ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “ஓணம் பண்டிகை: பௌத்தப் பண்பாட்டு வரலாறு” – இரா.இயேசுதாஸ்
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அரசியல் சிந்தனையாளர் புத்தர் – தேனிசீருடையான்
ஒட்டு போட்ட கால்சட்டையும் உயரத்தில் பறக்கும் தேசியக் கொடியும் கவிதை – கவிஞர் சே கார்கவி
1
உணவைத் தேடி அலையும் பொழுது இல்லை, மனிதர்களையும்
நல்ல மனங்களையும் தேடி அலையும் கடின வேளைகளில்….
2
சக்திமிகுந்த தெய்வமென
கோவிலின் கற்பக்கிரகத்தைப்
பார்த்து கையெடுத்து
வணங்கிய குழுந்தைக்கு
அன்னையை விட
ரொம்ப அழகாக தெரிந்துவிடவில்லை
இருளில்
சிலையாக அமர்ந்த
அம்மனின் அமர்வு…
3
வீட்டில் அமர்ந்தபடியே
கொட்டும் மழையில்
நனைய விரும்பினேன்
அவசர அவசரமாக
மழையைப் பற்றி கவிதை எழுத
ஆரம்பித்துவிட்டேன்…..
4
கழுத்தணைத்து
தலை கோதி
இடையமர்ந்து
தோளேற்றி
அப்படியே
துயில் கொள்ளும்
தேவதையைத்தான்
மகளென்பார்களோ
தாயுமகளென்பார்களோ
தத்தக்கா புத்தக்கா
தடுக்கல்களில்
இதோ
தேடலில் ஓர்
பட்டாம்பூச்சி…
5
பதப்படுத்தப்பட்ட
மண்ணின் ஆசைதான்
பழங்கள் குலுங்கும்
விதையை எச்சமிடச் செய்தது…
சரியாகத்தான்
அமர்ந்துவிட்டான் புத்தன்
ஆசை இல்லையென
ஞானத்தை வழங்கத் தயாராக
இந்த இலையுதிர்க்கும்
போதிமரங்களின் நிழலில்….
6
பிறப்பைப் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது
காது கிழிய கூக்குரலிடுகிறது
நேற்று வீசிய மா விதையின் அருகே குழந்தை
7
காலங்களுக்குப் பின்னே
கடிவாளங்களும் உள்ளன
கரைகின்ற நொடிகளுக்கு
யாராலும் பூட்டிட இயலாது
அவசரமாக
உணவு தேடியும்
இணைதேடியும்
செல்கின்ற அணிலுக்கு
அகல விரிந்து
காத்திருக்கின்றன
காலக்கண்கள்……!
8
சாயங்களை பூசிக்கொள்கிறேன்
முகமூடி வழங்குகிறது
குழந்தை
முகமுடி அணிந்து கொண்டேன்
புன்னகைக்கச் சொல்கிறது
வாழ்க்கை
பயணிக்கத்தொடர்கிறேன்
சாயங்களின் வடிவில்
ஓர் கற்றை நூலால் கட்டிய பாதைகளில்……
9
செருப்பு தைக்கும் தொழிலாளி
ஒருபோதும்
நிமிர்ந்து பார்த்ததில்லை
உயரமெனப்படுபவை அனைத்தும்
இவன் காலடியிலே
கிடக்கின்றன என்பதால்….
10
ஒரு போதும்
உனக்கு பிடித்ததை மறைத்து வைக்காதே
பட்டாம்பூச்சிகள்
பூவிற்கு பிடித்தமாதிரியும்
தேனை
உண்டு மகிழும்…
11
நடனமாடிய பின்பு
காலில் வலியையும்
கைத்தட்டல்களில் ஏற்பட்ட குறையையும்
வெற்றி ஒருபோதும் பார்த்ததில்லை
புன்னைகைக்கு வெற்றி தானே புன்னகையால் மகுடம் சூடும்…..
12
சிறகு
சிறியதோ
பெரியதோ
ஆசைகளைக் கற்றைகளாக
கொண்ட நேரத்தில்
தானாகவே முளைத்துவிடுகிறது
காற்றே இல்லாத இடத்தில்
பறவையாய் மனங்கள்
என்ன
கால்களும் கைகளும.
கூடுதலாக முளைத்துவிடுகின்றன….
