இசை வாழ்க்கை 78: பாட்டு வெள்ளம் நிக்காது  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 78: பாட்டு வெள்ளம் நிக்காது – எஸ் வி வேணுகோபாலன்




திருமண வரவேற்பில் அருமையான இசைக் கச்சேரியில் ஒற்றைப் பாடல் கேட்டு விடைபெற நேர்வது உள்ளபடியே குற்ற உணர்ச்சியையும், ஏமாற்றத்தையும் பெருக்குவதாகும். அதுவும் பாடகர்கள் நாம் அறிந்தவர்களாக இருந்தால், அவர்களையும் மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் சூழலாக இருந்தால்….

இ மு வெற்றிவளவன் எண்பதுகளில் அருகே சென்று பேச வாய்த்த அருமையான கவிஞர், பாடலாசிரியர். ‘ஈர நாற்றுக் கட்டு சுமந்தேன் உச்சி எரிய….நான் உள்ளதெல்லாம் சொல்லியறியேன் செல்லக் கிளியே’ என்ற பாடலை எழுதி இருக்கிறேன், எப்படி இருக்கிறது என்று அவரே பாடிக் கேட்ட நினைவு மங்கலாக இருக்கிறது. பின்னொரு சமயம் வேறொரு பாடல்….செருப்பு தைக்கும் தொழிலாளியின் குரலை வேறு யார் பாடல் ஆக்கி இருக்கிறார்….

மகத்தான தோழர் விபி சிந்தன் மே 1987ல் மறைந்தபோது, பெரம்பூர் குக்ஸ் சாலை ஏ பி நினைவகத்தில் அவருடல் தொழிலாளி வர்க்கத்தின் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டிருக்கையில், ஒலிபெருக்கியில் மிக மிக உருக்கமாக ஒரு குரல் கேட்டுக் கொண்டிருந்தது, பாடகர் யாராக இருக்கும் என்பது முதல் சொல்லிலேயே பிடிபட்டது. அந்தப் பாடலை எழுதியதும் வெற்றி வளவன் தான்.

மலையாள தேசம் தந்த மாணிக்கமே – தமிழ்
மண்ணோடு கலந்தவரே மார்க்சியமே
போராடி வாழ்ந்தவரே சரித்திரமே – உங்கள்
போராட்டம் என்றும் எங்கள் படிப்பினையே

அன்று மாலை இரங்கல் கூட்டம் ஓட்டேரி இடுகாட்டில் நடக்கையில், தோழர் விபிசி மறைவின் அதிர்ச்சியில் பேச இயலாது உடைந்துபோய்க் கதறியவர் விடுதலை போராட்ட வீரர் தோழர் பி இராமமூர்த்தி. அவரையும் டிசம்பர் 15, 1987 அன்று பறிகொடுத்தோம். அன்று காலை சென்னை வடபழனியில் தொடங்க இருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூன்றாவது அகில இந்திய மாநாட்டுக்கு வரவேற்புக்குழு தலைவரே அவர் தான். அவரது உடலும் அதே குக்ஸ் சாலை அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கையில், சிந்தன் அவர்களுக்கு எழுதிய பாடலில் சில திருத்தங்களோடு வெற்றி வளவன் எழுதிய பாடலையும் அதே பாடகர் மிகவும் நெகிழ்ச்சியுற வைக்கும் குரலில் இசைத்தார்.

இதய வானிலே உதய தீபமாய்
இடது சாரிகள் வளரும் நேரத்தில்

அகில இந்திய வாலிபர் சங்க மாநாட்டுக்கு நீ
தலைமை ஏற்றும் வரவில்லையே, ஏன் தோழனே…

என்ற இடத்தில் அங்கே கதறி அழாதார் கிடையாது. அடுத்த வரிகளில், ‘தஞ்சைத் தரணி தந்த மாணிக்கமே, தமிழ் மண்ணோடு கலந்தவரே மார்க்சியமே’ என்று கொணர்ந்திருந்தார் வளவன். அந்தப் பாடலை இசைத்தவரைத் தான் திருமண வரவேற்பில் பார்த்தது.

மக்கள் பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் குறித்த பாடல்களை பொதுவுடைமை இயக்கம் பதிவு செய்து ஒலிப்பேழைகளில் கொண்டுவந்தபோது, ‘காலத்துக்கும் உழைச்சு உழைச்சுக் கண்டது என்ன மாமா, காளையாட்டம் நேத்து இருந்த உடம்பு போச்சுதே வீணா’ என்ற பல்லவியை அபாரமாக வாணி ஜெயராம் தொடங்க, அவரோடு இணைந்து பாடி இருந்த உதய பாண்டியன் தான் அவர்.

அண்மையில் ஒரு திருமண வரவேற்பில் மணமக்களை வாழ்த்த மேடை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், அத்தனை அசத்தலாக பாடிக் கொண்டிருந்தார் ஒருவர். முதல் பார்வையிலேயே, அந்தக் குரலைக் கேட்டதுமே பிடிபட்டுவிட்டது. மின்னலும் இடியும் ஒரு சேர நிகழ்வது போல் உணர்ந்த இன்ப அதிர்ச்சி நேரமது.

பாடல் முடியக் காத்திருந்து, ‘தோழர் உதயபாண்டியன் தானே…’ என்றதும், அவரும் சட்டென்று அன்போடு இறங்கி வந்து, ‘முப்பது வருஷம் ஆகி இருக்குமா, பார்த்து!” என்று கேட்டார். ‘அருமையாகப் பாடினீர்கள் தோழா….அவங்களுக்கும் சொல்லுங்க” என்றதும், ‘பர்வீன்’ என்று அழைத்து உடன் பாடிய பாடகிக்கும் பாராட்டைச் சேர்த்தார். பாடலின் நுட்பமான இடங்களை அத்தனை அம்சமாகக் கொண்டு வந்திருந்தார் உதயபாண்டியன்.

கோவில்பட்டியின் முற்போக்கு வாசகர் பள்ளியைச் சார்ந்த பாரத ஸ்டேட் வங்கி தோழர் பால்ராஜ் அவர்களுடைய மகள் திருமண வரவேற்பில், வங்கி ஊழியர் கலைக்குழு (பீட்) ஸ்ரீதர் அவர்களை சந்தித்ததும் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி, தோழர் உதய பாண்டியனைப் பார்த்ததும் பன்மடங்கு பெருகியது. இசைக் குழுவின் தபேலா கலைஞரின் வாசிப்பும் அபாரம். அவர் வாசிப்பின்போதே என் கொண்டாட்ட உணர்வைக் கண்களாலேயே கடத்த, அவரும் வாசித்தவாறு அதை ஏற்றுக் கொண்டு விடுத்த புன்னகை உருவிலான பதிலை எழுத்தில் வடிக்க முடியாது.
முதல் மரியாதை படம் மலேசியா வாசுதேவன், எஸ் ஜானகி இருவரின் மிகச் சிறந்த பாடல்களை இளையராஜா இசையில் வழங்க வைத்தது. அவற்றில் அம்சமான ஒன்று தான், அன்று உதயபாண்டியன் பாடியது.

காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழ்தல் மட்டுமல்ல, ஆதரவு பட்டதே இன்பம் என்று எழுதிச் சென்றாள் அவ்வை. அந்த ஆதரவு படும் பாடு தான் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்தப் பாடலின் கதைக் களம், சாதீய பெருமிதத்தைக் கீழிறக்கி அந்தக் கம்பத்தில் காதலின் கொடியேற்றுவதைச் சொல்கிறது. பிரச்சனைகளின் அடிவேரில் சாதி இருக்கிறது, ஆனால், மானுட வரலாற்றின் வேரில் தூய அன்பு தான் இருக்கிறது. அந்த வெட்டி வேர் வாசம் தான் பாடலின் பல்லவி.

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு, மண்ணின் கவிஞர் என்ற அடைமொழியை பாடல்களுக்கான ஒலிப்பேழை அறிமுகத்தில் சொல்லியிருப்பார் இயக்குநர் பாரதிராஜா. ராக ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் என்பது ராஜாவுக்கு அவர் கொடுத்த பாராட்டு. நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் முக்கியமாகப் பேசப் படவேண்டிய ஒன்றாக அமைந்த படத்தில் ராதாவுக்கு வாய்த்த இடமும் சிறப்பானது. இந்தப் பாடலில் தோன்றும் பாத்திரங்கள் – பாடல் முடிவில் உருளும் பாத்திரங்கள் வரை அத்தனை செம்மையான நடிப்பை வழங்கி இருப்பார்கள்.

எந்த இசை முன் பொழிவும் இன்றி, திடீர் என்று பெய்யத் தொடங்கும் மழை போல், சட்டென்று பல்லவியை எடுக்கிறார் எஸ் ஜானகி, ‘வெட்டி வேரு வாசம், வெடலப் புள்ள நேசம்’ என்று! அதிலிருந்து, ‘பூவுக்கு வாசம் உண்டு, பூமிக்கும் வாசம் உண்டு….’ என்று அவர் கதாபாத்திரத்தின் பாச உணர்ச்சியை நீட்டிக்கும் இடத்தில், ‘வேருக்கு வாசம் வந்ததுண்டோ…’ என்று பற்றிக் கொள்ளும் மலேசியா வாசுதேவன், ‘மா….னே’ என்று அந்த உணர்வை அப்படியே திரும்பக் கையளித்து, பல்லவியைச் சென்றடைய, லயிக்க வைத்துவிடுகிறது தாளக்கட்டு.

முதல் சரணத்தை நோக்கிய உணர்ச்சி வெளிப்பாட்டில் வயலின்களின் ஆரத் தழுவலும், புல்லாங்குழலும் மட்டிலுமே அல்ல, ஷெனாய் உள்பட கொண்டு வந்திருப்பாரோ ராஜா என்ற தேடலில், கிடாரின் முத்தத் துளிகளும், அபாரமான ஷெனாய் வாசிப்பும், நிழலோட்டமாக கிளாரினெட் இசையும், துந்தனா கருவியும் இருப்பது நோட்ஸ் குறிப்பேட்டில் காணக் கிடைத்து குதூகலிக்க வைத்தது. கதைக் காட்சிக்கான பாடலை அல்லது அதற்கான இசையை மட்டுமல்ல, அதற்குமேல் சென்று அந்த நேரத்து உணர்வுகளையும் தேர்ச்சியாக ரசிகர்களைச் சென்றடைய வைக்கும் ராஜாவின் ஞானம் அபாரமானது. புல்லாங்குழல் சரணங்களுக்கு இடையே வரும் போதும், சரணங்களில் வரிகளுக்கு இடையே நுழைந்து வெளிப்படும்போதும் காதல் தாபத்தையும், மோகத்தையும் பிழிந்து கொடுக்கிறது எனில், சமூகத்தின் எதிர்வினைகளை மற்ற கருவிகளின் வழி கேட்க முடியும் பாடல் நெடுக.

எதிர்ப்புகளின் இடையே விளையும் காதல், காதும் காதும் வைத்ததுபோல் பரஸ்பரம் இரகசியமாகத் தானே பரவும், மலேசியா வாசுதேவன் குரலில் அந்த வேதியல் பொருள் இழைத்துக் குழைத்து வழங்கப்பட்டிருக்கும்.

முதல் சரணத்தின், ‘பச்சைக் கிளியோ….’ என்ற தொடக்கத்தில் சிறகு சிலிர்த்துக் கொண்டு காதல் உறவைப் பறந்து போய்த் தேடும் கிளி, ‘இச்சைக் கிளியோ….’ என்ற நீட்சியில் தக்க இடத்தை வந்தடைந்து கொஞ்சத் தொடங்கி விடுகிறது. பச்சை மனசில் காதல் நெருப்பு பத்திக்கிருச்சு என்பதை ஜானகி என்னமாகப் பற்ற வைக்கிறார் ! தங்கள் காதலின் கம்பீரத்தில் சமூகத்தைப் பார்த்து இருவரும், ‘கையைக் கட்டி நிக்கச் சொன்னா, காட்டு வெள்ளம் நிக்காது, காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது’ என்று இசைப்பது ஒரு கோட்பாட்டின் பிரகடனம் போல் ஒலிக்கிறது. அடுத்த வரிகள் அவற்றை மேலும் அழுத்தமாகப் பதிக்கின்றன. சரணத்தின் நிறைவில் ஒரு சொடுக்கு போட்டு முடித்து, பல்லவியில் மீண்டும் சுவாரசியமாக வந்து இணையும் தபேலா தாளத்தின் கொண்டாட்டம் இனிமையானது.

இரண்டாம் சரணத்தை நோக்கிய நடையில் ராஜா சூழலின் உணர்ச்சிகளை வழங்கும் கருவிகளாகத் தேர்வு செய்து (இசைக்குறிப்புகள் பார்த்தால் சந்தூர், கலிம்பா என்று விரிகிறது….இத்தனை நுட்பங்கள் எல்லாம் கற்காமல் போனோமே என்று மீண்டும் தோன்றியது) பயன்படுத்தி இருப்பது பாடலோடு மேலும் நெருக்கத்தைக் கூட்டுகிறது.

