைப்புகளும் அதன் கவிதைகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன

“கனாக் கால நினைவுகள்” எனும் தலைப்பிலான ஒரு கவிதையில்,

கனவுகள் எனும் அரூபம் மனதைத் தாக்கும் பொழுது ஏற்படும் உணர்வுத் துடிப்புகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது இக்கவிதை. கவிஞர் மிக சிறப்பாக இக்கவிதையை உணர்த்திச் செல்கிறார். மக்கள் அனைவரும் இதை உணர்கின்றனர். ஆனால், கவிஞர் உதயநேசன் மட்டும் அதை கவிதையாக மாற்றுகின்றார்.

”மறக்க நினைத்து

மறைந்து போனேன்

ஞாபகங்கள் தென்றலாய்த்

தீண்டிச் செல்கிறதே

பேசாத வார்த்தைகள்

புரவிபோல் சீறிட்டுச்

செப்புச்சிலையாகச்

செதுக்கிடச் சொல்கிறதே” (ப-90)

‘மதம் என்னும் மதம் ஏனோ’ எனும் எனும் கவிதைக்குள் சமூகத்தின் தலை விரித்தாடும் கோலத்தைக் கோபக்கனலோடு, சுட்டெரிக்கப் பார்க்கின்றார். பார்த்ததோடு மட்டுமல்ல அதற்கான தீர்வையும் தருகின்றார் கவிதையில்,

”அவனியில் உதித்தவர்

அடித்தளம் மறந்தார்

ஓடுகின்ற உதிரத்தின்

நிறமும் மறந்தார்

மானிடராம் நமக்குள்

பிரிவினை வளர்த்துச்

சிந்தனைகள் குறுகவிட்டுக்

குறுக்குச் சுவர் எழுப்பி

சாதியும் பேதமும்

இல்லையென முழங்கி

நல்லிணக்கம் பேணி

மானுடம் காப்போம்”

என்கின்றார். பிரச்சினைகளும், தீர்வுகளும் ஒரே கவிதையில் நமக்குக் கிடைக்கின்றன. மேலும், ’இவள் பெண்தானே என்று நினைத்தாயோ’ எனும் கவிதையில், பெண் இனத்திற்கான பதிலைத் தருகிறார். அக்கவிதை,

“ஆணும் பெண்ணும்

நிகரெனக் கொண்டால்

வையகம் தழைக்கும்

அறிவில் சிறக்கும்

அவளின் கனவுகள்

அடுப்பில் எரிந்து

கேலியாய் மாறிட

பாவம் என்ன செய்தாயோ

வார்த்தையில் பெண்ணியம் பேசிடும் வர்க்கமே

தடைகள் நீங்கும் காலம் வருமே”

தாழை இரா. உதயநேசனின் கவிதைகள், சிந்தனைகளின் கொடையாகக் கவித்துவத்தோடு வீரியமான எழுச்சியைத் தருகின்றன. மலரின் மணமும், தீயின் சுடலும், காற்றின் வருடலும், மழையின் சுகமும், உளியின் செதுக்களும், ஆணியின் குத்தலும், சூறாவளியின் சுழலும் ஒரு நூலுக்குள் சாத்தியப்பட்டு நிற்கின்றன.

’விடைதேடும் விடியல்’ கவிதைநூல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்க் கவிதைகளை எளிமையாகவும், அதே நேரம் ஆழமாகவும் படிக்க விரும்புபவர்கள் கவிஞர் உதயநேசனின் அனைத்துக் கவிதை நூல்களையும் வாங்கி இன்புறலாம்.

