இந்தியாவின் முதல்,நோபல் பரிசாளர் சர். சி.வி. இராமன் கட்டுரை – பேரா.சோ.மோகனா
வானின் நீல வண்ணத்துக்கு காரணமும் பதிலும் தேடியவர் தமிழ்நாட்டின் காவிரிக்கரையின் திருச்சிராப்பள்ளியில் பிறந்த சர்.சி.வி. இராமன். அவரின் பிறந்த நாள் இன்று நவம்பர் 7. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர். அவர்தான். அவர் இராமன் விளைவு பற்றி உலக்குக்கு அறிவித்த தினம் பிப்ரவரி
28 .1921., அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல்தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணிக்கும்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது? வானத்தின் நிறமா, என்ற கேள்வி உருவானது. பின்னர் கடலின் நீலநிறம் சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் என்பதைக் கண்டறிந்தார். .
ஆற்றல்..இழக்கும் ஒளி..!
ஒளியானது ஆற்றல் செலவு ஏதுமின்றி, எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் பயணிக்கும்; எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதிபலிக்கும் என இயற்பியலாளர்கள் நம்பினர். அந்த கருத்தை தனது அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் சுக்கு நூறாக்கியவர் இராமன் .ஒளி ஒவ்வொரு பிரதிபலிப்பின் போதும், ஒரு தளத்தின் மீது மோதுவதால், அதற்கு சக்தி இழப்பு உண்டாகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர் சர்.சி. வி. இராமன். இந்த ஒளியின் சக்தி இழப்பானது, அந்த ஒளி பலநிற வண்ணத்தில் பிரியும்போது சரிகட்டப்படுகிறது., அப்போது, ஒளியின் அலை நீளம் ஒரு நுண்ணிய அளவில் குறைந்து நிறமாற்றம் அடைகிறது. அது நீல நிறத்தை நோக்கி பிரிகிறது. முடிவில், ஒளியின் பிரதிபலிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப, நீலமாக மாறுகிறது. இதுதான் இராமன் கண்டுபிடித்த சூட்சும மந்திரம்..
நீருக்கு நிறம் உண்டா?
இல்லை வானின் வண்ணத்தை கடல் பிரதி பலிப்பதால் கடலும் நீல நிறமாகத் தெரிகிறது. பொதுவாக பிரதிபலிப்பின் போதும், பிரதிபலிக்கு முன்பும், பிரதிபலிப்புக்குப் பின்னும், வெளிப்படும் அலைகளின் நீளத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. இந்த வித்தியாசத்தைக் கொண்டு, பிரதிபலித்த பொருளின் தன்மை என்ன என்பதை அறியமுடியும். இதுதான் இராமன் விளைவு. அதாவது, ஒளியின் சிதறல் என்பது, ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் வழியே பயணிக்கும்போது, அதிலிருந்து பரவலாக வெளியேறும் மிகக் குறைவான அலை நீளம் உள்ள ஒளிக்கற்றைகள, அதிகம் சிதறடிக்கப்படுகின்றன. அதிலுள்ள போட்டான் (photon) துகள்கள் சிதறி,வண்ணத்தை உண்டுபண்ணுகின்றன அவைதான் சிதறடிக்கப்பட்டு பல வண்ணங்களில், அவற்றின் அலை நீளத்திற்குத் தகுந்தபடி தெரிகின்றன. இதுதான் இராமன் விளைவு(Raman Effect) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது
- படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி(Rayleigh scattering causes the blue color of the daytime sky and the reddening of the Sun at sunset. வானின் நீல நிறத்துக்கும், சூரியனின் அஸ்தமனத்தின் போது உண்டாகும் சிவப்பு வண்ணத்துக்கும் காரணி : ராலே சிதறல்தான். )
- முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
- முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்
தேசிய அறிவியல் தினம்..!
இந்திய அறிவியல் மேதை சர்.சி.வி இராமன் தான் கண்டு பிடித்த அறிவியல் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்த தினம் பிப்ரவரி 28 . ராமன் இந்த ஒளியின் சிதறலைக் கண்டுபிடித்ததனால், இது இராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இராமன் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் கருதி, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் இணைந்து,1986 லிருந்து இராமனின் அறிவியல் கண்டுபிடிப்பின் நினைவாக, பிப்ரவரி 28 ஐ தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது. இந்த நாள் இந்தியா முழுவதும், கல்விக் கூடங்களிலும், அறிவிலாளர்களாலும் கொண்டாடப்படுகிறது.
நிறப்பிரிகை.!
சூரிய ஒளி, மழைத் துளி என்ற முப்பட்டகத்தின் வழியே. 40 -42 பாகை கோணத்தில் விழும்போது, வானத்திரையில், சிவப்பு, ஆரஞ்சு மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் மற்றும் வயலெட் என்னும் 7 வண்ணங்கள் கலந்த, வானவில் என்ற ஓவியம் தீட்டப்படுகிறது. வெள்ளை சூரிய ஒளியில் கலந்துள்ள வண்ணங்கள் ஒளி ஊடுருவும் பொருள் வழியே பாயும்போது, பல வண்ணங்களாகப் பிரிவதே, நிறப் பிரிகை..இதனைக் கண்டுபிடித்தவர் சர் ஐசக் நியூட்டன். ஆனால் இதே ஒளி சிலசமயம், சிலப் பொருள்கள் மூலம் ஒரே ஒரு நிறத்தை மட்டும் வெளியிடும். இது ஒற்றை நிற ஒளி எனப்படுகிறது
வெள்ளையின் வண்ணப்.பிரிவுகள்!
