Kannan's Poems. கண்ணனின் கவிதைகள்

கண்ணனின் கவிதைகள்




தியாகி தோட்டம்
***********************
எழுபத்தி நான்கு ஏறி
செல்லியம்மன் நகரில்
இறங்குங்கள்
தியாகி தோட்டம் என்றால்
எவரும் வழிகாட்டுவர்
எட்டி மரம் தாண்டி
வந்தீர்கள் என்றால்
மலை அடிவாரத்தில்
இருந்தது தோட்டம்
தாகத்திற்கு எளனி
பசியுடன் வந்தால்
சாப்பாடு
வந்தவருக்கு எப்போதும் உண்டு
பத்தில் பாதி மேட்டுக்காடு
குண்டன் ஒன்று
ஊசிக்கொம்பன் ஒன்று
ஏர்ஓட்ட
மாடு மேய்த்தது
தண்ணி பாய்ச்சியது
தொட்டியில் குளித்தது
கிணறு வெட்டுகையில்
தரை தொட்டுப் பார்த்தது
எல்லாம் கனவுபோல
தாத்தாவும் அப்பாவும்
ஓய்வூதிய பணத்தையெல்லாம்
காடு திருத்தப் போட்டதும்
அங்கு தான்
பத்தாம் வகுப்பில்
பிடித்த தென்னையடியில்
படித்ததும் அங்கு தான்
பிடித்தநாய் மணிக்கு
கோவில் கட்டிக்
கும்பிட்டதும்
அங்கு தான்
தாத்தாவும் பாட்டியும்
அப்பாவும்
மண்குழிக்குள் போனதும்
அங்கு தான்
துள்ளத் துடிக்க
கையெழுத்திட்டுக்
கைமாறியபின்
சென்று பார்க்க
இன்று வரை ஒப்பவில்லை
மனசுக்கு

கோதமலைக் குறிப்புகள்-நான்கு
பொன்னம்மா பாட்டி
************************************
ஆறில் மிஞ்சியது
நான்கு
தாத்தா பிரசங்கத்திற்கு
ஊர் சுற்றி வர
பணியாரம் சுட்டு
பிள்ளைகள் வளர்த்திருக்கிறாள்
சற்றே அதிகமான மீசை
குள்ள உருவம்
வட்டப் பொட்டு
அவள் சுடும்
ஆப்பம் அவ்வளவு ருசி
மூன்று பேரன்களில்
அண்ணனிடம் மட்டும்
அவ்வளவு பாசம்
கீற்றுக் கொட்டகையில்
மணலில் அமர்ந்து
மம்பட்டியான் பார்த்தது
நேற்று போல நிழலாடுகிறது
அம்மாவுக்கும் அவளுக்கும்
எப்போதும் ஆகாது
பையனுக்கே பால் விற்றவள்
நீர் கலக்க வலுத்தது சண்டை
கோபம் வந்தால்
வாயில் வசவும்
புடவையும் சற்றே
மேலேறும்
விஷப்பூச்சிக் கடித்திட
மகமாயி புள்ளய காப்பாத்து
எனைத்தூக்கி ஓடிப்போய்
மருத்துவமனை சேர்த்தவள்
கனகாம்பரம் விற்றுக்
காசு சேர்த்தவள்
பசப்பு வார்த்தை கேட்டு
சொந்தத்திடம் இழந்து விட்டு
நெஞ்சைப் பிடித்தபடி
தோட்டத்துக்கே கூட்டிக்கிட்டுப்
போய்டுங்க
கேட்டுக் கொண்டே
யார் முகமும் பார்க்காமல்
போய்ச் சேர்ந்தாள்
மகராசி

Stella Miss ShortStory By Shanthi Saravanan ஸ்டெல்லா மிஸ் சிறுகதை - சாந்தி சரவணன்

ஸ்டெல்லா மிஸ் சிறுகதை – சாந்தி சரவணன்




“பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தியை கேட்டு துள்ளி குதித்தாள்”, யாழினி.

கிறுத்து பிறப்பதற்கு முன், கிறுத்து பிறப்பதற்கு பின் என்பது போல கொரோனா காலம் என்று வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. உலகத்தை முடக்கி வைத்த காலத்தை திறந்து வைத்தது இந்த செய்தி. அது தான் இன்று யாழினியின் மகிழ்ச்சிக்கும் துள்ளளுக்கு காரணம்.

“அம்மா அம்மா இங்க வாம்மா ஸ்கூல் திறக்க போறாங்க ஜாலி ஜாலி” ……

“என் பிரண்ட்ஸ் எல்லாம் பார்பேனே……ஏய்…. என ஒரே கொண்டாட்டம் தான்”, யாழினிக்கு.

உடனே கைப்பேசி எடுத்து, “வைஷாலி நமக்கு நெக்ஸ்ட் வீக் ஸ்கூல் டீ.  நியூஸ் பார்த்தியா….”

“ஆமாம் டீ பார்த்தேன். ரொம்ப ஜாலியா இருக்கு டீ. ”

“ஜூம் தொல்லை இனிமேல் இல்லை”

ஆஹா..ஆஹா  என தோழிகளின் சிரிப்பு..

கிரவுன்டல விளையாடலாம்..

“ஆமாம் டீ முக்கியமா நம்ம பீட்டி ஸ்டெல்லா மீஸ்ஸை பார்க்கலாம் டீ.”

“ஆமாம் டீ, மிஸ்ஸை பார்த்து எவ்வளவு நாளாச்சு”.

“ஜூம் கிளாஸ்ல எல்லா மிஸ்ஸும், சாரும் வந்து நமக்கு ரம்பம் போட்டாங்க”. ஆனா, நமக்கு பிடித்த பீட்டி மிஸ்ஸைதான் பார்க்க முடியல.’

“நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்’.

“நானும் தான் டீ, என்றாள் வைஷாலி”

யாழினிக்கு ஸ்டெல்லா மிஸ் என்றால் எவ்வளவு பிரியம் என்று வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

ஸ்டெல்லா மிஸ்ஸுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.  அவர்கள் அழகு அப்பப்பா.

அவர்கள் கட்டி வரும் காட்டன் புடவை.‌ அதற்கு மெட்சாக தலைக்கு கிளிப்பு.  ஒரு சடை போட்டு ஒரு ஒற்றை ரோஜா வைத்து கொண்டு வரும் அவர்களை பார்க்கும் போதே கொள்ளை அழகு.

அதுவும் பீட்டி கிளாஸ் வாரத்தில் இருமுறைதான் வரும். என்ன ஸிஸ்டம் இது?  தினமும் விளையாடனும் இல்லை.

பாரதியார் கூட என்ன சொல்லி இருக்கிறார்.

“ஓடி விளையாடு பாப்பா….” என்று தானே சொல்லி இருக்கிறார்.

சில சமயங்களில் மிஸ்ஸிடமே கேட்டதுண்டு.

“ஏன் மிஸ் டெய்லி நமக்கு ஸ்போர்ட்ஸ் பிரியட் இல்லை.”.

அதற்கும் ஒரு ஸ்மையலை உதிர்த்து விட்டு சென்று விடுவார்கள் ஸ்டெல்லா மிஸ்.

“யாழினிக்கு தான் பெரியவள் ஆன, பீட்டி மிஸ்ஸை போல் தானும் ஸ்போர்ட்ஸ் துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்பது லட்சியம்”.

யாழினி இப்போது ஒன்பதாம் வகுப்பு ‌படிக்கிறாள்.  அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தான் புதிதாக ஸ்டெல்லா மிஸ் அவளின் பள்ளிக்கு பீட்டி டீச்சராக சேர்ந்தார்கள். எப்போதும் அவர்கள் முகத்தில் சிரிப்பை கண்டிப்பாக அணிகலன்களாக கொண்டு இருப்பார்கள்.

எல்லா ஆசிரியர்களும் பள்ளி பாடங்களை படிக்க வலியுறுத்துவார்கள்‌. ஆனால் ஸ்டெல்லா மிஸ் படிப்போடு சேர்த்து மகிழ்ச்சியாக இருக்கவும் சொல்லி கொடுப்பார்.

பிடித்தவை செய்தால் வெற்றி நிச்சயம் என்பார். அதனால் படிப்பை விருப்பத்தோடு படியுங்கள். அப்போது சுலபமாக இருக்கும்  என்பார்.

அனைத்து பள்ளி விளையாட்டு போட்டியில் கண்டிப்பாக இவர்கள் பள்ளி கலந்து கொள்ள ஏற்பாடு செய்வார்.

யாழினிக்கு  விளையாட்டின் மேல் ஆர்வம் வர காரணமே ஸ்டெல்லா மிஸ்தான். யாழினிக்கு மட்டுமே அல்ல பள்ளியில் ஸ்டெல்லா மிஸ் சேர்ந்த பிறகு பல தங்க பதக்கம் இவர்கள் பள்ளிக்கு உரித்தானது.

சென்ற வருடம் ஸ்போர்ட்ஸ் பிரியட் போது, யாழினி வயிட் ஸ்கர்டில் ரத்தக் கறை. விளையாடி கொண்டு இருந்த மற்ற பிள்ளைகள் பார்த்து ஏய் யாழினி இரத்தம் டீ என‌ கத்த யாழினி பயந்துவிட்டாள்.

உடனே அங்கு வந்த ஸ்டெல்லா மிஸ். “Girls. Don’t shout…”

எல்லாம் போங்க போங்க என அனைவரையும் விலகி..

“Yazini, Come to my room. Don’t worry. Nothing happened… Come come… என ஒரு சக தோழியாக, தமக்கையாக, தாயாக அரவணைத்து அணைத்து அவர்களின் அறைக்கு அழைத்து சென்றார்.”

யாழினிக்கு வேண்டிய முதல் உதவிகள் புரிந்து… அவளை சமாதானப்படுத்தினாள்

மிஸ் பயமாயிருக்கு., என் அழுத யாழினியிடம் “யாழினி மா.. nothing to worry dear” என ஆசுவாசப் படுத்தினார்

This is natural.  ஓவ்வொரு பெண்ணுக்குரிய வளர்ச்சி இது. இது ஒரு உடலியியல் மாற்றம். மாதம் ஒரு முறை உனக்கு இப்படி ஆகும். இதில் பயப்பட ஒன்றும் இல்லை டா.

“Actually speaking it is a gift to ladies yazhini. All our morbids Will be discharged  monthly once.”

மிஸ்…

“என்னம்மா பயப்படாதே”

“யாழினி, இந்த நேரத்தில் ஓய்வுதான் அவசியம்.  பசியெடுத்தால் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும், சரியா” என்றார்.

“மிஸ்ஸின் ஆறுதலான வார்த்தைகள் யாழினிக்கு தைரியத்தை நல்கியது.” இது ஒரு இயல்பான நிகழ்வு என்ற‌ புரிதல் யாழினிக்கு உண்டாயிற்று.

அதற்குள் யாழினி அம்மாவிற்கு தகவல் அனுப்ப, யாழினி அம்மா ரம்யா, யாழினி பயந்து போய் இருப்பாளே என பதட்டத்தோடு ஸ்டெல்லா மிஸ் அறைக்குள் நுழைந்தவளுக்கு ஆச்சரியம், யாழினி தெளிவாக அமர்ந்து இருந்தாள்.

“ஸ்டெல்லா மிஸ் ரொம்ப நன்றி”, என கூறி அவளை வீட்டுக்கு அழைத்து வந்த நிகழ்வு யாழினி கண்முன்னே வந்தது.

அன்றிலிருந்து யாழினி ஸ்டெல்லா மிஸ் நண்பர்கள் ஆனார்கள்.

பள்ளிக்கு வந்தவுடன் பிரேயர்போது யாழினி, ஸ்டெல்லா மிஸ்க்கு குட்மார்னிங் மிஸ் என்று சொன்னால்தான் திருப்தி.

யாழினிக்கு  ஸ்டெல்லா மிஸ் ஒரு தோழி.

இருவரின் உரையாடல் போது யாழினி நடந்தவற்றை நினைவு கூர்ந்தார்.

பள்ளிகள் திறந்தன. யாழினி எதிர்பார்த்த தருணம். ஸ்டெல்லா மிஸ் பிரையர் வரிசைப்படுத்த குட்மார்னிங் என சொல்லி கொண்டே வரும் தருணத்திற்காக காத்து இருந்தாள்.

ஆனால் ஸ்டெல்லா மிஸ் வரவேயில்லை.

அன்று முழு நேர பள்ளி. லஞ் பிரேக் அப்போதான் ஸ்போர்ட்ஸ் ரூம் சென்று பார்க்க வேண்டும்.

அன்று நடந்த பாடங்கள் எதிலும் நாட்டமில்லை யாழினிக்கு.

லஞ் பிரியட் பெல் அடித்தது தான் தாமதம் வகுப்பில் இருந்து ஸ்போர்ட்ஸ் ரூம்க்கு ஓடினாள். அவள் பின்னே தோழி வைஷாலி ஓடி வந்தாள், “யாழினி இருடீ நானும் வரேன் ”

ஆனால் யாழினி காத்திருக்காமல் புள்ளிமான் போல் ஓடினாள்.

ரூம் பூட்டி இருந்தது.

அங்கு இருந்து ஆசிரியர் குழு அமர்ந்து இருக்கும் ரூமுக்கு சென்று கதவின் வெளியே எதிர்பார்ப்போடு கண்களை சூழற்றி சூழற்றி தேடினாள்..

அவளுடைய தேவதை ஸ்டெல்லா மிஸ்ஸை காணவில்லை.

பள்ளியில் வேலை செய்யும் ஆயாம்மா வெளியே வந்தார்கள் ‌

“என்னம்மா இங்க ….. யாரை பார்க்கணும் என்றார்..”

“ஸ்டெல்லா மிஸ்..”

உம்.” யாரை‌….”

“ஸ்டெல்லா மிஸ்….”

“அந்த மிஸ்ஸை நிறுத்திட்டாங்க தெரியாதா…”வகுப்புக்கு போமா.. போமா என்றார்.

ஆம், “ஆன்லைன் வகுப்புகள் பல ஆசிரியர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது”

கல்லூரியிலும் பேராசிரியர் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். அதிலும் புதிதாக சேர்ந்த பேராசிரியர்களை சட்டென்று எந்த முன்னறிவிப்பு இன்று பணி நிறுத்தம் செய்தனர்.

அது பள்ளிகளிலும் தொடர்ந்து.   பெரும்பாலும் விளையாட்டு துறை, யோகா, NCC,  NSS programme, பரதம், பாட்டு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் &  co.ordinators போன்ற பல ஆசிரியர்களை  தற்காலிகமாக பணியில் இருந்து விடுவித்தனர்.

முக்கிய செய்தி மாணவர்கள் கட்டணத்தில் எந்தவித சலுகையும் இல்லை. அந்த திட்டத்தால்தான் நமது யாழினியின் ஆஸ்தான குரு ஸ்டெல்லா மிஸ்ஸையும்   தற்காலிக பணி நிறுத்தம் செய்யப் பட்டுள்ளார்.

அதை நம்பாமல் வகுப்பறையில் வந்து அமர்ந்தாள். அவள் பின்னே மூச்சிறைக்க தோழி வைஷாலியும் வந்து அமர்ந்தாள்.

“ஏம்பா டல்லா இருக்கே…  நம்ப விக்என்டு ஸ்டெல்லா மிஸ் வீட்டுக்கு போகலாம் பா….. டோன்ட் வரி‌ பா… என அறுதல் சொல்லி கொண்டே இருக்கிறாள்”

ஆனால்  ஸ்டெல்லா மிஸ்‌ மட்டுமே  பிம்பமாக யாழினியின் மண கண் முன்னே காட்சி‌ அளிக்க,… வெறித்து பார்த்துக் கொண்டே ‌இருக்கிறாள்.

அதே நேரத்தில் அரசு ஆணை 9.10,11 மாணவர்கள் எல்லோரும் தேர்வுயின்றி தேர்ச்சி என அறிக்கை ஒளிபரப்பு…

ஒருபுறம் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி.

பள்ளிகளில் பரபரப்பு…..

ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்  ஒரு நெருடல் இருந்தாலும், நெருடலுக்கு கோச்சிங் கிளாஸ் வருமானம் பறிபோயிற்றே…  இருப்பினும் ஒரு மகிழ்ச்சி….

இந்த கால சூழலுக்கு நன்றி சொல்லி மாணவ மணிகள் கரகோஷம் …..

மாணவர்களின்  கரகோஷம் கடல் அலையை விட அதிகமாக பள்ளியை பிளந்து கொண்டு இருக்க….

“யாழினி மட்டும் தன்னுடைய ஸ்டெல்லா மிஸ்ஸை வேலையில் இருந்து எடுத்து தன்னிடமிருந்து பிரித்து விட்ட இந்த பள்ளியையும், கால சூழலையும் பிடிக்காமல் அழுதுக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்…..”

Amma Poem By Ilangathir இளங்கதிரின் அம்மா கவிதை

அம்மா கவிதை – இளங்கதிர்




உனக்கு மட்டும்தானே தெரியும்
உன் குழந்தைக்கு எப்போது பசிக்குமென்று
உனக்குமட்டும் உன்மகன்தானே
என்றும் உன் தேசத்து இளவரசன்
உன் மகள் பேசும் மொழியின் அகராதி
உன் கையில் மட்டும்தானே
பத்து மாதங்கள் கருவிலும்
மூச்சுள்ளவரை நெஞ்சிலும் சுமப்பவள்தானே நீ
உன் அன்பிற்குச் சமமான
பொருளேது இவ்வுலகில்
உன் கனவுக்குச் சமமான
உயரமேது இந்த பூமியில்
உனது கண்ணீரில் கரையாத
கனத்த மனமேது ?
உனது அன்பில் உறையாத
உற்ற உறவுமேது?

Kamatchi shortstory by Marxim Surya காமாட்சி சிறுகதை - மாக்சிம் சூர்யா

காமாட்சி சிறுகதை – மாக்சிம் சூர்யா




கோடை மழையின் உக்கிரம் பூமியின் உடலைக் கூட நடுங்கச் செய்து கொண்டிருந்தது. ஊசி கொண்டு முகத்தைக் குத்துவது போல் மேகம் தன் மழை புதல்வர்களைத் துப்பிக்கொண்டிருந்து. தலைவருக்கு ஜால்ரா போடும் தொண்டர்களைப்போல் காற்றும், மழைக்குத் தன் விசுவாசத்தைக் காட்டியது.

தான் எப்போதும் படுத்துறங்கும் சீமை ஓடுகளால் கூரை வேய்ந்த பழைய ரேஷன் கடையின் முன்பக்கமிருந்த சிறிய இடம் கூட மழையில் நனைந்து விட்டதே என்ற கவலையில் மழைச் சாறலுக்கு ஒடுங்கி, குத்துக்காலிட்டு அமர்ந்து பக்கவாட்டில் கைகளைக் கட்டிக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தாள் காமாட்சி.

அம்மா இறந்த பிறகு அப்பாவோடு பிழைப்புக்காகத் தனது 22 ஆவது வயதில் தான் மேலூருக்கு வந்து சேர்ந்தவள். என்றிலிருந்தோ நைந்து போன துணியைப் போல் கிடக்கும் காமாட்சி இவ்வூரிலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். காலை வேளையில் யாரவது ஒருவர் வாங்கித்தரும் பூமணி ஒட்டல் இரண்டொரு இட்லியை உண்டுவிட்டு ஆலமரத்திற்குப் பக்கத்தில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட்டில் படுத்துக்கொள்வாள். மதிய நேரத்தில் செட்டியார் கடையிலிருந்து ஆலமரக் குரங்குகளுக்கு வீசப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகள் தான். சிலநேரம் மிக்ஸரும் கிடைப்பதுண்டு. சாயங்காலம் அம்மன் கோவிலுக்கு இடப்புறம் உள்ள அடிபம்பில் குளியல். இரவு உணவு யாராவது இரக்கப்பட்டு கொடுத்தால் உண்டு. இல்லையெனில் இரவு உணவுக்கு விடுமுறைதான்.

நாலடிக்குக் கொஞ்சம் கம்மியான உயரம். க்ராப் வெட்டிய தலை முடி. சீவுக்குச்சியால் தோடு போட்டிருக்கும் காதுகள். களிமண்ணில் ஆற்று மணற் கலந்தாற்போன்று மினுமினுக்கும் நிறம்.அம்மாவின் நினைவாய் தா‌ன் கட்டியிருக்கும் சேலை முந்தானையை கைவிரல்களில் சுற்றியபடி தாமோதர பிள்ளையின் வீட்டின் முன்பாக தன் அப்பாவோடு நின்றுக்கொண்டிருந்தாள் காமாட்சி.

‘யாருப்பா நீங்க? எந்த ஊரு? யாரப் பாக்கணும்?’ என்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டாள் 45 வயது மதிக்கத்தக்க தாமோதர பிள்ளையின் மனைவி.

கையில் வைத்திருந்த சாயம் வெளிறிய பச்சைத் துண்டை சட்டென இடுப்பில் கட்டிக் கொண்டு, ‘அம்மா! நாங்க வெளியூரு. வேல தேடி வந்துருக்கம். அய்யாவ பாக்கணும்னு காத்துட்டுருக்கம்’ என்று பணிவான குரலில் கூறினார் காமாட்சியின் அப்பா.

‘அய்யா குளிச்சிட்டுருக்காரு நீங்க ரெண்டு பேரும் இப்டி ஒரு ஓரமா நில்லுங்க வர சொல்றேன்’ என்று கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்றாள் பிள்ளையின் மனைவி.

இடுப்பில் வெள்ளை நிற வேட்டியும் சட்டை அணியாத உடம்பிலும், நெற்றியிலும் திருநீறு பட்டையும், தங்கச் செயினில் ஒற்றை ருத்திராட்சமும் அணிந்தவாறு வெளியே வந்தார் தாமோதர பிள்ளை. ‘யார் உங்கள அனுப்புனது?. என்ன விஷயமா வந்துருக்கீங்க?’ என்று காமாட்சியைப் பார்த்தவாறே கேட்டார்.

‘சாமி நாங்க வேலை தேடி வந்துருக்கம். அய்யா வீட்ல தோட்ட வேலைக்கும், மாடுகளைப் பாத்துகிறதுக்கும் ஆளுங்க தேவைன்னு சொன்னதா கலியன் அண்ணன் சொன்னாரு. அதான் உங்கள பார்த்து வேலை கேட்டுப் போலம்னு வந்தம் சாமி’ என்று பணிவான குரலில் சொன்னார் காமாட்சியின் அப்பா.

‘வேல வேணும்னு சொல்ற, கூட வயசு புள்ளைய கூட்டிட்டு வந்திருக்க, யாரு இந்தப் பொண்ணு, என்ன உறவு?’ என்று கேட்டார் பிள்ளை.

‘அய்யா! இது என் மொவ. பேரு காமாட்சி. கொஞ்சம் மந்த புத்தி. ஆனா வேலையில படு சுட்டி. கொஞ்ச நாள் முன்னாடி என் பொண்டாட்டி இறந்துட்டா. இவள வீட்லயே விட்டுட்டு வர மனசில்ல… அதான் கூடவே கூப்பிட்டு வந்துட்டேன். எந்த வேலையா இருந்தாலும் நல்லா செய்வாங்கய்யா. எங்க ஊர் கவுண்டர் வீட்ல வேலை பாத்துக்கிட்டு இருந்தோம். அவங்க இப்போ எல்லாத்தையுமே வித்துட்டு டவுனுக்கு அவங்க பையன் வீட்டுக்குப் போய்ட்டாங்க. அந்த வீட்டு தோப்புதொரவெல்லாம் நான்தான் பார்த்துகிட்டுருந்தன். அங்கிருந்த மாடுங்க எல்லாத்தையும் என் பொண்ணு தான் பார்த்துகிட்டா. தொழுவத்த சுத்தம் பண்றது. மாடுகளுக்கு தீவனம் வக்கிறது. விசேஷ நாள்ல மாடுகள குளுப்பாட்டுறதுனு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வா’ என்று காமாட்சியின் புகழை பாடி முடித்தார்.

ங்க்.. என்று செறுமிவிட்டு இடுப்பு வேட்டியை சரிசெய்யதவாறே ‘தோட்டத்துக்கும்,மாடுகள பாத்துகிறதுக்கும் ஆளு தேவைதான். ஏற்கனவே இருந்தவன் பொண்டாட்டிக்கு பிரசவம்னு போனான் ஆளையே காணும். ம்.. சரி கலியன் அனுப்புனானு வேற சொல்ற அவன் நல்ல ஆளுதான். அவன் அனுப்புன ஆளுங்களும் நியாயமான ஆளுங்களாதான் இருக்கும். நீங்க ரெண்டு பேரும் இங்கயே வேலைக்கு வந்துடுங்க. தங்குறதுக்கு மாட்டு தொழுவம் பின்னாடி மண்குடிசை இருக்கு அங்கயே தங்கிக்கிட்டு வேலைய பாருங்க’ என்றார் தாமோதர பிள்ளை.

இரு கைகளையும் கூப்பி ‘ரொம்ப நன்றிங்க சாமி’ என்று கும்பிடும் அப்பாவையும், தாமோதர பிள்ளையையும் மாறி, மாறி பார்த்துக்கொன்டிருந்தாள் காமாட்சி.

‘சரி.. ரெண்டு பேரும் கொல்லப்புறமா போங்க அம்மா சோறு கொடுப்பா சாப்டுட்டு நாளையிலருந்து வேலைய பாருங்க’ என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் பிள்ளை.

‘ஏங்க! அதுங்க ரெண்டையும் பார்க்கவே மெலிஞ்சுபோய் ரொம்ப பரிதாபமா இருக்குதுங்க. வேலையெல்லாம் நல்லா பாக்குங்களா. அந்த பொண்ணு வேற பாக்குறதுக்கு கிறுக்கு மாதிரி இருக்கு. வேலையெல்லாம் பாக்குமா?’ என்று சந்தேகத்தோடு கேட்டாள் பிள்ளையின் மனைவி.

‘ரெண்டும் சாப்டுறத பாத்தல்ல கூச்சம் கீச்சம் இல்லாம கை நிறைய அள்ளி வாய் நிறைய சாப்டுதுங்க. இந்த மாதிரி பசிக்கு சாப்டுறவன் தான் நல்லா வேலை செய்வான். ருசிக்கு கொஞ்சம் கொஞ்சமா கொறிக்கிறவன் வேலை செய்யுற மாதிரி பாவ்லாதான் காட்டுவான். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறன் நீ ஒண்ணும் கவல படாத’ என்றார் பிள்ளை.

இரையைப் பார்த்த புலி தரையோடு தரையாய் ஊர்ந்து செல்வது போல் சூரியன் மெல்ல மெல்ல மேலெழ ஆரம்பித்திருந்து. சேவலின் சப்தம் கேட்கும் முன்பே காமாட்சி தன் அன்றாட அலுவல்களைத் தொடங்கியிருந்தாள். மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்வது, வீட்டு வாசலைப் பெருக்குவது. மாடுகளுக்கு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு வைப்பது என்று தன் வேலையை செய்துகொண்டிருந்தாள்.

காமாட்சி யின் அப்பா மேலூருக்கு வந்த ஒருசில மாதத்திலேயே தென்னந்தோப்புக்கு நீர் பாய்ச்சும் போது பாம்பு கடித்து இறந்து விட்டார் . அன்றிலிருந்து காமாட்சி தனியாகத்தான் இருக்கிறாள்.

‘உன் ஒருத்திக்கு மட்டும் எதுக்கு சோறாக்குற இனிமே நம்ம வீட்லயே சாப்ட்டுக்க’ என்று பிள்ளையின் மனைவி கூறியிருந்தாள். காமாட்சியின் அப்பா இறந்த பிறகு அவளுக்கென்று புது ஈயத் தட்டு வாங்கப்பட்டது.

முரண்டு பிடிக்கும் செவலக் காளையின் மூக்கணாங்கயிறை இழுத்து வலப்பக்க முன்னங்காலில் கட்டிவிட்டு ரெண்டாளுயர கருவேலங் குச்சியை எடுத்துக் கொண்டு மதியம் சாப்பிடுவதற்கு பிள்ளையின் மனைவி கொடுத்த பழைய சோற்றைத் தூக்கு வாளியில் போட்டு எடுத்துக் கொண்டு ஊருக்கு மேற்கே உள்ள ஏரிக் கரைக்கு மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தாள்.

ஏரியின் தெற்குக் கரையில் மாடுகளை இறக்கி மேய விட்டுவிட்டு ஏரிக்கரையின்மேல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் புளியமரத்தின் அடியில் வந்து உட்கார்ந்தாள்.

