கவிதை : வண்ணத்துப்பூச்சியின் சாயலில் பூக்கள்… – தங்கேஸ்
ஹைக்கூ – ஜனநேசன்
இளையவன் சிவா கவிதைகள்
1.
உங்கள் சாதிப் பாலுணர்வின் வன்பசியைப் போக்குமெனில்
என் அம்மணம் ஒன்றும் அசிங்கமாகிவிடுவதில்லை.
நீங்கள் வரிசை கட்டி
ருசி பார்க்கும்
என் சதைத் துண்டங்களில்
ஒழுகும் குருதியில்
அழிந்து கொண்டிருக்கும்
தீண்டாமை வலிகள்.
வாருங்கள் என் உடல் மீது
மேயும் உங்களின் தேகத்தில்
பாலெனக் குருதியைப் புகட்டி
பண்பாடுகள் கட்டிக்காக்கும்
அவரவர் அம்மாக்களைத்
தேடிப் பார்க்கிறேன்.
2.
பனியைப் பருகும்
பகலவனின் வேகமென
உன் மௌனத்தை மொழிபெயர்க்கும்
என் மனவோட்டம்
எப்படியோ பொருந்திப் போகிறது
உன் புறக்கணிப்போடு.
உனக்கான சூரியனாக
உதிக்கும் என்னை
பார்வையில் பனியாக்கி விடுகிறாய்.
உனக்கான பாடுபொருளாகவோ
தேடுபொருளாகவோ
மாறிப்போன பின்னே
நானாக இல்லாத என்னை
எவ்விடம் தேட?
3.
பாலைவனத்திற்குள்
தேடிக் கொண்டிருக்கிறது
பறக்கும் பட்டாம்பூச்சி
மலரும் மரத்தை
மழை நீரில் மின்னும் வண்ணங்களை
தன்னோடு உலா வரும் பூச்சிகளை
எல்லைகளைக் காட்டும் பசுந்தடங்களை.
மணல் வெளிக்குள்
நுழைந்த பின்னும்
தன்நிலை மறவாமல்
போகுமிடமெங்கும்
வனத்தைச் சுமந்து செல்லும்
பட்டாம்பூச்சியின் அன்பை
வானம் மழையென நீட்டுகிறது.
இளையவன் சிவா
மடத்துக்குளம்
இரா.கலையரசியின் கவிதைகள்
எட்டிப் பார்க்கிறது
***********************
வெந்து போன
உடலின் சதைகளில்
ரத்தம் வழிகிறது.
அழகிய கருவிழிகள்
குழைந்த சேறாய்
நட்டுக் கொண்டிருக்கிறது.
கருங்கூந்தல் கருகி
மொட்டைத் தலைக்கு
வழி விடுகிறது.
உருகிய ரப்பர்
வளையல்கள்
கைகளைக் கிழித்து
எலும்புகளை உரசுகிறது.
குவிந்த வயிறு
தணலாய்த் தகிக்கிறது.
குவளைக் கண்கள்
ஒளியைச் சிந்தியபடி
பட்டாம்பூச்சி வருடலுடன்
உலகை எட்டிப் பார்க்கிறது
அவள் “குழந்தை.”
வரிக்கி
**********
வறண்ட நிலத்துப் பிரதேசமாக
இறுகிப் போய்த்தான்
இருக்கிறாய்.
காலத்தின் கொடுமைகளை
மெல்ல மனதில் தேக்கி
சிறு துளைகளாக
வடுக்களை சேமித்து
வைத்து இருக்கிறாய்.
கடுகடுத்த உன் மேல்
காதல் பெருகியது.
சூடான குளம்பியை
துணைக்கு அழைக்கிறேன்.!
மெல்ல இதமான, நீ
தாங்கும் சூட்டில் உன்னை மூழ்கடிக்கிறேன்.!
கரைந்த உப்பாய்
மெதுவடைக்குப் போட்டியாய் இளகுகிறாய்.
உன்னை என்னுள்
கரைத்துக் கொள்கிறேன்.