நாம் பார்க்கும் வெண்மை ஒளி , 7 வண்ணங்களாகப் பிரிகிறது. ஆனால் ஒவ்வொன்றின் அலை நீளமும் வெவ்வேறாக இருக்கிறது. இந்த வண்ணப்பிரிகையில், வானவில்லின் மேல்பக்கம் உள்ள சிவப்பின் அலைநீளம், 720 நானோமீட்டர்(nm) . இதுதான் அதிக அலைநீளம் கொண்டது. வானவில்லின் அடிப்பகுதியில் உள்ள வயலெட்டின் அலைநீளம் 380 நானோமீட்டர்(nm) .இது குறைவான அலைநீளம் உள்ளது.இவைகளுக்கு இடையில்தான், மற்ற வண்ணங்கள் காணப்படுகின்றன. நமது கண்ணிலுள்ள விழித்திரையின், வண்ணவாங்கிகள் பெரும்பாலும், சிவப்பு, பச்சை மற்றும் நீலம் வண்ணத்தையே எளிதில் அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்டிரு க்கின்றன. இதனால்தான் நமக்கு வண்ணப்பார்வை சாத்தியமாகிறது. சிவப்பு,பச்சை, நீலம் என்ற மூன்று வண்ணங்களே, முக்கிய நிறங்கள் (Primary colors) என அழைக்கப்படுகின்றன
அறிவியல்..கண்டுபிடிப்பும்….நோபல்..பரிசும்..!
அறிவியல் வரலாற்றில்,இந்திய சரித்திரத்தில், 1928 , மார்ச் 16 ம் நாள் ஒரு முக்கியமான, தினம்... அன்றுதான் . C.V.இராமன் பெங்களூரு, தென்னிந்திய அறிவியல் கழகம் மற்றும் மத்திய கல்லூரியின், அறிவியல் மன்றத்தின் ஒரு சிறப்பு விருந்தினராக பேச அழைக்கப்பட்டார். அங்கு தன் மாணவர்களான, கிருஷ்ணன் மற்றும் வெங்கடேஸ்வரனுடன் இணைந்து தான் கண்டுபித்த, இயற்கை ரகசியமான, தனது இயற்பியல் கண்டுபிடிப்பை முதன் முதல் உலகுக்குத் தெரிவித்தார். இது உலக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.. அதுவே இராமன் விளைவு என்றும் அழைக்கப் பட்டது. அலைக் கற்றையிலிருந்து சிதறிய வரிகளும் ராமன் வரிகள் என்றே சொல்லப்பட்டன. ஒளி, போட்டான் (Photon) துகள்களால் ஆனவை என்று உறுதி செய்தது ராமன் விளைவு. இது. பல வித்தியாசமான பொருள்களின், மூலக்கூறு மற்றும் படிக அமைப்பு பற்றிய அறிவியல் ஆய்வில், தேடலில் மிகவும் உதவி செய்தது. ராமன் விளைவுக்காக 1930 ல், சர். C.V.இராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது
வானின்… நீல..நிறம்..!
குறைவான நீளமுள்ள அலைநீளங்கள்தான் சிதறுகின்றன என்றால், வானம் வயலெட் ஆகத்தானே தெரிய வேண்டும். ஏன் நீலம் நிறம்.? சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர்கள், சரியான அலைநீளத்தில் தான் வருகின்றன. ஆனால், உயரத்தில் உள்ள வளிமண்டலத்தால், அவை உறிஞ்சப்படுகின்றன. எனவே, நாம் பார்க்கும் ஒளியில் குறைவான வயலெட் வண்ணமே தெரிகிறது. இது வினாவுக்கான பாதி பதில்தான். மீதி விடை. நமது கண்கள்தான் எப்படி..? வானவில்லில் அனைத்து நிறங்களும் தெரிகின்றன. நமது கண்ணின் செயல்பாடுதான், வானம் நீலமாக தெரிய காரணம். அதுதான், கண்ணின் விழித்திரை , சிவப்பு, நீலம் மற்றும் பச்சை என மூன்று வண்ணங்களுக்கே, அதிக தூண்டுதல் ஏற்படுத்துகின்றன. மேலும், வயலெட் நிறத்தை அவ்வளவாக கண்டுகொள்ளாமல், அருகில் காணப்படும் நீலத்துக்கே முக்கியத்துவம் தருவதின் விளைவே வானம் நீல நிறமாகத் தெரிகிறது. அதனைப் பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாக உள்ளது. . ஆனால், வளிமண்டலத்தில் நீங்கள் சுமார் 30 கி.மீ உயரத்துக்கு மேல் போய், இந்த வளிமண்டலத்தைப் பார்த்தால்,நீலமாகத் தெரியாது; முழுக் கருப்பாகத்
தெரியும்.
பொருளின் நிறம்..!
ஒளி ஒரு பொருளின் மேல் பட்டு பிரதிபலிப்பதாலேயே அது இருப்பதை நாம் அறிகிறோம். ஒளிக்கதிர்கள் பொருளில் படும்போது, அதன் தலைகீழ் பிம்பம் கண்ணின் விழித்திரையில் விழுகிறது. மூளையின் உதவியுடன், பிம்பத்தை நேராகப் பார்க்கிறோம். பொருளின் உருவமும்,வண்ணமும் மூளையால் அறியப்படுகின்றன. ஒரு பொருள் தன் மேல் விழும் ஒளிக்கற்றைகளில், உட்கிரகித்தது போக, பிரதிபலிக்கும் நிறமே. பொருளின் நிறமாக நாம் உணர்கிறோம். இதுதான் உண்மை…
முக்கிய இடங்களில் சிவப்பு சிக்னல்..!
சிவப்புக் கதிர் மற்ற நிறங்களைவிட அதிக தொலைவு பயணிக்கும், மிகத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது, சிவப்பு வண்ணமே முதலில் தென்படும். எனவேதான், முக்கிய இடங்களான, பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவ மனை மற்றும் ஆபத்து என குறிக்கும் சமிக்ஞை. விளக்குகளை நாம் எளிதில். தொலைவிலிருந்தே கண்டறிய சிவப்பு வண்ண விளக்குகளே வைக்கப்படுகின்றன.
ராமனின் அரசுப்பணி :
இராமன்1888, நவம்பர் 7 ம் நாள் வெங்கடேசுவர அய்யர் மற்றும் பார்வதி அம்மாளின் மகவாகப் பிறந்தார். தந்தை கணிதம் மற்றும் இயற்பியல் பேராசிரியர். அவரது இயற்பெயர் :சந்திரசேகர வேங்கடராமன். சென்னை மாநிலக் கல்லூரியில், இராமன் 1902 ம் ஆண்டில் பட்டப்படிப்பு(B.A) பயின்றார்; அதில் தங்கப் பதக்கம் பெற்றார். அதே ஆண்டில் இராமன் லோகசுந்தரி என்ற பெண்ணை மணம் முடித்தார். கொல்கொத்தாவில் அரசின் நிதி துறையில், இணை பொதுக்கணக்கியல் அதிகாரியாக சேர்ந்தார். இராமன் தனது அறிவியல் ஆர்வத்தை புதைத்துவிட்டு தன் தந்தையின் நச்சரிப்புத் தாங்காமல் எஃப்.சி. எஸ். தேர்வு எழுதினார். அதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்று அப்போதுதான் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
ராமனைப் பந்தாடிய பிரிட்டிஷ் அரசாங்கம்.!
இராமனும், ஆஷூபாபுவும் சேர்ந்து எழுதிய அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்று 1908ல் லண்டன் ராயல் கழக அறிவியல் பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் விளைவாக பிரிட்டிஷ் அரசு அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் இராமனை முதலில் ரங்கூனுக்கும், பிறகு நாக்பூருக்கும் தூக்கி பந்தாடியது. 1917வரை அவர் பலமுறை பல ஊர்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். முடிவில் மனம் நொந்த இராமன், அந்த வேலையைத் தூரவீசிப்போட்டுவிட்டு, கல்கத்தா திரும்பினார். அப்போது டிராம் வண்டியில் பயணம் செய்த இராமன் . ஒரு கட்டிடத்தில் ‘விஞ்ஞான வளர்ச்சிக்கான இந்தியக் கழகம்’ என்ற பலகை தொங்குவதைக் கண்டார் நுழைந்தார்.. உடனே அங்கேயே தங்கி, அறிவியல் ஆராய்ச்சிகள் செய்வதற்கு அனுமதியும் பெற்றார். தனது அரசுப் பணியை உதறித் தள்ளி விட்டு, அறிவியல் ஆராய்ச்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தன் இருப்பிடத்தையும் அந்த ஆராய்ச்சிக்கூடத்துக்கே மாற்றிக் கொண்டார். இராமன் பின்னர். கல்கத்தா அறிவியல் கல்லூரியில் அஸ்தோஷ் முகர்ஜி மூலம் கல்லூரி ஆசிரியர் ஆனார்.ஆனால் சம்பளம் முந்தைய வேலையைவிட பாதிதான் கிடைத்தது. ஆனால் அங்கு நிம்மதியாக பணி புரிந்தார்…
நோபல் பரிசு
நோபல் பரிசுக்கு இராமன் விண்ணப்பித்து விட்டு, அங்கு செல்ல பயணச் சீட்டும் எடுத்துவிட்டார். தனக்கு காட்டாயம் நோபல் பரிசு கிடைக்கும் என்ற அசாத்திய நம்பிக்கை அவரிடம் இருந்தது. அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை, நோபல் பரிசும் கிடைத்தது. ஆனால் நோபல் பரிசு கிடைத்ததை அறிவிக்கும் நோபல் கமிட்டியின் தந்தி இராமனுக்குப் போய் சேராமல் தாமதம் ஆனது. காரணம், அந்த தந்தியை இராமனிடம் கொடுக்க விருப்பம் இன்றி, வைஸ்ராய் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். தனது வெளிநாட்டு நண்பர்கள் மூலம் தனக்குப் பரிசு கிடைத்த தகவலை இராமன் அறிகிறார். நோபல் பரிசை நேரில் பெற வேண்டாம் என வெள்ளை அரசு ராமனிடம் கூறுகிறது. மேலும் .நோபல் பரிசுக்கு ஏற்புரை வழங்க இராமனுக்குத் தடையும் விதிக்கிறது வெள்ளையர் அரசு. .ஆனாலும் கூட, இராமன், தடையை மீறி ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் சென்று நோபல் பரிசினைப் பெறுகிறார். பரிசு பெற்ற இராமன், பேச அனுமதி கேட்டுநோபல் விழாவில் இராமன் பேசினார். அவர் நான் பெற்ற நோபல், பரிசை, அதற்கான பணத்தை, அங்கே இந்தியச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போர் வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என முழங்கினார். ஆனால் அவருக்கும் இன்னும் ஒரு சோகம். அன்று இராமன் நோபல் பரிசு பெற்ற நிகழ்வை யாருமே படம் பிடிக்கவில்லை.
நோபல் பரிசு நிகழ்வு..!
ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நோபல் பரிசு வழங்கும் தினம். அங்கு ஓர் இந்தியரும், அவரது மனைவியும் வந்திருந்தனர்... வந்திருந்தோர் அனைவரும் அவரை இலக்கியத்திற்குப் பரிசு வாங்க வந்தவர் என்றே நினைத்தனர்.. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்காக இராமன் பெயர் அறிவிக்கப்பட்டு அழைக்கப்பட்டார்.. பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.ஏனெனில் இதுவரை வெள்ளையர் இல்லாத யாரும் நோபல் பரிசு பெற்றதே இல்லை. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர்.சி.வி இராமன்தான்..!
1930 ம ஆண்டு நோபல் பரிசுக்கு பலரும் அணுக்கள் தொடர்பாகவே ஆராய்ந்திருந்தனர். அப்போது ஒளியைப்பற்றி ஆராய்ந்தவர் இராமன் ஒருவர்தான். நோபல் அறக்கட்டளை கொள்கைப்படி, நோபல் பரிசு அமைதியான வழியை நாடும் கண்டுபிடிப்புக்காகவும், கண்டுபிடிப்பு அனைவராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனபதே.. இந்த இரண்டு கொள்கைகளுக்கும் உட்பட்ட ஒரே கண்டுபிடிப்பு “ராமன் விளைவு” மட்டுமே! இதுவே இராமனுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது…உலகிலேயே கண்டுபிடிப்பிற்காக குறைந்த நாட்களில் ஆய்வு செய்து முடித்து –(இரண்டு ஆண்டுகள்- நோபல் பரிசு பெற்றவர் இராமன் அவர்கள் தான்!
ராமனும் ஆல்கஹாலும்..!
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.இராமன்தான். அவரை இங்கிலாந்து அரசாங்கம் அழைத்து “சர்‘ பட்டம் வழங்கி கவுரவித்தது. அப்போது அறிஞர்கள் ஒன்று கூடி அவரை விருந்துக்கு அழைத்தனர். அங்கு ராமனுக்கும் ஒரு கோப்பை மது வழங்கப்பட்டது.” “ஐரோப்பியரின் கவுரவச் சின்னம் மது. அருந்துங்கள்!” என்றனர். “ஆல்கஹால் மீது இராமன் விளைவைப் பார்த்துவிட்டீர்கள். இப்போது இராமன் மீது ஆல்கஹால் விளைவைப் பார்க்க விரும்புகிறீர்களா?” என்று சொல்லிச் சிரித்தஇ ராமன்.” மன்னிக்க வேண்டும்.அருந்துவதற்கில்லை” என்று கறாராகக் கூறி மறுத்து விட்டார் இராமன்.
உலகிலேயே நோபல் பரிசை செலவிடமுடியாமல் போனவர்களில் ராமனும் ஒருவர்.
இராமன் தனது பிற்காலத்தில் ஒரு கல்விமையம் அமைக்க எண்ணினார். எனவே மொத்த பணத்தையும்கோபாலராவ் வங்கி” என்ற தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார், நிறுவனம் திவாலாகிப் போனது.மொத்த பணத்தையும்..இராமன் இழந்தார்.
: ராமனின் கண்டுபிடிப்பு பயன்பாடு & பெருமை
தோல் வாத்தியக்கருவிகளின் அதிர்வு, ஒலி, அகஒலி பற்றியும் சர். C.V.ராமன் ஆராய்ச்சி செய்திருக்கிறார்.
- சர்.C .V .இராமனுக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
- இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான “மேட்யூச்சி” பதக்கம், 1929 ஆம் ஆண்டில் ராமனுக்கு வழங்கப்பட்டது.
- , பிரிட்டிஷ் பேரரசால் “நைட் ஹீட்” என்ற பட்டம், கொடுக்கப்பட்டது
- இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டமும் இராமனுக்கு வழங்கப்பட்டது.
- , 1935ல் மைசூர் அரசர் “ராஜ்சபாபூசன்” பட்டம்,மரியாதை நிமித்தம் கொடுக்கப்பட்டது.
- 1941 ல், பிலிடெல்பியாநகர் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கான “ பிராங்க்ளின் பதக்கம்” தரப்பட்டது.
- 1954 ல் இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டத.
- 1957 ல், லெனின் அமைதிப் பரிசு இராமனை வந்தடைந்தது.
சர். C.V.ராமன் 1943ல் Dr.கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து ‘Travancore Chemical and Manufacturing Co. Ltd-ன்னு ஒரு கம்பெனி தொடங்கினார். அதன் மூலமாக தென்னிந்தியாவில் 4 தொழிற்சாலைகள் உருவாயின..
சர். சி.வி. இராமன்.1970 , நவம்பர் 21 ல் இயற்கை எய்தினார்.
