உயிர் துளியாகிறேன் கவிதை - சசிகலா திருமால் Uyir thuliyagiren kavithai - sasikala thirumal

உயிர் துளியாகிறேன் கவிதை – சசிகலா திருமால்


மனம் கொத்திப் பறவையாய்
மனதினைக் கொத்திக் கொத்தியே
உயிர் திருகும் வலியில்
என் உணர்வுகளைக்
கடத்திச் செல்கிறாய்…

உறங்கியும் உறங்காமலும்
இருக்கின்ற விடியலை
மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கிறது
உந்தன் நினைவுகள்..
எந்தன் உடலெங்கும் வழிந்தோடும்
குருதி மட்டுமே உணரும்
உந்தன் ப்ரியமொழியின் குளிர்ச்சியினை..

இதோ இப்பொழுதும்
உந்தன் விரலிலிருந்து கசியும்
வார்த்தைகளில்
உயிர் துளியாகிறேன் நான்..

சிந்தனைத் துளிகள்….!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

சிந்தனைத் துளிகள்….!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி




வீட்டிற்கு வெளியே
மழை பொழிகிறதென்று
அம்மழையில் நனையாமலிருக்க
வீட்டிற்குள் நுழைகிறாள் அம்மா
அம்மாவின் பாதங்களையும்
சேர்த்து நனைத்தவாறே
தான் ‌ ‌‌வெளியேறுகிறது
வீட்டையும் அம்மாவையும்
நனைத்த அந்த
அந்தி நேர நீர் மழை ,
*******

நீங்கள்
ஒரு பறவையை
பார்க்கின்ற‌ பொழுதெல்லாம்
உங்கள் மனங்களை
ஒரு மரமாகவே வளர விடுங்களேன்
உங்கள் தேகங்கள் முழுவதும் முளைக்க தொடங்கிவிடுகின்றன
ஒரு கிளையும்
அக்கிளையில் பல இலைகளும்
அந்த இலைகளை
சுற்றிசு சில கூடுகளும் ,
********

எனது தூரத்து
கிளையில்
அமர்ந்துகொண்டு சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது
ஓர் சிட்டுக்குருவி
கையிலிருந்த
செல்போனினால் புகைப்படமொன்றை
எடுக்க முயல
மீண்டும் பறந்து போய்
பக்கத்துக் கிளையில்
அமர்ந்தது அந்த சிட்டுக்குருவி
மீண்டும் ஒரு புகைப்படத்தை
எடுக்க முயலும்
என் பார்வையிலிருந்து
தப்பித்து தூரம் போய்
மீண்டும் திரும்பி பார்க்கிற சிட்டுக்குருவிகளின்
கண்களுக்குள்
வானுயர வளர்ந்திருக்கிறது இலைகளற்ற சில கம்பிகளால்
பின்னிய பல கோபுர மரங்கள் ,
********

பற மோளம்
அடிக்கும் சாவு வீடு
ஆட்டம் பாட்டமென நீளும்
நடு சாம இரவு
ஊது பத்திப் புகையை
உள்ளிழுக்கும் மூக்குத் தூவாரங்கள்
பலரது கண்களிலிருந்து வழியும்
செத்துபோனவரின்
தண்ணீரான நினைவு வழித்தடங்கள்
கீழிருந்து வானம் ‌போய்
மேகம் ‌மீது மோதி வெடிக்கும்
வானவெடிப் பட்டாசுகள் ‌
வெத்தலை பாக்கு துருக்கப்பட்ட
பல பொக்கவாய்ப் பாட்டிகள்‌
யார் செத்ததென்று கேட்க
மாடு அறுக்கும்
தாத்தா செத்து
போயிட்டாரென்று‌
ஊரெல்லாம் ஒரே பேச்சு
விடிந்தால் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை கறிக்கு
நாங்க எங்கே
போவதென்றே கேள்வியை
அப்பிணத்தைக் கடந்து போகிற

ஒவ்வொருவரின்
கடைசி அழுகையும்
சொல்லும் ,

கவிஞர் ; ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




‘ விண் பறவை’
********************
திரு திருவென
முழிக்கின்றன விண்மீன்கள்!
நீந்தவும் தெரியாமல்
பறக்கவும் தெரியாமல்
ஒரே இடத்தில்
ஒய்யார ஒளியில்
ஜொலித்துக் கொண்டு!