நாவில் பதிந்து இதயத்தில்
சிம்மாசனம் போட்டுக்
கொள்கிறாய்.
இரா.கலையரசி.
தங்கேஸ் கவிதைகள்
பட்டாம் பூச்சியும் உலக உருண்டையும்
********************************************
எப்படியாவது வயசு காலங்களில்
நம்மை ஒரு பூதம்
பிடித்துக் கொள்கிறது
பிறகு வாழ்க்கை முழுவதும்
அதைத் தோளில் ஏற்றிக்கொண்டு
சுற்றித் திரிவதே
நமது பிழைப்பாக இருக்கிறது
எனக்கு நேசிக்கத் தெரியாது
விட்டு விடு என்றால்
கெக்கலியிட்டு சிரித்தபடி
நேசத்தை விட பெரிது
உலகத்தில் பிறிதொன்றில்லை என்கிறது
கருணையைப் பற்றிச் சொன்னால்
நீ வேறு கிரகத்தில் இருக்க வேண்டிய
ஆள்தான் என்று கிண்டல்
நான் ஒரு முறை அதை
தழுவிக் கொள்ள முடியாது என்று
சொன்ன போது
என் நிழலைத் திருடிக் கொண்டு சென்றுவிட்டது
நான் பட்டுப்பூச்சியைப் போல
எடையற்றவனாகி
துயருற்றேன்
கடவுள் என் கனவில் வந்து
உலக உருண்டையைப்
பரிசளித்தார்
அதுவோ வெறிகொண்ட மிருகம் போல
என் கரங்களில் சுழன்றாடியது
என்னை மன்னிக்க வேண்டி
மனதார வேண்டினேன்
அது என் மனதின் நல்ல பதிவை மட்டும்
கொஞ்சம் கிள்ளி எடுத்துக்கொண்டு
சென்றது
இப்போது வள்ளலார் ஞாபகத்திற்கு
வருவதேயில்லை
பிறகு எப்படி வாடிய பயிர் வரும்?
பிறகு எல்லோரையும் போலவே
என் தோளிலும் அந்த குரங்குக் குட்டி
தொற்றிக்கொண்டேயிருக்கிறது
புத்தர் என்றால் காளானும்
கர்த்தர் என்றால் சிலுவையும் தான்
ஞாபகத்திற்கு வருகின்றன
இப்போதெல்லாம்
வானில் பறக்கும் சிறு பறவையைப் பார்த்தாலும்
அவ்வளவு பொறாமையாய் இருக்கிறது
******************
அரசியல் வாதிகள்
இருந்திருக்கும்
**************************
சதுரங்கக் கட்டத்தில்
**************************
சாலையோரத்து மரங்கள் நிற்பது
**************
ஹென்றி ஷாரியரின் “பட்டாம்பூச்சி” நாவலும், அதையொட்டி வெளியான 1973 & 2017 “பட்டாம்பூச்சி” திரைப்படங்களும்- செ.கா.
1970களில் தமிழ் வாசகர்கள் பலருக்கும் அறிமுகமான சுவாரஸ்யமான நாவல் ஹென்றி ஷாரியரின் “பட்டாம்பூச்சி” நாவல். தமிழில் ரா.கி.ரங்கராஜன்(கமல்ஹாசன் கூட இவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன்) அவர்களது அற்புதமான மொழிபெயர்ப்பில் தீப்பிடித்தாற்போல ஒவ்வொரு பக்கமும் வேகமாக நகரும். இன்றும் கூட தமிழில் இந்நாவல் விற்பனை குறைந்தபாடில்லை. மூலப்பதிப்பு வெளிவந்த 3 வருடங்களுக்குள்ளேயே தமிழில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்ச்சமூகம் கடமைப்பட்டிருக்கிறது.
Papillon என்றால் பட்டாம்பூச்சி என்று அர்த்தம். ஹென்றி ஷாரியரால்(Henri charriere)1969 ல் எழுதி வெளியிடப்பட்ட தமது வாழ்வனுபவ நாவல் இது. 1931 முதல் 1945 வரையிலான 14 ஆண்டுகால சிறைவாழ்வு மற்றும் தப்பித்தல் முயற்சிகளுமே இந்நாவலின் மையம்.
பிரான்சில் 1969 ல் வெளியான இந்நாவல் , விற்பனையில் தொடர்ந்து 21 வாரங்களுக்கு முதலிடம் பிடித்துள்ளது. பிரான்சில் மட்டுமே 15 இலட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. உலகம் முழுவதும் 21 மொழிகளில் 239 வேறுவேறு பதிப்புகளாக வெளியாகி உள்ள இந்நாவல் 1973 லும் , 2017 லும் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது.
கதை சுருக்கம்.
Papillon இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய பிரான்சில் சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு பிழைத்துக் கொண்டிருப்பவன். விலைமாதர் ஏற்பாட்டாளரைக் கொலை செய்ததாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பிரெஞ்சுக் காலனியாக இருந்த தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவின் தீவுச் சிறைக்கு அனுப்பப்படுகிறார்.சுற்றிலும் அட்லாண்டிக் பெருங்கடல் என்பதால் தப்பிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது. செய்யாத குற்றத்திற்காவும் , தம் வாழ்க்கை மீது கொண்ட பிடிப்பினாலும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். சக சிறைவாசியாக வசதிபடைத்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட “லூயிஸ் டேகாவின்” நம்பிக்கையை சம்பாதித்துக் கொள்கிறார். அதன் பிறகு அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்வதே பிரதான கதைப் போக்காக இருக்கும்.
பிரான்சில் இருந்து ஏன் பல்லாயிரம் மைல் தொலைவில் உள்ள சிறைக்கு அனுப்ப வேண்டும் ?
சாத்தானின் தீவு (Devil’s Island) என்றும் , “பீனல் காலனி”(Penal Colony of caynne) என்று அழைக்கபட்ட இத்தீவுச்சிறை 1852 முதல் 1952 வரை 100 ஆண்டுகள் செயல்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டு துவக்கத்தில் பிரெஞ்சின் நகர்ப்புற மக்கள் தொகை 60 இலட்சத்தில் இருந்து 16 கோடியாக அதிகரித்தது.சரியான முறையில் நிர்வகிக்க இயலாததால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் , வர்க்க வித்தியாசங்கள் , கொள்ளை நோய்கள் ,கண்டிப்பான மதநிறுவன நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களால் குற்றங்கள் பல்கிப் பெருகின.குற்றவாளிகள் வெளியாகியதும் மீண்டும் மீண்டும் நிலவிய அதே அசமத்துவ சூழலால் , மீண்டும் அதே வகை தொடர் குற்றச் செயல்பாடுகளில் பங்கேற்பது அன்றைய அரசு நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்தது.ஒருவகையான உளச்சிதைவு நோய் போல குற்றநடவடிக்கைகள் திரும்ப திரும்ப நடைபெற்றன(Recidivism).எனவே தமது காலனியாதிக்க நாடுகளில் ” தண்டனைக் குடியிருப்புகளை(Penal Colony)” ஏற்படுத்துவதன் வாயிலாக இவ்வகை அவலங்களை ஒழித்துக்கட்டலாமென முடிவு செய்தனர். இவ்வகையான உளச்சிதைவு குறைபாடு (Recidivism) இங்கிலாந்து , அமெரிக்கா,டச்சு உள்ளிட்ட அரசுகளுக்கும் சவாலாக அமைந்தன. ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்த்தெழுந்த இந்தியர்களை இவ்வகையில் ஒடுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட தண்டனை தீவுக்குடியிருப்பே “அந்தமான்” ஆகும்.
பிரெஞ்ச் கயானாவின் “சாத்தான் தீவுச்சிறையில்” 83000 பேர்களை சிறை வைத்துள்ளதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. அதில் 75% பேர் தமது தண்டனைக்காலம் முடியும் முன்னரே இறந்துவிட்டனர். அவர்கள் இறப்புக்கு மிக முக்கியக் காரணம் சிறைக்கலவரம் மற்றும் மித வெப்ப மண்டல நோய்க் காரணிகள். இதையும் மீறி கலகம் செய்வோரை மனதளவில் ஒடுக்குவதற்கு தனிமைச் சிறைகளும்(Solitary Cells) , அச்சுறுத்த தலைதுண்டிக்கும் இயந்திரமும்(Guillotine)உதவி புரிந்தன என்றால் இவ்வகை சிறைகளின் அவலத்தை நாம் நன்கு உணரலாம்.இவை தவிர சிறைவாசிகளுக்கு குடும்ப வாழ்க்கையின் விழுமியங்களைப் புரிய வைப்பதற்காக 15 விலைமாதர்களை சிறையில் உலவ அனுமதித்தனர்.இவர்களை மதநிறுவன கன்னியாஸ்திரிகள் ஒருங்கிணைத்தனர். ரம்மைப் பகிரும் எந்த ஒரு சிறைவாசியும் இவர்களிடத்தே கலவி கொள்ளலாம்.இத்தகைய தொடர் கலவிச் செயல்பாடுகளால் தீவிர பாலியல் நோய்கள்(Syphilis) பெருகி பல உயிரிழப்புகளுக்கு வித்திட்டது. இதோடு பிரான்சின் அரசியல் கைதிகளையும் இவ்வகை கொடுமைக்கு உள்ளாக்கினர்.மூன்றாம் நெப்போலியனுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக 239 குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள இங்கே சிறைவைக்கபட்டனர்.ஜெர்மனியின் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்ட ஆல்ப்ரெட் ட்ரெபஸ்(Alfred Dreyfus) மூலமே இச்சிறையின்
உண்மை நிலவரம் வெளியே தெரிய ஆரம்பித்தன.
நாவல் 1969 vs Papillon 1973 vs Papillon 2017.
நாவலில்,
பாபிலோன் மற்றும் லூயிஸ் டேகாவின் முன்கதை விவரணைகள் செறிவாக இருக்கும்.
ஷாரியரின் 5 தப்பித்தல் முயற்சிகளும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். பழங்குடிகள் கிராமத்திற்கு சென்று அவர்களோடு ஒருவனாக , அவர்களின் தலைவனாகவே மாறும் அளவிற்கு நடைபெறுகிற மாற்றங்கள் எல்லாம் நெகிழ்ச்சியாக
இருக்கும்.
கப்பலில் தொழுநோயாளிகள் சந்திப்புகள் , மலப்புழையில் பணத்தைப் பதுக்குதல் , சிகரெட்டுகள் பேரம், எல்லாமே செறிவாக எழுதப்பட்டு அவை வாசகனுக்குக் கடத்தப்பட்டும் இருக்கும். ஹென்றி “பாபிலோன்” ஷாரியர் எனும் கதாபாத்திரம் , அன்பான அனைவருக்கும் உதவி செய்கிற , பிறர் நம்பிக்கையை எளிதில்
சுவீகரிக்கிற பாத்திரப்புனைவாக இருக்கும்.நாவலின் கிளர்ச்சியூட்டக்கூடிய மற்றொரு அம்சம் “தீவுப்பெண்கள்”. நாவலின் மிக முக்கிய நகர்வை செய்பவர்கள் இவர்கள்தான்.
” உன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால் இங்கே யாருக்கும் எந்த பிரயோசனமும்
இல்லை. உன்னை தீ அழித்துக் கொள்வதாலும் இங்கே யாருக்கு எந்த நட்டமும் இல்லை”சிறை வார்டன் கைதிகளிடம் ஆழம்நிறைந்த அர்த்தமுள்ள நாவலின் மையத்தை அலட்சியமாக கடத்துவார்.
நாவலில் வருகிற இந்த வரிகள் இரண்டு திரைப்படங்களுக்கும் பொருந்துமென்று நினைக்கிறேன்.
நாவலை படமாக எடுத்தாலும், ரீமேக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் எடுத்தாலும் கூட , நாவலின் மையப்போக்கிற்கு எந்த வித பிரயோசனமும் இல்லை , நட்டமும் இல்லை.
காடோடி, ஓநாய்குலச்சின்னம் , வேள்பாரி போன்ற விவரணைக்கும் படிமங்களுக்கும் அழகியலுக்கும்
பெயர்போன நாவல்களை எவ்வளவு பொருட்செலவில் எடுத்தாலும் , நாவலாசிரியரின் இடையீடு இல்லாது போனால் அவை ஒரு போதும் ரசிகர்களை ஈர்க்காது. இதில் எனக்கு தெரிந்த சில விதிவிலக்குகளும் உண்டு.
அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டீபன் கிங் ன் நாவல்களை மையப்படுத்த எடுக்கப்பட்ட படங்கள் பலவும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவை. The green mile , Shawshank redemption , The Shining உள்ளடக்கிய பல ஹாரர்களையும் அடக்கலாம். இதில் ஒரு உதாரணத்துக்காக குறிப்பிடவிரும்புவது “The Shawshank Redemption”. சினிமாக்காதலர்கள் பலருக்கும் பிடித்தமான விருப்பப்பட்டியலில் முதன்மையில் இருப்பது. இப்படம் ஸ்டீபன் கிங் – கின் “ரிட்டா ஹேவொர்த் அண்ட் ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன்” குறு நாவலைவிடவும் காட்சிமொழியில் நுணுக்கமான தெளிவான கோர்வையான அணுகுமுறையை அதன் இயக்குநர் “ஃப்ரான்க் டாராபோண்ட் ” பயன்படுத்தியிருப்பார். இந்த நுட்பம் எல்லோருக்கும் வாய்க்காது. ஓநாய்குலச்சின்னம் ஆங்கிலத்தில் 2015ம் ஆண்டு jean – Jacques annoyd ல் படமாக்கப்பட்டது.அவரும் சாதாரணமான இயக்குநர் இல்லை.Genghis khan , Seven years in Tibet , Two brothers போன்ற நல்ல படங்களைக் கொடுத்தவர்தான்.ஆனாலும் Wolf totem நாவலை படமாக எடுப்பதில் , காட்சிமொழியைக் கையாளுவதில் பெரிதாக ஈர்க்கவுமில்லை. நாவலின் முக்கியமான அம்சங்கள் எல்லாம் துண்டாடப்பட்டு சிதைவுறு நிலையிலேயே அப்படத்தை நாம் உள்வாங்கிக் முடியும். நாவலை வாசிக்காமல் நேரடியாக சினிமாவாக பார்த்த ரசிகரையும் அவர் திருப்தியுறச்
செய்யவில்லை.
எனவே நாவலைப் படமாக்குவது என்பதை விட அயர்ச்சியூட்டக்கூடியது “நாவலைத் தழுவியது , உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது” என்கிற டைட்டிலோடு வெளியாகிற படங்கள். இதில்
பல படங்களில், பல காட்சிகளில் மையத்தை சிதைத்த இயக்குநரே பளீச்சென தெரிவார். நாவலை வாசித்திராத எவரொருவருக்கும் நேரடி சினிமா அனுபவம் தருவதைக் குறித்து பேசவில்லை.நாவலையும் படித்து , சினிமாவாகவும் பார்க்கிற ரசிகர்களின் மனக்கவலைதான் இங்கே கோடிட்டுக்காட்ட விரும்புவது. அது இந்தப் படங்களுக்கும்பொருந்தும்.
நாவலின் பிரதான கதாபாத்திரங்கள்
1. ஹென்றி பாபிலோன் ஷாரியர் – 1973 – ஸ்டீவ் மக்வின் , 2017 – சார்லி ஹன்னாம்.
2.லூயிஸ் டேகா – 1973 – டஸ்டின் ஹாப்மேன் , 2017 – ரமி மாலக்.
நாவலின் சித்தரிப்புக்கும் , இப்படங்களின் சிதரிப்புக்கும் காததூரம். ஒருவகையில் 1973 யைக் கூட ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் 2017 ல் டேகாவின் கதாபாத்திரம் நமக்கு எந்த பாதிப்பையும் தருவதில்லை. உயிரோட்டமான இறுதிக்காட்சியிலும் கூட “லூயிஸ் டேகாவைக் கூப்புட்டு போய் நீயும்செத்துப்போயிடாத..அது இங்கேயே கிடந்து சாகட்டுமென்றே ” நமக்கும் சொல்லத்
தோன்றுகிறது.
அவ்வளவு பலவீனமாக Portrait ஆக இருந்தது. ஷாரியர் கதாபாத்திரத்தில் சார்லி ஹன்னமும் கூட ஓகே வாக தமது கடுமையான உழைப்பைக் கொடுத்திருந்தார்.ஆனாலும் Post Credit ல் (2017) காட்டுகிற வயதான ஷாரியருக்கான ஒப்பனையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதில் ஷாரியரே தேடிச் சென்று தமது புத்தகப்பதிப்பைத் தொடங்குவது போலவும் , ஷாரியரின் பாபிலோன் பச்சை(Tatoo) குத்தப்பட்ட வெற்றுடம்பு புகைப்படமும் , ஆவணப்படுத்தப்பட்ட உண்மைசிறைப் பயணக் கருப்பு வெள்ளைக் காட்சிகளும்தான் 2017 எடிசனுக்கு பலம். மற்றபடி இந்த பருத்தி் மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.
விடுதலை வேட்கை , சுதந்திர உணர்வு, அமைதிப்படுத்தப்பட்ட மனதில் இருந்து வெளிப்படுகிற அற்புத ஆற்றல் , சோடைபோகாத நம்பிக்கை , கூட்டுறவு, இணக்கம் , தளராத கடும் முயற்சிகள் இவையெல்லாவற்றுக்கும் மேலே வாழ்வை ஆவணமாக்கத்துணிந்த அருமையான எழுத்துப்பணி , இவைதான் நாவலின் மையமாக , வாசிப்பின்போது எனக்குக் கிட்டியவை. ஒவ்வொரு சம்பவ விவரணைகளை நாம் காட்சிகளாக உருவகப்படுத்துகிறபொழுது அது தருகிற எல்லையற்ற அனுபவம் , வறட்டுக் காட்சிமொழியாக நாயக பிம்பத்திற்குள் சிறைப்படுகிற பொழுது நமது உணர்வுகளின் எல்லைகளையும் சுருக்கவிடுகின்றன. அது 1973 வெர்சனை விட 2017 வெர்சனுக்கு அதிகம்
பொருந்துகிறது.
இவ்வளவு வக்காலத்து வாங்குகிற நாவல் மட்டும் உன்னதமானதா என்றால் அதையும் ஒருவர் அடித்துத் துவைத்துக் காயப்போட்டிருக்கிறார். அவர் பெயர் ஜெரார்ட் டிவில்லியர்ஸ். இந்நாவல் முழுக்க முழுக்க உண்மையைப் பேசவில்லை என்றும் அதில் சொல்லப்பட்டஇருப்பவற்றுள் 10% தான் உண்மையானது என்றும் தக்க ஆதாரங்களுடன் மறுத்திருக்கிறார். இதே ஷாரியரின் சக சிறைவாசியாக இருந்து 1935ல் தப்பித்த “Rene Belbeenoit” ன் “Dry Guillotine” நாவலளவு கூட இது இல்லை என்கிற இன்னொரு தரப்பாரும் உண்டு. மேலும் Rene வின் நாவலால் அமெரிக்க அரசின் தண்டனைக்குள்ளானது தனிக்கதை.
இவ்வாறாக,
ஒரே நிகழ்வை பின்னணியாகக் கொண்ட சமகாலத்தைய
வேறுவேறு படைப்புகள்,
ஒரே நாவலை மையமாகக் கொண்ட வேறுவேறு திரைப்படங்கள் ,
ஒரே சேர நாவலும் , திரைப்படங்களும் சந்தித்த விமர்சனங்கள் , எதிர்வினைகள்
இவையெல்லாவற்றையும் தாண்டி எந்த ஒரு படைப்பும் மக்களிடையே ஒரு கவனத்தைக் கோருகிறது. அது அதிகார வர்க்க அவலங்களாக இருக்கலாம்.தளரா நம்பிக்கையும் , தீரா அன்பும் , சக மனிதர்களை நேசிக்கின்ற மனோபாவமாகவும் இருக்கலாம்.
மூலப் படைப்பின் பிரதான வேண்டுகோளை நிராகரிக்கிற எந்தவொரு நவீனப்படைப்பும் , ஜெயில் வார்டன் முன்னர் சொன்ன வாசகத்துக்குதான் பொருந்தும்.
– செ.கா.
மு. தனஞ்செழியனின் கவிதைகள்
கவிதைகள் என்பார்கள்
அறுபட்ட கழுத்துடன்
இருக்கும்
ஒரு பட்டாம்பூச்சிக்கு
நத்தையின் ஓடு
முளைக்கிறது
அது
நகர்ந்து கொண்டாவது
வாழும் என.
**********
சொர்க்கத்தைப்
பற்றி
கவலையில்லை இனி
நரகத்தை
பற்றியும் தான்.
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அதற்கு மேல் என்ன.
********
ஒரு பறவைக்குப் பசி
அதன் சிறகுகள் உடைந்திருக்கின்றன
நீங்கள் எறியும்
நெல்மணி
அதன் பசிக்கு
தூரமாய் உள்ளது.
*******
தீ நிறத்தில்
ஒரு பழம்.
ஒரு பறவைஅதைக் கொத்திவிட
அதன் அலகு
தீப் பற்றியது.
********
சுடுகாட்டில்
ஒரு வீணை.
யாரோ இசைக்கிறார்கள்.
எல்லாத் திசைப் பக்கமும்
தேடிப் பார்த்தேன்
பூக்கள் உதிர்ந்திருந்த
கல்லறையின்
கீழிருந்து
அதிர்ந்துக்கொண்டிருந்தது.
தோண்டிப் பார்த்தேன்
நரம்புகள்
அறுந்து போன
ஒரு வீணை
புதைந்து
கிடந்தது.
*********
பறவை ஆவதெல்லாம்
அவ்வளவு சுலபமில்லை
அதற்கு,
ஒரு வானமும்,
ஒரு வேடனும் வேண்டும்.
– மு தனஞ்செழியன்
நூல் அறிமுகம்: தமயந்தியின் ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும் – சி.சசிரேகா
படைப்புகள் சில நேரங்களில் தன்னை வாசித்து அதன் வலிகளை உணரக்கூடிய வாசகனையோ அல்லது வாசகியையோ தேர்ந்தெடுக்கும் என்று இச்சிறுகதையை வாசிக்கும் போது தெளிந்தது…
தமயந்தி எழுதிய ”ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்” சிறுகதைத் தொகுப்பு வெளிபடையான பெண்ணிய சிந்தனையும், பெண்களின் வலிகளை கடத்த கூடிய கூர்மையான எழுத்து வடிவம் கொண்டது. பெண்களாள் நிறைந்த இத்தொகுப்பு, ஒரு பெண்ணின் அம்சம் எனில் இச்சிறுகதை தொகுப்பு என் உயிர்த்தோழியே!
