Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14



சென்னையில் நானும் குழந்தைகளும்..

– டாக்டர் இடங்கர் பாவலன்

 

மின்னுகிற ஒளிச்சிறகுகளை ஆயாசமாக வானிலே விரித்து, அந்தி சாய்கின்ற கணங்களின் உற்சவ நடனத்தை ஆடிக்களித்தபடியே மலை முகடுகளின் மீதேறி மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது சூரியன். கிரகணங்கள் சூழ்வதைப் போல வாய் பிளந்து கொண்ட மலை இடுக்குகளின் பற்களுக்குள் சூரியன் பொத்தென்று விழுந்து பூமியின் தொண்டைக்குழி ஆழத்திற்குள் நழுவியபடியே போய்க் கொண்டிருந்தது. கதிரவன் கலைந்துவிட்ட சோகத்தையெல்லாம் காணச் சகியாதவாறு ஜனத்திரள் கூட்டமொன்று மேற்கிலிருந்து சூரியன் மீண்டும் உதித்திடாதா என்கிற பாவனையோடு தண்டவாளங்களின் ஓரங்களில் நின்று இருண்ட ஆகாசத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தது. மேற்கின் அடிவானத்திலிருந்து சூரியப் புள்ளி போலக் கிளம்பி கொஞ்சம் கொஞ்சமாக சிவந்து தகித்தபடி இரயில் தனது முகப்பு ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியபடி குபுகுபுவென இரயில் நிலையத்தை நோக்கி ஓடோடி வந்து கொண்டிருந்தது.

இரயில்நிலையப் பிளாட்பாரங்களில் அம்மாக்களின் கைகளைப் பிடித்துக் கொண்டும், அப்பாக்களின் தோள்கள் மீதேறியும் குழந்தைகள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். புள்ளியிலிருந்து கோலம் உருத்திரண்டு வருவதைப் போல இரயில் தனது பருத்த உடலைக் காட்டி உரக்க சப்தமிட்டபடியே நெருங்கி வந்து கொண்டிருந்தது. அதுவரை துடிப்போடிருந்த குழந்தைகளெல்லாம் பற்றியிருந்த கைகளின் பிடிகளைத் தளர்த்தியபடி தரையிலமர்ந்து தங்கள் காதுகளின் இரைச்சல்களை இருகைகளாலும் பொத்திக் கொண்டனர். ஒருசில வளர்ந்துவிட்ட குழந்தைகள் விரல்களால் வணையப்பட்ட மகுடியால் உதடுகளின் மாடத்திலிருந்து குக்கூகூவென குரலெழுப்பியபடியே துள்ளிக் குதித்து சர்ப்பத்தைப் போலொரு நடனமாடிக் கொண்டிருந்தனர். எனதருகே காளீஸ்வரியும் ப்ரியாவும் எந்தவொரு சலனமுமின்றி ஊர்ந்து வருகிற பூதாகரமான இரயிலைப் பார்த்தபடி கற்சிலைகளில் ததும்புகிற பேரமைதியின் பூரணத்தோடு நிதானமாக நின்று கொண்டிருந்தனர்.

பிளாட்பாரத் தாழ்வாரங்களின் குடைகளுக்குக் கீழே காளீஸ்வரி, ப்ரியாவினுடைய குடும்பத்தோடு ஒருவனாக நின்றபடி இரயிலின் நகர்தலுக்கேற்ப, எங்களது இருக்கைகளடங்கிய இரயில் பெட்டியை நோக்கி முன்னும் பின்னுமாக அவதியோடு ஓடிக் கொண்டிருந்தோம். அத்தனை மனித இடிபாடுகளுக்கு மத்தியிலும் அவசரகதியிலே பெற்றோர்கள் கடக்கிற இரும்புப் பெட்டிகளை குழந்தைகள் விரல்விட்டு எண்ணியபடி இருந்தனர். நான் அவர்கள் இருவரையும் ஒரு கணம் திகைத்துத் திரும்பிப் பார்த்தேன். 

இதுவரை இப்படியொரு வெளிச் சுவாசத்தை நுகர்ந்துவிடாத புது அனுபவத்தையும், கூட்டத்தின் ஒவ்வாமையால் கண்களுக்குள் நிறைகிற அதிர்ச்சியின் விசும்பலுமாக ஒருவித கலவரத்தின் சாயலோடு அம்மாக்களின் கைகளை இறுகப் பற்றியபடி அவர்களிருவரும் நடுக்கத்தோடு வந்து கொண்டிருந்தனர். ஒருவித அச்சத்தின் பிடியில் பதுங்குகிற தன்மையோடு, பாவம் போல மரக்கிளையைப் பற்றியிருக்கிற தேவாங்கின் சாயலோடு அவர்கள் என்னைப் பார்த்தபடி விழிப்பதும், பின் அதிர்ச்சியில் உறைந்து கண்களில் ஒருவித ஏக்கம் கொள்வதையும் நான் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரயில் நிலைய அறிவிப்புகள், நடமாடும் விற்பனையர்களின் கூவி விற்கும் காரசாரமான பேச்சொலிகள், எரிச்சலும் பதட்டமுமாக சதா நகர்ந்து கொண்டேயிருக்கிற மனிதர்களென ஒட்டுமொத்த இரைச்சலின் உலகிலிருந்து துண்டிக்கப்பட்ட அவர்களிருவரைப் போலவே நானும் இருந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தோடு ஒருமுறை கற்பனையால் என்னை முழுவதுமாக நிறைத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல அவிழ்ந்து காற்றுக்கேற்ப இசைந்தபடி, பட்டும் படாமலுமாக இலையொன்று ஆற்றில் விழுகிற நித்தியத்தைப் போலொரு பேரானந்தத்தை ஒருவேளை இவர்களிடமிருந்துதான் நான் கற்றுத் தேர முடியுமோ என்னவோ?

தொலைவிலிருந்து கிளிப்பச்சை வண்ணத்தில் ஊழியரின் கைகள் சிறகினை அசைக்க இரயில் தனது ஏக்கப் பெருமூச்சை விட்டபடி நிலையத்திலிருந்து மெல்லக் குழுங்கி நகர்வதற்குள் எங்களது இருக்கைகளைக் கண்டுபிடித்து நாங்கள் ஒருசேர அமர்ந்திருந்தோம். இரயிலின் இருக்கைகள் கடைவாய்ப் பற்களைப் போல எதிரெதிர் துருவமாய் இசைந்து அமைந்திருப்பதும்கூட பயணாளிகளுக்கு ஏக சௌந்தர்யமான விசயம்தான். பயணம் முழுக்க ஏகாந்தமாய் பேசிச் சிரித்துக் கொள்ளவும், கூடி அரசியல் பேசி விவாதித்துக் கொள்வதுமாக யாரேனும் சக பயணியொருவர் கிடைத்துவிட்டாலே போதும், அந்தப் பயணமே பெரும் நித்தியத்தின் கொண்டாட்டமாகிவிடும்.

ஆனாலும் இப்போது நான் களிப்பூட்டும் சுற்றுலாவிற்காகச் செல்லவில்லை என்கிற பிரக்ஜையோடு தான் சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். இன்பச் சுற்றுலா செல்கிற எத்தனையோ இரயில் பயணிகளுக்கு மத்தியில், தங்களது பிள்ளை ஒரு வார்த்தை அம்மா, அப்பாவென்று பேசிடாதா! என்கிற கனவுகளோடுப் பயணிக்கிற இரண்டு குடும்பங்களும், அவர்களோடு மருத்துவ விடுப்பை எடுத்துக் கொண்டு உடன் செல்கிற பைத்தியக்கார மருத்துவரும் இருப்பதைப் பற்றிய கவலை யாருக்காவது இருக்குமா என்ன?

என்னோடு சேர்ந்து எதிரிருக்கையில் அமர்ந்தவரும் பிரியாவிற்காகவும் காளீஸ்வரிக்காகவும் ஜன்னல் இருக்கைகளை மனமுவந்து தியாகம் செய்ய வேண்டியதிருந்தது. இருளுக்குள் மண்ணுளிப் பாம்பைப் போல பதுங்கி தண்டவாளங்களில் நகர்ந்து கொண்டிருக்கிற இரயிலின் ஜன்னலுக்கருகே அமர்ந்து, தங்கள் முகத்திலிருந்து துருத்திக் கொண்டிருக்கிற மூக்கை வெளியே நீட்டியபடி, வீசுகிற காற்றின் குளிர்ச்சியை நாசித்துவாரங்களுள் நிறைத்து விளையாடியபடியே கனிந்து சிரித்துக் கொண்டிருந்தனர். ஜன்னலுக்கு வெளியே செவ்வகமாய் விழுகிற வெளிச்சப் பாதையில் அவசரத்தோடு கிளைகளசைத்து வழியனுப்பி வைக்கிற மரங்களுக்காக அவர்களும் காற்றிலே விரல்களின் ஜாடையால் கைகளசைத்து விடை கொடுத்தபடி எதனோடோ அரூபமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

நிஜத்தில், வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த இந்தக் குழந்தைகளையும், எல்லாம் தங்கள் விதியென நொந்த கொண்ட பெற்றோர்களையும் கரம் படித்து வீட்டிலிருந்து நகர்த்தி இரயில்நிலையம் வரையிலும் அழைத்து வந்த கால இடைவெளியில் எனக்குள்ளே நான் நிகழ்த்திய மனப் போராட்டத்தை நினைத்துப் பார்க்கையில் எனது நெஞ்சுக்குழியிலிருந்து கசப்பான நொடியொன்று மேலேறி நாசித்துளையை நெறிக்கிறது. ஆனாலும் ஆற்றை நோக்கிய படித்துறை கல்படிக்கட்டுகளின் ஈரம்படிந்த தடங்களில் கால் வைத்து, பாதங்கள் குளிர உடல் இன்புற்றுச் சிலிர்த்துக் கொள்வதைப் போல, இந்தக் கணத்தில் எனது முதல் முன்னேற்றத்தை நினைத்து உள்ளார எனக்கு முழுதிருப்திதான். ஆனாலும் இனி எல்லாவற்றிற்குமாக என்னை ஒப்புக் கொடுத்து மூழ்கி நான் சமுத்திரத்தினுள் எழுவதற்காக முன்னேறி மேலும் மேலுமாக நகர்ந்து கொண்டே இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தே இருக்கின்றேன். இந்தப் பெற்றோர்களை சென்னைக்கு வரவழைப்பதற்கான துருப்புச்சீட்டைக் கண்டுபிடித்து அத்தனைக்கும் அவர்களை ஒப்புக் கொள்ள வைப்பதென்பது எனக்கு அதிசிரத்தையுடையதாகவே இருந்தாலும்கூட அத்தகைய போராட்டத்தை இப்போதெல்லாம் நான் மனமுவந்து விரும்பியே தான் செய்கிறேன்.