இரண்டாம் சரணத்தை ஜானகி முன் மொழிய, வாசுதேவன் வழி மொழிகிறார். ‘உன்னக் கண்டு நான் சொக்கி நிக்கிறேன்’ என்று ஜானகி இசைப்பதில், அந்த ‘நான்’ எத்தனை சுழற்சிக்குள்ளாகிச் சொக்க வைக்கிறது. ‘கண்ணுக்குள்ள நான் கண்ணி வைக்கிறேன்’ என்னுமிடத்தில் அந்த மயக்கம் குரலில் மேவிவிடுகிறது. ‘சொல்லாமத் தான் தத்தளிக்கிறேன்…தாளாமத் தான் தள்ளி நிக்கிறேன்’ என்ற வரிகளில் குரலில் தவிப்பின் மை தொட்டு எழுதுகிறார் வாசுதேவன். அடுத்த இரு வரிகள் திரைக்கதையின் உட்கருவைப் பேசுகின்றன. ‘குருவி கட்டும் கூண்டுக்குள்ள குண்டு வைக்கக் கூடாது’ என்பது மிக முக்கியமான வரி.

‘புத்தி கெட்ட தேசம் பொடி வச்சுப் பேசும்’ என்பதை ஜானகி எத்தனை அவஸ்தை பொங்கும் பதைபதைப்போடு வெளிப்படுத்துகிறார். ‘சாதி மத பேதமெல்லாம் ..’ என்று ஓங்கரிக்கும் மலேசியாவின் குரல், ‘முன்னவங்க செஞ்ச மோசம்’ என்று தணிவான குரலுக்கு இறங்கி அநீதியைச் சாடும் இடத்தில், ஆணவக் கொலைக் களங்களில் உண்மையை உரத்துப் பேச முடியாத நெருக்கடியை பிரதிபலிக்கிறது.

பாடல் வெளிவந்த காலத்தைவிடவும் இப்போது ஆகப் பொருத்தமானது என்று தோன்றும் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும், இசை இந்த உலகத்தின் வெறுப்பு உணர்ச்சிகளைக் களை பிடுங்கிப் போட்டுவிடக் கூடாதா, சமூகத்தின் இதய சாளரத்தை மேலும் கூடுதலாகத் திறந்து கொடுத்துக் காற்று தவழ விடாதா என்ற உணர்வு மேலிடுகிறது.

உன்னதமான உணர்வுகளை இன்பியலாகவோ, துன்பியலாகவோ கிளர்த்தி விடுகிறது இசை. நேருக்கு நேர் நின்று பேசுகையில் சொல்ல முடியாத சொற்களை, ஒப்புக் கொள்ள முடியாத சங்கதிகளை இரவின் தனிமையில் கேட்கும் இசை உட்புகுந்து கண்ணீராக மொழிமாற்றம் செய்து வரவழைத்துவிடுகிறது. சமூகத்தின் மனசாட்சியை இசை நிச்சயம் அசைத்துக் கொண்டே தான் இருக்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் தீவிர ரசிகன் நான். அவரின் “என் இனிய தமிழ் மக்களே” குரலை கேட்கிற போதெல்லாம் என் மனம் இப்பவும் சிறகடிக்கும். இவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்துவிட வேண்டும் என்பது என் கனவு. அந்நாளில் என் உடன்பிறவாச் சகோதரர் அண்ணன் ஐந்துகோவிலான் அவர்கள் அவரிடம் உதவி இயக்குநராக பணி செய்துகொண்டிருந்தார். ஒரு உதவி இயக்குநராக இருந்துகொண்டு இயக்குநரிடம் இன்னொருவருக்கு உதவி இயக்குநர் வாய்புக் கேட்பதெல்லாம் ஒரு சங்கடமான விசயம்.

அதே போல் திரைப்பட ஸ்டில் ஃபோட்டோகிராபர் “அருள் ஸ்டுடியோ” மனோகரன் அண்ணனிடமும் யாரிடமாவது உதவி இயக்குநராக சேர்த்துவிடும்படி கடிதம் மூலம் தொடர்பில் இருந்தேன். முதலில் யாரிடமாவது உதவி இயக்குநராக உள் நுழைந்து கொண்டால் பின்னர் பாரதிராஜா அவர்களிடம் சேர்வதற்கு சென்னையிலிருந்தபடியே முயற்சி செய்யலாம் என் எண்ணம், ஆனால் சொல்லும்படியாக ஒன்றுமே சாதிக்காமல் காலம் ஓடிக் கொண்டே இருந்ததை என்னால் ஏற்க இயலாமல் எந்த ஒரு செயல்பாடும் களத்திலிருக்கும் போதுதான் சாத்தியம் என்று முடிவெடுத்தேன்.

Paadal Enbathu Punaipeyar Webseries 12 Written by Lyricist Yegathasi தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

வத்தலக்குண்டு G.தும்பைப்பட்டியில் என் அக்கா ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குமுதம். அது பாரதிராஜா அவர்கள் திருமணம் முடித்த ஊர். அங்கே இயக்குநர் இமயத்தின் நண்பர் கோபால் அவர்களிடம் என்னை குமுதம் அக்கா அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் கோபால் அவர்கள் பாரதிராஜா அவர்களிடம் நான் உதவி இயக்குநராக சேர்ந்துகொள்ள ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்து அனுப்பினார். கடிதம் பெற்றுக் கொண்டு பார்சன் காம்ப்ளக்ஸ் முன் நின்றேன் அது இமயத்தின் அலுவலகம். அவர் “கிழக்குச் சீமையிலே” வெற்றியைக் கொண்டாட வெளிநாடு போயிருப்பதாகச் சொன்னார் செக்யூரிட்டி. அதை கேட்டு விட்டு வெளியேறுவதைத் தவிர வேறுவழி அப்போதைக்குத் தெரியவில்லை எனக்கு.

நடிகர் பெரியகருப்பத்தேவர் அப்பாவின் வீட்டிற்குச் சென்று விசயத்தைக் கூறினேன். பாரதிராஜா சாரிடம் எவருடைய சிபாரிசும் செல்லாது என்கிற உண்மையைத் தெரிந்து கொண்டு அந்த கடித்தை சூட்கேஸின் அடியில் வைத்துவிட்டேன். சாப்பிட எதுவும் இல்லையென்றால் அக்கம் பக்கத்தில் பஸ்ஸிற்கு காசு புரட்டிக் கொண்டு நம் வீட்டிற்கு வந்துவிடு. இங்கு எப்போதும் உணவிருக்கும். பட்டினி மட்டும் கிடந்துவிடாதே என்று நந்தனம் வீட்டிலிருந்து பெரியகருப்பத்தேவர் அப்பா சொன்னது இன்னும் என் காதுகளில் கேட்கிறது ஆனால் இன்று அவர் இல்லை. நான் அவர் வார்த்தைகளை புதிதாக வாய்ப்புத் தேடிவரும் தம்பிமார்களிடம் சொல்கிறேன். அந்த நல்ல இதயம் நூறு படங்களுக்கும்மேல் நடித்தும், தம்பி ஞானகரவேல் எழுதிய “சிவகாசி ரதியே” பாடலை பாடியும் நம்மோடு இருக்கிறார். இன்று அவரது மூத்த மகன் இனிய தம்பி விருமாண்டி “ரணசிங்கம்” என்கிற படத்தை இயக்கி வெற்றிபெற்றுள்ளதை நினைத்து புளகாங்கிதம் அடைகிறேன்.

