Explore the contributions of (மார்க்ஸ் எங்கெல்ஸ்) Marx Engels to the field of ecology and environmental science in this blog post.

மார்க்ஸ் எங்கெல்ஸ் பார்வையில் சூழலியல்

  சூழலியல் என்றால் என்ன? ஜெர்மானிய அறிவியல் அறிஞர் எர்னஸ்ட் ஹேக்கல் (Ernst Heinrich Philipp August Haeckel :1834-1919) என்பவரால் முதன்முதலாக உருவாக்கப்பட்ட ‘சூழலியல்’ (ecoloy) என்ற சொல், இன்று உலகின் எப்பகுதியிலும் புறக்கணிக்கப்பட முடியாத அறிவியல் துறையாக வளர்ந்துள்ளது.…
நூல் பதிப்புரை: வேட்டை எஸ்.கண்ணனின் ’சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை’ – ந.முத்துமோகன்

நூல் பதிப்புரை: வேட்டை எஸ்.கண்ணனின் ’சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை’ – ந.முத்துமோகன்




பால் லஃபார்க் – பூர்வீகம் ஹாய்த்தி நாட்டைச் சேர்ந்தவர். கியூபாவில் பிறந்தவர். “பிறப்பிலேயே நான் சர்வதேசவாதி” என்று இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார். கறுப்பினம், ஜமாய்க்கா இந்தியர், பிரெஞ்சு கிறித்தவர், யூதர் என்ற நான்கு இனங்களும் இவர் மீது உரிமை கொண்டாட முடியும். 1842 ல் பிறந்த இவர் 1911 வரை வாழ்ந்தார். பிரெஞ்சு கம்யூனிச இயக்கத்தின் தோற்றுவர்களில் ஒருவர். அதற்கு முன்னோடியாக பிரெஞ்சு சோசலிசக் கட்சியை நிறுவியவர். கியூபர்களும் கறுப்பின மக்களும் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கு தத்தமது பங்களிப்பாக இவரைக் குறிப்பிடுவார்கள்.

லண்டனில் கார்ல் மார்க்சின் நேரடிச் சீடர்களில் ஒருவராக இருந்தவர் பால் லஃபார்க். மாலை நேரங்களில் இருவரும் நடைப் பயணம் செல்லும்போது மார்க்ஸ் இவருக்குத் தனது “மூலதனம்” நூலின் கருத்துக்களை எடுத்துரைப்பார். மார்க்சுக்கு “மூலதனம்” நூலின் தயாரிப்பில் அவரது இரண்டாவது மகள் லாரா உதவியாளராக இருந்தார். எனது பெண்மக்கள் மூவரில் லாராவே மிகப்பெரிய அழகி என்று அம்மா ஜென்னி குறிப்பிடுவார். பால் லஃபார்க்கும் லாராவும் காதலித்து 1868ல் திருமணம் புரிந்து கொண்டனர். லாராவும் லஃபார்கும் இணைந்து பிரெஞ்சு மொழிக்கு மார்க்ஸ் – எங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்தனர்.

லஃபார்க் பிரான்சில் மருத்துவக் கல்வியைத் தொடங்கினார். அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறினார். இலண்டனில் கல்வியை முடித்தார். நேர்க்காட்சிவாத விஞ்ஞானங்களில் அவருக்கு ஆர்வம் உண்டு, இளம் வயதில் பிரெஞ்சு அராஜகவாதியான புரௌதனின் செல்வாக்கினைப் பெற்றவராகவும் விளங்கினார். “கடவுளுக்கு எதிரான யுத்தம்! அதுவே முன்னோக்கிய நகர்வு!” என்ற கோஷத்துடன் அவர் பங்கேற்ற இளைஞர் அணி செயல்பட்டது. விரைவில் மார்க்சியராகப் பரிணமித்தார். பின்னாட்களிலும் கூட லஃபார்கின் மீது அராஜக செல்வாக்கு மிச்சம் இருந்தது என்று குறிப்பிடுவார்கள். இருப்பினும், பிரான்சில் கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம், பிரான்சிலும் ஸ்பெயினிலும் அராஜகவாதிகளின் செல்வாக்கை ஒடுக்கியது போன்ற பணிகளைச் செய்ததில் லஃபார்கின் பங்களிப்பு கணிசமானது என்று வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். லெஸ்லி டெஃப்லர் (Leslie Defler) என்னும் வரலாற்று அறிஞர், பால் லஃபார்கும் பிரான்சில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