காளீஸ்வரி, ப்ரியா இரண்டு குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களது பெற்றோர்களைச் சந்தித்து உரையாடுகையில் எனது வார்த்தைகளின் மீது எத்தகைய கவனத்தை வைத்திருக்க வேண்டுமென்பதைப் பற்றி முன்னமே நான் மனதில் சூட்சமமாக குறித்து வைத்துக் கொண்டேன். என்னையறியமால் அவர்களுக்குச் சாதகமாக நான் உதிர்க்கிற சிறு வார்த்தைகளும் எனக்கெதிரான ஆயுதமாகவே அவர்கள் பயன்படுத்தக்கூடும் என்பதைப் பற்றியும் நான் புரிந்தே தான் வைத்திருக்கிறேன். அவர்களிடம் உரையாடிப் பகிர்ந்து கொள்கிற விசயங்களில் மருத்துவம் சார்ந்த அறிவுரைகளை மிகுந்த நம்பகத் தன்மையோடும், அதனது எளிய பாவனையோடும் தெள்ளத் தெளிவாக நான் விளக்கிப் பேச வேண்டியிருந்தது.

எப்போதும் என் வாழ்வில் என்னோடு அணுசரணையாகத் தொடருகிற, எவரிடமும் நெருங்கம் கொள்ளாதத் தனிமையும், விரக்தியுடன் கூடிய வெறுமையும், எனக்குள் நானே என்னைப் பூட்டிக் கொள்கிற தாழ்வுணர்வும், மருத்துவன் என்கிற அழகிய தங்கக் கூண்டுமாக நான் சக மனிதர்களோடு கலந்திருக்கா வண்ணம் எனக்கிருந்த அத்தனை வேலிப்படல்களையும் மனமுவந்து தாண்ட வேண்டியிருந்தது. அத்தோடு பெற்றோர்களிடம் நான் தோழமையோடு கலந்துப் பேசி எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பகிரவும் வேண்டியிருந்தது. உண்மையில், இவைதான் எனக்கு அத்தனையும்விட பெரும் சவாலான விசயமாக இருந்தது.

எனக்குள் உருவான ஆழமான நம்பிக்கை என்னவென்றால் ஒருவேளை இவர்கள் சென்னைக்கு வந்து, அங்கிருக்கிற பிரத்தியேகமான மருத்துவமனைகளில் இந்தக் குழந்தைகளுக்கென செய்யப்படுகிற பரிசோதனைகளையும், அப்படிப் பரிசோதனையின் வழியே சிகிச்சை செய்து கொண்டு நம்மைப் போலவே பேசுகிற பிள்ளைகளையும், அக்குழந்தைகளின் பெற்றோர்களையும் நேரிலே சென்று சந்தித்து உரையாடுகிற போது கட்டாயம் இவர்களும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்கான தீர்வை நோக்கிய நிச்சயிக்கப்பட்ட பாதையில் சிந்திக்கத் துவங்கிவிடுவார்கள் என்பதுதான். இப்படியாக எனது நம்பிக்கையின் விரல்களைப் பற்றியபடி அவர்கள் என்னோடு மருத்துவமனை வருவதற்கான காலடிகளை நான் மிகவும் கவனமாக எட்டு வைத்து நடக்கத் துவக்கியிருந்தேன்.

இவை எல்லாவற்றிற்கும் துவக்கமாக பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதொரு எளிமையான நம்பிக்கையை அவர்களது கையிலே நான் பூப்போல அளிக்க வேண்டியிருந்தது. அதற்கு முதலில் என்னை நானே ஒப்புக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் ஆரம்பத்திலிருந்தே உணர்ந்திருந்தேன். சென்னைக்கு பரிசோதனைக்குச் செல்வதானால் உங்களோடு துணைக்கு நானும் கட்டாயம் வருகிறேன் என்கிற உத்திரவாதத்தை நான் அளித்த போது முதலில் அவர்கள் அதை நம்பவில்லை. அதோடு மட்டுமல்லாமல் உங்களோடு சேர்ந்து இன்னொரு குழந்தையும், குடும்பமும் வருகிறார்கள் என்பதான கூடுதல் நம்பிக்கையையும் நான் அந்த இரண்டு குடும்பங்களுக்குமே அளிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த இரண்டு விசயங்கள் மட்டுமே அவர்களைச் சமாதானப்படுத்த போதுமானதாக இல்லை.

ஆதலால் மேலும் சில விளக்கங்களை நான் கூடுதலாக அளிக்க வேண்டியிருந்தது. அதாவது இப்போது நாம் சென்னைக்குச் செல்கிறோமென்றால் குழந்தைகளைப் பரிசோதித்து உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் கட்டாயப்படுத்தப் போவதில்லை. அதற்குப் படிப்படியாக பல கட்டங்கள் இருக்கின்றன. இப்போது நாம் செல்வது என்னவோ நம் குழந்தைகளின் முழுஉடல் பரிசோதனைக்காக மட்டும் தான். சென்னை போன்ற பெருநகரங்களின் மருத்துவமனைக்குச் செல்கிற போதுதான் நம் குழந்தைகளுக்கான அனைத்து பரிசோதனை வசதிகளையும் ஒரே இடத்திலே எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் நம் குழந்தைகளுக்குக் கேட்கவில்லை, பேசவில்லை என்கிற ஒற்றைக் காரணத்திற்குப் பின்னால் இருக்கக்கூடிய பலதரப்பட்ட நோய்க்கூறுகளையெல்லாம் இருதயம், மூளை மற்றும் மனநல சிறப்பு மருத்துவர்களிடம் சென்று காப்பீட்டுத் திட்டத்தின் வழியே இலவசமாகப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளவும் முடியும்.

ஒருவேளை எல்லா பரிசோதனையும் செய்த பின்னால் அவர்களுக்கு ஆபரேசன் ஒன்று தான் தீர்வென்கிற பட்சத்தில் மருத்துவர்களே நினைத்தால்கூட உடனடியாக சிகிச்சையைச் துவக்கிவிட முடியாது. முதலமைச்சரின் விரிவான அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக காது கேட்கும் சிகிச்சையை இலவசமாகச் செய்ய வேண்டுமானால் முதலில் குழந்தையின் ஒட்டுமொத்த பரிசோதனை முடிவுகளையும் சென்னையின் முதன்மைக் காப்பீட்டு அலுவலகத்திற்கு இணையத்தின் வழியே அனுப்ப வேண்டும். அங்கே அவர்கள் அத்தனை ஆவணங்களையும் சரிபார்த்த பின்பு, ஒரு குறிப்பிட்ட நாளிலே குழந்தைகளை நேரிலே அழைத்து வரச்சொல்லி பெற்றோர்களுக்குத் தகவல் அனுப்புகிறார்கள்.

மேலே அவர்கள் குறிப்பிட்ட நாளில் குழந்தையை சென்னை காப்பீட்டு அலுவலகத்தில் வைத்து இறுதியாக ஒருமுறை பரிசோதித்துப் பார்த்து குறைபாட்டை உறுதி செய்த பின்னர் தான் ஏழரை இலட்சம் மதிப்பிலான அச்சிகிச்சைக்கான ஒப்புதலையே அவர்கள் வழங்குகிறார்கள். ஆகையால் நாம் பரிசோதனை செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்த பின்னால், நம் குழந்தைக்கு சிகிச்சைக்கான ஒப்புதல் கடிதம் வருகிற வரையிலும் இருக்கிற கால இடைவெளியில், ஒரு தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கான நேரமும் நம் கையிலே இருக்கும். ஆகவே, சிகிச்சையைப் பற்றி இப்போது யோசித்துக் குழப்பிக் கொள்ளவோ, அச்சப்படவோ வேண்டாம் என்று நான் அவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தேன்.

நானொன்றும் இப்பெற்றோர்களிடம் தந்திரமாகவெல்லாம் நடந்து கொள்ளவில்லை என்பதை முதலில் எனக்கு நானே சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. உள்ளூரிலேயே அங்குமிங்கும் சம்பந்தமில்லாத மருத்துவர்களிடமும், அக்கம் பக்கத்து வீடுகளிலும் வைத்துச் சொல்லப்படுகிற கட்டுக் கதைகளைக் கேட்டுக் கொண்டு தவறான முடிவுகளை எடுப்பதைக் காட்டிலும், காது கேளாத குழந்தைகளுக்கென்றே இருக்கிற சென்னை பெருநகர மருத்துவமனைகளுக்குச் சென்று, அங்கே நேரடியாக எல்லாவற்றையும் பார்த்துத் தெளிந்து கொள்வதன் மூலம் அவர்களாகவே ஒரு இறுதிகட்ட முடிவிற்கு வரக்கூடும் என்கிற அர்த்தத்தில் தான் நான் இவ்வாறு நடந்து கொள்கிறேன் என்கிற தெளிவிற்கு நானே சிரத்தையோடு வர வேண்டியிருந்தது.

அதாவது நாம் செய்து கொள்ளப் போகிற பரிசோதனைகளில் இருந்து, காது கேட்கும் கருவி பொருத்துகிற அறுவைச் சிகிச்சை வரையிலான அனைத்துமே முதலமைச்சரின் விரிவானக் காப்பீடு திட்டத்தின் வழியே இலவசமாகவே மேற்கொள்கிறார்கள். ஆகையால் நாம் மருத்துவமனை சென்று நம் குழந்தைகளுக்கென்று பரிசோதிக்கிற ஐந்து வகையான காது கேட்டல் பரிசோதனைகள், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், சுருள் படம், எக்ஸ்-ரே, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளுக்கான செலவு என்பது ஒன்றுமே இல்லை என்பதைப் பற்றியெல்லாம் பொறுமையாகப் பேசி நான் அவர்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் மேலாக பிறவிக் குறைபாடுகளின் பரிசோதனைகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு கிராமத்திலிருந்து கிளம்பி சென்னை வருகிற வறிய குடும்பங்களுக்குமான பல சலுகைகளையும்கூட இந்த மருத்துவமனை நிர்வாகமானது ஏற்படுத்தி வைத்திருப்பதை நான் ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டிருந்தேன்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

பெற்றோர்கள் இருவர் உட்பட குழந்தைக்கும் சேர்த்து மருத்துவமனைக்கு வந்து போகிற பயணச் செலவுகளை அந்தந்த மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக் கொள்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பரிசோதனைக்காக வெளியூரிலிருந்து வந்து அங்கு தங்கியிருக்க வேண்டிய அந்த ஒரு வாரத்திற்கான விடுதிச் செலவுகளையும், அந்த நாட்களுக்கான மூன்று வேளை உணவுச் செலவுகளையும்கூட அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படியென்றால் நம் கைகளிலிருந்து எந்தக் காசையும் கரைக்கத் தேவையில்லாமல் வெறுமனே போய் தமிழகத்தின் அதிநவீன மருத்துவமனையில் நமது குழந்தைகளுக்கான அத்தனை பரிசோதனைகளையும் இலவசமாகச் செய்துவிட்டு அப்படியே வீடு வந்து சேரப் போகிறோம் என்பதைச் சொல்லி நான் வியந்த போது, அதையெல்லாம் ஆமோதிப்பதைப் போல தன்னியல்பாகத் தலையாட்டிபடியே பெற்றோர்கள் ஆர்வத்தோடு அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இவ்வளவு வாய்ப்புகளிருந்தும் இவ்வூரிலேயே கிடந்து நம் பிள்ளையை மௌனியாக வைத்திருப்பதென்பது தேர்ந்த சிற்பியொருவன் தெரிந்தே சிற்பத்தின் கண்களை மூளியாக்கிவிட்டதைப் போலதொரு பாவமாகிவிடும் என்பதான யோசனையில் பெற்றோர்கள் ஆழ்ந்திருப்பதை அவர்களின் முகபாவனைகளின் வழியே நான் கண்டடைந்து கொண்டிருந்தேன். அவர்களின் ஆச்சரியம் கலந்த உருண்ட கருவிழிகளின் மேல் தொக்கி நிற்கிற இமைகளும்கூட அடுத்து என்ன? என்பதான ஆர்வத்தோடு கேட்பதைப் போலவும் எனக்குள் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்தது.