பிற்காலத்தில் “அன்னக்கொடி” படத்தில் ஒரு பாடல் எழுதி அதற்கு பாரதிராஜா அவர்களின் கையால் கையெழுத்திட்ட சம்பளக் கவரை வாங்கி வெளிவந்தது அதே பார்சன் காம்ப்ளக்ஸ் தான். பின்னொரு நாள் தேனியில் இருந்துகொண்டு அழைத்தார் போனேன். அன்னக்கொடி படத்தின் அதுவரைக்கும் எடுத்துள்ள 3.30 மணிநேர ரஷ் காண்பித்தார். அதில், மனைவியை சந்தேகிப்பதையும் கொடுமைப் படுத்துவதையுமே வாழ்வாகக் கொண்ட ஒரு முரட்டுத்தனமான கணவனிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பித்து காடு கரை தாண்டி ஓடிவந்து எதார்த்தமாக தன் காதலனின் குடும்பத்திலேயே அடைக்கலமாகிற ஒரு மாறுபட்ட சூழலைச் சொன்னார்.

படத்தில் காட்சியாகக் கூற வேண்டுமானால் நான் ஏழு காட்சிகளை எடுக்கவேண்டும். படம் மிகவும் பெரிதாகி விடும்., ஆனால் ஏழு காட்சிகள் சொல்லவேண்டிய விசயத்தை நீ மூன்று நிமிடங்களில் சொல்லி முடிக்க வேண்டும் என்றார் இயக்குநர் இமயம். அந்த பாடலைத் தான் சென்ற வாரம் தொடங்கினேன், இப்போது முடித்தும் வைக்கிறேன். இது ஜி.வி. பிரகாஷ் குமாரும் பூஜாவும் பாடியது. வெயிலில் நனையும் இவர்களது குரலை ஒலி கேட்டுப் பிரமிக்கலாம்.

ஆண்:
உண்ணப் பழ மில்ல
உக்காரக் கொப்பு மில்ல – இனி
எங்கதான் போவாளோ
எங்க கிளி

ஆண் – பெண்
மகளேன்னு மாரடிக்க
ஒரு தாயுமில்ல – ஒரு
தாயுமில்ல
ஆத்தான்னு ஓடிவர
ஒரு அப்பனுமில்ல – ஒரு
அப்பனுமில்ல

பெண்:
சுத்திரது இந்த பூமியா
ஏ பக்கத்தில நிக்கிறது சாமியா
ஒன்னப் பாத்தது – ஏ
ரெண்டாம் பொறப்பு
இனிமேல் ஏது என்
உசுருக்கு இறப்பு

ஆண்:
உசுர எடுத்துக்கிட்டு
ஒருநாள் போனபுள்ள
தொட்டிச் சீல சுத்திக்கிட்டா – இவ
இனி இந்த வீட்டுப் புள்ள

இயக்குநர் இமத்திற்கும் எனக்குமான தொடர்பு என்பது மிகச் சிறியது தான். ஆனால் அது சிலந்தி வலை போன்று பின்னப்போனது. நான் அவரைப் பற்றி எதை எழுதினாலும் அதற்கு மேலும் எழுத முன்னும் பின்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

ஒருவன் உண்மையாய் காதலிக்கப்படுகிற ஒரு விசயம் அவனிடம் ஒரு நாளில் வந்தடைந்தே தீரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படித்தான், இலக்கியம் தெரிந்த ஓர் உதவி இயக்குநர் வேண்டுமென அண்ணன் சீமான் அவர்களிடம் பாரதிராஜா அவர்கள் கூற, அவரைச் சுற்றி ஆயிரம் பேர் இருந்தபோதும் சீமான் அண்ணன் என்னை அழைத்துக் கொண்டு அறிமுகம் செய்து வைத்தார். அந்த நாளன்று அவரிடம் நான் ஒரு குறுங்கதை சொன்னதும் அவரோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதும் மறக்க முடியாத தருணம்.

தமிழ்த்திரை சேனலுக்காக அவர் இயக்கிய “மயிலு குயிலு” நிகழ்ச்சிக்கு அவரோடு உட்கார்ந்து காட்சிகளை விவாதித்தபோது அவரிடம் நான் கண்ட ஈடுபாட்டை எண்ணி வியந்திருக்கிறேன். உதவி இயக்குநர்களை வெறும் எடுபுடியாக மட்டும் பயன்படுத்தும் பல இயக்குநர்களுக்கு மத்தியில் அவர் உதவியாளர்களின் சிந்தனையை மதித்து அவர்களை வார்த்தெடுக்கும் விதம் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.

எனது “கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை” படத்தைப் பார்த்து விட்டு அவர் 20 நிமிடங்கள் பாராட்டிப் பேசியது இன்னும் என் இதயத்தில் மிதக்கிறது. என் நடிப்பையும் இயக்கத்தையும் கூட அவர் பாராட்டியது எனக்குள் இன்னும் பூக்காலமாக இருக்கிறது.

ஒருமுறை கலைஞர் டிவிக்காக அவர் இயக்கிய “தென்பாண்டி சிங்கம்” தொடரில் என்னை நாயகனாக நடிக்கக் கேட்டு நான் பாடல் எழுதும் பணி கெட்டுவிடுமே என்றெண்ணி மறுத்தபோது. “நீ நடி.. சங்கரபாண்டி வந்துட்டா ஒன்ன விட்டுடுறேன்” எனச்சொல்லி தேனிப்பக்கம் ஒரு கிராமத்தில் அவர் இயக்கத்தில் ஒருநாள் கதாநாயகனாக நடித்துவிட்டு மறுநாள் சங்கரபாண்டி வந்ததும் நான் சென்னை வரை அவர் முன் நடித்ததை எண்ணி தலைகால் புரியாமல் ஆனந்தித்ததை எப்படி சொல்வேன்.

“மதயானைக் கூட்டம்” பாடல் வெளியீட்டு விழாவில் என்னைப் பாராட்டி அன்பெனும் மழையில் நனைத்தது தொடங்கி இன்றுவரை எங்கு பார்த்தாலும் நான் எழுதி வெளியாகிற புதிய பாடல்களையெல்லாம் கேட்டுவிட்டு பாராட்டுகையில் என் விழிகளில் நீர் முட்டாமல் என்ன செய்யும். என் உடல் சோறு தின்று வளர்ந்தது ஆனால் என் உயிர் அவரின் சினிமா உண்டு வளர்ந்தது.