எத்தனை பேர்…
வெளிறிக்கிடக்கும்
விரிந்த வானத்தை
விழிகளுக்கு விருந்து
படைத்திருக்கிறோம்?

ஆகாயத்தை
எப்போது நோக்கின
மனிதக் கண்கள்?

வானம் பார்ப்பதாக….
மழையையும், விடியலையும்
தேடியே…..
பார்த்ததுதான்
மனிதனின்
சுயநல நோக்கு!

மனிதரின்
கண்களெல்லாம்
மினுக் மினுக்கெனத்
தெரியுமோ?
வானத்துக் கண்களுக்கு!

இந்த பூமியின் புரட்டுகளை
இலட்சோப லட்சம்
கண்களென…..
நட்சத்திரங்களைக் கொண்டு
கண்காணிக்கின்றதோ வானம்!

நீந்துவதுதான்
மீனின் பாஷை;
நீந்தத் தெரியாத
நட்சத்திரங்களை….
மீனென … விண்மீனென
அழைப்பதிலிருந்தே
இந்த மனிதன்
எவ்வளவு விவரம் புரியாதவனென
நினைக்கத் தோன்றுகிறது!

பறவைகள்
சுயநலமற்றவையென்பது
அவற்றின் வாழ்க்கை
உணர்த்தும் பாடம்;
மனிதருக்கும், மற்றவைக்கும்!

இப்படி…. அப்படிப்
பறக்க வேண்டுமென
நட்சத்திரங்களுக்குப்
பரம்பரை பரம்பரையாக
கற்றுக்கொடுக்கத்தான்
மேலே பறக்கின்றன பறவைகள்!

ஒரு நட்சத்திரமும்
பறத்தலைக் கற்றுக்கொண்டதாகத்
தெரியவில்லை!

பறவைகளும் விடுவதாக இல்லை;
போதித்தல் என்பது
தொடர் நிகழ்வு என்பதை
பறவைகள் சொல்லிக்கொடுத்துக்
கொண்டேதான் இருக்கின்றன!

எப்படி இருக்கும் என
நினைத்துப் பார்க்கின்றேன்;
நட்சத்திரங்கள்
பறந்து வந்தால்
இந்த….
இருண்ட பரந்த வானத்தின்
வனப்பை!

தூண்டில்
**********
உயிர் துறக்க
உசுப்பேற்றி, ஆசைகாட்டி
சுவையூட்டும்…..
தூக்குமரமே தூண்டில்!

எத்தனை எத்தனையோ
உயிர்களை வதைத்து…
மீண்டும் மீண்டும்
அதே அவதாரம்!

மடிந்த உயிர்களின்
கவுச்சியும்,
சிக்கித் தப்பியதுகளின்
சதை நாற்றமும்
ஆழமான தண்ணீரில்
வீசினாலும்,
எப்படிக் கழுவப்படும்?
இறந்துபோன உயிரின் நாற்றம்
அந்தத் தூண்டிலில்!

அறிவற்ற மீன்கள்,
பரம்பரை பரம்பரையாக
தூண்டிலில் தொங்கும்
எச்சில் சில்லுகளுக்கு
ஆசைப்பட்டு……
மடியும் சோகம்!

அடிபட்டு, விடுபட்ட
அறிவற்ற மீன்கள்
தம் அனுபவத்தை
பகிர்ந்து…..
தம் இனம் காக்க
அறிவு பெற்றால்;
தூண்டில்கள் இந்நேரம்
தொலைந்தே போயிருக்கும்!

ஆசை
யாரை விட்டது;
அடிபட்ட மீனும்
ஆசைக்கு ஆட்படுவது
இயற்கையன்று;
அறியாமை!

ஆசையென்பது
அறியாமையின் வெளிப்பாடே!