– பேரா.சோ.மோகனா
விடுதலைப்போரும் இந்திய விஞ்ஞானிகளும்! – ஆயிஷா. இரா. நடராசன்
‘ஒரு வங்காள வேதியியலாளரின் வாழ்வும் அனுபவங்களும்’ என்று ஒரு புத்தகம். எழுதியவர் இந்திய வேதியியலின் தந்தை பிரஃபுல்ல சந்திரரே எனும் பி.சி.ரே. தன் பள்ளிக்கூட ஆசிரியர் கேசப சந்திர சென் மற்றும் கல்லூரி ஆசிரியர் சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்கள் தனக்கு ஊட்டிய தேசப் பற்றினைப் பற்றி எழுதும் ரே, இந்திய விடுதலையை நோக்கிய அஹிம்சைப் போராட்டம் மற்றும் புரட்சிப் போராட்டம் இரண்டையுமே தீவிரமாக ஆதரித்தவர். ஒரு லட்சம் விடுதலைப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் அரசு சிறை பிடித்தபோது அதில் ஒருவராக இணைந்ததால் சிறைவாசம். அதே சமயம் வங்காள கவர்னராகக் கொடியவன் தாமஸ்கிப்சனை பணி அமர்த்தி – இங்கிலாந்து இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் தில்லி தர்பார் (1911) நடத்தியபோது – தீவிரவாத விடுதலைப் போராளிகள் வில்லியம்ஸ் கோட்டைமீது குண்டுவீசிட – தான் கண்டுபிடித்த ஆல்கைல் பாதரச நைட்ரைட்டை ரகசியமாக, தாராளமாக வழங்கி உதவுதல் என இருபுறமும் உழைத்த மாபெரும் போராட்ட நாயகராக நம் வேதி அறிஞர் பி.சி.ரே.வைப் பார்க்கிறோம். இந்திய அறிவியலாளர்களின் விடுதலை நோக்கிய பங்களிப்பிற்கு இது பதம்.

1947, ஆகஸ்ட் 15ல் நம் இந்தியப் பெண் இயற்பியல் அறிஞர் பிபாசவுத்ரி மான்செஸ்டிரில் (இங்கிலாந்து) இருந்தார். அவர் ஒரு காஸ்மிக் கதிர்வீச்சு ஆய்வாளர். அன்றைய காலத்தில் நல்லெண்ணத்தின் அடையாளமாக நாள் முழுவதும் நம் நாட்டிற்காக காந்தி வழியில் உண்ணாநோன்பு இருந்தார். சக விஞ்ஞானிகள் யாவருமே பிரிட்டிஷ்காரர்கள். இதை அறிந்து அவரையும் நம் நாட்டையும் கேலி செய்ய இரண்டு வேளை கூடுதலாகச் சாப்பிட பலவிதமான மாமிச உணவுகளுக்கு அந்த ஆய்வக உணவு விடுதி (காண்டீன்) யில் ஆர்டர் கொடுத்தார்கள். அவர்களது கேலி கிண்டல் என எதையுமே நாள் முழுதும் பிபா சவுத்ரி பொருட்படுத்தவில்லை. எல்லாம் முடிந்து மாலையில் விடுதியில் உணவுக்கான கட்டணம் செலுத்தபோன அவர்களுக்கு அதிர்ச்சி. பிபா சவுத்ரி ஏற்கெனவே அவர்கள் சாப்பிட்ட எல்லாவற்றுக்கும் பில் கட்டியிருந்தார். அவர்கள் கேட்டபோது ‘எங்கள் இந்திய விடுதலைக்காக உங்களுக்கு நான் வைத்த விருந்து’ என்று பதில் வந்தது. நெத்தியடி.
இந்திய அறிவியலின் வரலாறும், விடுதலைப் போராட்ட வரலாறும் பின்னிப் பிணைந்து பயணித்த ஒன்றுதான் என்பதற்கு இதுபோல பல சான்றுகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். தேசத்தின் நலனுக்காகவே அயராது உழைத்த நம் இந்திய விஞ்ஞானிகளின் மண் மீதான பற்றும் தேசபக்தியும் சற்றும் குறைந்தது அல்ல.
நம் பழம்பெரும் தேசத்தைக் காட்டுமிராண்டிகளின் நாடு என அழைத்து அதைக் கலாச்சாரரீதியில் மேம்படுத்துவதே தங்களது வருகையின் நோக்கம் (Civilicing Mission) என்று களமிறங்கிய ஆங்கிலேயர்கள் ஆங்கிலம் படித்து உயர்ந்து ஆய்வுகளிலும் ஈடுபட்டு சக பிரித்தானிய – உலக விஞ்ஞானிகளுக்கு இணையாக வளர்ந்த இந்திய அறிஞர்களைத் தங்களது கொத்தடிமைகளைப் போல கருதினார்கள். அவர்களை வளரவிடாமல் காலனித்துவ ஆட்சி பல அவமதிப்புகளைச் செய்தது. இவற்றை சுதேசி இயக்கம் மிகக் கடுமையாக எதிர்த்தது.
1904ல் இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒரே இந்தியரான தாதாபாய் நவ்ரோஜி இதுபோன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி ஆற்றிய நாடாளுமன்ற உரை உலகின் கவனத்தை ஈர்த்தது. அறிஞர் ஜெகதிஷ் சந்திரபோஸ் விரிவுரையாளராகப் பதவியேற்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இணைந்தபோது அங்கே பணியில் இருந்த வெள்ளைக்கார விரிவுரையாளர்களைவிட எட்டுமடங்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து மூன்று வருடங்கள் அவர் ஊதியப் புறக்கணிப்பு செய்தார். பணி செய்வார். ஆனால் ஊதியம் பெறமாட்டார். ஆங்கிலேயர் ஆட்சியின் வெள்ளைப் பேரினவாதம் (Apartheid) என்று இதை தாதாபாய் நவ்ரோஜி குறிப்பிட்டார்.