மேலும் பெற்றோர்களின் நெஞ்சினில் முறிந்த முள்ளைப் போல உறுத்திக் கொண்டிருக்கிற அறுவைச் சிகிச்சை பற்றிய பயங்களை, அதனைப் பற்றிய சந்தேகங்களை தெளிந்து கொள்வதற்காக இத்தகைய சென்னைப் பயணத்தைக்கூட ஒருவகையில் சாதகமாக அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது அங்கே ஆயிரக்கணக்கான சிகிச்சைகள் செய்து பேரனுபவம் வாய்ந்த சிறப்புச் சிகிச்சை நிபுணர்களும், குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கான நுட்பங்கள் தெரிந்த அதிசிறப்பான பயிற்று வல்லுநர்களும் இருக்கையில், நமக்குள்ளிருக்கிற சந்தேகங்களை அவர்களிடமே விலாவாரியாக கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் நம் குழந்தைக்கு ஒவ்வொன்றாக அவர்கள் பரிசோதித்துப் பார்க்கின்ற போது நாமும் அருகிலிருந்து அத்தகைய சப்தங்களுக்கான பரிசோதனைக்கு ஏற்ப மற்ற பிள்ளைகள் எப்படித் துணுக்குறுகிறார்கள், நம் பிள்ளைகள் எப்படி அணுவளவு சிணுங்களுமின்றி அமைதியாய் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தும்கூட பிரச்சனையின் தீவிரத்தை அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

அதேசமயம் ஏற்கனவே காது கேட்பதற்கான சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் பேச்சுப் பயிற்சிக்காக அங்கே வந்த வண்ணமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று அத்தகைய குழந்தைகள் பற்றிய குறைகளைக் கவனமாக விசாரித்தும், அவர்கள் சிகிச்சை செய்து கொண்டதைப் பற்றிய விவரங்களை நெகிழ்ச்சியோடு கலந்துரையாடியும் தங்களது குழப்பங்களை பெற்றோர்கள் அங்கேயே தணித்துக் கொள்ள முடியும். அதேபோல நம் பிள்ளைகள் போலவே பேசாமல் இருந்து, சிகிச்சைக்குப் பின்னர் நம்மைப் போலவே பேசுகிற குழந்தைகளோடு நாமும்கூட அமர்ந்து அவர்களிடம் செல்லமாகப் பேசி, அக்குழந்தைகளின் குரலில் இருக்கிற குழைவை இரசித்து, நம் பிள்ளையும்கூட இப்படி சிகிச்சைக்குப் பிறகு நன்றாகப் பேசிவிடுவார்கள் தானே என்கிற இறுதி முடிவிற்கு வருவதற்கு நல்லதொரு வாய்ப்பாகவும் இருக்கும். இப்படி வாழைநாரிழையில் பூக்கோர்ப்பது போல ஒவ்வொரு விசயமாகச் சேகரித்து அவர்களது வீட்டின் முற்றத்திலமர்ந்து விலாவாரியாகப் பேசிய பின்னர் தான் அவர்கள் சென்னை வருவதற்கான முன்னேற்பாட்டையே அரை மனதோடு ஏற்கத் துவக்கியிருந்தார்கள்.

அவர்கள் ஒப்புக் கொண்ட மனம் சட்டென்று மாறுவதற்குள் சென்னை செல்வதற்கான முன்பதிவுகளை உடனே செய்துவிட வேண்டுமென்று அப்போதிருந்தே நான் சிந்திக்கத் துவங்கியிருந்தேன். குறுகிய கால இடைவெளியில் சென்னைக்குப் புறப்படுவதற்கான இருக்கைகள் கிடைக்காமல் போகவே, அப்போது கிடைத்த அமரும் வகையிலான இருக்கைகளைப் பதிவு செய்து ஒருவழியாக நாங்கள் சென்னை கிளம்புவதற்கு ஆயத்தமானோம்.

சென்னைக்குப் பயணப்படுவதானால், எங்களிடம் டிக்கெட் பதிவு செய்யப் பையில் பணமில்லை, அங்கே சென்று தங்குவதற்கு ஒரு வாரமென்றால் செலவுக்குக் கையில் காசில்லை, ஒருவாரம் விடுப்பு சொல்லிவிட்டு வரவேண்டுமென்றால் அலுவலகத்தில் அனுமதி கிடைக்காது, சென்னைக்கு முன்பின் நாங்கள் சென்றதேயில்லை என்கிற போது மருத்துவமனையை நாங்கள் எங்கே சென்று எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது, படிப்பறிவற்ற எங்களுக்கு அங்கே ஆங்கில மருத்துவர்கள் சொல்கிற விவரங்களெல்லாம் புரியாத பட்சத்தில் நாங்கள் எப்படி ஒரு முடிவிற்கு வருவது என்பது உள்ளிட்ட பல காரணங்களால், இயல்பாகவே அவர்களுக்குள் வருகிற மனத்தடைகளால் இப்பயணம் தடைபடாமலிருக்க, நானே அவர்களின் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை அவசரகதியில் செய்ய வேண்டியிருந்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் இறுதியில் இரயில் நிலையத்தின் ஓரிடத்திலே கூடி இப்போது எங்களுக்கான இருக்கையிலே நாங்கள் வந்து அமர்ந்திருக்கிறோம்.

நான் இருக்கையில் அமர்ந்தபடியே பயணிப்பதொன்றும் பெரிய விசயமல்ல. அதேசமயம் ஒரு மருத்துவனாக ஆயிரக்கணக்கில் செலவு செய்து முதல் வகுப்பிலே பயணம் செய்வதும்கூட எனக்குப் பெரிய விசயமுமல்ல. ஆனால் அவர்களை தனியே விட்டுவிட்டு நான் மட்டும் சௌகரியமாகப் பயணம் செய்வதற்கு மனம் விரும்பவில்லை. அதேசமயம் நானும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் தான் என்கிற உணர்வை ஏற்படுத்த அவர்களோடு சேர்ந்து பயணிப்பது மட்டும்தான் எனக்கிருக்கிற ஒரே வழி என்பதையும் நான் அறிந்திருந்தேன். அவர்களின் அருகாமையில் அமர்ந்து கொண்டு அன்றாடக் குடும்பக் கதைகளைப் பேசிப் பயணிப்பதும்கூட ஒருவகையில் அவர்களை சிகிச்சை நோக்கி நகர்த்துவதற்கான அனுகூலமாகக்கூட அமையலாம், யாருக்குத் தெரியும்?

எங்களுக்கு அருகே சென்னை செல்ல வேண்டிப் பயணிக்கிற இன்னொரு குடும்பமொன்று நேரம் செல்வதற்குள் சாப்பிட்டுத் துயில் கொள்வதற்கான ஆயத்தமான வேலையில் இறங்கியிருந்தது. அவர்களின் கையிலே வைத்திருந்த இனிப்புப் பண்டங்களை அருகே விளையாடிக் கொண்டிருந்த காளீஸ்வரியையும் பிரியாவையும் ஜாடையாலே அழைத்து கையிலே வலிந்து திணித்துக் கொண்டிருந்தனர். அவர்களது முகத்தையும் அம்மாக்களின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தபடியே இனிப்புகளைச் சுவைப்பதைப் பற்றிய கனவுகளின் ஏக்கத்தோடு அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்புறம் என்ன நினைத்தார்களோ அல்லது அம்மாவின் எத்தகைய முகபாவனைகளை தங்களுக்கான சமிக்கையென அவர்கள் உணர்ந்து கொண்டார்களோ பவ்வியமாக பிஞ்சுக் கரங்களை நீட்டி அவற்றை வாங்கிக் கொண்டார்கள்.

அத்தோடு மட்டும் நின்றிருந்தால் பரவாயில்லை தான். ஆனால் குழந்தைகளை அருகே அழைத்து வயதேறிய தங்கள் குளிர்ந்த கைகளுக்குள் அந்தப் பிஞ்சுக் கரங்களைப் பொதிந்தபடி உம் பேரென்ன, உம் அம்மா பேரு என்ன, உனக்கு என்ன பிடிக்கும் என்று வரிசையாக குழந்தைகளுக்கென அவர்கள் மனதிலே அடுக்கி வைத்திருந்த கேள்விகளையெல்லாம் அடுத்தடுத்து வரிசையாக கேட்டபடியே இருந்தனர். எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் யாரோ யாரிடமோ பேசிக் கொள்வது போலான பாவனையில் குழந்தைகள் அவர்களது முகத்தையே ஆச்சரியத்தோடு பார்த்து இனிப்புகளை விழுங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் என்னுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்க நான் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தேன். இந்தப் பயணத்தில் இப்படியொரு மன அவஸ்தை நேருமென்பது நான் துளியும் எதிர்ப்பார்க்காத ஒன்று.