-பாங்கைத் தமிழன்

பறவை ….!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

பறவை ….!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி




பறந்து வந்து
மரத்தின் கீழ் கிளையில்
அமர்ந்த அந்த பறவையிடம்
உன்னை ஏன் எல்லோரும்
பறவையென
அழைக்கிறார்கள் யென்றேன்
அக்கிளையிலிருந்து
பறந்து வேறு
ஒரு மேல் கிளையில்
அமர பறந்து போனது
அந்த பறவை
நானும் எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்
நீ பறப்பதனால் தான் உன்னை எல்லோரும் பறவையென்கிறார்களென்று,

கவிஞர் ச.சக்தி

கனவின் நீரோடை கவிதை – ஆதித் சக்திவேல்

கனவின் நீரோடை கவிதை – ஆதித் சக்திவேல்




அது
என் கனவில் ஓடிய
அதே நீரோடை தான்
ஒவ்வொரு துளியிலும்

மணல் மேல் கூழாங்கற்கள்
அதன் மேல் கண்ணாடி நீர்
அடி வரை இருந்தவற்றை
தெளிவாய்க் காட்டி
சாத்திய வளைவு நெளிவுகளுடன்
மனதிலிருந்து நழுவி
எங்கோ ஓடியது ஓடை
ஜீவ நதியாய்

நாளின் முதல் சூரியக் கதிர்களில்
ஒளிரும் பிரதிபலிப்புகள்
தங்க மணலின் நகர்வாய்
மீண்டும் மீண்டும் அதன் அடியில்
அதன் வழியெங்கும்

கரைகளைத் தொட்டுத் தொட்டு
தன்னை வடிவமைத்த அது
துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தது
ஓரிரண்டு இடங்களில்

ஓர் ஓடையின் சத்திய இலக்கணங்கள்
ஒவ்வொரு அசைவிலும் நகர்விலும்
பின்னியபடி நெளிந்தோடின

சொர்க்கத்தின் குளிருடன்
மேடு பள்ளங்களில் ஏறி இறங்கிய
அதன் இசைத் துண்டுகளில்
வழிந்தோடியது மகிழ்ச்சி கலந்த மயக்கம்

முணுமுணுப்பற்ற சுழல்களின்
சூத்திர முடிச்சுகள்
ஓடையின் ஆழம் நோக்கிப் பயணித்தன
அவிழ்த்து விடை அறிந்து கொள்ள

கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி

பெயர் தெரியாப் பூக்களே ஏராளம்
அப்பூக்களின் மணம் கரைந்த நீர்
வழிந்தது வழியெங்கும்
வாசனைத் திரவமாய்

தன் பரப்பில் விழுந்த
வனப் பறவைகளின் ஒலிகளில்
அன்று விரும்பிய ஒன்றை
அவ்வெளி எங்கும் எதிரொலித்தது இயற்கை
ஆதி மண்ணின் தேவ கானமாய் மாற்றி

இலைகளும் பூக்களும்
துடுப்பற்ற ஓடமென
எதிர்ப்பும் இலக்கும் இன்றி
ஓடின ஓடையின் வேகத்தில்

குளிர்காலக் காலையினால்
அந்த நீரோடையே
நிறம்பி வழிந்து கொண்டிருந்தது

அணுவின் அமைதியுடன்
ஒரு பூனைக் குட்டியைப் போல்
அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்தது பிரபஞ்சம்
ஓர் ஓடையாய்ச் சுருங்கி

கால் நனைத்தேன்
கபாலம் வரை ஏதேதோ பரவியது
அதில் குளிரும் இருந்தது

ஆனாலும்
ஓடையின்
ஏதோ ஒரு பரிமாணத்தில் ஒளிந்திருந்த
அதன் அந்தரங்க வரிகளை
என்னால் வாசிக்கவே முடியவில்லை
இன்று வரை

ஆதித் சக்திவேல்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்




“கடவுளின் விசித்திரம்”
***************************
பேராசை நிறைவேற பிரார்த்தனை,
நன்றாக வாழ்ந்திட நேர்த்திக்கடன்!
ஆனந்தமாய் வாழ அர்ச்சனை,
வேண்டியத அடைய வேண்டுதல்கள்!