13
எட்டாம் வகுப்பில்
புட்டங்களில் ஒட்டுகள் போட்ட கால்சட்டையுடன்
கை உயர்த்தி வணக்கங்கள் செய்கிறேன்
ஒட்டிய வண்ணங்களை கண்டு கொள்ளாமலே
பறக்கிறது
எல்லோர் மத்தியிலும் சுதந்திரக் கொடி
கவிஞர் சே கார்கவி
நாகப்பட்டினம்
(Er.Prof.சே கார்த்திகேயன்.ME)
SWD.Chennai
கவிஞர் ச.சக்தியின் கவிதைகள்
நாங்கள்
மனிதர்கள் தானா….!!!!
*****************************
மாடி கட்டிடம்
மல்லாக்க
படுத்துக்கொண்டு
குடிசையை
பார்த்துச் சிரிக்கிறது
குடிசையில்
வாழ்பவர்களெல்லாம்
மனிதர்கள்
இல்லையென்று
சொல்லிக்கொண்டு
வெயில்
காலத்தில்
காய்ந்து போன
எங்களின்
குரவலைக்கு
நீரை ஊற்றுகிறது
மழை காலத்தில்
குடிநீரோடு கழிவு நீரும்
சாக்கடை நீரும் கலந்தவாறே,
நமுத்துப்
போன அரிசியையும்
கிழிந்து
போன போர்வையையும்
தருகிறார்கள்
கதர் வேட்டிக் கந்தசாமிகள்,
நீ இங்கேயே இரு,
இங்கே
இருந்து மடிந்து
போயென்று
மனதுக்குள்ளே வாயை வளர்த்து
சொல்லிக் கொண்டே ,
கொடுத்த அரிசியும்
போர்வையும்
நாம் வாழ்வதற்கு அல்ல
நாளை நாம்
இறந்து போனால்
தலைமாட்டில்
வைத்துப் படைப்பதற்கு,
பாம்பு,
பூரான், பல்லி
போன்றவற்றிற்கு
அடைக்கலம்
கொடுக்கின்றன
எங்கள் குடிசைகள்,
நீங்கள்
கொடுத்த
தேர்தல் வாக்குறுதிச் சொற்களை
பேப்பர்களில் எழுதி
காகிதக் கப்பலாக
செய்து மழைநீரில்
ஓட்டுகிறோம்
மூழ்கிப்போன
உங்கள் ஊழல் ஊராட்சியின் எதிரே,
தெருவெள்ளாம்
மழைநீர்
மழைநீரில்
மிதக்கிறது குடிசைகள், குடிசையிலிருந்து
எட்டி பார்க்கிறது
மழைநீரில்
அடித்து வரப்பட்ட பாம்பொன்று
காலில் விழுந்து
வாக்கு கேட்டவர்கள்
சிவப்பு நிற
காரில் ஏறிச் செல்கிறார்கள் ,
சாலையெங்கும்
பீ நாற்றங்கள்
நீர் கட்டித்தருவோம்
யென்று சொன்ன
பொது கழிப்பிடங்கள் இதுதானே ?
கொஞ்சம்
திரும்பி பாருங்களேன்
நாங்களும்
மனிதர்கள் தான்,
இதய விளக்கு…..!!!!
***********************
“நீ இல்லாத
இந்த குடிசைக்காரனின்
வீட்டில் இதயமாக
எறிந்து கொண்டிருக்கிறது
உனது நினைவலைகள் ”
“விளக்கை ஏற்றி
வைத்துவிட்டு
ஏன் இருட்டினில்
ஒளிந்து கொண்டிருக்கிறாய்
வா நாம் சேர்ந்தே எறிவோம்
வெளிச்சமும் இருட்டுமாக ”
“இருண்டு
போன குடிசைக்காரனின்
குடிசையில் தீபமாக
எறிந்து கொண்டிருக்கிறது
வெடித்து சிதறாத
உனது நினைவலைகளை
சுமந்த மண்சுவர்களாகிய
மனமெனும் மண் ”
“சுட்ட
மண்ணில் சுடப்பட்ட
அகல்விளக்கு
திரிகளென்னும்
தூண்டுதலால் எரிகிறது
வீடெங்கும்
காற்றுப்பைகளில்
அடைக்கப்பட்ட
உனது நினைவுகளை சுமந்தவாறு ”
“எறிந்து முடிந்த
என் எலும்பு குச்சிகளை
மீண்டும் உடலோடு
ஒட்டி வைத்து
நீ கொடுத்த விளக்கை ஏற்றுகிறேன் மீண்டும் எரிகிறது குடிசை ”
தீப்பெட்டியை
கடண்கேட்டு
நிற்கிற்கும்
பக்கத்துவீட்டு பாட்டிக்கு
எறிந்து கொண்டிருந்த
எலும்பு குச்சிகளை கொடுத்தனுப்புகிறேன்
அவளோ பெரிய மாடி வீட்டில்
வாடகைக்கு வாழ்கிறாள் ,
குடிசை…..!!!!!
