அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? – நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுரு
புத்தக விமர்சனம்
மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதமும், இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சியும்
கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் எழுதியுள்ள இந்தப் ‘பெரிய புத்தகம்’ மின்பதிப்பில் மொத்தம் 639 பக்கங்களைக் கொண்டுள்ளது. மிகக் கடினமான ஆய்வு, நுணுக்கமான ஆவணங்களுக்கு சாட்சிகளாக புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் இருக்கின்றன. இந்தப் புத்தகம் பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முக்கியத்துவம் பெற்ற காலத்திலிருந்து இந்திய அரசியல் நடைமுறையில் இருந்து வந்திருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளடக்கி இருக்கிறது. மாநிலத்தில் கடைப்பிடித்த அரசியல் மற்றும் தேர்தல் உத்திகளைத் தேசிய அளவில் முயன்று பார்க்கவும், சர்ச்சைக்குரிய ‘குஜராத் மாடல் வளர்ச்சியை’ தேசிய அளவில் சந்தைப்படுத்துவதற்குமான தளத்தை உருவாக்கவும் 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் மோடிக்கு வழியேற்படுத்திக் கொடுத்தன.
மூன்று பாகங்களாக உள்ள இந்தப் புத்தகத்தின் முதலாம் பாகத்தில் ஆட்சியை வென்றெடுக்க மோடி கையாண்ட உத்திகளை ஜாஃப்ரெலோட் அலசியிருக்கிறார். மோடியின் ஆவேசமான சொல்லாட்சி, ஆத்திரமூட்டும் சொற்களஞ்சியம், தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தகவல்தொடர்பு பாணி, எவ்வித தடையுமின்றி போட்டியாளர்களை – குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களை – பரம்பரை, மேல்தட்டினர், ஊழல் நிறைந்தவர்கள், செயல்திறனற்றவர்கள் என்று விமர்சித்தது போன்றவை 2014, 2019 பொதுத்தேர்தல்களில் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தன. அரசியல் விளையாட்டின் புதிய ஜனரஞ்சகவாதி என்று கருத்துரையாளர்கள் அவரைக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினர்.
இந்திராகாந்தி மட்டுமே ஜனரஞ்சகவாதி என்று அழைக்கப்படக்கூடிய ஒரே இந்தியப் பிரதமராக இருந்தார். காங்கிரஸ் கட்சியிடம் இருந்த புகழ்பெற்ற கூட்டணி அமைப்பைத் தகர்த்து, அவர் ஒரு தேசியத் தொகுதியை 1971ஆம் ஆண்டில் உருவாக்கினார். எதிர்ப்பாளர்கள் அவரைப் பாராட்ட, ஆதரவாளர்கள் அவரது கால்களில் விழுந்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அமைப்பின் பலத்த ஆதாரமாக இருந்து வந்த பிராந்திய அளவிலான மேல்தட்டினர் அதற்குப் பிறகு பொருத்தமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். பலதரப்பட்ட நலன்களுக்கான கூட்டணி என்பதிலிருந்து, தர்பார் என்று சொல்லும் அளவிற்கு கட்சி மாற்றப்பட்டது.