அருகிலுள்ளவரிடம் இக்குழந்தைகளைப் பற்றி சொல்லிவிடலாமா? இல்லையில்லை, அந்தப் பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம் ஒருபுறம், ஒருவேளை இந்த இரவு முழுவதும் இப்படியே குழந்தைகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தால் எவ்வளவு நேரம் தான் இந்த வலியைத் தாங்கிக் கொள்வது, அப்படியே சொல்லிவிட்டாலும்கூட அவர்கள் இந்தக் குழந்தைகளை எப்போதும் போலான பார்வையிலே தான் பார்ப்பார்களா அல்லது பாவப்பட்ட வாயில்லா ஜீவன்களிடம் காட்டுகிற கருணையின் வடிவான பாவனையைத்தான் வெளிப்படுத்துவார்களா, உன் பேரென்ன, அம்மா பேரென்ன என்று பிள்ளைகளிடம் கேட்கிற போதெல்லாம் பெற்ற மனங்களிரண்டும் என்னபாடு பட்டிருக்கும், எப்படியெல்லாம் மனம் அகதியாய் தவித்திருக்கும், என் பிள்ளை செவிடு, ஊமை.. போதுமா! என்று அடிவயிற்றிலிருந்து உரக்கக் கத்திவிட்டு தங்களது பிள்ளைகளை இறுக அணைத்துக் கொண்டு அரற்றிக் கொள்வதற்கான காத்திருப்பு தான் அவர்களது இந்த நெடிய மௌனமா அல்லது சுற்றியுள்ளவர்களின் காருண்யத்தை வேண்டி என் பிள்ளைக்கு இப்படியாகிவிட்டதே என்று நெக்குறுகி புலம்பி அழத்தான் நேரம் பார்த்துக் காத்திருக்கிறார்களா? இப்படி ஒவ்வொன்றாக நினைத்தபடி அந்தவொரு கணத்த நொடியில் எனது மனம் பலவிதமானதொரு பித்துநிலையில் உள்ளாரப் பிதற்றிக் கொண்டிருந்தது.

இந்தவொரு பயணத்தில் அதிலும் ஒரே ஒரு நிகழ்வை எதிர்கொண்ட எனக்கே இப்படியொரு அவஸ்தையும் வேதனையும் என்றால், இவ்வளவு காலமும் இப்படியொரு வாதையை வைத்துக் கொண்டு எப்படி இந்தப் பெற்றோர்களெல்லாம் காலத்தை எண்ணிக் கடத்துகிறார்கள் என்று அவர்களை நினைத்துக் கண்களைக் கலங்களாகக் கசக்கிக் கொண்டேன். தங்கள் வாழ்நாளில் எத்தனை மனப்போராட்டங்களை அவர்கள் நிகழ்த்தியிருக்கக்கூடும்? அப்போதெல்லாம் அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? தங்கள் பிள்ளை மற்ற பிள்ளையைப் போலில்லையே என்று என்னவெல்லாம் கசந்து யோசித்திருப்பார்கள்? ஏதோவொரு மனநெருக்கடியாகிவிட்ட பொழுதில் இப்படியொரு வாழ்க்கையை நாமும் நம் பிள்ளையும் வாழ்ந்து தான் தீரணுமா என்று எந்தக் கணத்திலாவது அவர்கள் யோசித்திருப்பார்களா?

இதையெல்லாம் யோசிக்க யோசிக்க இரயில் வண்டியின் தாலாட்டுகிற ததும்பல்களையும் கடந்து உடலும் மனமும் கணத்து அதிர்ந்தது. கொஞ்ச நேரத்தில் குழந்தைகளும் அம்மாக்களின் மடியில் சென்று முகங்களைப் புதைத்தப்படி தூக்கத்தில் சிணுங்கத் துவங்கிவிட்டனர். அருகிலிருந்தவர்கள், பிள்ளைங்க கூச்சப்படுதுங்க போல! என்றபடி அவர்களுக்குள்ளாகவே பேசிச் சிரித்துக் கொண்டனர். அவர்களிடம் நானும் சிரிக்காமல் சிரித்து வைத்தேன். நேரம் செல்லச் செல்ல அந்த இடமே புத்த மடாலயத்தின் பேரமைதிக்குள்ளாகி சுற்றிலும் இருள் சூழ்ந்து கொண்டதைப் போல நான் உணர்கையில் அத்தனை தூக்கி வழிகிற மனிதக் குவியலுக்குள்ளிருந்து மெல்லிசான ஒரு விசும்பல் சப்தமொன்று கேட்கத் துவங்கியிருந்தது. அதையெல்லாம் வலிந்து கவனிக்காமல் தடக் தடக்கென்ற சப்தங்களை மட்டுமே காதுகளில் நிறைத்துக் கொள்ள முயன்று முயன்று அயர்ச்சியில் நான் தூங்கி எழுந்த போது நாங்கள் இறங்க வேண்டிய சென்னை இரயில் நிலையத்தை அதிகாலையிலே அடைந்திருந்தோம்.

பிரம்மாண்டமாக சாலையின் விளிம்பையடைத்தபடி நிற்கிற காது மூக்கு தொண்டை மருத்துவத்திற்கென்றே பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட அந்தப் பிரபலபான மருத்துவமனையின் வாசலில் நின்ற போது நான் தங்கச் சுரங்கத்தின் வாசலில் நிற்கிற பெருமிதத்தோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அரசுக் கல்லூரி மருத்துவமனைகளில் இன்னும் பரவலாக காக்ளியார் சிகிச்சை துவங்கப்படாமலிருப்பதும், அதேசமயம் ஆயிரக்கணக்கிலான நோயாளிகளுக்கு மத்தியில் இக்குழந்தைகளைப் பரிசோதித்து சிகிச்சையைத் துவங்குவதற்காக மாதக் கணக்கிலே பெற்றோர்கள் காத்திருக்க வேண்டியிருப்பதாலும் நான் தனியார் மருத்துவமனையையே தேர்வு செய்திருந்தேன். 

அதிகாலை வெளிச்சம் உருக்கொள்வதற்குள் மருத்துவமனை நுழைந்துவிட்ட எங்களுக்கான வருகையைப் பதிவு செய்வதற்குரிய ஊழியர், பத்து மணிக்கு மேலே வருவதாகச் சொல்லி அங்கேயே காத்திருக்கப் பணிந்தனர், வரவேற்பரையிலிருந்த செவிலியர்கள். நான் எவரிடமும் என்னுடைய அடையாளத்தைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அது அவசியப்படுகிற இடங்களில் பயன்படுத்துவதைக் காட்டிலும் அநாவசியமாக எல்லாரிடமும் என்னை மருத்துவனென்று அறிமுகப்படுத்திக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்கிற உள்ளுணர்வின்படியே நான் இயங்கிக் கொண்டிருந்தேன். கடிகாரத்தின் விரல்கள் பத்து மணிப்பொழுதைக் கடக்கும் முன்பே உணவருந்திவிட்டு தயாராக இருந்த எங்களை ஒருவழியாக கீழ்த் தளத்திலிருக்கிற காப்பீட்டு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

மருத்துவமனைக்கு ஒரு காது கேளாமல் குறைபட்ட குழந்தையைப் பரிந்துரைக்கையில் என்னென்ன ஆவணங்களோடு அவர்களை அனுப்ப வேண்டுமென்று முன்பே மருத்துவமனையில் விசாரித்துக் கொண்டு வந்திருந்ததால் எல்லாமும் சுமூகமாகவே துவங்கியது. பெற்றோர்களின் ஸ்மார்ட் கார்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, பெற்றோர் மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், அம்மாவின் மகப்பேறுக்கால பச்சை நிற அட்டை மற்றும் தடுப்பூசி அட்டை. அத்தோடு கூடவே அதுவரையிலும் குழந்தைக்குப் பரிசோதித்த பழைய ஆவணங்களையும் கொண்டு வரச் சொல்லி அறிவுறுத்தியமையால் அதைக் கேட்டவுடனே அவர்கள் கையிலே எல்லாவற்றையும் கொடுத்துவிட்டோம். எல்லா அசல் ஆவணங்களோடு கூடுதலாக அதன் ஒரு நகல்களையும் கொடுத்த பின்பாக கணினியின் உதவியோடு முதலில் அதைச் சரிபார்க்கத் துவங்குகிறார்கள்.

ஸ்மார்ட் கார்டு மூலமாக பெற்றோர்களின் பெயர்கள், முக்கியமாக சிகிச்சை செய்து கொள்ளப் போகிற குழந்தையின் பெயர் இருப்பதை உறுதி செய்கிறார்கள். காப்பீட்டு அட்டையில் குழந்தையின் பெயர் இல்லாவிட்டாலும்கூட ஸ்மார்ட் கார்டில் பெயர் இருந்தாலே போதுமானது. அப்படி இல்லாவிட்டாலும்கூட குழந்தையின் பெயரை தாசிஸ்தார் அலுவலகம் சென்று பெயரைச் சேர்த்தோ அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை வைத்தே இன்னாரின் குழந்தை தான் என்று காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவோ முடியும். அடுத்ததாக காக்ளியார் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சையென்றால் ஆறு வயதிற்குள்ளாகத்தான் காப்பீடு திட்டத்தின் வழியே செய்ய முடியுமென்பதால் பிறப்புச் சான்றிதழை வைத்து வயதைக் கணக்கிடுகிறார்கள். பின்பு காப்பீட்டு எண்ணை அதன் இணையத்திற்குச் சென்று சரிபார்த்து, இந்தக் காப்பீட்டு அட்டையானது சிகிச்சை செய்து கொள்வதற்குத் தகுதியுடையது தானா என்பதனையும் உறுதி செய்கிறார்கள்.

அதேசமயம் இந்தக் குழந்தைகளுக்கான என்னுடைய தேடலில் இதுபோன்ற பலவிசயங்களை நானே எனது தேவைக்கேற்ப தெரிந்து வைத்திருப்பதால் மேற்கண்ட எல்லா விவரங்களையும் கணினியில் தனிப்பட்ட முறையில் நானே சரிபார்த்த பின்னர் தான் இப்பெற்றோர்களை சென்னைக்கு அழைத்தே வருகிறேன். ஏனென்றால் இந்தப் பெற்றோர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தாங்கள் வீணாக அலைகிறோம் என்று உணர்வதை நான் ஒருபோதும் விரும்பவில்லை என்பதே அதற்குக் காரணம்.

எல்லாவற்றையும் சரிபார்த்த பின்பாக குழந்தைகளுக்கென்று தனியே பைல் ஒன்றை தயார் செய்து அவற்றோடு காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவரைச் சந்திப்பதற்காக பெற்றோர்களை தரைத்தளத்திற்கு அனுப்புகின்றனர். நானும் பெற்றோர்களுள் ஒருவராக குழந்தைகளோடு அமைதியாக முன்னே நகர்ந்து கொண்டிருந்தேன். குளிருட்டப்பட்டு தாழிடப்பட்ட அந்த அறைக்குள்ளே நுழைந்தவுடன் அந்தச் சிறப்பு மருத்துவரும் எங்களைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்துவிட்டு குழந்தைக்கு என்ன பிரச்சனை, காது கேளாமலும் வாய் பேசாமலும் எவ்வளவு காலமாக இருக்கிறது, இப்பிரச்சனை பிறவியிலிருந்தே இருக்கிறதா அல்லது இடையிலே வந்த பிரச்சனையா என்று நோயிற்குரிய கேள்விகளைக் கேட்டு அதன் மூலக் காரணத்தைத் தேடிய பயணத்தை மெல்ல அடியெடுத்து துவங்கியிருந்தார்.

