வலியிலிருந்து லாபம் கட்டுரை – அ.பாக்கியம்

வலியிலிருந்து லாபம் கட்டுரை – அ.பாக்கியம்




(தமிழ் மார்க்ஸ் ஸ்பேஸில் 27.01.23. அன்று ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

ஆக்ஸ்பாம் ஒரு தன்னார்வ அமைப்பாகும். பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வரவும் சுதந்திரமான, நியாயமான சமுதாயத்தை நிலை நாட்டவும் பாடுபடுவதாக அந்த அமைப்பில் நோக்கங்கள் தெரிவிக்கிறது.

இந்த அமைப்பு உலகம் முழுவதும், இந்தியாவிலும் ஆய்வுகளை நடத்தி அவ்வப்போது வெளியிடுவது பல தாக்கங்களை உருவாக்கி இருக்கிறது.

பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை விரிவாக உள்ளடக்கி ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. சமத்துவமின்மையின் பலி, வலியிலிருந்து லாபம் என்ற அறிக்கைகள் ஏராளமான விவரங்களை தெரிவிப்பதுடன் இந்தியா சந்திக்கக்கூடிய நெருக்கடிகளை அம்பலப்படுத்தியும் உள்ளது.

பொதுவான ஏற்றத்தாழ்வுகள், ஏற்றத்தாழ்வுக்கான காரணிகள், நிதி ஒதுக்கீடுகள், கோவிட் கால ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள், வரி விகிதங்கள் ஏற்படுத்தும் தாக்கம், ஆகியவற்றை ஆய்வு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு தலைப்புக்கும் உடனடி தீர்வுகளையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஏற்றத்தாழ்வு உலகம் முழுவதிலும் குறிப்பாக முதலாளித்துவ கொள்கைகளை கடைபிடிக்கக்கூடிய நாடுகளிலும் இந்தியாவிலும் அதிகரித்து உள்ளது. உலகின் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 300 கோடி மக்கள் வைத்திருக்கும் சொத்துக்களை விட அதிகமாக உள்ளது. ஏழை நாடுகளில் மருத்துவ வசதி இல்லாமல் வருடத்திற்கு 56 லட்சம் மக்கள் மரணமடைகிறார்கள்.

21 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் 10 சதவீத பணக்காரர்களிடம் 60 சதவீதமான சொத்துக்கள் உள்ளதது. 2021-ம் ஆண்டின் கணக்கின்படி 1% பணக்காரர்களிடம் 40.5% சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அடித்தட்டில் உள்ள 50 சதவீதமான மக்கள் 3 சதவீதம் சொத்துக்களை மட்டுமே வைத்துள்ளனர். ஏற்றத்தாழ்வுகள் மலைக்கும் மடுவுக்குமாக அதிகரித்துள்ளது.

சமத்துவமின்மையின் வகைகள்.

ஏற்கனவே வர்க்கம், பாலினம், சாதி, மதம், பிரதேசம் ஆகிய வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அறிவியல் வளர்ச்சி சமத்துவமின்மையை குறைப்பதற்கு பதிலாக லாபத்தை குறிக்கோளாக கொண்டிருக்க கூடிய அமைப்பில் டிஜிட்டல் டிவைட்(Digital Divide)என்ற புதிய வகையும் சேர்ந்துள்ளது. இவையெல்லாம் சமத்துவமின்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்படும் களமாகும்.

வலியிலிருந்து லாபம்:

அரசாட்சி உட்பட அனைத்தும் செல்வந்தர்களின் கையில் இருப்பதால் அவர்களுக்கான உலகமாகவே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று நோய் காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு பில்லியனர் உருவாகிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் ஒவ்வொரு 33 மணி நேரத்தில் 10 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டார்கள். 2022 ஆம் ஆண்டு மற்றும் 263 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்றார்கள்.

இந்தியாவில் 21 பில்லியனர்கள் கையில் 70 கோடி மக்களின் சொத்துக்கள் அளவு குவிந்திருக்கிறது. கடந்த 23 ஆண்டுகள் பெற்ற லாபத்தை விட பெருந்தொற்று நோய் காலத்தில் அதாவது 24 மாதத்தில் அதிக லாபத்தை பெரும் முதலாளிகள் சுரண்டியுள்ளார்கள்.

2020 மார்ச் 20 ஆம் தேதி முதல் 2021 நவம்பர் 30 வரை பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு ,23.14லட்சம் கோடியிலிருந்து 53. 16 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது என்றால் தொற்று நோயை விட இவர்களின் லாபவெறிதான் மக்களை சாகடித்தது. இந்தியாவில் இக்காலத்தில் டாலர் பணக்காரர்கள் 102 இருந்து 142 ஆக உயர்ந்துள்ளார்கள் அதாவது 39 சதவீதம் பணக்காரர்கள் அதிகமாகியுளானர் .

84 சதவீதம் குடும்பங்கள் இந்தியாவில் தொற்று நோய் காலத்தில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறார்கள். 4 வினாடிக்கு (நிமிடத்திற்கு அல்ல) ஒருவர் இந்த சமத்துவமின்மையால் மரணம் அடைந்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டில் மட்டும் 4.6 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டில் விழுந்தனர். இது பெருந்தொற்று நோய் காலத்தில் உலகில் உருவான ஏழைகளில் சரிபாதியாகும்.

பாலின அசமத்துவம்:

தொற்று நோய் இல்லாத காலத்தில் சமூக வளர்ச்சிப் போக்கில் பாலின சமத்துவத்தை அடைய 99 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்று பொதுவான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்று நோயின் தாக்கத்தால் பாலின சமத்துவம் அடைவதற்கு 135 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்று தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. இவை ஒரு மேலோட்டமான மதிப்பீடு என்றாலும் தொற்று நோய் காலத்தில் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

2020 ஆம் ஆண்டு மட்டும் பெண்கள் 59.11 லட்சம் கோடி வருவாய் இழப்புகளை சந்தித்து உள்ளனர். 2019 ஆம் ஆண்டு பெண்கள் உழைப்பாளிகளை விட தற்போது 1.3 கோடி பெண்கள் உழைப்பாளிகள் குறைவாக இருக்கிறார்கள்.

டிஜிட்டல் அசமத்துவம்:

நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், கருவிகளும் வசதியானவர்களை சென்றடைந்து கொண்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் செல்போன்கள் ஆண்களிடம் 61% இருந்தது. பெண்களிடம் 31% இருந்தது. இன்டர்நெட்களை ஆண்கள் பயன்படுத்துவதை விட பெண்கள் 33 சதவீதம் குறைவாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.

பழங்குடி பட்டியல்யினத்தினர் கணினியை ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், பட்டியலின சாதியினர் 2 சதவீதம் குறைவாகத்தான் கணினியை பயன்படுத்துகிறார்கள்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மற்றும் தேசிய மாதிரி ஆய்வு மையத்தின் விபரப்படி 2021 இல் நிரந்தர வருமானம் உள்ளவர்கள் 95 சதவீதம் செல்போன்களை பயன்படுத்துகிற பொழுது, வேலை கிடைக்காதவர்கள் 50 சதவீதம் மட்டும்தான் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.

கணினியை பயன்படுத்துவதிலும் கிராமத்திற்கும் நகரத்திற்குமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக உள்ளது. தொற்றுநோய் காலத்திற்கு முன்பு கிராமப்புறத்தில் கணினியை 3% பயன்படுத்தினர். நோய் காலத்திற்குப் பிறகு இது 1% குறைந்துவிட்டது.

ஆன்லைன் மூலமாக கல்வி பயில்வது 82 சதவீதமான பெற்றோர்கள் சிக்னல் கிடைக்காமல், இன்டர்நெட்டின் வேகம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். 84 சதவீதம் அரசு பள்ளி ஆசிரியர்கள் இணையம் இல்லாமல் கல்வி போதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

சமத்துவமின்மையின் குறைப்பதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகள் பயன்படுவதை விட லாப நோக்கம் அசமத்துவமின்மையை அதிகப்படுத்தியது.

தீமையின் வடிவம் தனியார்மயம்:

முதல்முறையாக இந்த அறிக்கையில் சமத்துவமின்மை அதிகம் ஆவதற்கு தனியார் மையம் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி உள்ளனர். கல்வியில் தனியார் மையம் ஆதிக்கம் செலுத்துவது சமமான கல்வி கிடைக்காமல் இருக்க காரணமாகியது. தனியார் பள்ளிகளில் 52% பெற்றோர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர். 35 சதமான குழந்தைகள் படிப்பை தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். 57 சதமான மக்கள் அதிக கட்டணத்தை செலுத்தி படிக்க வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதேபோன்று மருத்துவ செலவுகள் உள்நோயாளிகளுக்கு ஆறு மடங்கு அதிகமாகவும், புறநோயாளிகளுக்கு மூன்று மடங்கு அதிகமாகவும் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. மக்களின் அடிப்படை வசதிகளை தனியார்மயமானால் அது எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.

அரசும் நிதி ஒதுக்கீடை வெட்டியது:

இந்தியாவில் 21- 22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 10% நிதியை பொது சுகாதாரத்தில் குறைத்தார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) பொது சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படக்கூடிய நிதியின் அளவு 1.2 முதல் 1.6 மட்டும்.
கடந்த 22 ஆண்டுகளில் பொது சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டில் 0.09% மட்டும்தான் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று கல்வித் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதம் மட்டும்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளில் 0.07% மட்டும்தான் நிதி உயர்வு ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட செலவு, தேசிய சமூக உதவித் திட்டம் ஆகியவற்றிற்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு ஒட்டு மொத்த செலவில் 0.6 சதவீதம் மட்டும்தான் ஒதுக்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகள் 1.5% ஒதுக்கப்பட்டதிலிருந்து சரிபாதியாக வெட்டப்பட்டுள்ளது.

தொற்று நோய் காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு பக்கம் கொள்ளை அடிக்க,ஒன்றிய அரசும் நிதி ஒதுக்கீட்டை வெட்டி மக்களை மரணப் குழிக்கு தள்ளியது.

அண்டை நாடுகளுடன் ஒப்பீடு:

சமத்துவமின்மை குறியீட்டை குறைப்பதற்கான அர்ப்பணிப்பு (commitment to two reduce inquality index) என்ற திட்டத்தின் அடிப்படையில் பல நாடுகள் தொற்று நோய் காலத்தில் ஏற்பட்ட மத்துவத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால் இந்தியாவில் இந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. சுகாதார செலவினத்தில் இந்தியா இரண்டு இடம் பின்னுக்குப் போய் கடைசி ஐந்து நாடுகளில் ஒன்றாக மாறியது.

இந்தியா மொத்த செலவில் சுகாதாரத்திற்காக ஒதுக்குவது 3.64% மட்டுமே. ஆனால் பிரிக்ஸ் நாடுகளான சீனா, ரஷ்யா 10 சதவிகிதம் பிரேசில் 7.7 சதவீதம், தென் ஆப்பிரிக்கா அதிகபட்சமாக 12 9% செலவழிக்கிறது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான 4.3, வங்கதேசம் 5.19, இலங்கை 5.88, நேபாளம் 7.8 சதவீதங்கள் செலவழிக்கிற பொழுது இந்தியாவின் நிலைமை படுமோசமாக இருக்கிறது.

வரி சுமை ஏழை மக்களுக்கு:

தொற்று நோய் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30% வரியிலிருந்து 22 சதவீத வரியாக ஒன்றிய அரசு குறைத்தது. தொழில் வளர்வதற்காக ஊக்கப்படுத்தக்கூடிய முறையில் இது குறைக்கப்படுவதாக மோடி அரசு அறிவித்தது. தொழில் வளரவில்லை மாறாக 1.5 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டது.

இந்தியாவில் 50 சதவீத ஏழை மக்கள் தான் அதிகமான ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார்கள். கீழ்த்தட்டில் உள்ள 50 சதவீதமான இந்தியர்கள் 64. 3 ஜிஎஸ்டி வரியை செலுத்துகிறார்கள் பணக்காரர்கள் 3 முதல் 4 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்துகிறார்கள். தொற்று நோய் காலத்தில் பல லத்தின் அமெரிக்க நாடுகளில் பணக்காரர்களுக்கு செல்வ வரி போடப்பட்டது. இந்தியாவில் மட்டும் சலுகை கொடுக்கப்பட்டது.

எனவே ஆக்ஸ்ஃபார்ம் அறிக்கை உலகில் ஏற்பட்டுள்ள அசமத்துவம் இன்மையை பளிச்சென படம் பிடித்து காட்டியுள்ளது தொற்றுநோய் காலத்தில் இந்த அசமத்துவமின்மை மிகப் பெரும் அளவுக்கு அதிகரித்து உள்ளது என்பதே அபாயகரமான முறையில் இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

செல்வ வரியை விதிப்பது உடனடி தீர்வு. இந்தியாவில் 98 பில்லியனர்களுக்கு 4% வரி விதித்தால் 17 ஆண்டுகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை நிதி பற்றாக்குறை இன்றி நடக்கலாம். பள்ளிக் கல்விக்கான அனைத்து செலவுகளையும் ஈடு கட்டலாம். ஆண்டுக்கு பத்து கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இரண்டு சதவீதம் வரி விதித்தால் பட்ஜெட் வரவில் 121% அதிகரிக்கும்.

செல்வந்தர்களுக்கான அரசு இவற்றையெல்லாம் செய்யாது. அறிக்கைகள் அரசுக்கு ஆலோசனை சொன்னாலும் அது மக்களுக்கான அறைகூவலாக எடுத்துக் கொண்டு செல்வந்தர்களுக்கான ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தி உழைப்பாளி மக்களுக்கான அதிகாரத்தை நிலை நாட்டுவது மூலமாகத்தான் சமத்துவமின்மையை போக்க முடியும் இவைதான் சோசலிச நாடுகளிலும் நடந்து வருகிறது. தற்போது முற்போர்காளர்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தென்னமெரிக்க நாடுகளில் இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் நடந்து வருகிறது.

அசமத்துவத்தை தகர்த்து சமத்துவம் நோக்கி முன்னேறுவதற்கு உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம்.

அ.பாக்கியம்

பாஜக வின் ச.ம.உ. சந்தை கட்டுரை – அ.பாக்கியம்

பாஜக வின் ச.ம.உ. சந்தை கட்டுரை – அ.பாக்கியம்




சந்தை மடம் ஆளுநர் மாளிகை:

சரக்குகளின் வகைகளுக்கு ஏற்ற முறையில் பல சந்தைகள் உள்ளது.
அப்படி ஒரு சந்தையாக பாஜக ச.ம.உ. களை வாங்க ஒரு சந்தையை உருவாக்கி உள்ளது.

மக்களிடம் வசூலிக்கும் வரிகளை எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்து முதலாளிகள் மூலம் பணத்தைப் பெற்று ச.ம.உ.சந்தைக்கு பல்லாயிரம் கோடி முதலீடு செய்து வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு 277 ச.ம.உ. களை வாங்கி உள்ளார்கள்.

கடந்த சில ஆண்டுகள் மட்டும் 6,300 கோடி ரூபாய் ச.ம. உ. க்களை வாங்குவதற்கு செலவு செய்துள்ளார்கள்.

கர்நாடகாவில், கோவா, மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, குஜராத் என பல மாநிலங்களில் விலை கொடுத்து வாங்கி ஆட்சியைப் பிடித்துள்ளார்கள்.

தெலுங்கானாவில் டி ஆர் எஸ் கட்சியின் ஒருச.ம.உ. விற்கு 100 கோடி ரூபாய் வரை விலை பேசி உள்ளனர்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ச.ம.உ. களை வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசி, அதிக எம்எல்ஏக்களை சந்தைக்கு கொண்டு வந்தால் 75 கோடி ரூபாய் வரை கொடுக்கப்படும் என்று விலை பேசி உள்ளனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி ச.ம.உ. களை வாங்குவதற்கு 800 கோடி வரை பேரம் பேசியுள்ளனர்.

ராஜஸ்தானிலும் ராஜேஷ் பைலட் மூலம் ச.ம.உ. களை வாங்க சந்தைக்கு அழைத்து உள்ளனர் .

இந்தியாவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை இதுவரை ஒரு சிலர் கட்சி மாறுவது கட்சி தாவுவது சில சலுகைகளை வாங்குவது என்ற நிலையை மாற்றி மக்களின் ஆதரவோடு என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனத்தோடு ச.ம.உ. களை வாங்கும் சந்தையை பகிரங்கமாகத் தெரிந்து உள்ளனர்.

இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பான மக்களின் அதிகாரத்தை உடைத்தெரியும் முயற்சியாகும். சந்தை மடமாக ஆளுநர் மாளிகை செயல்படுகிறது.

– அ.பாக்கியம்

நூல் அறிமுகம்: ஜனநேசனின் ‘எலோ..லம்’ நாவல் – சு.பொ. அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: ஜனநேசனின் ‘எலோ..லம்’ நாவல் – சு.பொ. அகத்தியலிங்கம்




நூல் : ஏலோ…லம்
ஆசிரியர் : ஜனநேசன்
விலை : ரூ.₹360/-
பக்கங்கள் – 384
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

ஏலக்காட்டின் வாழ்க்கை ஸ்கேன்: நேற்றும் இன்றும்.

“என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம்? பள்ளு , பறைக, மாதாரி , கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல, விலகி நிக்கல! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல …அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு !……..

ஏலக்காய் டீ யின் மணம் மூக்கைத் துளைக்கும். ருசி நாக்கை ஈர்க்கும் பாயாசம், பிரியாணி என பல்வேறு சமையல்களில் ஏலக்காயைப் பயன்படுத்தி மகிழ்வோம்! ஆயின் அந்த ஏலக்காயின் பின்னிருக்கும் வலியை அறிவோமா?

மலைக் காடுகளில் காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களில் செடியின் மரத்தின் தூரில் உறைந்திருக்கும் இரத்தத்தை, கண்ணீரை பேசும் புதினங்கள் சிலவேனும் வாசித்திருக்கிறீர்களா?.

என் நினைவுக்கு எட்டிய சிலவற்றின் பெயர்களை கீழே நினைவூட்டுகிறேன். வாசித்தவர்கள் அசைபோடுவீர்! வாசிக்காதவர்கள் தேடி வாசிப்பீர்!

டி.செல்வராஜின் ‘தேநீர்’ , இரா. முருகவேள் மொழியாக்கத்தில் பி.எச்.டேனியலின் ‘எரியும் பனிக்காடு’, கொ மா கோதண்டம் எழுதிய ‘ஏலச்சிகரம்’, ‘குறிஞ்சாம் பூ’, ‘ஜன்ம பூமிகள்’, கு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’ , ஜானகி ராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில் கோதாவரி பாருலேகர் எழுதிய ‘மனிதர்கள் விழித்துக்கொள்ளும் போது’ , இரா சடகோபனின் மொழிபெயர்ப்பில் கிறொஸ்டின் வில்சன் எழுதிய ‘கசந்த கோப்பி’ [ bitter berry] , அமல்ராஜின் ‘தேரிக்காடு’ உள்ளிட்ட புதினங்கள் மலைக்காடுகளில் பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் படும்பாட்டை, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் விவரித்திருக்கும்; ஆயின் அடிநாதமாய் சுரண்டலும் ஒடுக்குமுறையும் பேசப்பட்டிருக்கும், அவரவர் அரசியல் சமூகப் புரிதலுக்கு ஏற்ப. [ நான் சொல்ல மறந்த நூல்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்க ]

அந்த வரிசையில் இடம் பிடிக்க வந்திருக்கிறது “ஏலோ… லம்”. ஆசிரியர் ஜனநேசன். ஏலத்தோட்டங்களின் வாழ்க்கைப் பாட்டை மையம் கொண்டு எழுதப் பட்டிருப்பதுதான் இப்புதினத்தின் சிறப்பு .

“இப்புதினத்தின் நிகழ்வுகள் எண்பது விழுக்காடு உண்மையானவை. இவர்களை ஒருங்கிணைக்கவே இருபது விழுக்காடு புனைவைக் கொண்டு நெய்தேன்.” என வாக்கு மூலம் தருகிறார் ஜனநேசன். ஏற்கனவே சிறுகதைகள், குறுநாவல்கள் தந்துள்ளார். இரா.வீரராகவன் என்பது இயற்பெயர். ஓய்வுபெற்ற அரசு கல்லூரி நூலகர்.

இந்நாவலில் சுமார் அறுபது அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலக்காட்டு வாழ்க்கையையும், 2019 -20 பணமதிப்பீட்டு கால வாழ்க்கையையும் இரண்டு பாகங்களாய் இரண்டு ஸ்கேன் ரிப்போர்ட்டுகளாய் 384 பக்கங்களில் தந்துள்ளார் .

பொதுவாய் தேயிலை, காப்பி, ஏலக்காய் என எதைத் தொட்டு எழுதினாலும் அட்டைக்கடியையும், சீட்டுகட்டுக் கணக்கான டப்பா போன்ற வீடுகளையும் சொல்லாமல் கதை நகராது; பெரும்பாலும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே இங்கே வயிற்றுப்பாட்டுக்காய் அட்டைக்கடியுடனும் கடினமான பணிச்சூழலிலும் மல்லுக்கட்டி கிடப்பார்கள். ஆம், வாழ்ந்தார்கள் எனச் சொல்லவே முடியாது. ஆயினும் அச்சூழலிலும் காதலும் காமமும் சாதியும் மதமும் அறிவும் அறியாமையும் என வாழ்வின் எல்லா கூறுகளும் அங்கே விரவியே கிடக்கும். இப்புதினமும் அந்த வரையறைக்கு விதிவிலக்கல்ல.

கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டப்பாறை ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க தந்தையை இழந்த தன் மகன் ரவியை ஒண்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பே பொன்னுத்தாய் அழைத்துச் செல்லும் காட்சியில் நாவல் தொடங்குகிறது. ரவி வழியே புதினம் விரிகிறது.

அந்த தோட்டம் கிருஷ்ணராஜா என்பவருக்குச் சொந்தம்; அவர் எப்போதாவது வந்து போகிறவர். மேனஜர் வைரம் செட்டியார் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வருபவர், கணக்குப் பிள்ளை துரைசாமி கிட்டத்தட்ட ஆல் இன் அழகுராஜாவாய் ஆட்டம் காட்டுபவர். அவரின் உதவிக்கு குப்பய்யா .

இங்கே கங்காணிகள் பழனிச்சாமி கவுண்டர், சீனி மாதாரி, பரமன், சின்னாத்தேவர், இராமர், குரங்கு விரட்டி ரெங்கசாமி ஆகியோரின் கீழ் பொன்னுத்தாய், சிவனம்மா, மாரியம்மா உள்ளிட்ட பெண்கள், கோட்டி நாய்க்கர், மாரிமுத்து, முனுசாமி என ஒரு பட்டாளம் ஏலத்தோட்டத்தின் வேரில் தம் செந்நீரைப் பொழிந்து கொண்டிருந்தனர் .

“இல்லம்மா! என் கணுக்கால்ல அட்டைகள் ரத்தம் குடிச்சப்போ, சக்கிலிய வீட்டுப் பழனிதான் அட்டையைப் புடுங்கிப் போட்டான்; அண்ணாந்து காபி பழம் பறிக்கையில் நான் கீழே விழ இருந்தப்போ பள்ளவீட்டு செத்த குழலு இருளன்தான் காப்பாற்றினான்.! ஏம்மா, சக்கிலி பறையன்னா என்னம்மா?” என சிறுவன் ரவியின் வெள்ளந்தியான கேள்வி, நிலவிய யதார்த்தத்தைச் சொல்லும். ரவி மாடு மேய்க்கப் போன இடத்தில் அறிமுகமாகும் சித்திரன் எனும் ஓர் முதியவர் மூலம் மேலும் பல செய்திகளையும் பொது விஷயங்களையும் ரவி அறிந்தான். .

கள்ளர், தேவர், சக்கிலியர், பள்ளர், பறையர், நாய்க்கர், செட்டி இன்னும் பல சாதியாகத்தான் ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்தார்கள். சாதி அவ்வளவு சீக்கிரம் தலைமுழுகுகிற சமாச்சாரமா? இல்லையே! ஆனால் வாழ்க்கைப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் சாதியை மீறி அவர்களை ஒன்றுபட வைத்ததை இப்புதினம் வலுவாகவே பதிவு செய்கிறது.

“கங்காணிகள் செய்கிற அட்டூழியத்தை சிவனம்மா சாமியாடுகிற மாதிரி முதலாளி காதில் போட்டிருச்சு! முதலாளி என்ன நடவடிக்கை எடுப்பார்னு பார்ப்போம்!” என்று பெண்கள் பேசிக்கொண்டனர் .

லட்சுமி அம்மன் ஒரு கடவுளாய் வழிபடும் கோயிலாய் மட்டுமில்லை. அவர்களின் ஆற்றாமையை, கோபத்தை, எரிச்சலை, அன்பை, வெறுப்பை கொட்டும் இடமாகவும் இருந்தது. “ இதயமற்றவர்களின் இதயமாக, ஏக்கப் பெருமூச்சாக” என மார்க்ஸ் சொன்னது போல் இருந்தது.

தோட்டத்தில் பிரச்சனை முற்றிய ஓர் நாளில், கணக்குப் பிள்ளை துரைசாமி சாதிக்கலவரத்தைத் தூண்ட பயன்படுவார் என கணக்குப் போட்டு தன் சக ஊழியராய் ஏற்கெனவே சேர்த்துக் கொண்ட குப்பய்யாவிடம், லட்சுமி அம்மன் பூஜை முடிந்ததும் கடுகடுப்புடன் வார்த்தைகளைக் கொட்டினார்..

“என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம்? பள்ளு, பறைக, மாதாரி, கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல, விலகி நிக்கல! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல… அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு! எம் முப்பது வருஷ அனுபவத்தில் இம்புட்டு திமிர் பிடிச்ச ஆளுகளைப் பார்த்ததில்லை! இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான்… … மக்கா மக்கான்னு அவங்களோடு ராத்திரி பகலா இணையுறீங்களே… அவங்கள வைக்கிற இடத்தில் வைக்கணும்..” என்று பேசி கிழட்டு மாடு போல் புஸ் புஸ்ஸுன்னு மூச்சுவிட்டார் துரைச்சாமி .

வில்லனாக காட்டப்பட்டிருக்கும் இதே துரைச்சாமி செத்த பிறகு எடுக்கப்பட்ட அவரின் கடிதம் அவருக்குள்ளும் ஈரம் இருந்ததை காட்டுகிறது. நூலாசிரியரின் இப்பதிவு நுட்பமானது .

யானை மிதித்து செத்த கோட்டி நாய்க்கர், பாம்பு கடித்து செத்த மாரியக்கா மரணங்கள் பல கேள்விகளை எழுப்பின; முளைவிட்டிருந்த சங்கத்தை போராடுகிற சங்கமாக மாற்றியது; வீரமிக்க போராட்டம் மூன்று உயிர்களைப் பலி வாங்கியது. போராட்டம் வென்றது. அடியாள், வஞ்சகம், சதி எல்லாம் காட்சியாகிறது. ஆனால் முதலாளியின் போக்காலும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளாலும் எல்லாம் பறிபோனது. தலைகீழானது .

51 அத்தியாயங்களைக் கொண்ட முதல் பாகத்தில் சுமார் அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலத்தோட்டத்தின் சமூக, அரசியல்,
பொருளாதார சித்திரம் கதையாக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் என்னுரையில் நூலாசிரியரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். கதா பாத்திரங்கள் பெரும்பாலும் நிஜத்தை சார்ந்து இருப்பதால் நாவலுக்கு உயிர்துடிப்பு தானே வந்துவிடுகிறது.

ஆயினும், எனக்கு சில ஐயங்கள் இங்கே வருவதை தவிர்க்கவே முடியவில்லை. ஒன்று மலைக்காடுகளில் நான் இதுவரை வாசித்தது போல் கேட்டறிந்தது போல் கங்காணிகள் கொடூரமானார்களாய் பொதுவாய்ச் சித்தரிப்பு இல்லையே விதிவிலக்குகள் தவிர! இது என் புரிதல் கோளாறா? இடதுசாரி போராட்டங்கள் விளைவாக ஏற்பட்ட சூழல் மாற்றமெனில் அதுகுறித்த தகவல்கூட போகிற போக்கில்கூட சொல்லப்படவில்லையே! ஏன்? அல்லது எழுத்தாளர் கண்டறிந்த உண்மை எனில் கேள்வி வாபஸ் !

இரண்டு, போலீசும், அரசு நிர்வாகமும் யார் ஆட்சியிலும் ஒடுக்குமுறைக் கருவிதானே! இடதுசாரி அரசு இருந்ததால் கொஞ்சம் வித்தியாசமாக பிரச்சனையைக் கையாண்டு இருக்கலாம். ஆயின் இப்புதினத்தில் விவரிப்பதுபோல் நேர்மையும் கண்ணியமும் உள்ளவர்களாக இருப்பார்களா?

மூன்று, ஐஎன்டியுசியிலிருந்து சிஐடியுக்கு கைமாற்றிவிட்டது போல் இப்புதினத்தில் சொல்லப்பட்டிருப்பது யதார்த்ததுக்கு நெருக்கமானதா?

11 அத்தியாயம் கொண்ட இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட ஓர் அரசியல் சமூக அறிக்கையே. தோட்டங்களின் குவிமையம் உடைந்து சிறு உடைமையாளர்கள் தோற்றம், வட இந்திய தொழிலாளர் வருகை, அவர்கள் படும்பாடு அவர்களின் பலம், பலவீனம், அரசு கொள்கையால் ஏற்பட்ட சரிவு, பண்வீக்கம் தொடுத்த தாக்குதல் என எல்லாம் பாத்திரங்கள் வழி சொல்லப்பட்டிருக்கிறது .

“காலையில ரொட்டி சுட்டு சாப்பிட்டுக்கிறாங்க. உப்பை தொட்டு பச்சை மிளகாய் வெங்காயத்தை கடிச்சுகிட்டு திங்கிறாங்க.. அதில் என்ன ருசியோ என்ன சத்தோ தெரியலை! கருமாயப்பட்ட பொழப்பு….. சாயந்திரத்தில குடிக்கிற பெண்ணுகளும் இருக்காங்க…” இப்படி அவர்களின் வாழ்க்கைப் பாட்டையும் அரசியல் சமூக விழிப்புணர்வற்ற அவர்களின் அறியாமையையும் ஆங்காங்கு நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார் .

புலம் பெயரும் தொழிலாளர்களுக்காய் அரசு என்ன பாதுகாப்பு வைத்திருக்கிறது. ஒன்றுமில்லை. மாறாக கூலியைக் குறைக்க நேரம் காலமின்றி சுரண்ட சட்டத்தை காலில் போட்டு மிதிக்க முதலாளிக்கு சர்வசுதந்திரத்தை தந்துள்ளது. அது இப்புதினத்தில் சாத்தியமான அளவு சொல்லப்பட்டிருக்கு .

பணவீக்க நடவடிக்கையின் போது நோட்டை மாற்ற கமிஷன் பெற்ற பாஜகவினர் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அது பெரும் உண்மை.

சிறுகதை எழுதுவதில் கொடிகட்டியவர் ஜனநேசன், நெடுங்கதை எழுத 2004ல் தொடங்கி அப்போது ஓர் கள ஆய்வு, 2019 ல் ஓர் கள ஆய்வு என இரண்டு கள ஆய்வுகள் செய்து இந்நாவலை 15 ஆண்டுகாலமாக நெய்துள்ளார். கதைக் களத்திற்கு ஏற்ப தேவையான மலையாளம் கலந்த தமிழ் நடையும், புரிகிற மாதிரியான உரையாடலுமாய் கதையை நகர்த்துவதில் ஜனநேசன் வெற்றி பெற்றுள்ளார்.

கள ஆய்வு செய்து புதினம் எழுதுவது மேற்கத்திய உலகில் அதிகம். தமிழில் மிகக்குறைவு. ராஜம் கிருஷ்ணன் இதில் கிட்டத்தட்ட முன்னத்தி ஏராய் தடம் பதித்தார். அவ்வழியில் ஜனநேசனும் பயணப்பட்டிருப்பது மிக நன்று. பாராட்டுக்கள். தொடரட்டும் இப்பணி!

சு.பொ.அகத்தியலிங்கம்.
20/8/2022.

நூல் அறிமுகம்: ஜனநேசனின் எலோ..லம் நாவல் – விசாகன்

நூல் அறிமுகம்: ஜனநேசனின் எலோ..லம் நாவல் – விசாகன்




நூல்: எலோ..லம் 
ஆசிரியர்: ஜனநேசன்
விலை: ₹384
பக்கங்கள்: 384

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

தமிழகத்தில் “மாபெரும்” அல்லது “ஒட்டுமொத்த – தலைகீழ்” அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்த வருடமான 1969ல், தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கேரள மலை வனப்பகுதியில், தேனி மாவட்டத்திலிருந்தும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏல விவசயாக் கூலியாகப் போய், அங்கேயே தங்கி தலைமுறைகளைக் கழித்த ஒரு கூட்டத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையில் அங்கு சற்றேறக்குறைய பத்தாண்டுகாலம் கழித்த, கனத்த, அடர்ந்த, வறண்ட பொழுதுகளையும், பாடுகளையும் இண்டு இடுக்கு விடாமல் அங்குலம் அங்குலமாக அலசியாராய்ந்து எழுதி அதை *“ஏலோ…லம்” என்ற பெயரில் நமக்குப் புதினமாகத்  தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜனநேசன்.

கணவன் இறந்தபின்பு பிழைப்புக்காக ஏல விவசாயியாகச் செல்ல முடிவெடுக்கும் பொன்னுத்தாய், அவளது சிறார் வயதுப் பையன் ரவியை அழைத்துக்கொண்டு வட்டப்பாறை ஏலத்  தோட்டத்திற்கு இடம்பெறும் இடத்திலிருந்து துவங்குகின்றது கதை. இடைச்சாதியனருடன், கீழ்ச்சாதியாகக் கருதப்பட்டிருந்த சக்கிலியர், பள்ளர், பறையர் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் பஞ்சம் பிழைக்க ஏல மலை ஏறிவரும் காலமாக அது இருந்தது. ஆண்பள், பெண்கள், வயதானவர்கள், சிறுவர்கள் என பாரபாட்சமின்றி, பணிப்பாதுகாப்பற்ற, உயிர்பாதுகாப்பற்ற, உழைப்புக்கேற்ற கூலியற்ற, அரைவயிற்றுக் கஞ்சி மட்டுமே உறுதியாகத் தென்படுகின்ற, குருதி உறிஞ்சும் அட்டைக்கடி, பெரும்பெரும் கொசுக்களின் கடி, காட்டு யானைகளின் அச்சுறுத்தல், பாலியல் சுரண்டல் இவைகளுக்கிடையே ஒரு முறைசாரா தொழிலாளர்களாகவும், கடும் உழைப்பினைக் கோருகின்ற இடத்திலும் இவர்கள் தங்கள் வாழ்வை ஒப்புக் கொடுக்கிறார்கள்.

ஓய்வற்ற அடக்குமுறைகளுக்கிடையே அந்த குளிர்மிகு அடர்ந்த வனப்பகுதியில் இறுக்கமாக நகரும் இவர்களின் வாழ்க்கையின் பின்னணியிலும், உழைப்பின் ஆதாரத்திலும் வட்டப்பாறை ஏலத் தோட்டத்தின் ராஜபாளையத்து முதலாளியின் சொகுசு வாழ்க்கை பொதிந்துகிடந்தது என்பது அந்த கேட்பாறற்ற கூலிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பணி நேரத்தின்போது மலை யானையைக் கண்ட கோட்டிநாயக்கம் மிரண்டு விழுந்து காயம் பட்டு இறந்து போகும் சமயத்தில் அந்தோட்டத் தொழிலாளர்களின் ஆழ்மனத்தில் அவர்களையறியாது பற்றிக்கொண்ட எதிர்ப்பு அரசியல், குரங்கு விரட்டியின் அலட்சியத்தால் குரங்கு மேலெ விழுந்து இறந்துபோகின்ற மாரியம்மாள் என்ற ஒரு பெண்ணின் மரணத்திற்குப் பின்னர் அவர்கள் அறிந்தே வெளிப்படத் தொடங்குகிறது.

அந்த சமயத்தில், அத்தோட்ட முதலாளி, சர்வதேச ஏல விவசாயியாக மாற வேண்டும் என்பதால், தொழிற்சங்கம் தனது விவசாயப் பகுதியில் இருக்க வேண்டும் என்ற அதற்கான நிபந்தனையின் படி, காங்கிரஸ் தொழிற்சங்கத்தை தனது தொழிலாளர்கள் மத்தியில் ஊடுறுவச் செய்திருந்ததால், இவ்விரண்டு மரணப் பிரச்சனையையும் அத் தொழிற்சங்கம் கையாள்கிறது.

சிறுசிறு அளவிலான போராட்டங்கள், சமரசம், போதாமை,  மீண்டும் பேச்சுவார்த்தை என்று சங்கத்தாருக்கும், தொழிலாளர்களுக்கும், முதலாளிக்குமிடையே நடந்து வருகின்றது.

எதிலும் தீர்வற்ற, பிரச்சனைகளையும், தேவைகளையும் தள்ளிப்போடுகின்ற நிலையே தொடர்கிறது.

இதனுடாக தொழிலார்களின் வாழ்வு நகர்கிறது என்பதை கதை அதன் போக்கில் சொல்லிச் செல்கிறது.

தொழிற்சங்கம் இருந்தும் பிரச்சனைகள் தீர்வதில் இருக்கின்ற சுணக்கத்தைக் கண்டுகொண்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுக்க, அவர்கள் தங்களுக்குத் தரப்படுகின்ற அரசியல் நெருக்கடியை தொழிலாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லி, அவர்களை சிஐடியு சங்கத்தில் சேந்து செயல்பட வலியுறுத்துகிறார்கள்.

தொழிலாளர்களும், தோழமை உணர்வு கொண்ட சிஐடியு சங்கத்தில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறார்கள்.

அதன்பின்னர் அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை அருகில் வரத் தொடங்குகிறது.

வேலை நிறுத்தம், பேரணி, கலவரம், உயிரிழப்பு எனத் தொடரும் நாட்கள், ஒரு கட்டத்தில் அரசின் உதவியோடு முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் படுகிறது.

இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகை, தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம், குளிர்காலப் படி, மழைக்காலப் படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வரையறுக்கப்படுகிறது. இதற்கிடையில் முதலாளி மற்றும் அவருக்குக் கீழே பணியாற்றுகின்ற மேலாளர், கணக்குப்பிள்ளை போன்றோரின் சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் முயற்சிகளிலும் தொழிலாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

தொழிலாளர்களை மிரட்டுவதற்காக முதலாளியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாண்டியன் வகையறா ரவுடிகளின் தொல்லைகளிலிருந்தும் தொழிலாளர்கள் தங்களைத் தற்காக்கின்றார்கள்.

இதுபோன்ற எச்சரிக்கை உணர்வுகள் தொழிற்சங்கம்தான் கற்றுத் தந்தது என்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கிடையிலும், தொழிலாளர்கள் குடும்பத்திற்குள் நடக்கின்ற காதல் உணர்வுகள், காமக் களியாட்டங்கள், உறவுமுறைக் கொண்டாட்டங்கள், குலதெய்வ வழிபாடுகள் என அனைத்தும் வந்து கடக்கிறது அவர்களுடைய அந்த வாழ்வில்.

ஒருக்கட்டத்தில், ரவுடியான பாண்டியன் வகையறாக்கள் கஞ்சாச் செடிகளை சட்டவிரோதமாக வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்ப்ப்படுகின்றார்கள்.

அதனால் வந்துவிட்ட விசாரணைக் கிடுக்கிப்பிடிகளைக் காரணம் காட்டி, ஒரு சில கூலித் தொழிலாளர்களைத் தவிர அனைவரையும் 200 ரூபாய் பொங்கல் பணம் கொடுத்து, பொங்கலைக் கொண்டாடிவிட்டு வருமாறு அனுப்புகிறார் முதலாளி.

ஏமாந்த கூலிகள், பணம் கிடைத்த மகிழ்ச்சியில் தங்களது ஊரைப் பார்க்கக் கிளம்புகிறார்கள். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி முதலாளி தன்னுடைய பெரும்பகுதி நிலங்களை விற்றுவிடுவதால் ஊருக்கு வந்திருந்த கூலித் தொழிலாளிகள் மீண்டும் ஏலமலை விவசாயப் பகுதிக்குத் திரும்ப முடிவதில்லை என்பதோடு முதல் அத்தியாயம் முடிகிறது.

294 பக்கங்களைக் கொண்ட முதல் அத்தியாயத்தின் பலம் தேனி மாவட்டத்து வட்டார மொழி.

அக்காலத்து மக்களின் அதுவும் கடைநிலைக் கூலித் தொழிலாளர்களின் வாய்மொழி அப்படியே அச்சு அசலாக எழுத்தாக வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வகையில் ஒவ்வொரு வரியுமே வட்டார மொழியின் மணத்தைப் பரப்புகிறது.

வாசிக்க வாசிக்க அத்தனை இன்பம்.

மேலும், “இருண்ட காட்டில் பொழுது பார்ப்பது என்பதே மகிழ்ச்சியான விசயம்! தங்கத்தினால் உருக்கிண தண்ணி மாதிரி பொழுது மரக்கிளைகளுக்கிடையே விழும்! அது விடும் இடத்தில் நிற்கும்போது உடல் சிவந்து சூடேறி உடம்பெல்லாம் பரவுவது இதமாக இருக்கும்.

ஈரத்தில் பத்தத மேனியில் வெயில்படும்போது சுருங்கிய தோல் எல்லாம் விரிவது தொட்டாச்சினுங்கி இலை விரியறதைப் பார்க்கிற மாதிரி இருக்கும்” மற்றும் “வானத்தில் மறைக்க மறைக்க வரும் கருமேகக் கூட்டத்தில் நழுவி நழுவிவரும் நிலவின் விளையாட்டு அவர்களின் நடப்பு வாழ்க்கை நிகழ்வுகளோடு ஒத்துப்போவதாக இருந்தது” என்பது போன்ற இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை, அந்த தருணத்தை விளக்குவதாகட்டும், “ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேயிலைப்புதர்கள் தீண்டுவாரில்லாமல் சிலிர்த்துக் கிடந்தன” என்று உவமைப்படுத்துவதாகட்டும், இதுபோன்றவைகள் நாவல் முழுமைக்குமே  விரவிக்கிடக்கின்றதைப் பார்க்கும்போது மனதுக்கு அத்தனை நெருக்கமான உணர்வை அம்மக்கள் மீது கொண்டு வருகிறது.

தொழிற்சங்க வரவிற்குப் பின்னர் தொழிலாளர்கள் மனதிலும், நடைமுறை வாழ்விலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அழகாக விளக்கியிருக்கிறார் எழுத்தாளர் ஜனநேசன்.

“சிதறி பரவலாக இருக்கின்ற சூரிய வெளிச்சத்தைக் கண்ணாடி வில்லை வழியா ஒன்று சேர்த்தால் தீப்பத்த வைக்க முடியும்னா சிதறிக் கிடக்கிற நாம ஒன்றுசேர்ந்தா நாம ஜெயிச்சிடலாமில்ல” என்ற ரவியின் கருத்தினை புரிந்து உள்வாங்கிய தொழிலாளர்களாக அவர்கள் மிளிர்வதை நாம் காணமுடிகிறது.

ரத்தம் தோய உழைப்பது, ஏமாற்றப்படுவது, போராடுவது, முதலாளிகளின் சூழ்ச்சிக்குப் பலியாவது, மீண்டும் போராடுவது, தனது இருப்பை அந்தப் போராட்டத்தின் மூலம் தெளிவுப்படுத்துவது என இவர்களின் வாழ்க்கை நீள்கிறது என்பது கண்கூடு.

சிவனம்மா, பங்கஜம் போன்றவர்களின் நெஞ்சைக் கிழிக்கின்ற கதைகளினுடாகவும், சித்திரக்கிழவன், ரவியின் உறவு மற்றும் உரையாடல்களாளும் புதினத்தை மெருகேற்றியிருக்கிறார் ஆசிரியர்.

எளிய மனிர்களின் வாழ்க்கை எண்ணிப் பார்த்துவிட முடியாத அளவிற்கு எத்தனை கடுமையானது என்பதன் காலத்தின் கண்ணாடியாகக் காட்டுகிறது இந்த ஏலோ…லம் என்கிற புதினம்.

ஏலத் தொழிளார்களின் வாழ்கையுடன் தொடங்கும் இப்புதினத்தில் இம்மியளவுகூட அவர்களின் வாழ்வைத் தாண்டிய வரிகள் வந்துவிடக்கூடாது என்பதிலும், எழுத்தாளரின் மூக்கு உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதிலும் மிகப்பிடிவாதமாகக் கவனம் செலுத்தியிருக்கும் எழுத்தாளர் ஜனநேசன்,

எந்தவொரு இடைச்செருகலும் இல்லாது அவர்களின் அந்தக் குறிப்பிட்ட கால வாழ்க்கையை அப்படியே தனது எழுத்துகளின் வாயிலாக நமக்கு உரித்துக்

காட்டியிருப்பதன் மூலம் வாசிக்கும் நமக்கும் அதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் வரவிடாமல் தடுப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

அந்த வகையில் இது ஒரு அசாத்தியமிக்கதும், பொறுமையின் உச்சத்திலிருந்தும் உருவாகியிருக்கின்ற படைப்பு என்பதில் மாற்றுக்கருத்திருக்காது.

ஏமாந்து தனது ஊரிலேயே தங்க நேருகின்ற பொன்னுத்தாய் மற்றும் அவளது மகன் ரவியின் அடுத்தக்கட்ட வாழ்க்கையையும், ரவி படித்து அரசின் உயர் அலுவலராகப் பொறுப்பேற்று பணிபுரிந்து ஓய்வு பெறுவதையும் நமக்கு உணர்த்திவிட்டு, 2016 வாக்கில் ஓய்வைப் பெறும் அவர், மீண்டும் தான் சிறார் பருவத்தில் கழித்த வட்டப்பாறை ஏலத் தோட்டப் பகுதிக்குச் சென்று பார்வையிடுவதையும், அங்கிருக்கின்ற மனிர்களைச் சந்தித்து உரையாடுவதையும், தற்போதைய தொழிற்சங்க நிலையை அலசியாராய்வதினுடாக, மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கி இரண்டாவது அத்தியாத்தை ஒரு 85 பக்கங்களில் சொல்லி புதினத்தை முடிக்கிறார்  ஜனநேசன்.

ஆனால், ஏலத்தோட்ட கூலிகளின் பாடுகளைச் சொல்லிவரும் உயிர்ப்பான பகுதிகளினூடாக, பணமதிப்பிழப்பு அரசியலைச் சேர்த்திருப்பது உணர்வுப்பூர்வமாக அதனுடன் ஒட்டவில்லை என்பதை மறுக்கமுடியாது.

இருப்பினும், பிரதி வெளிவந்தபின்பு அதை நாம் புறக்கணிக்க முடியாது என்பதால், அன்றைய கால அரசியல் நிலைமையைப் பதிவு செய்கின்ற ஒரு பகுதியாக நாம் அந்த விசயத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது.

ஏலச் செடி நடுவது, களை எடுப்பது, பழமெடுப்பது என ஒவ்வொன்றும் துளயளவிறகும் விட்டுவிடாமல் அது குறித்த செய்திகளை சிரத்தையோடு பதிவு செய்திருப்பது அந்த ஏல மணத்தைவிட வாசிக்கும்போது நாம் அனுபவிக்கின்ற அற்புத மணம் ஒப்பற்றது. அதிகாரவர்க்கத்தின் வரலாறு மட்டுமே பதியப்படுகிறது என்ற நிலையில், சமகாலத்தில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளும், வரலாறும் ரத்தமும் சதையுமாக அப்படியே பதிவு செய்யப்பட்டு வருகிறதன் வரிசையில் இந்த ஏலோ…லம் நாவலும் மிக முக்கியமாக கவனத்தை ஈர்க்கிறது.