கேட்டது கிடைத்தால் காணிக்கை,
ஆவல் கைகூடின் அபிஷேகம்!
தேவைகள் கிட்டின் தீமிதி,
ஆசைகள் நிறைவேற அலகு குத்தல்!

தோற்றால் தூற்றுவோம்
இழந்தால் இகழ்வோம்
அழிந்தால் அழுவோம்
நலிந்தால் நிந்திப்போம்!

ஆனால் ஆண்டவனோ?
எதை கொடுக்க வேண்டும்
எதை தடுக்க வேண்டும்
என்று என்றோ எழுதிவிட்டான்!

ஈதறியா பாழும் மனிதமனம்!
ஏனோ நொந்து நூடூல்சாகி
செத்து சுண்ணாம்பாகி
பட்டு கெட்டு பாழாகுதே!

இத்துன்பம் நீங்கிடவே
இறைவா நீ எனக்கு
மறுபிறவி என்றில்லா
மகத்தான வரம் தருக!

மனமுருகும் மார்கழி!
**************************
மறைந்தது மழை
நிறைந்தது பனி
உறைந்தது கரம்
விரைந்தது காலை!

மார்கழி கன்னியவள்
மாதம் முழுவதும்
மாந்தர்க்கு மனமுவந்து
மகிழ்ச்சி பலதந்தாள்!

பொங்கல் தந்தாள்
பொலிவு தந்தாள்
சுண்டல் தந்தாள்
சுரங்கள் தந்தாள்!

பக்தி தந்தாய்
பஜனை தந்தாய்
இசை தந்தாய்
இனிமை தந்தாய்!

ஒரு “பாவை” அருளிய
திருப்பாவை தந்தாள்!
திருவாசகன் அருளிய
திருவெம்பாவை தந்தாள்!

கோலங்கள் தந்திட்ட,
கோலவிழி மார்கழியே!
நின் குளிர் முயங்கினேன்!
என் மனம் மயங்கினேன்!

சுதந்திர சிறகுகள்.
***********************
கூடு பறவையும்,
கூண்டு பறவையும்!
கூடி பேசினால்
என்ன பேசும்??

கூடு பறவை கூறியது,
“நீ அடிமை! நான் ஆண்டான்!
நீ நாடி புசிப்பாய்,
நான் தேடி புசிப்பேன்!

நான் சிறகை விரிப்பேன்,
நீ சிறகை சுருக்குவாய்!
என் துணை என் விருப்பம்,
உன் துணை எவன் விருப்பம்?

எனக்கு எல்லையே இல்லை
உனக்கு எதுவுமே இல்லை!
என் வாழ்வு சுதந்திரம்,
உன் வாழ்வு இயந்திரம்!”
என கேலிபேசி சிரிக்க!

இரைக்கு ஆசைப்பட்டு
சிறைக்குள் ஏகினேன்!
சின்ன புத்தி மனிதன்
பசியை பயன்படுத்தி
பாழாக்கினான் என்னை!
சிறகிருந்தும் பறக்கவியலாது
குறைபட்டது என் உயிர்!”
என ஏக்கத்துடன் வருந்தியது
ஏமாந்த பறவை!

மரு உடலியங்கியல் பாலா.

ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்

ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்




தார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது –
வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள்
எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில்

நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள்
விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும் பறிகொடுத்து
படர்ந்து நிழல்தரும்
கிளைகளில் வசித்த
பறவைகள் அத்தனையும் வேறுகிளைகளைத்தேடி
அகதிகளாய்ப் பறந்துபோன பறவைகளின் வசிப்பிடங்களையும் தேடுகிறேன்

பறவைகளின் இடமாற்றத்தால் தடுமாற்றமானது
ஆறறிவுகள் அறியாமல்
செய்த வினைகளும்

கோடாரிகளை தூக்க கட்டுப்பாடுகள் இருந்திருந்தால்
காலியான ஆக்சிஜன் உருளைகள் தட்டுப்பாடோடு உருண்டிருக்கா.