****************
அந்த கடைசி
தெருவில் தான்
என் வீடு இன்னுமும் இருக்கு
ஆனால் வீடு
என்றொரு பெயரை
மட்டுமே தான்
அது தாங்கிக்கொண்டிருக்கு ,
நினைவலைகள்….!!!!!!
**************************
நேற்றைய கனவில்
அப்பா வந்து சிறிது நேரம் உரையாற்றியாற்றி
விட்டு சென்றார்
திடுக்கிட்டு எழுந்து
கண்ட கனவிலிருந்து
வெளியேறி
அங்கும் இங்குமாக
மனதின் கண்களால்
நோட்டமிட்டவாறு
சுவற்றை பார்க்கிறேன்
ஆணியால் அறையப்பட்டு
தொங்கவிடப்பட்டிருந்தது
அப்பாவின்
பழைய புகைப்படம்,
தீ….!!!!
********
ஒடுக்கப்பட்ட
தொழிலாளர்களின்
வயிற்றில் வேள்வி தீயை
மூட்டிகிறார்கள் முதலாளிகள்,
அவன் வீட்டு
கழிப்பறைகள்
எங்களது
வேர்வை துளிகளால் சுத்தமாகிறது,
அப்போது
வெந்து மடிந்தோம் வெண்மணியில்
இப்பொழுதும்
வெந்து மடிகிறோம்
மலக்குழியில்
நீங்கள்
கழித்த மலங்கள்
மன மனக்கிறது
எங்களது கைகளில்,
தண்டவாள பாதையெங்கும்
தலையில்லா
முன்டங்கலாக
எங்களது பிணங்கள்……..!!!!!!
“””நீங்கள்
நீங்கலாக இருக்கும்வரை
நாங்கள்
நாய்களாதான் இருக்க முடியும்;
அறிவு சூரியன்…..!!!!
************************
சேறும் சகதியும்
சுவரை அழுக்காக்கலாம்
சூரியனை
அழுக்காக்க முடியுமா….?
அழுக்குப்படுத்த
முடியாத
அறிவுச் சூரியன்
அண்ணல் அம்பேத்கர்
அவர்கள் அவரே ,
உலக சூரியன்
கிழக்கிலிருந்து பிறக்கிறான்
உழைக்கும்
மக்களுக்கான
சூரியன் மேற்கிலிருந்து
பிறக்கிறான்,
சூரியனை
சுற்றியே பல கோள்கள்
எங்கள் அறிவு
சூரியனை
சுற்றியே பல உலக நாடுகள்,
நீங்கள்
ஆயுதங்களோடு
போரிட்டுக் கொண்டிருந்த
போது தன்
அறிவாயுதத்தால்
போரிட்டு வெற்றி கண்டவர்,
அவர்
அவர்களுக்கானவர் அல்ல
எல்லோருக்குமானவர்
அறிவை நம்பியவர்,
அகிலத்தை ஆள்பவர்,
காதல்….!!!!
*************
பனிக்கட்டியாக கரைந்து
உருகி பனியாறாய்
ஓடிக் கொண்டிருக்கிறது
அவனின் நினைவு,
நினைவிலே வருபவன்
கனவில் கூட நெருங்கி
வர மறுக்கிறான் வயதெனும்
பாத்திரமாக நீ இருப்பதால்,
மந்திரம் தந்திரமாக
தனக்குள்ளே அவனை
வரவழைக்க முயற்சிக்கிறாள்
மூக்கணாங்கயிறை கையுறையிலே
வைத்து அலைபவள்
இச்சையெனும் பச்சைக் கொடியை
உடல் முழுவதும் பூசிக்கொண்டு
அலைந்து திரிபவள்
அலமாரியில் கிடக்கும்
வாசிக்காத புது புத்தகமாய் மினுக்குறாள்,
தனிமையில் வாடிய போது
எனது உடலை யாரே
தீண்டியது போல சில உணர்வுகள்
ஊஞ்சல் கட்டி ஆடியது
மேலாடையாக போர்த்திய
மேகத்துணி காற்றின் வேகத்தால்
களைந்து போய்விடுகிறது
அவன் வருவானா……?
