நூல் அறிமுகம்: உசுல பி.விஜயசூரியவின் ’அம்பரய’ தமிழில்: தேவா – A.காயத்ரி

நூல் அறிமுகம்: உசுல பி.விஜயசூரியவின் ’அம்பரய’ தமிழில்: தேவா – A.காயத்ரி




இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல பி.விஜயசூரிய இந்நூலின் ஆசிரியர்.
தமிழில் : தேவா.

1970 களில் இலங்கையில் இப்புத்தகமானது வெளியிடப்பட்டது.

மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் மீன்பிடி முறை, நம்பிக்கை எல்லாவற்றையும் தெளிவாக சித்தரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். கதையில் வரும் சுமனே 17 வயது மீனவ சிறுவன். விடியலின் முதல் கீற்று படற தொடங்கும் போது அவன் கடற்கரையில் இருப்பான் ஏனென்றால் எப்போதுமே இலகுவாக கிடைத்து விடாத மீனாம்பலை தேடி. மீனாம்பல் என்பது திமிங்கலத்தின் கழிவு ஆகும் அது ஒரு சிறிய தூண்டின் விலை மிகப் பெரியதாகும் அதுதான் தன்னுடைய வாழ்க்கையின் கஷ்டங்கள் எல்லாவற்றையும் மாற்றும் என்று நம்பிக்கை கொண்டு விடாது ஒவ்வொரு நாளும் தேடிக் கொண்டே இருப்பான் அதனால் கிராமத்தில் உள்ளவர்கள் அவனை கேலியாக அம்பரைய என்று தான் அழைப்பார்கள். சுமன் மற்றும் அவனது இரண்டு தங்கைகள் வயது முதிர்ந்த பாட்டி ஆகியோரே குடும்பத்தின் உறுப்பினர்கள். வயதான பாட்டியையும் தன் தங்கைகளையும் நன்றாக பார்த்துக் கொள்ளும் கடமையும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. தன்னுடைய தங்கைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறான்.

தனக்குத் தெரிந்த மீன்பிடித்தொழில் மூலம் அன்றாட உணவுக்கு தேவையான வருமானம் ஈட்ட முயற்சிப்பான். அவனது மீன்பிடிமுறை மிகச் சாதாரணமானது ஆற்றினுள் இறங்கி அவன் சரி என நினைக்கும் இடத்தில் மரக்கிளைகளை அங்கும் இங்குமாக போட்டு வைப்பான் தாறுமாறான ஒரு கொக்கு கூடு போல் அது இருக்கும் அதன் நடுவே சோற்றை தூவி வைப்பான். ஏனென்றால் புண்ணாக்கு வாங்க அவனிடம் பணம் இருக்காது. இதில் கிழிந்த வலையில் தான் மீன் பிடிப்பான் அதுவும் யாரோ வேண்டாம் என்று தூக்கிப் போட்ட வலையை அவனது பாட்டி தைத்துக் கொடுப்பார். அந்த வலையே வைத்து தான் மீன் பிடித்து அந்த மீன்களை விற்று தினமும் சாப்பாட்டிற்கு வழி செய்வான். இவ்வாறு மீன்பிடித்தும் தேங்காய் புடுங்கியும் சிறுசிறு வேலைகள் செய்தும் வருமானம் ஈட்ட முயற்சிப்பான். ஆனாலும் அது அவர்களின்மூன்று வேளை உணவுக்கு கூட போதவில்லை.

அதனால் கூடுதலாக வருமானம் ஈட்ட சாராயம் கடத்த முற்படுகிறான். சாராயம் கடத்தி சிறை செல்கிறான். சிறை தண்டனையை அனுபவிக்கும் போது காவலாளி தண்டனை காலம் முடிந்து நீ விடுதலையான பின்பு என்ன செய்யப் போகிறாய் என்று சுமனிடம் கேட்கிறார். அதற்கு அவன் வீடு கட்ட போகிறேன் சகோதரிகளை படிக்கவைக்க போகிறேன், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன், பாட்டியை பார்த்துக் கொள்வேன். என்று சொல்கிறான் அதற்கு காவலாளி இதற்கெல்லாம் எப்படி உழைக்கப் போகிறாய் என்று கேட்கும் பொழுது அதற்கு அவன் நான் எப்படியாவது ஆம்பல் கண்டெடுக்க வேண்டும் திரும்பவும் மீன்பிடிக்க வேண்டும் எனக்கு சொந்தமான நல்ல கூரை சுவர்கள் தரை என எல்லாம் உள்ள ஒரு வீட்டை சம்பாதிக்கும் வரை ஆம்பல் தேடுவதை நான் விடப் போவதில்லை என்கிறான். ஆம் அவனுக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் அவன் முயற்சித்துக் கொண்டே இருந்தான் மூன்று வேளை உணவுக்காகவும் ஒரு நல்ல கூரை வீட்டிற்க்காக ஒவ்வொரு நாளும் வாழ்கையில் போராடிக் கொண்டே இருக்கிறான் ஏனென்றால் கிராமத்திலேயே அவனது வீடுதான் மிகப் பரிதாபமானது சித்தப்பாவின் வீட்டு சுவரோடு சாய்வாக இறக்கிய ஓலை கூரை. மூங்கிலான சுவர். கதவோ ஜன்னல்களோ இல்லை. மழை பெய்தால் கூரை ஒழுகும்.