“எவன் எவனோ என் காசைத் தின்கிறான் என் பிள்ளை நீ ஏன் தள்ளி நிக்கிற அடிக்கடி அலுவலகம் வா.. என்ன வேணும்னாலும் கேளு செய்யிறேன்” என்று சொன்ன அவர் தாயன்பின் முன்னால் உருகிக் கிடக்கிறேன்.

‘மஜா’ ‘கண்ணும் கண்ணும்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து பின்னாளில் “சட்டென்று மாறுது வானிலை” எனும் படத்தை இயக்கிய என் நண்பர் ரவி பெருமாள் என் பயணத்தில் மறக்க முடியாத பண்பாளர். எப்போதும் இனிமையாகப் பேச அவரைப் போன்று என்னாலெல்லாம் இயன்றதில்லை. அவர் இயக்கிய படத்திற்கு மூன்று முத்தான பாடல்களை எழுதினேன். படம் வெளியாவதில் தாமதமாகிக் கொண்டிருக்கிறது, ஆனாலும் உற்சாக குறையாத மனிதர். அவர் படத்திற்கெழுதிய ஒரு பாடலின் ஒரு சரணத்தை மட்டும் இப்போதைக்கு உங்களுக்கு. இது காதலனும் காதலியும் படுக்கையறையில் எழுதிய காமத்துப்பால். ஷியாம் இசையில் உன்னிமேனனும் சித்ராவும் உருக்கி உருக்கி ஊற்றித் தந்த பாடல் இது.

Paadal Enbathu Punaipeyar Webseries 12 Written by Lyricist Yegathasi தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

ஆண்:
யாழ் தொட்டு நான் மீட்ட
உடல் கொண்டு வந்தாய்
உன் சிணுங்கலையே
இசையெனத் தந்தாய்

பெண்:
தேரொன்றை மலர் தான்
இழுத்திடும் இங்கே – என்
தேவைகள் அறிந்து
முழங்கிடு சங்கே

ஆண்:
என் ஆறாம் திணை
நீயல்லவா
உனை ஏழாம் சுவை
எனச்சொல்லவா

பெண்:
நீ யானைக் கன்று
போன்றல்லவா
பூவே என்று
பொய்சொல்லவா

ஆண்:
காமம் தான்
உயிரினை எரிக்க – அன்பே
படுக்கைகள் எதற்கடி
நாம் விரிக்க

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி



Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி
ஊர் எல்லையில் இருக்கும் கருப்புசாமி சிலையை எவராலும் புகைப்படம் எடுக்க முடியாது என்பது எங்கள் ஊர் சனங்களின் நம்பிக்கை. எனக்கு எதையும் புதிதாகச் செய்யவேண்டும் என்பதும் அதற்கான துணிவை வரவழைத்துக் கொள்வதும் பிடித்தமான விசயம் இப்போது வரையிலும் கூட. இதற்கு முன் கடவுள் தொடர்பான அனுபவம் ஒன்றிரண்டு எனக்குள் இருந்தது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒருநாள் மதிய உணவ வாங்க தட்டோடு வரிசையில் நின்றிருந்தேன், ‘எ’ பிரிவின் தமிழாசிரியர் தாராப்பட்டி பெரியசாமி அவர்கள் வரிசை கண்காணிப்பு பணியில் இருந்தார். நான் அன்றைக்குத்தான் அவர் முகத்தை மிக அருகில் பார்த்தேன். அவரின் மீசை சிற்றெறும்பின் ஒரு வரிசை போன்றிருந்தது எனக்குள் பெரும் சிரிப்பை வரவழைத்தது, இருப்பினும் அடக்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த என் நண்பனிடம் “இங்க பார்றா இந்த வாத்தியாருக்கு எத்தனூண்டு மீசைன்டு” எனச் சொல்ல, இது தமிழ் அய்யா காதில் விழுந்து மறுநொடி எதிரே பார்த்தார், நான் நின்றிருந்தேன். அந்த வாக்கியத்தையைச் சொன்னது நான்தான் என்பது என் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது போலும் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

என் செவிப்பறை அதிர்ந்த விசயம் என் வகுப்பறை முழுக்க நிரம்பி வழிந்தது. மன்னிக்கணும் பள்ளிக்கூடமே நிரம்பி வழிந்திருக்கிறது, காரணம் நான் பள்ளியின் கதாநாயகன், அடித்தவர் என்னை அறிந்திருக்கவில்லை போலும்.

“அறிந்திருக்கவில்லை என்றால் அப்புறமென்ன கதாநாயகன்”

என்றுதானே கேட்கிறீர்கள். அது அப்படித்தான். இந்த லட்சணத்திற்கே நான் முட்டி முட்டி மக்கப் பண்ணிக் கிடந்து, செத்து சுண்ணாம்பானது எனக்குத்தான் தெரியும். அடுத்து வகுப்பிற்கு வந்த குருசாமி வாத்தியார்,

“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு”

என்கிற அய்யன் வள்ளுவரின் குரலோடு வகுப்பைத் தொடங்கினார் என்பதல்ல செய்தி. துயரம் தாளாது நான் அன்று மாலை எங்கள் ஊர் காளியம்மன் கோவிலில் முன் நின்று என் கோரிக்கையை முன்வைத்தேன். அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கை என்னவென்றால்,

“சாமி…, என்னை ஒரு சிறுவன் என்றுகூட பாராமல், விபரம் தெரியாமல் பேசிவிட்ட ஒரு சாதாரண விசயத்திற்காக ஈவு இரக்கமின்றி அறைந்த பெரியசாமி அய்யா, இந்தப் பள்ளியிலிருந்து மாற்றலாகிப் போய்விட வேண்டும்” என்பதுதான். இதில் என் கண்ணியம் என்னவென்றால், நான் பெரியசாமி அய்யாவை வேறு பள்ளிக்கு மாற்றத் தான் சொன்னேனே தவிர காளியிடம் அவரை வேலையிலிருந்தே தூக்கச் சொல்லவில்லை. இன்னொன்று நான் உங்களிடம் தமிழய்யாவிற்கு நாங்கள் வைத்திருந்த ‘மூக்கு நோண்டி’ என்கிற பெயரை சொல்லாமல் மறைத்ததும்தான். இன்னும் அவர் மேல் இவனுக்குக் கோபம் தீரவில்லை என்பது உங்கள் மைண்ட் வாய்ஸ் இல்லையா. இல்லை என் கோபம் அய்யா மீது அல்ல, அவரை பள்ளியிலிருந்து மாற்றலுக்கு வழிவகை செய்யாத கடவுள் மீதுதான். கடவுள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. பிறகென்ன நானும் கடவுளைக் கண்டுகொள்ளவில்லை. மிக்க நன்றி பெரியசாமி அய்யா உங்களின் அறை தான் ஒரு பகுத்தறிவுவாதி உருவாக மூல காரணம்.