லஃபார்க் சிறந்த பேச்சாளர், நகரப் பகுதிகள், கிராமங்கள், ஆலைகள், வயல்வெளிகள் என உழைக்கும் மக்களைத் தேடி அலைவார். ஃபிரான்சில் மார்க்சியத்தைப் பரப்பியதில் லஃபார்குக்கு முக்கியப் பங்கு உண்டு என இவர் பாராட்டப்படுவார். பிரெஞ்சு சட்டசபையில் இடம் பெற்ற முதல் சோசலிசப் பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். 1871ல் பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு அரசுப் படைகளால் அதிகம் தேடப்பட்டவர் களில் லஃபார்கும் லாராவும் உண்டு . லாராவும் லஃபார்கும் ஸ்பெயினுக்கு தப்பித்துச் சென்றனர்.

ஜியார்ஜ் சோரல், பெனடிட்டோ குரோச்சே போன்ற சமகாலத்து அறிஞர்கள் லஃபார்கை “மாமனார் வழிபாட்டாளர்” என்று விமர்சித்தது உண்டு .

கீழ்க்கண்ட நூல்கள் பால் லஃபார்கின் எழுத்துக்களில் முக்கியமானவை. “உழைப்பிலிருந்து விடுதலை (Right to be Lazy)”, “சொத்தின் வரலாறு (Evolution of Property)”, “மூலதன மதம் (The Religion of Capital)” போன்றவை முக்கியமான நூல்கள். உழைப்பிலிருந்து விடுதலை என்ற நூல் முதலாளிய உழைப்பு அறம் தொழிலாளி வர்க்கத்தை முதலாளியத்திற்கு அடிமைப்படுத்தும் மிகப்பெரும் ஆயுதம் என விவாதிக்கிறது. எனவே உழைப்பு எனும் முதலாளிய ஒழுங்கிலிருந்து தொழிலாளர்கள் முதலில் உளவியல்ரீதியாக விடுபட வேண்டும் என வாதிடுகிறது. புரட்சிக்காரர்கள் முதலில் தம்மிடமுள்ள உடமை வர்க்க குணாதிசயங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பது லஃபார்கின் பொதுவான நிலைப்பாடாகும். மார்க்சியக் கலாசாரத்திற்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுவார். வர்க்கப் போராட்டத்தின் வடிவங்களில் கருத்தியல் வடிவங்களுக்கு அவர் முன்னுரிமை வழங்குவார். வஃபார்கை அந்தோனியோ கிராம்சியுடன் சிலர் ஒப்பிடுகின்றனர். மூலதனத்தையே (பணத்தையே) கடவுளாக வழிபடும் நவீன முதலாளிய வாழ்வைக் கேலிக்குள்ளாக்கும் ஒரு சித்தரிப்பு அவரது மற்றொரு படைப்பான “மூலதன மதம்” என்ற நூலில் உள்ளது.

பால் வஃபார்கும் அவரது துணைவியார் லாராவும் 1911 ஆம் ஆண்டு இணைந்து ஒரே நேரத்தில் தற்கொலையைத் தழுவிக் கொண்டனர். மிகவும் துக்கமான இந்நிகழ்வை அவரது தோழர்கள் ஆதரிக்கவில்லை . ஆயின் முதிர்ந்த வயதை நெருங்கும் போது, பிறருக்குச் சுமையாகாமல் நமது சாவை நாமே முடிவு செய்து கொள்ளுவதே அறிவு பூர்வமானது (Rational Suicide) என்று அது நியாயப்படுத்தப் படுகிறது.

தனது மரணம் குறித்த சுய அறிக்கையில் லஃபார்க் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்: “எழுபது வயதுக்குமேல் வாழ நான் விரும்பவில்லை . உடலும் மனமும் தளர்ந்து எனக்கும் பிறருக்கும் பாரமாக வாழுவதைத் தவிர்க்க விரும்புகிறேன். கடந்த 45 ஆண்டுகளில் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தேனோ, அந்த லட்சியம் விரைவில் வெற்றியடையும் என நான் உறுதியாக நம்புகிறேன். கம்யூனிசம் வாழ்க! இரண்டாவது அகிலம் வாழ்க!” லஃபார்க், லாரா ஆகியோரின் இறுதி ஊர்வலத்தில் 20,000 பேர் கலந்து கொண்டனர். லஃபார்க், லாராவின் இறுதிச் சடங்கில் லெனின் கலந்து கொண்டார்.