காலத்தின் தேவையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கவிஞரின் சிந்தனைகள் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
9283275782
[email protected]

நூல் : விடை தேடும் விடியல்
ஆசிரியர்: தாழை. இரா. உதயநேசன்
பதிப்பகம் : வசந்தா பதிப்பகம், சென்னை
விலை: ரூ.150
பக்கம்: 140

‘அறநெறிச்சாரம்’ உணர்த்தும்  “உணவுக்கட்டுப்பாடு” கட்டுரை – பாரதிசந்திரன்

‘அறநெறிச்சாரம்’ உணர்த்தும் “உணவுக்கட்டுப்பாடு” கட்டுரை – பாரதிசந்திரன்




‘அறநெறி’ என்பது உன்னதமான வாழ்க்கையின் நடத்தைகளாகும். அதை முறைப்படுத்தி வாழ்வதே சரியான நெறியாகும். ஒழுங்குமுறை என்பதே ‘நெறியென’ப்படுகிறது.
‘அறத்தோடு வாழ்வதே இன்பம்’ என்பது முதுமொழி. ‘சாரம்’ என்பதற்கு ‘பிழிவு’ எனப் பொருள் தருகிறது.அகர முதலி
வாழ்க்கை நடத்தைகளின் பிழிவுகள் அனைத்தும் கூறப் பெற்றுள்ள நூல். அறநெறிச் சாரமாகும்.
இந்நூலைத் ‘திருமுனைப்பாடியார் என்னும் சமணசமயப் பெரியார் எழுதியுள்ளார். ‘அருங்கலச் செப்பு’ எனும் நூலின் அமைப்பைப் பின்பற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல்.

இந்நூல் கி.பி. 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். ‘திருமுனைப்பாடி’ எனும் ஊரில் பிறந்தமையால், இவர் தனிப் பெயரில்லாமல், ஊர்ப் பெயராலேயே ‘திருமுனைப்பாடியார்’ என அழைக்கப்பட்டார்.

இந்நூலில், உயிர்கள் கடைந்தேறுவதற்கான வாயில் நல்லறமே என்று அனைத்துப் பாடல்களிலும் ஆசிரியர் கூறுகின்றார். அதில் தலையாயது ‘கல்வி கற்பதே’ என்கிறார். அந்தக் கல்வியே எல்லா அறத்தின் பாலும் உலக உயிர்களை வழிநடத்தும் என்கிறார்.

இந்நூலின் மற்றொரு சிறப்பு,தனிப்பாடல் திரட்டு தொகுப்பில், இந்நூலின் 34 பாடல்கள் என்பது பழமையை உணர்த்தும். மொத்தம் 226-வெண்பாக்களால் ஆன இந்நூலில், உணவின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கான ‘அறம்’ குறித்தும் விரிவாகப் பேசுகிறார். அதை இனி காணலாம்.சமண சமயக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை முறைப்படுத்தி மேன்மைப்படுத்துவதாகும். ஒழுக்கக் கூறுகளை நடைமுறைப்படுத்துவதாகும். வாழத்தெரியாமல், ஏதேதோ பாதைகளில் செல்லும் நாம், முற்றுப்பெறும் இடம் சூன்யமாகவே இருந்து விடுகிறது. வெற்று வாழ்க்கை வாழ்ந்தே பல கோடி மாந்தர் இறக்கின்றனர்.

ஆனால், சமண சமய நூல்கள், வாழ்வதற்கான முறையான தளங்களை நமக்குக் காட்டுகின்றன. அதில் மிக முக்கியமானது. ‘உணவு’ ஆகும்.மனிதன் வாழ உடல் மிக முக்கியம். உடல் இயங்க உணவு மிக முக்கியம். உணவினாலேயே உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் வளர்கின்றன அல்லது செயலாற்றுகின்றன. அப்படிப்பட்ட மிக முக்கியமானது ‘உணவு’ அதை மனிதர்கள் இன்று முறையாக உண்கிறோமோ? என்றால், ‘இல்லை’ என்று தான் பதில வரும்.

எதை உண்ண வேண்டும்
எவ்வளவு உண்ண வேண்டும்
எதை உண்ணக் கூடாது
உண்ண வேண்டாதவைகளால் ஏற்படும் தீமை
வரையறையற்ற ஆசையால் ஏற்படும் விளைவுகள்
வயிறின் முக்கியத்துவமறிதல்
உணவே கதி என்று இல்லாதிருத்தல்
என்று ‘உணவுக் கட்டுப்பாட்டைப்” பல பாடல்களால் அறநெறிச் சாரம் விளக்குகிறது. ஊன் துறந்தான் துறந்தாலை ஒப்பான் எனும் தலைப்பிலமைந்த பாடலில்,