“நம்மில் தோன்றும் நிறபேதங்கள் தற்காலிம், கற்பிதமானவை! இயற்கையில் சமத்துவமானவை! பேதத்தைக் கைவிடுவோம் என்ற ஞானம் வந்தால் மோதலில்லை! சாதலுமில்லை! இதை எப்போது புரிவோம்! எப்போது தெளிவோம்!” என்ற ஆசிரியரின் ஏக்கப் பெருமூச்சு கொண்ட வாக்கியம் நம்முள் சிந்தனையைக் கிளர்த்துகிறது.

வாசகனின் சிந்தனையைக் கிளர்த்துவதுதானே படைப்பிலக்கியத்தின் ஆகப்பெரும் செயல்.

எழுத்தாளரின் செயல் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு!

நன்றி :
எழுத்தாளர் விசாகன்
தேனி

நூல் பதிப்புரை: வேட்டை எஸ்.கண்ணனின் ’சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை’ – ந.முத்துமோகன்

நூல் பதிப்புரை: வேட்டை எஸ்.கண்ணனின் ’சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை’ – ந.முத்துமோகன்




பால் லஃபார்க் – பூர்வீகம் ஹாய்த்தி நாட்டைச் சேர்ந்தவர். கியூபாவில் பிறந்தவர். “பிறப்பிலேயே நான் சர்வதேசவாதி” என்று இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார். கறுப்பினம், ஜமாய்க்கா இந்தியர், பிரெஞ்சு கிறித்தவர், யூதர் என்ற நான்கு இனங்களும் இவர் மீது உரிமை கொண்டாட முடியும். 1842 ல் பிறந்த இவர் 1911 வரை வாழ்ந்தார். பிரெஞ்சு கம்யூனிச இயக்கத்தின் தோற்றுவர்களில் ஒருவர். அதற்கு முன்னோடியாக பிரெஞ்சு சோசலிசக் கட்சியை நிறுவியவர். கியூபர்களும் கறுப்பின மக்களும் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கு தத்தமது பங்களிப்பாக இவரைக் குறிப்பிடுவார்கள்.

லண்டனில் கார்ல் மார்க்சின் நேரடிச் சீடர்களில் ஒருவராக இருந்தவர் பால் லஃபார்க். மாலை நேரங்களில் இருவரும் நடைப் பயணம் செல்லும்போது மார்க்ஸ் இவருக்குத் தனது “மூலதனம்” நூலின் கருத்துக்களை எடுத்துரைப்பார். மார்க்சுக்கு “மூலதனம்” நூலின் தயாரிப்பில் அவரது இரண்டாவது மகள் லாரா உதவியாளராக இருந்தார். எனது பெண்மக்கள் மூவரில் லாராவே மிகப்பெரிய அழகி என்று அம்மா ஜென்னி குறிப்பிடுவார். பால் லஃபார்க்கும் லாராவும் காதலித்து 1868ல் திருமணம் புரிந்து கொண்டனர். லாராவும் லஃபார்கும் இணைந்து பிரெஞ்சு மொழிக்கு மார்க்ஸ் – எங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்தனர்.

லஃபார்க் பிரான்சில் மருத்துவக் கல்வியைத் தொடங்கினார். அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறினார். இலண்டனில் கல்வியை முடித்தார். நேர்க்காட்சிவாத விஞ்ஞானங்களில் அவருக்கு ஆர்வம் உண்டு, இளம் வயதில் பிரெஞ்சு அராஜகவாதியான புரௌதனின் செல்வாக்கினைப் பெற்றவராகவும் விளங்கினார். “கடவுளுக்கு எதிரான யுத்தம்! அதுவே முன்னோக்கிய நகர்வு!” என்ற கோஷத்துடன் அவர் பங்கேற்ற இளைஞர் அணி செயல்பட்டது. விரைவில் மார்க்சியராகப் பரிணமித்தார். பின்னாட்களிலும் கூட லஃபார்கின் மீது அராஜக செல்வாக்கு மிச்சம் இருந்தது என்று குறிப்பிடுவார்கள். இருப்பினும், பிரான்சில் கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம், பிரான்சிலும் ஸ்பெயினிலும் அராஜகவாதிகளின் செல்வாக்கை ஒடுக்கியது போன்ற பணிகளைச் செய்ததில் லஃபார்கின் பங்களிப்பு கணிசமானது என்று வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். லெஸ்லி டெஃப்லர் (Leslie Defler) என்னும் வரலாற்று அறிஞர், பால் லஃபார்கும் பிரான்சில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

லஃபார்க் சிறந்த பேச்சாளர், நகரப் பகுதிகள், கிராமங்கள், ஆலைகள், வயல்வெளிகள் என உழைக்கும் மக்களைத் தேடி அலைவார். ஃபிரான்சில் மார்க்சியத்தைப் பரப்பியதில் லஃபார்குக்கு முக்கியப் பங்கு உண்டு என இவர் பாராட்டப்படுவார். பிரெஞ்சு சட்டசபையில் இடம் பெற்ற முதல் சோசலிசப் பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். 1871ல் பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு அரசுப் படைகளால் அதிகம் தேடப்பட்டவர் களில் லஃபார்கும் லாராவும் உண்டு . லாராவும் லஃபார்கும் ஸ்பெயினுக்கு தப்பித்துச் சென்றனர்.

ஜியார்ஜ் சோரல், பெனடிட்டோ குரோச்சே போன்ற சமகாலத்து அறிஞர்கள் லஃபார்கை “மாமனார் வழிபாட்டாளர்” என்று விமர்சித்தது உண்டு .

கீழ்க்கண்ட நூல்கள் பால் லஃபார்கின் எழுத்துக்களில் முக்கியமானவை. “உழைப்பிலிருந்து விடுதலை (Right to be Lazy)”, “சொத்தின் வரலாறு (Evolution of Property)”, “மூலதன மதம் (The Religion of Capital)” போன்றவை முக்கியமான நூல்கள். உழைப்பிலிருந்து விடுதலை என்ற நூல் முதலாளிய உழைப்பு அறம் தொழிலாளி வர்க்கத்தை முதலாளியத்திற்கு அடிமைப்படுத்தும் மிகப்பெரும் ஆயுதம் என விவாதிக்கிறது. எனவே உழைப்பு எனும் முதலாளிய ஒழுங்கிலிருந்து தொழிலாளர்கள் முதலில் உளவியல்ரீதியாக விடுபட வேண்டும் என வாதிடுகிறது. புரட்சிக்காரர்கள் முதலில் தம்மிடமுள்ள உடமை வர்க்க குணாதிசயங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பது லஃபார்கின் பொதுவான நிலைப்பாடாகும். மார்க்சியக் கலாசாரத்திற்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுவார். வர்க்கப் போராட்டத்தின் வடிவங்களில் கருத்தியல் வடிவங்களுக்கு அவர் முன்னுரிமை வழங்குவார். வஃபார்கை அந்தோனியோ கிராம்சியுடன் சிலர் ஒப்பிடுகின்றனர். மூலதனத்தையே (பணத்தையே) கடவுளாக வழிபடும் நவீன முதலாளிய வாழ்வைக் கேலிக்குள்ளாக்கும் ஒரு சித்தரிப்பு அவரது மற்றொரு படைப்பான “மூலதன மதம்” என்ற நூலில் உள்ளது.

பால் வஃபார்கும் அவரது துணைவியார் லாராவும் 1911 ஆம் ஆண்டு இணைந்து ஒரே நேரத்தில் தற்கொலையைத் தழுவிக் கொண்டனர். மிகவும் துக்கமான இந்நிகழ்வை அவரது தோழர்கள் ஆதரிக்கவில்லை . ஆயின் முதிர்ந்த வயதை நெருங்கும் போது, பிறருக்குச் சுமையாகாமல் நமது சாவை நாமே முடிவு செய்து கொள்ளுவதே அறிவு பூர்வமானது (Rational Suicide) என்று அது நியாயப்படுத்தப் படுகிறது.

தனது மரணம் குறித்த சுய அறிக்கையில் லஃபார்க் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்: “எழுபது வயதுக்குமேல் வாழ நான் விரும்பவில்லை . உடலும் மனமும் தளர்ந்து எனக்கும் பிறருக்கும் பாரமாக வாழுவதைத் தவிர்க்க விரும்புகிறேன். கடந்த 45 ஆண்டுகளில் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தேனோ, அந்த லட்சியம் விரைவில் வெற்றியடையும் என நான் உறுதியாக நம்புகிறேன். கம்யூனிசம் வாழ்க! இரண்டாவது அகிலம் வாழ்க!” லஃபார்க், லாரா ஆகியோரின் இறுதி ஊர்வலத்தில் 20,000 பேர் கலந்து கொண்டனர். லஃபார்க், லாராவின் இறுதிச் சடங்கில் லெனின் கலந்து கொண்டார்.

“சொத்தின் வரலாறு: நாடோடிக் காலத்திலிருந்து நாகரீகக் காலம் வரை” என்ற லஃபார்கின் நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறைகளுக்குக் கோட்பாட்டுப் பங்களிப்பை வழங்கும் நூலாகும். “மானுடவியலின் உண்மையான விவிலியம்” என்று இந்நூலை ஒரு விமர்சகர் பாராட்டுகிறார்.

1840 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அராஜக சிந்தனையாளரான பியர் ஜோசெஃப் புரௌதன் “சொத்து என்றால் என்ன?” என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல், அந்நாட்களில் காத்திரமான அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கிடையில் வலுவான சலனங்களை ஏற்படுத்தியது. “சொத்து என்பது திருட்டு” என்ற கருத்தை அந்நூலில் புரௌதன் முன்வைத்தார். இளம் மார்க்சுக்கு புரௌதனின் சொத்து குறித்த கருத்து அரசியல் பொருளாதார ஆய்வுகளில் ஒரு திருப்புமுனை யாகத் தென்பட்டது. மார்க்ஸ் புரௌதனுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டார். சிறிது காலத்துக்குப் பிறகு பாரீசில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பின்னாட்களில் பிறிதொரு நூல் குறித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருப்பினும் சொத்து குறித்த புரௌதனின் நூலை மார்க்ஸ் முக்கியமானதாகக் கருதி எப்போதுமே பாராட்டி வந்தார்.