மகப்பேறு காலத்தில் இப்பிரச்சனை வருவதற்கான அறிகுறி ஏதும் தென்பட்டதா என்பதை அறிவதற்காக மகப்பேறு மற்றும் பிரசவ கால விவரங்களைக் கனிவோடு கேட்டபடியும், பச்சை வண்ண மகப்பேறு அட்டையிலிருக்கிற தகவல்களைப் படித்துப் பார்த்தும், கையிலிருந்த படிவங்கள் ஒவ்வொன்றாக நிரப்பிக் கொண்டிருந்தார். மிக முக்கியமாக, பெற்றோர்கள் நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்டவர்களா, குடும்பத்தில் எவருக்கேனும் மரபார்ந்த நோய்கள் ஏதும் தொடர்ந்து வருகிறதா என்பதைப் பற்றிய விவரணைகளை விலாவாரியாகக் கேட்டபடி இந்தக் குழந்தையின் பிரச்சனைக்கான மூலக்காரணத்தை பல தலைமுறைகளுக்கும் முன்னே சென்று தீவிரமாகத் தேடியலைந்தபடி இருந்தார். நான் அவரது கண்ணாடிச் சட்டத்திற்குப் பின்னாலிருக்கிற தேடுதல் நிறைந்த கண்களை எதிர்பார்ப்புகள் கலந்த பரிதவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

எல்லா கேள்விகளும் முடிந்த பின்பாக காதுகளை நுண்ணோக்கிக் கருவியின் வழியே பரிசோதித்தபடி வெளிக்காது, மற்றும் சவ்வின் தன்மையை அவர் உறுதி செய்கிறார். வெளிக்காதில் அழுக்கு மற்றும் காது ஜவ்வில் ஓட்டை போன்ற காரணங்களால் ஏற்படுகிற காது கேட்டல் பாதிப்பு இருப்பின் அதையும் கண்டறிய வேண்டித்தான் இத்தகைய பரிசோதனைகளை அவர் மேற்கொள்கிறார். ஒருவேளை காதுகளில் இறுகிப்போன அழுக்குகள் இருந்துவிட்டால் அவர்களை தொடர்ந்து சொட்டு மருந்து போடச் சொல்லி வீட்டிற்கு அனுப்பி ஒரு வாரம் கழித்தே மீண்டும் வரச் சொல்லுகிற நிகழ்வுகள் நடப்பதாக மருத்துவர் போகிற போக்கில் சொல்லிய போது அதை கவனமாகக் குறித்து வைத்துக் கொண்டேன். இனிமேல் என்னால் பரிந்துரைக்கப்பட்டு சென்னை செல்கிற குழந்தைகளுக்கு நானே காதில் அழுக்கையெல்லாம் பரிசோதித்துப் பார்த்து அனுப்பிவிட வேண்டும். இல்லையென்றால், பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சென்னை வரை வந்துவிட்டு மீண்டும் இதற்காகவென்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டால் இதையே சாக்காய் வைத்துக் கொண்டு அவர்கள் திரும்பவும் சிகிச்சைக்கு வர மறுத்துவிடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

குழந்தைகளுக்கு சில எளியமுறையிலான ஆரம்பகட்ட கேட்டல் பரிசோதனைகளைச் செய்த பின்பாக, மருத்துவர் அவரளவிலே பிறவிக் குறைபாடுகள் இருப்பதை ஒரளவு முடிவு செய்துவிடுகிறார். அதன் பின்னர் குறைபாட்டை உறுதி செய்வதற்கான கேட்டல் தொடர்பான ஏனைய பரிசோதனைகளையெல்லாம் செய்து வரச் சொல்லி ஆய்வகத்திற்குப் பரிந்துரைந்துவிட்டு அடுத்த குழந்தைகளைப் பார்ப்பதற்காக அவர் கிளம்பிக் கொண்டிருந்தார். நாங்கள் அவரின் பரிந்துரைப் படிவங்களை வாங்கிக் கொண்டு அருகிலிருக்கிற பரிசோதனைக் கூடத்திற்குள் அவசரகதியோடு உள்ளே நுழைந்தோம். அங்கே நாங்கள் இதற்கு முன்னால் கற்பனையிலும் நினைத்துப் பார்த்திடாத விசித்திரமான சூழலைக் கண்ட நிமிடத்தில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போய் பனிச்சிற்பங்களாய் நின்று கொண்டிருந்தோம்.

எங்களைப் போலவே தமிழகமெங்கிலும் இருந்து வந்திருக்கிற பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளால் நிரம்பியிருந்தது அந்த நுழைவரங்கம். குழந்தைகளை மடியில் கிடத்திக் கொண்டும், தோள்களில் தட்டிக் கொடுத்த படியும் இருக்கிற வாஞ்சையுடன் கூடிய தாய்மார்களையும், புத்தம் புதிய இடத்தில் பரிட்சயமற்று வீரிட்டு அழுகிற குழந்தைகளை அரற்றி அமைதியாக்கப் போராடிக் கொண்டிருக்கிற பதட்டத்துடன் கூடிய அம்மாக்களையும், தன் சப்தத்தின் அளவறியாது உரக்கச் சிரித்து, அழுது ஆர்ப்பாட்டம் செய்தபடி மருத்துவமனை வெளியிலும், நெருக்கடியான சாலையிலும் கண்மூடித்தனமாக அசட்டையோடு ஓடித்திரிகிற குழந்தைகளையும், தரையில் தவளையாகக் கிடந்து முரண்டு கொள்கிற குழந்தைகளையும், அங்கே ஒருசேர கண்ட நொடியில் எனக்குத் திக்கென்றிருந்தது. நாங்கள் உள் நுழைந்த அந்த நேரத்திலும்கூட சுமார் நாற்பதிற்கும் மேலான குழந்தைகள் இதே பரிசோதனைக்காக வந்து காத்துக் கொண்டிருந்தனர்.

நாங்கள் வரவேற்பறையை அணுகி குழந்தைகளுடைய பைலைக் கொடுத்து நிமிருகையில் எதிரே நீண்ட பட்டுத்துணியிலான வண்ணப் பலகையில் புகைப்படமாய் சிரிப்போடும் அழுகையோடும் உறைந்திருக்கிற குழந்தைகளின் நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட் படங்களைப் பார்த்தோம். அதைப் பற்றி விசாரிக்கையில், அவர்களெல்லாம் சிகிச்சை செய்து கொண்டு பேசிய குழந்தைகளின் ஞாபகப் புகைப்படங்கள் என்று சொல்லிச் சிரித்த போது என்னால் பதிலுக்கு எந்தச் சிரிப்பையும் உதிக்க முடியவில்லை. பூக்களில் மொய்த்துக் கொண்டிருக்கிற வண்ணத்துப்பூச்சிகளைப் போலத் தெரிகிற அந்த வண்ணப் பலகையில் எட்டிப் பார்க்கிற குழந்தை முகங்களை நான் நீண்ட நேரமாகவே உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

இதுவரையிலும் சொற்பமான அளவிலேதான் இக்குழந்தைகள் இருக்கக்கூடும் என்ற சமாதானத்தில் இயங்கிக் கொண்டிருந்த எனக்கு சற்றும் எதிர்பார்த்திடாத வகையில் இத்தனைக் குழந்தைகளை புகைப்படங்களாகவும், நிஜத்திலும் கண்ட அதிர்ச்சியில் எனக்குள்ளே நான் நொருங்கிப் போனேன். ஆனாலும் இப்படங்களெல்லாம் வெற்றிகரமாகப் பேசிக் குணமாகிய குழந்தைகளின் பொக்கிஷங்கள் என்கிற சிறு நெகிழ்வு எனக்குள் ஆசுவசத்தை நிகழ்த்தியது. ஆனால் இவ்வளவு குறைபாடுடையக் குழந்தைகளைக் கண்ட பின்னாலும்கூட அந்த வரவேற்பறைப் பெண்ணின் முகத்தில் இயல்பானதொரு சிரிப்பை வெளிப்படுத்த முடிகிறதென்றால் அத்தகைய மகோன்னத நிலையை அடைவதற்கும்கூட ஒரு தனித்த பயிற்சி வேண்டும் தான் போல என்று நான் நினைத்துக் கொண்டேன். என்னால் அந்தப் புன்னகையின் தரிசன எல்லையைக் காலத்தில் அடைந்துவிட முடியுமா என்கிற ஆவல் தொற்றிக் கொள்ள அங்கிருந்தவர்களின் முகங்களையே மாறி மாறி பார்த்துப் பரவசமடைந்து கொண்டிருந்தேன்.

எங்களுக்கான அழைப்பு வரும் வரையிலும் நாங்கள் அங்கேயே காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தச் சிறியதொரு தருணத்தில் நிதானமாக குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்ட எல்லா அறைகளையும், விதவிதமான தோரணையில் வந்திருக்கிற பெற்றோர்களையும், அவர்கள் தம் குழந்தைகளையும் நான் நுட்பமாக கவனிக்கத் துவங்கியிருந்தேன். ஆறு மாதக் குழந்தை முதல் ஆறு வயதுக் குழந்தைகள் வரையிலான எல்லா பருவத்தினரும் அங்கே நிறைந்திருந்தார்கள். பச்சைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்த ஒருவர் அழுகிற குழந்தையை மார்பிலிட்டு அணைத்தபடியே விட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். அவரது பார்வையில் வெறுமை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து அமர்ந்து கொள்வதைப் போல நீண்ட நேரமாக அவரது நிலைத்த பார்வையை அங்கிருந்து அகற்றவேயில்லை.

ஊரிலிருந்து கிளம்பி அப்படியே அரக்கப் பறக்க ஓடி வந்த களைப்போடும், பசியின்றி அழுக்குப் படிந்த கண்களில் கலங்கிய கண்ணீரோடும் கலந்த பெற்றோர்களின் நடுவே ஒருவனாக நான் அமர்ந்திருந்தேன். அங்கிருந்த குழந்தைகள் சிலர் புத்தனின் பேரமைதியோடும், ஒருசிலர் ஆழ்துளைக் கிணறு துளைக்கிற இரைச்சல் பெருவெளியைப் உருவாக்குகிற குறும்புத்தனத்தோடும் மருத்துவமனையை பரபரப்பான சந்தை போலவே உருமாற்றி வைத்திருந்தனர். எல்லா மருத்துவமனையிலும் பார்க்கிற பேரமைதியின் உறைவிடத்தை இங்கே என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாவற்றிலிருந்தும் தனித்த ஆன்மாவொன்று இங்கே சுற்றிக் கொண்டிருப்பதைப் போலொரு உணர்வு எனக்குள் கிளர்ந்தபடியே இருந்தது. அதேபோல துயரத்தின் சாயல் படிந்த அத்தனை முகங்களையும் கலைந்துவிட்டு அத்தனை குழந்தைகளையும் ஒருபோலப் பாவித்து பெற்றோர்களையும்கூட அத்தகைய குழந்தைமைக்குள் அடைத்துக் கொண்டு வாஞ்சையோடு அரவணைத்துச் செல்கிற பயிற்றுநர்களை நான் ஆரம்பத்திலிருந்து பார்த்தபடியே இருக்கிறேன். எங்களது முறையின் போது தாய்மையின் ஒட்டுமொத்த அன்பும் ததும்புகிற இளவயது பெண்ணொருவள் வந்து குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைத்த போது நாங்கள் நிதானித்துக் கொண்டு உள்ளே கிளம்பினோம்.