கொன்றூன் நுகரும் கொடுமையை யுள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் – என்றும்
இடுக்க ணெனயுண்டோ யில்வாழ்க் கைக்குள்ளே
படுத்தானாம் தன்னை தவம்.                                                                     (பா-63)

என்கின்றார். இதன்பொருள்,
பிற உயிர்களைக் கொன்று, அவற்றின் மாமிசத்தை உண்ணும் கொடிய தீச்செயலை உள்ளத்தால் ஆராய்ந்து தெளிந்து அப்பொழுதே ஒருவன் கைவிடுவானால் எக்காலத்தும்
அவனுக்குத் துன்பம் என்பது ஒன்றும் இல்லை. அப்படிப்பட்டவன் இல்லற நெறியில் நின்றாலும். துறவற நெறியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன் ஆவான் என்பதாகும்.சமண மதத்தின் மிக முக்கிய உணவுக் கோட்பாடு ஊன் துறப்பதாகும். பிற உயிர்களைக் கொல்லாமை என்பது தான் மிக மிக உன்னதமான செயலாகும். தன்னுடைய உடலை ஓம்புவதும் ஈகையே எனும் தலைப்பிலமைந்த பாடலில்,
சோரப் பசிக்கு மேல், சோற்று ஊர்திப் பாகன், மற்று
ஈரப்படினும், அது ஊரான்: ஆரக்
கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும்: அதனால்,
முடிக்கும் கருமம் பல.                                                                                                   (பா-122)

என்கின்றார்.இதன் பொருள்,
உணவினால் இயங்கும் உடலை வாழ்விக்கும் உயிராகிய பாகன். உணவினைக் கொடுக்காமல் விட்டால். அவ்வுடலை இயங்கச் செய்ய மாட்டான். இவ்வுடல் மூலமாகச் செய்ய வேண்டிய செயல்கள் நிறையவுள்ளன. எனவே, கொடுக்க வேண்டிய உணவினைக் குறைபடாமல் கொடுக்க வேண்டும். அது தான் சிறப்பு.
‘விரதம்’ போன்று கடுமையாக இருந்து உடலை வதைக்கக் கூடாது. உடலுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தருவது முக்கியம் எனும் அறிவியல் செய்தியை அறமாக்குகிறது இப்பாடல்,
உடல் குறித்த ஞானமும், மனிதர்களுக்கு மிக முக்கியம் என்பதை இப்பாடல் தருகிறது. ஆசையை அடக்குதலே அறிவு எனும் தலைப்பில் கூறும்பொழுது,

தனக்கு தகவு அல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றல்
உணற்கு விரும்பு குடரை – வனப்புற
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கி
தேம்பத் தாம் கொள்வது அறிவு                                                                               (பா-158)

என்கின்றார். இதன் பொருள், தனக்குத் தகுதி இல்லாத செயலைச் செய்து, ஏதோ ஒரு வகையில், மகிழ்ச்சியில், ஆசையில் உணவுகளை உண்பதற்கு விரும்பும் குடல். உண்டி சுருங்கி அழகு பெற நீர் வற்றிய இடத்தில் ஆம்பல் பூவின் தாள் வாடித்துவண்டு விடுதல் போல, இளைக்கும்படி, உள்ளத்தில் உணவின் மேல் ஏற்படும் ஆசையை அடக்கிக் கொள்ள வேண்டும். இத்தகையதே அறிவு ஆகும். உணவை மருந்தாக்க வேண்டும் எனக்கூறும்பொழுது, உணவை உடலைக் கெடுக்கும்படி ஆக்கக் கூடாது. இறப்பின் விகிதம் அதிகரிப்பது இன்று உணவினாலே தான்.  வயிறே, உன்னோடு வாழ்தல் அரிது எனும்பொழுது,

ஒருநாளும் நீ தரியாய் ஊண் என்று சொல்லி
இருநா¨ளுக்கு ஈந்தாலும் ஏலாய் – திருவாளா
உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே
நின்னொடு வாழ்தல் அரிது                                                                          (பா-159)

என்கின்றார். இதன் பொருள்,
ஒரு நாளும் வயிறே, நீ பசியோடு இருக்க மாட்டாய். உணவு அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் இரண்டு நாட்களுக்கான உணவை உண்பாயாக என்று கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய்.