வழியெங்கும் காற்றினை சுத்திகரிக்கும்
மரங்களின் ஆலைகளை அழித்தபின்
மனிதஇனத்தின் உயிர்காக்கும்
ஒட்டுமொத்த சுவாசக்காற்றையும் சுமந்து
அதே வழித்தடத்தில் பயணிக்கிறது சுவாச சுமையுந்துகள்

சுவாசங்களைப் புதுப்பிக்கும் விருட்சங்களின் விசேசங்களை அறிந்திருந்தால்
அவசியமிருந்திருக்காது மருத்துவ படுக்கைகளும்

ஏதோ ஒருகிளையின் பழத்தினை தின்றுதிரியும் பறவையின்
எச்சிலில் முளைக்கும் மரங்கள் தீங்கு செய்தோருக்கும் நிழல்தந்து
கார்பன் துகள்களை
உள்வாங்கி சுவாசிக்கும் உயிர்களுக்கு பிராண வாயுவினைத்தரும்
அதிசயமரத்தை விதைத்த ஆக்சிஜன் பறவையின்முன்
வெட்கப்பட்டு தலைகுனிந்து நிற்பதையறியாமல்
பறந்துசெல்கின்றன அப்பறவைகள்….

கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு

கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




பறவை
**********

வானைத் தொடுமளவு நெடிதுயர்ந்த விருட்சங்கள் நிறைந்த வனத்தின்
நடுவே பச்சைநிறப்பாசிகள் போர்த்திய பாறைகளின்
சுனையிலிருந்து ஊறும் தெளிந்த நீரினைப்போல

மனதிலிருந்து வடியும்
உணர்வுகளும் ஏக்கங்களும்
வார்த்தைகளாய் வடிந்தோட

நதியின் இருகரையில்
வளர்ந்திருந்த செடிகொடிகளில் மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் ரீங்காரமிட்டு
தேனெடுக்கும் வேளையில்
விரிந்த மொட்டுக்களிலிருந்து வெளிப்படும் நறுமணத்தில்
சிலநிமிடம் இளைப்பாறி

பல்லுயிர்க்கும் பசிபோக்கும்
கனியொன்று மலையிலிருந்து சீறிப் பாய்ந்தோடும் நதியில்
விழுந்து மிதக்க

ஓடும்நதியின் போக்கில் பயணித்த கனி
கையருகே வந்தடைய
சிறுஅலகால் கொத்தி சுவைத்ததும் வியந்துபோனது

நாவில்படும் துண்டுகள் ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு சுவையில் இனிக்கும் ஒற்றைக் கனியினை
அடுத்தவேளைப்பசிக்கல்லாது கூடுகளில்
பசியோடு காத்திருக்கும்
சிறகுகள் முளைக்காத சிறுகுஞ்சுகளுக்காக
சுமந்துபோய்
வெயிலும் நிழலுமென
மாறிமாறி வந்துபோகும் மரக்கிளையில் அமர்ந்து
இரையோடு வந்திருப்பதாய்
சிறுஅலகில் ஒலியெழுப்பியது அந்தப்பறவை.

தாத்தா
*********
நாலுமணி சிற்றுந்தில் வந்திறங்கும் வானம்பாடிகளைக்
கைப்பிடித்து அழைத்துச்செல்லும் நேரங்களில்
காலையில் விடுபட்ட கதைகள் மீண்டும்
வசப்படுத்திவிடுகின்றன பிஞ்சுஇதயங்களை

ஆள் நடமாட்டமேயில்லாத வீதியில்
வெளிச்சம்தெரியும் தூரம்வரைத் தேடுகிறது –
ஏதாவது அசைவுகளிருக்கின்றனவாவென்று
நடமாட்டம் எதுவுமில்லையென உறுதிப்படுத்தியவுடன்
பிஞ்சு நடைகளுடன் தளர்ந்த நடையும் தள்ளாடி
பூட்டியவாசல் திறந்து
ஒய்யாரமாய்ப் போய்
வர்ணங்கள்பூசிய சுவற்றினோரம் கிடந்த மரநாற்காலியில் அமர்கிறது
காலையிலிருந்து தனிமைச்சிறையில் அடைபட்ட முதிர்ந்ததேகம்