அங்கே காது கேட்டலைப் பரிசோதித்து அறிவதற்கான ஐந்து விதமான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் குழந்தைகளை அவர்களது போக்கிலேயே பொம்மைகளிடம் விளையாட விட்டு குழந்தைகளின் இயல்பை, கூர்ந்து நோக்குகிற பண்பை, பொம்மைகளைக் கையாளுகிற நுண்ணறிவுத் திறனை ஆராய்கிறார்கள். இதன் வழியே அக்குழந்தைக்குக் காது கேட்டல் தொடர்பான பிரச்சனையைத் தவிர்த்து வேறு ஏதேனும் மூளை வளர்ச்சிக் குறைபோடோ, ஆட்டிசக் குறைபாடோ இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கண்டறிகிறார்கள். பின்பு பிரத்தியேகமான காது கேட்டல் கருவிகள் மூலமாக அவர்களைப் பரிசோதித்துப் பார்க்கின்ற வேலையில் துரிதமாக இறங்கிவிடுகிறார்கள்.

ஏற்கனவே சொல்லியபடி வெளிக்காது, நடுக்காது, உள்காது என்றிருக்கிற காதுக்கான பகுதியில் எந்த இடத்தில் காது கேட்டலுக்கான பிரச்சனையிருக்கிறது என்பதைத் தனித்தனியே கருவிகள் வழியே பரிசோதித்துப் பார்க்கத் துவங்குகிறார்கள். முதலில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளின் வழியே கவனத்தை ஏற்படுத்தி சப்தங்களின் அளவுகளுக்கு ஏற்ப அவர்கள் எப்படி தங்கள் கவனத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை ஆடியோகிராம் கருவியின் வழியே வெளிக்காதின் செயல்பாட்டை பதிவு செய்கிறார்கள். இரண்டாவதாக நடுக்காதிற்கான ஆடியோகிராம் பரிசோதனையில் சவ்வுக்குப் பின்னேயிருக்கிற பெட்டி போன்ற பகுதியில் ஏதேனும் நீர் கோர்த்திருக்கிறதா, நுண்ணிய எலும்புகளில் பிரச்சனை ஏதுமிருக்கிறதா என்பதையும் பரிசோதித்துப் பார்க்கிறார்கள்.

இதைப் பற்றிய அறிக்கையை சரிபார்க்கிற போதே மாலைப் பொழுதாகிவிட்டதால் ஏனைய பரிசோதனைகளை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களது அறைகளுக்குத் திரும்ப அனுப்பிவிட்டார்கள். அதேசமயம் அடுத்ததாக உள்காதுகளைப் பரிசோதிக்கின்ற மிக மிக்கியமான பரிசோதனைகளைச் செய்யவிருப்பதால் அதற்கான ஆயத்த வேலையாக குழந்தைகள் நன்றாகத் தூங்க வைக்க வேண்டியிருக்கும் என்பதையும் எங்களிடம் அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளைத் தூங்க வைத்த பின்னால் எடுக்க வேண்டிய பரிசோதனைகளுக்காக அவர்களை இரவிலே அதிகமாகத் தூங்கவிடாமல் செய்து அதிகாலையில் சீக்கிரமாகவே எழுப்பிவிட்டு மறுநாள் அரைத் தூக்கத்தோடு குழந்தைகளை அழைத்து வாருங்கள் என்பதை ஒரு முக்கிய அறிவிப்பைப் போலச் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்கள்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

விடிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து உறங்கிக் கொண்டிருக்கிற குழந்தைகளை எழுப்பி பெற்றோர்கள் அவர்களை அழ வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் வேறு வழியில்லை தான். ஏற்கனவே காளீஸ்வரியின் பெற்றோர்கள் இப்படியான பரிசோதனைக்கு அழைத்துச் சென்று அவள் தூங்காத காரணத்தினால் தானே பரிசோதனையும் செய்யாமல், இவ்வளவு காலம் சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். ஆதலால் தூங்காமல் இருப்பதன் காரணமாக பரிசோதிக்கத் தாமதமாவதையோ, அதனால் பரிசோதிக்க முடியாமல் சிகிச்சை தள்ளிப் போவதையோ அவர்களுமே விரும்பவில்லை.

நீண்ட தூரம் பயணித்த களைப்பிலும், நேற்று மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்த பின்பாக அடைந்த எரிச்சலிலும் குழந்தைகளின் பிடிவாதம் அதிகாலையில் உக்கிரமடையத் துவங்கி உரத்த அழுகையாக அது வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பேய் பிடித்த வீட்டில் இரவில் கோடாங்கி அருள் வந்து ஆடி பேயோட்டுவதைப் போல இரண்டு குழந்தைகளையும் நடு ஜாமத்திலே எழுப்பி விட்டு அவர்களோடு பெற்றோர்களும் அர்த்த ராத்திரியில் ஏதேதோ விளையாட்டுக் காட்டி தூக்கத்தை விரட்டியடித்தபடி இருந்தனர். அடிவயிற்றில் கிச்சுக்கிச்சு மூட்டியபடி குழந்தைகளை வாய்விட்டுச் சிரிக்க வைத்து அவர்களோடு சரிக்குச் சமமாக பெற்றோர்களும் விளையாடி குழந்தையாகவே மாறியிருந்தனர். குழந்தைகளோடு குழந்தைகளாய் தலையில் கொம்பு முளைத்து முட்டி விளையாடுகிற அவர்களைப் பார்த்த நிமிடத்தில் என்னோடு ஆங்காரமாகப் பேசிச் சண்டையிட்டுக் கொண்ட பெற்றோர்கள் தான் இவர்களா என்று ஒரு கணம் சிரிப்பு வந்து அது கண்ணக்குழியில் போய் விழுந்தது. அவர்களின் செய்கைகளை இரசித்துச் சிரித்து உள்ளார மகிழ்ந்தபடியே சுவரோரமாய் படுத்து அப்படியே நான் மறுபடியும் தூங்கிப் போனேன்.

விடியக்காலை எழுந்து விளையாடிய அசதியில் குழந்தைகள் கண்ணசரத் தூங்கவும் பயிற்றுநர்கள் அடுத்தடுத்த பரிசோதனைகளை வரிசையாக எடுத்தபடி இருந்தனர். எங்கே பாதியில் விழித்துவிடுவார்களோ என்கிற பயம் ஒருபுறமிருக்க, வயர்கள் பொருத்தப்பட்டு சாந்தமாக துயல் கொள்கிற குழந்தைகளின் முகத்தையும், பரிசோதிக்கிற கருவிகள் இயங்குகிற நுட்பமான அசைவுகளையும், அதற்கேற்ப படிவத்தில் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிற பயிற்றுநர்களின் இசைவையும் மாறி மாறி பெற்றோர்களோடு நானும் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். உள்காதினைப் பரிசோதிக்கிற ஓ.ஏ.இ மற்றும் பெரா பரிசோதனையை எடுத்த பின்னர் இறுதியாக ஹியரிங் எய்டு கருவியை பொருத்திப் பார்க்கும் பரிசோதனையைத் துவக்கினார்கள்.

அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய உலகத்தரத்திலான ஹியரிங் எய்டு கருவியை காதுகள் இரண்டிலும் ஒவ்வொன்றாகப் பொருத்திப் பார்த்து இக்குழந்தைகளுக்கு வெளிப்புற ஹியரிங் எய்டு கருவியின் வழியாகவே எளிதாகக் குணப்படுத்திவிட முடியுமா அல்லது காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசன் (Cochlear implant) வழியாகத்தான் தீர்வு காண முடியுமா என்பதைப் பரிசோதித்துக் கண்டறிகிறார்கள். இந்தப் பரிசோதனையில் தோல்வியுறுகிற குழந்தைகளுக்கு காக்ளியார் இம்பிளாண்ட் செய்வதைத் தவர வேறு வழியேயில்லை என்பதைப் பெற்றோர்களுக்கு ஒருவழியாக அவர்கள் தெளிவுபடுத்தியும் விடுகிறார்கள். பின்பு ஆரம்பத்திலிருந்து செய்த குழந்தைகளின் ஒட்டு மொத்த கேட்டல் பரிசோதனைக்கான முடிவுகளையும் ஒருங்கே வைத்துக் கொண்டு ஒரு நீண்ட முழுஅறிக்கையை தயார் செய்து பெற்றோர்களின் கைகளில் தருகிறார்கள்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14
காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசன் (Cochlear implant)

அதன் முடிவுகளுக்காக நாங்கள் வரவேற்பறையில் காத்திருக்கிற தருணத்தில் அங்கே பரிசோதனைக்காக தூங்க வைக்க முடியாமல் திணறியபடி இருக்கிற பெற்றோர்களின் செய்கைகள் ஒவ்வொன்றும் எனக்குள் ஒருவித நெகிழ்ச்சியான உணர்வைக் கிளர்த்தியிருந்தது. ஒருவர் ஐந்து வயது நிரம்பிவிட்ட தன் குழந்தையைத் தூங்க வைக்க கடையிலிருந்து பால் டப்பாவில் பாலை நிறைத்துக் கொண்டு வந்து பச்சிளம் குழந்தையைப் போல மடியில் கிடத்தி புகட்டிக் கொண்டிருந்தார். வயிறு நிரம்பிவிட்டால் விரைவில் தூங்கிவிடுவான் என்கிற நினைப்பில் அவர் பால் இறங்குகிற தொண்டைக்குழியையும் குழைந்து கிறங்குகிற கண்பாவைகளையும் பரிதவிப்போடு பார்த்தபடி இருந்தார்.

புட்டிப் பால் குடித்து நிரம்பிய வயிற்றோடு அவனைத் தூக்கி தோள் மீது போட்டு தூங்க வைக்க முயலுகையில் அவன் தெத்துப் பல்லைக் காட்டி உதட்டைப் பிதுக்கியபடி பின்வாக்கில் என்னைப் பார்த்து கண்ணக்குழி நிறைய சிரித்துக் கொண்டிருந்தான். எனக்கும் அவனைப் பார்த்து அடக்க முடியாதவாறு சிரிப்பு கொப்பளித்துக் கொண்டிருக்க, சிரிப்பை அடக்கியும் அடக்க முடியாதவாறும் அவனது செய்கைகளை நான் வெட்கத்தோடு முகத்தை மூடி இரசித்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி அவன் தூங்கிவிட்டானா என்று தலையைத் திருப்பித் திரும்பப் பார்த்து உள்ளார கொதிப்படைந்து கொண்டிருந்தார் அவனது அம்மா.