ஊாரடங்கு
எடுத்துக்கொள்வானா …..?
உலக உருண்டை சுழலட்டும்,
அவனின் நினைவுகளை
நான் அசைப்
போட்டுக்கொண்டே இருப்பேன்
வாசலில் கட்டிய
கன்றுக்குட்டியை போல…….!!!!
பேராசான் புத்தன்…..!!!!
****************************
தன் ஆசைகளை துறந்து
போதிமரங்கள் தான் தன் வீடென
கூறிக் கொண்டிருந்த
புத்தனின் சிலையை செதுக்க
ஆரம்பிக்கும் சிற்பியின்
கைகளில் முளைக்க ஆரம்பிக்கிறது
உலகத்திற்கான ஞானம்,
அம்மாவுக்கும்
மகனுக்குமான உறவு …!!!!
******************************
கருவறையின்
முதல் பந்தலில்
ஆரம்பிக்கப்பட்ட உனக்கும் எனக்குமாக தொப்புள் கொடி முடிச்சி கல்லறையின்
கடைசி பந்தலில்
அவிழப்படுகிறது
மரணமெனும் உயிர் புரிதலில்,
பறவையின் நோக்கம்…!!!!!
*******************************
அவைகள்
சிறிய பறவையே
பெரிய பறவையே
அவைகள் எல்லாம்
பறவைகளாக ஆனதே
வானத்தில் பறப்பதற்கு தானே,
மழை…..!!!!
**************
நீ கைநீட்டிய பிறகு தான்
அம்மழையும் மண்ணுக்கு உரமாகிறது
அதில் நான் சிறு பூவாக பூக்கும் துளிராகிறேன்,
மரம் வளர்ப்போம்….!!!!!!
*****************************
வெட்டப்பட்ட மரத்துக்காக
கவிதை ஒன்றை எழுத முற்படும் பொழுதெல்லாம் காகிதமும்
கண்ணீர் விட்டு அழுகிறது
நீ என்
உயிரில் தான்
கவிதை வடிக்கிறாய்யென்று ,
கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986,
நூல் அறிமுகம்: பு.தனிசஷா பாரதியின் புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் – மு.ஆனந்தன்
பொள்ளாச்சி இலக்கிய வட்டச் செயலாளர் கவிஞர் பூபாலன் அவர்களின் புதல்வி வளரிளம் பெண் கவிஞர் பூ.தனிக் ஷா பாரதி அவர்களின் புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் என்ற ஹைக்கூ தொகுப்பை வாசித்தேன். முதல் படைப்பு என்பதற்கான எந்த தடுமாற்றமோ தயக்கமோ இல்லாமல் வந்திருக்கும் தரமான படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
முற்றும் துறந்த முனிவரின்
கமண்டல நீரில்
மீன்களின் நதி…
ஒரு முனிவர் அதுவும் முற்றிலும் துறந்த முனிவர். அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரிடம் அந்த கமண்டலத்தைத் தவிர வேறெதுமில்லை. அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த கமண்டலத்திலும் சிறிதளவு நீரைத் தவிர வேறெதுவும் இல்லை. அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த கமண்டலத்தில் ஒரு நதியை அதுவும் மீன்களின் நதியை அந்த முனிவர் அடைத்து வைத்திருப்பதை தன் கவிக் கண்களால் கண்டடைகிறார் இந்தக் குட்டிக் கவிஞர். எவ்வளவு பெரிய விசயத்தை ஒரு சின்ன ஹைக்கூவில் அடக்கிவிட்டார். அந்த முனிவரைப் போல்.