இதேபோன்ற ஒன்றே மோடி குஜராத்தில் முக்கியத்துவம் பெற்ற போதும் நடந்தது என்று ஜாஃப்ரெலோட் கூறுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட தொண்டர்களைக் கொண்ட ஹிந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ், தலைவர் என்பவர் கூட்டத்திற்கு அடிபணிந்தவராக இருக்க வேண்டும் என்றே நம்பி வந்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே மோடியிடமிருந்த தலைவர் சார்ந்த அரசியலை அந்த அமைப்பு ஏற்றுக் கொண்டது. ஜீன்ஸ் அணிந்த நவீன இளம் பெண்கள், ஆண்களைக் கொண்ட இணை ஆதரவு அமைப்பை மோடி உருவாக்கினார். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த பிறகு இந்தியாவிற்குத் திரும்பி வந்தவர்கள். கட்சியின் வல்லமைமிக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவை நிர்வகித்த அவர்கள் பொதுக்கருத்தில் ஏற்படும் ஊசலாட்டங்களுடன் தொடர்பில் இருந்து வந்தனர். மோடி, அவரது அரசியலின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் அவர்கள் தடை செய்தனர்.பாரம்பரியம் மட்டுமல்லாது நவீனத்துவ உலகையும் சுற்றி வருபவராக இருப்பதால் பிரதமர் வாக்காளர்களைக் கவர்கிறார் என்று ஜாஃப்ரெலோட் கருதுகிறார். உண்மையில் இந்த விவரம் கவனிக்கத்தக்கது. அயோத்தி கோவிலின் துவக்க விழா, லுடியன்ஸ் தில்லியை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற விழாக்களில் மோடி எவ்வளவு எளிதாக விரிவான மதச் சடங்குகளுக்குத் தலைமை தாங்கினார் என்பதை நினைவு கூர்ந்து பாருங்கள். அவர் அதே அளவிற்கு ஸ்மார்ட் போன் துவங்கி சமூக ஊடகங்கள், விண்வெளி, சந்திரன் வரையிலும் தொழில்நுட்பத்திலும் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். சமூக ஊடகங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட முதல் அரசியல்வாதியாக அவரே இருக்கிறார். ஆர்வமுள்ள, ஆனால் அதிருப்தியுடனிருந்த கோபமான இளைஞர்கள், யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று இருபிரிவினரை அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த குழுக்களாக அடையாளம் கண்டு அணுகிய முதல் அரசியல்வாதியாகவும் அவரே இருந்தார். தாராளமயமாக்கப்பட்ட இந்தியா வழங்கியிருந்த பலன்கள் தங்களுக்குத் தொடர்ந்து கிடைக்காமல் போனதால் கண்டு கொள்ளப்படாதவர்களாக தங்களை உணர்ந்தவர்களாக அந்த இரு பிரிவினரும் இருந்தனர்.
மோடியின் திட்டம் மிகுந்த பேராசை கொண்டது. ஒன்றுபட்ட ஹிந்து தேசம் என்ற அவரது கனவுத் திட்டத்திற்கு சாதிப் பிளவுகள் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றை நடுநிலையாக்க முயன்றார். அவரது அரசியலின் இந்தப் பரிமாணமே ஜனரஞ்சகம் என்ற வில்லில் ‘தேசியவாத ஜனரஞ்சகம்’ என்ற புதியதொரு நாணை ஏற்றியது என்று ஜாஃப்ரெலோட் கூறுகிறார். பெரும்பாலும் ஜனரஞ்சகவாதிகள் நிறுவனங்களை ஊழல் நிறைந்தவை, செயல்படாதவை என்று தாக்கி, ஊடகங்கள், குடிமை சமூக அமைப்புகள் போன்ற இடைநிலை நிறுவனங்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டு, நேரடியாக மக்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமே அதிகாரத்திற்கு வந்திருக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோர், தங்களுக்குச் ‘சொந்தமில்லை’ என்று கருதப்படுகிற சமூகப் பிரிவினருக்கு எதிராக பெரும்பான்மையினரின் கருத்தை அவர்கள் ஒன்று திரட்டுகிறார்கள். மோடி இத்துடன் ஹிந்து தேசத்தை உருவாக்குவது என்ற ஜனரஞ்சகத்திற்கான நான்காவது பரிமாணத்தையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் என்ற கருத்தை ஜாஃப்ரெலோட் முன்வைக்கிறார். அதன் விளைவாக சிறுபான்மையினர் அவர்களுக்கான இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், இனரீதியான ஜனநாயகம் நாட்டில் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, மக்கள்நலன் அரசு என்பதையும் மோடி அரசு கைவிட்டிருக்கிறது. ஆய்வறிஞர்கள் அந்த மாற்றை ‘தொழில்முனைவு அரசு’ என்பதாகக் குறிப்பிடுகின்றனர். வேலைக்காக மக்கள் அரசை எதிர்பார்க்கக் கூடாது; பக்கோடா விற்க வேண்டி வந்தாலும், தங்களைத் தாங்களே அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே அதன் சாராம்சம். முதலாவது ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் சமூக உரிமைகளை மக்களுக்கு வழங்குகின்ற பல கொள்கைகளை இயற்றித் தந்தது. தற்போதைய ஆட்சியிலோ கட்டுப்படியாகாத விலையில் இருக்கின்ற எரிவாயு சிலிண்டர்கள் இல்லாமல் எரிவாயு இணைப்புகளை இலவசமாக வழங்குதல், தண்ணீர் பற்றாக்குறையால் பயன்பாட்டில் இல்லாத பொதுக்கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்தல், சில வீடுகளை வழங்குதல் என்று சில சலுகைகள் மட்டுமே ஏழைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவையனைத்தும் குடிமக்களுக்கு அவர்களுடைய சமூக உரிமைகளாக வழங்கப்படவில்லை. மாறாக அவை சமூகக் கொள்கையாக அல்லது பிரதமரின் பரிசாக மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏழைகளின் கவுரவம் காக்கப்பட வேண்டும் என்ற பெயரிலேயே அவையனைத்தும் நடந்து வருகின்றன.