‘என்ன காமாட்சி, இன்னிக்கு சீக்கிரமே மாட்டை ஓட்டியாந்துட்ட?’ என்று மஞ்சள் கறை படிந்த பற்கள் தெரிய இளித்தவாறே கேட்டுக் கொண்டு அவளின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் கட்டையன்.

‘அதுவாண்ண! இன்னிக்கு வெயில் காலையிலேயே அதிகமாயிருந்துச்சு.. அதான் நேரத்திலேயே ஓட்டிட்டு வந்துட்டேன்’ என்று குழந்தையைப் போல் கூறிக்கொண்டே இடுப்பில் செருகி வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து வேர்க்கடலையை எடுத்து உரிக்க ஆரம்பித்தாள்.

கட்டையனும் அவள் சொல்வதை ஆமோதிப்பதைப்போல் தலையை அசைத்தான். கட்டையன் முத்து கவுண்டர் வீட்டில் பண்ணை வேலைப் பார்ப்பவன். அவனும் இந்த ஏரிக்கரைக்குதான் மாடுகளை ஓட்டி வருவான். அவன் மட்டுமல்ல மேலூரிலிருக்கும் பாதி பேர் தங்களது ஆடு,மாடுகளை அங்குதான் ஓட்டிப்போவார்கள். ஒரு சில பேர் ஊருக்கு வடக்கு பக்கம் இருந்த வாய்க்காலுக்கு ஓட்டிப்போவார்கள்.

மழைக் காலத்தில் கடல் போல் காட்சியளிக்கும் ஏரி, கோடையில் வறண்டு திட்டு திட்டாய் தண்ணீர் தேங்கி நிற்கும்.

இடக்காலை நீட்டியும், வலக்காலை மடக்கியும் உட்கார்ந்திருந்த காமாட்சியிடம் ‘என்ன! பாப்பா காலுல இவ்ளோ பெரிய தழும்பு!’ என்று அக்கறையாய் விசாரிப்பது போல காயம்பட்ட தழும்பை தடவிப் பார்க்கும் சாக்கில் அவளின் அந்தரங்கமெல்லாம் தொடுவதாக நினைத்து கொண்டு தடவினான்.

‘விடுண்ண! ஒண்ணுமில்லை’ என்று கையைத் தட்டிவிட்டாள்.

‘அட, சும்மா தான எப்படியாச்சுனு கேட்டன்’.

‘அது ஜானகி அம்மா குளிக்க வெந்நீர் போட சொன்னாங்க.. அப்போ தெரியாம விறகு கட்டையில கால வச்சுட்டன். அப்போ அதுலருந்த நெருப்பு சுட்டு காயமாச்சு. இப்போ ஆறிடுச்சு’ என்று முழங்காலுக்கு மேலே ஏறியிருந்த பாவாடையை இறக்கிவிட்டாள்.

அவள் சொல்வது எதுவும் காதில் ஏறாதவனாய் காமாட்சியின் பருத்த ஸ்தனங்களையே வெறித்து பார்த்துக் கொண்டு தன் மன விரல்களை அவளின் உடல் முழுக்க பரவ விட்டான் கட்டையன்.

பக்கத்திலிருந்த பெரிய கருப்பன் கரும்பு காட்டில் செவலை காளை நுழைவதைப் பார்த்த காமாட்சி வேர்க்கடலையை கீழே போட்டு விட்டு சட்டென்று குச்சியை எடுத்துக் கொண்டு ஓடினாள்.

‘என்னங்க! காமாட்சி சாயங்காலத்துலருந்து உடம்பு சரியில்லாம மொனகிக்கிட்டு இருக்கா. நான் டாக்டர்க்கு சொல்லிவிட்டிருக்கன். அவரு கொஞ்சம் நேரத்துல வந்துருவாரு. நான் கோவில் வரைக்கும் போயிட்டு வரன். அதுக்குள்ள அவ சாப்ட எதாவது கேட்டாள்னா வீட்டு பின்னாடி கஞ்சி வச்சிருக்கன் அத எடுத்துக்க சொல்லுங்க நான் சீக்கிரமே வந்தரன்’ என்று கூறிவிட்டு கோவிலை நோக்கி நடந்தாள் பிள்ளையின் மனைவி.

வீட்டின் மண் சுவற்றில் சாய்ந்து கொண்டு ஜானகி அம்மாள் கொடுத்த தைலத்தை நெற்றியில் தேய்த்து விட்டு முழங்காலில் தேய்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. புதிதாய் தோலை உரித்த கருநாகப் பாம்பு பளபளவென மின்னுவது போல் தைலம் பட்டு மினு மினுக்கும் அவளின் காலைப் பார்த்து தொண்டைக்குழியிலிருந்த எச்சிலை விழுங்கிவிட்டு கோழிக்கூட்டுக்குள் நுழையும் நாகத்தைப்போல் குடிசையில் நுழைந்தார் தாமோதர பிள்ளை.

‘என்ன காமாட்சி, உடம்புக்கு என்னாச்சு?’ என்று விசாரித்தவாறே அவளின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

‘உடம்புலாம் ஒரே வலியாருக்கு. ஜுரம் வர மாதிரி சூடாருக்கு. அதான் மாட்டை சீக்கிரமே ஓட்டிட்டு வந்துட்டேன். அம்மா தைலம் கொடுத்தாங்க அதான் தேச்சிக்கிட்டுருக்கன்’ என்று மரியாதை கலந்த பயத்தில் கூறினாள்.

‘சரி.. சரி நீ படுத்துக்க நான் தைலத்தை தேய்ச்சு விடுறன்’.

‘அய்யோ! வேனாங்கய்யா நீங்க எனக்கு தைலம் தேச்சுவிடுறதா..! வேண்டாங்கய்யா’ என்று படபடத்த குரலில் கூறினாள்.

‘அட, ஒண்ணும் வெட்கப்படாத ஏன் பொண்ணுக்கு ஒடம்பு சரியில்லனா நான் தேய்ச்சு விடமாட்டனா அது போலத்தான்’.

‘அதுலாம் வேண்டாங்கய்யா’ என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் காமாட்சி.

அவள் கூறியதை காதில் வாங்காமல் தைலத்தை பிடுங்கி தேய்க்க ஆரம்பித்தார். பிள்ளையின் கையில் உள்ள வெள்ளை முடி சிலிர்த்து நிற்க காமாட்சியின் நெற்றி, கழுத்து என கைவிரல் இறங்கி வந்து அவளின் பருத்த ஸ்தனங்களை தொட முயற்சித்துக்கொன்டிருந்தது.

தூண்டில் முள்ளில் மாட்டிய மண்புழுவைப்போல் அவள் நெளிந்து கொண்டிருந்தாள். பாவம் அவளால் அதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்.

பெரிய கருப்பன் கரும்பு காட்டில் மயங்கிய நிலையில் காமாட்சி கிடப்பதாக அவளுடன் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஊர் முழுக்க கத்திக்கொண்டே ஓடினார்கள்.

அன்றிலிருந்து காமாட்சி பித்துப் பிடித்தவளைப் போல் தனியே புலம்பிக் கொண்டும், வசைபாடிக்கொண்டும் ஊரைச் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தாள். இனி இவள் வேலைக்கு லாயக்கு இல்லை என்று சொல்லி வீட்டை விட்டேத் துரத்திவிட்டாள் பிள்ளையின் மனைவி.

இப்போது தாமோதர பிள்ளை வீட்டின் மாடுகளையும், தோட்டத்தையும் பார்த்துக் கொள்வதற்காக மீனாட்சி எனும் ஒருத்தி குடும்பத்தோடு மேலூருக்கு வந்து சேர்ந்தாள்.

Thaimaikkul Poem By Priya Jayakanth. பிரியா ஜெயகாந்தின் தாய்மைக்குள் கவிதை

தாய்மைக்குள் கவிதை – பிரியா ஜெயகாந்த்




முதல் முறை நீ..
தரித்த தருணம் என் கருவறைக்குள்
சுவாசித்த காற்று என் மூச்சுக்குள்
அழுத அழுகை என் வலிக்குள்
பார்த்த பிம்பம் என் இமைக்குள்

சிரித்த சிரிப்பு என் புன்னகைக்குள்
தீண்டிய ஸ்பரிசம் என் உணர்வுக்குள்
உண்ட உணவு என் சுவைக்குள்
கண்ட கனவு என் உறக்கத்திற்குள்

ஊடுத்திய ஆடை என் அலமாரிக்குள்
படுத்த படுக்கை என் மடிக்குள்
உதிர்த்த வார்த்தை என் மொழிக்குள்
கேட்ட கேள்வி என் சிந்தனைக்குள்

நடந்த நடை என் தடத்துக்குள்
எழுதிய எழுத்து என் வாசிப்புக்குள்
கொண்ட கோபம் என் சினத்திற்குள்
பயந்த நிமிடம் என் அச்சத்திற்குள்

செய்த குறும்பு என் ரசனைக்குள்
விழுந்த காயம் என் ரணத்திற்குள்
கற்ற பாடம் என் அறிவுக்குள்
மகிழ்ந்த பண்டிகை என் கொண்டாட்டத்திற்குள்

வரைந்த ஓவியம் என் பார்வைக்குள்
சேமித்த பணம் என் வரவுக்குள்
வாங்கிய விருது என் வெற்றிக்குள்
கொடுத்த பரிசு என் விருதுக்குள்

ரசித்த இசை என் செவிக்குள்
பாடிய பாடல் என் மெட்டுக்குள்
அணிந்த சலங்கை என் ஓசைக்குள்
ஆடிய நடனம் என் பாவத்திற்குள்

கேட்ட பொருள் என் பரிசுக்குள்
சமைத்த உணவு என் ருசிக்குள்
அளித்த அறிவுரை என் கற்பிதத்திற்குள்
அணைத்த அரவணைப்பு என் தாய்மைக்குள் !!!