ஹைக்கூ கவிதைகள் – பேரா. முனைவர் எ. பாவலன்
நாய் குறைக்கிறது
கூட்டம் சேர்வது
அதற்கு பிடிக்கவில்லை
——
இப்பொழுதெல்லாம் சாதி பார்ப்பதில்லை
உண்மைதான்
சாதி சாதியைப் பார்க்கிறது.
——-
உடை மாற்றும் நிலவு
கூச்சப்படும் வேளையில்
அம்மாவாசை இரவு
——-
ஒரு மாயக்காரன் கையில்
சிக்கிக் கொண்ட பொம்மை
இந்தியா
——-
மோடி மஸ்தான் வேலை
பலிக்காது
நிச்சயம் மானுடம் வெல்லும்.
—-
சூரியனையே விழுங்குவதாக இருந்தாலும்
கொஞ்சம் அவகாசம் தேவை
இரவுக்கு…
——
அவர்கள் பொக்ரானை நம்புகிறார்கள்
நாங்கள்
வாக்குச்சீட்டுக்குக் காத்திருக்கிறோம்
——
வழக்கு நடைபெறவில்லை
தீர்ப்பும் வழங்கவில்லை
சிறைக் கம்பிக்குள் பறவைகள்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73 – சுகந்தி நாடார்
கல்வி ஏழ்மை
இன்றைய கல்வியின் துணைக்கருவிகளாக தொழில்நுட்பம் மிளிர்ந்து வருகின்றது. அன்றாடம் நடக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் கல்வியாளர்களுக்கு ஒரு சோதனையாகவும் சவாலாகவும் இருக்கின்றது,தொழில்நுட்ப மாற்றங்கள் கண்டிப்பாய் இலவசமாக நமக்குக் கிடைப்பதில்லை. கணினிக் கருவிகளாகட்டும் மென்பொருட்களாகட்டும் கல்விச்சூழலை இணைக்கும் இணைய இணைப்பு ஆகட்டும் அனைத்துமே நம்மில் பலருக்கு இன்றளவும் ஒரு ஆடம்பரச் செலவாகவே உள்ளது. கல்வி என்ற ஒரு அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான உபகரணங்கள் ஒரு குடும்பத்தின் ஆடம்பரச் செலவாக அமையும் போது அங்கே கல்வியின் நிலை என்ன கற்றல் கற்பித்தலில் நிலை என்ன? யோசித்துப் பார்க்கவே உள்ளம் நடுங்குகின்றது.
உலக வங்கிகள் குழுமம் என்ற அமைப்பு வளர்ந்து வரும் நாடுகளின் கல்விநிலைக்கு பண உதவி செய்யும் அமைப்பாகும் IBRD(The International Bank for Reconstruction and Development) IDA(The International Development Association) IFC(The International Finance Corporation) MIGA( The Multilateral Investment Guarantee Agency) ICSID(The International Centre for Settlement of Investment Disputes) ஆகிய உலகின் மிகப்பெரு நிதி நிறுவனங்கள் ஐந்து இணைந்து பின்தங்கிய நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் கல்விக்கான மேம்பாட்டிற்கு உதவி வருகின்றன இக்குழுமத்தின் நோக்கம் 2030ம் ஆண்டுக்குள் உலக ஏழ்மையில் 3% குறைப்பதும் ஒவ்வோரு நாட்டிலும் 40% மக்களின் வருமானத்தை உயர்த்துவதும் ஆகும். உலகில் கல்வியின் தன்மையைக் கண்டறிய 10 வயதுக் குழந்தைகளுக்கு கதை சொல்லி அவர்களின் புரிதல் தன்மையை ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உலகம் முழுவதும் கல்வி ஏழ்மை பாதித்திருக்கின்றது என்று அறிவிக்கின்றது குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் இது 50% ஏழைநாடுகளில் இந்து 83%விகிதம் என்றும் இவ்வறிக்கைக் கூறுகின்றது.
பேரிடர் காலத்தில் கல்விக்கு ஏற்பட்ட பல்வேறு தடங்கல்களால் இந்தக் குறைபாடு மேலும் 10% அதிகரித்து உள்ளது என்றும். இந்த அதிகரிப்பிற்குக் காரணம் தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வே என்றும் இவ்வறிக்கைக் கருதுகின்றது.
உலகம் முழுவதும் இருக்கும் கல்வி ஏழ்மையைப் போக்க இருவழிகள் உண்டு என்று ஐநா சபைக் கூறுகிறது, ஒன்று கல்வி மேம்பாட்டிற்காக உலகின் மிகப்பெரிய கணினி நிறுவனங்கள் முன் வர வேண்டும். இரண்டாவது ஆசிரியர்களுக்கு இணையக் கல்வியில் ஆசிரியர்களுக்கு உதவியும் திறன் மேம்பாடு பயிற்சிகளும் கொடுக்கவேண்டும் இவை இரண்டுமே பொருளாதாரம் சார்ந்தது.
கல்வி ஏழ்மையைப் போக்குவதற்காக தங்கள் இலாபத்தை நிறுவன ங்கள் அரசாங்கங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுமா அப்படி நிறுவனங்கள் உடன்படிக்கை செய்துகொண்டால் அதில் அவர்களின் சுயநலம் எவ்வளவு இருக்கும்? கணினிக் கல்வி ஆசிரியர்களுக்கு அவசியமான ஒன்று ஆனால் ஒவ்வோரு நாட்டின் தனித் தன்மையைப் பாதிக்காத வண்ணம் எவ்வாறு அமையும்? அதற்கான மூலதனம் என்ன?
இன்றையக் கல்வி என்பது பொருளாதாரத்தை சார்ந்தது அல்ல என்று சொன்னாலும் நம் பொருளாதார வளம் வாழ்க்கைத் தரத்தின் உயர்ச்சி நம் கல்வியை சார்ந்து இருக்கின்றது என்பதை ஒப்புகொள்ள வேண்டும் அதிலும் எதிர்காலப் பொருளாதாரம் முழுக்க முழுக்க கணினி சார்ந்தது எனும் போது தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வு கண்டிப்பாக தீர்த்து வைத்து வைக்க வேண்டிய ஒரு பிரச்சனை தான் ஆனால் தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசமாக இருக்கும் போது சரி செய்ய இயலுமா?
இன்று நிலைவும் தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வுகளை தீர்க்கும் முயற்ச்சியில் முதல் படி கணினி பற்றிய விழிப்புணர்வு தான். என்ன மாதிரியான விழிப்புணர்வு?
நவீன உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் விட மிக மிக வேகமாக மாறி வருவதும் அசுர வேகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் ஒரு தொழில்நுட்பமாக கணினி தொழில்நுட்பம் இருக்கின்றது. அதிலும் தரவுகளின் சிறப்பான சீரான மேலாண்மையும், செயற்கை நுண்ணறிவும் இந்த வேகத்தை ஊக்கப்படுத்தும் உந்து சகதியாக இருக்கின்றன. இந்த உந்து சக்திகளில் மின் எண்ணியியல் செலாவணியும் சேர்ந்து கொண்டு இருக்கின்றது. செயற்கை கோள்கள் அன்றாடப் புழக்கத்திற்கு வரக்கூடியக் காலம் வெகுதூரத்தில் இல்லை.
நம் திறன்பேசிகளில், புகைப்படம் எடுத்து அதை பல கோலங்களில் கோணங்களில் மாற்றி அமைப்பது நமது பொழுது போக்கு என்றால் நம்மையே ஒரு திரைபப்டத்தின் நடடிகர்களாக மாறித் திரைப்படங்களை வெளியிட வைப்பது இன்றைய செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் கணினியால் உருவாக்கபட்ட முகத்தை நமக்கு விருப்பமான ஒருவரின் முகத்தைப் பொறுத்தி அந்த காணொலியில் அவர் இருப்பதாக பொய்யாக ஒரு தோற்றத்தை உருவாக்குக்கும் தொழில்நுட்பம் இணையத்திலும் அலைபேசிகளிலும் பிரபலம் அடைந்து வருகின்றது.
டீப் ஃபேக்ஸ் (deep fakes) என்று அழைக்கப்படும் உணரமுடியாத போலிகள் இன்னும் என்னெனென்ன தாக்கங்களை உருவாக்குமோ? ஏற்கனவே பல விஷமிகள் புக்சிப் மென்பொருகள் மூலம் பெண்களை பாலியியல் சித்திரவதைக்கு உள்ளாக்குவச்து என்பது ஒரு சமூகநலக்கேடாக இருக்கிறது. இப்போது காணோலியாக வெளியிடப்படும் இந்த மென்பொருளுக்கு ஏற்கனவே காண களியாட்டங்களைச்செய்யும். இணையதளப் பயனாளர்களிடையே பிரபலம் அடைந்து வருகின்றது.
அமெரிக்க தேர்தல் சமயத்தில் இது போல பொய்யான செய்திகள் உண்மை போல பரப்பப்பட்டன. சீனாவிலும் இந்தத் தொழில்நுட்பம் கடந்த 5 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. சீன செய்தியாளர்கள் சிறப்பான ஆமெரிக்க ஆங்கிலத்தில் பேசுவது போல தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மெரிக்க அதிபர் ட்ரம்ப். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பல சமுதாயப் பிரச்சனைகளை மக்களிடம் நேரடியாக தனது கருத்தை தெரிவித்தார். அந்த செய்தியை அவருக்கு பதிலாக அவர் தனது சமூக வலைதலங்களையே பயன்படுத்தி நேரில் மக்களுடன் தொடர்பில் இருந்தார்.
சென்ற ஞாயிறுகூட இந்திய பிரதமரின் dividdar பாதிக்கப்பட்டது. வளைகுடா நாடான அமீரகத்தில் உலகிலேயே அனைத்துமே மின்னியியல் வழி செயல்படும் ஒரு நாடு என்று அரிவிக்கப்பட்டுள்ளது அவ்வாறு ஒரு மின்னியல் நாடாக மாறியதால் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏறத்தாழ 350மில்லியன் சேமிக்கப்பட்டு இருக்கிறது என்று அந்நாட்டின் இளவரசர் தெரிவித்தார். இவரது அறிவிப்பில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் மனித உழைப்பில் 14மில்லியன் மணி நேரங்கள் சேமிக்கப்படுகிறது என்பது தான்.
இவ்வாறு ஒரு நாட்டின் அரசியல் முடல் அடிமட்ட மக்களின் வாழ்வாதாரம் வரை நம்மை ஆட்கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தைப் பற்றிய என்ன விழிப்புணர்வு தேவை? கணினியையும் இணையத்தையும் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு கையாளுவது என்பதா? இல்லை அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கின்றதா?
ஒரு கல்வியாளராக நமக்கு கற்றல் கற்பித்தலுக்கான வளங்கள் மட்டுமன்றி கணினி உலகைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு மிகவும் தேவையாய் உள்ளது. கணினி உலகம் என்று சொல்லும் போது கணினியை இயக்குவது நிரல் எழுதுவது என்பதையும் தாண்டி அது எவ்வாறு நம் சுற்றுச்சூழலை நம் வாழ்க்கைத் தரத்தை, பண்பாட்டு சின்னங்களை, நம் தனித்துவத்தை, நமது அரசியல் சூழலை பாதிக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும் நம் விழிப்புணர்வுக்குள் அடங்கும். துபாயில் உள்ளது போல அமெரிக்காவில் அனைத்தும் மிண்ணியியலாகும் வசதிகள் இருந்தும் இன்றுக் காகிதங்கள் பயன்பாட்டில் இருப்பதற்குக் காரணம் தங்களின் தேவை காகிதத்திலும் இருக்கலாம் என்ற ஒரு குடியாட்சி தன்மை இருப்பதால்தான். மற்ற நாடுகளை விட துபாய் முழுக்க முழுக்க எண்ணியியல் நாடாக அதிவிரைவில் மாறியதற்குக் காரணம் அது ஒரு ஏகாதிபத்திய நாடு. சீனாவும் இந்தியாவும் கூட இப்படித்தான். இந்தியாவில் கணினியாளர்கள் அதிகம் இருந்தும் சீனா இன்று கணினி உலகில் முன்ணனியில் இருக்கக் காரணம் இரு நாடுகளில் உள்ள ஆட்சி முறை அரசியல் கொள்கைகளின் வேறுபாடுதான். எனவே உலக நாடுகளின் அரசியல் அமைப்புக் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வும் நமக்கு அவசியம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நம்மைச் சுற்றி பல தொழில்நுட்ப மாற்றங்கள். நிகழ்ந்து கொண்டே இருக்கிறன இந்த மாற்றங்களின் வேலைப்பாடு என்ன அதன் விளைவுகள் என்ன என்று சாமான்ய மக்களாகிய நாம் ஒரு தெளிவு அடையும் முன்னரே அதைப் பயன்படுத்தத் தள்ளப்படுகின்றோம். அதிவேகமாக ஒரு தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தும் போது எதை இழக்கின்றோம்?