மொத்தத்தில் அரசியல் விளையாட்டின் விதிகள் அனைத்தையும் மோடி மாற்றி எழுதியிருப்பதாக ஜாஃப்ரெலோட் கூறுகிறார். இந்திய அரசியல் எப்போதுமே தேர்தல் போட்டிகள் மற்றும் நிறுவனங்களால் மையவாத நிலைக்கே தள்ளப்படும் என்றிருந்த நம்பிக்கைக்கு மோடி சவால் விடுத்தார். இந்தியாவின் எதிர்காலம் இனிமேல் கூட்டணி அரசியல் சார்ந்தே உள்ளது என்ற கருதுகோளை மக்களவையில் தனிப்பெரும்பான்மையைப் பெற்ற பாஜகவின் திறன் நிராகரித்தது.
மோடி ஆட்சியைக் கைப்பற்றியது பாஜகவிற்குப் பலன் அளித்ததா என்பது இன்னும் விடை காணப்படாத கேள்வியாகவே உள்ளது; அது குறித்த தெளிவு இன்னும் கிடைக்கவில்லை. 2020ஆம் ஆண்டில் பொதுமுடக்கத்தை அறிவித்த பிறகு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து தங்கள் கிராமங்களை நோக்கி நடக்கத் தொடங்கினர். சுமைகளைத் தலையில் சுமந்து கொண்டு, ரத்தம் வடியும் கால்கள், தண்ணீரின்றி வறண்டு போன தொண்டைகளோடு இருந்ததைத் தவிர ‘ஆத்மநிர்பார் பாரத்’ சேவைக்கான இடைவிடாத உழைப்பில் வேறு எதையும் அவர்களால் காட்ட முடியவில்லை.2021ஆம் ஆண்டின் கோடைக்காலம் மேலும் பல சோகங்களைத் தந்தது ஆக்சிஜன் பற்றாக்குறையால் வாடிய தலைநகரின் தெருக்களில் மக்கள் ஆக்சிஜனுக்காக மூச்சுத் திணறி இறந்தனர்; தகன அறைகளும், புதைப்பதற்கான குழிகளும் பல நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால், பல குடும்பங்களால் தங்கள் அன்புக்குரியவருக்கு கண்ணியமான இறுதிச் சடங்கைக்கூட நடத்த முடியவில்லை; சிறு குழந்தைகள் அனாதைகளாகினர். ஒட்டுமொத்த குடும்பங்களும் சீரழிக்கப்பட்டன. நாட்டின் ஒவ்வொரு தெருவையும் துயரம் சூழ்ந்து கொண்டிருந்தது. சம்பவ இடத்தில் அரசாங்கத்திற்கான சிறுதடயமும் காணப்படவில்லை. தன்னைக் குறித்த சுய-பிரதிநிதித்துவம் அரசாங்கத்திடம் இருந்த போதிலும், வறுமை, சமத்துவமின்மை, பற்றாக்குறை போன்றவற்றால் லட்சக்கணக்கான இந்தியர்கள் தவிக்க நேர்ந்தது என்று ஜாஃப்ரெலோட் சுட்டிக் காட்டுகிறார். தற்போதைய அரசாங்கத்தால் புலம்பெயர்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பெருத்த ஆரவாரத்துடன் துவக்கி வைக்கப்பட்ட போதிலும், உண்மையில் அந்த தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகள் எதுவும் நிறைவேற்றித் தரப்படவில்லை.
அதிகாரத்தின் உச்சமட்டத்தைக் கைப்பற்றி, அதை தனக்கென்று ஏகபோகமாக ஆக்கிக் கொண்டு, புதிய லுடியன்ஸ் தில்லி மேல்தட்டினரின் ஆட்சியைத் துவக்கி வைத்திருக்கும் அரசியல்வாதி ஒருவரின் கதையை ஜாஃப்ரெலோட் நமக்கு இந்தப் புத்தகத்தின் வழியாக கூறுகிறார். அவர் அதை மிகவும் அருமையாகச் செய்திருக்கிறார். சில சமயங்களில் வாசகர் முக்கியமானவற்றைத் தவற விடாத அளவுக்கு அவருடைய ஆய்வு முழுமையானதாக இருக்கிறது. காரணிகள் x, y அல்லது z ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து நம்மால் அடிக்கடி ஆச்சரியப்பட முடிகிறது என்றாலும் இந்த புத்தகம் நல்ல வாசிப்பிற்கானதாக இருக்கிறது. அந்த காரணிகளுக்கு இடையேயான தொடர்பை நாமே எப்போதும் உருவாக்கிக் கொள்ள முடியும்.