எல்லோரும் ஒழுகாத இடத்தில் நெருங்கி இருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது இதுவே அவனது வீட்டு நிலை. எனவே நல்ல கூரை உள்ள ஒரு வீடு என்பதே அவனது பெரும் கனவாக இருந்தது. தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின் சிறையில் ஓர் உயர் அதிகாரியின் உதவியால் படகும், வலையும் கிடைக்க பெறுகிறான். அதன் மூலம் மீன்பிடித் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுகிறான். ஒருநாள் கிராமத்தை ஒட்டி உள்ள ப்ரீஸ் தோட்ட நிலம் மக்களுக்குபிரித்து பகிர்ந்து அளிக்க இருப்பதாக அறிகிறான் . ஆனால் அவனது பாட்டி வயது முதிர்ந்த காரணத்தாலும் சுமன் வயது குறைவாக உள்ள காரணத்தாலும் அவனுக்கு நிலம் கிடைக்கவில்லை எனவே அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுகிறான் அரசாங்கத்தின் உதவியால் எல்லோரும் வேண்டாம் என்று கழித்து விடப்பட்ட நிலத்தில் இரண்டு துண்டுகளில் ஒரு துண்டு நிலம் அவனுக்கு கிடைக்கிறது. இதுவரை அவன் சிறிது சிறிதாக சேமித்த பணத்தின் மூலம் பாதி வீட்டை கட்டி முடிக்கிறான் இந்நிலையில் அவனுக்கு ஒரு சில மருத்துவ காரணங்களால் உடல்நிலை சரியில்லாமல் போனபோது சேமிப்பில் இருந்த பணமும் செலவாகிறது. எனவே சுமன் தனக்கு வழங்கப்பட்ட கழிவு நிலத்தை சமப்படுத்தும் போது அதில் கிடைத்த மண்ணையும் கல்லையும் வைத்து வைத்து வீட்டை கட்டி முடிக்கிறான்.

பாட்டி சிறு சிறு செடிகளை நட்டு வீட்டை மேலும் அழகு படுத்துகிறாள். இப்போது கிராமத்திலேயே அவனது வீடு தான் மிகவும் அழகாக இருந்தது அவன் கண்ட கனவு இல்லம் நனவாகியது. அவனுக்கென்று இப்போது சொந்தமான படகும் மீன்பிடி வலையும் உள்ளது .

தன்னுடைய கடின உழைப்பால் அவன் தன்னுடைய கனவை நனைவாக்கினான் விடாமுயற்சி கடின உழைப்பு என்பது மீனவர்களுக்கே உரித்தான குணம் அதை கதையில் பல இடங்களில் காணலாம். சோர்ந்து போகும்போதெல்லாம் அதிலிருந்து மீண்டு வருவதற்கு அம்பரய புத்தகம் கற்றுக் கொடுத்தது நன்றி ஆசிரியர் அவர்களுக்கு.

தோழர் A.காயத்ரி
மூன்றாம் ஆண்டு,
மதுரை சட்டக் கல்லூரி.

நூல் : அம்பரய
ஆசிரியர் : உசுல பி.விஜயசூரிய
தமிழில்: தேவா
வெளியீடு : வடலி
விலை : ரூ. 115/-
பக்கம் : 175
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

bharathiputhakalayam@gmail.com

நூல் அறிமுகம் : நக்கீரனின் காடோடி நாவல் – சூரியா சுந்தரராஜன்

நூல் அறிமுகம் : நக்கீரனின் காடோடி நாவல் – சூரியா சுந்தரராஜன்




நூல் :  காடோடி நாவல்
ஆசிரியர் : நக்கீரன்
வெளியீடு : அடையாளம்
விலை : 270
பக்க :  340
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

வெறும் முன்னூறு ரூபாயில் இன்பச்சுற்றுலா செல்ல வேண்டுமா?