இன்று என்னைத் தெரியாத ஒருவர், எனக்குத் தெரியாத ஒருவர், ஒரு புலனக்குழுவில் என்னை சேர்த்தார் அது முதலீடு செய்வதற்கான ஒரு குழு, சரி அவர்கள் என்ன தான் சொல்கின்றார்கள் என்று பார்க்கலாம் என்று பார்த்தால் வரும் அறிவிப்புக்கள் ஒருவரை வினாடி நேரம் கூட யோசிக்க விடாமல் உடனடியாக செய்ய வேண்டிய செயலாக இருக்கின்றன. உதாரணத்திற்கு எண்னியியல் செலவாணியில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் 1000$ முதல் 10,000$ வரை சம்பாதிக்க இயலும் ஆனால் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். அதுவும் அடுத்த 180 வினாடிகளில் முதலீடு செய்ய வேண்டும்.
பதிவு செய்து பணத்தை இழந்து விட்டால் நீங்கள் மீண்டும் 1500, 3000, 5000, 12000 என்றத் தொகைகளில் முதலீடு செய்து ஒரு முதலீட்டாளராக மறு அவதாரம் எடுத்துக் கொள்ளலாம் என வருகின்றது. அக்குழுவில் இருப்பவர்கள் இச்செய்தியைப் படித்ததும் என்ன நினைப்பர்? அவருக்கு உடனடிப்பணத்தேவை இருந்தால் அவர் செய்தியைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் உடனடியாக அச்செய்தியில் வரும் விவரங்களைச் செய்வார்தானே? அதே சமயம் சங்கேத செலாவணி பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் இருந்தாலும் செய்தியை பற்றி ஒரு சில வினாடிகளாவது யோசிப்பார் தானே?
அந்த யோசித்தலுடன் தனக்கு வரும் செய்தியை கொஞ்சம் ஆழமாகப் படித்தால் கொடுக்கப்பட்ட செய்தியின் உள் விவரம் ஒரு சூதாட்ட விளையாட்டைப் போலவோ அல்லது ஒரு குதிரைப் பந்தயத்தைப் போலவோ இருக்கின்றதே என்று யோசித்து ஆராய்ந்து செயல்பட முயற்சிக்கலாம் அல்லவா? இதைத் தான் நாம் விழிப்புணர்வு என்று சொல்கின்றோம்
ஆனால் இன்று அதிலும் ஒரு பிரச்சனை இருக்கின்றது. வினாடிக்கு ஆயிரம் ஆயிரமாக நம்மை நோக்கி வரும் செய்திகளில் எப்படி உண்மையைக் கண்டுபிடிப்பது பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் செய்திகள் சேகரிக்கப்படுவது போல இன்று செய்திகள் சேகரிக்கப்படுவதில்லை. பல செய்திகள் சமூக வலை தளங்களிலும் ஒரு தனி மனிதரின் இணைய அறிவிப்புப் பலகைகளான twitter instagram ஆகியவற்றில் வெளியாகும் செய்திகள் தொகுக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்படுகின்றன. ஒருவர் சமூக வலைதளங்களில் இடும் செய்தி பொய்யா மெய்யா என்று நமக்குத் தெரியாது. உண்மையில் செய்தியை இடுவதும் அவர் தானா என்பதும் நமக்குத் தெரியாது. நம்மால் சரிபார்க்க இயலாத செய்திகளை ஏற்றுக் கொள்வதும் மூடநம்பிக்கைக்கு சமம் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
கற்றலில் ஏழ்மை என்பது கற்றலுக்கான கணினி வசதிகள் மட்டுமல்ல, ஒரு உயரிய மனித வளத்தை உருவாக்கக் கூடிய கல்வி வளங்களின் பற்றாக்குறையும்தான் இதை சீர் செய்யக்கூடிய கல்வி வளங்கள் எங்கே இருந்து வரும். நமக்கு கிடைக்கும் செய்திகளில் இருந்து தானே? நம்மால் சரிபார்க்க இயலாத செய்திகளை வைத்து நம்மால் ஒரு சரியான கல்வி வளத்தைத் தயாரிக்க முடியுமா?
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 14 – ஜா. மாதவராஜ்
“ஒரு உண்மையை பொய்யென ஆரம்பித்து
ஒரு பொய்யை உண்மையென முடிப்பான் பொய்யன்”
– வில்லியன் சென்ஸ்டோன்
ராம்கிஷ்ன கிரேவாலுக்கு 70 வயது. முன்னாள் இரானுவ வீரர். தேஜ் பஹதூரோ எல்லைக் காவல் படையின் வீரராக இருந்தவர். இருவருமே ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை இந்த தேசத்தின் பிரஜைகள் நினைவில் வைத்திருப்பார்களா, தெரியவில்லை. இராணுவத்தையும், இராணுவ வீரர்களையும் பிஜேபி கட்சியும், மோடியும் எப்படி நடத்தியது, மதித்தது என்பதற்கு அவர்களே ரத்தமும் சதையுமான சாட்சிகள். அலைக்கழிக்கப்பட்ட அந்த மனிதர்களின் மரணத்தையும், வாழ்வையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடந்தவைகளை மீண்டும் கவனிக்க வேண்டும்.
2013 செப்டம்பர் 15ம் தேதி ஹரியானா மாநிலத்தின் ரேவரியில் முன்னாள் இராணுவ வீரர்கள், பணிபுரிந்து கொண்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில் நடந்த கூட்டம் அது. நாட்டின் இராணுவ வீரர்களுக்கு மோடி செலுத்தும் முதல் மரியாதையை எல்லோருக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
“நாட்டுக்காக உயிரையேத் துறக்க துணிந்திருக்கும் நீங்கள் மகத்தான துறவிகளுக்கு ஈடானவர்கள். உங்களை நான் வணங்குகிறேன்” என உணர்ச்சி பூர்வமாக பேச ஆரம்பித்தார் மோடி.
“1962 போர் சமயத்தில் நான் ஆறாவதோ எழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். இராணுவத்துக்குச் செல்லும் வீரர்களை உற்சாகப்படுத்த ரெயில்வே ஸ்டேஷனில் அவர்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் பலகாரங்கள் கொடுத்து வழியனுப்புவதாய் கேள்விப்பட்டேன். என் அப்பாவுக்குக் கூடத் தெரியாமல் நான் ரெயில்வே ஸ்டேஷன் சென்று அவர்களுக்கு டீ கொடுத்து காலில் விழுந்து வணங்கினேன்.” என மெய்யெல்லாம் கூச்செரியச் செய்தார்.
“பாகிஸ்தான் குஜராத்தை ஒட்டி இருக்கிறது. ஆனால் அங்கு எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களுக்கு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் ஓட்டகங்கள் சுமந்து தண்ணீர் கொடுக்கும் நிலைமையே இருந்தது. நான் சிப்பாய்கள் இருக்கும் இடம் சென்று அவர்களது படும் வேதனையை பார்த்தேன். நண்பர்களே! நான் கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி.மீ தொலைவுக்கு குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதியின் தூய்மையான தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையாலும், அன்பாலும் இதனை நான் செய்தேன்.” என்று பெருமிதம் கொண்டார்.
உண்மை என்னவென்றால் அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தில் கட்ச் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு இருந்தது. 1985ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தபோது திட்டமிடப்பட்ட திட்டம் 2003ல் நிறைவேற்றப்பட்டிருந்தது.
“நண்பர்களே! தாய் நாட்டுக்காக தங்கள் வாழ்வை இழந்த, உடல் உறுப்புக்களை இழந்த, சந்தோஷங்களை இழந்த இராணுவ வீரர்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ரெயில்வே ஸ்டேஷனில், ஆஸ்பத்திரியில் அவர்கள் பிச்சையெடுப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. நம் மரியாதைக்குரிய முன்னள் இராணுவ வீரர்களின் அடிப்படைத் தேவைகளை யார் மறுத்தது? அவர்களின் சுய மரியாதையை யார் பறித்தது? 2004ம் ஆண்டில் வாஜ்பாய் மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் நீங்கள் One Rank One pension பெற்றிருப்பீர்கள்.” என்றார்.
OROP என்றால் One Rank One Pension. இந்திய இராணுவ வீரர்களின் 42 ஆண்டுகால கோரிக்கை அது. இராணுவத்தில் ஒரே ரேங்க்கில் இருந்தாலும் அவர்களின் கிரேடு சார்ந்தும், துறை சார்ந்தும் வெவ்வேறு பென்ஷன்கள் கொடுக்கப்பட்டு வந்தன. பெரும் ஏற்றத்தாழ்வுகளும், முரண்பாடுகளும் கொண்டதாயிருந்தது. பணி ஓய்வு பெறும்போது ஒரு இராணுவ வீரர் எந்த ரேங்க்கில் இருந்தாரோ அதற்குரிய பென்ஷன் ஒன்றுபோல் வழங்க வேண்டும் என அவர்கள் காலம் காலமாய் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
அதுவரை இருந்த எந்த பிரதமரையும் விட இராணுவ வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாய் மோடி தன்னைக் காட்டிக் கொண்டார். தன் தேர்தல் பிரச்சாரங்களில், இராணுவ வீரர்களை இதுவரை இருந்த அரசுகள் மதிக்கவில்லை, போற்றிப் பாதுகாக்கத் தவறி விட்டன என குறை சொல்ல ஆரம்பித்தார். அதற்கு அவர் கையிலெடுத்ததுதான் OROP.
உலகின் சர்வாதிகாரிகள் அனைவருமே மற்ற எவரைவும் விட இப்படித்தான் தங்கள் இராணுவ வீரர்களை போற்றி வந்தனர். அதன் அடிநாதம் வேறு. சர்வாதிகாரிகளுக்கு நிலமே தேசம். மக்கள் அல்ல. குடும்பம், சொந்தம் எல்லாவற்றையும் விட்டு எல்லைகளில் நின்று நிலத்தைக் காப்பவர்களை கொண்டாடுவார்கள். தங்கள் நலன்களைப் பொருட்படுத்தாமல் தேசத்தின் பிரச்சினைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை இராணுவ வீரர்களின் தியாகங்கள் வழியாக நாளும் மக்களுக்கு உணர்த்தப்படும். தேசத்தின் மீது மக்களுக்கு ஒரு பக்தியை ஏற்படுத்துவதும், அதை மேலும் தேசீய வெறியூட்ட முயற்சிப்பதுமே பாசிஸ்டுகளின் முக்கிய இலக்கணமாயிருக்கிறது.
நிஜத்தில் அவர்களுக்கு இராணுவமே முக்கியமானது. இராணுவ வீரர்கள் என்னும் மனிதர்கள் முக்கியமில்லை. காலம் இதனை தெளிவுபட உணர்த்தியும் உலகம் முழுமையாக இன்னும் அறியாமலேயே இருக்கிறது.
2014 மே மாதம் மோடி பிரதமர் ஆனார். இராணுவ வீரர்களின் சேவையை வழக்கம்போல் பாராட்டிக்கொண்டு இருந்தாரே ஒழிய, OROP-குறித்து வாயைத் திறக்கவில்லை. ஓய்வு பெற்ற இராணுவர் வீரர்கள் தொடர்ந்து அரசிடம் கேட்கத் தொடங்கவும், 2014 தீபாவளிக்குள் அமல்படுத்தப்படும் என இராணுவ அமைச்சர் பாரிக்கர் உறுதியளித்தார். மோடியிடமிருந்து நல்ல செய்திக்காக பாலைவனத்திலும், பனிமலைகளிலும் இராணுவ வீரர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
ஏமாற்றங்களுக்கு ஆளான முன்னாள் இராணுவ வீரர்கள் கோபம் கொண்டு போராட்டங்களுக்கு அழைப்பு விட ஆரம்பித்தனர். பிரதமராகி ஒரு வருடம் கழித்து 2015 மே 30ம் தேதி மோடி, “நிச்சயம் OROP அமல்படுத்துவோம். அது குறித்து வரையறுக்க வேண்டியிருக்கிறது” என வாயைத் திறந்தார். மே 31ம் தேதி மான் கீ பாத்தில், முன்னாள் இராணுவ வீரர்கள் பொறுமையாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
காலதாமதம் செய்யப்படுவதையும், தங்கள் பிரச்சினைக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையும் உணர்ந்து ஜூன் 15ம் தேதி முன்னாள் இராணுவ விரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ‘இதுதான் இராணுவ வீரர்களைத் தாங்கள் நடத்தும் விதமா, இதுதான் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தாங்கள் தரும் மரியாதையா?” என ஜனாதிபதிக்கு கடிதங்கள் எழுதினர்.