இந்த மதிப்பாய்வை முடிப்பதற்கு முன்பாக இரண்டு சிறிய விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ஹிந்தி சொற்களை மொழிபெயர்ப்பதற்கு முன்பாக ஆசிரியர் யாரிடமாவது ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நாற்பத்தி மூன்றாம் பக்கத்தில் முஸ்லீம்களை வேறுமாதிரி காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற முழக்கம் ‘ஹம் பாஞ்ச் ஹமாரே பச்சீஸ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அந்த பச்சீஸ் என்பது ஐம்பது அல்ல, அது இருபத்தைந்து. அறுபதாம் பக்கத்தில் இந்தியர்கள் காலா நாயக் அல்லது கருப்பு ஹீரோவின் பாலிவுட் படத்தை விரும்புகிறார்கள் என்று ஜாஃப்ரெலோட் எழுதுகிறார். சரியான சொல் கல்நாயக். 1993ஆம் ஆண்டு அதே பெயரில் சஞ்சய்தத் வில்லத்தனம் கொண்ட ஹீரோவாக நடித்த திரைப்படம். மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் கரண் தாப்பர் புத்தகத்தின் நூற்றியேழாவது பக்கத்தில் கிரண் தாப்பர் என்று இடம் பெற்றிருக்கிறார்.
இரண்டாவதாக குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான இயக்கம் பற்றி ஜாஃப்ரெலோட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவர் அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை. குடிமை சமூக அமைப்புகள் மீதான அடக்குமுறைகள் இருந்த போதிலும், 2019 டிசம்பர் மத்தியிலிருந்து 2020 பிப்ரவரி தொடக்கம் வரையிலும் யாரும் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வை நாம் கண்டோம். பாரபட்சமான அந்தச் சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிரிலும் ஒன்றுகூடி நாடு முழுவதும் ஊர்வலங்களை நடத்தினர். அவர்களிடமிருந்த ஒரே ஆயுதமாக அரசியலமைப்புச் சட்டம் இருந்தது. அரசியலமைப்புச் சட்டமும் அதன் முகப்புரையும் சட்ட ஆவணம் என்பதிலிருந்து அரசியல் ஆவணமாக அப்போது மாறியிருந்தது.2020ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஓராண்டிற்கும் மேலாக நாடு முழுவதிலிருந்து திரண்டு வந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டனர். அவசர அவசரமாக விவசாயத்தை பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக அவர்கள் போராடினர். இவை மோடி இந்தியா குறித்த அதிருப்தியால் தூண்டப்பட்ட இரண்டு நிகழ்வுகள் மட்டுமாகவே இருக்கின்றன.
எந்த அளவிற்கு ஒரு தலைவர் வசீகரமானவராக இருந்தாலும், அதனால் எந்தவொரு ஆட்சியும் கேள்விக்குள்ளாகாமல் இருக்கப் போவதில்லை. ஜாஃப்ரெலோட் சுட்டிக்காட்டுவதைப் போல் வசீகரம் என்பது தார்மீகரீதியாக நடுநிலையானது. ஹிந்து தேசியவாதத்தின் ஒருங்கிணைப்பு குறித்த பாடத்தை சமகால இந்தியா நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. ‘மதத்தை நம்பிக்கை’யாக அல்லது ‘மதத்தை அரசியலாக’ என்று எத்தனை குடிமக்கள் வேறுபடுத்திப் பார்த்திருக்கிறார்கள் என்பதையும் அது நமக்குச் சொல்லியிருக்கிறது. அதனால்தான் 2019ஆம் ஆண்டில் அறுபத்தியிரண்டு சதவிகித குடிமக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
அரசியல் வரலாறு என்பது அதிகாரத்தின் கதையாக மட்டுமே இருப்பதில்லை. அது அதிகாரத்திற்கு எதிரானதொரு கதையாகவும், மேலாதிக்க அமைப்புகளுக்கிடையிலான போட்டியாகவும் இருக்கிறது. ஒருவேளை கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட்டின் மற்றொரு புத்தகத்திற்கான மற்றுமொரு கதையாக அது இருக்கக்கூடும்.