பல்லவி
காவிகள் செய்யும் லீலையை இனியும்
ஒத்துக் கொள்வதா
ஆவிகள் பேசும் என்கிற சொல்லை
நம்பிச் செல்வதா

மருந்திட்டால் போதும்
ஆறிவிடும் காயம்
இல்லாத கடவுளை
இழுப்பதென்ன நியாயம்

சரணம் – 1
தேர்வினில் வெல்லத் தேங்காய் உடைத்தல்
எப்படி ஞாயமடா
ஒழுங்காய்ப் படித்தால் உடைக்கும் தேங்காய்
சட்டினி ஆகுமடா

வைத்திடும் பொங்கலை வாரி வழித்து
சாமி தின்கிறதா
வட்டிக்கு வாங்கி வீட்டிற்கோர் ஆடு
வெட்டு என்கிறதா

பேய்கள் வருவதை நாய்கள் அறித்திடும்
பேச்சினை நம்பாதே
பூனை குறுக்கே விதவை எதிரே
தடையெனக் கொள்ளாதே

வேல்கள் உடம்பில் குத்திக்கொள்ளும்
வேண்டுதல் தேவையா
வாள்கள் சுமக்கும் சாமியின் உருவம்
வன்முறை தானய்யா

சரணம் – 2
கூழுக்கு வழியின்றி குடிசைக்குள் வாழும்
ஏழைகள் ஒரு பக்கம்
பாலுக்குள் நாளும் நீச்சல் அடிக்கின்ற
சாமிகள் யார் பக்கம்

மூக்குத்தி இல்லாமல் தங்கச்சி கல்யாணம்
நடக்காமல் இருக்கு
தெய்வத்தின் உண்டியல் தங்கத்தைத் தின்று
செறிக்காமல் கிடக்கு

ஆசைகள் துறந்த சாமியார் கூட்டம்
ஏசியில் வாழ்கிறது
பூஜைக்கு வந்த பெண்களின் கற்பு
தீபத்தில் வேகிறது

தூணிலும் துரும்பிலும் சாமிகள் இருந்தால்
தவறுகள் நடந்திடுமா
பூகம்பம் வந்திங்கு பூமியும் பிளந்து
உயிரினம் அழிந்திடுமா

இந்தப் பாடலை முற்போக்கு மேடையெங்கும் தோழர் துரையரசன் அவர்கள் தானே அமைத்த மெட்டில் பாடி கேட்போரை விழிப்படையச் செய்துகொண்டிருக்கிறார், மற்றும் பாடலையே தனது சுவாசமாகக் கொண்டு என்னற்ற சமூகப் பாடலை இடைவிடாது பாடிக் கொண்டிருக்கும் தோழர் உமா சங்கரும் இப்பாடலைப் பாடி பதிவு செய்திருக்கிறார்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் எங்கள் ஊர் எல்லையில் விட்டுவிட்டு வந்த கனவாய் கருப்புசாமியை அழைத்து வருகிறேன். நண்பர்கள் பந்தமும் கூட கட்டினார்கள் கருப்பனை புகைப்படம் எடுத்தால் கருப்பன் கருப்பாக இருக்கமாட்டான் ஃபிலிம் வெள்ளையாகத்தான் வருமென்று. நான் 1997, 98 களில் “விவிட்டார்” அப்படின்னு ஒரு காமிரா வைத்திருந்தேன். சனங்களின் அறியாமையை போக்குவதற்காக காமிராவை கழுத்தில் மாட்டி களத்தில் இறங்கினேன், அதாவது கருப்பனின் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று ஓர் அழகான ஃபிரேம் வச்சு புகைப்படம் எடுத்துவிட்டு இறங்கினேன். பிறகு மதுரையில் கிளாசிக் லேபில் பிரிண்ட்க்கு கொடுத்தேன்.

அய்யோ.. நண்பர்களிடம் சவால் விட்டோமே, கருப்பன் வருவாரா வெள்ளையன் வருவாரா என்றெல்லாம் பதட்டத்தில் நான் காத்திருக்கவில்லை. கருப்பன் மிக அழகாக கலர்ஃபுல்லாக குறையின்றி நேர்த்தியாக ஜம்மென்று வந்திருந்தார். பிறகென்ன ஒரு பகுத்தறிவாளன இந்த சனங்க அன்புத் தொல்ல செஞ்சு, கருப்பனை முந்நூறு காப்பி பிரிண்ட் போடச் சொல்லி வீட்டு வீட்டுக்கு மாட்டிக்கிட்டாய்ங்க.

Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

“அன்னக்கொடியும் கொடிவீரனும்” என்று முதலில் பெயர் சூட்டப்பட்ட ஒரு திரைப்படம், பிறகு அந்தப் படம் “அன்னக்கொடி” என பெயர் மாற்றம் பெற்று வெளியானது. இந்தப் படம் ஜாதியத்திற்கு எதிரான கருவைக் கொண்டது. இசை ஜி.வி. பிரகாஷ் குமார். ஒளிப்பதிவு சாலை சகாதேவன். இதில் நாயகனாக லட்சுமணனும் நாயகியாக பிரபல நாயகி ராதா அவர்களின் மூத்த புதல்வியான கார்த்திகா மற்றும் மணிவண்ணன் மனோஜ் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் டைட்டில் ஸாங் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு சிறுதெய்வ வழிபாட்டுப் பாடல் வழியாக படத்தின் மையக் கருத்தை வலியுறுத்துகிற வகையே சூழல்.

கொலை வாள எடுங்கடா
குரல்வலைய அறுங்கடா
கொடி வீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்

கெட்டவன் பொறந்திட்ட ஊருக்கு – அட
கொடிவீரன் கிளம்புவான் போருக்கு

சாதிய அழிங்கடா
சாஸ்த்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காய்கறிகள் ஆறட்டும்

சூதுகளை நாளும்
சொக்கப்பன் கொளுத்துவோம்
கேக்காமல் சுத்தினால்
பூமியைக் கொளுத்துவோம்

துடியான சாமிக்கு
பலிகடா நேர்ந்தது
இன்னைக்குத் தானடா
பட்டகடன் தீர்ந்தது

இந்தப் படத்தின் இயக்குநர் பெயரை சஸ்பென்ஸாக கடைசியில் சொல்லலாம் என்றுதான் பொறுத்திருந்தேன். எங்களுக்குத் தெரியாதாடா டே… ஓ சஸ்பென்ஸில் மண்ணப்போட என்று நீங்கள் கொந்தளிப்பது எனக்கு அக்யூரெட்டா தெரியுது, இருந்தாலும் அவர் பேர லாஸ்ட்டா சொன்னா நல்லாருக்குமென்று தோன்றியது அவ்வளவுதான். அவர் பெயர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இவரை எனக்கு அப்பாவாகப் பார்க்கத் தோன்றும் நண்பராகப் பழகத் தோன்றும்.

Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

நான் கருப்பசாமியைப் புகைப்படம் எடுத்த கதையையெல்லாம் சொன்னேன், ஆனால் நான் மதிக்கும் கருப்பசாமி செவக்காட்டு மண்ணின் சிகரம் பாரதிராஜா தான். அன்னக்கொடி படத்தில் இன்னொரு முக்கிய பாடலுக்கு என்னை அழைத்த தருணத்தையும் எனக்கும் அவருக்குமான இனம்புரியா காதலையும் அடுத்த வாரம் பகிர்கிறேன்.

ஆண்:
அன்னமே – ஏ
அன்னமே
தெச தொலச்ச – ஏ
அன்னமே

நீ எங்க போற மலங்காட்டுல
நீ எங்க போற தனியே…

பெண்:
தப்பி வாரா ஒரு
தங்கப் பொண்ணு
செங்காட்டு மண்ணே
சொல்லாதே

ஓடிவார இங்க
ஒத்த பொண்ணு
நடுக் காட்டு முள்ளே
குத்தாதே

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




“மதயானைக் கூட்டம்” திரைப்படத்தின் இசைவெளியீட்டுக்கு வந்திருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் “அத்தனை பாடல்களையும் கேட்டேன். மிகப் பிரம்மாதமாக இருந்தன. அந்த மண்ணின் கதைக்கு இவ்வளவு அடர்த்தியாக உன்னால் தான் எழுதமுடியுமென நினைத்த நொடிதான் கேட்டேன் இந்தப் படத்தின் பாடலாசிரியர் யார் என்று, அவர்கள் ஏகாதசி என்றார்கள். அப்போ நான் யூகித்தது சரிதான் என்று நினைத்துக்கொண்டேன்” என்று அவர் என்னிடம் சொல்லி என் தோள்களைப் பற்றி அழுத்திப் புன்னகைத்த நிகழ்வு மறக்க இயலாதது.
Paadal Enbathu Punaipeyar Webseries 8 Written by Lyricist Yegathasi தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

அதே போல் தான் தமிழகத்தின் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞரும் ஒளிப்பதிவாளருமான அண்ணன் தேனி ஈஸ்வர் பாடல்களைக் கேட்டுவிட்டு சிலாகித்துச் சொன்னார், “இந்த படத்தின் பாடல்கள் அத்தனையையும் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்க வேண்டும், இந்தப் பதிவு அப்பகுதி மக்கள் வாழ்வின் ஆவணமாக இருக்கும்” என்று. இப்படியான நூறு நூறு பாராட்டுக்களைப் பெற்றபோதும், சென்னை லயோலா கல்லூரியில் அத்தனை ஆயிரம் மாணவர்கள் மத்தியில் நடந்த “மதயானைக் கூட்டம்” படத்திற்கான பாராட்டு விழாவில், “இப்படத்தின் இரண்டாவது நாயகன் என் நண்பன் ஏகாதசி” என விக்ரம் சுகுமாரன் அவர்கள் சொன்னது எனக்கு மிகப்பெரிய பரிசு.
Paadal Enbathu Punaipeyar Webseries 8 Written by Lyricist Yegathasi தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

உறவுகளின் சூழ்ச்சியும் கொலை மிரட்டலும் உயிரைக் காவு வாங்க நெருங்கும் சூழலில் தாயை ஓரிடத்தில் பத்திரப்படுத்திவிட்டு மகன் தலைமறைவாவதற்காக காடு கரை வெயில் இருட்டு தாண்டிச் செல்ல, காலமே அவனைக் கட்டிப் பிடித்து அழுகிறது‌.

பல்லவி:
எங்க போற மகனே
நீ எங்க போற மகனே
ஊர விட்டுப் போற – தாய்
வேர விட்டுப் போற
சண்டாள சனமே – விட்டு
போறாது ஓ இனமே
இருக்குது எட்டுத் தெச – நீ
போறது எந்த தெச

சிரிப்பை மறந்தாய்
சின்னதாக இறந்தாய்
உனக்கு மருந்தாய்
இருக்கிறாள் ஒருதாய்
குத்தி வச்ச அரிசிதான்
ஒலையில கிடக்குது
பெத்துப்போட்ட வயிறுதான்
பத்திக்கிட்டு எரியுது

சரணம் – 1
வெத்தலக் கொடி ஒண்ணு
நெருப்புல படர்ந்திருச்சே
பெத்தவளின் மடி பிரியும்
பெருந்துயர் நடந்திருச்சே
சோறு ஊட்டும் சொந்தம் பந்தம்
சூழ்ச்சியாகப் பேசிருச்சே
வேரறுக்க சாதி சனம்
வெட்டருவா வீசிரிச்சே

என்ன இது கணக்கு
இடி மட்டும் உனக்கு
சாதிசனம் எதுக்கு
சாமியும் தான் எதுக்கு

வெயில சொமந்து
வித்துகிட்டுப் போறதெங்கே
இருட்டப் பாய்போல்
சுருட்டிட்டுப் போறதெங்கே

சரணம் – 2
வழித்தொண இல்லாம
வனவாசம் போவதுபோல்
கரை இல்லா நதியாட்டம்
கண்மணியே போறதெங்கே
கல் விழுந்த குளம்போல
கலங்கிருச்சே உம்பொழப்பு
பூ விழுந்த கண்ணப்போல
போயிருச்சே உம்பொழப்பு

நெஞ்சுக்குழி ஓரம்
பச்ச குத்திப் போன
பச்சைக்கிளி ஒண்ணு
காத்துக்கிட்டுக் கிடக்கு

செல்லமே செடியே
செங்காட்டுச் சித்திரமே
முல்லையே கொடியே
முப்புரத்து வழி நீயே

குரலை கண்ணீரில் ஊறவைத்துப் பாடி, கேட்பவர் நெஞ்சத்தை கலங்க வைத்த நாட்டுப்புறப் பாடகி சகோதரி தஞ்சை செல்விக்கு இந்தப் பாடல் அந்த ஆண்டிற்காக சிறந்த பாடகிக்கான “ரேடியோ மெர்சி” விருதைப் பெற்றுத் தந்தது. ஏன் இந்தப் படத்தின் இயக்குநர் நண்பர் விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு, சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, இறுதிச் சுற்றுபோய் நூலிழை வித்தியாசத்தில் நழுவிப்போனது. இந்த படத்தில் நடித்த விஜியை, சிறந்த குணசித்திர நடிகையாக ஆனந்த விகடன் தேர்வு செய்து விருதளித்தது.