சீருடைகள் களைந்து மாற்று உடையணிந்த வானம்பாடிகள்
சிறகுகளசைத்து காற்றில்மிதந்து
பெருமரக்கிளையில் அமர்வதைப் போல்
தாத்தா என ஓடிவந்து கட்டிப்பிடிக்கும் பேரக்குழந்தைகளுடன்
-தன் இலையுதிர்கால நினைவுகளையும்
சின்னஞ்சிறு கதைகள்பேசியும்
இறுதியில் மழலைகளின் ஒப்பனையில்
மீண்டுமொருமுறை இளமைக்குத் திரும்பி பேரின்பத்தைக் கொண்டாடுகிறது

தாத்தாவின் மனதும் ஒரு குழந்தையாய்.

நிலைக்கண்ணாடி
**********************
நீ நின்று ரசித்த
உன்னழகை
உன்அறை நிலைக்கண்ணாடியும்
அதைவிட்டு நீ நகர்ந்தபின்
சிலநிமிடங்கள்
கதவுகளோடு கண்ணை
மூடி ரசிக்கிறது…

அவசரமாய் கேசத்தை
சரிசெய்து முகப்பசைகளைப்பூசி
ஒப்பனைகள் செய்து கடந்துசெல்லும் யாரும்
உன்னிப்பாய்க் கவனிக்கவில்லை
இதுவும் உன்நினைவில் இருப்பதை…

பாதரசங்கள் பூசிய கண்ணாடியின் மீது
இதுவரை ஒட்டவேயில்லை-
உன் அட்டைப் பொட்டுகளும்
விரல் தாரைகளையும் தவிர
உன்னைப்போன்றொரு உருவம்…

எதிரில் நின்றவரின் உருவத்தை மிகைப்படுத்தாமலும் –
மீதம் வைக்காமலும் காட்சிப் படுத்திய கண்ணாடி
ஏமாற்றத்துடன்-நீ
விட்டுச்சென்ற உன்னழகின்
சாயலில் இன்னொரு பிம்பத்தைப் பதிவுசெய்ய

இன்னும் உறங்காமல் விழித்தே கிடக்கிறது…

கோவைஆனந்தன்
[email protected]
+919003677002
3/177,குமாரபாளையம்
கிணத்துக்கடவு
கோவை-தமிழ்நாடு 642109

கொஞ்ச நேரம் ஒதுக்கி புற உலகை உற்றுப் பாருங்கள்! – கு.செந்தமிழ் செல்வன்

கொஞ்ச நேரம் ஒதுக்கி புற உலகை உற்றுப் பாருங்கள்! – கு.செந்தமிழ் செல்வன்




காட்டுயிர் என்றால் இயற்கையாக உருவாகி தன்னிச்சையாக வாழும் உயிரினங்கள் என அர்த்தம். அவை, விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், மரங்கள் என எதுவாகவும் இருக்கலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சற்று உற்று நோக்குவதுதான்.

* வெண் மான்கள் வேகமாக ஓடும் என்று தெரியும். ஆனால், ஆபத்து என்றால் மூன்று மீட்டர் உயரத்துக்கு எம்பி 80 கி.மீ வேகத்திற்கு ஓடும் என்று அறிவோமா?

* பூனை எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதற்கு பிடித்த உணவு குப்பைமேனி கீரை என்று அறிவோமா? சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு தீர்வு காணும் மருத்துவ குணம் கொண்டது குப்பைமேனி கீரை என்பதை மனிதர்கள் தெரிந்து கொண்டதே பூனையின் மூலமாகத்தான்.