மாட்சிமை பொருந்தியவனே! உன்னுடைய உறுதி பெரிது எனினும். உன் பயன் பெரிது என்றாலும், நின்னோடு வாழ்தல் அரிது உன்னோடு வாழ்வது என்பது துன்பமே ஆகும்.
உணவைப் பிரதானமாகக் கொண்டு தான் இவ்வுடல் இயங்குகிறது. அதற்கான மூலப் பொருட்களைப் பிரித்து. ஒவ்வொரு உறுப்புகளுக்கும் இயக்கத்தை அதுவே தருகிறது.
என்றாலும், அது அதன் வேலையைச் சரியாகச் செய்கிறது. ஆனால், மனிதனால் தான் அதுக்குத் தேவையான உணவைத் தரும் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை.
எனவே. இவன் பேச்சை வயிறு கேட்காததால். உன்னோடு வாழ்தல் கடினம் என்கின்றார் ஆசிரியர். எல்லாம் வயிற்றுப் பெருமாள் பொருட்டு எனும் தலைப்பில் கூறவரும் செய்தியானது,

போற்றியே போற்றியே என்று புதுச் சொல்வம்
தோற்றியார்கண் எலாம் தொண்டே போல் – ஆற்றப்
பயிற்றிப் பயிற்றிப் பல உரைப்பது எல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு                                                                              (பா-164)

என்கின்றார். இதன் பொருள் புதுப் பணக்காரர்களிடமெல்லாம் சென்று, அவர்களைப் புகழ்ந்தும், ‘என்னைப் பாதுகாப்பாயாக’ என்றும் கூறி கூறி அவர்களுக்குப் பணிவிடை செய்வது உலகத்தாருக்கு இயல்பாகும். இதற்குக் காரணம். ஒரு சாண் வயிற்றை  வளர்ப்பதற்காகத் தான்.தன்னைத் தாழ்த்தியும், பிறரை வாழ்த்தியும். இந்த உணவிற்காக வாழ வேண்டியுள்ளது. என்பது தான் வாழ்வின் மையப் பொருள். இதை உணர்ந்து வயிறைக் கட்டுப்படுத்த வேண்டும். முறைப்படுத்த வேண்டும். அதுவே வாழ்வை உயர்த்தும்.

பாரதிசந்திரன்,
முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
தமிழ்த்துறை, வேல்டெக்  கலைக்கல்லூரி, ஆவடி.
9283275782
[email protected]

Vitha Vithamai Thoyulagam By Bharathichandran கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் - பாரதிசந்திரன்

கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன்




கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், வாழ்வின் சுவடுகளைத் தொட்டு, வருடி, அலசி, அங்காலயத்து வேறு வேறு கோணங்களில் உருவமைத்துத் தெளிவுறவுணர்ந்து உணர்ந்தவாறே வெளிப்படுத்தத் தெரிந்த மாயாஜாலக்காரர்.

 ”என்ற ஒன்று எனும் அவரது தொகுப்பு முழுவதும், வான்வெளிப் பரப்புகளில் வாசகனைப் பறக்கவிடும் சாகசக்காரர்.  அக்கவிதைத் தொகுப்பில்விதம் எனும் கவிதை, நமக்கான பார்வைக்கு வேறு ஒரு பார்வை தருகிறது.

உள் நுழைந்து, விரவி, அதாகிக் கடக்கும் போது, பிரிதொன்றிலிருந்து மீள்வதோ அல்லது விளைவித்துக் கொள்வதோ  இயலாத ஒன்றாகி விடுவதாகவே ரகம் பார்ப்பதில் அல்லது ரகம் பிரிப்பதில் பெரும்பாலும் எல்லாமும் அமைந்து விடுகின்றன. இதை விளக்கி விட முனைவதாகவே கவிஞர் அபியின்விதம் கவிதை அமைகிறது.

மேலிருந்து பாருங்கள் எல்லாவற்றையும் என்பதைப்போல், உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்ததுண்டா? கடற்கரையில் விளையாடுவது, பூங்காவில் விளையாடுவது இரண்டும் விளையாட்டுத் தான். ரகம் வேறு வேறான பதிவுகளோடுக் கிளர்ச்சிகளை அது எளிமையாய் படம் வரைகின்றன நமக்குள்.