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிக் கொண்டிருந்த காலம் அது. “மருத்துவமனைகளில் இடம் இல்லை. அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவை. இடுகாட்டில் இடம் இல்லாததால் சடலங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன”. போன்ற அறிவிப்புகளே எங்கும் நிறைந்திருந்தது. போதாக்கு றைக்கு நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் ஒரு இறப்பு செய்தியை தெரிவித்துக் கொண்டிருந்தனர். பயமும் மனஉளைச்சலும் தொற்றிக் கொள்ள, அதிலிருந்து விடுபட நிறைய மறதியும் கொஞ்சம் அமைதியும் தேவைப்பட்டது. அவ்வளவு தான் போர்னியா தீவு என்னை வாரி அணைத்துக் கொண்டது. கடவுச் சீட்டு இல்லையென்றேன்; வேண்டாம் என்றது. இபாஸ் இல்லையென்றேன்; தேவையில்லை என்றது. பிறகு எதற்கு தாமதம்? கிளம்பலாமா?

ரசோங் குரங்கு
அதுதான் என் முதல் படகு பயணம். கினபத்தாங்கன் நதியின் நீண்ட படகு பயணத்தை தொடங்கும் முன், மிக நீண்ட சாலை பயணத்தையும் முடிக்க வேண்டியிருந்தது. கினபத்தாங்கனிலிருந்து வடக்கு நோக்கி திரும்பி லோக்கன் ஆற்றின் மீது மிதக்க தொடங்கியிருந்தது படகு. இருபுறமும் மரங்களடர்ந்த பொள்ளாச்சி – ஆனைமலை சாலையில் பயணம் செய்யும் போதெல்லாம் அதன் எழிலில் மயங்கி வண்டியில் ஊர்ந்து செல்லும் எனக்கு லோக்கன் இன்ப அதிர்ச்சி தந்தது. ஆற்றின் இருபுறமும் இருந்த அடர்ந்த மரங்கள் லோக்கனை வெயிலுக்கு காட்டாமல் வளர்த்துக் கொண்டிருந்தன. லோக்கனின் வழிப்பாதையை தவிர எங்கு திரும்பினும் பசுமை. பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த பறவை ஆர்வாலர்கள் வந்தால் கூட எந்த புள்ளினத்தின் ஒலி இது என்று பிரித்தறிய முடியாத அளவிற்கு கலவையான ஒலிகளால் கானகம் நிரம்பியிருந்தது. ஆனால் லோக்கனோ அதன் ஆழத்தில் கொஞ்சி விளையாடும் மீன்களை கண்ணாடிபோல் தெளிவாக காட்டி அமைதியாக சென்று கொண்டிருந்தது. லோக்கனின் தாகம் தீர்க்கும் பல ஓடைகளில் ஒன்று இடப்பக்கமாக மேற்கிலிருந்து ஓடிவந்து கலந்தது. இதற்கு மேல் படகு செல்லாது. இனி காணப்போவதெல்லாம் காடு காடு காடு மட்டும் தான். கொரோனாவினால் ஏற்பட்ட வலி கரைந்து கொண்டிருந்த தருணம் அது.

தனியாக தான் போனேன். ஆனால் அங்கு சென்றதும் முதலில் துவான் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். பின் ஒமர் வந்தார். யுவன்னா, இல்லை அன்னா வந்தாள். ஜோஸ்சும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். காடுகள் ஒளித்து வைத்திருந்த ஆர்மோனியப் பெட்டியை கண்டெடுக்க அவனே கற்றுக் கொடுத்தான். ஜோஸ்ஸின் சொந்தக்காரி ரலாவின் பாடல்களுக்கு இசை கருவிகளே தேவையில்லை. இவர்களுடன் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் சிலர். அப்புறம் பிலியவ். ‘எனக்கு வண்டியில் பயணம் செய்ய தெரியாது’ எனக் கூறி என் பேரன்புகளை பிடுங்கி சென்றவர். படேல் சிலையருகே பாதங்களுக்கு பக்கத்தில் மோடி நிற்பது போன்ற காட்சியில் மூதாய் மரத்தையும் என்னையும் பொருத்திக் கொண்டிருந்த வேளையில் ஒமர் சொன்னார், உலகில் இவ்வளவு உயரமான மரவகைகள் அமேசான், ஆப்பிரிக்க காடுகளில் கூட கிடையாது. என்னையும் அறியாமல் என் தலை அதை ஆமோதித்து அசைந்து கொண்டிருந்தது. எங்களுடன் வா! நீ காண வேண்டியது நிறைய உள்ளது என்று ஜோஸ் சொல்லி முடிப்பதற்குள் நான் தயாரான வேகத்தைப் பார்த்து அனைவரும் வெடித்து சிரித்தனர்.