அங்குதான் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக அம்மாக்கள் செய்கிற குழந்தைமை கூடிய செய்கைகளை பரவசத்தோடு பார்த்து நெகிழ்ந்து கொண்டிருந்தேன். பச்சைக் குழந்தையொன்றை தோளிலே போட்டு மெல்லிய துண்டையோ அல்லது சேலை முந்தாணையோ முதுகில் போர்த்தியபடி மருத்துமனையின் குறுக்காக நடந்து நடந்து தேய்ந்து கொண்டிருந்தார் ஒரு அம்மா.

இன்னொருவர் அவரது மகனை மடியிலே கிடத்தி தலையை இடது தொடையில் தாங்கியபடி காது கேளாத குழந்தைக்குத் தாலாட்டுப் பாடி சோர்வுற்ற அவரது உதடுகளில் இருந்து முணுமுணுக்குகிற சொற்களுக்கு ஏற்ப தொடைகளைத் தாளகதியிலே ஆட்டி இசைத்துக் கொண்டிருந்தார். அவரது முக அசைவும் முக பாவணைகளும் தொடையசைவோடு ஒத்திசைவாக கலந்து இசையை மீட்டெடுத்தன. குழந்தையின் கால்கள் வலது தொடையை மீறி தரையில் தளர்ந்து கிடக்க, வலது கைகளை இடுப்பைச் சுற்றி வளைத்துப் போட்டபடி கைகளை ஒருவாக்கில் மடித்து குழந்தையின் முதுகிலே அணில் கோடுகளாய் வருடித் தடவியபடியே நீண்ட நேரமாக அவனைத் தட்டித் தூங்க வைத்துக் கொண்டிருந்தார். இடது கைகள் வயலினின் உலோகக் கயிறுகளை அநாயசமாக சுண்டி மீட்பது போல மகனது தலைமுடியைக் கோதியபடியே இருந்தது.

அவரது எண்ணெய் பிசுபிசுப்பற்ற தலையும், குறுகிய தடித்த கழுத்தும், பருத்த அவரது உடலுமாக இயங்குகிற இசைவை பார்க்கப் பார்க்க அவர் ஒட்டு மொத்தக் கச்சேரியின் அத்தனை இசைவடிவங்களையும் தனது அங்கங்கள் ஒவ்வொன்றிலும் பொதிந்து வைத்திருப்பதைப் போலவே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. தனது வாய் தாலாட்டை கேட்க முடியாத மகனின் உடலிற்குள் தனது உடலசைவின் வழியாக இணைத்துணுக்குகளின் சங்கேதக் குறியீடுகளைக் கடத்தியபடியே ஆழ்ந்து தூங்க வைத்துக் கொண்டிருந்தார். இதுகூட தாலாட்டின் ஒரு வடிவம் தானென உள்ளிற்குள்ளேயே நெகிழ்ந்து உருகிக் கொண்டிருந்தேன் நான். சற்று நிமிடத்திலே கண்கள் கிறங்கிச் சுழல, புல்வெளியில் பனித்திரள் பந்துகள் திரண்டு கொள்ள, காலர நான் எங்கோ நடக்கையில் பாதங்கள் பனித்துளியில் கூசியபடியும், வீசுகிற குளுமையின் ஈரத்தில் நனைந்து போய் அதன் உருகி வழியும் இயற்கையின் ஸ்பரிசத்தில் தணிந்து கிளர்ச்சியுற்று மெல்ல மெல்ல மயங்கி நான் வீழ்வதைப் போல உணருகையில் அந்தக் குழந்தையோடு நானும் என்னை மறந்து ஆழ்ந்து தூங்கத் துவங்கியிருந்தேன்.

ஒருகணம் பார்த்துக் கொண்டிருக்கையிலே அவளது தாளகதியினுடைய துடிப்பின் மயக்கம் எனக்குள்ளே பரவசமாய் இறங்கி கிறங்கிச் சொக்கி தூக்கநிலைக்குச் சென்று மீண்டதை நினைத்து வெட்கப்பட்டு நான் பெண்மையாய் சிரித்துக் கொண்டேன். அவளின் அங்கங்கள் ஒவ்வொன்றின் இசைமையினுடைய அசாதாரண உற்சவத்தைப் பார்த்து கொஞ்சம் நானும் மருண்டு தான் போயிருந்தேன். சற்று நேரத்தில் துயில் கொண்டுவிட்ட அந்தக் குழந்தையை அழைத்துச் சென்ற பின்பாக இன்னொரு அம்மா தன் தூங்காத மகளை அள்ளியெடுத்தபடி ஒரு மூலைக்குத் தூக்கிச் சென்று கொண்டிருந்தார். எப்போதும் அம்மாவின் மேல் கால்போட்டுத் தூங்குவதற்காக அடம்பிடிக்கும் குழந்தையின் செய்கையை உணர்ந்த தாயாய், அவள் தானிருக்கிற இடத்தின் பிரக்ஜையற்று ஒரு ஓரமாய் துண்டை விரித்து மகளை தன்னருகிலே கிடத்தியவுடன் குழந்தை தன்னியல்பாக தனது காலைத் தூக்கி அவள் மேல் போட்டுக் கொடியைப் போல சுற்றியபடி அப்படியே தூங்கியும்விட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில் அடிக்கடி தூக்கத்திற்குச் சென்று மறுபடி மறுபடி ஏதேனுமொரு குழந்தையின் வீரிட்டலில் எழும் மற்றுமொரு பிள்ளையைப் போல நானும் அங்கே தூக்கக் கலக்கத்தோடு அமர்ந்திருக்கையில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. இத்தனை இரைச்சலிலும் கண்ணயர்ந்து கொஞ்ச நிமிடம் நான் தூங்கியது அதிசயமான விசயம்தான். ஆனாலும் இக்குழந்தைகளெல்லாம் காது கேளாமல் இருப்பதன் காரணமாக இந்த இரைச்சல்களின் தொந்தரவுகள் ஏதுமற்று தூங்கியெழுந்து பரிசோதித்த பின்னால் அனைவரும் திவ்வியமாக வீடு போய் சேருகிறார்கள். இந்தக் குழந்தைகளெல்லாம் எத்தகைய பாவப்பட்ட ஜீவன்கள் என்று உள்ளார உடைந்து பொறுமிக் கொண்டிருந்த நிமிடத்தில், எங்களது குழந்தைகளின் பெயர்கள் வாசிக்கப்பட்ட போதுதான் துணுக்குற்று அத்தகைய பரிசோதனை முடிவுகளை வாங்கிபடி மீண்டும் மருத்துவரைச் சந்திப்பதற்காக அங்கிருந்து நகர்ந்து கடைசியாக வெளியேறினோம்.

அதுவரை பெற்றோர்களுடன் துணையாக வந்திருந்த மனிதரைப் போலான உளவியலில் இயங்கிக் கொண்டிருந்த எனக்குள்ளே, மருத்துவன் என்கிற இன்னொரு ஜீவன் அப்போதுதான் பூதக்கண்ணாடியோடு மெல்ல எட்டிப் பார்க்கத் துவங்கியிருந்தது. அந்தக் குழந்தைகளின் பரிசோதனை முடிவில் என்ன எழுதியிருக்கிறென்று பார், அவர்களுக்கு என்ன பிரச்சனை, காது கேட்டலில் எத்தனை சதவீதம் கேட்கிறது, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதைப் பற்றி ஏதேனும் குறிப்பிடிருக்கிறார்களா என்று பார்.. பார்..  என வெள்ளைக் கோட்டணிந்த மருத்துவன் ஒருவன் உள்ளிருந்து கூக்குரலிட்டபடியே தவித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் நிதானித்து அவர்களிடமிருந்து பரிசோதனை முடிவுகளை வாங்கிப் பார்த்த பின்னர், மனம் இன்னதெனப் புரியாத உணர்ச்சிக்குள் மூழ்கித் திளைக்கத் துவங்கிவிட்டது.

தொண்ணூறு சதவீத்திற்கும் மேலாக கேட்கும் திறனை இழந்த இரண்டு குழந்தைகளையும் காக்ளியார் இம்ப்ளாண்ட் செய்யப் பரிந்துரை செய்திருந்தது அந்த அறிக்கை. சட்டென்று மனம் மகிழ்ச்சியில் திளைக்கத் துவங்கியிருந்தது. ஒருவழியாக இப்பெற்றோர்களை அழைத்து வந்து குழந்தைகளுக்கான காலம் கனிந்து கரைவதற்குள் அவர்களை சிகிச்சைக்குத் தயார்படுத்திவிட்டோம் என்கிற நிம்மதியான பெருமூச்சு நெஞ்சுக்குழியிலிருந்து இதமாக வெளியேறி காற்றில் கலந்தது. அடுத்த கணமே, அடச் சே! ஒரு குழந்தை பிறவிக் குறைபாடாய் இருக்கிறென்கிற அறிக்கையை அவர்கள் அளித்திருக்கிறார்கள், அதற்காக வருத்தப்பட்டு பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்வதை விட்டுவிட்டு, மனம் ஏன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனத்தோடு துள்ளிக் குதிக்கிறது என்று என்னை நினைத்து நானே நொந்து கொண்டேன்.

இந்தக் குழந்தைக்கு எல்லாமும் சரியாய் இருந்திருக்கக் கூடாதா என்று ஒருமுறைகூட என் மனம் சிந்திக்கத் தவறியதை எண்ணி என்னை நானே எரிச்சலோடு திட்டிக் கொண்டேன். என் கையிலிருக்கிற அறிக்கைகளையும், அதை வாசித்தபடி வரிகளின் மேல் அலைவுறுகிற உருளைக் கண்களையும், நம் பிள்ளைக்கு அப்படி ஏதும் தீர்க்கமுடியாத குறையில்லை என்று சொல்லப் போகிற நடுங்கித் துடிக்கிற அந்த உதடுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிற பெற்றோர்களிடம் என்னால் எதையுமே பேச முடியவில்லை. உங்கள் பிள்ளைக்கு குறைபாடு உறுதியாகிவிட்டது, ஆபரேசன் தான் ஒரே தீர்வும், அதுவே இறுதியான முடிவென்றும் சொல்லிவிட்டு முன்னே போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவரின் அறையின் வாசல் வந்துவிட, எங்களது முகத்தில் நிசப்தத்தை பூசியபடியே உள்ளே நுழைந்தோம்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

மருத்துவர் நிதானமாக அறிக்கையைப் படித்துவிட்டு அதைப் பற்றி விளக்கமாக அந்தப் பெற்றோர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் திரும்பித் திரும்பி என் முகத்தையே தவிப்போடு பார்த்தபடி இருந்ததைத் தவிர்க்க நான் அங்குமிங்கும் கண்களை அலைபாயவிட்டுக் கொண்டிருந்தேன். அவர்களது முகத்தில் நமது குழந்தையைச் சரியான இடத்தில், சரியான நேரத்தில் கொண்டு வந்து நல்லபடியாகப் பரிசோதித்துக் குறைபாட்டைக் கண்டுபிடித்துவிட்டோம் என்கிற திருப்தியேதும் தெரிகிறதா அல்லது எங்கு சென்றாலும் என் பிள்ளைக்கு எல்லாம் சரியாகிவிடும் என்ற வார்த்தைகளை உதிர்க்கிற எந்த மருத்துவர்களையும் காணவில்லையே என்கிற பரிதவிப்பு இருக்கிறதா என்று எதனையும் என்னால் உறுதிபட ஊகித்தறிய முடியவில்லை.