மேலே குறிப்பிட்ட வேதி அறிஞர் பி.சி.ரே.வும் இதேபோன்ற அவமானங்களை அனுபவித்து இருக்கிறார். 1888ல் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று திரும்பி இருந்தபோதிலும் பேராசிரியர் பணியிலோ ஆய்வகப் பணியிலோ இடமளிக்காமல் ஆங்கிலேயர்கள் புறக்கணித்தார்கள். கொல்கத்தா பல்கலைக்கழக வேதியியல் ஆய்வகத்தின் கதவில் ‘இந்தியர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி கிடையாது’ என்று அறிவிப்பு தொங்கியதாக மேற்கண்ட நூலில் பி.சி.ரே. ஆத்திரத்தோடு குறிப்பிடுகிறார்.

‘இந்திய மக்களுக்கு அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளை கையாள தொழில்துறை வேலைவாய்ப்பு கல்வி போதும். நமது நோக்கம் அறிஞர்களை உருவாக்குவது அல்ல, அடிபணிந்து உழைக்கும் ‘விஷயம்‘ தெரிந்த வேலையாட்களே’ என்று 1854ல் இந்தியா வந்த சார்லஸ் உட்கல்விக்குழு பகிரங்கமாக அறிவித்தது. இவற்றை எதிர்த்து 1876ல் மஹேந்திரலால் சர்க்கார், இந்தியன் அசோசியேஷன் ஃபார் தி கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் எனும் இந்திய அறிவியல் கழகத்தை ஏற்படுத்தினார். மஹேந்திரலால் சர்க்கார் ஒரு மருத்துவர். இந்தியாவின் முதல் எம்.டி. பட்டம் பெற்றவர. பவு பஜார் வீதியில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டாலும், நம் தமிழகத்தில் இருந்து சென்ற சி.வி. ராமன் உட்பட பலரை அது ஈர்த்தது. அந்த நாட்களில் அந்த அறிவியல் ஆய்வகத்தின் வாசல் கதவில் ‘ஆங்கிலேயர் உள்ளே நுழைய அனுமதி இல்லை’ என்று அறிவிப்புப் பலகை வைத்து நம் விஞ்ஞானிகள் பதிலடி கொடுத்த சம்பவமும் உண்டு.
1888ல் இந்திய தேசிய காங்கிரஸ் மூன்றாவது மாநாடு அலகாபாத்தில் நடந்தது. தொழில்துறை, வேலைக்கல்வி என்கிற போர்வையில் தரமற்ற – கீழ்மட்ட அறிவியல் கல்வி தரும் காலனிய ஆட்சியாளர்களை அது கடுமையாகச் சாடியது. 1904ம் ஆண்டு இந்திய அறிவியல் தொழில்நுட்பத் தொழில்துறை கழகம் எனும் விசேட அமைப்பு ஒன்று மும்பையில் தொடங்கப்பட்டது. சுதேசி இயக்கம் பெரிய அளவில் பொதுமக்கள் இடையே நன்கொடை திரட்டி பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி, மற்றும் விரிவுரையாளர் பதவிகளை பிரத்யேகமாக இந்தியர்களுக்கு என்றே ஏற்படுத்திட அந்த நிதியை வழங்கி காலனித்துவ ஆட்சியாளர்களுக்குச் சவாலாக ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. அறிஞர் அசுடோஷ் முகர்ஜி உட்பட பலர் அதனைத் தாங்கள் பணிபுரிந்த கல்வி நிலையங்களில் செயல்படுத்தவும் முன்வந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் நம் தேசிய-அறிவியல்வாதப் பார்வை இருவிதமான போக்குகளை கொண்டிருந்தது. நமது சுதேசி இயக்கவாதிகள் தொழில் மற்றும் அறிவியல் மயமாதலில் ஜப்பானை முன்மாதிரியாகப் பார்த்தார்கள். அதேசமயம் பாரம்பரிய இந்திய அடையாளங்களை அறிவியல் ரீதியில் மறுபார்வைக்கு உட்படுத்துவது – சாதி, மத, மொழி அடையாளங்களை மீறி ஒரு தேசமாக எழுச்சிகொள்ளுதல்.
இது அன்று நமது அறிவியல் பாதையிலும் எதிரொலித்ததை பார்க்கலாம். கலாச்சார மறுவாசிப்பு மற்றும் நவீனத்துவ அறிவு எழுச்சி, இரண்டையும் நம் மண் சார்ந்து செப்பனிடுதல் எளிதாக இருக்கவில்லை. ஏனெனில் நம் ரத்தம், சதை யாவற்றிலுமே காலனித்துவ அடிமைத்தனமும் கலந்துவிட்டது. இதனால் அறிவியலாளர்கள் தங்களது விடுதலைப் போராட்டப் பங்களிப்பை நேரடியாக அன்றி ஒருவகை பகடி மூலமே செய்யவேண்டிய நிலை. உதாரணமாக, நாம் பி.என்.போஸ் என்று அழைக்கப்பட்ட பிரமாத்தநாத் போஸ் எனும் அறிவியல் அறிஞரை எடுத்துக்கொள்வோம். 1877ல் லண்டன் புனித சேவியர் கல்லூரியில் படித்து முடித்து, ரவீந்திரநாத் தாகூரின் உற்ற தோழர் ஆனவர். தாது இயலில் உலக ஆய்வு அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். 1880ல் ஆங்கிலேயர்களின் இந்திய புவியியல் கழகத்திலல் இணைக்கப்படுகிறார்.