லஃபார்கின் “சொத்தின் வரலாறு” என்ற நூல் ஒருவகையில் புரௌதனின் நூலைத் தொடர்கிறது. இருப்பினும், சொத்து எனும் விடயத்தை லஃபார்கின் நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் மையப் பிரச்சினைகளில் ஒன்றாக மாற்றுகிறது. மார்க்சினுடைய “மூலதனம்” நூலின் பல இடங்களில் பேசப்பட்டுள்ள கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன என்று ராபர்ட் பில்ஸ் என்ற இந்நூலின் 1890 ஆம் ஆண்டின் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். 1884 ல் ஏங்கெல்ஸ் எழுதி வெளியிட்ட “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலின் பிரச்சினைகளை லஃபார்கின் நூல் தொடருகிறது என்றும் சொல்லலாம்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் பெரிதும் பாராட்டப் பட்ட ஹென்றி லேவிஸ் மார்கன் என்ற மானுடவியலாளர் இந்நூல் குறித்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். இந்நூல் “சொத்து குறித்த கருத்தின் பரிமாண அறிவிற்குத் தீர்க்கமான உருக்கொடுத்தது. சில அம்சங்களில் பார்த்தால், மனித இனத்தின் மன வரலாற்றில் மிகவும் முக்கியமான பகுதியாக இது விளங்குகிறது”.

சொத்தின் வரலாறும் மனித மனத்தின் வரலாறும் பரஸ்பரத் தொடர்பும் ஒப்புமையும் கொண்டவை என்ற மார்கனின் கருத்து நமது கவனத்தைக் கவருகிறது. குறிப்பாக இந்தியத் தத்துவங்களில் வாசிப்பினைக் கொண்டவர்களுக்கு இக்கருத்து சில தெளிவுகளை ஏற்படுத்துகிறது. இந்தியத் தத்துவங்களில் பல, குறிப்பாக அற இலக்கியங்கள், மனித மனத்தில் விளையும் பற்று, பந்தம், பாசம், தளை, ஆசை, ஆணவம், அகங்காரம் போன்ற பல விடயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. மனித மனத்தின் இவ்வகைப்பட்ட “அழுக்குகளை” அப்புறப்படுத்தினால் மனிதன் உயிர்த் தூய்மை அடைந்து “வீடு” பேற்றை எட்டமுடியும் என்று அவை கூறுகின்றன. மனித மனத்தின் இவ்வகை “அழுக்குகள்” எல்லாம் உண்மையில் தனி உடமைச் சொத்தின் உளவியல் விளைவுகள் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அர்த்தத்தில் தனி உடமைச் சொத்து என்பது நமது தத்துவங்களில் அதிகம் பேசப்படும் நிலையாமைக் கொள்கைக்கு அடிப்படையாக விளங்குகிறது என்பதையும் நாம் உணர்கிறோம். அற இலக்கியங்களில் பேசப்படும் நிலையாமைக் கொட்பாடு தனி உடமைச் சொத்து குறித்த உளவியல் விமர்சனத்தையும் அழுத்தின் வழி அதனை தாண்டிச் செல்வதற்கான எத்தனிப்பையும் கொண்டுள்ளது என்பதையும் காண்கிறோம். இவ்வகைப் பிரச்சினைகள் தொடர்ந்த ஆய்வுகளைக் கோருகின்றன.

நூலின் அமைப்பை இனி உற்று நோக்குவோம்: இருவகைப் பொதுச் சொத்துக்களையும் மூவகை தனிச் சொத்துக்களையும் நூலாசிரியர் வகைப்படுத்துகிறார்.

சொத்து உருவானபோது அதனுடன் குற்றங்கள், தண்டனைகள், சிறைச்சாலைகள், சட்டம் இன்ன பிற உண்டாகின்றன என்பதையும் காணுகிறோம்.

நிலவுடமைக் காலத்தில் நிலப் பிரபுகள் (நிலக்கோமான்கள்), அரசர்கள், பேரரசர்கள் உருவாகி விட்டார்கள். அவர்கள் காவிய நாயகர் களாகவும் கடவுளராகவும் சித்தரிக்கப்பட்டனர். பண்ணை அடிமைகள் விசுவாசம், கீழ்ப்படிதல், பணிவு, நேர்மை, கடமைகள், நன்றியுணர்வு ஆகியவற்றுக்குப் பழக்கப்படுத்தப் பட்டார்கள். சட்ட வல்லுநர்கள் அரசு நிலங்களை, பொது நிலங்களைக் கோமான்களின் நிலங்களாக ஆக்கிக் கொடுத்தார்கள். கடவுளின் பெயரால் போர்கள், கொள்ளைகள் நிகழ்த்தப்பட்டன. எல்லைகளில் வாழ்ந்த இனக்குழுக்களைக் கடவுளற்றவர்கள் எனக்கூறிப் படையெடுத்து அழித்தனர். அரச அதிகாரம், திருச்சபை அதிகாரம் என்ற இரட்டை ஆட்சி நடைபெற்றது. மடாலயங்களுக்கான கட்டாய நன்கொடைகள் பெருகின.

14, 15 ஆம் நூற்றாண்டுகளில் விவசாயிகள் நிலத்தை விட்டு விரட்டப்பட்டார்கள். இது குறித்து மார்க்சும் எழுதியிருக்கிறார். விவசாயிகளை ஒத்த பல தொல்குடிகள் கடற்கரைகளில் மீனவர்களாக மாற்றப்பட்டனர். விவசாயிகள் பல வேளைகளில் பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டனர். அதே வேளைகளில் பிச்சை எடுப்பது சட்டத்தால் தடை செய்யப்பட்டது. காடுகளின் பரப்புகள் படிப்படியாகக் குறைந்தன. விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டு அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் ஊடாக நவீன முதலாளியச் சொத்து உருவாயிற்று.

முதலாளியச் சொத்து உருவாக்கத்திற்கு வணிகமும் எந்திரக் கருவிகளும் மிகப்பெரிய உந்து சக்திகளாக அமைந்தன. நாடெங்கும் உருவான சந்தைகள் முதலாளியச் சொத்துடமையை முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் புரட்டிப் போட்டன. தொழில் உற்பத்திக்கான கச்சாப் பொருட்களும் உற்பத்திக் கருவிகளான எந்திரங்களும் சரக்கு களாக மாற்றம் பெற்றபோது, அவற்றுக்கு இணையாகத் தொழிலாளர் களின் உழைப்புச் சக்தியும் சரக்காக மாறியது. முதலாளிய உற்பத்தி வட்டம் முழுமையடைந்தது. இப்போது அனைத்துமே சரக்குமயமாகி விட்டன. முதலாளியத் தொழில் உற்பத்திக்கு எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவே கல்வியும் உடல் ஆரோக்கியமும் இயற்கையும் பாதுகாக்கப்பட்டன. நிதி நிறுவனங்கள், வங்கிகள் மக்களின் சேமிப்புகளை தொழில் அதிபர்களின் சேமிப்புகளாக மாற்றிக் கொடுத்தன. அரசு நிறுவனம் உலகமெங்கும் தமது முதலாளிகளுக்கான சந்தைகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்கும் முகவர்களாகத் தொழில்பட்டன.

சொத்து என்பது ஒரு பொருளோ, உற்பத்திக் கருவிகளோ, வாழ்க்கைக்கான வசதியோ அல்ல. அது சமூகப் பொருளாதார உறவுகளின் சுருக்கமான ஆனால் முனைப்பான வடிவம் என்பது இந்நூலில் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. வரலாறு நெடுக சொத்தின் பரிணாமம் தேடிக் கண்டடையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரும் அவரவர் நாட்டின் சொத்தின் சொந்த வடிவங்களை நினைவுக்குக் கொண்டு வரும்போது இந்நூலில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

திரு வேட்டை கண்ணன் அவர்கள் இந்நூலை மிகவும் முயன்று தமிழுக்கு மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இந்நூல் இந்தியச் சூழல்களில் சொத்தின் வரலாறு குறித்த விவாதங்களுக்கும் புரிதல் களுக்கும் நம்மை இட்டுச் செல்லும்.

“மார்க்சிய செவ்வியல் நூல் வரிசை” என்ற புதிய வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்நூலை வெளிக் கொணருகிறது. இயக்குனர் குழுவின் வழிகாட்டுதலின்படி நியூ செஞ்சுரியின் மேலாண் இயக்குநர் நண்பர் சண்முகம் சரவணன் மிகுந்த அக்கறையுடன் இந்நூல் வரிசையைத் திட்டமிட்டுள்ளார். பிராங்பர்ட் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் உலகப் புத்தகப் பெருவிழாவில் நேரடியாகக் கலந்து கொண்டு, புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு, உரிமைகள் பெறப் பட்டு, மொழியாக்கம் செய்யப்படுகின்றன. நூலாக்கத்தில் தோழர் தி. ரத்தினசபாபதி மற்றும் திருமதி துர்கா தேவி, நண்பர் ஜெயராஜ் ஆகியோர் உடன் நின்று பணியாற்றியுள்ளனர். இந்நூல் வரிசையில் பல நூல்கள் விரிவான வாசிப்பையும் விவாதங்களையும் வேண்டுவன. அவை தமிழ்ச் சூழல்களில் மார்க்சியத்தின் பரப்பை விரிவாக்கும் என நம்புகிறோம். மதுரை

அன்புடன்
ந. முத்துமோகன்

நூல் : சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை
ஆசிரியர் : தமிழில்: வேட்டை எஸ். கண்ணன்
விலை : ரூ.₹250
வெளியீடு :NCBH
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

‘நோன்பு’ சிறுகதை – மணவை கார்னிகன்

‘நோன்பு’ சிறுகதை – மணவை கார்னிகன்




அன்று இரவு 12 மணி ஆகியும் இந்திரனுக்கு தூக்கம் வரவில்லை. ஒரு பாம்பு மிதமிஞ்சிய உணவை உட்கொண்டு நெளிவதைப்போல. தெளிந்தும் புரண்டும் படுத்திருந்தவனுக்கு, தூக்கம் மிகப்பெரிய வரமாக இருந்தது.அவன் பக்கத்தில் படுத்திருந்த அந்தோணிக்கு, அந்த வரம் கிடைத்து வெகுநேரமாகிவிட்டது. ஜெபமாலையை வலது கையில் வைத்தவாறே வரத்தின் ஸ்பரிசத்தால் குறட்டையெல்லாம் வருகிறது. பகல் முழுதும் வண்டி இழுத்து அழுத்து போனவனுக்கு படுத்ததும் தூக்கம் உடனே வந்துவிடும் ஆனால் அன்று இரவு அப்படி வரவில்லை.