https://thewire.in/books/christophe-jaffrelot-modis-india-review
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 10 – ஜா. மாதவராஜ்
“அப்பாவிகளின் நம்பிக்கையே, பொய்யர்களின் முக்கியமான ஆயுதம்”
– ஸ்டீபன் கிங்
2019 நவம்பரில் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது இது. பாரத ஸ்டேட் வங்கியின் குர்கான் கிளையில் ஹுக்கும் சிங் என்பவர் கணக்கு வைத்திருந்தார். வீடு கட்டுவதற்காக பணத்தை தன் கணக்கில் செலுத்தி சேமித்து வந்தார். ஒருநாள் கணக்கை சரி பார்க்கும்போது அதிர்ந்து போனார். தன் கணக்கில் இருந்து அவரே அவ்வப்போது பணம் எடுத்து வந்ததாக வங்கியின் ஆவணங்கள் காட்டின. வங்கியின் அதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகுதான் எல்லாம் தெரிய வந்தது.
அந்த கிளையில் இரண்டு வாடிக்கையாளர்கள் ஹுக்கும் சிங் என்ற பெயரில் இருந்திருக்கிறார்கள். இருவருக்குமே அந்தக் கிளையில் ஒரே சேமிப்புக்கணக்கு எண்ணைத் தெரியாமல் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு பேரின் பாஸ்புக்கும் ஒன்று போலவே இருந்தன, பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களைத் தவிர!
ஒரு ஹுக்கும் சிங் செலுத்திய பணத்தை இன்னொரு ஹுக்கும் சிங் எடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். உண்மை தெரியவந்தவுடன் பணத்தை எடுத்த ஹக்கும் சிங் சொன்னதுதான் ஹைலைட். ‘இது மோடி போட்ட பணம் என்று நினைத்தேன்”
நம்பும்படி இல்லைதான். தனது மோசடி தெரிந்தவுடன் அதனை சமாளிப்பதற்காகவோ அல்லது தன் தரப்பை நியாயப்படுத்துவதற்கோ ஹுக்கும் சிங் சொல்வதாகத் தெரிகிறது. வங்கியின் மீது தவறு இருப்பதால் இது சிக்கலான பிரச்சினைதான். பீகாரில் நடந்த சம்பவத்தை அப்படிக் கருத முடியவில்லை.
பக்தியார்பூரில் வசிக்கும் 30 வயதான ரஞ்சித் தாஸ் அங்குள்ள தட்சண கிராம வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறான். அதில் இன்னொருவருடைய பணம் 5.5 லட்சம் தவறுதலாக 2021 மார்ச் மாதத்தில் வரவு வைக்கப்பட்டு விட்டது. அவன் அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்து வந்திருக்கிறான்.
உண்மையெல்லாம் தெரிந்த பிறகு வங்கி அதிகாரிகள் ரஞ்சித் தாஸை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். தன்னால் திருப்பித் தர முடியாது என்றும், எல்லாவற்றையும் செலவு செய்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறான். “உன் பணம் இல்லை என்று தெரிந்த பிறகு ஏன் எடுத்தாய்” என்று போலீஸ் கேட்டது.
“என்னுடைய கணக்கில் 5.5 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக என் மொபைலுக்கு செய்தி வந்தது. பிரதமர் மோடி ஒவ்வொருத்தர் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடுவதாகச் சொல்லி இருந்தார். அதன் முதல் தவணையாக ஐந்தரை லட்சத்தை அனுப்பி இருப்பதாக நினைத்துக் கொண்டேன். அந்தப் பணத்தை நான் செலவழித்து விட்டேன்.” என்று சொல்லி இருக்கிறான்.