தியேட்டரில் படம் பார்ப்பதும், வீட்டில் தொலைக்காட்சியில் படம் பார்ப்பதும், ஒரே  நேர்கோட்டில் அச்சுவார்த்தாற் போல், நமக்குள் உணர்வைச் சில்லிட வைக்குமா? என்றால் இதுவும் அதுவும் வேறு வேறு ரகம். ஆனால் செயல் ஒன்று தான்.

”பாத்திரத்திற்குள் இருப்பதை மூடி அறியாதா என்ன? மூடிகள் திறக்கப்பட்டால், உள்ளிருக்கும் பாம்பு, புழுக்களுக்குத் துன்பம்தான். ஆகவே, எப்படிப் பார்ப்பது என்பதில் கவனமாக இருங்கள். எந்தக் கனவுகளை உங்களில் அனுமதிக்கிறீர்கள் எதை அனுப்பி விடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்” என்று மிர்தாதின் புத்தகம்’ வழி மிகெய்ல் நைமி’ கூறுவார்.

உள்ளும் – புறமுமான, இருப்பதும் – இல்லாதிருப்பதுமான தோற்ற வெளிப்பாடுகளைச் சுட்டிக் காட்டுவதைக் கவிஞர் அபி தனது அரண்மனைகளுக்குத் தூண்களாக நிறுத்தி வைத்திருக்கின்றார். நாமே நாமாகயில்லாமல், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதை நாமறிந்திருக்கின்றோமா? என்றால், ஏமாற்றம் தான் என்கிறார். 

நாம் எத்தனை எத்தனை வேடம் தரித்த வேடதாரிகளாய்க் காட்டிக்கொண்டே எப்பொழுதும் ஒன்றே ஆகி இருப்பதாய் மார்தட்டிக் கொள்கிறோம். இது,  நமக்கு  எப்பேர்பட்ட தோல்வி  என்கிறார்.

சூழலிலிருந்து
பிரிபட்டு
உருக் கொண்டெழும்
விஷயங்களை
ஊடுருவியதில்

விதம் புணர்ந்த
வாழ்க்கையை
நீள்கோடுகளில் ஆராய்ந்ததில்
எதிலும் தோல்வி”

எதிர்நோக்கும் கண்களில், ஒன்றாய் நாம் சிக்குவோம்.  நம்மை அசை போட்டு, மென்று, முழுங்கி,இது இப்படியாய் இருக்கிறது என்று அப்பதிவேட்டில் பதியப்படும்.  நாம் காட்சிப்பொருளாகி நிற்பது, ஒன்று இரண்டல்ல, வாழ்நாளில் ஓராயிரம். ஒவ்வொன்றும், ஒவ்வொன்றாகவே நம்மைப்  பற்றி  எழுதி  வைத்துக் கொள்கின்றன.

நாம் வளர்க்கும் எதோ ஒன்று, நம்மை எதோஒன்றாய் நினைக்கும். அதனின் இனமான வேறொன்று வேறோரிடத்தில் போகும் பொழுதோ, நிற்கும்போதோ அது, முன்னது நினைத்த அதையே தான் நினைக்கும் எனக் கூற முடியாது என்பதை இனம் பிரித்து அறிந்து கொள்வதைப் போல் தான் எல்லாமும்.

”விதம்
என்ன என்று தெரியாமல்
விழிப்பதே  வழக்கம்.

விதம் மெல்லச் சிரித்து
இரக்கத்தோடு பார்த்து
அசைவு எதுவுமின்றிக்
கடந்து போகும். (அப்படித் தோன்றும்)

எனக்கோ
விதம்
என்ன என்பது புரியாது”

நிகழ்வுகளை உணர்கின்றோம். அலசி ஆராய்கின்றோம். அதற்காகச் சில நேரம் வேறொன்றாய் மாறுகின்றோம். பின், உணர்த்துகிறோம். தாளமுடியாமல் சலித்துப் போய்,இதுதான் நான். போனால் போ”  என்கிறோம்.