“சொத்தின் வரலாறு: நாடோடிக் காலத்திலிருந்து நாகரீகக் காலம் வரை” என்ற லஃபார்கின் நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறைகளுக்குக் கோட்பாட்டுப் பங்களிப்பை வழங்கும் நூலாகும். “மானுடவியலின் உண்மையான விவிலியம்” என்று இந்நூலை ஒரு விமர்சகர் பாராட்டுகிறார்.

1840 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அராஜக சிந்தனையாளரான பியர் ஜோசெஃப் புரௌதன் “சொத்து என்றால் என்ன?” என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல், அந்நாட்களில் காத்திரமான அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கிடையில் வலுவான சலனங்களை ஏற்படுத்தியது. “சொத்து என்பது திருட்டு” என்ற கருத்தை அந்நூலில் புரௌதன் முன்வைத்தார். இளம் மார்க்சுக்கு புரௌதனின் சொத்து குறித்த கருத்து அரசியல் பொருளாதார ஆய்வுகளில் ஒரு திருப்புமுனை யாகத் தென்பட்டது. மார்க்ஸ் புரௌதனுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டார். சிறிது காலத்துக்குப் பிறகு பாரீசில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பின்னாட்களில் பிறிதொரு நூல் குறித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருப்பினும் சொத்து குறித்த புரௌதனின் நூலை மார்க்ஸ் முக்கியமானதாகக் கருதி எப்போதுமே பாராட்டி வந்தார்.

லஃபார்கின் “சொத்தின் வரலாறு” என்ற நூல் ஒருவகையில் புரௌதனின் நூலைத் தொடர்கிறது. இருப்பினும், சொத்து எனும் விடயத்தை லஃபார்கின் நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் மையப் பிரச்சினைகளில் ஒன்றாக மாற்றுகிறது. மார்க்சினுடைய “மூலதனம்” நூலின் பல இடங்களில் பேசப்பட்டுள்ள கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன என்று ராபர்ட் பில்ஸ் என்ற இந்நூலின் 1890 ஆம் ஆண்டின் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். 1884 ல் ஏங்கெல்ஸ் எழுதி வெளியிட்ட “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலின் பிரச்சினைகளை லஃபார்கின் நூல் தொடருகிறது என்றும் சொல்லலாம்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் பெரிதும் பாராட்டப் பட்ட ஹென்றி லேவிஸ் மார்கன் என்ற மானுடவியலாளர் இந்நூல் குறித்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். இந்நூல் “சொத்து குறித்த கருத்தின் பரிமாண அறிவிற்குத் தீர்க்கமான உருக்கொடுத்தது. சில அம்சங்களில் பார்த்தால், மனித இனத்தின் மன வரலாற்றில் மிகவும் முக்கியமான பகுதியாக இது விளங்குகிறது”.

சொத்தின் வரலாறும் மனித மனத்தின் வரலாறும் பரஸ்பரத் தொடர்பும் ஒப்புமையும் கொண்டவை என்ற மார்கனின் கருத்து நமது கவனத்தைக் கவருகிறது. குறிப்பாக இந்தியத் தத்துவங்களில் வாசிப்பினைக் கொண்டவர்களுக்கு இக்கருத்து சில தெளிவுகளை ஏற்படுத்துகிறது. இந்தியத் தத்துவங்களில் பல, குறிப்பாக அற இலக்கியங்கள், மனித மனத்தில் விளையும் பற்று, பந்தம், பாசம், தளை, ஆசை, ஆணவம், அகங்காரம் போன்ற பல விடயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. மனித மனத்தின் இவ்வகைப்பட்ட “அழுக்குகளை” அப்புறப்படுத்தினால் மனிதன் உயிர்த் தூய்மை அடைந்து “வீடு” பேற்றை எட்டமுடியும் என்று அவை கூறுகின்றன. மனித மனத்தின் இவ்வகை “அழுக்குகள்” எல்லாம் உண்மையில் தனி உடமைச் சொத்தின் உளவியல் விளைவுகள் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அர்த்தத்தில் தனி உடமைச் சொத்து என்பது நமது தத்துவங்களில் அதிகம் பேசப்படும் நிலையாமைக் கொள்கைக்கு அடிப்படையாக விளங்குகிறது என்பதையும் நாம் உணர்கிறோம். அற இலக்கியங்களில் பேசப்படும் நிலையாமைக் கொட்பாடு தனி உடமைச் சொத்து குறித்த உளவியல் விமர்சனத்தையும் அழுத்தின் வழி அதனை தாண்டிச் செல்வதற்கான எத்தனிப்பையும் கொண்டுள்ளது என்பதையும் காண்கிறோம். இவ்வகைப் பிரச்சினைகள் தொடர்ந்த ஆய்வுகளைக் கோருகின்றன.