மொத்தப் பணத்தையும் ஒரே தடவையில் அவசரம் அவசரமாகவும் எடுக்கவில்லை ரஞ்சித் தாஸ். தன்னுடைய பணம் என்பதாகவே பல தவணைகளில் மூன்று மாதங்களாகத்தான் எடுத்திருந்தான். ஆகஸ்ட் மாதம்தான் வங்கிக்கு தெரிய வந்திருக்கிறது. ரஞ்சித் தாஸ் உண்மையிலேயே அப்பாவியாகவும் கருத இடமிருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களிலும் குறித்து வைத்துக் கொள்ளக் கூடிய ஒன்று உண்டு. மோடி அப்படி சொல்லவில்லை என்றோ, ஒரு பிரதமரின் பெயரையே தங்கள் மோசடி காரியத்துக்கு பயன்படுத்தினார்கள் என்றோ சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஊழலற்றவராகவும், வளர்ச்சி நாயகனாகவும், தேசத்தை மீட்க வந்த இரட்சகனாகவும் பெரும் முழக்கங்களோடும் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி விமானத்தில் பறந்து பறந்து 2014 பாராளுமன்ற தேர்தலின் போது பேசியதுதான் இது:
“இந்தியாவில் உள்ள மோசடிப் பேர்வழிகள் தங்கள் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள் என்று உலகமே சொல்கிறது. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டு இருப்பது நமது நாட்டின் பணம். என் சகோதர சகோதரிகளே, நீங்கள் சொல்லுங்கள், அந்த கருப்பு பணம் திரும்பி வர வேண்டுமா இல்லையா? திருடர்களால் பதுக்கி வைக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் நாம் திரும்பப் பெற வேண்டாமா? அந்தப் பணத்தின் மீது நம் மக்களுக்கு உரிமை இல்லையா?” என வீராவேசமாக கேள்வி கேட்டார். “வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் அந்தத் திருடர்களால் பதுக்கப்பட்ட பணத்தை மட்டும் திரும்பக் கொண்டுவந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை இலவசமாகப் பெறுவான்.” என பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரிக்க போகுமிடமெல்லாம் பெருஞ்சத்தமாய் கூவினார்.
மோடி பேசியதை ஊடகங்கள் தொடர்ந்து ஒளி பரப்பின. பிஜேபியின் தலைவர்களும், தொண்டர்களும் “மோடி பிரதமரானால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்சம் கிடைக்கும்” என்று வீடு வீடாய் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். 100 நாட்கள் ஆனது. ஒன்றும் நடக்கவில்லை. மக்கள் முணுமுணுத்தார்கள். ஒரு வருடம் ஆனது வரவில்லை. கேள்விகள் எழுந்தன. மோடி தேர்தலுக்குப் பிறகு அந்த 15 லட்சம் குறித்து வாயேத் திறக்கவில்லை. பிஜேபியின் தலைவர்கள்தாம் ஆள் ஆளுக்காய் ஒவ்வொன்று பேசினார்கள்.
பாஜக தலைவர் அமித்ஷா சிரித்துக்கொண்டே “அது ஒரு எலக்ஷன் ஜும்லா” என்றார். தேர்தல் நேரத்தில் எல்லோரும் சொல்வதுதானே, அதையா சீரியஸாக எடுத்துக் கொண்டீர்கள் என்ற கிண்டல் தொனியில் பதில் இருந்தது. “நாங்கள் ஜெயிப்போம் என்று நினைக்கவில்லை. அதனால் அப்படியெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தோம்” என்றார் நிதின் கட்கரி.
“நிச்சயம் கொடுப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்போம்” என சமூக நிதித்துறைக்கான இனையமைச்சர் ராம்தாஸ் அதவாலே. “அப்படி மோடி சொல்லவே இல்லை.”என்று மறுத்தார் ராஜ்நாத்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டார்கள். அருண் ஜெட்லி எழுந்து, “அது ஒரு உதாரணத்திற்குச் சொன்னது.” என்றார். “வெளிநாட்டில் இருக்கும் கருப்புப்பணத்தை எல்லாம் கொண்டு வந்தால் ஓவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் பெறுமான பணம் கிடைக்கும் என்றால் வெளிநாட்டில் எந்த அளவுக்கு கருப்புப்பணம் இருக்கிறது என்பதை புரிய வைப்பதற்காக” என்ற தோனியில் சொல்லி தன் அறிவை புரிய வைத்தார்.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் இராஜஸ்தான் மாநில பிஜேபி தலைவர் மதன்லால் சைனி, “மோடி பிரதமரான பிறகு மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்திருக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் மறைமுகமாக ஏழை எளிய மக்களுக்கு 15 லட்சம் ருபாய் கொடுக்கப்பட்டு விட்டது” என மொத்தமாக ஊற்றி மூடப் பார்த்தார்.