ஒருவழியாக காது வரை பரிசோதித்துவிட்ட பின்பாக காதிலிருந்து மூளை வரையிலும் நீளுகிற காது நரம்புகளையும், நரம்பு சென்று முடிகிற காது கேட்கிற மூளைப் பகுதியையும் பற்றி அறிந்து கொள்வதற்காக சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைகளை எடுப்பதற்குப் பின்னர் அறிவுறுத்துகிறார்கள். அதன் வழியே காது நரம்பிலும், அது மூளைக்குள் பயணிக்கிற பாதையிலும், கேட்பதற்கும் பேசுவதற்குமான மூளைப் பகுதியிலும், வேறு எந்த குறைபாடும் இல்லையென்பதை உறுதி செய்கின்றனர். இப்பரிசோதனை முடிவுகளை மனக் கணக்காக முடிச்சுப் போட்டு இக்குழந்தைக்கு கட்டாயம் அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வு, அதுவே நிரந்தரமான தீர்வு என்பதை மருத்துவரும் தெளிவுபட இறுதியில் அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சில் எவ்வித குழைவையோ தயக்கத்தையோ காண முடியாமல் நேரடியாக குழந்தையின் பிரச்சனையும், அதன் தீவிரத்தையும், அதற்கான சிகிச்சையும் மட்டுமே அறிவுறுத்திய பாவனையைக் கண்ட தருணத்தில் நான் மருத்துவன் என்கிற இடத்திலிருந்து எவ்வளவோ தொலைவு விலகி வந்துவிட்டேன் என்ற பிரம்மை என்னை அச்சுறுத்தியது.

இவையெல்லாம் முடிந்த பின்பாக அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்வதற்கான இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், எக்ஸ் ரே மற்றும் இ.சி.ஜி போன்றவற்றை எடுக்க பரிந்துரைக்கின்றனர். அத்தனை பரிசோதனை முடிவுகளையும் பார்த்த பின்னர் முடிவாக, அறுவை சிகிச்சை செய்வதற்கு பல்வேறு சிறப்பு மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சைக்கான அனுமதி பெற்று வருவதற்காக பரிந்துரைக்கின்றனர். காது கேளாத குறைபாடானது பிறவிக் குறைபாடாக இருக்கிற போது குழந்தைகளுக்கு வேறு எந்த உறுப்பிலாவது ஏதாவது பிரச்சனை இருக்குமா என்பதை அறிய வேண்டித்தான் இத்தகைய சிறப்பு மருத்துவர்களிடம் பரிந்துரை செய்கிறார்கள். ஆக, காது கேட்பதற்கான பரிசோதனைக்கு வந்து எல்லா சிறப்பு மருத்துவர்களையும் பார்த்த திருப்தி பெற்றோர்களுக்குக் கிடைத்துவிடும் என்று ஒருபுறம் நிம்மதியாகவும் இருந்தது.

அதாவது காது கேட்டல் குறைபாடுடன் இருதயம் தொடர்பான வேறு ஏதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க இருதய சிறப்பு நிபுநரிடம் சென்று இருதய ஸ்கேன் பரிசோதனைகளை எடுத்துப் பார்க்கிறார்கள். மூளை தொடர்பான பிரச்சனைகளையும் ஆட்டிசம் குறைபாடுகளையும் கண்டறிவதற்கு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையைப் பெற்றுவர அறிவுறுத்துகிறார்கள். குழந்தைகள் சிறப்பு மருத்துவரிடம் சென்று வயதிற்கேற்ப குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி இருக்கிறதா என்ற அறிக்கையை பெற்றுவரச் சொல்லுகிறார்கள்.

அதேபோல தொழிற்முறை சிகிச்சை நிபுணரிடம் ஒப்புதலையும், கண்களுக்கான சிறப்பு மருத்துவரைச் சந்தித்து பார்வைக் குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என்பதையும் பரிசோதித்து அறிக்கையை பெறுகிறார்கள். இறுதியாக எல்லா பரிந்துரைகளையும் பெற்ற பின்னால் அறுவைச் சிகிச்சைக்கான ஒப்புதலுக்காக மயக்க மருந்து நிபுணரைச் சந்தித்த பின்னால் இக்குழந்தைகளுக்கு காது கேளாமல் இருப்பதைத் தவிரித்த வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும், காக்ளியார் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான எந்தவித தடையுமில்லை என்பதையும் அறிக்கையாகப் பெற்றுக் கொண்டு ஆரம்பத்தில் சந்தித்த மருத்துவரைப் பார்க்கச் சென்றோம். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதான சிறு புன்னகையுடன் வரவேற்றுவிட்டு மேற்கொண்டு அறிக்கைகளை காப்பீட்டு அலுவலகத்தில் கொடுத்துவிட்டு சிகிச்சைக்கான ஒப்புதல் வரும்வரையிலும் காத்திருக்கச் சொல்லி அறிவுறுத்திவிட்டு எங்களை அவர் வழியணுப்பி வைத்தார்.

நாங்கள் அத்தனை அறிக்கைகளையும் நகலெடுத்து எங்களுக்கும் காப்பீட்டு அலுவலகத்தில் ஒன்றுமாக கொடுத்துவிட்டு கிளம்புகையில் ஒட்டுமொத்தமாக நாங்கள் தளர்ந்து போயிருந்தோம். நாங்கள் இனி வீடு சென்று சென்னை முதன்மைக் காப்பீட்டு அலுவலகத்திலிருந்து சிகிச்சைக்கான ஒப்புதல் அழைப்பு வருகிற வரையிலும் காத்திருக்க வேண்டியதுதான். எல்லாம் நினைப்பதபடியே சிறப்பாக முடிந்துவிட்டது. இரண்டு குழந்தைகளுக்கும் உண்டான எதிர்காலத்திற்கு நல்லதொரு வழியை ஏற்படுத்தியிருக்கிற திருப்தியோடு நான் எனது பணிக்குத் திரும்பியாக வேண்டும். வாரம் முழுவதுமாக பரிசோதனைகள் செய்ய, பலதரப்பட சிறப்பு மருத்துவர்களைச் சந்திக்கவென்று ஓயாது ஓடிக் கொண்டு தளர்ந்து போயிருந்த குழந்தைகளையும் பெற்றோர்களையும் சோர்வோடு திரும்பிப் பார்த்தேன். எல்லோருடைய கண்களிலும் ஒளியிழந்து போய் உடலெங்கும் தளர்ந்து எலும்புகளற்ற மனிதர்களைப் போலதொரு சதைப் பிண்டங்களாய் சக்தியற்று நின்று கொண்டிருந்தனர்.

எனதருகே மெல்ல நகர்ந்து வந்த பெற்றோர்கள் எல்லோரும் ஒருவித கசப்பான புன்னகையை உதிர்த்துவிட்டு கிணற்றுக்குள்ளிருந்து எழுகிற வற்றிய குரலோடு, நாங்க ஆபரேசன் செஞ்சுகுறோம் சார் என்றபடி பேசத் துவங்கினர். நாங்க எங்க கொழந்தைக்கு செக்கப் பண்ணும் போதே பாத்தோம், அவங்க எந்த சத்தத்துக்கும் இம்மியும் அசையவே இல்ல. அங்க வந்த மத்த கொழந்தைகளோட அம்மாங்க கிட்டயும் விசாரிச்சுப் பாத்தோம். இது பண்ணிக்குறது நல்லது தான்னு சொன்னாங்க. அப்படியும்கூட கடைசி வரைக்கும் நாங்க நம்பிக்கையில்லாமத் தான் இருந்தோம். ஆனா ஆபரேசன் பண்ண கொழந்தைங்களைப் பாத்த பின்னாடி எல்லாம் மனசு மாறிடுச்சு. அவங்க அம்மாகிட்ட பேசுனப்போ கட்டாயம் பண்ணுங்க, இந்த வாய்ப்பைத் தவற விட்டுடாதீங்கன்னு எடுத்துச் சொன்னாங்க. அந்தக் கொழந்தைங்க கிட்டயுமே போய் பேசிப் பாத்தோம். அவங்க சட்டுன்னு எங்களையும் அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க, மாறி மாறி உம் பேரென்ன, என்ன பிடிக்கும், யாரைப் பிடிக்கும்னு கேள்வியா கேட்டு நாங்களே தவிச்சுப் போயிட்டோம். ஆனா அவங்க எல்லாத்துக்கும் ஒண்ணு விடாம பதில சொல்லி எங்கள அழ வச்சுட்டாங்க.

அவர் பேசி நிறுத்திய இடத்தில் அவரது முகம் கலங்கிய குளத்தின் மங்கலான ஒளியை நிறைத்துக் கொண்டு கண்ணீரைத் தாரை வார்த்தது. நானும் அங்கே விழவிருந்த இரண்டு சொட்டுக் கண்ணீரைக் காப்பாற்றிக் கொண்டு நிறைந்த மனதோடு வீடு வந்து சேர்ந்தேன். ஒருவழியாக எனது நம்பிக்கை என்னைக் கைவிடாமல் காப்பாற்றிவிட்டது.

ஆனாலும் அடுத்ததாக காளீஸ்வரிக்கும் பிரியாவிற்குமான அழைப்பு வந்து சிகிச்சைக்குச் செல்லும் முன்னர் அவர்களைத் தேற்றும் வகையில் ஆபரேசன் பற்றிய விவரங்களைப் பேசி அந்த நம்பிக்கையிலேயே தக்க வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் உணர்ந்து கொண்டேன். அப்படி நான் அவர்களுக்குச் சிகிச்சை பற்றி விளக்கிய விசயங்களையும், அதன் பின்பு அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்ட நிகழ்வுகளையும் பற்றி நீங்களும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

முந்தைய தொடர்களை படிக்க: 

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 9 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 10 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 11 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 12 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 13 – டாக்டர் இடங்கர் பாவலன்