நூலின் அமைப்பை இனி உற்று நோக்குவோம்: இருவகைப் பொதுச் சொத்துக்களையும் மூவகை தனிச் சொத்துக்களையும் நூலாசிரியர் வகைப்படுத்துகிறார்.

சொத்து உருவானபோது அதனுடன் குற்றங்கள், தண்டனைகள், சிறைச்சாலைகள், சட்டம் இன்ன பிற உண்டாகின்றன என்பதையும் காணுகிறோம்.

நிலவுடமைக் காலத்தில் நிலப் பிரபுகள் (நிலக்கோமான்கள்), அரசர்கள், பேரரசர்கள் உருவாகி விட்டார்கள். அவர்கள் காவிய நாயகர் களாகவும் கடவுளராகவும் சித்தரிக்கப்பட்டனர். பண்ணை அடிமைகள் விசுவாசம், கீழ்ப்படிதல், பணிவு, நேர்மை, கடமைகள், நன்றியுணர்வு ஆகியவற்றுக்குப் பழக்கப்படுத்தப் பட்டார்கள். சட்ட வல்லுநர்கள் அரசு நிலங்களை, பொது நிலங்களைக் கோமான்களின் நிலங்களாக ஆக்கிக் கொடுத்தார்கள். கடவுளின் பெயரால் போர்கள், கொள்ளைகள் நிகழ்த்தப்பட்டன. எல்லைகளில் வாழ்ந்த இனக்குழுக்களைக் கடவுளற்றவர்கள் எனக்கூறிப் படையெடுத்து அழித்தனர். அரச அதிகாரம், திருச்சபை அதிகாரம் என்ற இரட்டை ஆட்சி நடைபெற்றது. மடாலயங்களுக்கான கட்டாய நன்கொடைகள் பெருகின.

14, 15 ஆம் நூற்றாண்டுகளில் விவசாயிகள் நிலத்தை விட்டு விரட்டப்பட்டார்கள். இது குறித்து மார்க்சும் எழுதியிருக்கிறார். விவசாயிகளை ஒத்த பல தொல்குடிகள் கடற்கரைகளில் மீனவர்களாக மாற்றப்பட்டனர். விவசாயிகள் பல வேளைகளில் பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டனர். அதே வேளைகளில் பிச்சை எடுப்பது சட்டத்தால் தடை செய்யப்பட்டது. காடுகளின் பரப்புகள் படிப்படியாகக் குறைந்தன. விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டு அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் ஊடாக நவீன முதலாளியச் சொத்து உருவாயிற்று.

முதலாளியச் சொத்து உருவாக்கத்திற்கு வணிகமும் எந்திரக் கருவிகளும் மிகப்பெரிய உந்து சக்திகளாக அமைந்தன. நாடெங்கும் உருவான சந்தைகள் முதலாளியச் சொத்துடமையை முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் புரட்டிப் போட்டன. தொழில் உற்பத்திக்கான கச்சாப் பொருட்களும் உற்பத்திக் கருவிகளான எந்திரங்களும் சரக்கு களாக மாற்றம் பெற்றபோது, அவற்றுக்கு இணையாகத் தொழிலாளர் களின் உழைப்புச் சக்தியும் சரக்காக மாறியது. முதலாளிய உற்பத்தி வட்டம் முழுமையடைந்தது. இப்போது அனைத்துமே சரக்குமயமாகி விட்டன. முதலாளியத் தொழில் உற்பத்திக்கு எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவே கல்வியும் உடல் ஆரோக்கியமும் இயற்கையும் பாதுகாக்கப்பட்டன. நிதி நிறுவனங்கள், வங்கிகள் மக்களின் சேமிப்புகளை தொழில் அதிபர்களின் சேமிப்புகளாக மாற்றிக் கொடுத்தன. அரசு நிறுவனம் உலகமெங்கும் தமது முதலாளிகளுக்கான சந்தைகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்கும் முகவர்களாகத் தொழில்பட்டன.