மோடியோ “சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பாகிஸ்தானை நம் முன்னே மண்டியிடச் செய்தோம். காங்கிரஸ் நம் இராணுவ வீரர்களை நம்பாமல் கேள்விகள் கேட்கிறது. தேச துரோகிகள்” என்று மக்களின் கவனத்தை திசை திருப்ப தேசபக்தி மேட்டரை கையிலெடுத்தார். உடனே “Modi slams”, “Modi attacks”, “Modi’s masterstroke”, “Modi set agenda” என்று ஊடகங்கள் மாற்றி மாற்றிப் போட்டு ‘அவரு யாரு தெரியுமா’ என பிலிம் காட்டிக்கொண்டு இருந்தார்கள்.
முறையான பதில் எங்கிருந்தும் வராததால் இராஜஸ்தானில், ஜலாவர் மாவட்டத்திலிருந்து, கன்னையா லால் என்பவர், பிரதமர் அலுவலகத்துக்கு 8.2.2016 அன்று கீழ்கண்ட கேள்விகளை RTI மூலம் கேட்டே விட்டார்.
“தேர்தலின் போது வெளி நாட்டில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்டு வந்து, ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொடுக்கப் போவதாக மரியாதைக்குரிய பிரதமர் மோடி கூறினார். அது என்ன ஆனது?
தேர்தலின்போது ஊழலை ஒழிப்பேன் என்று மரியாதைக்குரிய பிரதமர் கூறினார். ஆனால் 90 சதவீதம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்கான புதிய சட்டத்தை எப்போது கொண்டு வரப் போகிறார்?
அரசு Smart cities உருவாக்குகிறது. ராஜஸ்தானில் ஒரு கிராமம் கூட முன்னேறவில்லை. எந்தெந்த கிராமங்களின் நிலைமை மோசத்திலிருந்து படு மோசமாகி இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். எப்போது இராஜஸ்தான் கிராமங்களுக்கு சாலை வசதிகள் செய்து தரப்படும்?”
பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. கன்னையா விடவில்லை. சரியாக 30 நாட்கள் காத்திருந்து 9.3.2016 அன்று Central Information Commissionக்கு புகார் செய்தார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்றது. இறுதியில் 30.8.2016 அன்று, கன்னையாகுமாரின் கேள்விகளுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு, கன்னையா லால் குறித்தும், அவருக்கு பிரதமரிடமிருந்து கிடைத்த பதில் குறித்தும் எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால் மக்கள் அந்த 15 லட்சத்தை மறந்த பாடில்லை. 2019 ஜூலை 30ம் தேதி மூணாறு தபால் அலுவலகத்தில் திரண்ட மக்களின் கூட்டத்தை ஒரு சிறு செய்தியாக இந்த தேசம் கடந்து விட முடியாது.
தேர்தலின் போது மோடி அறிவித்த பதினைந்து லட்சம் ருபாயை தபால் ஆபிஸ் மூலம் வழங்கப்பட இருப்பதாகவும், தபால் நிலையத்தில் கணக்கு ஆரம்பியுங்கள் என்று கிடைத்த எதோ தகவலை வைத்து எஸ்டேட்களிலும், தோட்டங்களிலும் வேலைபார்க்கும் தொழிலாளிகள் தங்கள் ஒருநாள் கூலியை விட்டு விட்டு, லீவு போட்டு அங்கு காத்து நின்றார்கள். எல்லோர் கைகளிலும் நூறு ருபாயும், ஆதார் அட்டையும், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களும் இருந்தன.
அந்த எளிய மக்கள் நீண்ட வரிசையில் அப்படி காத்துக் கிடந்தது இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் மூணாறில் என்று மட்டும் நினைத்தாலோ, அவர்களை முட்டாள்கள் என்றோ நினைத்தால் நம்மைப் போன்ற முட்டாள்கள் யாருமில்லை. மூணாறு அந்த நாளில் இந்த தேசத்தின் குறியீடாக இருந்தது.
தங்கள் வாழ்வில் எதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா? அன்றாடம் படும் துயரங்களுக்கு எதாவது ஒரு வழி கிடைக்காதா என காலமெல்லாம் ஏங்கிப் போனவர்கள் அவர்கள். என்றாவது ஒருநாள் “கடவுள் கண்னைத் திறப்பார்” என்று காத்திருப்பவர்கள் அவர்கள்.
தேர்தல் நேரத்தில் சொன்ன வெறும் வார்த்தைகள் அவை என அவர்கள் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதை விட மீள விரும்பவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். அதிகாரத்துக்கு வந்ததும் அதை மோடியும், பிஜேபியும் மறந்து விட்டார்கள் என்னும் உன்மையை உள்ளுக்குள் அவர்களால் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மக்களின் துயரமான வாழ்வையும், அவலமான நிலையையும் வைத்து ஏமாற்றுவதைப் போல கொடிய காரியம் எதுவுமில்லை. அதை 130 கோடி மக்கள் நிரம்பிய தேசத்தில் அவர்கள் சர்வ சாதாரணமாக நிகழ்த்த முடிவது நம் சமூகத்தை அதிர்ச்சியோடும், பரிதாபமாகவும் பார்க்க வைக்கிறது.