கதையில் ஜெயக்கொடி என்கிற பெரிய மனிதர் இறந்து போகிறார். அவர் தான் நாயகனின் தந்தை. அங்கே கூத்தும் வேடிக்கையும் தடபுடலாக நடத்தப்படுகிறது. இவர் அந்த ஊரின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்கும் பண்பாளர். இவரின் மரணத்தால் சுத்துப்பட்டு ஊர்களும் கலங்கிப் போகிறார்கள். இறுதியாக பிணத்தேர் வீட்டிலிருந்து தூக்கப்படும்போது,

“முக்குலத்து வீரரய்யா
ஜெயக்கொடித் தேவரய்யா”

ஒப்பாரி போல் இப்படியொரு பாடல் தொடங்கும். இதற்காக நாட்டுப்புற பாடல் தொகுப்புகளை வாசித்து அதன் வாசத்தை எடுத்து இப்பாடலின் வார்த்தைகளுக்கு ஊட்டினேன். பாடல் தென் மாவட்டங்களில் ஆட்டோக்களின் மூலம் இழவுச் சேதி சொல்லும் போதும் இழவு வீடுகளிலும் ஒலிக்கத் தவறுவதில்லை. பாடலின் சில சரணங்களை உங்களுக்குப் பகிர விரும்புகிறேன்.

சரணம் – 1
சொப்பணமும் காணவில்ல
சொல்லி யாரும் போகவில்ல
கூடுவிட்டுப் பிரிவாருன்னு
கொஞ்சங் கூட நம்பவில்ல

குடும்பம் ஒரு கண்ணு – தேவருக்கு
கொள்கை ஒரு கண்ணு

சரணம் – 2
பஞ்சாங்கம் பாக்க வந்த
பாப்பனுக்கு கண் குருடோ
எழுத்தாணி கூர் இல்லையோ
எழுதியவர் தான் குருடோ

ஊர் முழுக்கப் பேச்சு – தேவர்
உசுரு எப்படிப் போச்சு

சரணம் – 3
கழட்டிப் போட்ட சட்டையில
காங்கலியே ஒங்க ஒடல
ரெண்டு நாளா ஏஞ்சாமி
சிகரெட்ட வந்து தொடல

சாமி உசுரப் பறிக்க – சனங்க
சாராயத்தக் குடிக்க

சரணம் – 4
காக்கா அழுத கண்ணீர்
கம்மா பெருகி ஓடுதுங்க
குருவி அழுத கண்ணீர்
குளம் பெருகி ஓடுதுங்க

சமுத்திரம் போல் சனங்க – தேவர்
சடலங்கண்டு வணங்க

சரணம் – 5
அழகா எழுதுனவன்
ஆயுள் கூட்டி எழுதலயோ
வடிவா எழுதுனவன்
வயசு கூட்டி எழுதலயோ

இதய தெய்வம் இறக்க – நாங்க
எப்படித்தான் மறக்க

இப்பாடலை மறைந்த தோழர் கரிசல் திருவுடையான் அவர்கள் ஒரே டேக்கில் பாடினார். இயக்குநர், நான், இசையமைப்பாளர், இஞ்சினியர் எல்லாரும் வியந்து ரசித்துக் கொண்டிந்தோம். நினைத்தபடியே பாடல் மக்கள் இதயங்களைக் கனக்கச் செய்தது. ஆனால் என் மீது சில விமர்சனங்கள் வந்தன, ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்துகொண்டு உயர் சாதிப் பெருமை பேசும் பாடலை எழுதிவிட்டதாக. இந்த விமர்சனம் அந்த படத்தின் மீது வைக்கப்பட்டது பொய்யானது ஆகும். காரணம், அந்தப் படம் ஒரு சமூகத்தின் சிறப்புகளையும் பலவீனங்களையும் ஆய்வு செய்த படம். அதை அதன் போக்கில் ஒளிவு மறைவின்றி எழுதுவது தானே சரியாகும்.

தவிர்த்தல் என்பது குடிக்கெதிராய் ஒரு படம் எடுக்கப்படும்போது குடிப்பதைக் காட்சி படுத்தாமல் இருப்பது போன்றாகிப் போகுமே. அந்தப் படம் மாற்றுச் சாதியினரைப்பற்றி தாழ்வாக பேசவில்லை. ஏன், சாதி பற்றியே பேசவில்லை. அது ஒரு குடும்பக் கதை. அந்தக் குடும்பத்தின் வாயிலாக அது சார்ந்த சமூகத்திற்காக மட்டுமல்ல, இந்த மனித சமூகமே, பிற்போக்குத் தனத்திலிருந்தும், ஆயுத கலாச்சாரத்திலிருந்தும், மனித நேயத்திற்கு எதிரான மூர்க்கத்தனத்திலிருந்தும் விடுபட வேண்டும் என மன்றாடிய படம். அதன் மீது பூசும் சாதியக் கறை நியாயமற்றது. படத்தின் ஒட்டுமொத்தக் கருவை படத்தின் க்ளைமாக்ஸில் கொண்டு வந்துவிட இயக்குநர் கேட்டுக்கொண்டதற்கினங்க கீழ் காணும் வரிகளை இதய சாட்சியமாய் எழுதியிருந்தேன்.

ஆயுதம் வெதச்ச சாதிக்குள்ள
அறுவடையாகுதே மனுசத் தல
காகிதம் போலொரு மனசுக்குள்ள
காட்டுத் தீ பாயுதே என்ன சொல்ல

வீச்சருவா வாய்செவக்க
வெத்தலையப் போடுதடா
சேன தொட்டு வச்ச மண்ணில்
செங்குருதி சாயுதடா

ஆகாயம் என்னவோ
வெள்ளையாத்தான் தூறுதப்பா
மண்ணத்தோண்டி பாத்தாக்கா
மனுச ரத்தம் ஊறுதப்பா

புத்தி கெட்டுப் புத்தி கெட்டு
பொத குழியத் தேடிக்கிட்ட
சொந்தக் கைய வெட்டியிப்போ
சோத்துக்குள்ள மூடிப்புட்ட

தென்மேற்கா வீசும் காத்தும் – இங்க
தேம்பி அழுறது கேக்கலயா
கட்டாந்தரையும் மாரடிச்சு – இங்க
கதறி அழறதப் பாக்கலயா

கோத்திரத்த அழிச்சுப்புட்டா
கூப்பிடப் பேர் இருக்குமா
ஒருத்தருமே இல்லையின்னா
ஒத்தையில ஊர் இருக்குமா

முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி