ஆகஸ்ட் 1 - 7  : உலக தாய்ப்பால் வாரம் | Aug 1-7 World Brest Feeding Week.It Talks about the imporants of brest feeding and Brest Milk - https://bookday.in/

ஆகஸ்ட் 1 – 7  : உலக தாய்ப்பால் வாரம்

ஆகஸ்ட் 1 - 7  : உலக தாய்ப்பால் வாரம் பரபரப்பாக எந்திர வாழ்க்கைக்கு நகர்ந்து கொண்டிருக்கும் நம் இந்திய மக்களுக்கிடையில் முறையான தாய்ப்பால் ஊட்டுதல் தாய், சேய் என இருவருக்கும் நல்லது என்ற  விழிப்புணர்வு  பெருபான்மையாக அனைவரிடத்திலும் சென்று அடைத்திருக்கிறதா?…
தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 19 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 19 – டாக்டர் இடங்கர் பாவலன்



19. மனைவிக்கு கணவன் எழுதிய மன்னிப்புக் கடிதம்
-டாக்டர் இடங்கர் பாவலன்

கருத்தரித்துவிட்ட நாள் முதலாக, கருப்பையில் நீ பிள்ளையை அழகாய் வணைந்து நீ வார்த்தெடுத்தது, பெருவலியெடுத்துப் பிரசவித்து பிள்ளையை எங்களுக்கு நீ கையளித்தது, பாலூட்ட மார்பில் பிள்ளையை நித்தமும் கிடத்தியபடி துயருற்றது என இத்தனை நாளும் நீ அடைந்த வாதையின் துன்பத்தில் ஒரு துளியும் ஆற்றிடாத என்னை நீ ஒருபோதும் மன்னிக்க வேண்டாம், அன்பே! கருப்பையும் மார்பும் இருக்கிற காரணத்தினாலே, ஒரு பெண்ணாய் நீ ஆக்கப்பட்டிருக்கிறாய் என்கிற நிர்கதியினாலே எனக்கு எந்தச் சம்பந்தமுமில்லை என்பதாக விலகியே ஒரு பார்வையாளனாய் கடந்துவிடுகிற என்னை நீ ஏன் மன்னிக்க வேண்டும்?

பெருவயிறு தாங்கிய நாட்களில் புரண்டு படுக்கக்கூட திராணியற்று உன் கனத்த நெஞ்சில் பெருகி வருகிற மூச்சுத்திணறலோடு நீ கடத்திய பொழுதுகளில் எல்லாம் நான் தந்தையாகப் போகிற கனவுகளோடு நிம்மதியாகத் தூங்கி எழுந்த நாட்களை எண்ணி ஒருபோதும் வெட்கப்படாத என்னை நீ எப்போதும் மன்னிக்க வேண்டாம். பிரவச வலியெடுத்த அறையில் எலும்புகள் நொறுங்கப் பிள்ளையை வெளித்தள்ளிய கணத்தில் நம் பிள்ளையைப் பற்றி மட்டுமே தெரிந்து கொள்கிற ஆவலாதியில் அன்று உனை மறந்து போன நிகழ்விற்குப் பின்னால் எப்படி உன்னால் என்னை இயல்பாக மன்னிக்க முடியும்?

பிள்ளைக்குப் பாலூட்ட மார்பு வேண்டியிருக்கிற போதெல்லாம் அதுவொரு பெண்ணுக்குரிய, தாயிற்குரிய செயலென்று ஒதுங்கித் தானே நானும் தலைமறைவாகி இருக்கிறேன். அடிக்கடி பால் கேட்டு அழுகிற பிள்ளைக்குப் பாலூட்ட வேண்டி, பிரசவித்த அயர்ச்சியில் நீ எழுந்து கொள்ளக்கூட பலமின்றி படுத்திருக்கையில் ஒரு கணவனாக எதைத் தான் செய்துவிட்டேன் நான்? எப்போதும் வீட்டுப் பெரிய பெண்களே பார்த்துக் கொள்வார்கள் என்று பால் கொடுக்கையில் உன் கரம்தொட்டு எழுப்பி உட்கார வைக்கக்கூட எனக்கு அப்போது தோன்றியிருக்கவில்லை. எழுந்து நிமிர்ந்து உட்காரும் போதே முதுகில் குத்துவலி எடுக்கையில் அதற்குப் பாந்தமாக வெந்நீர் ஊற்றவோ, சுடுஎண்ணெய் விட்டு நீவிக் கொள்ளவோ ஒருபோதும் நான் உனக்கு உதவியாக இருந்ததேயில்லையே!

சம்மணமிட்டு அமருகையில் புண்ணாகிப் போன பிறப்புறுப்பில் ஏற்படுகிற வலியின் வேதனையும் தாண்டி நீ பிள்ளையை மடியில் கிடத்த வேண்டியிருக்கும். அச்சமயத்தில் அருகே துயில் கொண்டிருக்கிற பிள்ளையைக்கூட உடலைத் தாழ்த்தி நீ கைதூக்க முடியாமல் மூச்சுமுட்டுதலுடன் திணறிக் கொண்டிருப்பாய். அப்போதெல்லாம் அருகாமையில் நான் இல்லாமல் போன துயரத்தை நீ ஏன் அன்பே பொறுத்துக் கொள்ள வேண்டும்? அவ்வாறே மடியில் கிடத்தப்பட்ட போதும்கூட பிள்ளையின் பாதங்களில் உதைபடுகிற தையலிட்ட அடிவயிற்றின் வலியைத் தாங்கியபடி பாலூட்டி நீ அவர்களைத் தூங்க வைக்கிற போது அதற்கெல்லாம் நான் எவ்வகையிலும் பயனுள்ளவனாய் இல்லையே? இதையெல்லாம் நீ ஏன் தான் சகித்துக் கொள்ள வேண்டும்?

அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்றைய நாளில் பிள்ளையைத் தாங்கிக் கொள்ளவே வலுவற்றிருந்தாய். அப்போது உனது அம்மா வந்து மார்பருகே பிள்ளையைக் காட்டி பாலருந்த வைத்துக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் நான் எவ்வகையில் உபயோகமாய் இருந்துவிட முடியுமென்று என்னை நானே தவிர்த்துக் கொண்டதையெல்லாம் நீ நல்லவிதமாய் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. பிள்ளைக்குப் பாலூட்டுவதை அருகிலிருந்து கணவன் பார்க்கக் கூடாது, அதனால் மார்பில் பால் வற்றிப் போகும் என்றெல்லாம் முதிய பெண்கள் பேசியபடி என்னைத் துரத்துகிற போதெல்லாம் உனக்கும் பிள்ளைக்கும் எத்தகையத் தீங்கும் வந்துவிடக்கூடாது என்று விலகிப் போகிற காரணத்தை துயரத்தில் இருக்கிற நீ ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும் அன்பே!

மார்பிலிட்டு பாலருந்திய பின்பாக தோளில் சாய்த்து அவர்கள் ஏப்பம் விடுகிற வரையிலும் முதுகில் தட்டிக் கொடுக்கிற அழகிய தருணங்களில்கூட ஒரு தந்தையாக நான் செயலாற்றியதில்லையே! இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இரவும் பகலுமாக அடிக்கடி தாய்ப்பாலூட்டியே தளர்ந்து போய் நீ துயில் கொள்கிற பொழுதில், பிள்ளை அழுதால் உனை தட்டியெழுப்பியே பிள்ளையைக் கவனித்துக் கொள்ளச் செய்கிற இடத்தில் நான் தந்தையாக இருந்து என்ன தான் செய்துவிட்டேன்? தோளிட்டு தூங்க வைக்கவோ, தொட்டில் சேலையிலிட்டு அவர்களுக்குத் தாலூட்டுப் பாடவோகூட ஒரு ஆணாக எனக்கான சலுகையைப் பாரபட்சமின்றி நான் எடுத்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்வதை யாராலுமே மன்னிக்க முடியாது தானே!

நான்கு மாதங்கள் வரையிலும் கழுத்து நிற்காத பிள்ளையை, உச்சிக்குழி இன்னும்கூட மூடிடாத குழந்தையை பக்குவத்தோடு என் கைத்தாங்களாக தூக்கிக் கொஞ்சுவதற்குப் பயந்து கொண்டு, அவர்களை அள்ளி அரவணைக்கவே அச்சப்படுகிற என்னுடைய பயத்தைக்கூட நான் காரணமாக்கிக் கொள்வது நிச்சயமாகத் தவறு தான்!

அடிக்கடி அழுகிற, அழுத வயிற்றுக்கு பசியாறப் பால் புகட்டுகிற போதெல்லாம் சிறுநீர் மலம் கழித்துவிடுகிற பிள்ளைக்கு நான் ஒருபோதும் அவர்களது துணியை மாற்றியதும் இல்லை. அவற்றை கூச்சமற்று நீக்கிவிட்டு, சுத்தப்படுத்தி, அவர்களுக்குப் புதியதோர் துணியை அணிவிப்பதில் முகச்சுளிப்பின்றி ஒருபோதும் பிரயத்தனப்பட்டதில்லை. அவர்கள் மலம் கழித்த துணியை ஒரு தந்தையாக நான் ஒருபோதும் துவைத்துக் காயப் போட்டதுமில்லை. துவக்க காலத்தில் எனது உள்ளாடைகளைக்கூட துவைத்த உன் கரங்களுக்குப் பரிகாரமாக, பிரசவத்திற்குப் பின்பான நாட்களில் குறைந்தபட்சம் அதிகமாக இரத்தம் கசிந்து கவிச்சை வாசமடிக்கிற உனது ஆடைகளைக்கூட நான் துவைத்துப் போட வேண்டும் என்று எண்ணிப் பார்க்கவில்லையே!

கைகால் தலையென்று எதுவுமே நில்லாமல் ஒரு பொம்மலாட்ட பொம்மையைப் போல அசைந்தாடிக் கொண்டிருக்கும் பிள்ளையை எனது குச்சி போன்ற கால்களில் கிடத்திக் குளிப்பாட்டி, எண்ணெய் தேய்த்து, கண்ணேறுபட்டுவிடும் என்று திருஷ்டியெல்லாம் கழிப்பதற்கென்று ஒருபோதும் உடனிருந்துப் பார்த்திராத என்னை யாருமே மன்னிக்க வேண்டாம். சரியாக பிள்ளை மார்பில் பாலருந்திக் குடிக்காமல், மார்பில் பால் கட்டிக் கொண்டு துன்பப்படுகிற போதெல்லாம், அதனது வலியையும் பொருட்படுத்தாமல் உனக்குப் பால் சரியாக சுரக்காத, சுரக்கின்ற பாலினை சரியாக பிள்ளைக்குப் புகட்டாத, அப்படிப் பால் நன்றாகக் கிடைக்காததால் கொழுகொழுவென தேறிடாத பிள்ளையை மட்டுமே எண்ணி வசைபாடுகிற ஆண்களையெல்லாம் யாருமே மன்னிக்க மாட்டார்கள் தானே!

இதுவெல்லாம் பெண்கள் சமாச்சாரம், இதற்குத் தானே உடனிருந்து பார்த்துக் கொள்ள தாயாகிய பெண்ணை பிரசவிக்கும் போதிருந்தே வரவழைத்து பார்த்துக் கொள்ள வைத்திருக்கிறோம், பிள்ளை பெற்ற அனுபவமான பெண்களால் தானே உதவியாக இருக்க முடியும், ஒரு ஆணாக உன்னால் என்ன செய்துவிட முடியும், இதற்கெல்லாம் தீர்வாகத் தானே தாய்வீட்டிற்கு அனுப்பி பிள்ளையை வளர்த்தெடுத்த பின்பாக வரச் செய்கிறோம் போன்ற வழக்க நெறிமுறைகளையெல்லாம் பேசிப்பேசி காலம் சென்ற காரணங்களை இனியும் நம்பி பிள்ளையை வளர்த்தெடுப்பதில் வெறும் தந்தையென்ற பெயரை மட்டும் போட்டுக் கொண்டு இருந்துவிடுகிற என்னை நீயே மன்னித்தாலும்கூட ஒருபோதும் என்னையே நான் மன்னிக்கப் போவதில்லை அன்பே!

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 17 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 17 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
செல்வ மகளுக்கு அம்மா எழுதும் அன்புக் கடிதம்

உன்னைப் பெற்றெடுத்த வயிற்றின் ஈரம்கூட காய்வதற்கு முன்னால் மடிநிறைய பிள்ளையைச் சுமந்து வந்து எனதன்புச் சுமையினைக் கூட்டுகிறாய். உனை மகளென்றும் மலர்ந்த தாயென்றும் கட்டிக் கொள்கிற போதெல்லாம் நான் பெற்றெடுத்துக் கிடந்த உடலின் கதகதப்பை உன்னிலே உணர்கிறேன் மகளே! சிறு தவளை போல இரவெல்லாம் மழலைக் குரலால் இசைத்தபடி கைகால்களை உதைத்துக் கொண்டு கிடந்த உனது திரேகத்தில் நானுணர்ந்த உன் வாசமெல்லாம் இப்போது எனது பேத்தியின் தேகத்திலும் ஒரு கற்பூரத்தைப் போல் கமழுகிறது.

கோவில் தெப்பக்குளத்தில் எழுப்பப்பட்ட கல்மண்டபத் தூண்களில் அலையடித்துக் காய்ந்து போன ஈரப்பசப்பைக் கைதாங்கலாகப் பிடித்துக் கருவறைக்குள் நுழைந்த அதன் தாழ்வாரத்தில், பூசாரி ஒருசொட்டுத் துளசித் தீர்த்தத்தை உள்ளங்கையிலும் உச்சந்தலையிலும் தெளித்திட்ட போது சிலிர்த்த அதே உடலின் பரவசத்தை, இப்போது நான் உனை மார்பிலே கிடத்தி வாய் கொள்ளுமளவுக்கு காம்பு நிறைத்து பாலூட்டிய போது நீ பருகிய அந்த முதல் சொட்டுத் தாய்ப்பாலின் தருணத்திலே உணர்ந்திருக்கிறேன். அதை நினைத்து இப்போதும்கூட மயிர்க்கூச்சமடைந்து மயிர்க்கால்களும் குத்திட்டு நிற்கின்றன.

வேளாங்கன்னி மாதாங்கோவில் மண்டபத்தில் ஏற்றி வைக்கப்பட்டு உறைந்து போன மெழுகுவர்த்திகளின் கதகதப்பையும், அதனது ஒளியையும், மிருதுவையும் போலிருக்கிற உன் உச்சந்தலையில் சிறு மண்துகளும் தீண்டிடாதவாறு கைகளால் தரையை ஒத்தியெடுத்துவிட்டே உன்னைத் துயில் கொள்ள வைத்தேன். குளிரும் தரையில் பட்டு சிலிர்த்தவுடன் கை கால்களைக் குறுக்கி வீரிடும் உனை என் மார்பிற்குள் புதைத்துக் கொண்டு அப்போதெல்லாம் கதகதப்பூட்டினேன். உன் மெல்லிய பாதங்கள் தரையில் படுவதற்கு முன்பாக முத்தமிட்ட முகத்தில் பதிய வைத்தே உனக்கு முதல் நடைகாட்டப் பழக்கினேன். எனது புண்பட்டுக் காய்ந்து தழும்பாகிய அடிவயிற்றில் உனை என் கைபிடித்து நிற்க வைத்தே எப்போதும் உனை மகிழ்வித்தேன். என் கணுக்காலில் உனை அமரவைத்து சீசா விளையாட்டுப் பழக்கிய பின்பே உனக்குக் கைப்பொம்மைகளெல்லாம் விளையாட்டுக்குரிய பொருட்களாயின.

இத்தனை மகிழ்வுக்கும் பின்னே உனை நான் மார்பிட்ட கணத்தில் ஏற்பட்டிருந்த பாலூட்டிய துயரங்களையும் வாதைகளையும் அதிலிருந்து சுண்டக் காய்ச்சியெடுத்த சின்னச் சின்ன மகழ்வுகளையும் இப்போது யோசித்துப் பார்க்கிறேன். உனை வளர்த்தெடுத்த ஞாபகச் சுள்ளிகளையெல்லாம் பொறுக்கியெடுத்து இன்றைய அதியற்புத நாளில் ஒரு நினைவுக்கூட்டினை கட்டிப் பார்க்கிறேன். என் வாழ்வின் நிலைத்த பேறுடைய கடந்த காலத்தில் பிள்ளைபேறு கண்டு பாலூட்டி வளர்த்தெடுத்த என் நினைவிலே எஞ்சியிருக்கிற அனுபவங்களையெல்லாம் தொகுத்துச் சொல்வதற்கு ஒரு தாயாக இப்போது ஏனோ ஆசைப்படுகிறேன். இது உனக்கும், உன் பிள்ளைக்கும், நம் தலைமுறைக்கும்கூட உதவக்கூடும் என்கிற உள்ளுணர்வின் பால் எழுந்த உளக்கிளர்ச்சியால் தான் இப்போது நான் இதை எழுதுகிறேன்.

அச்சமயத்தில் நீ வயிற்றிக்குள் மீனாய்த் துள்ளி முண்டியபடி வெளியேறத் துடித்துக் கொண்டிருந்தாய். உனை குழந்தை இயேசுவின் வருகையைப் போல எல்லோரும் எதிர் பார்த்தபடியிருந்தோம். வானத்தில் மின்னுகிற பொலிவுற்ற நட்சத்திரங்களாய் நாங்களே மகிழ்வில் மினுங்கிக் கொண்டிருந்தோம். ஆனாலும் உன் வருகை அவ்வளவு எளிதாய் நடைபெறவில்லை. நீ கீழிறங்கி வந்து பெருவலியெடுக்க வேண்டிய அந்நேரத்தில் போதிய அவகாசமில்லாத காரணத்தால் இன்னும்கூட வலியினை அதிகரிக்க வேண்டி மருத்துவர்களும் செவிலித்தாய்களும் முனைப்புக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே இயற்கையின் பால் உண்டான வலியும், மருந்துகளால் தூண்டப்பட்ட வலியுமாக இரு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியைப் போல தரிகெட்டு வலியில் துடிதுடித்து அப்போது நானும் வீரிட்டு அழத் துவங்கினேன். கடவுள் அச்சமயம் எனக்கு ஏனோ இரக்கமே காட்டவில்லை.

எல்லோரும் கணித்தபடி பிரசவம் முன்னேறுவதற்கான வாய்ப்புகளெல்லாம் படிப்படியாக கண்முன்னே கரைந்து கொண்டிருப்பதை பரிதவிப்பு ததும்பிய கண்களால் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே அப்போது எங்களால் முடிந்திருந்தது. அதிகாலையில் உதயமாகிய பொன்னிறச் சூரியனின் கதகதப்போடு உனை அணைத்துக் கொள்ள எண்ணியிருந்த வேளையில் அந்தக் கதிரவன் மலை முகடுகளுக்குப் பின்னால் மறைந்திட்ட போதிலும்கூட நீ வெளிவருவதற்கான அறிவிப்பு மட்டும் எங்களுக்குக் கிடைக்கவேயில்லை.

அப்போது வரையிலும் அலையலையாய் துடித்தெழுந்து பாறையில் வந்து மோதி பெரும் ஓய்ச்சலோடு திரும்புகிற பேரலையொத்த வலியை நான் அனுபவித்தபடியே இருந்தேன். பிரசவ அறையில் என்னோடு உன் தந்தையும் கரம்பற்றியபடி இருப்பதற்கு அனுமதித்த அத்தருணம் மட்டுமே என்னோடு எஞ்சியிருக்க, அடுத்து வந்த ஒவ்வொரு கணமும் அதிகரித்தபடியே இருந்த பிரசவ வலியை உன் அப்பாவின் விரல்களை இறுகப் பற்றித் தொலைப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

வயிற்றிலிருந்து வயரின் வழியே நீண்டு எனது வலியையும், கருவாகிய உனது இதயத்துடிப்பையும் மின்னிணைப்பில் கண்காணிக்கிற ஒளித்திரையை ஒருசாய்த்து அடிக்கடி பார்த்தபடியே இருப்பேன். வயிற்றிலிருந்து சிறு கிள்ளலைப் போல சுண்டுகிற வலி, அதிலிருந்து கல்லெறிந்த குளமாய் வயிறெங்கும் பரவுகிற வேதனை, எல்லாவற்றிற்கும் மீறிய உனது கால் உதைத்தல் இவையெல்லாம் வலியிலும் இரசித்தபடியே இருப்பேன். இந்த அளவீடுகளையெல்லாம் கணினித் திரையில் வரைபடங்களாக காட்டிய போது அதைப் புரிந்து கொள்ள முடியாத போதாமையில் எனது இடுப்பு வலியையும் அதற்கேற்ப மாற்றமடைகிற உனது இதயத்தின் துடிப்பின் துல்லியமான வேறுபாட்டையும் மாறிமாறி கவனித்தபடியே இருப்பேன். ஏதோ ஒன்றை முன்கூட்டியே கணித்துச் சொல்லிவிடுகிற இரசவாதியைப் போல நான் அதிலேயே மூழ்கியிருப்பேன்.

நீண்ட யாத்திரைக்குப் பின்னும் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு நீண்டிருப்பதைப் போலான உணர்வே எனக்கிருந்தது. செவிலியர் வந்து அடிவயிற்றில் கைவைத்து மூன்று விரலளவு மட்டுமே திறந்திருக்கிற கருப்பை வாய்ப்பகுதியின் வழியே இனி பிள்ளை இறங்கி வருவதற்கான சாத்தியமில்லாத சூழலை விளக்கி என்னை ஆசுவாசப்படுத்தியபடி இருந்தார். மருத்துவமனைக்குள் நுழைந்த கணத்திலிருந்து வலியென பிரசவமேடையில் கிடத்தியிருக்கிற இந்நேரம் வரையிலும் என்னைப் பார்த்துக் கொள்வதற்கு பெரும் சிரத்தையெடுத்துக் கொள்கிற செவிலியரைப் புரிந்து கொள்வதற்கு எனக்கோ நீண்ட நேரம் ஆகவில்லை.

ஆனாலும் பனிக்குடம் உடைந்து நெடுநேரம் கழிந்துவிட்ட பின்னால் கூடுதலாக குழந்தைக்கு கிருமித்தொற்று வந்துவிடக் கூடுமே! என்ற அவரது முணுமுணுத்த குரலில் தொய்வாகக் கேட்டவை யாவும் ஒருவகையில் எனக்கு அச்சமூட்டவே செய்தது. பிரவச வலியெடுத்து இருபத்திநான்கு மணி நேரம் கடந்துவிட்ட பின்னாலும், பனிக்குடம் உடைந்து வயிறு தணிந்துவிட்ட போதிலும், இனிமேல் நாம் தாமதிப்பதற்கு எந்த அர்த்தமுமில்லை! என்றபடியே, சிசேரியன் செய்து கொள்கிறாயா? என்று கேட்ட அந்த நிமிடத்தில் உடைந்து நான் அழத் துவங்கினேன்.

நான் சிசேரியன் செய்து கொள்ளப் போகிறேன் என்பதற்காகவோ, அதற்காக என்னை யாரும் குறை சொல்லிவிடுவார்கள் என்றோ, என்னால் ஒரு குழந்தையை சுகப்பேறாய் பெற்றுக் கொடுக்க முடியவில்லையே என்கிற வருத்தத்தினாலோ, முதுகில் துளையிட்டு மயக்கம் கொள்ள வைக்கிற மருந்துகள் ஏற்றப்பட்டு வயிறும் கால்களும் செயலிழக்க வைக்கப்படுகிற அச்சம் கலந்த சூழலை நினைத்தோ ஒருபோதும் நான் அழவில்லை. எப்பேர்ப்பட்டாவது என் அருமைப் பிள்ளையை எனக்கு மீட்டுத் தாருங்கள் என்று கதறிக் கொண்டிருக்கிற பேரிதயத்திற்கு, என்னைக் காயப்படுத்தியாவது வயிற்றுக் கீறலின் வழியே என் பிள்ளையை எனக்குக் கொடுத்துவிடுங்கள் என்று விம்முகிற குரலிற்கு, அவர்களின் முடிவானது ஒருவிதத்தில் எனக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியது என்பதற்காக மட்டுமே அன்று முழுவதும் அழுதேன்.

ஒருபோதும் எனக்குச் சுகப்பேறு ஆகவேண்டுமென்று நான் விரும்பியதேயில்லை. என்னைப் பொருத்தவரையில் என் செல்லக் குழந்தை சுகமாய் பிரசவிக்க வேண்டும், அவ்வளவுதான். வலியில் உதடு குவித்து அழத்துவங்கிய நேரம் முதலாக என் கரம் பற்றியபடியே உடனிருக்கிற கணவரின் புரிதல் மட்டுமே போதுமென்ற மனமே அப்போது பூரணமாய் நிறைந்திருந்தது. குறுகலான திரையிடப்பட்ட பிரசவ அறையிலிருந்து நகர்த்தி குழந்தையின் தள்ளுவண்டிச் சக்கரங்களால் இயங்குகிற நாற்காலியில் அமர்த்தி நான் அறுவை அரங்கிற்குப் பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டேன்.

பளிச்சென்று விளக்குகளாலும் குளூரட்டப்பட்ட அறையாலும் ததும்பியிருந்த அரங்க மேடையில் என்னுடல் கிடத்தப்பட்டு ஓரங்க பிரசவ நாடகம் நிகழ்த்தப்பட இருப்பதைப் போலவும் அங்கே முகக்கவசமும், உடல் கவசமுமாக பச்சைத் திரைக்குள் மறைந்திருக்கிற மருத்துவர்களும், செவிலியர்களும் ஏதோ அவ்வரங்கேற்றத்தைக் காண வந்த விருத்தினர்கள் போலவும் எனக்குள் நானே கற்பனை செய்து கொண்டேன். என்னை அது அச்சத்திலிருந்து அகற்றி ஒருவித இலகுத் தன்மையோடு பிரசவத்தைக் கடந்து கொள்ள உதவியாயிருந்தது. ஒருகணம் சிரித்து, மறுகணம் அந்த சிரிப்பில் சுளுக்கிட்ட அடிவயிற்றுத் தசையின் வலியிலே உதடு கடித்து துள்ளி விழுந்தேன்.

ஒருசாய்த்து படுத்து முதுகில் ஊசிமுனை நுழைந்ததும், வயிறு முதல் நுனிபாதம் வரையிலும் மரத்துப் போனதும், அவ்வண்ணமே மல்லாந்து மேசையில் ஒளிவிளக்குகளின் கீழே உடலைக் கிடத்தியபடி படுத்திருக்க, ஏதேதோ உடலில் கூசுவதைப் போலுணர்ந்து, எனக்குள்ளே என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாகவே கண்ணைத் திறக்கச் செய்து முதன் முதலாக உனை என் கண்ணில் காட்டினார்கள். அவ்வளவே தான். அந்த ஒரு கணம் மட்டும் தான். நம் விருப்பத்தைத் தெருவிக்க கண்ணயர்ந்து காத்திருந்த மொட்டைமாடி இரவுகளில் மின்னிட்டபடி சட்டென்று மறைந்துவிடுகிற துருவ நட்சத்திரத்தைப் போல ஒரே பொழிவில் நீ அழுத சப்தமும், குருதி குழைந்து நீ காட்டிய முகமும் மட்டுமே பதிந்திருக்க மீண்டும் தூக்கநிலைக்குச் சென்று அவ்வாறே கண்ணயரத் துவங்கினேன். அதை மட்டும் தான் என் ஞாபகத்தின் அடுக்குகளில் என்னால் அப்போது நிலைநிறுத்த முடிந்திருந்தது.

மலையேற்றத்தில் இயற்கையின் ஆன்மீகத் தரிசனமாகி தன்னுடலையே மறந்த மனமும் உடலும் இலகுவாவதைப் போல உன்னை இறக்கி வைத்த அந்தக் கணத்தில் காற்றிலே உதிர்ந்த இறகைப் போலானேன். ஊற்றுத்தண்ணீரை உள்ளங்கையிலே அள்ளிக் கொள்வதைப் போல என்னுடலைப் பற்றியபடி அவசரப்பிரிவிற்கு கொண்டு சென்றார்கள். அங்கே மயக்கத்திலும் இடையிடையே விழிப்புமாக தவித்திருந்த எனக்கு அரைமணி நேர இடைவெளியில் மீண்டும் உனைக் கையில் தருவித்து கோடி தரிசனம் கொள்ளச் செய்தார்கள். அப்படியே கண்ணைமூடி கனிந்து சிரித்து மலருகிற அதே உன் முகம். உன்னை பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கான எத்தனையோ காரணங்களில் சிறந்ததான ஒன்றை நான் அப்போது தேடிக் கொண்டிருந்தேன். எதுவும் என் கைகளில் சிக்குவதாயில்லை. நீ மீச்சிறு அசைவில் விரல்களைத் துலாவி என்னருகே வந்து கண்ணங்களைப் பற்றிய போது சில்லிட்ட உனது உள்ளங்கையின் குளிர்ச்சியில் அப்படியே பனிச்சிற்பமாய் உறைந்து போனேன்.

வெள்ளுடையணிந்த செவிலியர் அருகாமையில் வந்து தாய்ப்பால் புகட்டச் சொல்லி புன்னகைகளைச் சொற்களாக்கிக் கொண்டிருந்தார். என்னையே நான் மறந்த நிலையில், அத்தனை பேரின்பங்களையும் நுகர்ந்த தித்திப்பில், கண்ணீர் ததும்பிய கண்கள் பனிக்க, பற்கள் தாண்டிய எளிறுகளெல்லாம் வெளித்தெரிய நான் வெளிறிப்போய் தன்னியல்பில் சிரித்துக் கொண்டிருந்தேன். செவிலியரும் ஆறுதலாக உன்னை எப்படியெல்லாம் தாங்கிக் கொள்வது, சாய்மானத்தில் இருந்தபடி எப்படிப் பாலூட்டுவதென்றெல்லாம் அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல் எனதருகே அமர்ந்து பாலூட்டச் செய்து கனிவான ஆசிரியராக திருந்தச் செய்து கொண்டிருந்தார்.

விதையிலிருந்து துளிர்த்த பச்சிளம் சிறுதளிர் போல் வெளிப்பட்ட மஞ்சள் சீம்பாலினை நீ அருந்தி அருந்தி மறுபடியும் துயில் கொண்டபடியே இருப்பாய். அன்றெல்லாம் நீ பசித்து அழவும், உனக்குப் புகட்டிவிட்டு அதன் சிரத்தையில் நானழுவதுமாக பொழுதும் புலர்ந்து கொண்டேயிருக்கும். அடுத்தடுத்து விடிகிற நாட்களில் கசிந்துருகுகிற பாறைச்சுனையில் ஊற்றெடுக்கிற சிறுவெள்ளம் போல் மார்பின் இறுக்கமும் தளர்ந்து அதிலிருந்து தாய்ப்பால் பொங்குமாக் கடலெனப் பெருகத் துவங்கியிருப்பதை எனது மார்பில் சுருக்கிட்ட வலியால் மெல்ல மெல்ல உணரத் துவங்கினேன்.

இளவேநீர் காலமென வாழ்வில் துவங்கிவிட்ட அடுத்தடுத்த நாட்களில் சரியான உறக்கமின்றி அடிக்கடி பால் கேட்டு நீயோ அரற்றிக் கொள்ள ஆரம்பித்திருந்தாய். ஒவ்வொரு முறையும் சராசரியாக நான்கு மணி நேரமாக தலையணைக்கு முதுகை ஒப்புவித்தபடி மார்பிலேயே உனை போட்டு என்னுடலைக் கிடத்தியிருப்பேன். அப்போதெல்லாம் மார்பிலிட்டால் நீ வெறுமனே சவைத்துக் கொண்டிருப்பாய். காம்பிலிருந்து உதடு பிரித்து எடுத்தாலோ வீரிட்டு அழுவாய். சிசேரியன் செய்யப்பட்ட எனது அடிவயிற்றிலும், நீண்ட நேரமாகவே உன்னால் சவைக்கப்பட்ட மார்பிலும் இரணமாய் துடிதுடிக்க அதை வெளிக்காட்டிக் கொள்ளாத இயலாமையில் பற்களைக் கடித்தபடியே தொடையில் வண்டு துளைத்த மகாபாரத கர்ணனனைப் போல உனக்காக அப்படியே சம்மணிட்டு அமர்ந்திருப்பேன். பகல் இரவென்று பாராமல் கடிகார முட்கள் முன்னகர்ந்தபடியே இருக்க உள்ளுக்குள்ளிருந்து உருத்திரண்டு வந்த வலியின் ஒருத்துளியென கண்ணிமைகளில் விழுவதற்காக காத்திருக்கும் கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி ஒருபுறம் என்ன செய்வதென்று விளங்காமல் அப்படியே விடிய விடிய விழித்திருப்பேன்.

பிரசவித்த சிரத்தையின் வாதைகளெல்லாம் புரிந்திருந்த உன் பாட்டியும் நானுமாக வேறு வழியின்றி கால்குவளை பால் பிடிக்கும் அளவிற்கு பால்பவுடரைக் கலந்து உனது பசிக்காக அப்போது அளவோடு புகட்டினோம். அப்போதெல்லாம் உனக்குப் பசியாறுகிறதே, அதனால் கூடிய சீக்கிரத்தில் அழுகையை நீயும் நிறுத்திவிடுவாய் என்கிற உணர்வில் உவகை கொள்வதா அல்லது என்னால் உன் பசியை ஆற்ற முடியவில்லையே என்ற கண்ணீரைப் பெருக்குவதா என்பதே பிடிபடாமல் தான் அதை ஒரு இயந்திரத்தின் செய்கையைப் போல செய்து கொண்டிருப்பேன். ஆனால் நீயும்கூட அப்போது சமத்தானவளாகத்தான் இருந்தாய். பூனைகள் பாலருந்திக் கொள்வதைப் போலவும், வேர்பரப்பி தன்னை ஈரப்படுத்திக் கொள்கிற தொட்டிலிடப்பட்ட கொடியினைப் போலவும் அளவாகப் பருகிவிட்டு மடியிலேயே தூங்கிக் கொள்வாய். அன்றிலிருந்து அதற்குப் பின்பான நாட்களிலெல்லாம் உனக்கு முழுவதுமாக நான் தாய்ப்பால் மட்டுமே புகட்டியிருந்தேன்.

கல்லூரிப்பருவத்தில் நிறைசூலியாக பிரவசத்திற்கென விடுப்பெடுத்து உனைப் பெற்றெடுத்த பின்பான நாட்களில் மீண்டும் படிப்பைத் தொடருவதற்கான நெருக்கடியும் படிப்படியாக எனை அப்போதுதான் ஆட்கொள்ளத் துவங்கியிருந்தது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்ட நாட்களில் என்னால் சிறிது காலம் மட்டுமே இயல்பாய் இருக்க முடிந்தது. வீட்டிலிருந்த நாட்களில் இரவும் பகலென அறியாத அறைக்குள்ளே நீயும் நானுமாக இருந்து பாலூட்ட, பின் கண்ணயரவுமாக இருவருமே பழக்கமாகியிருந்தோம். எல்லாமே நான் பிரசவித்த முதல் ஐம்பது நாட்களுக்குத் தான். அதன் பின்பாக படிக்கச் செல்ல வேண்டிய கட்டாயம், நெருக்கடி, அவசரம். இதற்கெல்லாம் நியாயம் கற்பிப்பதற்கான காரணங்கள் என்னிடம் நிறையவே இருந்தாலும் உன்னிடம் சொல்வதற்கு மன்னிப்பு என்கிற வார்த்தை மட்டுமே அப்போது என் கைவசம் வைத்திருந்தேன், மகளே!

ஆனாலும் எக்காரணம் கொண்டும் என்னுடைய படிப்பை முன்வைத்தோ, இந்த யதார்த்தவாத வாழ்வை முன்னிட்டோ உனக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தக் குறையும் ஒரு தாயாக நான் வைத்துவிடக் கூடாதென்பதில் மிகவும் கவனமாயிருந்தேன். அதற்காகவென்று எல்லோருமே கூடிப்பேசி ஒருமுடிவிற்கு நாங்கள் வந்திருந்தோம். நான் படிப்பதற்காகச் சென்று வீடு திரும்புகிற இடைவெளிக்குரிய நேரத்தில் நீ பசித்தால் உன் வயிற்றை நிரப்புவதற்காக என் மார்பிலிருந்து பாலினை எடுத்து குளிரூட்டியில் வைத்துவிட்டுப் போவதற்கு நானோ பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதேசமயம் உன் பாட்டி அதையெடுத்து எப்படிப் புகட்ட வேண்டுமென்பதையும் மெனக்கெட்டுக் கற்றுக் கொள்ளத் துவங்கியிருந்தாள்.

அப்போதிருந்தே உனக்குத் தாய்ப்பாலை மார்பிலிருந்து அல்லாமல் பாட்டிலின் வழியாக எடுத்துப் புகட்டுவதற்கு இடையிடையே மெல்ல மெல்லப் பழக்கத் துவங்கியிருந்தோம். ஆனாலும் தாய்ப்பாலைக் கரந்தெடுத்து பாட்டில் நிரப்பி உனக்குப் புகட்டிய போது ஆரம்பத்தில் அவ்வளவாக உனக்குப் பிடிக்கவில்லை. புட்டியில் புகட்டுகிற எல்லாவற்றையும் குடித்த பின்பு மறுபடியும் காரணமில்லாமலே நீ அழுவாய். மீண்டும் மீண்டும் என் மார்பில் குடிப்பதற்கு நீ ஆர்வம் காட்டிக் கொண்டிருப்பாய். இதனால் படிக்கச் செல்வதற்கு முந்தைய ஒரு வாரத்திற்கு நான் அருகருகே இருந்தாலும்கூட இரண்டு மூன்று முறையென ஒரு நாளிற்கு பாட்டில் வழியே தாய்ப்பாலைப் புகட்டி உனக்குப் பழக்காட்டிக் கொண்டிருப்பேன்.

இத்தகைய தருணத்தில்தான் நான் சில உருப்படியான காரியங்களைச் செய்திருந்தேன். ஒரு தாயாக உனக்குப் பாலூட்டுவதற்குத் தேவையான பாட்டிலுக்குரிய சரியான பிளாஸ்டிக் காம்பினை அப்போதுதான் தேர்வு செய்திருந்தேன். மருத்துவமனையிலிருந்து வெளிவந்த பின்னாலும்கூட அங்கிருந்த செவிலியரின் தொடர்பை தொலைபேசியின் வழியே தொடர்ந்திருந்ததன் காரணமாக எனக்கு வந்த துயரங்களையெல்லாம் கடவுளிடம் கோரிக்கை வைப்பது போல அவரிடம் முறையிட்டு அதற்கான தீர்வுகளை நான் தீர்க்கமாக எடுத்துக் கொண்டிருந்தேன். அதன்படியே பாட்டில் வழி பாலருந்துகிற குழந்தைகளுக்கு மார்புக் காம்பில் அருந்துவதும், இடையிடையே பாட்டில் காம்பில் அருந்துவதும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிற காரணத்தினால், சரியான பாட்டில் காம்பைத் தேர்வு செய்வதற்கான குறிப்புகளை அவரும் கடவுளின் ஆசியைப் போல் வழங்கியிருந்தார்.

எனதன்பு மகளே! அப்போது எங்கெல்லாமோ கால்கடுக்க அலைந்து திரிந்து அனுபவப்பட்டதன் முடிவில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படுகிற பிளாஸ்டிக் காம்புகளைப் பற்றி என்னால் ஓரளவிற்கு அறிந்து கொள்ள முடிந்தது. எல்லோருக்கும் பொருந்தும்படியாக ஜீரோ அளவில் ஒன்றும், குறைபிரசவ மழலைகளுக்கென்று இன்னொன்றுமாக இருப்பதை அப்போது தான் நானும் தெரிந்து கொண்டேன். குழந்தைகளின் பிறப்பு நிறைமாதமோ, குறைமாதமோ அதற்கேற்ப காம்பனை வாங்கிப் பயன்படுத்திக் கொள்வதன் வழியாக காம்பிலே குழப்பம் உண்டாவதைத் தவிர்க்க முடியுமென்கிற செவிலியரின் அறிவுரைகள் யாவும் எனக்கு ஒருவிதத்தில் பரிகாரமாய் அமைந்தது. ஆனாலும் இத்தகைய செயற்கை அம்சமுடைய காம்பினைப் பயன்படுத்துவதிலுமே எனக்குச் சில அறிவியல் விளக்கங்களை அவர் அளித்திருந்தார். இவையெல்லாம் உன்னை வளர்த்தெடுக்க எனக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகளாக இருந்தன. அவை ஒருவேளை இப்போது உனக்கும்கூட உபயோகமாயிருக்கும் மகளே!

குழந்தைகள் பிறந்த முதல் எட்டு வாரங்களில் தாய்ப்பாலை மார்பில் மட்டுமே போட்டுப் புகட்ட வேண்டும் என்கிற அறிவுரையை ஒரு எச்சரிக்கையாகவே எனக்கு அவர் அளித்திருந்தார். இந்த முதல் எட்டு வாரம் அல்லது அந்த இரண்டு மாத எல்லையென்பதுகூட ஒரு சராசரியான வரையறைதான். இரண்டு மாத புழக்கத்தில் குழந்தைகளும் நன்றாகவே மார்பில் காம்பைத் தேடுவது எப்படி, அதைக் கவ்விச் சவைப்பது எப்படி, எத்தகைய உழைப்பில் நமக்குப் பால் கிடைக்கும் என்பதையெல்லாம் கற்றுக் கொள்வார்களாம். அதற்குப் பின்பான நாட்களில் செயற்கை காம்பின் வழியே புகட்டுகிற போது அவர்கள் எந்த உழைப்பும் செலுத்தாமல் அப்போது பாலருந்திக் குடிப்பார்கள் அல்லவா! அச்சமயத்தில் மீண்டும் அவர்களை மார்பில் போடுகிற போது ஏற்கனவே எட்டு வாரத்தில் எத்தகைய உழைப்பைச் செலுத்த வேண்டும் என்கிற புரிதலினால் மார்புக் காம்பு மற்றும் செயற்கையான காம்பில் குடிப்பதற்கான குழப்பங்கள் ஏதுமின்றி அதற்கேற்ப பழகிக் கொள்வார்கள் என்று அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்குத் தெய்வ வாக்காய் இருந்தது.

நீ பிறந்த எட்டுவாரத்திற்குள்ளே ஒருவேளை பாட்டில் காம்பின் வழியே உனக்குத் தாய்ப்பாலினைப் புகட்டியிருந்தால் அதற்குப் பின்பாக நீ உழைப்பின்றி பாலருந்தியதன் சுலபத் தன்மையால் மறுபடியும் மார்பிற்கு வருவதற்கு உனக்குப் பிடித்தமே இல்லாமல் பாட்டில் பாலையே தொடர்ந்து குடிக்க வேண்டுமென்று அடம் பிடிக்கத் துவங்கியிருப்பாய். பின்பு வருடக்கணக்கில் பாலூட்டுவதற்காக எப்படியெல்லாம் நான் சிரமப்பட்டிருப்பேன் என்பதை நினைத்துப் பார்க்கையில் இப்போதும் அச்சமாகத்தான் இருக்கிறது. இப்படியான தேடல் வழியாகத் தான் மகளே, உன்னை மார்பிலிட்டும், பாட்டில் வழியாகவும் அடுத்தடுத்த காலங்களில் தாய்ப்பால் புகட்டி என்னால் வளர்த்தெடுக்க முடிந்தது.

இன்னும் கூடுதலாக இதைத் தயாரித்து விற்கிற கம்பெனிகளெல்லாம் அவர்களுக்கென்று விதித்துக் கொண்ட அளவீடுகளின்படி ஆறு மாத குழந்தைகளுக்கு, எட்டு மாத குழந்தைகளுக்கென ஒன்று.. இரண்டு.. மூன்று என்ற குறியீடுகளின் வழியே தனித்தனியே பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். பொதுவாக பிள்ளைகள் வளர வளர பாலூட்டும் அம்மாவினுடய காம்பின் அளவுகள் மட்டும் மாறுவதேயில்லை. ஆகையால் ஆரம்பத்தில் உபயோகப்படுத்திய நிறைமாத குழந்தைகளுக்கான காம்பையே கடைசிவரையிலும் பயன்படுத்துக் கொள்ள முடியும் என்று செவிலியருமே கூறியிருந்தார். ஆகையால் நான் குழந்தைகளின் வயதிற்கேற்ற காம்பினை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை துவக்கத்திலேயே புரிந்து கொண்டேன்.

இதையெல்லாம்கூட நாமிருவரும் ஒன்றாக அனுபவத்தின் வாயிலாகத் தான் நன்றாகக் கற்றுக் கொண்டோம். நீயும் நானுமாகத் தான் இதையெல்லாம் பரிட்சயத்துப் பார்த்துக் கொண்டோம். உனக்குத் தலைநின்று, முழங்கை ஊன்றி, சம்மணமிட்டு அமரப் பழகிய ஆறு மாத காலத்திற்குப் பின்பாக அந்தந்த வயதிற்குரிய பாட்டில் காம்பினை வாங்கி உனக்குப் பழக்காட்டிப் பார்த்தேன். ஆனாலும் அதிலிருக்கிற சற்றே பெரிதான துளையின் வழியே நிறைகிற பாலினை அருந்துவதற்கு உனக்கோ மிகவும் சிரமமாகிவிட்டது. முன்பு நிறைமாத காம்பில் நீ சாதுவாக பாலருந்திப் பழகிய பின்பாக அடுத்து நான் புகட்டிய ஆறுமாத செயற்கைக் காம்பினால் சட்டென்று பால் திரண்டு வாயில் நிறைந்து போனதை உன்னால் கைகொள்ள முடியாமல் திணறிப் போனாய். அந்தக் கணத்தில் விழுங்கவும் முடியாமல், உதப்பித் தள்ளவும் முடியாமல் புரையேறி சட்டென்று இருமத் துவங்கினாய்.

அப்போது திடுதிப்பென்று நிலைகுலைந்து போன உனை அள்ளியெடுத்து தோளிட்ட கணத்தில் தட்டிக் கொடுக்க கொடுக்க பாலினை ஆடையில் உதப்பி நீ இயல்பாய் மூச்சுவிடுகிற நிலைக்கு வரவே சற்று நேரம் பிடித்தது. ஆகையால் அந்த கணமே இத்தகைய பரிசோதனை முடிவை கைவிட்டுவிட்டு மீண்டும் பழையபடி நிறைமாத காம்பிற்கே மாறிவிட்டேன். ஆனாலும்கூட துவக்க காலத்திலிருந்து இறுதிவரையிலுமே பாட்டில் வழியாக மட்டுமே பாலருந்துகிற பிள்ளைகளுக்கு இந்த வயதிற்கேற்ற காம்பு மாற்றிக் கொள்ளுதல் என்பது பெரும்பாலும் ஒத்துப் போய் விடுவதாக பின்னாளில் செவிலியர் சொல்லிய போது எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது.

என் அறிவற்கு எட்டியவரை உனைப் பாலூட்டி வளர்த்தெடுப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் நான் முயற்சித்தபடியே இருந்தேன். உனக்கென ஒன்றைப் பெருகிற போது அதில் எதுவெல்லாம் சரி தவறென்ற வகையில் ஒவ்வொன்றையும் நுட்பமாய் பூதக்கண்ணாடியில் தேடுகிற ஆய்வாளன் போல் ஆராய்ந்து கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் தாய்ப்பால் புகட்டப் பாட்டில் பயன்படுத்துவதில் இருக்கிற ஒவ்வொரு வாசகங்களையும் கூர்ந்து கவனித்து விசாரித்தபடியே இருப்பேன். ஒரு குழந்தை போல எல்லா விசயங்களையும் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு செவிலியரையும், கடைக்காரர்களையும் துரத்திக் கொண்டிருப்பேன்.

பாலெடுத்துப் புகட்டுவதன் தொடர்ச்சியாக மார்பில் பம்ப் வைத்து எடுப்பதற்கான கருவியை நான் தேடிக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் பேட்டரியில் இயங்கக்கூடியதும், கையினாலே பம்ப் செய்து எடுக்கக்கூடியதுமாக இரண்டும் இருப்பதை அறிந்து அவ்விரண்டையுமே வாங்கி சௌகரியத்திற்கேற்ப பயன்படுத்திப் பார்த்தேன். ஆரம்பத்தில் என் மார்பில் கைகளைப் பயன்படுத்தி பம்ப் செய்து எடுக்கிற கருவியைத்தான் முயற்சித்துப் பார்த்தேன். அதற்கு அப்புறமாக பேட்டரியில் தானாகவே பம்ப் செய்யக்கூடியதையும் செய்து பார்த்தேன். இந்த கைகளின் வழியே பம்ப் செய்கிற கருவிகளெல்லாம் மிகக் குறைவான விலையிலேயே அச்சமயத்தில் கிடைத்தது. அதன் செயல்பாடும்கூட அற்புதமாயிருக்க, இவை சுற்றியிருக்கிற மருந்துக் கடைகளிலில் இருந்தே என்னால் பெற முடிந்தது. அதேபோல கைக்களால் பம்ப் செய்கிற போது எந்த அளவிற்கு பால் கிடைக்குமோ அதே அளவுதான் பேட்டரியில் எடுக்கிற போதும் வரக்கூடும் என்பதால் கைகளால் பம்ப் செய்வதையே அப்புறம் நான் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் உனக்கு எது பொருத்தமாயிருக்கும் என்பதை நீயேதான் முடிவு செய்தாக வேண்டும் மகளே!

பாலிறைக்கிற கருவியைத் தேடியலைந்த நாட்களில் அதிலிருக்கிற மார்புக் கிண்ணம் நம் மார்போடு பொருந்திப் போகிற அளவீட்டை வைத்தே வாங்க வேண்டுமென்று வேறு எனக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். ஆனாலும் மார்புக்கேற்ற வகையில் பொருந்திப் போகிற கிண்ணத்திலான கருவிகள் எங்குத் தேடியும் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை. இத்தகைய நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிற மார்புக் கிண்ணங்கள் யாவும் சராசரியான அளவீடுகள் கொண்டதாகவே இருப்பதால், இவையெல்லாம் பெரும்பாலான தாய்மார்களின் மார்புக்குப் பொருத்திப் போவதேயில்லை என்று சொல்லி அவற்றைப் பரிசோதித்துப் பார்த்து வாங்குமாறு ஏற்கனவே எனக்குச் சொல்லியிருந்தார்கள்.

ஆனாலும் துவக்கத்தில் பம்பினை வாங்கி அதைப் பயன்படுத்துகிற போதுதான் எனக்கான மார்புக் கிண்ணத்தையே நான் தேர்வு செய்ய முடிந்தது. அதனைப் பயன்படுத்தும் போது எனக்கு மார்பிலே அதிக வலியெடுக்க ஆரம்பித்துவிட்டது. அப்படி வலிக்கான காரணத்தைப் புரிந்து கொள்வதற்காக விசாரித்த போது, மார்புக் கிண்ணத்தின் அளவு பொருந்தமாயில்லை என்றால் இப்படி வலியெடுக்கத்தான் செய்யும் என்பதைப் புரிந்து கொண்டேன். அதற்குப் பின்பாக அந்த ஆரம்ப அளவீட்டை வைத்தே அடுத்தடுத்த அளவுகளில் கருவிகளை வாங்கி எனக்கான மார்புக் கிண்ணத்தையும், கருவியையும் கச்சிதமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆனாலும் இப்போதெல்லாம் ஆன்லைன் கடைகளில் எல்லாவிதமான அளவீடுகளிலும் மார்புக் கிண்ணத்தோடு கருவிகள் சகஜமாய் கிடைக்கிறதே! ஆக, நீயும் பாலெடுத்து அவசர காலங்களில் உன் பிள்ளைக்குப் பாலூட்டுவதற்கான பம்பினைத் தேடிக் கொள்கிற போது இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு பொருத்தமான ஒன்றை நீயே கண்டுபிடிக்க வேண்டும் மகளே!

அதற்குப் பிறகான நாட்களில் எனக்கான பருவகாலப் படிப்பும் தொடங்கிவிட்டது. அப்போது உனைவிட்டுப் பிரிந்து எனது படிப்பிற்காக ஆறுமணி நேரம் வெளியேறிச் செல்ல வேண்டியிருந்தது. அத்தகைய ஆறு மணி நேர இடைவெளியில் நீயோ இரண்டு முதல் மூன்று முறை பாலருந்தப் பழகியிருந்தாய். ஆகையால் நீ மூன்று முறை பாலருந்த வேண்டுமென்றால் அந்த அளவிற்கு நான் பாலைக் கரந்து பாட்டிலில் நிரப்பி வைத்துவிட்ட பின்பே படிக்கச் செல்ல வேண்டியிருந்தது. என்னால் முடிந்தவரை உனக்குப் புத்தம் புதிதான பாலினையே கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன். ஆகையால் அதை நீண்ட நாட்களுக்கு முன்பே எடுத்துக் கலன்களில் சேமித்து வைத்தெல்லாம் புகட்டவில்லை. அன்றைக்கு எந்திரத்தால் என்ன கரந்தெடுக்கப்பட்டதோ அதையே குளிரூட்டியில் வைத்து அன்றைக்குள்ளகவே உனக்குப் புகட்டிவிடுவோம். எனவே உனக்குத் தேவையான பாலினைக் கரக்க அன்றாடமும் நான் மணிக்கணக்கிலே அமர்ந்து என் மார்போடு போராட வேண்டியிருந்தது.

உனக்குத் தாய்ப்பாலெடுத்துத் தான் புகட்ட வேண்டுமென்று நான் முன்னமே முடிவு எடுத்திருந்தமையால் நீ பிறந்த முதல் நாளிலிருந்தேகூட அப்படிச் செய்ய முடியுமென்று எனக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அப்போதெல்லாம் பாலெடுக்கையில் மிகக் குறைவாகவே வெளிவரும். ஆனாலும் போகப் போக முதல் வாரத்தின் இறுதியில் மார்பில் பால்கட்டிக் கணக்கத் துவங்கியிருந்தது. இறைக்க இறைக்க ஊற்றெடுத்து வந்து கொண்டே இருந்தது. அப்போதிருந்தே என்னால் உன் தேவைக்கேற்ப பாலினையெடுத்து குளிர்சாதனப் பெட்டிலில் தேனியைப் போல சேகரிக்கவும் முடிந்தது. அப்போது சேகரித்த தாய்ப்பால் குவளையை எடுத்துக் உள்ளங்கையில் வைத்திருக்கும் போது அதன் சூடானது அப்போதுதான் பிறந்த பறவையின் அடிவயிற்றுக் கதகதப்பைப் போலவே இருக்கும். ஆனால் அதை அப்படியே எடுத்து குளிரூட்டியில் வைக்காமல் சிறிது நேரம் வெளியே காற்றாட வைத்து அந்த அறையின் வெப்பநிலைக்கு சமநிலைப்படுத்திய பின்பே வைக்க வேண்டும் என்றும் எனக்கு சொல்லப்பட்டிருந்தது.

குளிரூட்டியிலிருந்து வெளியெடுத்து பிள்ளைக்குப் பாலூட்ட வேண்டுமென்றாலும் அப்படியே எடுத்தவுடன் குளிரோடு உனக்குப் புகட்டிவிட முடியாது. அதன் குளுமை தீர சாதாரண தண்ணீரில் சிறிது நேரம் குவளையோடு போட்டு வைத்த பின்பே உனக்கு அதைப் புகட்டுவேன். ஆனால் இதை சூடு செய்தெல்லாம் புகட்டிவிடக் கூடாதென்ற அறிவுரை எனக்கு முக்கியமாக தரப்பட்டிருந்தது. ஒருமுறை குளிரூட்டியில் இருந்து அதை எடுத்து பச்சைத் தண்ணீரில் போட்டுவிட்டால், ஒன்று அதை அப்போதே பயன்படுத்திவிட வேண்டும். ஒருவேளை குழந்தை அப்போது குடிக்க மறுத்துவிட்டால் அப்படியே கழித்துவிட வேண்டியதுதான். அதனைப் பின்னாளில் பயன்படுத்திக் கொள்ளலாமென மறுபடியும் குளிரூட்டியில் கொண்டு போய் வைத்துவிடக் கூடாது.

அதேசமயம் இரண்டு மார்பிலிருந்தும் ஒரே தடவையில் தாய்ப்பால் எடுக்கிறேன் என்றால் அதை ஒன்றாகவே நான் கலந்து வைத்துக் கொள்வேன். ஆனால் அதை ஒரு குவளையில் எடுத்துக் கொண்டு போய் தான் தனியாகத்தான் குளிரூட்டியில் சேமித்துக் கொள்வேன். அதனை ஏற்கனவே குளிரூட்டியில் எடுத்து வைத்திருக்கிற பாலில் கொண்டு போய் சேர்க்கவும் முடியாது. இப்போது ஏழு மணிக்கு மாறி மாறி இரண்டு மார்பிலும் எடுத்துக் கொள்கிறேன் என்றால் அதை ஒரே குவளையில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் ஏழு மணிக்கு வலது மார்பில் எடுத்துவிட்டு மறுபடியும் ஒன்பது மணிக்கு வலதுபக்க மார்பிலேயே எடுத்தாலும்கூட இரண்டையும் தனித்தனியாகத்தான் நேரமிட்டு சேமிக்க வேண்டியிருக்கும்.

இப்படி ஒவ்வொருமுறை தாய்ப்பால் இறைக்கின்ற போதும் அதைத் தனித் தனியாகத் தான் குவளையில் தேதியிட்டு, நேரமிட்டு சேமித்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதேசமயம் பிள்ளைக்கு குளிரூட்டியில் இருந்து எடுத்து பச்சைத் தண்ணிக்குள் மிதக்கவிட்டு பின் கொடுக்கப் போகிறோம் என்றால் அச்சமயத்தில் இரண்டையுமே ஒன்றாகக் கலந்து புகட்டிக் கொள்ள முடியும். இதையெல்லாம் மிக நுட்பமாகப் புரிந்து கொள்ளவற்கும், குழப்பமின்றி பொறுப்பாகச் செய்வதற்கும் அப்போதெல்லாம் நானும் மிகவும் சிரமப்பட்டேன். ஆகவே தான் நீயும் சிரமம் கொள்ளக் கூடாதென்று இதையெல்லாம் நான் சொல்கிறேன்.

ஒவ்வொருமுறை தாய்ப்பாலை மார்பில் எடுக்கிற போது அதுவெல்லாம் ஒரேஅளவிலும் இருக்காது. ஒவ்வொருமுறையும் அளவுகள் மாறியபடியே இருக்கும். வலது மார்பில் குறைவாக வந்து இடதுபக்க மார்பில் அதிகமாக வரலாம் அல்லது ஒரே மார்பில் காலையில் குறைவாக சுரந்து மாலையில் அதிகமாகச் சுரக்கலாம். இப்படி இடது-வலது, காலை-மாலை, நாளை-மறுநாள் என்று ஒவ்வொரு பொழுதும் அதன் அளவும் தன்மையும் மாறிக் கொண்டேயிருக்கும். ஆகையால் பிள்ளைக்குப் பசிதீர புகட்டுவதற்கு ஒரேமுயற்சியில் ஓரமாய் அமர்ந்து தாய்ப்பாலை எடுத்து வைத்துவிட்டு படிக்கப் போய்விடவும் முடியாது. ஒருபோதும் எனக்கு அது சாத்தியமாகவும் இல்லை. சில நேரங்களில் எனக்கு அறுபது மில்லியளவுதான் வரும். பின்பு முப்பது, பத்தி மில்லி என்ற அளவில்கூட வந்திருக்கும். அப்போது வெறுமனே பத்து மில்லிதான் வந்திருக்கிறதென்றால் அதையும்கூட தனியாக குவளையில் நேரமிட்டு சேமித்து வைத்திருப்பேன்.

பொதுவாக பாலெடுத்து வெளியே வைக்கிற போது அதை நான்கு மணி நேரம் வரையிலுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுவே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிற போது ஏழு நாட்கள் வரையிலுமே உபயோகித்துக் கொள்ளலாம். அதேசமயம் பிரீசரில் வைத்தால் ஒருவருடம் முழுக்கவும் சேமித்துக் கொள்ள முடியும். ஆகையால் பொதுவாக பயணத்தின் போது நான் மார்பிலிருந்து எடுக்கையில் நாலு மணி நேரத்திற்கே பயன்படுத்த முடியும் என்பதால் வெளியே கொண்டு செல்வதிலும் எனக்குச் சிரமம் இருந்தது. அதேசமயம் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியெடுத்து சாதாரண தண்ணீரில் போட்டு இயல்பான வெப்பநிலைக்குக் கொண்டு வரப்பட்ட பாலினை ஒருமணி நேரத்திற்குள் புகட்டிவிட வேண்டும் என்பதையும் நான் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அப்படி ஒருவேளை தாமதமாகிய பின்பு கொடுத்தால் தாய்ப்பாலில் இருக்கிற சத்துக்களெல்லாம் வெளியேறி வெறும் தண்ணீரைக் கொடுப்பதைப் போலவே தான் இருக்கும் என்பதையும் நான் அறிந்தே வைத்திருந்தேன்.

மாதக்கணக்கில் தாய்ப்பாலை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் அதற்கென கடைகளில் விற்கப்படுகிற தாய்ப்பால் சேமிப்புப் பைகளை வாங்கி அதில் என்னுடைய தாய்ப்பலை பத்திரப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை எனக்குச் சொல்லியிருந்தார்கள். அன்றைய பாலினை அன்றைன்றைக்கே புகட்டிவிடுவதால் அதற்கான தேவை எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அதேபோல மிக முக்கியமாக தாய்ப்பாலை எடுத்து சேமித்து வைக்கிற கலன்களை குளிரூட்டியின் முன்பக்கமாக வைப்பது என்றில்லாமல் கொஞ்சம் உள்ளே தள்ளி வைக்கிற போது எப்போதும் குளிரூட்டப்பட்டு பத்திரமாக இருக்குமென்று எனக்கு அறிவுறுத்தியிருந்தபடியால் அதையே நான் பின்பற்றினேன். ஆகையால் என்னுடைய தாய்ப்பால் சேகரிப்பு குளிரூட்டியில் தேவையின்றி வைக்கப்படுகிற பொருட்களையெல்லாம் முற்றிலும் நான் தவிர்த்திருந்தேன்.

பாட்டிலையும் பம்பினையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டியது எனக்கு அப்போதைய முக்கிய தேவையாயிருந்தது. உனக்குத் தாய்ப்பால் சரியாகக் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும், அதனால் தேவையற்ற நோய்த்தொற்று வராமல் பாதுகாப்பதற்காகவும் நான் அதிகபட்சம் மெனக்கெட வேண்டியிருந்தது. இதைச் செய்வதற்கு கொதிக்கிற தண்ணீரில் குவளையை ஐந்து நிமிடம் போட்டு எடுத்தாலே போதுமானது என்ற அறிவுரையைத் தான் நான் இறுதிவரையிலும் பின்பற்றினேன். இதற்கென்றே மைக்ரோவேவ், ஸ்டெரிலைசர் போன்ற கிருமித்தொற்றை நீக்குகிற பொருட்களெல்லாம் கடைகளில் பல வண்ணங்களில் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் வெறுமனே தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலே பிளாஸ்டிக் பாட்டிலோ, அலுமினியக் குவளையோ எதுவாக இருந்தாலும் அதனைப் போட்டு தொற்றினை நீக்கிக் கொள்ள முடியும் என்பதே எனக்கு எளிதாகத் தோன்றியது. இதைத் தொடர்ந்தே எல்லாவற்றையும் என்னால் நம்பிக்கையோடு பயன்படுத்த முடிந்தது. இத்தகைய தொற்று நீக்குகிற வழக்கத்தை ஒருநாளைக்கு ஒருமுறையாவது கட்டாயத்தின் பேரில் நான் செய்து கொண்டிருந்தேன்.

உனக்கென பாலினை எடுப்பதற்கு இரவும் பகலுமென நீ பாலருந்தி முடித்துத் துயில் கொள்கிற இடைவெளியில் தனியே அமர்ந்து மூன்று நான்கு முறைகள் மார்பைப் பிழிந்து பாலை இறைத்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு முறையிலும் நான் முப்பது முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை முதுகுவலியுடனும், கால் தசைப்பிடிப்புடனும் அமர்ந்து இதைச் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொருமுறையும் பாலெடுக்கையில் ஒரே அளவில் எனக்குப் பால் வராது. சில வேளைகளில் பிள்ளைக்கென கையளவு மட்டுமே சுரக்க முடிந்திருந்த மார்பைத் திட்டிக் கோபித்தபடி தன்னந்தனியே அழுது கொண்டிருப்பேன். எனக்குப் பால் இல்லியே என்கிற ஏக்கம் முழுவதுமே அப்போது என்னைச் சூழ்ந்திருக்கும். என் பிள்ளைக்கான பாலை என்னால் கொடுக்க முடியலையே என்கிற குற்றவுணர்வு எனை நோகடிக்கும். அப்போதெல்லாம் நீ பால் கேட்டு அழுவாயே என்கிற அச்சத்தில் உன் பசிக்கான அழுகைக்குரலைக் கேட்பதற்கே நடுநடுங்கிக் கொண்டிருப்பேன்.

இத்தகைய சமயத்தில் எல்லாம் ஒருவேளை பம்ப் சரியில்லையோ என்றபடி வேறொன்றை மாற்றிக் கொண்டிருப்பேன். இப்படி மூன்று முறைக்கும் மேலாகவே இதைச் செய்திருப்பேன். ஆனால் இப்படித்தான் இயல்பாகவே பாலும் சுரக்கும் என்பதைப் புரிந்து கொண்ட பின்பு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் தேடிச் செய்யத் துவங்கினேன். தாய்ப்பால் சுரக்குமென்று எதையெல்லாம் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தினார்களோ அதையெல்லாம் எனக்குப் பிடிக்கும் பிடிக்காது என்கிற சுயவிருப்பத்தைத் தாண்டி எடுத்துக் கொண்டேன். கடைகளில் விற்கிற சத்துமாவுகள், பூண்டு, கருவாடு என்கிற எதையும் நான் முயற்சித்துப் பார்க்காமல் இருந்ததில்லை.

என் முயற்சியின் சர்வநிவாரணியாக பால் சுரப்பின் அளவும் தன்மையும் மாறியதை என் மார்பின் கணத்தாலே உணர முடிந்தது. இதை நான் பாட்டிலின் வழியே பாலினை எடுக்கிற போதெல்லாம் என் கண்ணாரப் பார்த்து ஆச்சரியத்தில் திகைத்துப் போனேன். அந்த சமயத்தில் ஒருநாள் முப்பது மில்லியளவு கரந்து கால் பாட்டில் வரும், மறுநாள் ஒரே பம்பில் நூற்றியிருபது மில்லி வரையிலும் வந்து பாட்டில் நிறையும். அப்போதெல்லாம் பால் நிறையச் சுரந்தால் மகிழ்வாகவும், குறைவாகச் சுரந்தால் அழுவதுமாக உணர்வுகளால் கொந்தளித்தபடியே இருப்பேன். என் உணர்வுகளை என்னால் கட்டுக்குள் கொண்டு வரவியலாத துன்பத்தில் அப்போது ஆழ்ந்திருந்தேன்.

ஒருவேளை தாய்ப்பால் குறைவாகச் சுரந்திருந்தால், ″உனக்குச் சரியாக மார்பிலிட்டு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே, நிறைவாக உனக்குப் பாலூட்ட நிறைய வேண்டுமே, நீ பசித்திருந்து வீட்டிலிருக்க நானோ உனை விட்டுப் பிரிந்து படிக்க வந்திருக்க கூடாதே, நான் சரியான அம்மாவாக இல்லியே″ என்றெல்லாம் புலம்பித் தவித்து இரவெல்லாம் அழுதபடி என்னையே நான் சித்திரவதை செய்து கொண்டிருப்பேன். ஒருகட்டத்தில் அழுதழுதே என் கண்ணீர்ப்பையும் வற்றிவிடவே இதையெல்லாம் இயல்பாகக் கடப்பதற்கு என்னையே நான் ஒருவிதத்தில் பழக்கிக் கொண்டேன். நீயும்கூட ஒரிடத்தில் எனது பிரச்சனையை உன்னளவில் புரிந்து கொள்ளத் துவங்கியிருந்தாய். அக்கணத்திலிருந்து இப்போது வரையிலும் உனக்கென வாழ்ந்ததைத் தவிர வேறெதையுமே நான் எனக்கென செய்ததேயில்லை மகளே!

உனக்குப் பாலிறைத்து பாட்டில் வைத்தே புகட்டுவதால் அதனது அளவுகள் யாவும் கண்ணாடியின் வழியே தெரிகிற போது எனக்கு எப்போது, எவ்வளவு தாய்ப்பால் சுரக்கிறதென்பதைக் கத்திசமாக கணிக்க முடிந்திருந்தது. நீயும் வளர்ந்து, உட்கார்ந்து, கையூன்றிப் பழகத் துவங்குற பொழுதில் எனக்கும் மார்பில் பால் சுரப்பது தணிந்து கொஞ்சமாக குறையத் துவங்கியது. அதற்கு நேரெதிர் திசையில் அப்போது தான் நீயும் விரும்பிக் குடிப்பது அதிகமாயிருந்தது. ஆகையால் ஆறு மாதகாலத்திற்குப் பின்பாக வருகிற இலையுதிர்கால பருவம் போல உனக்குப் போதாமையிருந்த உணவிற்காக ஒருமுறை தாய்ப்பாலும் மறுமுறை மாற்று உணவுமாக கொடுத்துப் பழக்கத் துவங்கினேன். அதிலிருந்து நானில்லாத பெரும்பாலான சமயங்களில் உனக்குச் செரிமானமாகிற மசித்த உணவாகப் பிசைந்து ஊட்ட பாட்டியும் முயன்றபடி இருந்தாள். அதேசமயம் இரவு நேரங்களில் முழுவதுமாக எனது மார்பிலிட்ட தாய்ப்பாலினால் உன் வயிற்றை நிரப்பியிருந்தேன். எவ்வழியிலாவது உனக்கான தாய்ப்பாலை நான் எப்பேர்ப்பட்டாவது மீட்டுக் கொடுத்துவிட வேண்டுமென்று அன்றாடம் நான் போராடிக் கொண்டுதான் இருந்தேன்.

பிரியத்திற்குரிய மகளே! நீயுமே இப்போது என்னைப் போலொரு அழகான பெண் தேவதையைப் பெற்றெடுத்திருக்கிறாய். மார்பில் பால் சுரந்து உன் பிள்ளைக்கு வயிறு நிறைந்த பின்னாலும்கூட பல நேரங்களில் உனக்கு மார்பிலே பால் நிறைந்து வரவும்கூடும். அதையெல்லாம் நீ அசந்து தூங்குகிற சமயத்தில் குழந்தை அழுகிற போது புகட்டிக் கொள்வதற்காக மார்பிலிருந்து எடுத்துச் சேமிப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். எப்போதேனும் சிறுவேலையென்று வெளியே செல்கிற போது பசிக்குப் புகட்டுவதற்கு நீ பாலெட்டு தேக்கி வைத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம் அல்லவா! அப்போதெல்லாம் இத்தகைய முயற்சிகள் உனக்குப் பலனளிக்கும் மகளே! ஆகையால் நீயும் மார்பிலிருந்து பாலெடுத்து வைத்துப் புகட்டுவதற்காக இனிமேல் பயிற்சியெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் பாட்டில் குடுவையில் பால் நிறைப்பதற்கு நீ அமருகிற போது நாளொன்றுக்கு நான்கு முறை பாலெடுக்கிறாய் என்றால் ஒருமுறைக்கு அரைமணி நேரம் வீதமாக குறைந்தபட்சம் நீ இரண்டு மணி நேரங்கள் அப்படியே அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் பாலிறைக்கிற தூண்டல் உருவாகி பாட்டிலுக்கு பாலும் நிரம்ப ஆரம்பிக்கும். அப்படி அமருகிற போது முதுகிலே தசைபிடித்துக் கொண்டு வேதனை எடுக்கும். அப்போது சிசேரியன் செய்தவளாக இருக்கிற பட்சத்தில் அமருவதற்கே அதிகச் சிரமப்பட வேண்டியிருக்கும். மார்பெல்லாம் வின்னென்று வலிக்கும். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் மகளே இதையெல்லாம் நீயும் செய்ய வேண்டியிருக்கும்.

அப்படி மார்பிலிருந்து பாலெடுத்துவிட்டால் அடுத்ததாக மீண்டும் எப்போது பால் வருமோ அல்லது வராமலே போய்விடுமோ என்றெல்லாம்கூட பயம் வந்து தொற்றிக் கொள்ளும். ஒருவேளை அச்சமயம் பார்த்து பிள்ளை அழுதால் எப்படி மார்பில் போடுவது என்கிற குழப்பமும் வரலாம். அப்போது இதற்கெல்லாம் தீர்வாக பிள்ளையை மார்பிலிட்டு அமர்த்திவிட்டு அதற்குப் பின்னால் மீதமிருக்கிற பாலினைக் கறந்து சேமித்துக் கொள்ளலாம். மேலும் பிள்ளை ஒருபக்கம் பாலருந்துகிறாள் என்றால் இன்னொரு மார்பிலும் அதன் தூண்டலால் பால் நிறைந்திருக்கும் போது அந்தப் பக்கத்தின் வழியே பாட்டிலில் பாலினை எடுத்துக் கொள்ளலாம். அப்போது ஒருபக்கம் பிள்ளை குடிக்க குடிக்க இன்னொரு பக்கமும் தொடர்ந்து பால் நிறைந்து கொண்டே தான் இருக்கும். ஒருவேளை உனக்கு ஒரே பம்பிலேயே நிறைய பால் வேண்டுமென்றால் இரண்டு பக்கத்திலிருந்தும் ஒரே சமயத்தில் பம்ப் செய்யலாம். அவ்வாறு செய்கையில் பாலும் அதிகமாகவே சுரக்கும்.

ஒன்றை மட்டும் நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் மகளே! அருகாமைக் கடைகளில் இருந்து பால்பவுடரை வாங்கி வந்து பாட்டில் கலந்து ஒரு நிமிடத்தில் குழந்தைக்குப் புகட்டிவிடலாம். ஆனால் மார்பு வலிக்க, அமர்ந்த நிலையில் கால் தசைபிடிக்கிற வேதனையும் தாண்டி, வருகிற குறைவான பாலுக்கும் சோர்ந்துவிடாமல், பலமுறை உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து பிள்ளைக்குக் கவனமாக ஊட்டி வளர்ப்பதென்று மலையை உடைப்பதைவிட இன்னும் கடினமான வேலை. ஆகையால் என்னவானாலும் சரி, எப்பேர்ப்பட்ட நிலை வந்தாலும் சரி, தாய்ப்பாலைத் தவிர வேறெதையுமே தரமாட்டேன் என்கிற வைராக்கியத்தினால் நீ இருந்தாலொழிய இதெல்லாம் சாத்தியமே ஆகாது மகளே!

உன் தாய்ப்பாலை எடுத்து பன்னிரெண்டு மாதத்திற்குமாக நீ பிள்ளைக்குப் புகட்டுகிறாய் என்றால் இவ்வுலகில் நீ செய்தற்கரிய மகத்தான வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறாய் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பாலினை எடுக்கையில் உன் மார்பின் தட்டையான காம்பில் விரிசல் விழும், பிள்ளை கடித்து காம்பெல்லாம் வலியெடுக்கும், பம்ப் செய்கிற போது உண்டாகிற வேதனையில் ஏன் தான் இதையெல்லாம் செய்கிறோமோ என்றெல்லாம் தோன்றும். ஆனால் இதையெல்லாம் தாண்டித் தான் நீயும் இதைச் செய்ய வேண்டியதிருக்கும். பறவை எச்சமிட்டு வளருகிற எந்த அரசமரமும் தன் சௌகரியமான இடத்திற்காக வளராமல் இருந்ததில்லை. பாறை விரிசல்கள், தூர்ந்த கிணற்றடிகள், மலையிடுக்குள் என்று அதன் விருட்சத்தைப் போலான மனதையே நீயும் கொண்டிருக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன் மகளே!

இத்தகைய தருணங்களில் பால் வரவில்லை என்றால் ஏற்படுகிற மன அழுத்தத்தையுமே நீ சமாளிக்க வேண்டியதிருக்கும். பிள்ளையை நீ மார்பிலிட்டு புகட்டுகிறவரையிலும் எந்தப் பிரச்சனையுமில்லை. அப்போதெல்லாம் உனக்கு மார்பிலே எவ்வளவு பால் சுரக்கிறது, பிள்ளை எவ்வளவு பாலருந்துகிறார்கள் என்கிற எந்தச் சிந்தனையும் எழாது. ஆனால் பாட்டிலில் கறந்தெடுக்கிற போது மட்டும் வெளிப்படையாகவே மார்பிலிருக்கிற பால் பாட்டில் வழியே வந்து நமக்குப் புலனாகிற போது இவ்ளோ தான் நமக்கு மார்பில் பால் சுரக்கிறதா? இது மட்டுமே பிள்ளைக்கு எப்படிப் பத்தும்? போன்ற எண்ணங்களெல்லாம் தோன்ற ஆரம்பித்துவிடும். இச்சமயத்தில் நம் மீதே நம்பிக்கையை நாம் இழந்துவிடுவோம்.

ஆனாலும் இதுபோன்ற மனத்தடைகளிலிருந்து மீண்டு வருவதற்கு சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் நிறையவே பெண்கள் குழுக்கள் இருக்கின்றன. அத்தகைய குழுக்களில் நாம் சேர்கிற போது அங்கிருக்கிற நம்மைப் போன்ற தாய்மார்களே நமக்கு நிறைய வழிகாட்டுவார்கள். அங்கே உரையாடுவதற்கும், கேள்விகள் கேட்பதற்கும் உனக்குத் தயக்கம் இருந்தாலும்கூட ஒவ்வொரு தாய்மார்களும் பதிவிடுகிற அவர்களது அனுபவங்களையெல்லாம் நீ படிக்கிற போது அதிலிருந்தே உனக்கான பதிலை நீ பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனாலும் தாய்ப்பாலூட்டுவதைப் பற்றிப் பேசுகிற மருத்துவமனைகளில் தாய்ப்பாலை மார்பிலிருந்து எடுத்துப் புகட்டுவதைப் பற்றியெல்லாம் சொல்லித் தருவதில்லை என்றே நினைக்கிறேன். இன்றைய நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப தாய்ப்பாலை முடிந்தவரையில் கொடுப்பதற்கான மாற்றுவழியை இன்னமும் மருத்துவமனைகளில் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் உனக்குப் பாலூட்ட நான் எடுத்துக் கொண்ட சிரத்தையின் விளைவாகத் தான் சொல்கிறேன் மகளே!

பிரசவ வலியில் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிற போது அங்கே ″பிரஸ்ட் பீடிங் பிரண்ட்லி ஹாஸ்பிட்டல்″ என்று முன்னறையிலே குறிப்பிட்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். அங்கே அவர்களாகவே வந்து அப்போதே உனை முகம் காணச் செய்தது, அருகாமையிலே இருக்க வைத்தது, அரை மணி நேரத்திற்குள்ளாகவே பாலூட்ட வைத்தது என்று எல்லா தருணங்களிலும் உதவியாக இருந்தார்கள். ஆனால் இத்தகைய அர்ப்பணிப்பான மருத்துவர்களும், செவிலியர்களும் எல்லா இடங்களிலும் இருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லையே மகளே! பெரும்பாலும் மருத்துவமனைகளிலேயே பால் பவுடரை பரிந்துரை செய்கிற வழக்கம் அதிகரித்த வண்ணமாயிருக்க இதையெல்லாம் நீ நன்றாக மனதில் வைத்தக் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளிலும், பெருநகரங்களிலும் தாய்ப்பால் ஆலோசகர் என்று தனித்த படிப்புகள், அதற்கென படித்தவர்கள், வேலை வாய்ப்புகள் எல்லாம் நிறையவே இருக்கின்றன. ஆனால் நாமிருக்கிற கிராமத்தில் இருந்தே அவர்களை அணுகுவதோ, அதன் மூலமாக ஆலோசனை பெறுவதோ உனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவர்களிடமெல்லாம் மெத்த படித்தவர்கள், பொருளாதார வசதியுள்ளவர்கள் மட்டுமே போய் பார்க்கிற அளவிற்கான சூழலில் தானே இப்போது இருக்கிறது.

ஒருவேளை இத்தகைய தாய்ப்பால் ஆலோசகர்கள் நீ பிரசவத்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்திருந்தால்கூட உனக்கும் உதவியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் அங்கே ஆறுமாதகால பயிற்சியில் படித்த மயக்க மருந்து மருத்துவர்கள், பிரசவிக்கிற மருத்துவர்கள் இருக்கையில் இப்படித் தாய்ப்பால் ஆலோசகர்களுக்கென்றும் பயிற்சியளித்த மருத்துவர்களோ செவிலியர்களோ பணியமர்த்தினால் இன்னும் நன்றாகத்தான் இருக்கும் என்று அங்கேயிருக்கிற மருத்துவர்கள் பேசுவதையும்கூட நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இதையெல்லாம் இனிமேல் மாறிவிடும் என்று நீயும் நானுமே நம்புவோம் மகளே!

டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 16 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 16 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
16. தாய்ப்பாலூட்டுவதை எப்போது நிறுத்துவது

பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகள் வளர வளர பால்குடியை எப்படி மறக்கடிப்பது என்கிற எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் சாலையோர கடை நிறுத்தங்களில் தாய்மடியை முட்டி முட்டி மண்டியிட்டு பாலருந்திக் கொண்டிருக்கும் வளர்ந்த ஆட்டுக்குட்டிகளையும், பசுவின் கன்றுகளையும் பற்றிச் சிந்திக்கிற போது நாம் மட்டும் ஏன் குழந்தைக்குப் பாலூட்டுவதைக்கூட சிரமம் தரக்கூடிய மகப்பேற்றின் ஓர் அங்கமாக பார்க்கத் துவங்கிவிட்டோம் என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.

இச்சமயத்தில் இதைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பாக நம் பால்யகாலம் எழுப்புகிற புதிர் கேள்விக்கு விடை தேடியாக வேண்டும். கிராமத்துத் திடலில் புழுதி பறக்க ஓடியாடித் திரிந்த பால்ய கால நினைவுகளில் நம் வயதையும் மீறிய பிள்ளைகள் பள்ளிகளில், தெருக்களில் முன்பற்கள் துருத்தியபடியிருக்க, விரல் சுவைத்தபடியே திரிவதை அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்திருப்போம். ஆனால் இப்போது ஏன் நம்மால் விரல் சுவைத்துத் திரிகிற பிள்ளைகளை வீடுகளில், சாலைகளில், பள்ளிகளில் எங்குமே நாம் காண முடிவதேயில்லை என்பதைப் பற்றி நாம் எப்போதாவது அக்கறையுடன் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

சட்டென்று நம்மோடு பால்ய காலங்களில் விதவிதமாக விரலைச் சவைத்தபடி சுற்றித் திரிந்த, அப்படி விரலைச் சவைத்தபடி திரிவதால் கேலி கிண்டலுக்கு ஆளாகிற, அப்படி எந்த விமர்சனத்திற்கும் தலைசாய்க்காமல் தன்போக்கில் விரலை உதட்டிற்குள் திணித்து மேற்சட்டையில் எச்சில் வடித்தபடி தெருக்கிளில் உலாவுகிற, அப்படித் திரிகிற பிள்ளையின் வாயிலிருந்து விரலை விடுவிப்பதற்காக வற்றல், மிளகாய், குமட்டிக்காய் என்று கசப்பு, உரப்பு என விரல்களில் தடவித் தடவி அப்பழக்கத்தைப் போக்க தெருதெருவாகத் துரத்துகிற, அவ்வாறு துரத்திப் பிடிக்க ஊர்ச் சிறுவர்கள் பெரியவர்களென திரண்டு அதனையே ஒரு திருவிழாக்கோலமாக ஆக்கிவிடுகிற நிகழ்வுகளெல்லாம் நம் மனக்கண் முன்னே வந்து போகிறதல்லவா!

ஆனால் இப்போதெல்லாம் பிள்ளைகளும் சமத்தாக பள்ளியில் வாத்தியார் விரலை அமைதி காக்கச் செய்கிற அரிதான பொழுதைத் தவிர கைகள் வாயிற்குச் செல்வதேயில்லை. அப்படியே தப்பித்தவறி விரல் வாயருகே சென்றாலும்கூட ஆரோக்கியத்தைக் காரணம் காட்டி, சீ..! அழுக்கு என்று கைகளைக் கழுவிக் கழுவி கைரேகை தீர சுத்தம் செய்கிற பெற்றோர்களும் இப்போது நிறைய வந்துவிட்டார்கள். சரி, அதுபோகட்டும். பிள்ளைகள் இப்போது விரல் சுவைப்பதேயில்லை என்பதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டால் எப்போது பிள்ளைக்கு பால்குடி மறக்கடிக்கலாம் என்பதற்கான தேடலுக்கு விடையும் கிடைத்துவிடும்.

பெண் திருமணமாகி குழந்தைப்பேறு பெறுவதென்பது எப்படி அவ்வளவு முக்கியத்துவத்தோடு இச்சமூம் முன்பு பார்த்ததோ அதேயளவு இடத்தை பாலூட்டுவதற்குமே கொடுத்திருந்தது. அப்போது பிள்ளைக்குப் பாலூட்டுவதென்பது பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது. கருவில் வளருகிற பிள்ளையை இம்மாதம் வரையிலும் வளர்ந்தால் போதுமென்று பாதியிலேயே பிரசவித்து வெளியே எடுக்க முடியுமா? அதேபோல மார்பிலிட்டு பாலூட்டுகிற காலத்திலும் இவ்வயது வரையிலும் பாலூட்டினால் போதுமென்று நிறுத்தவும் முடியாது, கூடாது.

அப்போதெல்லாம் பிள்ளைக்கு ஐந்து வயது, ஆறு வயது வரையிலும் பாலூட்டுவது என்பதெல்லாம் மிகவும் சர்வ சாதாரணமாக பார்க்கப்பட்டது. பிள்ளைகள் ஓடியாடி விளையாடித் திரிகிற போது தெருவில் புழுதியில் உழன்றபடியே வந்து அம்மாவின் மடியில் உட்கார்ந்து பாலருந்திவிட்டுப் போய் மறுபடியும் விளையாடுகிற ஒன்றை வெகு இயல்பாகவே அப்போதெல்லாம் காண முடியும்.

அதாவது பிள்ளைகளுக்கு நம் தாயின் மார்பிலே பாலருந்திக் குடிக்கிறோம் என்கிற தன்னுணர்வு பெறுகிற வயதைக் கடந்தும் அப்போது தாய்மார்கள் பாலூட்டிக் கொண்டிருந்த காரணத்தால் அவர்கள் மார்பின் காம்பைக் கவ்விச் சுவைத்த பழக்கத்தை சுலபத்தில் விட முடிவதில்லை. ஆகையால் காம்பைப் போலவே தன்மையுடைய விரல்களை வாயில் சவைத்தபடியே அதன் நினைவில் பாலூட்டுகிற மற்ற கணங்களில் திரிந்து கொண்டிருப்பர். ஆனால் இப்போதெல்லாம் பிள்ளைக்கு மார்பில் பாலூட்டுகிற உணர்ந்து நினைவில் பதிவதற்கு முன்பாகவே புட்டிப்பாலிற்கும் இணை உணவிற்கும் குழந்தைகள் பழக்கமாகிற காரணத்தினால் இப்போது வயதாகிய பின்னரும்கூட விரல் சூப்பிக் கொண்டிருக்கிற, அதனால் தெத்துப்பற்களோடு திரிகிற பிள்ளைகளை நாம் பார்க்க முடிவதில்லை.

ஆக, தாய்ப்பாலை நாம் முழுவதுமாக குழந்தைகளுக்குப் புகட்டுவதில்லை என்பதை இதை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறதல்லவா! ″என்னால் இனியும் உடல் நோக தாய்ப்பால் புகட்ட முடியாது, நான் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் புட்டிப்பாலுக்குப் பழக்கப் போகிறேன், பிள்ளையை உடனிருந்து பார்த்துக் கொள்ள யாருமில்லை என்பதால் பால்குடியை நிறுத்தப் போகிறேன், வீட்டு வேலைகளை என்னால் சரிவர கவனிக்க முடியவில்லை என்பதாலே இதைச் செய்ய வேண்டியதிருக்கிறது, சீக்கிரமாக பால்குடியை மறக்கடிக்காவிட்டால் பின்னாளில் நிறுத்துவது கடினம்″ என்ற எத்தனையோ நமக்கான காரணங்களைச் சொல்லி குழந்தைக்கான தாய்ப்பாலை மறுப்பது என்பதும்கூட ஒரு குற்றம்தான், அடிப்படி மனித உரிமை மீறல் தான்.

எனக்கு வேண்டிய வரையிலும் தாய்ப்பாலைக் குடித்துக் கொள்வேன்! என்பது ஒரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதிலே பிள்ளை பெற்ற காரணத்தை வைத்துக்கூட ஒரு தாய் பால்கூடி மறக்கடிப்பதை முடிவு செய்ய முடியாது. தாய்ப்பால் தனக்கு இனி வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தக் குழந்தை மட்டுமே. ஆகையால் எப்போது தாய்ப்பால் நிறுத்துவது, எப்படி தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்துவது என்பதெல்லாம் நமது கையிலே ஒன்றும் இல்லை.

பொதுவாக பிள்ளைகள் வளர்ந்து வருகிற சமயத்தில் தாய்ப்பாலூட்டுகிற நம் சிரமங்களைச் சொல்லி அவர்களுடன் உரையாடுகிற போது தாங்களாகவே மாற்று உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று குழந்தைகள் ஒப்புக் கொள்வதாக பல இடங்களில் தாய்மார்கள் சொல்லி வைத்திருப்பதுகூட ஒருவேளை நமக்கு உதவியாயிருக்கும்.

– டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 15 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 15 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
15.தாய்ப்பால் வகுப்பறை-ΙΙΙ

பள்ளிக்கூடத்தில் தான் வீட்டுப் பாடம் தருவார்கள், இங்கேயுமா? ஆம், மருத்துவமனையில் கற்றுக் கொண்ட விசயங்களை வீட்டிலே தனிமையில் அமர்ந்து பிள்ளையும் நீங்களுமாக பயிற்சி எடுக்க வேண்டாமா? என்ன தான் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாலும் தனியாய் ஒரு விசயத்தை செய்யும் போது, நம்மைத் தனியே விட்டு இனி நீதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தள்ளிவிடும் போதும் தான் இன்னும் நிறைய விசயங்களைப் புரிந்து கொள்ளவே முடியும்.

வீட்டிலிருக்கிற காலங்களில் உண்டாகிற சந்தேகங்களை நம் செவிலியரிடம் அலைப்பேசியில் பேசி குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். அதேசமயம் தாய்ப்பால் புகட்டி பிள்ளையை வளர்த்தெடுத்த பின்பாக நாற்பத்திரண்டு நாட்கள் கழித்து பிள்ளைக்கு முதல் தவணையாகத் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனைக்கு நாம் செல்ல வேண்டியிருக்கும் அல்லவா! அப்போது வீட்டில் செய்த வீட்டுப்பாடத்தின் மூலம் பிள்ளைகள் எப்படித் தேறியிருக்கிறார்கள், எவ்வளவு எடை கூடியிருக்கிறார்கள், இன்னும் எத்தகைய கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும், எத்தகைய உணவுகளைப் பிள்ளைக்கு எந்த வயதிலிருந்து கொடுக்கலாம் என்பன உள்ளிட்டவைகளையும் கேட்டுத் தெளிந்து கொண்டு வீடு வந்து சேரலாம் தானே!

மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டிற்கு கிளம்புகையில் மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் கேட்டு விடைபெற்றுக் கொள்ளும் முன்பாக சில விசயங்களில் நாமுமே தெளிவு பெற வேண்டியிருக்கிறது. வீட்டிற்குச் சென்ற பின்பாக தாய்ப்பாலூட்டலிலும், குழந்தை வளர்ப்பிலும் ஏதேனும் சந்தேகமிருக்கையில் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் அழைத்துப் பேசலாமா, நேரில் எப்போது வேண்டுமானாலும் வந்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாமா? மீண்டும் அடுத்து எப்போது வந்து குழந்தையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டியிருக்கும், அதற்கு இடைப்பட்ட காலங்களில் என்னென்ன மருந்துகளைத் தொடர்ந்து நாங்கள் எடுக்க வேண்டியிருக்கும், மேலும் தன்சுத்தம், மார்பகம், குழந்தை பராமரிப்பு மற்றும் தாயிற்கான உணவுகள் தொடர்பாக ஏதேனும் முக்கிய ஆலோசனைகளைக் கேட்டுவிட்டு வீடு திரும்பலாம்.

வீடு திரும்பியவுடனே தான் நம்முடைய வீடுகளில் வழக்கமாயிருக்கிற சம்பிரதாய நடவடிக்கைகள் துவங்கிவிடுகிறதே! அப்போது பிள்ளை பெற்றவள் புகுந்த வீடு தீட்டாகிவிடுகிறது, அதனால் தானே பதினாறாம் நாள் வெள்ளையடித்து தீட்டைக் கழிக்கிறார்கள். அவள் புழங்குகிற பாத்திரங்கள்கூட அச்சமயத்தில் தீட்டாகிவிடும், அவற்றைத்தான் வீடு கூட்டுதல் என்று பழையனவற்றைக் கழித்துப் புது பாத்திரங்களை வாங்குகிறார்கள். அவர்களைச் சந்திக்கிற மனிதர்களுமே தீட்டுப்பட்டுவிடுவார்கள் என்பதால் தான் வீட்டில் தீட்டுக்கழிக்கிற பதினாறாம் நாள் வரையிலும் யாரும் வந்துசேர மாட்டார்கள். வீட்டில் கெட்ட ஆவிகள் நுழைந்துவிடக் கூடாதென்று மாதவிலக்கு உள்ளானபோது உலக்கையைப் போட்டவர்கள், இப்போது இரும்பினை வாசல் பார்த்துப் போட்டு வைப்பார்கள்.

இக்காலத்தில்தான் நற்குணமான வயசாளிகள் வந்து பிள்ளைக்குச் சேனை வைத்தால் அவர்களைப் போலவே நல்ல குணமாய் வருவார்கள் என்று தேனை, சர்க்கரைப் பாகுவை, பழைய கஞ்சியைக்கூட நாவில் தொட்டு வைக்கிற பழக்கமெல்லாம் நடக்கும். சில ஊர்களில் கழுதைப்பால் கொடுப்பது, கழுதைக் காதிலிருந்து கீறியெடுத்த இரத்தத்துளியை பஞ்சில் நனைத்து வாயில் சொட்டுவிடுவது உள்ளிட்டவைகளைச் செய்தால் சீக்கு அண்டாது, மஞ்சள்காமாலை வராது என்பது போன்ற அவர்களின் வழக்கமான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவர்.

பதினாறாம் நாள் விசேசத்தன்று ஒவ்வொரு சமூகத்திலும், மதத்திலும், பொருளாதாரம், தொழில், வழிபாடு சார்ந்து வெவ்வேறான சம்பிரதாயங்களைச் செய்வார்கள். அப்போது பிள்ளைக்குப் பேர் வைப்பது, அரைஞாண் அணிவிப்பது, தொட்டில் போடுவது உள்ளிட்ட சம்பிரதாயங்களெல்லாம் நடக்கும். அப்போதுதான் ஊர் உறவினர்களெல்லாம் ஒன்றுகூடி வந்து பிள்ளையைப் பார்த்து பாராட்டி சீராட்டுவதும், பெற்ற தாயை வாழ்த்திப் போற்றுவதும் எல்லாம் நடக்கும். அதேசமயத்தில் வந்தவர்கள் பிள்ளையின் பாலினம் சார்ந்து நாசுக்காக சொல்லிச் செல்வதும், பிள்ளையின் எடை வத்திப் போவது பற்றிய நெருப்பைக் கிள்ளிப் போட்டுப் போவதுமான இருக்கையில் புட்டிப்பால், சத்துமாவு, டானிக் என்று செயற்கையாக பாலூட்டலுக்கு தாயினை நகர்த்துவதும் நடக்கும்.