தொட்டி மீன்கள்
என்றென்றும் நீந்துகின்றன
கடலைச் சேர…
தொட்டி மீன்கள் அடைபட்டிருப்பதாக எதிர்மறையாகப் பார்க்காமல் கடலைச் சென்றடைவதற்காக நீந்துகின்றன என நேர்மறையாகப் பார்க்கிறார். அல்லது அந்தத் தொட்டி மீன்கள் கடலைச் சென்றடைய வேண்டுமென்ற தன் ஆழ்மன ஆசையை வெளிப்படுத்துகிறார். இப்படியான ஆழ்மன ஆசை ஒரு கவிஞனுக்கு மட்டுமே வாய்க்கும். அதுவும் பெண் கவிஞருக்கு. அதுவும் வளரிளம் பெண் கவிஞருக்கு மட்டுமே வாய்க்கும்.
வெண்ணிற மலருக்கு
சாயம் பூசிப் போகும்
பட்டாம்பூச்சி…
வெள்ளைப் பூக்களுக்கு வர்ணம் பூச பட்டாம்பூச்சிகளை அழைத்து வந்த கவிஞரின் பேனா முனையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும்.
கசக்கி வீசிய கதை
விரித்து ரசிக்கிறது
காற்று …
கசங்கிக் கிடக்கும் தாள்களை நாம் வெறுமனே கடந்துதான் செல்கிறோம். அதில் என்னுடைய, உங்களுடைய கவிதைகளோ, கதைகளோ இருக்கலாம்.
ஆனால் நாம் என்றுமே அதை விரித்து வாசிக்க நினைத்ததில்லை. இருக்கட்டும். காற்று அப்படி இருக்காதே. காற்றை வாசிக்க வைத்த கவிஞரின் கற்பனைக்கு தென்றலின் மென்மையை பரிசளிக்கிறேன். இதேபோல் மற்றொரு ஹைக்கூ. இதில் இலைகளின் கதைகளை மழை படிக்கிறது.
மழை தினந்தினம் படிக்கிறது
பழுப்பு இலைகளின்
பசுமைக் கதைகளை…
வாசிப்பு ஆர்வம் குறைந்து வரும் மனிதர்கள் மத்தியில் மழையாவது வாசிக்கட்டுமே.
கனவுகளைத் தாங்கி
பகலெல்லாம் காத்திருக்கிறது
படுக்கை…
என்ற ஹைக்கூ உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. கருப்பொருளிலும் கவியாடலிலும் என்ன ஒரு முதிர்ச்சி.
வீட்டுக் கதவைத் திறந்ததும்
கையை விரித்தபடி
காத்திருக்கும் டெடி பியர்கள்…
இப்படியாகக் கவிஞரின் இளகிய குழந்தை மனது கனமான பெரிய பெரிய சொற்களால் அனைத்துக் கவிதைகளிலும் வெளிப்படுகிறது.
சிரித்த புத்தரின்
மூட்டை நிறைய
சுருண்ட செய்தித் தாள்கள்…
இந்த ஹைக்கு மீண்டும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. ஒன்பதாவது பயிலும் 14 வயதான ஒரு வளரிளம் பருவ வயதுக் கவிஞர் தன் முதல் படைப்பிலேயே இத்துனை தத்துவ வெளிச்சத்துடனும் அழகியலுடனும் கவித்துவத்துடனும் எழுத முடியுமா?. அந்த அரிய பெருமையை அடைந்திருக்கிறார் கவிஞர் தனிக்க்ஷா பாரதி.
நூல் முழுவதும் மனிதத்தின் மீதும், சமூகத்தின் மீதும், இயற்கையின் மீதும், உயிரினங்கள் மீதுமான அக்கறையை தன் நுண்மைகளுடனும் முரண்களுடனும் படிமங்களுடனும் இயல்பாகக் காட்சிப்படுத்திச் செல்கிறார் கவிஞர். கவிஞருக்கு ஒரு கூட்டம் குளிர் மேகப் பொதிகளை வாழ்த்தின் அடையாளமாக பகிர்ந்தளிக்கிறேன்.
வாழ்த்துகளுடன்
மு.ஆனந்தன்.
நூல் : புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் – ஹைக்கூ தொகுப்பு
ஆசிரியர் : பூ.தனிக்க்ஷா பாரதி
விலை : ரூ.70/-
பக்கங்கள் : 88
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்
சன்மானம்
**************
தவில்காரனின் நடைக்கும்
நாயனக்காரனின் ஏற்ற இறக்கத்திற்கும் ஏற்றபடி
பபூனை சோடியிட்டு
குலுங்கி ஆடுகிறாள்
குஜிலியம்பாறை ஆட்டக்காரி
செத்துப்போன சிலுக்குவார்பட்டி மைனர் மாத்திரம்
இந்நேரம் இருந்திருந்தால்
அள்ளி அணைத்து
குத்தியிருப்பார்
ஐநூத்தி ஒன்னு.