2015 சுதந்திரதினத்திற்கு முந்திய நாள் முன்னாள் இராணுவத்தினர், இறந்த இராணுவத்தினரின் மனைவி மக்கள் எல்லாம் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு OROP கேட்டு, கோரிக்கை அட்டைகள் சுமந்து அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸ் அவர்களை வலுக்கட்டாயமாக தரையோடு இழுத்து விரட்டியடித்தனர். தேசத்தை பாதுகாத்தவர்கள் தேசத்தின் தலைநகர் வீதிகளில் பரிதாபமாக நிலைகுலைந்து போனார்கள். அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாம் கொதிக்கவும், ’பாதுகாப்பு கருதி’ அப்படியொரு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது.
அடுத்த நாள், செங்கோட்டையில் நின்று சுதந்திர தின விழாவில் மோடி, நாட்டிற்கு அற்புதங்களைக் கொண்டு வரப்போவதாக மணிக்கணக்கில் நீட்டி முழக்கி விட்டு இறுதியில், இராணுவத்தினரையும், அவர்களது சேவையையும் தான் பெரிதும் மதிப்பதாகச் சொல்லி, OROP-ஐ கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டதாகவும், விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்லி பறந்து விட்டார்.
இராணுவத்தினர் மீது மோடி அரசின் போலீஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், OROP ஐ மேலும் காலதாமதம் செய்யாமல் அமல்படுத்த வலியுறுத்தியும் முன்னாள் இராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தரில் 2015 ஆகஸ்ட் 17 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்கள். பீகார் தேர்தலில் பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.
2015 செப்டம்பரில், மத்திய அரசு OROP குறித்த பணிகள் முடிந்துவிட்டதாகவும் அமல் செய்யப் போவதாகவும் திரும்பவும் அறிவித்தது. ஆனால் அமல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. 2015 தீபாவளி தங்கள் குடும்பத்தினருக்கு கருப்பு தினம் என முன்னாள் இராணுவத்தினர் அறிவித்தனர். இறுதியாக 2016 பிப்ரவரியில் OROP அமல் செய்யப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இருந்தன. ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் கமிஷன் படி உயர்த்தப்பட்ட தொகையும், அதற்குரிய அரியர்ஸும் தரப்படவில்லை. அதை சரிசெய்ய முன்னாள் இராணுவத்தினர் திரும்பவும் போராட வேண்டி இருந்தது.
மோடியோ, OROP ஐ மத்திய அரசு அமல்படுத்தி விட்டதாகவும் 2016 தீபாவளியை இராணுவத்தினரோடு கொண்டாட இருப்பதாகவும் அறிவித்தார். அக்டோபர் 29ம் தேதி இமாச்சலப்பிரதேசத்தில், இந்திய திபெத் எல்லையில் இராணுவ வீரர்களுக்கு சுவீட்களை ஊட்டியவாறு போட்டோக்களில் காட்சியளித்தார்.
சரியாக அடுத்தநாள் அக்டோபர் 30ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் இராணுவ மந்திரியை சந்தித்து, இன்னும் தீர்க்கப்படாத தங்கள் பிரச்சினையை முறையிட சில முன்னாள் இராணுவத்தினர் சென்றனர். அவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த 70 வயதான ராம்கிஷ்ண கிரேவாலும் ஒருவர். 28 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு 2004ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். தன் கிராமத்தில் பல சமூக சேவைகளையும் செய்து வந்தவர். அதற்காக சங்கர் தயாள் ஷர்மா விருதினையும் பெற்றிருந்தார்.
இராணுவ மந்திரியை சந்திக்க முடியாமல் அவர்கள் திரும்ப வேண்டி இருந்தது. ராமர் பெயரைக் கொண்டிருந்த அந்த முன்னாள் இராணுவ வீரர் மிகுந்த மன வேதனையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். ”துணிவும் வலுவும் கொண்ட ஒரு மனிதரை இந்த அரசு நொறுக்கிவிட்டது” என சக இராணுவ வீரர் கலங்கி நின்றார். மோடிக்கும் அவரது அரசுக்கும் ராம்கிஷ்ன கிரேவாலின் மரணம் ஒரு பொருட்டல்ல. செய்தியுமல்ல.
ஹரியானாவைச் சேர்ந்த எல்லைக் காவல் படை வீரர் தேஜ் பஹதூரும் அதுபோலவே மோடியை நம்பி ஏமாந்து போயிருந்தார். 1996ல் இராணுவத்தில் சேர்ந்திருந்தவர், மோடியின் ஆட்சியில் இராணுவத்திற்குள் நடந்து வந்த ஊழல்கள் ஒழிக்கப்படும், இராணுவ வீரர்களுக்கு நல்ல உணவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை.
2017 ஜனவரி மாதத்தில் இராணுவத்தில் நடந்து வரும் ஊழல்களை வெளியே சொல்ல ஆரம்பித்தார். இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மோசமான உணவையும், நல்ல உணவுக்கான பொருட்கள் இராணுவ அதிகாரிகளால் வெளியே விற்கப்படுவதையும் வீடியோவில் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ பிரபலமாகி பெரும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. இராணுவத்தின் மீது பிரதம மோடி வைத்திருக்கும் மரியாதைக்கு பங்கம் அல்லவா அது? பிரதம மந்திரியின் அலுவலகத்திலிருந்து உயர் இராணுவ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு அதுகுறித்து தேஜ் பஹதூரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின் விபரங்கள் வெளியாகவில்லை.
சில மாதங்கள் கழித்து தேஜ் பஹதூரிடமிருந்து இன்னொரு வீடியோ வெளியிடப்பட்டது. விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் கடுமையான மன உளைச்சல் தருவதாகவும், அவரது மொபைலை அபகரித்து, அதில் மோசடிகள் செய்து, தேஜ்பஹதூருக்கு பாகிஸ்தானில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று அவதூறு செய்வதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார். “ஊழலை வெளிப்படுத்தினால் இதுதான் ஒரு ஜவானுக்கு திரும்பக் கிடைக்குமா என பிரதமரிடம் கேளுங்கள்” என நாட்டு மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.
அவரது குரல் எடுபடவில்லை. இராணுவத்திலிருந்து தானாக ஓய்வு பெறுவதற்கு ( VRS) அரை மணி நேரத்துக்கு முன்பு சிறையிலடைக்கப்பட்டு, எந்த நியதியும் இல்லாமல் உள்ளூர் போலீஸால் விசாரிக்கப்பட்டார். இராணுவத்தில் ஒழுங்கை கடைப்பிடிக்கவில்லை என்றும், யூனிபார்மில் இருக்கும்போது மொபைல் போன் உபயோகித்தார் என்றும், அவரது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அறிவித்து இராணுவத்திலிருந்து எந்தவித விளக்கமும் கேட்கப்படாமல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ‘இராணுவ ரகசியம்’, ‘இராணுவ ஒழுங்கு’ என்றால் சாதாரணமா?
தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தேஜ் பஹதூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் பார்த்தார். அங்கும் ஏமாற்றமடைந்தார். 2019 ஜனவரி மாதம் 18ம் தேதி, தேஜ் பஹதூரின் மகன் ரோஹித் மரணமடைந்தார். “ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாக டெலிபோன் வந்தது. அவரது வீட்டிற்கு சென்று பார்த்தோம். உள்ளே பூட்டப்பட்ட அறையில் தலையில் சுடப்பட்டு ரோஹித் இறந்திருந்தான். அருகில் பிஸ்டல் கிடந்தது. தேஜ் பஹதூர் வீட்டில் இல்லை. கும்ப மேளாவுக்குச் சென்றிருந்தார்” என போலீஸ் தரப்பு செய்தி வெளியானது. தேஜ் பஹதூரிடமிருந்து எந்த தகவலும் அது குறித்து இல்லை.
2019 பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் நிற்கப் போவதாக தேஜ் பஹதூர் முடிவெடுத்தார். 2014 தேர்தலின் போது ஹரியானாவில் எந்த ரேவரியில் நடந்த கூட்டத்தில் நின்று மோடி இராணுவ வீரர்களை போற்றி பேசினாரோ, அதே ரேவரியில் நின்றுதான் 2019 மார்ச் 31ம் தேதி அந்த அறிவிப்பை தேஜ் பஹதூரும் வெளியிட்டார்.
சுயேச்சையாக தேர்தலில் நிற்கத் துணிந்தவரை ஆதரித்து சமாஜ்வாடி கட்சி ஆதரித்தது. தங்கள் கட்சி சார்பில் நிறுத்தப் போவதாக அறிவித்தது. அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தேவையான விபரங்கள் இல்லையென சொல்லப்பட்டது. அதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அலகாபாத் நீதிமன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து ’தனது வேட்பு மனு தவறாக நிராகரிக்கப்பட்டது, மோடியின் வெற்றி செல்லாது’ உச்ச நிதிமன்றத்திஉல் வழக்குத் தொடுத்தார். அங்கும் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு 2020 நவம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு தேஜ் பஹதூர் குறித்த தகவல்களும் இல்லை. மக்களின் நினைவுகளில் அவர்கள் இப்போது இருக்க மாட்டார்கள்தான்.
ராம்கிஷ்ன கிரேவாலையும் தேஜ் பஹதூரையும் தேசமும், மக்களும் மறந்து விடக் கூடாது. ‘ஜெய் ஜவான்’ என இனி முழக்கங்கள் எழும் பொதெல்லாம் அந்த இராணுவ வீரர்களின் நினைவுகள் வந்தால் தேசம் பிழைத்துக் கொள்ளும். உண்மையான எதிரிகள் யார் என்பதை அந்த இரண்டு இராணுவ வீரர்களும் தேசத்திற்கு காட்டி இருக்கிறார்கள்.
(இத்துடன் இந்த தொடரை இந்த வலைத்தளத்தில் நிறுத்திக் கொள்கிறோம். மேலும் சில அத்தியாயங்களோடு சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘பொய் மனிதனின் கதை’ புத்தகமாக வெளியிடப்பட இருக்கிறது.)
References:
Full Text of Shri Narendra Modi’s speech at Ex- Servicemen’s Rally, Rewari : Narendra Modi website
OROP suicide: Who was Subedar Ram Kishan Grewal? : India Today, Nov 3, 2016
BSF jawan Tej Bahadur Yadav, who complained of bad food in camps, dismissed : Hindustan Times, Apr 26, 2017
‘Bad food’ video: NIA probed BSF man for ‘foreign contacts,’ found nothing : Indian Express, Feb 1, 2018
“Will Contest Against PM Modi From Varanasi,” Says Sacked BSF Soldier : NDTV, Mar 19, 2021
PM Modi celebrates Diwali with jawans in Sumdo on the Indo-China border : India Today, Oct 30, 2016
Black Independence Day, cry OROP protesters at Jantar Mantar : India Today, Aug 14, 2015
முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 13 – ஜா. மாதவராஜ்
“ஒரு தேசம் பொய்யர்களுக்கு பழக்கப்பட்டு விட்டால்
உண்மையை மீட்டெடுக்க பல தலைமுறைகளாகும்”
– கோர் விடால்
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ஒரு கோவில் பூசாரி கிருஷ்ணர் சிலையை குளிப்பாட்டியபோது அவரின் கை தவறி கீழே விழுந்து கிருஷ்ணரின் கை உடைந்து போய்விட்டது. கிருஷ்ணரின் சிலையை நோயாளியாகப் பாவித்து உடைந்த கைக்குக் கட்டுப் போட்டு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு பூசாரி சென்றார். டாக்டர்கள் முதலில் மறுத்தார்கள். பூசாரியும் கூட வந்த காவிச் சங்கிகளும் கடுமையாகப் வற்புறுத்த வேறு வழி தெரியாமல் டாக்டர்கள் அந்த கிருஷ்ணர் சிலையோடு கையை சேர்த்து வைத்து கட்டுப் போட்டார்கள். சென்ற நவம்பர் மாதம் 20ம் தேதி பத்திரிகை செய்தி இது.
உண்மையில் டாக்டர் என்ன செய்திருக்க வேண்டும். உடைந்த கிருஷ்ணர் சிலையை விட்டு விட்டு அந்த பூசாரிக்குத்தான் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். டாக்டர் அப்படி அறிவு பூர்வமாக செயல்பட்டிருந்தால் அவருக்கு சிகிச்சையளிக்கும் நிலை வந்திருக்கும். சமகால சமூகத்தின் ஒரு பகுதி மக்கள் அப்படி வெறிகொண்ட மனநிலைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.
இங்குதான் ராமர் பிறந்தார் என இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து தேசம் முழுவதும் ரதயாத்திரை செய்தார்கள். நானூறு ஆண்டு கால மசூதியை இடித்தார்கள். வரலாறு, ஆதாரங்கள் இல்லாமல் நம்பிக்கைகளை வைத்து நாட்டின் உச்சநீதி மன்றமே தீர்ப்பு எழுதிவிட்டது. பாவம் அந்த டாக்டர் வேறென்ன செய்வார்?
இந்த நாட்டின் பிரதமரே விநாயகருக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி பேசும்போது, அந்த கிருஷ்ணர் கோவில் பூசாரிதான் என்ன செய்வார்?
“கணேஷ் என்னும் கடவுளை நாம் எல்லோரும் வணங்குகிறோம். யானையின் தலையும் மனிதனின் உடலும் கொண்ட அந்தக் கடவுள் மூலம் நம் முன்னோர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே அறுவை சிகிச்சை தெரிந்தவர்களாய் இருந்திருக்கிறார்கள்.”
2014 அக்டோபர் 25ம் தேதி மும்பையில் ரிலையன்ஸ் ஆஸ்பத்திரியில் நடந்த முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதுதான் இது. தேசத்தின் முக்கிய மருத்துவர்கள், அத்துறை சார்ந்த விஞ்ஞானிகள், அமிதாப்பச்சன், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் எல்லாம் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். பல்வேறு மதங்களும், நம்பிக்கைகளும் நிறைந்த 130 கோடி மக்களின் பிரதமராக மோடி பதவியேற்று அப்போது சில மாதங்களே ஆகி இருந்தன.
அத்தோடு மோடி நிற்கவில்லை. மேலும் தொடர்ந்தார். “மகாபாரதத்தில் கர்ணனை அவனது தாய் கர்ப்பம் தரித்து பெற்றெடுக்கவில்லை. இன்றைய மரபணு ஆராய்ச்சிகளை அன்றே நம் மூதாதையர்கள் அறிந்திருந்தார்கள்.”
“இன்றைய ஆகாய விமானம், ராக்கெட் எல்லாவற்றுக்கும் நம் நாடுதான் முன்னோடி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவை நம் நாட்டில் புழக்கத்திலிருந்தன.”
புராணங்கள் எல்லாவற்றையும் உண்மை போலும் சித்தரித்து மோடி பேசினார். மக்களை முட்டாள்களாக பாவிப்பதும், முட்டாள்களாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் அவரது நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவாவையும், மதவெறியையும் தீவிரமாக பரப்பும் அமைப்பைச் சேர்ந்தவர் மோடி என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால் தெளிவாகப் புரியும். அவரது வார்த்தைகளில் ஏவிவிடப்படும் ஆபத்துக்கள் தெரிய வரும்.
அன்றைக்கு அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியாவின் புகழ்பெற்ற டாக்டர்களும் விஞ்ஞானிகளும் கிருஷ்ணர் சிலைக்கு சிகிச்சை அளித்த அந்த டாக்டர் போல வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தனர். மோடியின் பேச்சு குறித்த பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் மீதும் மேலோட்டமான விவாதங்களே எழுந்தன. பிஜேபியின் தகவல் தொடர்பு குழுவைச் சேர்ந்தவர்களே மிக வேகமாக களத்தில் இறங்கி இருந்தார்கள்.
இயேசு கடலின் மீது நடந்தார் என்றால் நம்புவார்கள். மோடி சொன்னதை ஏன் நம்பக் கூடாது” என்றார் ஒருவர்.
யார் நம்பினார்கள்? அப்படி நம்புவதை யார் சரி என்று சொன்னார்கள்? அறிவியலுக்கு முரணான கருத்துக்களை எந்த மதமும், அமைப்பும், மனிதரும் பேசினாலும், பரப்பினாலும் அதை தவறு என சுட்டிக்காட்டி சரிசெய்ய வேண்டியது ஒரு அரசின் கடமை. இங்கு ஒரு அரசே அந்த தவறை அப்பட்டமாக செய்கிறது.
“இன்றைய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முந்திய விஞ்ஞானிகளாய் நமது ஆன்மீகவாதிகளும், ஞானிகளும் வாழ்ந்த நாடு இது. இப்படிப் பேசுவதற்கு மோடி போல ஒரு பிரதமர் வேண்டியிருக்கிறது” என பெருமிதம் கொண்டார் இன்னொருவர்.
ஆன்மீகத் தலைவர்களையும் ஞானிகளையும் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களை மதிப்பது வேறு. அறிவியலுக்குப் புறம்பான அவர்களது கருத்துக்களை ஒட்டுமொத்த சமூகத்தையும் ஏற்றுக்கொள்ள திணிப்பது வேறு. அதிகாரத்தின் பேரில் புராணங்களில் வரும் கற்பனைகளையும், கட்டுக்கதைளையும் உண்மைகள் என சித்தரிப்பது பெரிய மோசடி.
மோடியே அப்படியெல்லாம் பேசியதும், தலைவன் எவ்வழியோ அவ்வழி தம் வழியென பிஜேபியினரும், இந்துத்துவா அறிவு ஜீவிகளும் வரிசை கட்டி பொய்களை அவிழ்த்துவிட்டார்கள்.
ஒன்றிய அரசின் அமைச்சர் பியூஸ் கோயல் ஜி.டி.பி ((GDP) குறித்து விவரிக்கும்போது, “கணக்குகள், புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஜி.டி.பியை அணுகாதீர்கள். புவியீர்ப்பு விசை குறித்து கண்டறிவதற்கு ஐன்ஸ்டீனுக்கு அவர் படித்த கணிதம் எல்லாம் உதவவில்லை. ஏற்கனவே இருக்கும் விதிகள் மூலம் அணுகினால் புதியவை எதையும் கண்டுபிடிக்க முடியாது.” என்று தன் அறிவை வெளிப்படுத்தினார். புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் நியூட்டன் என ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அறிவான். பேரை தவறுதலாகச் சொன்னதைக் கூட விட்டு விடலாம்.
ஏற்கனவே இருக்கும் ஒன்றிலிருந்துதான் இன்னொன்று உருவாக முடியும். வெற்றிடத்திலிருந்து எதுவும் உருவாக முடியாது. இதுதான் விஞ்ஞானம். அதுபோல கற்ற கல்வியிலிருந்துதான், பெற்ற அறிவிலிருந்துதான் புதியன கண்டுபிடிக்க முடியும். அப்படி இல்லை என்று மறுப்பது விஞ்ஞானம், கல்வி மீது காட்டும் அலட்சியமே. இத்தனைக்கும் பியூஸ் கோயல் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டட். படிப்பில் அகில இந்திய அளவில் இரண்டாவது ரேங்க் பெற்றவர். யேல், ஆக்ஸ்போர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தலைமைப் பண்பு குறித்து வகுப்பு எடுத்தவர். இந்திய கல்வி முறை மீதே ஐயம் ஏற்படுத்தும் விதமாக அவரது கருத்துகள் இருந்தன.
ஒன்றிய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் குறித்து முதன் முதலாக கண்டறிந்தவர் பிரணவ் என்னும் ரிஷி” என்ற அறிவியல் உலகம் அறியாத தகவலைச் சொன்னார். அவர் ஒரு எம்.ஏ பட்டதாரி. கவிதையெல்லாம் எழுதி இருந்தார். கொஞ்சநாள் ‘டாக்டர்’ என்றும் கூட பேருக்கு முன்னால் போட்டு இருந்தார்.
“மகாபாரதம் காலத்திலேயே இண்டர்நெட் வசதிகள் இருந்தன. கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு போர்க்களக் காட்சிகளை சஞ்சயன் அதன் மூலம்தான் விவரித்தான்” என்றார் திரிபுரா முதலமைச்சர்.
இராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர், “பசுக்கள் மிகவும் புனிதமானவை. ஆக்ஸிஜனை உள்ளிழுத்து ஆகிஸிஜனையே வெளியிடும் ஒரே உயிரினம் பூமியில் பசுதான்” என்றார்.
இந்திய அறிவியல் கழகத்தின் 102 வது மாநாட்டில் விமானம் ஓட்ட பயிற்சியளிக்கும் அகாதமியைச் சேர்ந்த கேப்டன் ஆனந்த் போடாஸ் என்பவர், “பூமியில் மட்டுமல்ல, கிரகங்களுக்கு இடையேயும் பறந்த விமானங்கள் எல்லாம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் இருந்தன” என்று ஒரே போடாக போட்டார்.
இந்திய அறிவியல் கழகத்தின் 105வது மாநாட்டில் ஒன்றிய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “ஐன்ஸ்டீனின் சார்பு கோட்பாட்டு விதியை (Theory of relativity) தோற்கடிக்கும் விதியொன்று வேதங்களில் இருப்பதாக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார்” என்று வாய்க்கு வந்தபடி பேசினார்.
இந்திய அறிவியல் கழகத்தின் 106வது மாநாட்டில் உரையாற்றிய ஆந்திரா பலகலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வரராவ், “கௌரவர்கள் 100 பேரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். அப்போதே சோதனைக் குழாய் மூலம் கர்ப்பம் தரிக்கும் மருத்துவமுறை இருந்திருக்கிறது” என்றார். மேலும் “எதிரிகளை தாக்கி அழித்துவிட்டு மீண்டும் நம்மிடமே வந்து சேரும் ஆயுதங்கள் இருந்திருக்கின்றன. விஷ்ணு சக்கரம் அப்படியானதுதான்” என்று குறிப்பிட்டார்.
அதே அறிவியல் கழகத்தின் மாநாட்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் அஷ்னு கோஷ்லே என்பவர், “டைனசர்களை பூமியில் பிரம்மனே படைத்தார். டார்வின் தியரி எல்லாம் கட்டுக்கதை” என்று அளந்து விட்டார்.
மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவரும், எம்.பியுமான பிரக்யா சிங் தாக்கூர், “பசுவின் மூத்திரத்தில் பெண்களின் மார்பகப் புற்று நோயை குணப்படுத்தும் மருந்து உள்ளது” என்றார்.
இராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா, ஆண்மயில் வாழ்நாள் ழுவதும் பிரம்மச்சாரி என்றும் ஆண்மயிலின் கண்ணீரை உட்கொண்டு பெண் மயில்கள் கர்ப்பம் தரிக்கின்றன” என தன் மேதாவிலாசத்தை காட்டினார்.
“யோகா மூலம் சுற்றுப்புற சூழலைக் கட்டுப்படுத்த முடியும்” என மோடியும் அவரது பொய்களை அவிழ்த்து விட்டுக்கொண்டே இருந்தார்.
கடந்த ஐந்தாறு வருடங்களில் மோடியின் தலைமையில், அவரது சகாக்களும், சங்கீகளும் விஞ்ஞானத்தின் மீது ஒரு தொடர் யுத்தமே நிகழ்த்தி உள்ளார்கள்.
இவைகளை வெறும் ஜோக்குகளாகவும், இப்படி பேசுகிறவர்களை முட்டாள்களாகவும் சாதாரணமாக கடந்து விட முடியாது. இந்து மதத்தை விஞ்ஞானமாக்குவதும், விஞ்ஞானத்தையே இந்து மதமாக்குவதும் மோடியின் – அவரது இந்துத்துவா சித்தாந்தத்தின் நோக்கம். அதைத்தான் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதுதான் அந்த பூசாரியை, உடைந்த கிருஷ்ணர் சிலையைத் தூக்கிக் கொண்டு டாக்டரிடம் கொண்டு செல்ல வைத்திருக்கிறது. அறிவியல் உண்மையை பேசவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த அந்த டாக்டரின் இயலாமை ஒட்டு மொத்த சமூகத்துக்கும் நேர்ந்து கொண்டிருக்கிறது.
பள்ளியில் நியூட்டனை, ஐன்ஸ்டினை, அறிவியல் கண்டுபிடிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் நிலைமை என்னவாக இருக்கும். புதுமை குறித்த அவர்களது புரிதல்கள் என்னவாக இருக்கும். ஒரு குழப்பமான மனநிலையில் சிக்கிக் கொள்வார்கள். நவீனத்தை நோக்கி நகர முடியாமல் ஒரு தலைமுறையை மெல்ல மெல்ல முடக்கிப் போடும்.
கடந்த கால மகிமைகளையும், வீண் பெருமைகளையும் பேசிப் பேசி இருட்டுக்குள் மக்களைத் தள்ளுகிறார்கள். நிகழ்காலம், எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அற்ற வெளியில் குருட்டுப் பூனைகளாக்குகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து அரசுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலை மக்களுக்கு உருவாகாமல் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.
அன்றைக்கு அந்த பூசாரி கிருஷ்ணர் சிலைக்கு மருத்துவ சிகிச்சை மட்டும் பெற்று செல்லவில்லை. சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ரசீதையும் பெற்றுச் சென்றிருக்கிறார். அதில் சிகிச்சை அளிக்கப்பட்டவரின் பெயர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரின் நோய் காலியாக விடப்பட்டு இருக்கிறது. அந்த நோய் என்னவென்று எழுதுவதில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது.
முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்
“விதிகள் மிக எளிமையானவை. அவர்கள் பொய் சொல்கிறர்கள். நமக்கு அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் பொய் சொல்வது நமக்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. இருந்தாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நாமும் அவர்களை நம்புவது போல காட்டிக் கொண்டு இருக்கிறோம்”
– எலினா கொரோகோவா
பாவம் திலிப்சிங் மாளவியா. தன்னைப் பற்றி நாட்டின் பிரதமர் பேசுவார் என்றோ, தங்கள் கிராமம் ஒரே நாளில் அவ்வளவு பிரபலம் ஆகுமென்றோ, தன்னைச்சுற்றி அவ்வளவு விவகாரங்கள் நடக்கும் என்றோ கனவிலும் கண்டிருக்க மாட்டார்.