ஆக, இதிலிருந்தெல்லாம் ஒரே ஓட்டமாக தப்பிப்பிழைத்து கையோடு பிள்ளையையும் தப்புவித்து அவர்களுக்கு முழுக்க முழுக்க தாய்ப்பால் மட்டுமே தந்து வளர்த்தெடுப்பதெல்லாம் ஓட்ட பந்தயத்தைவிட அரியதொரு சாதனைதான். மேலும் வீட்டிலிருக்கிற காலங்களில் தாய்ப்பால் தொடர்பான சிக்கல்கள் எழும்போதுகூட அருகிலே உறவினர்கள் எவரேனும் பாலூட்டிக் கொண்டிருக்கையில் அவர்களிடம் உரிமையோடு போய் தாய்ப்பால் தொடர்பாகக் கலந்தாலோசித்துக் கொள்ளலாம். நம் பிள்ளைக்குப் பாலில்லை என்கிற போது அவசியப்பட்டால் அவர்களிடமே கொடுத்து பாலூட்டி அமர்த்தச் செய்யலாம். ஏனெனில் மனிதகுல வரலாற்றில் பெற்ற பிள்ளைக்குச் சகோதரி பாலூட்டிய, அத்தை பாலூட்டிய, அம்மா பாலூட்டிய நிகழ்வுகளெல்லாம் கூட நிகழ்ந்த மண்ணிது.

வீடுகளில் தாய்ப்பாலு புகட்டுவதற்கென தனியொரு இடத்தை ஒதுக்கிடத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். விருந்தினர்கள் திடுதிப்பென்று உள்நுழைகிற போது அசூசையாக அம்மாவிற்கு தோன்றாதளவிற்கு இடமிருந்தால் போதுமானதுதான். குழந்தையின் உடலுக்கு போதிய கதகதப்பு அவசியமாயிருப்பதால் அம்மாவின் தோலோடு நெருக்கம் தேவைப்படுகிற அதேசமயத்தில் வீடும் நல்ல வெளிச்சத்தோடு, கூடிய காற்றோட்டத்தோடு இருப்பது நல்லது. பாலூட்டுகிற பிள்ளையைப் போர்த்துவதற்கென தனியே துணிகளை நன்கு துவைத்து வெயிலில் உலர வைத்துப் பயன்படுத்துகையில் ஏனைய பூச்சிகள் வந்து பிள்ளையை துன்புறுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைக்கு மெத்தையென்றில்லாமல் வெறுமனே காட்டன் துணியில் போர்த்தி விரிப்பில் கிடத்தினாலே போதுமானதுதான். எப்போதும் தொட்டிலில் போடுவது என்றில்லாமல் அம்மா அயர்ந்து தூங்கியெழுகிற போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் பாலூட்டும் இடத்தில் அதற்குத் தேவையான அத்தனை பொருட்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முதுகுக்கும் மடியில் பிள்ளையை தாங்கிக் கொள்வதற்கான தாய்ப்பால் தலையணைகள், காட்டன் துண்டுகள், குழந்தைகள் சிறுநீர் மலம் கழித்த பின்பாகத் தேவைப்படுகிற மாற்று உடைகள், வெந்நீர் நிரப்பப்பட்ட பாட்டில்கள், தாய்ப்பால் நைட்டிகள், தாய்ப்பால் பிழிந்தெடுத்து சேகரிக்கப் பயன்படுகிற பொருட்கள், தாய்ப்பாலூட்டும் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய டானிக் மாத்திரைகள், மகப்பேறு மற்றும் தடுப்பூசி அட்டையென அருகாமையிலே வைத்துக் கொள்ளலாம். அதேபோல முக்கியமாக மருத்துவர், செவிலியர், மருத்துவமனை அலைப்பேசி எண், தடுப்பூசி அட்டவணை நாட்கள் போன்ற அத்தியாவசிய நாட்கள், நம்பர்களை டைரியில் குறித்து வைத்துக் கொண்டு அவசியப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் தானே!

– டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 12 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 12 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் – 9
பால்சுரப்பைக் கண்டறிவதற்கான வழிமுறைகள்

குழந்தையை மடியிலே கிடத்திவிட்டோம், அவர்களும் மார்புக் காம்பினை கச்சிதமாகக் கவ்வியபடி பாலருந்தத் துவங்கிவிட்டார்கள். ஆனாலும் நாம் சரியாகத்தான் பாலூட்டிக் கொண்டிருக்கிறோமா என்கிற உள்ளுணர்வு மட்டும் நம்மை விடாமல் துரத்திக் கொண்டேயிருக்கும். இத்தகைய குழப்பத்தை தாய்ப்பாலூட்டுகிற சமயத்தில் வெளிப்படுகிற சில நுட்பமான சமிக்கைகள் வழியாக நாம் கண்டுபிடித்துவிட முடியும்.

முதலில் மார்பில் தாய்ப்பால் இறங்கியிருக்கிறது என்பதை சில அறிகுறிகளின் வழியாக நம்மால் கண்டு கொள்ள முடியும். அதாவது பிள்ளை பாலருந்துகையில் நம் மார்பில் சுருக் சுருக்கென்று குத்துவதைப் போலொரு உணர்வு தோன்றும். அத்தகைய உணர்வானது பால்பையிலிருந்து பிழிந்தெடுத்த பால் வெளியேறுகிற இயக்கத்தின் வெளிப்பாடுதான். அதேபோல விரல்களை வைத்து காம்பைச் சுற்றிய கருமை நிறத்திலான ஏரியோலா பகுதியில் தொட்டுத் தடவிப் பார்த்தாலே பால் நிறைந்த முடிச்சுகள் காம்பில் பின்னால் தடித்திருப்பதைக் காண முடியும்.

நம் பிள்ளைகள் அழுதுவதைக் கேட்டாலே, அவர்களைப் பற்றி நினைத்தாலே காம்பிலிருந்து பால் வடிவதை வைத்தே நம்மால் நேரடிச் சாட்சியமாக இதைச் சொல்லிவிட முடியுமே! அதேசமயம் மார்பிலிருந்து பாலினை வெளியேற்றுவதற்கு உதவுகின்ற ஆக்ஸிடோசின் ஹார்மோன், கர்ப்பப்பையையும் சுருக்குவதால் அடிவயிற்றில் வலியையும் பிறப்புறுப்பில் அவ்வப்போது இதனால் நீர் சுரப்பதையும் தாய்ப்பால் இறங்கியிருப்பதன் அறிகுறியாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒருவேளை நாம் சரியாகத்தான் தாய்ப்பால் புகட்டுகிறோம் என்றால் அத்தகைய தாய்ப்பாலூட்டும் நிகழ்வென்பது வலியில்லாத, ஆசுவாசமளிக்கக்கூடிய ஒன்றாகவே தாய்மார்களுக்கு இருக்கும். அப்போது மார்பையே கரைத்து உறிஞ்சிக் குடித்துவிடுகிற இழுபறி போலான உணர்வை பாலருந்துகிற மார்பிலே நம்மால் உணர முடியும். அதே சமயத்தில் தனக்குத் தேவையான அளவிற்குத் தாய்ப்பால் கிடைக்கின்ற போது அதனது திருப்தியில் ஆரவாரமின்றி சாதுவாகப் படுத்து பாலருந்திக் கொண்டிருப்பார்கள்.

குழந்தைகளின் வாயிற்கு தாய்ப்பால் எட்டாத வரையில் அவசர அவசரமாக குடித்துக் கொண்டிருப்பவர்கள், பின் பால் தொண்டைக்குள் நிறைந்தவுடன் நிதானமாக பாலருந்த துவங்குவார்கள். இப்படியாக அவர்கள் நிதானமாகக் குடிக்கிற தோரணையின் சாயலை வைத்தே தாய்ப்பால் சரியாகத்தான் கிடைக்கிறது என்கிற முடிவிற்கு நாம் வந்துவிட முடியும். ஒரு நீண்ட சவைத்துக் குடித்தலோடு இடையிடையே அவர்கள் மூச்சுவிட்டு சவைத்தல்- விழுங்குதல்- மூச்சுவிடுதல் என்கிற தாய்ப்பால் குடித்தலின் சூத்திரத்தை சிரமமின்றி அவர்கள் மேற்கொள்வார்கள்.

மேலும் அவர்களின் வாயில் தாய்ப்பால் நிறைந்திருக்கும் போது நம்மால் அவர்களது கண்ணங்கள் உப்பி வருவதையும் கவனிக்க முடியும். தாய்ப்பால் சரிவர குடிக்க முடியாத குழந்தைகள் காம்பை மட்டுமே வாய் வைத்து உறிஞ்சிக் குடிக்க முயலுகிற போதுதான் இளநீரை உறிஞ்சுகுழாய் வைத்து உறிவதைப் போலொரு குழியினைக் கண்ணங்களில் காண முடியும். ஆனால் இதையெல்லாம் தாய்ப்பால் நன்றாகக் கிடைக்கிற குழந்தைகளிடம் நம்மால் பார்க்க முடியாது. இன்னும் மிக முக்கியமாக தாய்ப்பால் குடிக்கிற சப்தத்தையே நம்மால் கேட்க முடியுமே! அப்படியாக தாய்ப்பால் குடித்து விழுங்குகிற அசைவுகளையும்கூட நாம் அவர்களின் தொண்டைக் குழியிலே காணவும் முடியும்.

அவர்கள் திருப்தியாக தாய்ப்பால் அருந்தியிருந்தால் அதன் பின்பாக உதட்டோரத்தில் ஈரப்பதத்தையும், பால் குடித்த தடத்தையுமே நன்றாகப் பார்க்க முடியும். அவர்களும் வயிறு முட்ட நிறைவாகக் குடித்த பின்பாக பாலூட்டலுக்கு இடைப்பட்ட நேரத்தில் நன்றாகத் தூங்கியெழுவார்கள். பொதுவாக சரியாகப் பாலருந்தி துயில் கொள்கிற சமத்துப் பிள்ளைகள் வாந்தியெல்லாம் எடுப்பதில்லை. மேலும் அவர்கள் நன்றாகத் தாய்ப்பாலைப் பருகி சிறுநீரினை ஆறு முறைக்கு மேலாக வெளியேற்றியபடியே இருப்பார்கள். அதேபோல மலத்தினையும் மஞ்சள் நிறத்திலே வெளியேற்றத் துவங்கியிருப்பார்கள். அவர்கள் தாய்ப்பாலைத் தொடர்ந்து குடிக்கையில் எடையும் சீராக அதிகரிப்பதை வைத்தே இதனை உறுதிபடச் சொல்லிவிட முடியும்.

பிள்ளையின் தோல்களில் பார்க்க முடிகிற வாட்டமேயில்லாத மினுமினுப்பும்கூட தாய்ப்பால் கிடைத்தற்குரிய நல்ல அறிகுறிதான். பிள்ளையின் மிருதுவான உச்சிக்குழியுமே மேடாகவோ, அதிகமாக குழிவாகவோ இல்லாமல் கூடிய சீக்கிரத்தில் மூடிக் கொள்ளும். இதனை வைத்தே குழந்தைக்குத் தாய்ப்பால் நன்றாகத் தான் கிடைத்திருக்கிறது என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
தாய்மார்களாகிய நாம் பாலூட்டிய பின்பாக நமது மார்பானது முந்தைய கணத்தை இழந்து இப்போது மென்மைத் தன்மையை அடைந்திருக்கும். மார்புக் காம்பும் நீண்டபடி காயமேதும் இல்லாமல் ஆரோக்கியமாகவே இருக்கும். குழந்தைகள் தவறாக காம்பைக் கவ்வியிருந்தால் தான் புண்ணாகியிருக்குமே! இதையெல்லாம் வைத்தே நம் மார்பில் நன்றாகத் தாய்ப்பால் சுரந்திருக்கிறது, அதன் வழியே நிறைவாகப் பிள்ளைக்குத் தாய்ப்பால் கிடைத்திருக்கிறது என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

– டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 11 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 11 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -8
பாலூட்டுவதன் பரிமாணங்கள்

பேரன்புக்குரிய தாய்மார்களே!

தாய்ப்பாலூட்டுகிற தருணங்களில் நாம் சின்னச்சின்ன விசயங்களையும் கடற்கரைப் பாசிகளைக் கைகளில் சேகரித்து பொக்கிஷமாக்கிக் கொள்வதைப் போல மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் சாதாரண விசயம் தானே என்று கடந்து போகிற சிறு விசயங்களிலும் அளப்பறிய உண்மையும், அறிவியலும், அதை சரியாகச் செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆக தாய்ப்பால் பற்றிய சில புரிதல்களை நாம் இங்கே கொஞ்சம் நினைவுகூர்வோம்.

பாலூட்டத் துவங்குகையில் குழந்தையை வாரியெடுத்து மார்பிலே போடும் போது ஆரம்பத்தில் அவர்களே எந்த மார்பில் குடிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொள்ள விட்டுவிட வேண்டியதுதான். அப்போது அவர்களாகவே மார்பில் தவழ்ந்து, பால்வாடை நுகர்ந்து இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து பாலருந்திக் கொள்வார்கள். அதற்குப் பின்பாகத் தான் நாம் சென்ற முறை எந்த மார்பிலே பால் கொடுத்தோம், இப்போது எந்த மார்பிலே அதிகம் பால் கட்டியிருக்கிறது என்பதைக் கவனித்துப் பார்த்து பாலூட்டிக் கொள்ளலாம். ஆக, மார்பை தேர்வு செய்வதில்கூட முதலில் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு பின்பு நாமே அதனை முடிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல் மார்பிலிட்ட துவக்கத்தில் அவர்கள் வாயினை வைத்தவுடனே தாய்ப்பால் அவர்களுக்குக் கிடைப்பதற்கு சில நிமிடங்கள் வரையிலுமே ஆகிறது. ஆனால் அதுவே நாட்கள் செல்லச் செல்ல மார்பிலே பால் சுரந்து கட்டிக் கொள்ளத் துவங்கியவுடன் அவர்கள் வாய் வைப்பதற்கு முன்பாகவே தாயின் மார்பில் பால் வடியத் துவங்கி அவர்களுக்கு உடனுக்குடன் பால் கிடைக்கத் துவங்கிவிடும்.

பொதுவாக குழந்தைகள் ஒவ்வொரு முறை பாலருந்துகிற போதும் தாய்ப்பால் ஹார்மோன்களான புரோலாக்டினும், ஆக்ஸிடோசினும் சுரந்து கொண்டு தான் இருக்கிறன்றன. ஆனாலும் இதிலென்ன வித்தியாசமென்றால் நாம் பாலூட்டுகையில் புரோலாக்டின் சுரந்து அது அடுத்த பாலூட்டலுக்கான பால் சுரப்பு வேலையைத்தான் செய்கிறது. அதேசமயத்தில் ஆக்ஸிடோசின் ஹார்மோனோ தற்போது சவைத்துக் கொண்டிருக்கிற பிள்ளைக்குப் பாலினை பால்பையிலிருந்து கரந்து வாயிற்குள் கொண்டு செல்கிற வேலையைச் செய்கிறது. ஆக, ஒருமுறை பாலருந்துகையில் அது அப்போதிற்கும் அடுத்த பாலூட்டல் நிகழ்விற்குமான இரண்டு வேலையைச் செய்கிறது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தாய்ப்பாலூட்டுகிற துவக்கத்தில் மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து தாய்ப்பால் ஹார்மோன்களை மார்பிற்குக் கொண்டு வர வேண்டி அவசர அவசரமாக செயல்பட வேண்டியிருப்பதால் முதலில் இரண்டு மார்பிலுமே பத்து பத்து நிமிடம் குழந்தையைப் போட்டு பாலருந்த வைக்க வேண்டியிருக்கும். ஆனால் மார்பில் பால் நன்றாகச் சேரத் துவங்கியவுடனே நாம் ஒரே சமயத்தில் இரண்டு மார்பிலும் போடத் தேவையின்றி ஒரு மார்பிலேயே ஒரு பாலூட்டும் நிகழ்வு முழுவதுமாக போட்டுக் கொள்ள முடியும். அதேசமயத்தில் நாம் துவக்கத்தில் ஒரே மார்பில் ஒரே சமயத்தில் பத்து பத்து நிமிடம் போடும் போது அடுத்ததடுத்த பாலூட்டும் நிகழ்வில் ஒரே மார்பில் மட்டும் இருபது நிமிடங்கள் வரை தொடர்ந்து பாலின் இருப்பிற்கேற்ப நம்மால் பாலூட்டவும் முடியும்.

தொடக்கத்தில் குறைவாகவே மார்பில் சீம்பால் சுரக்கின்ற காரணத்தினால் முதலில் ஒரு வாரம் வரையிலுமே குழந்தைகள் மார்பிலே குறைவாகவும், அடிக்கடியும் பால் கேட்டு அடம்பிடித்து பாலருந்திக் கொண்டே இருப்பார்கள். அதேசமயம் அவர்களது உணவைத் தேக்கி வைப்பதற்கான இரைப்பைக்கான அளவும், அன்றாடத் தேவையும் குறைவாகவே இருப்பதால் குறைவாகத்தான் குடிக்கவும் செய்வார்கள்.

ஆனால் ஒரு வாரத்தின் முடிவில் மார்பில் பால் சுரப்பு அதிகரிக்கத் துவங்குவதாலும் அதனால் நன்கு மார்பில் பால் கட்டிக் கொள்ள துவங்கிவிடுவதாலும், அதற்கேற்ப குழந்தைகள் வயிறு நிறைய குடித்துவிட்டு நன்கு தூக்கிவிடுகிறார்கள். அதற்குப் பின்பாகத் தான் பிள்ளைகள் அடிக்கடி பால் கேட்டு எழுவதுமே குறைந்துவிடுகிறதே! ஆரம்பத்தில் தாய்ப்பால் தேடி மேலோட்டமாகவும், வேகவேகமாகவும் பால் அருந்திய குழந்தைகள், அடுத்ததாக ஆழமாகவும் அவசரமின்றியும் நிதானமாகவும் பாலருந்திப் பழகிக் கொள்வார்கள். இதனால் ஆரம்பத்தில் இரண்டு மூன்று மணி நேரத்திற்கொருமுறை எழுந்து தாய்ப்பால் கேட்பவர்கள், பின்னாளில் மூன்று முதல் நான்கு மணி நேர இடைவெளிக்கு ஒருமுறை எழுந்து பசிக்குப் பால் கேட்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.

தாய்ப்பால் சுரக்கிற துவக்க காலத்தில் சீம்பால் கட்டியாக வருகிற போது அது குறைவாகவே சுரக்கிறது. அதேசமயத்தில் இரண்டு வாரத்தின் முடிவில் முதிர்ச்சியடைந்த பாலாக எல்லா நற்குணங்களையும் அடக்கிய தாய்ப்பால் சுரக்கத் துவங்கியதும் அது நீர்மையாக மாறி அளவுக்கு அதிகமாகவே சுரக்கிறது. இதனால் தாய்ப்பால் தண்ணியாக இருக்கிறதே, இதில் நம் பிள்ளைக்கான சத்துகளெல்லாம் கிடைத்துவிடுமா என்றெல்லாம் நாம் நினைத்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லாத அளவிற்கு இரண்டுவார முடிவின் தாய்ப்பாலில் எல்லாமே அடங்கியிருக்கிறது தாய்மார்களே!