சொத்து என்பது ஒரு பொருளோ, உற்பத்திக் கருவிகளோ, வாழ்க்கைக்கான வசதியோ அல்ல. அது சமூகப் பொருளாதார உறவுகளின் சுருக்கமான ஆனால் முனைப்பான வடிவம் என்பது இந்நூலில் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. வரலாறு நெடுக சொத்தின் பரிணாமம் தேடிக் கண்டடையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரும் அவரவர் நாட்டின் சொத்தின் சொந்த வடிவங்களை நினைவுக்குக் கொண்டு வரும்போது இந்நூலில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

திரு வேட்டை கண்ணன் அவர்கள் இந்நூலை மிகவும் முயன்று தமிழுக்கு மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இந்நூல் இந்தியச் சூழல்களில் சொத்தின் வரலாறு குறித்த விவாதங்களுக்கும் புரிதல் களுக்கும் நம்மை இட்டுச் செல்லும்.

“மார்க்சிய செவ்வியல் நூல் வரிசை” என்ற புதிய வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்நூலை வெளிக் கொணருகிறது. இயக்குனர் குழுவின் வழிகாட்டுதலின்படி நியூ செஞ்சுரியின் மேலாண் இயக்குநர் நண்பர் சண்முகம் சரவணன் மிகுந்த அக்கறையுடன் இந்நூல் வரிசையைத் திட்டமிட்டுள்ளார். பிராங்பர்ட் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் உலகப் புத்தகப் பெருவிழாவில் நேரடியாகக் கலந்து கொண்டு, புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு, உரிமைகள் பெறப் பட்டு, மொழியாக்கம் செய்யப்படுகின்றன. நூலாக்கத்தில் தோழர் தி. ரத்தினசபாபதி மற்றும் திருமதி துர்கா தேவி, நண்பர் ஜெயராஜ் ஆகியோர் உடன் நின்று பணியாற்றியுள்ளனர். இந்நூல் வரிசையில் பல நூல்கள் விரிவான வாசிப்பையும் விவாதங்களையும் வேண்டுவன. அவை தமிழ்ச் சூழல்களில் மார்க்சியத்தின் பரப்பை விரிவாக்கும் என நம்புகிறோம். மதுரை

அன்புடன்
ந. முத்துமோகன்

நூல் : சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை
ஆசிரியர் : தமிழில்: வேட்டை எஸ். கண்ணன்
விலை : ரூ.₹250
வெளியீடு :NCBH
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

நூல் அறிமுகம் : ஆதி வள்ளியப்பனின் இளையோருக்கு மார்க்ஸ் கதை – பூங்கொடி கதைசொல்லி

நூல் அறிமுகம் : ஆதி வள்ளியப்பனின் இளையோருக்கு மார்க்ஸ் கதை – பூங்கொடி கதைசொல்லி




நூல் : இளையோருக்கு மார்க்ஸ் கதை
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 96
விலை : ₹80.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உலகின் எந்த மூலையிலும் மக்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்தால், அரசுக்கு எதிராகப் போராடினால், முதலாளிகளின் கொள்ளையை வெளிப்படுத்தினால் , எந்தவொரு சுரண்டலுக்கும் எதிரான குரலுக்கும், கம்யூனிஸ்ட் என்ற முத்திரை குத்தப்படுவதை எங்கும் நாம் காணலாம். அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் சம உரிமை பெற்று அனைவரும் சமமாக வாழவேண்டும் என்பதைத்தான், மார்க்ஸ் முன்வைத்த கம்யூனிசக் கொள்கை வலியுறுத்துகிறது.

மனிதகுல வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லான, மூலதனம் என்று ஈடுஇணையற்ற நூலைத் தந்த, மார்க்ஸை பற்றி, அவர் வாழ்வைப் பற்றி, இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், மிக சிறப்பான வகையில் ஆசிரியர் ஆதி வள்ளியப்பன் அவர்கள் வடிவமைத்துள்ளார்.