மூணாறு போலீஸ் தரப்பில் வந்து, அது பொய்யான செய்தி என்று எடுத்துக் கூறி, அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவித்தார்கள். ஆனால் மக்கள் போலீஸ் சொன்னதை நம்பாமல் அங்கேயே இருந்திருக்கிறார்கள். அவர்களை திருப்பி அனுப்புவது பெரும் பாடாகி இருக்கிறது.
இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மூணாறு காவல் நிலைய கண்காணிப்பாளர் அறிவித்தார். யார் பரப்பியது என்பது அகில உலகத்துகே தெரிகிறது. யார் அவர் மீது வழக்குப் பதிவது? கைது செய்வது? அதற்கும் இந்த தேசத்தின் பிரஜை ஒருவர் துணிந்து விட்டார்.
2020ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில், ராஞ்சி ஹை கோர்ட்டில், ஹெச்.கே.சிங் என்னும் வழக்கறிஞர், “மோடியும் அமித்ஷாவும் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian penal Code) செக்ஷன் 415 (cheating), செக்ஷன் 420 (dishonesty) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (Representation of the people Act) செக்ஷன் 123 (b) பிரகாரம் வழக்கு பதியப்பட்டு இருந்தது.
2020 பிப்ரவரியில் ஆரம்பித்த விசாரனையின்போது, “2013-2014ல் நடந்த விஷயத்திற்கு இப்போது ஏன் வழக்குத் தொடுக்கிறீர்கள்” என நீதிபதிகள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது.
“தேர்தலின் போது சி.ஏ.ஏவை (CAA) கொண்டு வருவதாகச் சொன்னோம் அதனால் இப்போது கொண்டு வருகிறோம் என மோடியும் அமித்ஷாவும் சொன்னார்கள். அப்படித்தானே பதினைந்து லட்சம் ருபாய் எல்லோர் கணக்கிலும் வரவு வைக்கப்படும் எனச் சொன்னார்கள். அதை சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அதனை நிறைவேற்றவில்லை என்றால், மக்களை ஏமாற்றுவதாகத்தானே அர்த்தம்?” என்று வாதாடி இருக்கிறார் ஹெச்.கே.சிங். வழக்கு பின்னொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கின் தற்போதைய நிலை, போக்கு என்னவென்று தெரியவில்லை.
மோடி மீதும், அமித் ஷா மீது எத்தனையோ வழக்குகள் தொடுக்கப்பட்டு இருந்தன. அதிலிருந்தெல்லாம் அவர்கள் விடுவிக்கப்பட்டும் விட்டார்கள். எல்லாம் எப்படி என்று தெரியும். இந்த வழக்கின் முடிவு என்னவாகும் என்றும் தெரியும்.
ஆனால் இந்த நாட்டின் பிரதமர் மீது, இந்த நாட்டின் பிரஜை ஒருவர் cheating case தொடர்ந்திருப்பது எவ்வளவு அவமானகரமானது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் மோடி சொன்ன பொய்யை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது வரலாற்றில் எவ்வளவு முக்கியமானது.
References:
* ‘PM Modi sent me money’: Bihar man refuses to return Rs 5.5 lakh to bank, arrested (Times of India, Sep 15, 2021)
* Huge crowd flocks to Munnar post office to get ‘Rs 15 lakh promised by Modi’ (Mathrubhumi, Jul 30, 2019)
* Thought Modi ji Was Giving This Money’, PM’s Promise of Rs 15 Lakh Landed This Man in Trouble – Here’s How (India.com, Nov 22, 2019)
* BJP has fulfilled PM Modi’s campaign promise of giving Rs 15 lakh: Rajasthan party chief (Hindustan times, jul 18, 2018)
* Twitter remembers PM Modi’s ‘Rs 15 lakh promise’, trends #15LakhAaGaye as India crosses 15 lakh COVID-19 cases (Free Press, Jul 29, 2020)
* Rs 15 lakh promise: PM Modi, Amit Shah face charges of cheating, dishonesty in Ranchi court (India Today, Feb 3, 2020)





