ச. சுப்பாராவ் (C. Subbarao) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள புத்தகக் காதல் (Puthaga Kadhal) புத்தகம் - Tamil Books

புத்தகக் காதல்: போரிலும் வென்ற புத்தகக்காதலர்கள்..! – சித்தார்த்தன் சுந்தரம்

புத்தகக் காதல் (Puthaga Kadhal) நூலிலிருந்து... போரிலும் வென்ற புத்தகக்காதலர்கள்..! - சித்தார்த்தன் சுந்தரம் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பைப் பார்க்கும் போதும் குறிப்பாக சென்னை, மதுரை, ஓசூர் நகரங்களில் நடைபெறும்போது அங்கு எப்போது செல்ல வேண்டும், எத்தனை நாள்களுக்குச்…
Punai Vilakkiya Nathiyil Neenthi Book By P. Vijayakumar Bookreview By Jananesan நூல் அறிமுகம் - பெ. விஜயகுமாரின் புனைவிலக்கிய  நதியில் நீந்தி - ஜனநேசன்

நூல் அறிமுகம் – பெ. விஜயகுமாரின் புனைவிலக்கிய  நதியில் நீந்தி – ஜனநேசன்




பேராசிரியர் . பி.விஜயகுமார்  ஆங்கில இலக்கியம் முப்பதாண்டு களுக்கு மேலாக  கற்பித்தவர். சமூக அக்கறையும் ,நாட்டுப் பற்றும் மிக்க கல்வியாளர். ஆங்கிலம் வழியாக  உலக இலக்கியங்கள்  அறிந்தவர் மட்டுமல்லாமல் தமிழார்வத்தால்  பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன தமிழ் இலக்கியங்கள் வரை வாசித்து  தன்னையும்  தமிழ்மொழி  நடையையும் புதிப்பித்து வருபவர். செம்மலர், புக்டே  இணைய இதழிலும்  தொடர்ந்து புத்தக அறிமுகக் கட்டுரைகளையும், விமர்சனங்களையும்  செய்து வருபவர். கொரோனா பெருந்தொற்று அலையலையாய்  தாக்கி  மானுடர்க்கு மட்டுமன்றி  சக உயிரிகளுக்கும்  பற்பல கேடுகளும், சிற்சில நன்மைகளும்  செய்திருக்கிறது. 

கொடுந்தொற்று முடக் ககாலத்தில், புத்தகத்தின் பால் தீண்டாமை கொண்டவர்களும், ஊர்முடக்கத்தில் வெளியே போக இயலாமல், புத்தகங்களை தூசுதட்டி வாசித்த  அதிசயங்கள்  நடந்தது. இத்தகு மனிதர்களை  ஆற்றுபடுத்தும் விதமாகமாகவும்  தனது முடக்க காலத்தை  இயங்கும் காலமாக்கவும்  பலநூல்களைத்தேடி தேடி வாசித்து, உடனுக்குடன்   புக்டே இணைய தளத்தின் வாயிலாக நூலார்வலர்களுக்கு அறிமுகம் செய்தார். இப்படி அறிமுகம் செய்த 15 நூல்களைப் பற்றிய  அறிமுகக்கட்டுரைகள் அடங்கிய  தொகுப்புதான்  “புனைவிலக்கிய நதியில் நீந்தி…” எனும் இந்நூல்.

கொடுந்தொற்று முடக்ககால இலக்கியசான்றுகளையும் ,மக்கள் எதிர்கொண்ட விதம்பற்றியும்  வாசகர்களுக்கு பகிரும்விதமாக  பிரஞ்சு இலக்கியமேதை  ஆல்பர்ட் காம்யு  எழுதிய ,”தி பிளேக் “ நாவலை  அறிமுகப்படுத்துகிறார்.  அல்ஜீரியாவில் ஓரான் எனும் கடற்கரை நகரில் பிளேக் நோய் எப்படி தாக்குகிறது, அரசு நிர்வாகத்தின்  அக்கறையின்மையும், மக்களின் அலட்சிய மனோபாவமும், சரியான மருத்துவ வசதியின்றியும், தற்காப்பு உணர்வின்றியும்  மாயும் அப்பாவி மக்கள்  குறித்தும் ,  ஆல்பர்ட் காம்யு நெஞ்சைத் தொடும் வண்ணம்  சொல்ல பயன்படுத்திய உத்திகளையும் பேரா. விஜயகுமார் அறிமுகப் படுத்துகிறார்.  