ஐம்பூதங்களில் மூன்றிற்கு காடு சம்பளத்துடன் கூடிய கால வரையறையற்ற விடுப்பு கொடுத்து விட்டது போலும். கண்ணுலையே படல. நிஜமாகத்தான் சொல்றேன். பல நூற்றாண்டுகளாய் சேமித்த இலை மேல்மண் மக்குகளால் சில அடி உயரம் வரை மூடப்பட்டிருந்த நிலம். ஓங்கியுயர்ந்து அடர்ந்து படர்ந்து வளர்ந்த மரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம். சூரிய ஒளி புகமுடியாததனால் வெப்பத்திற்கு (நெருப்பு) தடை. ஆனால் வளிக்கும் (காற்று), அதனை குளிரூட்டும் சிற்றோடைகளுக்கும், குளங்களுக்கு (நீர்) மட்டும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்டும் வேலை. இப்படி அடர் வனத்தின் குளிர்ந்த கவிகையில் மூன்று நாட்கள் நீந்திக் கொண்டிருந்தேன்.

நான் பார்த்ததையெல்லாம் சொன்னால் நீங்கள் எல்லாரும் உடனே கிளம்பி அங்க போயிருவீங்க…கொஞ்சம் பயண களைப்பில் இருந்தாலும் உங்களுக்காக சில விஷயங்களை மட்டும் சொல்றேன்….. நம்ம ஊருல இருக்குற குரங்குகளெல்லாம் ஒரு மாறி மரப்பட்டை கலர்ல தான இருக்கும். இங்க அடர் செம்மஞ்சள் கலர்ல ஒரு குரங்கை பாத்தேன். அதுக்கு மூக்கு வேற தும்பிக்கை மாதிரி இருக்கு. ஒமரிடம் கேட்டேன், ரசோங் குரங்குகளாம். இங்கு தவிர உலகில் வேறு எங்கும் இல்லையாம்.

காட்டின் தாவரவியலையும், விலங்கியலையும் கரைத்து குடித்திருந்த ஒமர்தான் அந்த மூன்று நாட்களுக்கும் என் ஆசான். அதைப் போலவே உலகிலேயே மிகச் சிறிய குளம்புள்ள பாலூட்டியான கூரன் பன்றி, குள்ள யானை, வேதிவால் குருவி, இருவாசி பறவைகள், லயாங் லயாங் குருவி, பறக்கும் பாம்பு, பறக்கும் தவளை, பறக்கும் அணில், உராங் ஊத்தான், ஐந்தடி உயரமுள்ள தேன்கூடு, ஓரடி நீளமுள்ள குச்சிப் பூச்சி, பல அடி நீளமுள்ள மலைப்பாம்பு, டைனோசர் காலத்து தொன்மையான துபையா, தேன் குடிக்கும் ஒளவால், பெர்பாஞ்சாட் எனும் தொடை பருமனுள்ள காட்டு கொடி, பகட்டு கோழி, தாடி பன்றி, தெம்படாவ், பன்றிவால் குரங்கு, சாம்பல் குரங்கு, கலோய் மீன், சும்பித்தான்……. ஆமாங்க …இந்த பட்டியல் சற்று நீளமானது தான்..

காட்டுன்னா பல்வேறு மரங்களும் உயிரினங்களும் இருப்பது இயல்பு தானேனு நீங்க நினைக்கிறது கேக்குது. ஆனா மற்ற காடுகளில் இருப்பது போன்று அல்ல. நான் வாசித்த பட்டியலில் பெரும்பாலானவை ஓரிடவாழ்வி. இந்த காட்டை தவிர உலகில் வேறு எங்கேயும் இவற்றை காண முடியாது. இந்த காட்டை பற்றிய மேலும் ஒரு சுவையான உண்மையை ஒமர் என்னிடம் கூறினார். நான் உங்களிடம் கூறுகிறேன். குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதை நாம் அறிவோம். அந்த குரங்கு இனத்திற்கே முன்னோடியாக உள்ள விலங்குகளை பிரைமேட் என்று கூறுவார்களாம். அது உலகெங்கிலும் பரவி இருந்தாலும் சுமார் பத்து பிரைமேட்கள் ஒன்றாக இந்த காட்டில் உள்ளதாம். ஆம். நம் பத்து முப்பாட்டனையும் நான் பார்த்து விட்டேன். அதில் ஒன்று தான் நாற்பத்தினான்கு விலங்கு. அந்த விலங்கில் ஆந்தையின் கண்கள், வௌவாளின் காதுகள், குரங்கின் வால், தவளையின் கால் என 44 வகையான விலங்குகளின் உறுப்புகள் இருந்தது. நான் மெரண்டுட்டேன். இறுதியாக,கதிரவன் கரையும் நேரத்தில், உலகிலேயே வௌவால்கள் அதிகம் வசிக்கும் கோமதோங் குகையிலிருந்து பல ஆயிரம் வௌவால்கள் வெளியேறிய காட்சியும், கோடான கோடி மலர்கள் ஒரே சமயத்தில் மலர்ந்திருந்த காட்சியும் இந்த பயணத்தில் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது…….