  • எல்லாம் சரி. இருத்தலைப்  பூரணத்துவமாய்  இருந்திடாமல் வாழ்வதென்பது எது?
  • எத்தனை தோல்விகளை நமக்கே நாம் தருவது?
  • இருபுறமும் எளிமையாய் ஏமாறும் பட்டவர்த்தனம் உண்மையா?
  • கபடத்தின் வெளி விரிந்த வானத்தைத் தடவிக்கொண்டும் நடந்து நடந்து பார்ப்பதுதான் நீயா?  இல்லை  நானா?

எனப் பல கேள்விகளை இக்கவிதை முன்வைக்கிறது.  இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இக்கேள்விக்குத்  “தெளியுமா?  தொய்யுலகம்”

பாரதிசந்திரன், 9283275782,
[email protected]

  •  (கவிஞர் அபியின் 80- ஆவது பிறந்த நாள் ஜனவரி-22 ஆகும். அவரைச் சிறப்பிக்கும் வண்ணம் இக்கட்டுரையை வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்க்க வேண்டுகிறேன்.)
  • (கவிஞர் அபி குறித்தறிய www.abikavithaiulagam.blogspot.com எனும் எமது வலைப்பூவைக் காணலாம்)
Padaippum Thiranum Yerpu Kotpadum Book By Bharathichndran Bookreview By M Dhananchezhiyan நூல் விமர்சனம்: பாரதிசந்திரனின் படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் - மு தனஞ்செழியன்

நூல் விமர்சனம்: பாரதிசந்திரனின் படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் – மு தனஞ்செழியன்




காலங்கள் தோறும் மனிதன் மறைந்திலும். அவன் அடையாளங்களின் ஊடாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். தமிழ் எழுத்துக்களை அடையாளமாகக் கொண்டு தமிழை உயிராகப் போற்றத் திகழ்ந்த தோழர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் படைப்புகளைப் பற்றிய ஆழமான திறனாய்வு கட்டுரை நூல்.

தமிழில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்களைப் பற்றிய சுந்தர ராமசாமி அவர்கள் பட்டியலிடும் போது கவிஞர் அபி அவர்களின் பெயரைக் குறிப்பிடுவார் இன்று இணைய தளங்களிலும் முகநூலிலும் எழுதிக்கொண்டிருக்கும் புதிய கவிஞர்களுக்கு நிச்சயம் அபி அவர்களைப் பற்றித் தெரிந்திருக்காது. ஆனால், காலத்தால் மறுக்கவே முடியாத கவிதைகளைத் தந்து விட்டுப் போனவர். கவிஞர் அபி அவர்களைப் பற்றித்தான் இந்த புத்தகத்தின் முதல் கட்டுரையே தொடங்குகிறது.
“எதிர் எதிர்
தன்னைத் தான் முட்டிக் கொண்டது
காற்று.”

அனுபவங்களை ஹைக்கூவாக கைமாற்றித் தந்திருப்பது கவிஞர் அபி அவர்களுடைய உடைய படைப்பு. தமிழின் மந்திர எழுத்தாளரான கவிஞர் ஆமீர்ஜான் அவர்களைப் பற்றிய கட்டுரை ஆழமாக நீண்டுகொண்டே செல்கிறது. தோழர் குட்டி ரேவதி தான் குறிப்பிடுவார் ‘கவிதைகளுக்கு இலக்கண வடிவம் கிடையாது அவை மொழிக் கருவி.’ என்று அதைப்போல ‘மழைப்பெண் -பழனி பாரதி’ அவர்கள் எழுதிய நூலைப் பற்றி அதன் உட் கூறுகளை அணுக்களாகப் பிளந்து காட்டுகிறார். கவிதையின் ரசனையை உணர்ந்து அதன் பங்களிப்பை மீட்டுக்கொண்டு வந்து கவிழ்ந்த மழை குடையில் சேமித்த மழைநீரை நமக்கெல்லாம் பருக தருகிறார்.
பழனி பாரதியின் கவிதை

“நீண்ட காலமாய்
எனக்குள் புதைந்தை
வைரம் ஆகிவிட்டது
உனக்கு
கொடுக்க முடியாமல்
போன அதே முத்தம்.”