கார்ல் மார்க்ஸின் தாய்நாடு பிரஷ்யா ( இன்றைய ஜெர்மனியின் ஒரு பகுதி). அவருடைய தந்தை வழக்குறைஞர் ஹென்ரிக் மார்க்ஸ். தாய் ஹென்ரிட்டா.. சிறு வயதில் படிப்பில் சுமாரான மாணவனாக இருந்தாலும், கவிதை படைக்கும் ஆற்றலும், ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டார். பல மொழிகளை கற்றுக் கொள்ளும் ஆற்றல் அவருக்கு இளவயதிலேயே இருந்திருக்கிறது. மூலதனம் நூலை எழுதும் பொழுது, இரண்டாவது பாகத்தை எழுதும்போது அவர் ரஷ்ய மொழியை கற்க வேண்டியிருந்தது. அவரின் 55 வயதில் ஆறு மாதங்களுக்குள் ரஷ்ய மொழியை கற்றுக் கொண்டதோடு இல்லாமல் அதன் நாவல்களைப் படிக்கும் அளவிற்கு அந்த மொழியில் தேர்ச்சி பெற்று விட்டார். அவரது அயராத உழைப்பும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் தான் முக்கிய காரணம்.

பள்ளியில் அவர் பயின்ற காலத்தில், ஒரு இளைஞன் ஒரு தொழிலில் ஈடுபட தொடங்குவதற்கு முன்னால் அவன் மனதில் உருவாகும் எண்ணங்கள் குறித்து, கட்டுரை எழுதுமாறு பணிக்க பட்டிருந்தது.

” சமூகத்துக்கு அதிக நன்மை தரக்கூடிய தொழிலை நாம் தேர்ந்தெடுத்தால், வாழ்க்கை நமக்கு பிரச்சனையாக இருக்காது. ஏனென்றால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் உலக நன்மைக்காக நாம் செய்யும் தியாகமாக மாறிவிடும். உலக மக்களில் பலருக்கும் மகிழ்ச்சியை உருவாக் குபவரே மகிழ்ச்சி அடைகிறார் என்பது பட்டறிவு. அதேநேரம் ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால் அறிவாளி ஆகலாம்; ஞானி ஆகலாம்; கவிஞராக கூட ஆகலாம்.ஆனால் குறைவற்ற உண்மையான மகத்தான மனிதனாக மாற முடியாது” அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அந்த இளம் வயதிலேயே, மனித சமூகத்திற்கு உழைப்பதுதான் அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான சாராம்சமாக இருந்திருக்கிறது.

வால்டேர், ரூசோ போன்ற பிரெஞ்சு தத்துவ சிந்தனையாளர்களின் கருத்துக்களை, தன் தந்தையின் வழியாகவும், சோசலிசம் எனப்படும் சமதர்மக் கொள்கை தொடர்பான ஆர்வத்தை, அவரது காதல் மனைவியான ஜென்னியின் தகப்பனார் வெஸ்ட் பாலன் அவர்கள் மூலமும் வளர்த்துக்கொண்டார்.

தன்னைவிட 4 வயது மூத்த ஜென்னியிடம் இருந்த நட்பு இளவயதில் காதலாக மாறியது. அவரது பதினெட்டாவது வயதில் சொந்தக்காலில் நின்ற பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர் பெர்லின் பல்கலைக் கழகத்தில் படித்த ஏழு ஆண்டு காலமும் ஜென்னி அவருக்காக காத்திருந்தார்.

அங்கு அவர் தத்துவ சிந்தனை, சட்டம், வரலாறு, புவியியல், இலக்கியம் என்று பல்வேறு துறைகளைப் பற்றி படித்தார். சட்டத் துறையில் கவனம் செலுத்துமாறு அவருடைய தந்தையின் அறிவுரையாக இருந்தாலும், அவருக்கு தத்துவ சிந்தனைகளில் தான் மனம் விரும்பி சென்றது.

பிரெடரிக் ஹெகல் என்ற தத்துவ சிந்தனையாளர் கருத்துக்கள் ஈர்க்கப்பட்டு, அவர் முன்வைத்த இயக்கவியல் கொள்கையை, மார்க்ஸ் வாசித்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் அவரின் பேராசிரியராக இருந்த, லு த்விக் பாயர்பாகின் பொருள்முதல்வாத கோட்பாட்டை வாசித்து தெரிந்து கொண்டார். இந்த இரண்டு கோட்பாடுகளையும் இணைத்து, தன்னுடைய கோட்பாடுகளுக்கு அடித்தளமாக பயன்படுத்தி விளக்கினார்.