இதேபோல் நமது ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “தி போஸ்ட்ஆபிஸ்“ நாடகத்தில், கொடும் நோய்வாய்ப்பட்ட அமல் எனும்  சிறுவன் ஊர்முடக்கம் செய்யப்பட்டு அவன்படும் பாடுகளையும், ஜன்னல் வழியே, அவன் இயற்கையோடும், தெருவில் போகும் மனிதர்களோடு கொள்ளும் உறவாடல்களையும், தத்துவச் செறிவோடு  தாகூர் வாசகர்மனத்தில் கிளர்த்தும் தாக்கத்தையும் எடுத்து இயம்புகிறார் விஜயகுமார். இவ்விரு  படைப்புகளும் கொடுந்தொற்றில்  முடங்கிப்போன  மனங்களுக்கு தெம்பையும், ஆறுதலையும் தருகின்றன.

இன்றைய உலகுதழுவிய சூழலில் , நிறவெறியும், பாலியல்வன்ம வெறியாட்டங்களும் மனிதர்களை பீடித்த நோயாக ஆட்டுவித்தலையும் , இவற்றிலிருந்து  மீளும் வழிகளை ஆற்றுப்படுத்தும் விதமாக, ரிச்சர்ட் ரைட் எழுதிய “நேடிவ் சன் “ஆலிஸ் வாக்கர் எழுதிய  “தி கலர் பர்பிள் “ ,சாமன் நஹல் எழுதிய “ஆஸாதி”; பிரியா விஜயராகவன் எழுதிய “அற்றவைகளால் நிரம்பியவள் “ போன்ற படைப்புகளை இந்நூலாசிரியர்  அறிமுகம் செய்கிறார். 

இக்காலத்தில் நம்மை தொற்றிவரும் கொடுந்தோற்றுகளில்  ஒன்றான, மதவெறியின் தாக்கங்களையும், எதிர்கொள்ளும்  முறைகளையும், தோப்பில் முகமது மீரான்  எழுதிய,” அஞ்சுவண்ணம் தெரு “ மு.இராமசாமி எழுதிய , “விடாது கருப்பு” எனும் பெரியாரிய நாடக நூல்கள் மூலம் பேரா. விஜயகுமார் உணர்த்துகிறார். பாசிஸ்ட்களின் அடக்குமுறைகளையும், புத்தகங்களுக்கு எதிரான  நடவடிக்கைகளையும் அவற்றின்  எதிர்விளைவுகளையும், ரே பிராட்பரி எழுதிய “பாரன்ஹீட் -451” நாவல் வழி  சொல்லுகிறார். 

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, அவர்களது  வீரஞ்செறிந்த எதிர்வினைகளைக் கூறும் ,மஹா சுவேதாதேவி  எழுதிய “1084 இன் அம்மா” ,”காட்டில் உரிமை” போன்ற நாவல்கள் மூலம்  தமிழ் வாசகர்களுக்கு  இந்நூலாசிரியர்  அறிமுகம்  செய்கிறார்.

இவற்றோடு சுற்றுச்சூழல்களுக்கு கேடுவிளைவிக்கும் விதமாக, சிலப்பதிகார பின்னணியில்  இரா. முருகவேள் எழுதிய “மிளிர் கல்” நாவலையும், மணல்கொள்ளையின்  விளைவுகளைச் சொலலும் .பா.செயப்பிரகாசம் எழுதிய ,”மணல்” இத்தொகுப்பில் பேராசிரியர் அறிமுகப்படுத்தும் நூல்களின் ஆசிரியர்களின் ஆளுமைச் சிறப்புகளையும், அப்படைப்புகள் உருவான சமூகச் சூழல்களையும், அப்படைப்புகள்  இலக்கிய உலகிலும், சார்ந்த சமூகத்திலும்   ஏற்படுத்திய தாக்கங்களையும், அப்படைப்புகளில் படைப்பாளிகள் கையாண்ட  உத்திகளையும் வாசகமனதில் எளிதில் பதியும், சரளமான நடையில் பேரா. விஜயகுமார்  சொல்லுவது இந்நூலின் சிறப்புகளுள் ஒன்று..!  இந்நூல் வாசிப்புமட்டதை உயர்த்துவது மட்டுமல்ல; ஒரு நூலை வாசகனுக்கு  எப்படி அறிமுகப்படுத்தவேண்டும் என்பதையும் கற்பிக்கிறது.. ஆகவே  இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகின் வாசகர்கள் கையில்  இருக்கவேண்டிய  அவசியத்தையும்  வலியுறுத்துகிறது.

புனைவிலக்கிய நதியில் நீந்தி… என்ற நூல் தலைப்புக்கு  பொருத்தமான, ஈர்ப்பான அட்டைப்படமும், அச்சும், கட்டமைப்பும் இந்நூலுக்கு கூடுதல்  சிறப்பு.

நூல்: புனைவிலக்கிய நதியில் நீந்தி
ஆசிரியர்: பேரா.பெ..விஜயகுமார்.
வெளியீடு: கருத்துப் பட்டறை
பக்கங்கள்: 152
விலை: 170
தொடர்பு எண்; 9500740687