அவரைவிட பத்தாண்டு இளையவரான டி.ஹாலந்து எனும் பிரிட்டிஷ்காரரை பி.என். போசுக்கு மேலே இயக்குநராக நியமித்தார்கள். கூடவே போஸ் தனக்குத் தெரிந்ததை எல்லாம் அவருக்குச் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை வேறு. இந்தியா முழுதும் இரும்புத் தாது பற்றி சர்வே எடுத்த போஸ் அதை பிரிட்டிஷார் கையில் தராமல் ஜாம்ஷெட்பூர் டாட்டாவுக்கு அனுப்பி டாட்டா ஸ்டீல்ஸ் தொடங்கக் காரணமாக இருந்தது வரலாறு. இந்திய வளங்களைக் கொள்ளைகொண்டு போக ஆங்கிலேயர்க்கு உரிமை இல்லை எனும் நிலைப்பாடோடு தன் பதவியையும் ராஜினாமா செய்தவர் அவர். கடுமையாக ஆத்திரமடைந்த ஆட்சியாளர்கள் அவர் மீது கைது வராண்டை ஏவினார்கள். மூன்றாண்டுகள் தலைமறைவாக இருந்தார் பி.என்.போஸ்.

மருத்துவக் கல்வியில் செவிலியர், கம்பவுண்டர் போன்ற கல்வி களில் மட்டுமே இந்தியர்களுக்கு முன்னுரிமை என்ற நிலை. அப்போது மருத்துவக் கல்வி ஆங்கிலேயர்களுக்கு இணையாக இந்தியர்களுக்கு வழங்கிட 1903 முதல் 1907 வரை தொடர்ந்து ஐந்தாண்டுகள் காங்கிரஸ் மாநாடு நடந்தபோதெல்லாம் குரல் எழுப்பி கே.டி.டெலாஸ், பி.என்.சல், சூரஜ் சக்ரவர்த்தி மற்றும் ராஜேந்திர சந்திரா போன்றவர்களின் கடும் போராட்டத்தின் விளைவாகவே 1910 முதல் கொல்கத்தா சென்னை (மதராஸ்) மும்பை (பாம்பே) என்று மருத்துவ கல்வி நிலையங்களை இந்தியர்களுக்கும் சேர்த்து திறந்தார்கள்.
மருத்துவம் மட்டுமல்ல, இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு உரிமையும் போராடி ஆதிக்க ஆட்சியாளர்களான பிரிட்டிஷாரிடமிருந்து நாம் பெற்றதுதான். நாடெங்கும் அறிவியல் துறை சார்ந்து – அதன் உற்பத்தி உறவு சார்ந்து பலதரப்பட்டவர்கள் இருந்தார்கள். இந்திய தேசிய நீரோட்டத்தில் அறிவியல் சார்ந்த யாவரையும் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியம் விரைவில் உணரப்பட்டது. 1900களின் தொடக்கத்தில் மிகவும் தந்திரமாக ஆங்கிலேய அரசு ரயில்வேதுறை வல்லுநர் மாநாடு முதல் சுகாதார பணியாளர் மாநாடு வரை, தனது செயல்திட்டங்கள், தொழில் நுட்பங்களைக் காட்சிப்படுத்திடவும் அதிகாரத்தைச் செலுத்தவும் நடத்திவந்தது. இந்திய அறிவியல் மாநாட்டுக்கழகம் (Indian Science Congress Association) எனும் அமைப்பு 1914ல் தொடங்கப்பட்டது. அனைத்து வகை அறிவியல் தொழில்நுட்பத் துறைகளிலும் இருந்த இந்தியர்களை ஒருங்கிணைத்தல், மேலும் இந்தியர்களுக்கு அறிவியல் ஆய்வு, அயல்நாட்டு ஆய்வகங்களில் இடம் கிடைத்து பயணிக்க பொருளுதவி, போன்றவற்றில் முன்னுரிமை கேட்டு போராடுதல் போன்ற நோக்கங்களோடு இந்திய மக்களிடையே மூடநம்பிக்கைகளை வீழ்த்தி, அறிவியல் மனப்பான்மையையும் தேச பக்தியையும் விதைத்தல் எனும் நோக்கத்தையும் அது இணைத்துக்கொண்டது. ஆண்டுதோறும் இந்திய அறிவியல் மாநாடு அப்போதிலிருந்து – விடுதலைக்குப் பிறகும் – இன்றுவரை நடந்து வருகிறது.
1930ல் சி.வி. ராமன் நம் இந்தியாவின் முதல் அறிவியல் துறை நோபல் பரிசை வென்றது மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். தனது ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பை அவர் இந்தியன் அசோஷியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் – அறிவியல் கழகத்தில் நிகழ்த்தினார். பிரிட்டிஷ்காரர் நடத்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வகத்தில் இல்லை. ஆட்சியாளர்கள் அவர் நோபல் பரிசு பெற சுவீடன் செல்லலாம். ஆனால் அங்கே உரை நிகழ்த்தக்கூடாது என்று தடை விதித்தார்கள். சுவீடன் தேசத்தின் இளவரசரிடமிருந்து பரிசை பெற்றுக்கொண்ட அறிஞர் சி.வி. ராமன் இரண்டு நிமிடம் பேச அனுமதி கேட்டுப் பெற்றார். ‘இந்தப் பரிசை இந்தியச் சிறையில் வாடும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்’ என்று அறிவித்து நாடே ஒருங்கிணைந்து காலனித்துவ எதிர்ப்புப் போரில் திரண்டு நிற்கிறது என்பதை உலகே அறியச் செய்தார்.
மேக்நாத் சாஹாவும் சத்யேந்திரநாத் போசும், அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மன் மொழியில் வெளியிட்ட சார்பு தத்துவம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட முயன்றபோது அதற்கு பிரிட்டிஷ் அரசு தடைவிதித்ததும் பிறகு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே நேரடியாகத் தலையிட்டு சார்பு தத்துவம் குறித்த முதல் ஆங்கிலப் பதிப்பை வெளிவரவைத்ததும் வரலாறு. இதுபோன்ற நிறைய சம்பவங்கள் உண்டு.
ஆங்கிலேய அரசு இந்தியத் தொழில்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளை ஒன்றிணைக்கும் அவசியத்திற்காக ‘நேச்சர்’ அறிவியல் இதழ் ஆசிரியர் சர் ரிச்சர்டு கிரிகரி தலைமையில் தொழிற்துறை மாநாடு ஒன்றை (Industries conference) 1933ல் நடத்தியது. வெலிங்டன் பிரபு அப்போது வைஸ்ராயாக இருந்தார். இதன் ஒரு அங்கமாக அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சித் துறை (Department of Scientific and industrial Research) எனும் தனித்துறை தொடங்கப்பட்டது. அத்துறையில் இந்திய அறிவியல் தொழில்நுட்பவாதிகள் யாருமே இடம் பெறவில்லை. நம் தமிழகத்தைச் சேர்ந்த ஆற்காடு ராமசாமி முதலியார் மூன்றாண்டுகள் கடுமையாகப் போராடி இந்த அமைப்பையே இரத்துசெய்ய வைத்தார். அப்போது அவர் வைஸ்ராயின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்தார். 1940ல் தற்போதுள்ள கவுன்சில் ஃபார் சைன்டிஃபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் (CSIR) என்று அது மாற்றப்பட்டது. சாந்தி ஸ்வரூப பட்னாகர் எனும் இந்திய விஞ்ஞானி அதன் தலைமை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

இன்று இந்தியா உலக அளவில் பிரம்மாண்டத் தொழில்துறை நல்லரசாக வளர்ந்து நிற்கிறது. அறிவியல் கல்விச் சாலைகள், பிரம்மாண்ட ஆய்வுக்கூடங்கள், மிகப் பெரிய தொழில்துறை, ஐ,ஐ,டி உட்பட ஆய்வுக் கல்வி நிறுவனங்கள், வானியல், அணுவியல், விண்வெளியியல், ராணுவத் தளவாட இயல் என்று நாம் மிளிராத துறை இல்லை. இதற்கெல்லாம் காரணம் விடுதலைக்கு முன் நடந்த பிரம்மாண்ட விவாதம் ஒன்றும், அதன் ஊடாக நியமிக்கப்பட்ட சில வல்லுநர் குழுக்களும்தான் என்று அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். மகாத்மா காந்தியடிகள் கிராம சுயராஜ்யத்தை முன்மொழிந்து குடிசைத் தொழில்களை மேம்படுத்தி ஆதரித்ததன் பின்னனியில் அறிஞர் பி.சி.ரே. போன்றவர்கள் இந்திய அறிவியல் மாநாட்டில் பாரம்பரிய கிராமியத் தொழில்களைச் சார்ந்து செயல்படத் தூண்டியபோது அதை மேக்நாத் சாஹா உட்பட பல விஞ்ஞானிகள் எதிர்த்தார்கள். தொழிற்சாலைகளை அமைத்து தொழிற்துறையை மேம்படுத்தி சோவியத் ரஷ்யாவின் வழியில் பிரம்மாண்ட வளர்ச்சியை முன்வைத்தே அறிவியல் வளர்க்கப்படவேண்டும் என வாதிட்டனர்.
அப்போதைய காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் (1933) சுபாஷ் சந்திரபோஸ், சாஹாவின் குரலை ஏற்றார். 1938ல் ஜவஹர்லால் நேரு (பின்நாட்களில் முதல் பிரதமர்) தலைமையில் தேசிய திட்டக் கமிட்டி ஒன்றை காங்கிரஸ் அமைத்தது. இதில் கனிமவளம், நீர்பாசனம், பொதுசுகாதாரம், தொழில்நுட்பம், கல்வி உட்பட 29 துணைக்குழுக்களை காங்கிரஸ் நியமித்தது. அறிவியல் அறிஞர் மேக்நாத் சாஹாவின் தலைமையில் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. பொதுவாகவே இதுபோன்ற குழுக்களில் பல விஞ்ஞானிகளும் பங்காற்றினர் என்றாலும் சாஹா தலைமையிலாக தொழில்நுட்பக் கல்வி திட்டக்குழுவில் பீர்பால் சஹானி, ஜெ.சி. கோஷ், நசீர் அகமது எனப் பல்துறை விஞ்ஞானிகள் இருந்தனர். நம் நாட்டின் இன்றைய தொழிற்கல்வி கொள்கை உட்பட பல அற்புதங்களை அந்த கமிட்டிகளே அடித்தளமிட்டு சுதந்திரத்திற்கு முன்பே அமைத்துக் கொடுத்தன. எனவே இந்திய விடுதலைப் போராட்டத்திடமிருந்து அன்றைய விஞ்ஞானிகளின் பங்களிப்புகளை தனித்துப் பார்க்கவே முடியாது. நம் விடுதலைத் திருநாளின் பவளவிழா ஆண்டில் அந்த மாபெரும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றுவது நம் அனைவரின் கடமை ஆகும்.