அவருடைய இருபத்தி மூன்றாவது வயதில் முனைவர் பட்டத்தை பெற்றார். அந்தப் பட்டத்தை எந்த காலத்திலும் அவர் பயன்படுத்தியதில்லை. அதேபோல சட்டம் பயின்று இருந்த அவர் வழக்குரைஞராக இந்த நீதிமன்றத்திலும் வாதாடியது இல்லை.

பேராசிரியர் வேலை கிடைக்காததால், ரைன்லாந்து கெஸட் என்ற இதழில் எழுத ஆரம்பித்தார். இது தான் அவருடைய முதல் பணி. அவருடைய எழுத்துகளில் மக்களுக்காகத்தான் அரசை தவிர அரசுக்காக மக்கள் அல்ல..என்ற சாராம்சத்தில் அடிப்படையிலேயே கட்டுரைகள் எழுதிவந்தார்.

அரசுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், அரசின் நெருக்கடிகள் அவருக்கு தொடர்ந்தது. அந்த நேரத்தில் 1843 ஜூன் 13ஆம் தேதி ஏழு வருடங்கள் தனக்காக காத்திருந்த ஜென்னியை மணம் செய்து கொண்டார். தொடர்ந்து அங்கு வசிக்க முடியாத சூழல் பாரிசில் குடியேறினார். அங்கும் நெருக்கடி, பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு குடியேறி சென்றார். பின்னர் தன்னுடைய இறுதிக் காலத்தில் லண்டனில் வாழ்ந்தார். பல நாடுகளில் வசித்த போதும் எந்த நாட்டிலும் அவர் குடியுரிமையை பெறவில்லை. நான் இந்த உலகத்தின் குடிமகன் என்று தன்னைக் கூறிக் கொண்டார்.

வேறு யாரையும் விட எங்கெல்ஸ்யை விடவும் மார்க்கை அதிகமாக புரிந்து கொண்டவர் ஜென்னி. தன் கடைசி காலம் வரை மார்க்சுக்கு அனைத்து வகையிலும் உற்ற துணையாக இருந்தவர். ஜென்னியின் மேல் கொண்ட காதலால், தன் மூன்று மகள்களின் பெயரிலும் ஜென்னி என்ற பெயர் வருமாறு பெயர் வைத்தார். ஜென்னி கரோலின், ஜென்னி லாரா, ஜென்னி எலினார்…

மார்க்ஸ் கிறுக்கல் கையெழுத்தில் எழுதுவதைப் பார்த்து, அழகாக படி எடுத்துக் கொடுக்கும் வேலையை ஜென்னி செய்ய ஆரம்பித்தார். அந்த நாட்களில் என் வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான நாட்கள் என்று ஜென்னி குறிப்பிட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை தன்னுடைய 29 ஆவது வயதில், உருவாக்கினார். சர்வதேச தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்..என்ற அந்த அறைகூவல் தான் உலக அரசியல் வரலாற்றில் தாக்கத்தை இன்றும் கூட ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கம்யூனிச தத்துவம் இப்படித்தான் உலகிலே வேர் பிடிக்க ஆரம்பித்தது.

ஜெர்மனி பிரான்ஸ் பெல்ஜியம் ஆகிய மூன்று நாடுகளுக்கும் குடி பெயர்ந்து கொண்டே ஒரு வசதி குறைவான அகதி வாழ்க்கையை தான் மார்க்ஸ் வாழ்ந்தார். ஒரு செய்தித்தாளுக்கு எழுதிய போது கிடைத்த சொற்ப வருவாய் தான், அவருக்கு கிடைத்த சம்பளம்.

அவர்கள் லண்டனில் இருக்கும் பொழுது, ஏழைகள் அதிகம் வசிக்கின்ற பகுதியில் தான், இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் தான் வசித்து வந்தார். லண்டனில் தங்கள் குடும்பத்தின் ஒருநாள் வாழ்க்கை குறித்து ஜென்னி, தன்னுடைய நண்பர் யோசிப் வெய்டமையர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாஸ் வறுமையின் நம்பிக்கை தளராது, எப்படி ஒரு லட்சிய வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதை காட்டும் கண்ணாடியாக இந்த கடிதம் கருதப்படுகிறது.