உங்களுக்கும் அங்க போகணும்னு தோணுதா? இந்த பெருந்தொற்று காலத்திலும் இது சாத்தியமாகுமானு சந்தேகமா இருக்கா? அதுவும் வெறும் முன்னூறு ரூபாயில்.சாத்தியம்தான் நக்கீரனின் காடோடி நாவலை வாசித்தால். ஆமாங்க. இவ்வளவு நேரமும் நான் படித்த காடோடியில் உள்ள போர்னியா தீவைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தேனே தவிர நான் சென்று வந்ததை பற்றி அல்ல. கதையை சொல்லும் துவான், என் கையை பிடித்துக் கொண்டு கூட்டிப்போகும் உணர்வை அவர் எழுத்தில் தோய்த்திருந்தார் நக்கீரன்.

இக்கதை போர்னியாவைப் பற்றியது அல்ல. அங்கு வாழும் வாலில்லாக் குரங்குகள் பற்றியும் அல்ல. அங்குள்ள குளங்களிலும் அருவிகளையும் வளர்க்கும் ஓடைகளை பற்றியும் அல்ல. காடுகளை போற்றி பாதுகாத்து வாழும் திடோங், முருட் இனங்களை பற்றியதும் அல்ல. காட்டிலுள்ள மரங்களிடம் உரையாடும் பிலியவ் பற்றியும் அல்ல. மரங்களினுள் வாழும் கொற்றவை பற்றியும் அல்ல. அந்த கொற்றவையை கொல்ல வரும் வெட்டுமர கம்பனியை பற்றியதும் அல்ல. தன்னை வாழ வைக்கும் காட்டின் அழிவிற்காக கவலைப்படும் பகட்டு கோழியை பற்றியதும் அல்ல. மொத்த காடும் அழிந்து போர்க்களத்தின் இறுதி காட்சியை நினைவுறுத்திக் கொண்டிருக்கையில், மூதாய் மரத்தின் வெட்டப்பட்ட அடிமரத்தின் அருகில் சென்று, உரிந்த பட்டையை தடவி வலிக்கிறதா? என கேட்ட துவானைப் பற்றியும் அல்ல. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் பற்றியது. குரங்கின் மூளையை உயிருடன் சுவைக்கும் இரக்கமில்லாதவர்கள் பற்றியது. எதற்கு வாங்குகிறோமென தெரியாமலே பொருட்களை வாங்கி குவிக்கும் பேராசைக்காரர்கள் பற்றியது. ஆம் நம்மை பற்றியது. என்னைப் பற்றியது.

சூரியா சுந்தரராஜன்
9943763750

Kadalin mel oru Kaiyezhuthu Kavithai By Kala Bhuvan கடலின் மேல் ஒரு கையெழுத்து கவிதை - கலா புவன்

கடலின் மேல் ஒரு கையெழுத்து கவிதை – கலா புவன்

பரந்து கிடந்தது கடல்
சூரியக் கதிர்கள்
கடலின் ஆழத்தை தொடமுயன்று தோற்றன
சிப்பிகள் இதமான குளிரில் முத்துக்களை
தாங்கி நின்றன
பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தன
திமிங்கிலங்கள் பெரிய மீன்களை கவ்விக் கொண்டன
கட்டுமரங்களிலும் படகுகளிலும் மீனவர்கள்
மீன்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர்
கப்பல்கள் கடலின் அமைதியை காயப்படுத்திக்கொண்டிருந்தன
காற்று மட்டும் கடலின் மேல்
கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தது
கடலின் கவிதைகள் அலைகளின் மேல் பயணித்து
கரைகளை சென்றடைந்தன
காதலர்கள் கால்களை கடலைகளில் நனைத்துக்கொண்டனர்