“என்ன எப்ப பாரு பெண்ணியம் பேசுர லூசு மாதிரி. எது எதார்த்தமோ அதை ஏத்துக்க ” -என் தங்கை
“நீ பேசுரதல்லாம் எழுத, படிக்க நல்லா இருக்கும் ஆனா வேளைக்கு ஆகாது டீ”- என் தோழி
“உனக்கு கிறுக்கு தான் பிடிச்சுருக்கு பாப்பா நீ சொல்ர மாதிரியெல்லம் எந்த ஆம்பளயாதும் வீட்டுல இருப்பாங்களா உனக்கு வேற வேள இல்ல”- என் அம்மா
இப்படியான ஏச்சுகளுக்கு மத்தியில என் கூட கை கோர்த்து கொண்டது தமயந்தியின் எழுத்துக்கள்…
பெண் பிள்ளைகளின் ஆழகிய முகம், மார்பு, கருப்பை போன்ற பெண் உறுப்புகளை காரணம் காட்டி அவர்களின் சுதந்திரத்தை எப்படி இந்த ஆணாதிக்க புறவெளி, கடிகார நொடி முள் எத்தனை தூரம் ஓடினாலும் வெளியில் தப்பி ஓடிவிட முடியாது என்பது போல ஓடுக்கி வைத்துள்ளது என்பதை இதை விடவும் நேரடியாக எழுதிவிட முடியாது. புனைவுகள் அல்லாத மிக காத்திரமான கேள்விகள் ஆனாதிக்க புறவெளியை நோக்கி அவர்களின் சட்டையை பிடித்து பதிலை சொல்லிவிட்டு போ என்பது போல் உள்ளது…
நான்கு சுவற்றில் அடைப்பட்டு பொம்பள ஜென்மமா எவனுக்கோ துவச்சு,சமைச்சு,புள்ள பெத்து கொடுக்கணுமா?
சில நேரங்களில் சாப்பாட்டுக்கு உப்பு, காரம், புளி சரியாக போடுவதுதான் வாழ்க்கையா?
துணி மேல துணியை போட்டு மூடி வைக்கிறதுக்கு பொக்கிஷமாக மார்பு?
உள்ளாடையை சேலைக்கு அடியில் தான் துவைத்து காய போடனும் , கால ஒடுக்கி தான் உக்காரனும், நாப்கினை மறைத்து தான் பயன்படுத்தணும். எல்லாத்தையும் இப்படி மறைத்து மறைத்து பெயர் மறந்தவளாய், முகமற்றவளாய், கருப்பை கிழிந்தவளாய், மார்புகள் குதறப்பட்டவளாய் எத்தனை சாட்சிகள் அவளுக்குள் இந்த அழுக்கான ஆண் சமூகத்திடம் நியாயம் கேட்டிட?
பட்டாம்பூச்சி, பறவைகளின் சுதந்திரத்தின் மீது உள்ள ஆசையை தமயந்தி எழுத்தின் மூலம் தெரியப்படுத்துகிறார். தமயந்தி நேசிக்கும் பெண் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டிய சுதந்திரமல்லவா அது….
எந்த ஒரு உயிரினத்திலும் பெண் ஆண் உண்டு.ஆணுக்கு பெண் துணை பெண்ணுக்கு ஆண் துணை இரண்டும் அல்லாமல் இயற்கை விதியான இனப்பெருக்கம் நிகழாது அவ்வளவுதானே ஆனால் பெண்ணின் விருப்பம் இல்லாமல் புணரும் வக்கிரம் பிடித்த ஆண்களின் புத்தியில் தங்கள் இனப்பெருக்கத்திற்காக அல்லாமல் அவர்களின் ஆணாதிக்க வெறியும் மனநலம் குன்றிப்போன தன்மையே தெரிகிறது மனிதனிடம் மட்டுமெ….
இக்கதையில் வரும் பெண்கள் ஆணாதிக்க சமூகத்தில் நிறைய நிறைய கேள்விகளைகளை கேட்டும் அக்கேள்விகளுக்கு குற்றவாளி ஆண்களிடம் நியாயம் நிறைந்த பதில் ஏதுமில்லை என்பதை உணர்ந்து. அவள் நேசிக்கும் ஏதோ ஒன்று அவளை ஆற்றுப்படுத்த அவள் கேள்விகளுக்கு பதிலாகவும், கேள்விகளை உருவாக்கி அவளை சிந்திக்க வைப்பதாகவும் அமைகிறது…
கதவுகள் திறக்கப்பட வில்லை எனில் என்ன? இதோ சன்னல்கள் உள்ளன தப்பித்து செல்ல நானும் மார்புகள் மற்றும் கருப்பை அற்ற அழகிய வண்ணத்துப்பூச்சியாய் மாறி சன்னலின் விளிம்பில் தமயந்தியோடு…
நூல் : ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும்
ஆசிரியர் : தமயந்தி
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
விலை : ரூ. 96
பக்கம் : 75
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]