அன்சார் பாயின் அறிவுறுத்தலின்படி உறக்கம் வரவில்லை என்றால் உனக்கு பிடித்த கடவுளின் பெயரோ, அல்லது உனக்கு பிடித்தவர்களின் பெயரோ, 108 முறை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இரு. உறக்கம் நன்றாக வரும் என்பார். எண்ணுவதற்கும் ஒரு வழியும் சொல்லியிருந்தார். ஒரு விரலுக்கு இரண்டு ரேகை கோடு அது மூன்று பாகமாக இருக்கும். மேலிருந்து கீழ் வந்து. பிறகு கீழிருந்து மேல் வந்தால் ஐந்து, ஒரு விரலுக்கு ஐந்து என்றால், ஐந்து விரலுக்கு இருபத்தி ஐந்து. நான்கு கைவிரல் நூறு. மீதம் எட்டு சுலபம்தானே! என்பார் அன்சார் பாய்.

அன்று இரவு அப்படியும் சொல்லி பார்த்துவிட்டான். வரவே வராது என்ற முடிவுக்கு போய்விட்டான். வீட்டிற்கு வெளியே சென்று வைத்திருந்த பீடிகட்டில் இருந்து ஒவ்வொன்றாய் எடுத்து புகைத்தபடி இருந்தான். அவன் சிந்தையில் ஏதோ ஒடிக்கொண்டே இருந்தது.

“டேய் எதுக்கு இந்த வேலை உன்னால் முடியது பேசாம எப்பவும் போல இருந்துரு” அவன் மனம் சொன்னது.

பீடியின் இறுதிக் கங்கு விரலை முத்தமிட்டது. உதறித் தள்ளிய பீடியைப் பார்த்தவாறு நின்றான். விடிந்தால் வண்டி இழுக்கணும், ஊரு ஊராகச் சுற்றித் திரியணும், அதற்கெல்லாம் உடம்புல தெம்பு வேண்டும்.

“நம்மால முடியாதுப்பா” என்று நினைத்து வீட்டிற்குள் சென்றான்.அவனோடு சேர்த்து ஐந்துபேர் அந்த வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.
இப்போது அந்தோணி, இத்திரனின் படுக்கை இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்.

“அண்ணே, தள்ளிப்படுங்க என்றான்”

வேண்டாவெறுப்பாக ஒரு உருளில் சரியானது அவனது இடம்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டுப் படுத்தான் இந்திரன்.மணி சரியாக 2.30 யை தொட்டது. முதலாளியும் அவனோடு வேலை செய்யும் இரண்டு வேலையாளும் இஸ்லாமியர்கள், இவர்களுக்காக உணவு தயார் செய்ய வெள்ளச்சாமி விழித்துவிட்டார். முதல்நாள் நோன்பு என்பதால் கொஞ்சம் பரபரப்பாக இருந்தார். முதலாளி அன்சார்பாயை எழுப்பி விட்டு ஒழையை அடுப்பில் போட்டார் வெள்ளச்சாமி.

“இந்திரே(ன்) கண்ண தேய்த்துத் தேய்த்துச் சிவந்து கெடக்கு பாயண்ணே. நைட்டெல்லாம் தூங்காம உருண்டுக்கிட்டே கிடந்தான்” என்று குற்றம் சாட்டிய வெள்ளச்சாமியைப் பார்த்து, “ஏம்பா நாம்மளா அவன நோம்பு இருக்கச் சொன்னோம்? அவனா நானும் நோம்பு இருக்குறேன்னு சொன்னான். அவன இங்க வரச்சொல்லு வெள்ள” என்றார் முதலாளி.

இப்போது உறக்கத்தின் வரம் கிடைத்து நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான் இந்திரன்.

“டேய் பாயண்ணே கூப்றாரு எந்திரிடா டேய் டேய்..இவ்வளவு நேர முழிச்சிருந்துட்டு இப்ப தூக்கத்தப் பாரு”.

“வெள்ள விடுப்பா தூங்கட்டும்” என்றார் முதலாளி.

– மணவை கார்னிகன்

வெ. நரேஷ் கவிதைகள்

வெ. நரேஷ் கவிதைகள்




* உழைக்கச் சென்றவன்
உறங்க மறுத்ததால்
உதவியாய்ச் சென்ற
இடது கைகள்.

* உடைமையைச் சுமந்து
உழைப்பினைத் தொடர்ந்து
உதிரத்தை இழந்து
இறப்பினைப் பெறுபவனே
உழைப்பாளி.

* வறுமையில் வாழ்பவனை
வரவேற்றது
டீ கடை பெஞ்சு.

* அறுவடை செய்து
நெல் குவித்த பிறகு
எதிரில் நிற்பான் முதலாளி
பாதியைப் பறிமுதல் செய்ய.

* கரையோரம் வாழ்ந்து வந்தோம்
ஓட்டுக்காகக் குடிசைக்குள்
கனவுகளை விதைத்து
ஆங்காங்கே கட்டிக் கொண்டான் மாளிகையை.

* ஆள்காட்டி விரலைக் காட்டிவிட்டு
மை பூசிக்கொண்டு வருகிறார்கள்
அவர்களின் முகத்தில்.

-வெ. நரேஷ்

மே தினக் கவிதை எஸ்.வி.வேணுகோபாலன்

மே தினக் கவிதை எஸ்.வி.வேணுகோபாலன்




ஆகவே தோழர்களே!

உதிரச் சிவப்பு
உதிரா சிரிப்பு
உரத்த முழக்கத்தில் விடிகிறது இந்த நாள்

பதட்டத்தில் விழித்துப் பார்க்கிறான் முதலாளி
பாட்டாளி வர்க்கத்தின் பெருநாள்
அவன் பரம்பரைக்கே சாபத் திருநாள்

எந்த ஊரில் போய் நின்று கேட்டாலும்
சிகாகோ என்றே ஒலிக்கிறது
எந்தக் கம்பத்தை நோக்கினாலும்
செங்கொடி வீசிப் பறக்கிறது

வெறி பிடித்த உத்திரபிரதேசத்து அதிகாரி எவனோ
கூடையோடு போய்க்கொண்டிருக்கும்
மூதாட்டியை நிறுத்திப் பெயரைக் கேட்கிறான்:
பெலகேயா நீலவ்னா
என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டுப்
போய்க்கொண்டே இருக்கிறாள் அந்தத் தாய்.

இலத்தீன் அமெரிக்காவில்
கொடியேற்றிக் கொண்டிருக்கும் இளைஞனோ
திருத்தமாக உச்சரிக்கிறான்
தனது பெயர் சிங்காரவேலர் என்று!

நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளி
உற்றுப் பார்க்கிறான்
கடந்து போகும் மனிதர்
பாப்லோ நெருடாவோ என்று

மார்க்சின் முகச்சாயலில்
ஏங்கெல்சின் உடையில்
லெனின் குரலில்
அரங்கத்தின் கைத்தட்டலுக்கிடையே
பேசிக்கொண்டிருக்கிறான்
சிற்றூர் மாணவன் ஒருவன்

மெரீனா கடற்கரையில்
அன்றாடம் வந்து கேட்டுப் போகின்றன அலைகள்
பதில் கிடைக்காமல்
சுனாமியாகவும் எழுந்து கேட்டுப் போயின
முதல் மே தின கொண்டாட்டத்தின்
நூற்றாண்டு என்றைக்கு என

செஞ்சூரியன் வந்து
கடலில் பற்ற வைக்கும்
நெருப்புச் சுடரில் இருந்து
தீ பற்றவைத்துக் கொண்டு
கால எந்திரத்திலேறி
ஓடுகிறாள் தொழிலாளி ஒருத்தி
ஹே மார்க்கெட் சதுக்கம் நோக்கி

‘ஆகவே தோழர்களே …..’
என்று
அகஸ்டஸ் ஸ்பைஸ் நிகழ்த்தும் உரை
அவள் நிமித்தம்
உரத்துக் கேட்கிறது
ஊரெங்கும்
உலகெங்கும்

நன்றாகப் புலர்ந்துவிட்டது மே தினம்!

மூலதனம் நூலை மொழிபெயர்த்த – ஜமதக்னி (மதிப்புரை  ச.வீரமணி )

மூலதனம் நூலை மொழிபெயர்த்த – ஜமதக்னி (மதிப்புரை  ச.வீரமணி )

இந்த மதிப்புரை என்பது தோழர் ஜமதக்னி மொழியாக்கம் செய்த மூலதனத்தைப் பற்றியது அல்ல. அதனை மதிப்பிடக்கூடிய அளவிற்கு எனக்கு அறிவு கிடையாது- மாறாக, தோழர் ஜமதக்னியைப் பற்றியதாகும். இதை எழுதுவதற்கு என்னை நிர்ப்பந்தித்த அம்சம், அச்சில் சுமார் 3600 பக்கங்கள் உள்ள…