குழந்தைகளின் சிறுநீர் கழித்தலும், மலம் கழித்தலும் ஆரம்பத்தில் அடிக்கடி போய்க் கொண்டுதான் இருக்கும். எந்த அளவிற்கு குழந்தைகள் சிறுநீர் கழிக்கிறார்களோ அந்த அளவிற்கு தாயிடமிருந்து பிள்ளைக்குத் தாய்ப்பால் கிடைக்கிறது என்பதை நாம் கணித்துக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ஆறுமுறைக்கும் கீழாக பிள்ளைகள் சிறுநீரினை குறைவாகக் கழிக்கையில் தாய்ப்பால் கிடைப்பது பற்றிய எச்சரிக்கை உணர்வோடு நாம் பாலூட்டத் துவங்கிவிட வேண்டும். அதேபோல துவக்க காலத்தில் கரும்பச்சை நிறத்தில் மலத்தை வெளியேற்றிக் கொண்டிந்த குழந்தைகள், சீம்பால் குடித்த பின்பாக அடுத்தடுத்து தாய்ப்பால் குடித்துக் கொண்டே இருக்கையில் அதன் நிறமும், தன்மையும் மாறி இறுகலின்றி மஞ்சள் நிறத்தில் ஒரு வார காலத்திலேயே மாற்றம் கொண்டுவிடும்.

ஒருவேளை மலத்தினை பிள்ளைகள் பச்சை நிறத்தோடே கழிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பின்பால் கிடைக்கிறதா என்பதை நாம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் பச்சை நிறத்தோடு நாற்றமும் சேர்ந்து வெளியேறத் துவங்கினால் தாய்ப்பாலைத் தவிர வேறு ஏதோ குழந்தைக்குக் கொடுத்து அது சேராமல் பிள்ளைக்கு வயறு கெட்டு மலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலூட்டுதலின் துவக்கத்தில் நாம் சரியாகத்தான் புகட்டுகின்றோமா என்கிற சந்தேகத்தோடும், பிள்ளைக்குத் தாய்ப்பால் முழுமையாகக் கிடைக்கின்றதா என்கிற மனக்கணக்கின் பதட்டத்தோடுமே புகட்டுவது போலிருக்கும். அப்போது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதற்கென நாம் கண்டுபிடித்து வைத்திருக்கிற குழந்தைகள் அசைவுகள் தொடர்பான நுட்பங்களைக்கூட நம்மால் கண்டுகொள்ளவும் முடியாது. ஆனால் இத்தகைய பாலூட்டுகிற பயிற்சியும் பிள்ளைக்குப் பால் கிடைக்கிற உணர்வுகளையும், மார்பில் பாலூறுகிற மாற்றங்களையும் கண்டு கொண்டு முழுநிறைவாகப் புரிந்து கொள்வதற்கு நான்கிலிருந்து ஆறு வாரகாலம் வரையிலும் ஆகுகிறது. இது ஒவ்வொருவருக்கும் அவரவர் ஈடுபாட்டின் அடிப்படையில் முன்பின்பாக இருக்கலாம் என்பதால் நமக்குப் பாலூட்டிப் பழகுவதற்கும் குறிப்பட்ட காலம் எடுக்கும் என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல ஆறுமாத காலம் வரையிலும் உட்கார மட்டுமே பழகியிருக்கிற பிள்ளைகளுக்கு, பற்கள் அப்போதுதான் துருத்திக் கொண்டிருக்கிற குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் அதற்குப் பின்பான காலங்களில் இன்னும் துருதுருவென தவழ, நடக்கவென்று உடல் இயக்கத்தின் மூலம் எனர்ஜி அதிகமாக அவர்களுக்குத் தேவையென இருப்பதால் ஆறு மாதகாலத்திற்குப் பின்பாக தாய்ப்பாலோடு கூடுதலான இணை உணவினையும் நாம் சேர்த்தே கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் நாம் இதனது தொடர்ச்சியாகப் புரிந்து கொள்ள வேண்டும் தாய்மார்களே!

– டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 10 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 10 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -7
பாலருந்துவதற்கான உந்துசக்திகள்

இப்பிரபஞ்சத்தில் ஜீவிக்கிற அத்தனை ஜீவராசிகளும் பிறந்தவுடனேயே அடிப்படை வாழ்வாதாரமான உணவைத் தேடியே பயணிக்கின்றன. இம்மண்ணில் பிரசவமாகிற அத்தனை உயிர்களும் பிறந்தவுடன் அதற்குள் இயல்பாகவே இருக்கிற உந்துசக்தியின் விளைவாக தான் ஜீவித்திருக்க வேண்டிய உணவைத் தேடி பயணமாகத் துவங்கிவிடுகின்றன. வாழ்வின் அடிப்படை ஆதாரமே உணவுதானே! அதனால் தான் பாலூட்டிகளின் குட்டிகள் பிறந்தவுடனே அவற்றின் கண்கள் திறக்கும் முன்பேயே அதனது அத்தனை உள்ளுணர்வுகளையும் ஒன்றுதிரட்டி தன் தாயின் மார்பைத் தேடிப்பிடித்து தனக்கான உணவினை பாலருந்தித் தீர்த்துக் கொள்கின்றன.

கண் திறவாத நாய்க்குட்டிகள்கூட தன் புலனுணர்வால் தாயின் வருகையுணர்ந்து போய் மடியில் உளன்று எப்படியாவது முட்டியடித்துப் பாலருந்திக் கொள்கின்றன. இயற்கையின் விதிப்படி பிரசவிக்கிற குட்டிகளுக்கேற்ப மார்பும், மார்புக்காம்பும் அதனது உடலமைப்பிலேயே படைக்கப்பட்டுவிடுகின்றன. அதனால் தான் பத்து குட்டிகளென பெற்றெடுக்கின்ற நாய்களுக்கென அதிகளவிலான காம்புகள் தன் குட்டிகளுக்குத் துருத்திக் கொண்டிருக்கின்றன. அதிகபட்சமாக இயற்கையின் விதிப்படி இரட்டைக் குழந்தை பிரசவிக்க முடியுமென்கிற விதியினால் இரண்டு மார்போடு மனிதப் பெண்ணும்கூட படைக்கப்பட்டிருக்கிறாள்.

குழந்தைகள் உள்ளுக்குள் கருவாய் வளருகிற போதே பிரசவித்தவுடன் அவர்கள் வாழ்வதற்கான ஜீவதாரம் எங்கு கிடைக்கும், அதை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட தகவல்களெல்லாம் சொல்லப்பட்டுவிடுகின்றன. அதனால் தான் பிரசவித்தவுடனே பிள்ளையைத் தூக்கி மார்புக்கருகிலே போட்டவுடன் அவர்களுக்கிருக்கிற தன்னுணர்வினால் மிருதுவாகிய தன் தலையை நந்தைக்கூட்டின் நகர்வைப் போல முன்னகர்த்தி மார்பை நோக்கி மெல்ல பசிக்கான பயணத்தை துவங்கிவிடுகிறார்கள். மைனாவின் பிஞ்சு அலகினுடைய பசிக்கான திறப்பினைப் போல அவர்களது குட்டி வாயினை அகலத் திறந்து, பூவிதழ் போலான நாவினைச் சுழற்றித் தனது தாயினது மார்பையும் காம்பையும் சுவைபார்த்துக் கண்டுபிடிக்கிறார்கள். இதையெல்லாம் கண் பார்வைத் தெளிவில்லாத தன்னுணர்வினால் மட்டுமே பிள்ளைகள் செய்துவிடுகிறார்கள்.

அதேபோல கருவாயிருக்கும் போதே உணவைத்தேடி தங்களை இப்பூமியில் நிலை நறுத்திக் கொள்வதற்கான சில அனிச்சைச் செயல்களை தாயிடமிருந்து பிள்ளைகள் வரமாய்ப் பெற்றுக் கொண்டே பிறக்கிறார்கள். ஒருவேளை தவக்கோலத்தில் பத்து மாதங்களும் ஒடுங்கியிருந்ததன் பயன்தான் இதுவோ என்னமோ! அதாவது பிறந்தவுடனே மார்பையும் காம்பையும் சரியாகக் கவ்விப்பிடித்து பாலருந்திக் குடிப்பதற்கென்றே அனிச்சையான உணர்வுகளை அவர்கள் பிரசவிக்கும் முன்பே பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள்.

ரூட்டிங் அனிச்சை செயல்-(Rooting Reflex)

குழந்தைகளின் கொழுத்த கண்ணங்களின் வாயோரத்தில் ஏதேனும் தொடுவுணர்வு ஏற்பட்டவுடன் அவர்களின் வாயினைக் கோணி அப்பக்கமாகத் திறந்து நாவினை நீட்டி மெல்ல காம்பனைத் தேடத் துவங்கிவிடுவார்கள். இதுவொரு அனிச்சை செயல்தான். இதனால் தான் குழந்தைகளின் கண்ணங்களை நாம் கிள்ளினால்கூட அவர்களின் உதட்டைச் சுழித்து நாம் கிள்ளிய பக்கமாக முகத்தைத் திருப்பி காம்பிற்காக வாயினை அகலத் திறந்து விரலைச் சவைக்கத் துவங்குகிறார்கள். இப்படித்தான் குழந்தையும் காம்பைத் தேடி பாலருந்தத் துவங்கவும் செய்கிறார்கள்.


Breastfeeding River of Life Part – ΙΙ : Series 10 – Dr. Itankar Bhavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 10 – டாக்டர் இடங்கர் பாவலன்

இத்தகைய அனிச்சை செயலானது முழுக்க முழுக்க பச்சிளம் குழந்தைகளுக்கானது என்பதால் அவர்கள் பிறந்த நான்காவது மாதத்திலே இந்த அனிச்சை உணர்வானது மறைந்துவிடும் அல்லது குழந்தைக்கு மறந்துவிடும். ஏனென்றால் நான்காவது மாதத்தில் குழந்தைக்கு கழுத்து நின்று, தலை திருப்பி அவர்களாகவே பாலருந்தத் தேவையான திறமையை வளர்த்துக் கொள்வதால் அதுவரைக்கும் இத்தகைய அனிச்சை செயல் அவர்களுக்கு உணவைத் தேடியலைகிற உந்துசக்தியை அளித்து ஊட்டம் பெற்று ஜீவிப்பதற்கான வழியினைக் காட்டுகிறது.

இதனால் தான் குழந்தைகளின் பசியைத் தூண்டுவதற்கு, பாலூட்டக் குழந்தையை எழுப்புவதற்கு, பாலூட்டும் முன்பே பிள்ளையைத் தயார்படுத்துவதற்கு என்று சில சமயங்களில் தாய்மார்கள் தங்களை அறியாமலேயே வாயின் ஓரத்தில் தங்கள் மென்மையான விரல்களால் தடவிக் கொடுத்து அவர்களின் பசியைத் தூண்டுவதையே விளையாட்டாய் செய்கிறார்கள்.

சவைக்கும் அனிச்சை செயல்-(Sucking Reflex)

உதட்டோரக் கண்ணங்களில் காம்பின் தொடுவுணர்வு ஏற்பட்டு அவர்கள் வாயினை அகலத் திறந்தவுடன் காம்பினைக் கவ்விக் கொண்டு அதனைச் சவைப்பதற்கென அனிச்சைச் செயல் தூண்டலாகி பாலருந்திக் கொள்ள பிள்ளைகளும் சவைக்கத் துவங்கிவிடுவார்கள். பாலருந்தக் காம்பினைச் சவைப்பதென்பது குழந்தைகளுக்கு தனியொரு கலை. நாவின் நுனியை காம்பைச் சுற்றிய கருப்பு ஏரியோலாவின் அடிப்பகுதியில் வைத்து தனது மேல் அண்ணத்திற்கும் ஏரியோலாவிற்கும் இடையே அலை போல நாவை முன்னும் பின்னுமாக அசைத்து பாலினை அவர்களே கரந்து கொள்கிறார்கள்.


Breastfeeding River of Life Part – ΙΙ : Series 10 – Dr. Itankar Bhavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 10 – டாக்டர் இடங்கர் பாவலன்

இதனால்தான் குழந்தைகள் காம்பைப் போலிருக்கிற நம் விரல் நுனியை வாயில் வைத்தவுடன் அவர்களுக்கே உரிய சவைக்கும் அனிச்சை செயலினால் வலுவோடு சவைக்கத் துவங்கிவிடுகிறார்கள். அதேசமயம் அவர்களுக்குப் பற்கள் முளைத்து காம்பைக் கவ்விச் சுவைக்கும் போதும்கூட அம்மாவிற்கு வலிக்காமல் பாலைக் குடிப்பதற்கான எல்லா நுட்பங்களையும் அவர்கள் துரிதகதியில் வளர்த்துக் கொள்கிறார்கள். பூவிற்கே வலிக்காமல் தேனருந்துகிற தேன்சிட்டைப் போலொரு அனுபவத்தை அவர்கள் எப்படியோ போகிற போக்கிலே கற்றுக் கொண்டு அதிலே தேறியும்விடுகிறார்கள்.

மேலும் நாவின் நுனையைப் பாலருந்தப் பயன்படுத்துகிற காரணத்தினால் சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே அடிநாக்கு ஒட்டியிருக்கும் பிரச்சனையிருக்கையில் அவர்களால் பாலருந்த முடியாமல் போய்விடுகிறது. தாய்மார்களாகிய நாமேகூட பிறந்தவுடன் பிள்ளைகளால் நாவினை வெளியே நீட்ட முடிகிறதா அல்லது உதடுபிளவு, அண்ணப்பிளவு போன்ற குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என்பதை பாலூட்டுகிற நிகழ்வின் ஒருபகுதியாக பரிசோதித்தும் கொள்ளலாம்.

இன்னும் கூடுதலாக காம்பைச் சுற்றிய ஏரியோலாவில் நாவைச் சுழற்றி பாலருந்துகிற பழக்கத்தினால் நாம் ஏதோவொரு தருணத்தில் புட்டிப்பாலினைக் கொடுக்கும் போது மார்பைப் போலவே குடிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் செயற்கையான காம்பில் அவர்கள் நாவைச் சுழற்றி பாலருந்த வேண்டிய கட்டாயமின்றி குடிப்பதற்குப் பழகிக் கொண்ட பின்பாக மீண்டும் நம் மார்பிலிடுகையில் காம்பைக் கவ்விச் சுவைக்கிற அனிச்சை செயலில் குழப்பம் ஏற்பட்டு மார்பில் குடிப்பதையே அவர்கள் தவிர்க்கத் துவங்கிவிடுவார்கள். இதனால் தான் புட்டிப்பாலையே கொடுக்க வேண்டாம் என்றும், பிள்ளைகள் விளையாடுவதற்கென செயற்கை நிப்பிளை வாயில் வைத்து அழாமலிருக்கச் செய்ய வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

விழுங்குகிற அனிச்சை செயல்-(Swallowing Reflex)

பிள்ளைகள் காம்பைத் தேடி சரியாகக் கவ்விப் பிடித்து சவைத்தவுடனே பாலும் வாயிற்குள் வந்து நிறைந்துவிடுகிறது அல்லவா! உடனே அதனை தொண்டைக் குழிக்குள் தள்ளுவதற்கான விழுங்குகிற அனிச்சை செயலும் அப்போதே வந்துவிடுகிறது. இதனால் வாயில் பால் நிறைகின்ற போதே அதை விழுங்கி உணவுக்குழாய் வழியே இரைப்பையிற்கு கொண்டு செல்கிற இயக்கமும் துவங்கிவிடுகின்றது.

பொதுவாக இவ்வுணர்வானது குழந்தைகள் எட்டு மாத கருவளர்ச்சியைப் பூர்த்தி செய்திருக்கும் போது படிப்படியாக உருவாகி, அது ஒன்பதாவது மாத நிறைவில்தான் முழுவதுமாக பூர்த்தியடையவே செய்கிறது. இதனால் தான் குறைபிரசவமாய் முப்பத்தியாறு வாரத்திற்கு முன்பே பிறக்கிற குழந்தைகளுக்கு பாலினை கவ்விச் சவைப்பது, குடிக்க முடியாமல் திணறுவது உள்ளிட்ட பிரச்சனையால் வாயிலேயே பால் தங்கி புரையேறுவதற்கு ஏற்ப வாய்ப்பாகிவிடுகிறது. ஆகையால் தான் குறைபிரசவ குழந்தைகளுக்கு குறிப்பிட்ட காலம் வரையிலும் பாலாடை அல்லது ஸ்பூன் வழியே பாலூட்டுவதற்கு மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

ஆக, குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கிற இத்தகைய உணவுத் தேடல் தொடர்பான தன்னுணர்வும் அனிச்சை செயலும் இருக்கின்ற போது தாய்மார்களாகிய நாம் எந்தக் கவலையுமின்றி, பதட்டமுமின்றி வெகு இயல்பாக பாலூட்ட முடியும் தானே!

– டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 8 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -5
நாமும் புத்தனாவோம்..!

நீங்கள் புத்தனைப் பார்த்திருக்கிறீர்களா? அவன் ஆழ்தியான நித்திரை நிலையில் தன்னை மறந்து தியானிக்கிற போது எதைப் பற்றியேனும் சிந்திக்கிறானா, சிரிக்கிறானா அல்லது இவ்வுலகை எண்ணி வருத்தம் கொள்கிறானா என்பதைப் பற்றிய எதையும் நாம் அவனது முகபாவணையிலிருந்து அறிந்து கொள்ள முடியாது. அவனது சிரிப்புகூட இன்றுவரையிலுமே ஒரு மகோன்னதப் புன்னகைதான். அந்தச் சிரிப்பு தான் அவனது ஞானம் எனத் தோன்றுமளவிற்கு அதிலொரு மயக்கம் தொற்றிக் கொண்டேயிருக்கும். அப்படியொரு புத்தநிலையில் தான் அம்மாக்களும் தாய்ப்பாலூட்ட வேண்டியிருக்கும்.

தாய்மார்களே! நாம் புத்தனைப் போலவே அக்கணத்தில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பிரசவித்த களைப்பைப் பற்றி ஏதும் எண்ணாமல், தாய்ப்பால் சுரப்பது பற்றிய கவலையேதும் கொள்ளாமல் அக்கணத்தில் பிள்ளைக்குப் பாலூட்டுவதை மட்டுமே மனதில் இருத்திக் கொண்டு பாலூட்ட வேண்டும். தன் ஆழ்மனம் கண்டடைந்துவிட்ட தன்னிறைவை உணர்ந்த புத்தன் அதன் பரிபூரணத்தை முகத்திலே கொணர்ந்து ஒளிவீசிடும் புன்னகையின் பொழிவை உதட்டில் தவழவிடுவதைப் போல, நாமும் அடிவயிற்றிலிருந்து நிறைவாய் பிறந்துவிட்ட பாலகனின் பிரசவித்த சுகந்தத்தை வெளிக் கொணர்ந்து பெருமகிழ்ச்சியோடு நாம் பாலூட்ட வேண்டும்.