அரட்டல்
***********
சென்ற வருடம்
நாண்டுகொண்ட சின்னம்மா
வயதுக்கு வந்த தன் மகளை
அன்றாடம் அரட்டுவதாக
என்னிடம் குமைகிறாள்
அத்தை
அப்புராணி சின்னம்மா
அப்படி அரட்டுவதாயிருந்தால
கூத்தியாள்பேச்சைக்கேட்டு
கொடுமைப்படுத்திய
குடிகார சித்தப்பனை அல்லவா
அரட்டியிருக்கவேண்டும்?
நிழல்
********
வெயிலில் காய்கிறார்
வீரனார்
வீச்சரிவாள் மீது கவிகிறது
வேம்பின் நிழல்
தேஜஸ்
*********
பௌர்ணமி இரவில்
மினுங்கும் அரசிலைகளுக்கு
புத்தனின் தேஜஸ்
கிளை
********
பழங் கட்டிடத்தில் வேர் பிடித்து நிற்கும்
மரமொன்றின் சிறு கிளைக்கு
பறவையொன்றின்
பாதத்தோற்றம்
– ஸ்ரீதர்பாரதி
வசந்ததீபன் கவிதைகள்
இரை
*******
சேம்பிலையில்
நீர்த்துளி உருள்கிறது
தடாகத்தில் மீனொன்று
வாய் திறந்திருக்கிறது
ஆக்ரோசவாதிகள் எல்லாம்
அழகியல்வாதிகள் ஆகி விட்டால்
அகிலமே புல்லரித்துவிடும்
வெந்ததைத் தின்று நடமாடுகின்றன
நடப்பதை வேடிக்கை பார்க்கின்றன
பொம்மைகளல்ல நீங்கள்
புத்தனைப் போல காட்டுக்குப் போகமாட்டோம்
ராமனைப் போல உப்பரிகையில் இருக்கமாட்டோம்
மனிதரோடு மனிதராய் கரங்கோர்த்து திரள்வோம்
பறித்ததைப் பறிப்போம்
இனியும் ஏமாறப் போவதில்லை
படையெடுக்கும் காலம் நெருக்குகிறது
ஐந்து நேரத் தொழுகை தவறமாட்டார்
ஷரியத் சட்டங்களை இறையச்சத்தோடு கடைபிடிப்பார்
வட்டி ஒழுங்காக வசூலாக என்ன வேணாலும் செய்வார்.
ஆராதனைகள் நிற்பதில்லை
பசியோடும் வாழும் பயத்தோடும் கர்த்தரின் குழந்தைகள்
பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது.
சொகுசுக் கார்களில் போதகர்கள்
முண்டியடித்தபடி பஸ்களில் விசுவாசிகள்
கர்த்தரைத் தேடிப் போகிறார்கள்.
கல்லறையாக்காதே
பூந்தோட்டமாக்கு
இதயம் சிட்டுக்குருவியாய் சிறகடிக்கட்டும்
பிரிவினைப் பாம்பை உடலில்
நூலாய்ச் சுற்றியபடி
சாத்தான் விஷம் கக்குகிறது
மனிதக்குருதி ருசிக்க
அதன் நாக்கு நீள்கிறது.
உள்ளே வெளியே
*********************
பேரன்புகள் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கின்றன
திளைத்துக் களித்துக் கோரையாய் அசைந்தாடுகிறேன்
ஏந்தியிருக்கும் வெண் மலர்கள் மிதக்கத் தொடங்கின
பசியால் உயிர் துடித்தது
தலையின் மேல் பழமொன்று விழுந்தது
புத்தர் கைநீட்டி அழைத்தார்
பைத்தியக்கார விடுதி திறந்திருக்கிறது
யாரையும் யாருக்கும் தெரியவில்லை
நெரிகின்றன நகரமெங்கும் தலைகள்
குற்ற உணர்வு எதிர் மரத்தில் அமர்ந்திருக்கிறது
சிறு பூச்சியாய் வெட்டவெளியில் ஊர்கிறேன்
கவ்விச் செல்லும் நேரம் நெருங்குகிறது
இரு சாத்தான்கள்
பெயர்ப் பட்டியலை
அகராதியில் அறிந்து கொள்ளுங்கள்
தேர்தல் எந்திரம் நவீன விவசாயம்.