* “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்பதை அறிந்த நாம் எறும்பிலிருந்து நாம் கற்றதை அறிவோமா? எறும்புகள் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் அவற்றின் உணவுகளை பூஞ்சைத் தொற்று பாதிக்காமல் பாதுகாக்கின்றன. இந்த வேதிப் பொருளே தற்போது மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

நம்மைச் சுற்றி காட்டுயிர் – சு. தியடோர் பாஸ்கரன் – தமிழில்: ஆதி வள்ளியப்பன்இப்படி நாம் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை நோக்கி சுவாரஸ்யமாக அழைத்துச் செல்கிறது ”நம்மைச் சுற்றி காட்டுயிர்” புத்தகம். புகழ்பெற்ற சூழலியல் எழுத்தாளர் சு. தியோடர் பாஸ்கரன் இந்நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதனை தமிழில் தந்துள்ளவர் ஆதி வள்ளியப்பன். குக்கூ குழந்தைகள் அமைப்புடன் இணைந்து புக்ஸ் ஃபார் சில்ரன் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 2012 -ல் முதல் பதிப்பு கண்டது இப்போது நான்காவது பதிப்பாக வந்துள்ளது.

பறவைகளின் காதல் வாழ்க்கை

இந்நூல் பறவைகளை ரசிக்கவும் கற்றுத் தருகிறது. நமது தோட்டத்தை உற்று நோக்கினாலே நிறைய காட்டுயிர்களை காண முடியும். வீட்டுத் தோட்டம் இல்லாதவர்களும் சந்தோஷமாக வானத்தினைப் பாருங்கள். பறவைகளைப் பார்ப்பதுடன் அதனை என்ன பறவை என்று அடையாளம் காணவும் கற்றுக் கொள்ளுங்கள் என்கிற இந்நூல். மேலும் இப்புத்தகத்தில் தவறவிடக் கூடாது சில அம்சங்கள் இதோ:

* காட்டுயிர் இயக்குனர் தாமரைக் கோழிகள் குறித்து “மிதக்கும் வீடுகள் ” என படம் எடுத்திருந்தார். இந்தத் தாமரைக் கோழிகள் குளிர்காலத்தில் தனது இனப் பெருக்கக் கால உருமாற்றத்தைப் பெற்றிருக்குமாம். பெண் பறவை, பல ஆண்களுடன் இணை சேர்ந்து ஒரே நேரத்தில் பல முட்டைகளை வெவ்வேறு கூடுகளில் இடக் கூடியது. இதனால், அந்தந்த கூட்டுக்குரிய ஆண் பறவைகள் அடைகாத்து குஞ்சுகளை வளர்க்கின்றன.

* காயமடைந்த இரைக்கொல்லிப் பறவைகளுக்கு அமெரிக்காவில் உள்ள கரோலினா ராப்டர் சென்டர் புனர் வாழ்வு தருகிறது. இந்தியாவிலும் அத்தகைய மையங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.

* பூவுலகைக் காக்க முயல்வோரை ஊக்குவிப்பதற்காக கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் நோபல் பரிசாக கருதப்படும் இதனை இந்தியாவில் நால்வர் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரியது.

நூலாசிரியர் விவரிக்கும் பல்வேறு விஷயங்களில் முக்கியமானது என்ன வென்றால், ஏற்கெனவே, மிக மோசமாக சீரழிக்கப்பட்டுவிட்ட இயற்கை வளத்தையும் முடக்கப்பட்டுவிட்ட சுற்றுச்சூழலையும் இனி மேல் எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பதை நாம் அனைவரும் கரம் கோர்த்து முடிவு செய்தாக வேண்டும். இந்தப் புத்தகம் அந்த முடிவெடுக்க நிச்சயம் நம்மை உந்தித் தள்ளும்.

கட்டுரையாளர், கு.செந்தமிழ் செல்வன்
தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர், வேலூர்.

நன்றி: வெற்றி நூலகம்

நூல் : நம்மைச் சுற்றி காட்டுயிர்
ஆசிரியர் : சு. தியோடர் பாஸ்கரன்
தமிழில் : ஆதி வள்ளியப்பன்

விலை : ரூ.₹40/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]