ஒருமுறை கைச்செலவுக்கு காசில்லாமல், மேல்கோட்டை அடகு வைத்தார். நல்ல உடைகள் இல்லாததால் அவருடைய மகள்கள் பள்ளிக்கு பல நாட்கள் செல்ல முடியாத அவஸ்தைகளும் நிகழ்ந்த காலங்களும் உண்டு.

வேறு ஒரு ஆளாக இருந்தால் தன்மானத்தை விட்டுக் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கிடைத்த வேலையில் ஒட்டிக் கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால் அவரால் அப்படி எல்லாம் வாழ முடியவில்லை. தன்னுடைய ஏழ்மை நிலையிலும் கூட, ஏழைத் தொழிலாளர்களுக்கு மக்களுக்கும் எதிராக நடைபெறும், சுரண்டலைப் பற்றி மட்டுமே அவரது இதயமும் மூளையும் சிந்தித்துக் கொண்டிருந்தது.

மார்க்ஸ் சிறந்த தலைவராக இருந்தார். அவரின் சிறந்த தோழராக ஏங்கல்ஸ் இருந்தார். ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் பொதுவுடமைக் கொள்கையை நடைமுறைக்கு சாத்தியமான கோட்பாடாக மார்க்ஸால் உருவாக்கியிருக்க முடியாது. மார்க்சின் பெருமளவு பொருளாதார தேவைகளை, பூர்த்தி செய்தவர் ஏங்கல்ஸ்.

மூலதனம் என்ற நூலுக்காக, அவர் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறார். தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்த நூலை உருவாக்குவதற்கு அர்ப்பணித்து விட்டார். மூலதனத்தின் முதல் பாகம் முடிவடைந்ததும் தன் நண்பன் ஏங்கல்ஸ் க் தன்னுடைய நன்றி கடிதத்தை முதலில் எழுதினார்.
மூலதனத்தின் முதல் பாகம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், அவரது மனைவி ஜென்னி உடல்நலம் குன்றி, காலமானார். மிகவும் நேசித்த அதனுடைய மூத்த மகள் ஜெனினி லாங்குவி அவரும் இறந்துவிட, அப்படின்னு துயரம் பன்மடங்காகப் பெருகி அதற்குப் பிறகு நீண்ட காலம் அவர் உயிர் வாழவில்லை.

அவரது மறைவிற்குப் பிறகு அவரது நண்பர் ஏங்கல்ஸ் மற்றும் இரு மகள்கள் துணையுடன் இரண்டாம் மூன்றாம் பாகத்தை அச்சில் கொண்டு வந்தார்கள்.
மார்க்சின் இளவயது வாழ்க்கை, காதல் வாழ்க்கை, வறுமையிலும் தளராத அவரது உழைப்பு, அவருக்கு உதவிய நண்பர்கள் , அவரது போராட்டங்கள் என்று அனைத்தும் இந்த நூலில் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உலகம் முன்பை விட மேம்பட்டதாக இருப்பதற்கு மார்க்ஸ் முன்வைத்த கொள்கைகள் காரணமாக இருந்திருக்கிறது. பொருளாதாரம், வரலாறு, கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், அரசு எதிர்ப்பு, சமூக மாற்றங்கள், மக்கள் புரட்சிகள், மக்களுக்காக இதழியல், கூட்டாக போராடும் உரிமை.. என பல்வேறு துறைகளிலும் மார்க்ஸ் தாக்கம் செலுத்தியிருக்கிறார்.

” மனித குலத்தின் நன்மைக்குப் பாடுபடும் வகையில் நம்முடைய வேலையை தேர்ந்தெடுத்து விட்டால் அதன் சுமை நமக்கு பெரிய நெருக்கடிகளை தராது..” என்று பள்ளி காலத்தில் அவர் எழுதியிருந்தது போலவே.. அவருடைய வரிகளுக்கு மிகச் உதாரணமாக அவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
தன்னுடைய அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும், எப்படி உலகின் மகத்தான மனிதராக மார்க்ஸ் ஆனார் என்பதை இப்புத்தகம் மிக அழகாக சொல்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு அருமையான நூல்.

– பூங்கொடி கதைசொல்லி