புத்தனின் தியானநிலை என்றவுடனே துயில் கொள்ளும் நிலையை எண்ணிப் பார்க்கும் நமக்கு அதுதான் உச்சகட்ட விழிப்புநிலை என்று விளங்குவதில்லை. உள்ளுக்குள் அலைக்கழிக்கும் குழப்பங்களின் கசடுகளையெல்லாம் அகற்றிவிட்டு அலையில்லா பேரமைதி பொங்கும் நடுகடலின் நித்தியத்துவத்தை அடைய நாம் முயற்சிக்க வேண்டும். அத்தகைய விழிப்புநிலையில் தான் பிள்ளைக்குப் பசியையும், பசியமர்த்திய தன்னிறைவையும் நமது உடலிலும், பிள்ளையின் அங்க அசைவுகளிலும் நாம் கண்டடைய முடியும். இவ்விதத்தில் நாம் பரிபூரணமாய் பாலூட்டுகிற போது நம் உடலைப் பற்றிய எவ்வித பிரஞ்சையுமின்றி ஒரு இறகின் இலகுவைப் போல உணர முடியும். பறக்கும் வயதையொத்த குஞ்சுக்கு பறத்தலின் அற்புதங்களையெல்லாம் தாய்ப்பறவை பறக்காட்டும் பெருமிதத்தைப் போல நாமும் உடலின் அசமந்தத்தை மறந்துவிட்டு அதன் வாதைகளைக் கடந்துவிட்டு ஆத்மநிலையிலே பாலூட்ட வேண்டும்.

பாலூட்டுகிற ஆத்மார்த்த நிலையிலிருக்க வேண்டுமென்றால் அமர்ந்து சம்மணமிட்ட இருப்பிலா அல்லது சயன நிலையிலிருந்தா என்கிற குழப்பமெல்லாம் ஒருவிதத்தில் நமக்குள்ளே வந்துவிடுகிறது. இதை இன்னும்கூட எளிமையாகப் புரிந்து கொள்வதென்றால், தாயவள் சாய்வாக்கில் சம்மணமிட்ட நிலையில் பாலூட்ட, நம் பாலகர்களோ சயனநிலையில் மடியிலே கிடந்தபடி மார்பில் பாலருந்தித் துயில் கொள்ள வேண்டியதுதான்.

புத்தனாகிய அன்னை..!

குழந்தைகள் பிறந்தவுடனே நாம் பிரசவ அறையிலிருக்க ஒருசாய்த்துப் படுத்துக் கொள்ளுமாறு செவிலியர் அறிவுறுத்தியபடியே இருக்க, உறவினர்களோ நம் பிள்ளையைத் தூக்கி மார்பருகே வைத்து பாலருந்தச் செய்வார்கள். அப்போது நம் பிள்ளையைத் தூக்கக்கூட திராணியின்றி களைத்துப் போய் பிரசவ மேடையிலே நாம் சயனித்திருப்போம். அச்சமயத்தில் குழந்தையைத் தூக்குவதற்கும், பாலூட்டுவதற்கும் முற்றிலும் நம்மோடு பிரசவத்திற்கு உடனிருந்த உறவினர்களைச் சார்ந்தே அத்தகைய முதல் தாய்ப்பாலூட்டல் நிகழ்வானது இருந்திருக்கும். ஆனால் பிரசவத்திற்குப் பின்பாக வார்டுக்கு வந்தவுடனே கொஞ்சம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தாய்ப்பால் புகட்ட வேண்டியிருப்பதால் பிள்ளையை எப்படித் தூக்குவது, அவர்களுக்குப் பாலுட்ட எப்படி தங்களை இலகுவாக அமர்த்திக் கொள்வது என்பது உள்ளிட்ட நுட்பங்களையெல்லாம் நாம் மெல்ல மெல்ல பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பிள்ளை பெற்றவளின் அடிவயிறு மெலிதான உப்பலுடன் அடங்கிப் போய், கடந்த பத்துமாதங்களும் உறுமலுடன் இருந்த கர்ப்பப்பை அப்போதுதான் தூக்கநிலைக்குச் செல்லவே துவங்கியிருக்கும். கர்ப்பப்பையும் தான் கடந்த காலங்களில் எவ்வளவு கஷ்டங்களைப் பார்த்திருக்கும்? எத்தகைய சிரமங்களைக் கடந்து வந்திருக்கும்? இத்தகைய பிள்ளையை அரும்பாடுபட்டு பிரசவிப்பதற்கு வயதிற்கு வந்த தருணத்திலிருந்து மாதாமாதம் கருமுட்டையைத் தாங்கியிருந்து, அதனது விந்தணுக்கள் வராத போது அதை கழித்துக் கொட்டிவிட்டு, ஒருவழியாக இப்போதுதான் பிள்ளையும் பெற்றெடுத்துக் கொடுத்துவிட்டு துயில் கொள்ளப் போகிறது. ஒருவகையில் கர்ப்பப்பையும்கூட புத்தன் தானோ என்னவோ!

ஆக, பாலூட்டத் துவங்குகையில் இனிமேலும் அடிவயிற்றை தொந்தரவு செய்யாத வண்ணம் மேல்வயிற்றிலே போட்டு பிள்ளைக்குப் பாலூட்ட வேண்டியதிருக்கும். எனவே தான் களைப்புற்ற கர்ப்பப்பைக்கு எவ்வித அசௌகரியத்தையும் தராமல், பாலருந்த முண்டுகிற பாலகனுக்கு எவ்வித அசிரத்தையும் அளிக்காமல் தாய்ப்பால் புகட்டுவதற்கு நாம் அமர்ந்த நிலையில் புகட்டுவது தான் சரியானதாக இருக்கும். மருத்துவமனைப் படுக்கையில் நம் பிள்ளையைப் பிரசவிப்பதற்கு இளகிக் கொடுத்து நிலைகுலைந்து போயிருக்கிற தண்டுவடத்தையும் நாம் இப்போது கவனத்தில் கொள்ள வேண்டும். முதுகுப்புறமாக இளஞ்சூட்டில் சுடுதண்ணீரை வெதுவெதுப்பாக முதுகில் ஊற்றி ஆற்றுப்படுத்துவது மட்டுமே போதாது தாய்மார்களே! பாலூட்டுகையில் முதுகிற்கும் ஆசுவாசமாக தலையணைகளை வைத்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் இப்போதுதான் பாலூட்டுவதற்கென்றே தனியே தலையணைகள் கிடைக்கின்றதே! அதனை முதுகிற்கு அடை கொடுத்தபடி, அதேசமயம் சற்று பின்னோக்கிய வாக்கில் சாய்மானமாக அமர்ந்து கொண்டு தாய்ப்பாலூட்டுவதை நாமும் துவக்கலாமே!

முதலில் பாலூட்டத் துவங்கும் போது உடலை இறுக்கமாக இல்லாமல் தளர்த்திக் கொண்டு, அதேசமயம் மனதையும் இலகுவாக வைத்துக் கொண்டு அமைதியான நிலையில் முழுமகிழ்ச்சியோடு பாலூட்டத் துவங்கலாம். முதுகை பாதுகாப்பாய் வைத்துக் கொள்கிற அதேசமயம் தோள்பட்டையின் விரைப்பையும் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வேண்டும். மேலும் நாம் சம்மணமிட்டு அமருகையில் குழந்தையை வாங்கி நம் மடிந்த கால்கள் மீது இருத்திக் கொள்கிற போது அதிகமாக அழுந்திக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு மிருதுவான துணியை மடியில் போட்டு அதிலே குழந்தையைக் கிடத்தியபடி பாலூட்டத் துவங்கலாம்.

ஒருவேளை நாம் இருக்கையில் அமர்ந்து சாய்மானமாக பாலூட்ட வேண்டுமென்றால் கால்கள் அந்தரத்தில் இல்லாதவாறு பாதங்கள் தரையில் படுகிற வாக்கிலிருந்தபடியே வைத்துப் புகட்டலாம். அதேசமயம் குழந்தையைத் தாங்கிக் கொள்கிற தொடைப்பகுதியை நமது இடுப்புப் பகுதியைக் காட்டிலும் சற்று உயரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியும் நம் பிள்ளைகள் மார்பை எட்டிப்பிடித்து பாலருந்துகிற உயரம் குறைவாயிருக்கும் பட்சத்தில் அதற்கேற்ப துணிகளை மடியில் கிடத்தி மார்பிற்கும் குழந்தைக்குமான இடைவெளியைக் குறைத்துக் கொள்ளலாம்.

குழந்தை புத்தன்

குழந்தைகளை பதட்டமில்லாமல் கைகளில் தூக்கிப் பாலூட்டுவது என்பது ஆரம்பத்திலே அது சிரமமாகத்தான் இருக்கும். பிஞ்சுக் கழுத்து நில்லாமல் இளநீர் தேங்காய் போலிருக்கும் தலையைப் பிடித்துக் கொஞ்சம் அழுத்தம் கூடினாலும் காயமாகிவிடுகிற மிருதுவான உடம்பைக் கைத்தாங்களாக மற்றவர் உதவியின்றி தூக்குவது எளிதானது காரணம் ஒன்றுமில்லைதான். ஆனால் இத்தகைய பதட்டங்களையெல்லாம் தூர ஒதுக்கிவிட்டு நம் பிள்ளையென்கிற ஒட்டுதல் உறவோடு தூக்கிப் பழகினால் தானே பிள்ளையை ஆரோக்கியமாக வளர்க்கவே முடியும்?

lift baby.png

ஆக, தரையில் கிடத்தப்பட்டு பசியின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியபடி கைகால்களை அசைத்து மழலை நடனமிட்டுக்கும் கொண்டிருக்கும் அவர்களைத் தூக்குவதற்கு அவர்கள் படுத்திருக்கிற துணியோடு சேர்த்தே அணைத்துத் தூக்க வேண்டியிருக்கும். நம்முடைய எந்தப் பக்கத்தினது மார்பில் பாலூட்டப் போகின்றோமோ அந்தப்புறத்தினது கைகளின் மடிப்புகளில் நாம் தலைவைத்துத் தூங்குவது போன்ற பாவணையில் பிள்ளையின் தலையை, கழுத்தை, தோள்பட்டையை முதுகுப்புறத்தை ஒருசேர இருக்குமாறு கைகளை நுழைத்துக் கொண்டும், இன்னொரு பக்கத்து கையினால் அவர்களின் கால்களை உள்ளே அதக்கியபடி விரல்களை இடுப்பிற்குள் நுழைத்து புட்டத்தை தாங்கியபடியும் தூக்கி மடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தையின் முழுஉடலையுமே சரிசமமாக கைகளில் தாங்கியபடியிருக்க வேண்டியது அவசியம். அவர்கள் உடல் முழுக்க நம் வயிற்றுப் பக்கமாக திரும்பியிருக்குமாறு, அவர்களது தலைப்பக்கம் மார்பைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த நிலையில் தான் குழந்தையின் ஆடையில்லாத தோலும், ஆடை விலக்கப்பட்ட அன்னையின் தோலும் முழுதொடர்பிலே இருக்க முடிகிறது. இதனால் குழந்தையினது உடலின் வெப்பம் சமநிலைப்படுத்தல், நோய் எதிர்ப்புசக்தி விருத்தியாதலென ஏகப்பட்ட ஆரோக்கியத்திற்குரிய விசயங்கள் நடக்கின்றன என்பதைப் பற்றி நாமும் ஏற்கனவே புரிந்து வைத்திருக்கிறோமே!

BFPositions_CradleHold-e1608234364709.png

பொதுவாக தாய்ப்பாலூட்டலைப் பொருத்தவரையில் குழந்தையின் கால் பக்கத்தைவிட தலைப்பகுதி சற்று உயரமான வாக்கில் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் குழந்தையின் காது, தோள்பட்டை, இடுப்புப்பகுதி இவையனைத்தும் ஒரேநேர்கோட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் தலையை மட்டும் உள்ளங்கையில் தாங்கிப் பிடிக்காமல் அவர்களை கைமடிப்பு மேலே வாகுவாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் கழுத்துப் பகுதி இம்மியும் திரும்பியிறாதவாறு சற்று அண்ணாந்த நிலையிலேயே இருக்க வேண்டும். இதனால் பாலருந்தும் பிள்ளையின் வாயில் நிறைந்து நிற்கும் பாலானது உடனே இரைப்பைக்குள் இறங்கி அவர்களுக்கு புரையேறி மூச்சுத்திணறல் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிப்பதற்கு ஏதுவாகிறது.

மார்பகத்தை தயார்படுத்துதல்

இப்போது நாமும் பாலூட்ட அமர்ந்தாயிற்று, பிள்ளையும் மடியில் கிடத்தியாயிற்று. அடுத்ததாக குழந்தையின் வாயினை மார்பிலே பொருத்த வேண்டுமல்லவா! இது எளிதானதுதான் என்றாலும்கூட அதிலும் நாம் கவனிக்கத் தவறுகிற, முக்கியமாக கையாள வேண்டிய சமாச்சாரங்கள் இருக்கவே செய்கின்றன, தாய்மார்களே!

Breast-C-and-U-Hold-Nov-2017-copy.jpg

பிள்ளைகள் எளிதாக பாலருந்துவதற்கு வசதியாக நாம் ஒருகையில் குழந்தையைக் கிடத்தியே தாங்கிப் பிடித்திருப்போம் அல்லவா! அதேசமயத்தில் மறுகையினால் மார்பைப் பிடித்து பாலூட்டுவதற்கு ஏதுவாக குழந்தைக்கு ஒத்துளைக்க வேண்டியதிருக்கும். இதற்கு நம் கைகளை காம்பிலிருந்தும், கருப்பு வளையமான ஏரியோலாவிலிருந்தும் கொஞ்சம் தள்ளிய தூரத்தில் காப்பித் தம்ளரை பிடிக்கிற வாக்கில் பக்கவாட்டிலிருந்து பிடித்துக் கொள்ள வேண்டும். இதை ஆங்கில எழுத்து C வடிவில் மார்பை பிடித்தல் என்று சொல்லுகிறார்கள். அப்போது கைகளின் கட்டைவிரலை மேலே பார்த்த வண்ணமும் மற்ற விரல்களை மார்பக அடிப்பகுதியிலும் இருக்குமாறு இலகுவாக பிடித்துக் கொள்ள வேண்டும். மேலும் மார்பை இறுக்கமாக அல்லாமல் கொஞ்சம் தளர்வாகவே பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். ஆங்கிலத்தில் U வடிவ வசம் கொள்வதை சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்கள் பாலூட்டுவதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இத்தகைய நிலையில் பிடித்துக் கொண்டிருக்கும் போதே சிலசமயத்தில் பால் மெல்ல கசிந்து வரத்துவங்கும். இதுவும் நல்லதிற்குத் தானே! தாய்ப்பாலூட்டலில் எப்போதும் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால் குழந்தைக்கு மார்பு எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக குனியவோ, மார்பை இழுக்கச் செய்யவோ கூடாது. மார்பை இயல்பாக எப்படி இருக்க முடியுமோ அப்படியே விட வேண்டியதுதான். மற்றபடி குழந்தையைத் தான் நம் மார்பை நோக்கி அணைத்தபடி நகர்த்த வேண்டியிருக்கும். இப்போது குழந்தையும் மார்பிற்கு அருகாமையில் வந்தவுடன் அவசரப்படாமல் சற்று நிதானமாக பால் வாசம் கமழுகிற காம்பினை குழந்தையின் உதட்டிலும், உதட்டினது கடைவாய் ஓரத்திலும் மெல்ல உரசிப் பார்க்க வேண்டும். அவர்களாக வாயினைத் திறக்கிற வரையிலும் நாம் பொறுத்திருக்க வேண்டும். அப்படியும் இல்லாவிட்டால் மார்பிலிருந்து பாலை வெளியேற்றி பிள்ளையின் உதட்டிலும் காம்பிலும் தடவிவிடுவதன் வழியே பாலூட்டுவதைத் தூண்டச் செய்யலாம்.Attach 2 474.jpg

இச்செயலினால் தூண்டப்படுகிற குழந்தைகள் பால் வாசத்தை நுகர்ந்து, நாவை நீட்டி மார்புத் தோலையும் காம்பையும் சவைத்துப் பார்த்து மெல்ல மெல்ல வாயினை அகலத் திறப்பார்கள். அச்சமயத்தில் நாம் மார்பை ஒருவாக்கில் பிடித்திருந்தோம் அல்லவா! அத்தகைய பிடியில் கட்டைவிரலை மெல்ல அழுத்தியும் அடியில் பிடித்திருக்கிற  விரல்களால் மார்பை கொஞ்சம் தூக்கியபடியும் பிடித்துக் கொள்ளுகிற போது மார்புக்காம்பு குழந்தையின் மேலுதட்டை நோக்கி அதாவது மேல் அண்ணத்தை நோக்கியபடி இருக்கும். இப்படிப் பொருத்தமான நிலையில் மார்பை உள்ளே நுழைக்கிற போது குழந்தைகள் காம்பினை மட்டுமல்லாது காம்போடு சேர்ந்த ஏரியோலாவின் ஏனைய பகுதியையும் உள்ளடக்கியபடி வாயிற்குள் அனுமதித்திக் கொள்ளும்.

நாம் தாய்ப்பாலூட்டுகிற போது குழந்தையின் வாய்ப்பகுதி மார்போடு சரியாகப் பொருந்தியிருந்தால் மட்டும்தான் பிள்ளைக்கு முழுவதுமாக தாய்ப்பாலே கிடைக்கும். இதற்கு குழந்தையின் வாய்ப்பகுதி நன்கு அகலத் திறந்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் தானே பால்பைகள் வந்து திறக்கிற கருமைநிற ஏரியோலாவின் பகுதியும் வாய்க்குள்ளாக செல்ல முடியும். அதேசமயம் ஏரியோலாவின் கீழ்பகுதி முழுவதுமாக வாய்ப்பகுதிக்குள் தான் இருக்க வேண்டும். அதன் மேல் பக்கம் வேண்டுமானால் கொஞ்சம் தெரியலாமே தவிர, கீழ்பகுதியானது முழுக்க வாய்க்குள் உள்வாங்கியபடியிருக்க வேண்டும். அச்சமயத்தில் குழந்தையின் கீழுதடு பிதுங்கி வெளித்தள்ளியபடி இருப்பதும் அவசியம். தாடைப்பகுதி மார்பைத் தொட்டபடியும், முக்குப் பகுதியானது மார்பிலிருந்து சற்றே விலகியிருந்து மூச்சுவிடுவதற்கு சிரமமில்லாதவாறு இருக்குமாறும் கவனித்துக் கொள்வது மிக முக்கியமானது.

infantatbreastdiagramtounge.jpg

இப்படியான நிலையில்தான் குழந்தையின் கீழ்தாடையோடு இணைந்த நாக்கு ஏரியோலாவின் கீழ்பகுதியின் மேல் ஊர்ந்து சென்று அதனை மேல் அண்ணத்தோடு அழுத்தியபடி பாலினை வாயிற்குள் கறக்க முடிகிறது. நாம் பழச்சாற்றை உறிஞ்சுகுழாயில் குடிப்பதைப் போல ஒன்றும் நம் காம்பில் உறிஞ்சுபதில்லை, பிள்ளைகள். முதலில் நாம் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தாய்மார்களே! நாவின் முன்பின் அசைவுகள் காம்பைச் சுற்றியிருக்கிற ஏரியோலாவினை மேல் அண்ணத்தோடு அழுத்தும் போது ஏரியோலாவின் அடியில் இருக்கிற பால்பைகள் திறந்து பாலினை வாயிற்குள் கொட்டியபடி பாலபிஷேகம் செய்கின்றன. இப்படியாக பாலூட்டுகிற போது தாய்ப்பால் குழந்தையின் வாயிற்குள் கறந்து பசியைற்றும் வேலையைச் செய்கின்றன.

ஆக, இப்போது நாம் தாய்ப்பாலூட்டவதற்கான தியானநிலையைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டோம் அல்லவா! அடுத்த பாடத்தில் நம் பிள்ளைகள் சரியாகப் பாலருந்துவதை எப்படிக் கண்காணிப்பது என்பதைப் பற்றியும் பார்த்துவிடுவோமே!

-டாக்டர் இடங்கர் பாவலன்