“வரலாறு தெரியாமல் போகிறவர்கள் வேர்கள் அற்ற மரம் ஆகிறார்கள்” என்பார் மாயா ஏஞ்சலோ. அது அதுவே உண்மையும் கூட வரலாறு தெரியாத அவர்களிடம் நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள். அப்படித்தான் இங்கே பகுத்தறிவுக்கு எதிராக மூடநம்பிக்கை சமூகம் கட்டி உருவாக்கப்பட்டது. மனிதர்களின் சிந்தனைகளை மடைமாற்றச் செய்து மதமும், சாதியும் திணிக்கப்பட்டது. இந்தியா மிகப்பெரும் வரலாற்றுச் சுழற்சியைக் கொண்ட நாடு. மதங்களின் வரலாற்றை மக்கள் தெரிந்து கொண்டால் எந்த மதத்திற்குப் பின்னாலும் வாலாக நிற்க மாட்டார்கள்.

இந்தியாவில் உருவான மதமாக இருந்த பௌத்த மத வரலாற்றைப் பண்டிதர் அயோத்திதாசர் ‘அம்பிகையம்மன்’ வரலாற்று நூலில் சாட்சியங்களுடன் விவரிக்கிறார். அதைப் பற்றிய ஆழமான கட்டுரையும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இணைய இதழ்கள் இன்று இலக்கியங்களின் ஒரு முக்கிய பங்காக விட்டது அப்படியான அயலகத் தமிழர்களின் இணையதளங்களான tamil.do.am , blog.selva.us, பற்றியும் அதில் வெளியான கவிதைகளைப் பற்றியும் நமக்கு ரசனையுடன், விவரித்துக் காண்பிக்கிறார் எழுத்தாளர் பாரதி சந்திரன் அவர்கள். தமிழ் இலக்கியங்களின் பகலவர் என்று அறியப்பட்ட சாமி. பழனியப்பன் கவிதைகளையும். ரெ. இராமசாமி அவர்களின் எண்ணற்ற படைப்புகளையும் நெறிப்படக் கட்டுரையாக்கி இருக்கிறார்.

கலைமாமணி விருது பெற்ற உடுமலை நாராயணகவி பாடல்களைப் பற்றி அதன் மனித மேம்பாடு சிந்தனைகளையும், சமூக குறைபாடுகளையும் கவிஞரின் வழியே நமக்கு உணர்த்துகிறார். 1946 ஏப்ரல் சென்னை மாகாணத்தில் ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரசு அரசு எட்டு மாவட்டங்களில் மதுவிலக்கை பிரகடனப்படுத்தியது அதைப்பற்றி நாராயணகவி எழுதிய சமூகப் பாடலை வித்யாபதி படத்தில் வரும்.
“கள்ளு பீர் , சாராயம்
காம வகைகள் கெட்ட
கஞ்சா அபினிகளெல்லாம்
செடியொழிக்கப்
பிள்ளை குட்டிப் பெண்சாதி
வயிறார உண்ணப்
பெற்றதே சுதந்திரம்.”

நவீன கவிதைகளுக்குள் மட்டும் பயணிக்காமல். சங்க இலக்கியங்களிலிருந்தும், குமரகுருபரர், ஆதிசங்கரரின் வரலாறு உருவாக்கிய பண்பாட்டுக்கூறுகள், சிந்தனைகளையும் ஒரு பிணக்கூறு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.

தமிழில் உருவான எண்ணற்ற அறியப்படாத படைப்புகளைப் பற்றியும், காப்பியங்களின் அறிவியல் கூறுகளைப் பற்றியும், சங்க இலக்கியங்களின் வேளாண்மை பற்றியும், ஒரு தமிழ் அறிவியல் ஏடாக “படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடு” நூலை கையில் ஏந்தலாம்.

நூல்: படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்
ஆசிரியர் : பாரதிசந்திரன் (முனைவர் செ. சு. நா. சந்திரசேகரன்)
ஆசிரியர் எண் : 92832 75782
பொருள் : ஆய்வுக் கட்டுரை
விலை : 180
பக்கங்கள் : 200
பதிப்பகம் : சிவகுரு பதிப்பகம்