மத்தியப்பிரதேசத்தில் போஜ்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு எளிய கொத்தனார் அவர். ஃபேன், டிவி இல்லாத மிகச் சிறிய வீட்டில் வசித்து வரும் 71 வயது திலிப்சிங்கிற்கு 8 குழந்தைகள். ஐந்து பெண் குழந்தைகளுக்கு எப்படியோ திருமணமாகி விட்டிருந்தது. இன்னும் இரண்டு பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தனர்.
‘சுத்த இந்தியா’ (Clean India – Swachh Bharat) திட்டத்தில், கிராமப்புறங்களில் கழிப்பிட வசதி இல்லாத வீடுகளில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்ட சான்றிதழை அரசிடம் சமர்பித்தால், அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.12000/- செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தேவையான பொருட்களை வாங்கித் தந்தால் போஜ்புரா கிராமத்தில் கழிப்பிடம் கட்டித்தருவதாகச் சொன்னார். அரசாங்கத்திடமிருந்து பணம் வந்த பிறகு அதற்குரிய கூலியை தந்தால் போதும் என்று ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் கழிப்பிடங்கள் கட்டி கொடுத்திருந்தார்.

இந்திய வரைபடத்தில் புள்ளியிலும் புள்ளியாய் இருக்கக் கூடிய மிக மிகச் சிறிய அந்த கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு அது. நாட்டின் பிரதமர் மோடிக்கு அது பற்றிய தகவல் சத்தமில்லாமல் போய்ச் சேர்ந்தது. மாதந்தோறும் மக்களிடையே பேசும் ‘மனதின் குரல்’ (மான் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் 2015 டிசம்பர் 27ம் தேதியன்று மோடி திலிப்சிங் பற்றி குறிப்பிட்டார்.
“மத்தியப் பிரதேசத்தில் போஜ்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த திலிப் சிங் மாளவியா ஒரு கொத்தனார். அவருக்கு உயர்ந்த நோக்கம் இருந்தது. தனது கிராமத்தில் கட்டுமானப் பொருட்களை யாரேனும் தந்தால் அவர்களுக்கு இலவசமாக நான் கழிப்பிடம் கட்டித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். 90 நாட்களில் 100 கழிப்பிடங்களை அந்தக் கிராமத்தில் கட்டிக் கொடுத்து இருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு சில நேரங்களில் தேசம் குறித்து எதிர்மறையான பார்வைகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான திலிப்சிங்குகள் இப்படி தங்கள் சொந்த வழியில் தேசத்துக்கு நல்லது செய்துகொண்டு இருக்கிறார்கள். தேசத்தின் பலமும், நம்பிக்கையும் அவர்களே. அது போன்ற முயற்சிகளே வளர்ச்சிப்பாதையில் தேசத்தை இயல்பாக செலுத்தி விடுகின்றன. எனவே இந்த ‘மான் கீ பாத்’தில் திலிப் சிங்கை நாம் பெருமையோடு நினைவுகூர்வோம்”
போஜ்புரா கிராமம் உடனடியாக தேசத்திற்கு தெரிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு ஒருமுறை மான் ஒன்றை நாயொன்று கடித்துக் குதறிய போதும் அந்த கிராமம் பத்திரிகைகளில் செய்தியாகி இருந்தது.
இந்தியாவின் பிரதமரே தன் பெயரைக் குறிப்பிட்டது திலிப்சிங்கிற்கு சந்தோஷமாக இருந்தாலும், அந்த எளிய மனிதர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தார். உயர்ந்த இடத்தில் இருக்கும் பிரதமர் என்ன பேசி இருக்க வேண்டும்? ‘தன் கூலியைக் கூட பின்னர் பெற்றுக்கொள்கிறேன் என திலிப்சிங் கழிப்பிடங்கள் கட்டித் தந்திருக்கிறார். கிளீன் இந்தியா திட்டத்தின் படி, புதிதாக கட்டப்பட்ட அந்த கழிப்பிடங்களுக்குரிய பணம், உரியவர்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படும். திலிப்சிங் தனது நியாயமான கூலியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்’ என்பதுதானே நேர்மறையான சிந்தனையாக இருக்க முடியும்?
நாளைய தினம் எப்படி இருக்கும் எனத் தெரியாமல் இருண்டிருக்கும் தங்கள் காலத்திற்குள் இந்த தேசத்தின் கோடானு கோடி எளிய மனிதர்கள் ஒரு சிறு வெளிச்சத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திலிப்சிங் மாளவியா. தேசம், தியாகம், வளர்ச்சி, போன்ற பெரிய பெரிய வார்த்தைகளால் அவரது நம்பிக்கையைப் பிடுங்கிப் போட்டிருந்தார் மோடி.
அந்த கிராமம் பற்றி ஊடகங்களில் அடுத்தடுத்து செய்திகள் வர ஆரம்பித்தன. ‘போஜ்புராவில் மொத்தமே 53 வீடுகளே இருக்கின்றன. எப்படி 100 கழிப்பிடங்கள் கட்டியிருக்க முடியும்? என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.கே.மிஸ்ரா கேட்டார். “திலிப்சிங் இலவசமாக கழிப்பிடங்கள் கட்டிக்கொடுத்தார் என்றால் கிளீன் இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்னவாயிற்று?’ என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஊடகங்களும் பேச ஆரம்பித்தன.
மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ்சிங் சவுகான், “மான் கீ பாத்’ நிகழ்ச்சியை அரசியலாக்குவது காங்கிரஸின் விரக்தியைக் காட்டுகிறது என்று கிண்டலடித்து ஒரு ட்வீட் செய்தார். “மக்களோடு அரசை இணைத்துக் கொள்ளும் மான் கீ பாத் நிகழ்ச்சியில் நம் மக்களை பாராட்டியும் உற்சாகப்படுத்தியும் பிரதமர் பேசி இருக்கிறார். அது குறித்தெல்லாம் கேள்விகள் எழுப்புவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை’ என அங்கலாய்த்து இன்னொரு ட்வீட் செய்தார்.
மத்தியப்பிரதேசத்தின் கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராயிருந்த கோபால் பார்கவா, போஜ்புராவிவில் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டார். திலிப்சிங்கின் உழைப்புக்கான கூலி குறித்து யாரும் பேசவில்லை. ஆய்வு நடத்தவில்லை. இன்றுவரை கொடுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.
தன்னிடம் கேள்விகள் கேட்ட நிருபர்களிடம், அந்த ஊரில் 23 கழிப்பிடங்களை கட்டியதாகவும், பக்கத்து கிராமங்களில் 20லிருந்து 25 கழிப்பிடங்கள் போலக் கட்டியதாகவும் திலிப்சிங் கூறினார்.
மாளவியாவின் கதை ‘சுத்த இந்தியா’வின் தோல்வியைக் காட்டுகிறது. மக்களின் இயக்கம் என்பது மக்களின் தலையில் கை வைப்பது அல்ல. மக்களையே முழுப் பொறுப்பாக்கி விட்டு அரசு வேடிக்கை பார்ப்பதும் அல்ல.
தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்ததில் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் கட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட நாலரை லட்சம் கழிப்பிடங்கள் காணாமல் போயிருந்தன. தேசம் முழுவதும் எத்தனை கோடி கழிப்பிடங்களுக்கு இந்த கதி நேர்ந்திருக்கும் என்று கணக்கிட்டால் ‘சுத்த இந்தியா’வின் லட்சணம் தெரியும். மோடி பிரதமரானதும் உதிர்த்த ‘சுத்த’ பொய் அது. கங்கைக்கரையிலிருந்து அந்தக் கதை ஆரம்பித்தது.

2014 மே 16 அன்று பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மோடி தலைமையில் பிஜேபி வெற்றி பெற்றது. அடுத்த நாள் மே 17 அன்று வக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி சென்றார். இந்துக்களின் புனித இடத்திலிருந்து தனது ஆட்சி தொடங்குகிறது என்பதற்கான குறியீடு அது. “கங்கைத்தாய் தன்னிடம் படிந்திருக்கும் அசுத்தங்களை போக்குவதற்கு ஒருவரை எதிர்பார்த்து இருந்தது. அந்தப் பணிக்கு என்னை தேர்ந்தெடுத்து இருக்கிறது” என இந்துக்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
கங்கையை சுத்தம் செய்யப் போகிறேன் என இருபதாயிரம் கோடி செலவில் ‘நமாமி கங்கா’ என்னும் திட்டத்தை 2014 ஜூனில் அறிவித்தார். அத்தோடு நிற்கவில்லை. 2014 அக்டோபர் 2ம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாளில், கையில் விளக்குமாறோடு டெல்லியில் காட்சி கொடுத்து ‘நாட்டையே சுத்தம் செய்யப் போகிறேன்’ என ‘சுத்த இந்தியா’ திட்டத்தை மோடி அறிவித்தார். நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். முக்கிய பிரபலங்களையெல்லாம் ‘சுத்தமான இந்தியாவின்’தூதர்களாய் நியமித்து தன்னை மேலும் பிரபலமாக்கிக் கொண்டார். ‘இப்படி ஒருவரைத்தான் நாடு இத்தனை காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது’ என ஊடகங்கள் வானுக்கும் பூமிக்கும் குதித்தன.
என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் திட்டமும் அரசிடம் இல்லை. ஆலைகளின் கழிவு, நதிகளின் அசுத்தம், மாசுக்கட்டுப்பாடு, சாலை வசதிகள், எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் என ஏராளமான மிக முக்கிய பிரச்சினைகளோடு பின்னிப் பிணைந்ததுதான் ‘சுத்த இந்தியா’. அப்படி எந்த பார்வையும் அரசிடம் இருந்ததாகத் தெரியவில்லை. குடித்து முடித்த வெற்று கோக் பாட்டில்களை என்ன செய்யப் போகிறோம்?’ என்னும் சிறிய யோசனை கூட இல்லை. ஆனால் அதுவே பெரிய பிரச்சினை என்பதுதான் கள நிலவரம். மோடி அறிவித்த‘கிளின் இந்தியா’வின் தலை எழுத்தே சரியில்லாமல் இருந்தது.
பிறகு கொஞ்சம் யோசித்து ‘சுத்த இந்தியா’ என்பது தொடர்ச்சியான கடைப்பிடிக்க வேண்டிய இயக்கம் என்பதையும், அதன் முதற்கட்டமாக அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ‘திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலைமையை’ அடியோடு ஒழிக்கப் போவதாகவும் அறிவித்தார்.
அதுகுறித்தும் தெளிவு இல்லவே இல்லை. எல்லா வீடுகளிலும் கழிப்பிடங்கள் கட்ட வேண்டுமென்றால், முதலில் எல்லோருக்கும் வீடுகள் இருக்கின்றனவா? இருக்கும் வீடுகளுக்கு தண்ணீர் வசதி இருக்கிறதா? கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வெளியேற என்ன வசதி? என்னும் அடிப்படை விஷயங்கள் குறித்து யோசனையும் அக்கறையும் இல்லை. வெற்றுச் சவடால்களாகவும் கூப்பாடுகளாகவுமே இருந்தன.
திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை. அதிலும் கணிசமானத் தொகை விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்பட்டது. மிஞ்சியது கிராமப்புறப் பகுதிகளில் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது.

ஒருபுறம் தேசத்தின் சொத்துக்களையும், வளங்களையும் தங்கள் இஷ்டத்திற்கு அம்பானிகளும் அதானிகளும் கபளிகரம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இன்னொரு புறம் செய்த வேலைக்கு உரிய கூலியைக் கொடுக்காமல் திலிப் சிங் மாளவியாவை புலம்ப வைத்தார்கள். இரண்டையும் இணைத்துப் பார்த்தால் அங்கே ‘சுத்த இந்தியா’ மட்டுமல்ல, ‘மோடியின் இந்தியா’வும் தெரியும். 2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மோடி வாய் கிழிய அறிவித்த திட்டங்கள் குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டன.
கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 20,000 கோடியில் 2017 வரை மூன்று ஆண்டுகளில் 8.52 சதவீதமான தொகையே அரசு வழங்கி இருந்தது. ஆனால் கங்கையின் ஒரு சொட்டு நீர் கூட சுத்தம் செய்யப்படவில்லை என்று பத்திரிகையாளர் கவிஷ் கோலியும் நீரஜ் மஜும்தாரும் எழுதினார்கள். ஏன் கங்கையை சுத்தம் செய்ய முடியவில்லை என கவலையோடு சமூக ஆர்வலர்கள் பலரும் ஆய்வுகள் நடத்தி எழுதி வருகின்றனர். தன்னை சுத்தம் செய்ய வந்த மகனின் பொய்யையும் ஒரு குப்பையாக சுமந்தவாறு அந்த கங்கைத் தாய் ஓடிக்கொண்டு இருக்கிறாள்.

திலிப்சிங் மாளவியாவின் துயரத்தையும் உள்ளடக்கியவாறு வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டித் தந்து ‘திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டமும்’ நாடு முழுவதும் பெரும் தோல்விடைந்து போனது. உலக சுகாதார அமைப்பு இன்னும் கிராமப்புற இந்தியாவில் 70 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக 2018 இறுதியில் தெரிவித்தது.2019 செப்டம்பர் 30ம் தேதி விடிகாலையில் மத்தியப்பிரதேசத்தின் சிவபுரி கிராமத்தில் ரோஷினி, அவினாஷ் என்னும் இரண்டு தலித் குழந்தைகள் இரக்கமில்லாமல் அடித்து கொல்லப்பட்டார்கள் யாதவர்கள் குடியிருப்புகளின் அருகே அவர்கள் திறந்தவெளியில் மலம் கழித்தார்கள் என்பதுதான் இரண்டு கொலைகளுக்கும் காரணமாயிருந்தது.

“எங்களுக்கு எப்போதுமே கழிப்பிடம் என ஒன்று இருந்ததில்லை” என்று அழுகிறார் அவினாஷின் தந்தை மனோஜ்.
“கட்டப்பட்டு இருக்கும் கழிப்பறைக்கு தண்ணீர் வசதியே கிடையாது. தண்ணீருக்கு நாங்கள் வெகுதூரம் போக வேண்டும். எனவே நாங்கள் வெளியேதான் மலம் கழிக்கிறோம்” என்கிறார் இன்னொருவர். தேசமே அந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தது.
அதற்கு இரண்டுநாள் கழித்து மோடியோ, “உலகமே இந்தியாவைப் பார்த்து ஆச்சரியப்படுகிறது. 60 மாதங்களில் 60 கோடி இந்தியர்களுக்கு 11 கோடி கழிப்பிடங்கள் கட்டியிருக்கிறோம். திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலத்திற்கு நாம் முடிவு கட்டி விட்டோம்.” என 2019 அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளில் அவரது ஆசிரமத்தில் நின்று கம்பீரமாக முழங்கிக் கொண்டு இருந்தார். உலகமே அவரது பொய்யைக் கண்டு வாயடைத்துப் போனது.
அடிப்படை வசதிகள் இல்லாத வறுமை, ஜாதீயக் கொடுமைகள் நிறைந்த தேசத்தில் மோடி உண்மைகளைப் பார்க்க வேண்டாம் என கண்களை மூடச் சொல்கிறார். ஆனால் கண்களை மூடினால் மட்டும் அல்ல, திறந்திருந்தாலும் இருட்டாகிக் கொண்டு இருக்கிறதே!
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 11 – ஜா. மாதவராஜ்
“மக்களில் சிலரை எல்லா நேரமும் ஏமாற்றலாம்.
எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம்.
ஆனால் எல்லா மக்களையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது.”
– ஆப்ரஹாம் லிங்கன்
“இளைஞர்கள்தான் இந்த நாட்டின் சக்தி. நான் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உரிய மதிப்பளிப்பேன், அவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்“ என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில், ’வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள்’ என்பதாய் மோடி கைகளை விரித்து அரவணைத்துக் கொள்ள முற்பட்டார். ‘பத்து ஆண்டுகளில் இருபத்தைந்து கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதாக’ தொலை நோக்குப் பார்வையை அச்சடித்து வெளியிட்டது பிஜேபி. நாடு முழுக்க அதைக் கொண்டு போய் சேர்த்தார்கள்.
இந்திய வாக்காளர்கள் 80 கோடி மக்களில், குறிப்பாக 11 கோடி இளைஞர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் அது. அவர்களை குறி வைத்துத்தான் மோடியும், இந்துத்துவ அமைப்புகளும் மிக முக்கியமாக செயல்பட்டனர். பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் , ‘Neo Middle Class’ என புதிதாக அழைத்தனர். ஏழ்மையிலிருந்து விடுபட்டு இன்னும் மத்தியதர வர்க்கமாக நிலை பெறாதவர்கள் என்று வகைப்படுத்தினர். முன்னேறத் துடிப்பவர்கள். படித்திருந்தும் உரிய வேலை கிடைக்காதவர்கள். திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காதவர்கள். விரக்தியடைந்தவர்கள். இவர்களைத்தான் lower middle class என தன் தீவீர ஆதரவாளர்களாக ஹிட்லர் ஜெர்மனியில் தக்க வைத்திருந்தான்.
நவீன தாராளமயக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டதற்கு பின்னர் பிறந்த குழந்தைகளே அந்த இளைஞர்கள். இருபது ஓவர் மேட்ச் காலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். மாற்றங்களை உடனடியாக காணத் துடிப்பவர்கள். நுகர்வுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டவர்கள். வேகமும் துடிப்பும் மிக்கவர்கள். காத்திருக்கும் பொறுமையற்றவர்கள். விரல்நுனியில் உலகை காண்பவர்கள். கறுப்பு வெள்ளை டிவியை பார்க்காதவர்கள். சோவியத் ரஷ்யா குறித்து அறியாதவர்கள். முந்தைய தலைமுறையை ஏமாந்து போனவர்களாகவும், தாங்கள் விழித்துக் கொண்டவர்களாகவும் காட்ட முற்பட்டவர்கள்.
வரலாற்றில் தவறவிடக் கூடாத வாய்ப்பாக 2014 பாராளுமன்ற தேர்தலை மோடி வகையறாக்கள் கருதினர். சகல தந்திரங்களையும் செய்து ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு வெறி கொண்டு செயல்பட்டனர்.
தங்களின் பாதையில் முக்கியத் தடையாக அப்போது ராகுல் காந்தி அவர்களுக்குத் தெரிந்தார். 40 வயதான அவர் தன்னியல்பாக இளைஞர்களைக் கவர முடியும், 63 வயதான மோடிக்கு அது கடும் சவாலாக இருக்கும் என்று கணித்தனர். கொள்கைகள், சித்தாந்தங்கள், செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து தனிநபர்களை முன்னிறுத்தி பேசுவதே அரசியல் எனக் கொண்டவர்கள் வேறென்ன செய்வார்கள்?
கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ராகுலையும், காங்கிரஸையும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவது என்பது அவர்களின் வியூகமாக இருந்தது. 2004ம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தியை தங்களின் ஆபத்தாக கருதி, போகுமிடமெல்லாம் ‘வெளிநாட்டவர்’ என்று முத்திரை குத்திப் பார்த்தவர்கள் அவர்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் இயக்கம் பெரிதாக பேசப்பட்டது. நிர்பயா மீதான கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் கொலையை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டங்கள் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின. ’தலை நகரம் அல்ல. கொலை நகரம்.” என மோடி ஆக்ரோஷமாக தாக்கினார். எல்லாவற்றுக்கும் காங்கிரஸை காரணமாக்கிய காலம் அது. களத்திலிருந்து விலக்கப்பட்டு ராகுல் காந்தி இளைஞர்களின் கவனம் பெற முடியாதவராய் போனார்.
“60 ஆண்டுகள் காங்கிரஸுக்கு கொடுத்தீர்கள். நாட்டையே நாசமக்கி விட்டது. எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள். இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றிக் கண்பிப்பேன். தேசத்தின் வளர்ச்சிதான் முக்கியம். நான் பிரதம மந்திரியாக இருக்கப் போவதில்லை. இந்த தேசத்தைக் காக்கும் காவல்காரனாகவே இருக்க விரும்புகிறேன். வாய்ப்பு கொடுங்கள்.”
நம்பிக்கையான மனிதராகவும், திடமான அரசியல் தலைவராகவும் தன்னை மோடி முன்னிறுத்திக் கொண்டார். விவேகானந்தரைப் பற்றி எப்போதும் பேசினார். விவேகானந்தர் இளைஞர்களை பெரிதும் ஆகர்ஷிக்கிறவராக இருந்தார்.விவேகனந்தரின் உரைகளும் அறைகூவல்களும், இளஞர்களை நோக்கியே இருந்தன. அவரைப் போலவே மோடி தானும் பிரம்மச்சாரி, அவரைப் போலவே தானும் இளைஞர்களை நேசிக்கிறவன் என காட்டிக் கொண்டார்.
மோடியும் இந்துத்துவ சக்திகளும், கார்ப்பரேட்களும் நினைத்தது நடந்தது. மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். மக்களும், இளைஞர்களும் நினைத்ததுதான் நடக்கவில்லை. ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு மோடிக்கு வாக்களித்த இளைஞர்கள் மீண்டும் விரக்தியடைந்து போயிருந்தார்கள். தாங்கள் ஏமாந்து போனது குறித்து பேசினார்கள்.
இராஜஸ்தானில் கஸ்பாபோன்லி என்னும் சிறிய ஊரில் கல்லூரியில் முதுகலைப் படிப்பு முடித்திருந்தார் ராகேஷ்குமார். முப்பத்தொரு வயதாகிறது. வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து கொண்டு இருந்தார். பேண்ட்டில் கலர்ச் சிதறல்களோடு காணப்படும் அவர், “சென்ற முறை மோடிக்கு வாக்களித்தேன். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி தந்தார். நம்பினேன். இனி அவருக்கு வாக்களிக்க மாட்டேன்” என்றார்.
அதே ஊரில், “எனது நண்பர்கள் பலர் படித்து விட்டு வேலை கிடைக்காமல் நகரத்திலிருந்து திரும்பி வந்து விட்டார்கள்” என்றார் டீக்கடை வைத்திருக்கும் பப்லு ஷைனி என்னும் இளைஞர்.
‘பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை’ லாப நோக்கற்ற ஒரு குழுவிற்காக மகாராஷ்டிராவில் வீடு வீடாக பிரச்சாரம் செய்தவர் ஸ்ரீகாந்த் தத்தாத்ரேயா. முப்பது வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு மாதம் ரூ.10000/- வரை கிடைக்கிறது. அவரது அண்ணன் ஆட்டோ ரிக்ஷா ஒட்டுகிறார். அவருக்கு மாதம் 8000 கிடைக்கிறது. இரண்டு பேரின் வருமானத்தில்தான் தத்தாத்ரேயா, அவரது பெற்றோர்கள், அண்ணன், அண்ணி,. அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்கிய குடும்பம் வாழ வேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ரெயில்வேத் தூறையில் அறிவிக்கப்பட்ட 90,000 பணிகளுக்கு 2.8 கோடி பேர் விண்ணபித்து இருந்தார்கள். இந்த ஒரு வரிச் செய்தியில் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டமும், இளைஞர்களின் அவல நிலையும் அப்பட்டமாய் தெரியும்.
ஒவ்வொரு வருடமும் படித்து முடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை பத்து லட்சம். படிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம். அவர்களின் எதிர்காலத்திற்கும் நிரந்தர வருமானத்திற்கும் வழி எதுவும் ஏற்படுத்தவில்லை.
130 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 46.7 கோடி பேர் வேலை பார்ப்பதாகவும், அதில் 50 சதவீதம் சுயதொழில் செய்கிறவர்கள். 33 சதவீதம் அன்றாடம் காய்ச்சிகள். எஞ்சிய 17 சதவீதம் பேரே நிரந்தர வேலையில் இருக்கிறார்கள். ப்ளும்பெர்க் ஆய்வு முடிவுகள் இப்படித்தான் சொல்கின்றன.
கொடுமை என்னவென்றால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாதது மட்டுமல்ல, இருந்த வேலைகளும் ஒழிக்கப்பட்டு இருந்தன. இருக்கும் காலியிடங்களுக்கும் ஆட்கள் எடுப்பதில்லை. சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதத்தைத் தாண்டி இருக்கிறது. இதுவும் சரியான தரவு இல்லை, உண்மை இன்னும் மோசமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வேலை தேடித் தேடியே ஒரு பாதுகாப்பான நிலைக்கு வருவதற்குள் எங்கள் இளமையான காலம் கழிந்து விடும் போலிருக்கிறது என கவலை தெரிவிக்கின்றனர் இந்திய இளைஞர்கள்.
2013 நவம்பரில், “ப.சிதம்பரம் அவர்களே! பொருளாதாரம் மோசமாக இருக்கிறது. இளைஞர்கள் வேலை வேண்டும் என்கிறார்கள். சில்லறை அரசியல்களில் நேரத்தை செலவழிக்காமல் கையிலிருக்கும் வேலையைக் கவனியுங்கள்” என அப்போதைய நிதியமைச்சரைப் பார்த்து கிண்டலாய் பேசிய மோடி இப்போது கார்ப்பரேட்களுக்கு இந்தியாவையே விலை பேசும் ‘பெரிய அரசியலில்’ ஈடுபட்டிருந்தார்.
வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை அளிப்பதாக மோடி சொல்லவே இல்லை என்று பிஜேபி சொல்ல ஆரம்பித்து விட்டது. லக்னோவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் வருடத்திற்கு ஒரு கோடி பேருக்கு வேலை கொடுப்பதாகத்தான் பேசினார். இரண்டு கோடி என்று காங்கிரஸ் பொய் சொல்கிறது என்றார்கள். அதற்கும் காங்கிரஸை பொறுப்பாக்கினார்கள். மொத்தப் பிரச்சினையையும் திசை திருப்புவதற்கு மோடி அல்லும் பகலும் அயராமல் உழைத்துக் கொண்டிருந்தார்.
வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் சென்ற வருடம் 55 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்யப்பட்டு இருப்பதை மோடி காண்பித்தார். அவையெல்லாம் புதிய வேலை வாய்ப்புகள் என்று கணக்கு சொன்னார். புதிய பென்ஷன் திட்டத்தில் இணைந்திருக்கும் புதிய கணக்குகளையும் வேலை வாய்ப்புகள் உருவக்கப்பட்டதன் எதிரொலியே என்றார். இப்படியே கூட்டிக் கூட்டி வருடத்திற்கு இரண்டரை கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாய் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதையே தனது இணையதளத்திலும் சாதனையாக வெளியிட்டுக் கொண்டார்.
உண்மை என்னவென்றால், அணி திரட்டப்படாத தொழிலாளர்களாய் சில வருடங்கள் வேலை பார்த்து வருபவர்களுக்கு பி.எஃ பிடித்தம் செய்யப்பட்டு இருந்தன. அவைகளை புதிய வேலைவாய்ப்புகள் என்று ஜோடிப்பது எப்பேர்ப்பட்ட மோசடி.
அரசு சார்பில் தேவையான புள்ளி விபரங்கள் இல்லையென்பதும், இருக்கும் புள்ளி விபரங்களை மறைப்பதும் மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு தொடர்கதையாகி விட்டது. தங்களுக்குச் சாதகமான, ஆதாரமற்ற தனியாரின் புள்ளி விபரங்களை வெளியிட்டு அதன் மூலம் ’எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்’ என்று பொய்யான தோற்றத்தை காட்டுவதுதான் மோடியின் ஆட்சி. பொய்களின் ஆட்சி.
நிதியமைச்சராயிருந்த அருண் ஜெட்லியோ தனது வாதத் திறமையால் இன்னொரு தர்க்கத்தை முன்வைத்தார். “வேலை வாய்ப்புகள் இல்லையென்றால் இந்நேரம் இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடி இருப்பார்கள். கடந்த ஐந்து வருடங்களில் அப்படி எந்த போராட்டமும் நடைபெறவில்லை” என்றார். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமே இல்லையாம்.
“வேலை வாய்ப்புகள் இருக்கவேச் செய்கின்றன. பக்கோடா விற்று ஒரு நாளைக்கு இருநூறு ருபாய் சம்பாதிக்க முடியும்” என்றார் மோடி ஒருநாள் வாயைத் திறந்து. அவரது skill India என்னவென்று அப்போதுதான் இளைஞர்களுக்கு புரிந்தது. அன்றைக்கு மோடி விவேகானந்தர் முகமூடியை கழற்றி வைத்திருக்க வேண்டும்.
Tourism, Physical infrastructure, Manufacturing, Global manufacturing hub, Agriculture, Foreign Direct investment, Skill Focusing, Massive open online courses, Education and Research, Sports, IT sector, Entrepreneurship என்று எவ்வளவு வேலைகளுக்கான வாய்ப்புகளை பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. கடைசியில் பக்கோடாவில் போய் நின்றது.
டெல்லி ஜந்தர் மந்தரில் 2019 பிப்ரவர் 7ம் தேதி முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியாவின் இளைஞர்கள் கூடி மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். ’வாருங்கள் அருண் ஜெட்லி, இப்போது பேசுங்கள்’ என அவரையும் அழைத்தார்கள்.

“வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதாக மோடி வாக்குறுதியளித்தார். ஆனால் அரசுத்துறையில் இருக்கும் 25 லட்சம் வேலைவாய்ப்புகளையும் கூட நிரப்பவில்லை” என்றார் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து டெல்லிக்குப் போராட வந்திருந்த ஸ்ரீகாந்த் தத்தாத்ரேயா.
“பக்கோடா விற்பதும் வேலைதான் என பிரமர் சொல்வது வேதனையாய் இருக்கிறது. அது வேலையில்லை என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அதற்கு எதற்கு உயர் படிப்பு? என்றார் பிரியா தாக்கூர்.
“பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவை சிறு வியாபாரிகளின் தொழில்களை எல்லாம் முடக்கி விட்டன. அங்கு வேலை பார்த்தவர்களின் வேலைகளும் பறி போய் விட்டன“ என்றார் 29 வயதான பங்க கலியா.
அதிகாரத்துக்கு வருவதற்கு தேவைப்பட்ட புதிய இந்திய வாக்காளர்களாகிய இளைஞர்கள், அதிகாரத்துக்கு வந்த பிறகு மோடிக்குத் தேவைப்படவில்லை. மோடியின் இந்தியாவுக்கு சக்தியாய் இருப்பவர்கள் கார்ப்பரேட்களே என்பதையும், மோடி அவர்களின் காவல்காரன் என்பதையும் டெல்லி போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் புரிந்திருந்தார்கள்.
சமீபத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில், மோடியின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டிருந்தது. 2019ல் 66 சதவீதம் ஆதரவு பெற்று யாரும் அருகில் இல்லாதவாறு காட்சியளித்தவர் 2020ல் 38 சதவீதமாக உயரம் குறைந்து 2021ல் 24 சதவீதமாக குள்ளமாகிப் போயிருந்தார்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 86 சதவீதம் தங்கள் அன்றாட வாழ்க்கை குறித்தே கவலைப்பட்டு இருந்தார்கள். மோடியின் ஏழு ஆண்டு கால ஆட்சியின் மீது கரு நிழல் மெல்ல படர ஆரம்பித்து இருக்கிறது. அவரது பொய்கள் உருவாக்கியது அது.
இந்திய இளைஞர்கள் வேலை இழந்தது மட்டுமல்ல. எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் இழந்து வருகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதில்தான் தேசத்தின் எதிர்காலம் இருக்கிறது. இல்லையென்றால் இந்த அவநம்பிக்கைகளையும் கூட பசிச சக்திகளே வேறு உத்திகளில் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும். அதற்கென்று சில பொய்களை மோடி வைத்திருக்கவே செய்வார்.
காதலெனும் மாயை சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா
மதியம் 1.30 மணிக்கு, புறப்பட தயார் நிலையில் இருந்த.. பெங்களூரு செல்லும் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸில், குமார் ஒற்றை சீட்டில் அமர்ந்திருந்தான்.. எதிர் சீட்டில் யார் வருவார்களோ என ஆவலோடு காத்திருக்க, கடைசி நொடியில் ஒரு அழகிய இளம் பெண், ஏறுவதை கண்டு அனைத்து ஆண்களின் விழிகளும் மெர்குரி பல்பு போல் பிரகாச மடைந்தது.
அவள் தன் இருக்கை எண்ணை தேடியபடி, அவனை நெருங்க, அவன் இதய துடிப்பு எகிறியது… என்ன ஆச்சர்யம் அவள், எக்ஸ்கியூஸ் மீ என்ற படி, எதிர் ஒற்றை சீட்டில் அமர அவன் குஷியானான். அவள் தன் சீலையை ஒழுங்குபடுத்தி அமர ரயில் வேகமெடுத்தது.
கையில் வைர மோதிரம், கனமான பிரேஸ்லெட், மைனர் செயின், ரோலக்ஸ் வாட்ச், சகிதம், அந்த பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க .. அந்த, யுவதியோ ஆரம்பகால நடிகை மீனாபோல் சர்வ லட்சணமாய் அலட்சிய பார்வையுடன் திருக்குறள் புத்தகம் படித்து கொண்டிருந்தாள் (அது மொபைல் இல்லாத காலம் )..
அவளுடன் பேச குமாருக்கு கொள்ளை ஆசை, பார்த்தால் ராங்கிகாரி மாதிரி தெரிகிறாள், எதாவது ஏடாகூடமாய் சொல்லப்போய் , விவகாரத்தில் மாட்டிகொள்வோமோ என்ற பயம் வேறு.. வண்டி கொசஸ்தலை ஆற்று பாலம் மேல் ஊர்ந்து கொண்டிருக்க, தடதடப்பு அதிகரித்தது.
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 10 – ஜா. மாதவராஜ்
“அப்பாவிகளின் நம்பிக்கையே, பொய்யர்களின் முக்கியமான ஆயுதம்”
– ஸ்டீபன் கிங்
2019 நவம்பரில் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது இது. பாரத ஸ்டேட் வங்கியின் குர்கான் கிளையில் ஹுக்கும் சிங் என்பவர் கணக்கு வைத்திருந்தார். வீடு கட்டுவதற்காக பணத்தை தன் கணக்கில் செலுத்தி சேமித்து வந்தார். ஒருநாள் கணக்கை சரி பார்க்கும்போது அதிர்ந்து போனார். தன் கணக்கில் இருந்து அவரே அவ்வப்போது பணம் எடுத்து வந்ததாக வங்கியின் ஆவணங்கள் காட்டின. வங்கியின் அதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகுதான் எல்லாம் தெரிய வந்தது.
அந்த கிளையில் இரண்டு வாடிக்கையாளர்கள் ஹுக்கும் சிங் என்ற பெயரில் இருந்திருக்கிறார்கள். இருவருக்குமே அந்தக் கிளையில் ஒரே சேமிப்புக்கணக்கு எண்ணைத் தெரியாமல் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு பேரின் பாஸ்புக்கும் ஒன்று போலவே இருந்தன, பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களைத் தவிர!
ஒரு ஹுக்கும் சிங் செலுத்திய பணத்தை இன்னொரு ஹுக்கும் சிங் எடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். உண்மை தெரியவந்தவுடன் பணத்தை எடுத்த ஹக்கும் சிங் சொன்னதுதான் ஹைலைட். ‘இது மோடி போட்ட பணம் என்று நினைத்தேன்”
நம்பும்படி இல்லைதான். தனது மோசடி தெரிந்தவுடன் அதனை சமாளிப்பதற்காகவோ அல்லது தன் தரப்பை நியாயப்படுத்துவதற்கோ ஹுக்கும் சிங் சொல்வதாகத் தெரிகிறது. வங்கியின் மீது தவறு இருப்பதால் இது சிக்கலான பிரச்சினைதான். பீகாரில் நடந்த சம்பவத்தை அப்படிக் கருத முடியவில்லை.
பக்தியார்பூரில் வசிக்கும் 30 வயதான ரஞ்சித் தாஸ் அங்குள்ள தட்சண கிராம வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறான். அதில் இன்னொருவருடைய பணம் 5.5 லட்சம் தவறுதலாக 2021 மார்ச் மாதத்தில் வரவு வைக்கப்பட்டு விட்டது. அவன் அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்து வந்திருக்கிறான்.
உண்மையெல்லாம் தெரிந்த பிறகு வங்கி அதிகாரிகள் ரஞ்சித் தாஸை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். தன்னால் திருப்பித் தர முடியாது என்றும், எல்லாவற்றையும் செலவு செய்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறான். “உன் பணம் இல்லை என்று தெரிந்த பிறகு ஏன் எடுத்தாய்” என்று போலீஸ் கேட்டது.
“என்னுடைய கணக்கில் 5.5 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக என் மொபைலுக்கு செய்தி வந்தது. பிரதமர் மோடி ஒவ்வொருத்தர் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடுவதாகச் சொல்லி இருந்தார். அதன் முதல் தவணையாக ஐந்தரை லட்சத்தை அனுப்பி இருப்பதாக நினைத்துக் கொண்டேன். அந்தப் பணத்தை நான் செலவழித்து விட்டேன்.” என்று சொல்லி இருக்கிறான்.
மொத்தப் பணத்தையும் ஒரே தடவையில் அவசரம் அவசரமாகவும் எடுக்கவில்லை ரஞ்சித் தாஸ். தன்னுடைய பணம் என்பதாகவே பல தவணைகளில் மூன்று மாதங்களாகத்தான் எடுத்திருந்தான். ஆகஸ்ட் மாதம்தான் வங்கிக்கு தெரிய வந்திருக்கிறது. ரஞ்சித் தாஸ் உண்மையிலேயே அப்பாவியாகவும் கருத இடமிருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களிலும் குறித்து வைத்துக் கொள்ளக் கூடிய ஒன்று உண்டு. மோடி அப்படி சொல்லவில்லை என்றோ, ஒரு பிரதமரின் பெயரையே தங்கள் மோசடி காரியத்துக்கு பயன்படுத்தினார்கள் என்றோ சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஊழலற்றவராகவும், வளர்ச்சி நாயகனாகவும், தேசத்தை மீட்க வந்த இரட்சகனாகவும் பெரும் முழக்கங்களோடும் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி விமானத்தில் பறந்து பறந்து 2014 பாராளுமன்ற தேர்தலின் போது பேசியதுதான் இது:
“இந்தியாவில் உள்ள மோசடிப் பேர்வழிகள் தங்கள் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள் என்று உலகமே சொல்கிறது. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டு இருப்பது நமது நாட்டின் பணம். என் சகோதர சகோதரிகளே, நீங்கள் சொல்லுங்கள், அந்த கருப்பு பணம் திரும்பி வர வேண்டுமா இல்லையா? திருடர்களால் பதுக்கி வைக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் நாம் திரும்பப் பெற வேண்டாமா? அந்தப் பணத்தின் மீது நம் மக்களுக்கு உரிமை இல்லையா?” என வீராவேசமாக கேள்வி கேட்டார். “வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் அந்தத் திருடர்களால் பதுக்கப்பட்ட பணத்தை மட்டும் திரும்பக் கொண்டுவந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை இலவசமாகப் பெறுவான்.” என பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரிக்க போகுமிடமெல்லாம் பெருஞ்சத்தமாய் கூவினார்.
மோடி பேசியதை ஊடகங்கள் தொடர்ந்து ஒளி பரப்பின. பிஜேபியின் தலைவர்களும், தொண்டர்களும் “மோடி பிரதமரானால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்சம் கிடைக்கும்” என்று வீடு வீடாய் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். 100 நாட்கள் ஆனது. ஒன்றும் நடக்கவில்லை. மக்கள் முணுமுணுத்தார்கள். ஒரு வருடம் ஆனது வரவில்லை. கேள்விகள் எழுந்தன. மோடி தேர்தலுக்குப் பிறகு அந்த 15 லட்சம் குறித்து வாயேத் திறக்கவில்லை. பிஜேபியின் தலைவர்கள்தாம் ஆள் ஆளுக்காய் ஒவ்வொன்று பேசினார்கள்.
பாஜக தலைவர் அமித்ஷா சிரித்துக்கொண்டே “அது ஒரு எலக்ஷன் ஜும்லா” என்றார். தேர்தல் நேரத்தில் எல்லோரும் சொல்வதுதானே, அதையா சீரியஸாக எடுத்துக் கொண்டீர்கள் என்ற கிண்டல் தொனியில் பதில் இருந்தது. “நாங்கள் ஜெயிப்போம் என்று நினைக்கவில்லை. அதனால் அப்படியெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தோம்” என்றார் நிதின் கட்கரி.
“நிச்சயம் கொடுப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்போம்” என சமூக நிதித்துறைக்கான இனையமைச்சர் ராம்தாஸ் அதவாலே. “அப்படி மோடி சொல்லவே இல்லை.”என்று மறுத்தார் ராஜ்நாத்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டார்கள். அருண் ஜெட்லி எழுந்து, “அது ஒரு உதாரணத்திற்குச் சொன்னது.” என்றார். “வெளிநாட்டில் இருக்கும் கருப்புப்பணத்தை எல்லாம் கொண்டு வந்தால் ஓவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் பெறுமான பணம் கிடைக்கும் என்றால் வெளிநாட்டில் எந்த அளவுக்கு கருப்புப்பணம் இருக்கிறது என்பதை புரிய வைப்பதற்காக” என்ற தோனியில் சொல்லி தன் அறிவை புரிய வைத்தார்.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் இராஜஸ்தான் மாநில பிஜேபி தலைவர் மதன்லால் சைனி, “மோடி பிரதமரான பிறகு மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்திருக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் மறைமுகமாக ஏழை எளிய மக்களுக்கு 15 லட்சம் ருபாய் கொடுக்கப்பட்டு விட்டது” என மொத்தமாக ஊற்றி மூடப் பார்த்தார்.
மோடியோ “சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பாகிஸ்தானை நம் முன்னே மண்டியிடச் செய்தோம். காங்கிரஸ் நம் இராணுவ வீரர்களை நம்பாமல் கேள்விகள் கேட்கிறது. தேச துரோகிகள்” என்று மக்களின் கவனத்தை திசை திருப்ப தேசபக்தி மேட்டரை கையிலெடுத்தார். உடனே “Modi slams”, “Modi attacks”, “Modi’s masterstroke”, “Modi set agenda” என்று ஊடகங்கள் மாற்றி மாற்றிப் போட்டு ‘அவரு யாரு தெரியுமா’ என பிலிம் காட்டிக்கொண்டு இருந்தார்கள்.
முறையான பதில் எங்கிருந்தும் வராததால் இராஜஸ்தானில், ஜலாவர் மாவட்டத்திலிருந்து, கன்னையா லால் என்பவர், பிரதமர் அலுவலகத்துக்கு 8.2.2016 அன்று கீழ்கண்ட கேள்விகளை RTI மூலம் கேட்டே விட்டார்.
“தேர்தலின் போது வெளி நாட்டில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்டு வந்து, ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொடுக்கப் போவதாக மரியாதைக்குரிய பிரதமர் மோடி கூறினார். அது என்ன ஆனது?
தேர்தலின்போது ஊழலை ஒழிப்பேன் என்று மரியாதைக்குரிய பிரதமர் கூறினார். ஆனால் 90 சதவீதம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்கான புதிய சட்டத்தை எப்போது கொண்டு வரப் போகிறார்?
அரசு Smart cities உருவாக்குகிறது. ராஜஸ்தானில் ஒரு கிராமம் கூட முன்னேறவில்லை. எந்தெந்த கிராமங்களின் நிலைமை மோசத்திலிருந்து படு மோசமாகி இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். எப்போது இராஜஸ்தான் கிராமங்களுக்கு சாலை வசதிகள் செய்து தரப்படும்?”
பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. கன்னையா விடவில்லை. சரியாக 30 நாட்கள் காத்திருந்து 9.3.2016 அன்று Central Information Commissionக்கு புகார் செய்தார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்றது. இறுதியில் 30.8.2016 அன்று, கன்னையாகுமாரின் கேள்விகளுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு, கன்னையா லால் குறித்தும், அவருக்கு பிரதமரிடமிருந்து கிடைத்த பதில் குறித்தும் எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால் மக்கள் அந்த 15 லட்சத்தை மறந்த பாடில்லை. 2019 ஜூலை 30ம் தேதி மூணாறு தபால் அலுவலகத்தில் திரண்ட மக்களின் கூட்டத்தை ஒரு சிறு செய்தியாக இந்த தேசம் கடந்து விட முடியாது.
தேர்தலின் போது மோடி அறிவித்த பதினைந்து லட்சம் ருபாயை தபால் ஆபிஸ் மூலம் வழங்கப்பட இருப்பதாகவும், தபால் நிலையத்தில் கணக்கு ஆரம்பியுங்கள் என்று கிடைத்த எதோ தகவலை வைத்து எஸ்டேட்களிலும், தோட்டங்களிலும் வேலைபார்க்கும் தொழிலாளிகள் தங்கள் ஒருநாள் கூலியை விட்டு விட்டு, லீவு போட்டு அங்கு காத்து நின்றார்கள். எல்லோர் கைகளிலும் நூறு ருபாயும், ஆதார் அட்டையும், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களும் இருந்தன.
அந்த எளிய மக்கள் நீண்ட வரிசையில் அப்படி காத்துக் கிடந்தது இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் மூணாறில் என்று மட்டும் நினைத்தாலோ, அவர்களை முட்டாள்கள் என்றோ நினைத்தால் நம்மைப் போன்ற முட்டாள்கள் யாருமில்லை. மூணாறு அந்த நாளில் இந்த தேசத்தின் குறியீடாக இருந்தது.
தங்கள் வாழ்வில் எதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா? அன்றாடம் படும் துயரங்களுக்கு எதாவது ஒரு வழி கிடைக்காதா என காலமெல்லாம் ஏங்கிப் போனவர்கள் அவர்கள். என்றாவது ஒருநாள் “கடவுள் கண்னைத் திறப்பார்” என்று காத்திருப்பவர்கள் அவர்கள்.
தேர்தல் நேரத்தில் சொன்ன வெறும் வார்த்தைகள் அவை என அவர்கள் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதை விட மீள விரும்பவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். அதிகாரத்துக்கு வந்ததும் அதை மோடியும், பிஜேபியும் மறந்து விட்டார்கள் என்னும் உன்மையை உள்ளுக்குள் அவர்களால் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மக்களின் துயரமான வாழ்வையும், அவலமான நிலையையும் வைத்து ஏமாற்றுவதைப் போல கொடிய காரியம் எதுவுமில்லை. அதை 130 கோடி மக்கள் நிரம்பிய தேசத்தில் அவர்கள் சர்வ சாதாரணமாக நிகழ்த்த முடிவது நம் சமூகத்தை அதிர்ச்சியோடும், பரிதாபமாகவும் பார்க்க வைக்கிறது.
மூணாறு போலீஸ் தரப்பில் வந்து, அது பொய்யான செய்தி என்று எடுத்துக் கூறி, அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவித்தார்கள். ஆனால் மக்கள் போலீஸ் சொன்னதை நம்பாமல் அங்கேயே இருந்திருக்கிறார்கள். அவர்களை திருப்பி அனுப்புவது பெரும் பாடாகி இருக்கிறது.
இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மூணாறு காவல் நிலைய கண்காணிப்பாளர் அறிவித்தார். யார் பரப்பியது என்பது அகில உலகத்துகே தெரிகிறது. யார் அவர் மீது வழக்குப் பதிவது? கைது செய்வது? அதற்கும் இந்த தேசத்தின் பிரஜை ஒருவர் துணிந்து விட்டார்.
2020ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில், ராஞ்சி ஹை கோர்ட்டில், ஹெச்.கே.சிங் என்னும் வழக்கறிஞர், “மோடியும் அமித்ஷாவும் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian penal Code) செக்ஷன் 415 (cheating), செக்ஷன் 420 (dishonesty) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (Representation of the people Act) செக்ஷன் 123 (b) பிரகாரம் வழக்கு பதியப்பட்டு இருந்தது.
2020 பிப்ரவரியில் ஆரம்பித்த விசாரனையின்போது, “2013-2014ல் நடந்த விஷயத்திற்கு இப்போது ஏன் வழக்குத் தொடுக்கிறீர்கள்” என நீதிபதிகள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது.
“தேர்தலின் போது சி.ஏ.ஏவை (CAA) கொண்டு வருவதாகச் சொன்னோம் அதனால் இப்போது கொண்டு வருகிறோம் என மோடியும் அமித்ஷாவும் சொன்னார்கள். அப்படித்தானே பதினைந்து லட்சம் ருபாய் எல்லோர் கணக்கிலும் வரவு வைக்கப்படும் எனச் சொன்னார்கள். அதை சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அதனை நிறைவேற்றவில்லை என்றால், மக்களை ஏமாற்றுவதாகத்தானே அர்த்தம்?” என்று வாதாடி இருக்கிறார் ஹெச்.கே.சிங். வழக்கு பின்னொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கின் தற்போதைய நிலை, போக்கு என்னவென்று தெரியவில்லை.
மோடி மீதும், அமித் ஷா மீது எத்தனையோ வழக்குகள் தொடுக்கப்பட்டு இருந்தன. அதிலிருந்தெல்லாம் அவர்கள் விடுவிக்கப்பட்டும் விட்டார்கள். எல்லாம் எப்படி என்று தெரியும். இந்த வழக்கின் முடிவு என்னவாகும் என்றும் தெரியும்.
ஆனால் இந்த நாட்டின் பிரதமர் மீது, இந்த நாட்டின் பிரஜை ஒருவர் cheating case தொடர்ந்திருப்பது எவ்வளவு அவமானகரமானது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் மோடி சொன்ன பொய்யை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது வரலாற்றில் எவ்வளவு முக்கியமானது.
References:
* ‘PM Modi sent me money’: Bihar man refuses to return Rs 5.5 lakh to bank, arrested (Times of India, Sep 15, 2021)
* Huge crowd flocks to Munnar post office to get ‘Rs 15 lakh promised by Modi’ (Mathrubhumi, Jul 30, 2019)
* Thought Modi ji Was Giving This Money’, PM’s Promise of Rs 15 Lakh Landed This Man in Trouble – Here’s How (India.com, Nov 22, 2019)
* BJP has fulfilled PM Modi’s campaign promise of giving Rs 15 lakh: Rajasthan party chief (Hindustan times, jul 18, 2018)
* Twitter remembers PM Modi’s ‘Rs 15 lakh promise’, trends #15LakhAaGaye as India crosses 15 lakh COVID-19 cases (Free Press, Jul 29, 2020)
* Rs 15 lakh promise: PM Modi, Amit Shah face charges of cheating, dishonesty in Ranchi court (India Today, Feb 3, 2020)