காசி ராமேஸ்வரம் என்று அலைந்து திரிந்து
கர்மம் தொலைப்பார் நெறியற்று
சம்பாத்தியம் செய்த பணத்தில் கோபுரங்களுக்கு தங்ககவசம் செய்வார்
வியாபாரத்தில் பாட்னராக்கி உண்டியலில் காணிக்கை செலுத்துவார்.
– வசந்ததீபன்
ச்ஜேஸூ ஞானராஜின் கவிதைகள்
காதல் லேகியம்
*******************
காமதேவன் நடத்தும் பாடத்தில்
வெற்றிக்கோட்டை தொடாதோருக்கு
கோவில் கட்டிக் கொண்டிருக்கிறான்
மன்மத லேகியம் தயாரிக்கிறவன்!
இதய ஜென்ம பந்தம்!
*************************
காதல் செய்வது பாவம் என்றவளும்
காதல் என்பது பொய் என்றவனும்
சந்திக்கும்போது உருவாகும்
உள்ளக் கிளர்ச்சிக்கு
பெயர் தான் இதய ஜென்ம உறவு!
தயிர்!
*******
சற்று அதிகமாகவே
அடித்து துவைத்து விட்டார்கள் போலும்!
மீண்டும் கூட முடியாமல்
அழுது கொண்டிருக்கின்றன
வெண்ணெயும் மோரும்!
ஏன்?
******
அகநானூறு புறநானூறுவை
வல மிட கண்களில் வைத்தவள்
செவ்விதழ் ஓரத்தில்
மாதவியின் சிலப்பதிகாரம் ஏந்தாமல்
நாலடியாரை வைத்த
கஞ்சத்தனம் ஏனோ?
கண்ணாமூச்சி ஆசை
****************************
புத்தனாகும் ஆசையை
தூண்டி விட்ட
சித்தார்த்தன் தான்
புத்தரின் ஆசையையும்
ஒளித்து வைத்தவன்!
உவமை உளறல்
**********************
பௌர்ணமியாய்
உன் முகமிருக்க
உன்னில் நழுவிய
நகத் துண்டுகளுக்கு
பிறை நிலவென
உவமான மெதற்கு!
காதல் அளவுகோல்
***************************
ஆக்சிலேட்டரை கூட்டிக் குறைக்க
முன்னும் பின்னுமாய் அசையும்
ஸ்பீடா மீட்டராய் உனது விழிகள்!
ஆச்சரியத்தில் விரியும்
அதன் மேல் கீழ் இமைகளின்
தூரத்தை அளவிடும் அலகு தான்
என் உதட்டு முத்தம்!
பிரசவ வலி
*****************
கார்மேகக் கூட்டத்தை
முதுகில் சுமக்கும் வானம்
வலி தாங்காது
மழைநீரைக் கீழிறக்க
பனிக்குடம் உடைந்த
தாயின் அலறலாய்
கேட்கிறது இடியோசை!
இருக்கலாமோ?
**********************
அமாவாசை சூரியனில்
முருங்கை மர காகத்தின்
உண்ணாவிரதம்
மகனுக்கு உணர்த்தியது
இறந்த காலத்தில்
மருமகளின் பாராமுகத்தை!
மேடு பள்ளம்
******************
ஆற்றில் மிதந்து வரும்
உதிரிப் பூக்களின்
மார்ச் பாஸ்ட்தான்
அலையின் மலையும்
அலையின் மடுவும்!
மர மனிதன்
******************
என் வீட்டுப்
புளிய மரமும்
போதி மரமானது
நான் புத்தனானதால்!
பிறப்பும் இறப்பும்!
**********************
முதல் அழுகையின் பிறர் சந்தோஷம்
கிடைக்காமலேயே போயிருக்கலாம்
கடைசி மவுனத்தின்
உறவினர் அழுகையைக் காணும் போது!
அப்பாவின் நினைவு நாள்!
*******************************
தன் அப்பாவின்
எச்சில் முத்தத்தை
உடனே துடைக்கும்
குமரேசனின் கைகளை
தொட்டுப் பார்த்ததில்
உணர்கிறேன் என் அப்பாவை!
– ச்ஜேஸூ ஞானராஜ், ஜெர்மனி