கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




எங்கள் ஊர்த் திருவிழா
**************************
சாலையெல்லாம் விளையாட்டுப் பொம்மைகள் இருந்தபோதும்
வயிறோடு பசி விளையாடிக் கொண்டுதான இருக்கிறது
அந்த யாரும் அற்ற குழந்தைக்கு….!

கண்ணாடிக் கடைகளில்
வளையலோடு மின்னுகிறது
காதலனின் கைப்பட்ட வளையல் அணிந்து
குலுங்கச்செய்யும் காட்சி….!

மாரியம்மனும் காளியம்மனும்
ஒன்றோடு ஒன்றோடு பார்த்துக் கொண்டாலும்
உரசாமல் உசாராக செல்கின்றன வடம் பிடித்த வெவ்வேறு சாதிகள்….!

ஏதோ ஒருநாள் செய்த தவறுக்கு
வாண வேடிக்கையை மட்டும் பார்த்துத் தலை நிமிர்த்துகிறது,
அப்பனின் அறியாத தவறு அறியாக் குழந்தை….!

வருடா வருடம் வந்து செல்கிறது…
வாசலோடு சென்று விடுகிறது தெய்வம்
விபூதி பட்டைவரை நிலைத்திருக்கிறது பக்தி…!

அவளதிகாரம்
*****************
காதுகளை அழுத்தி
நீ
தோப்புக்கரணமிடும் பொழுதெல்லாம்
ஒரு சுற்று நான் இளைப்பதும்
உலகம் பல சுற்று மறப்பதுமான நிலையாகிப் போய்விடுகிறது….!

அங்க பிரதட்சணைகளில்
கோயில் பிரகாரமே உன் இடைபிடித்து உருட்டி
கோரிக்கையைக் கடவுளின் முன் வைக்கிறது…..!

மெட்டிகளோடு நீ போராடும்
விரல் விட்டு வருடும் நொடிகளுக்காக
அந்தச் சிறு முத்துக்கள் அவ்வப்போது ஏங்கதான் செய்கின்றன…..!

சோப்புக் கட்டிகளின் தேய்மானத்தில் பிறக்கிறது
உன்னைப் பார்த்தபடியே
மெல்ல மெல்ல நகர்ந்து
உயிர்போகும் குமிழிகளின் வாழ்க்கை நீளம்……!

இருக்கையோ
இல்லை நின்றபடி நீ செல்லும்
பயணமோ
நிறுத்தம் முற்றுப் பெற்றாலும் உன்னிடமே பயணிக்கின்றது
பயணச்சீட்டின்றி
பயணப்படும் ஆசையில்…..!

– கவிஞர் சே கார்கவி

கலையரசியின் – கவிதைகள்

கலையரசியின் – கவிதைகள்




குழந்தை வேண்டும்
***********************
நகராத நாற்காலியின்
கர்வம் உடைய,
தள்ளி விட்டு விளையாட
குழந்தை வேண்டும்.

சரியாக அடுக்கபட்ட
புத்தகங்கள்
காற்றையும் விடுவதில்லை.
அவற்றின் நடுவில்
இரு கண்கள் நுழைய
குழந்தை வேண்டும்.

வட்டில் சோற்றை
வாரி இறைத்து
பின்னல் கோலமிட
குழந்தை வேண்டும்.

கன்னத்தில் அறைந்து
சிரிக்கும் விஷமப் புன்னகை
வழிந்தோடும் இதழ்களை
பார்த்து ரசிக்க
குழந்தை வேண்டும்.

பால் நிலாவின்
அழகைக் காட்டி
பால் சோறு சாப்பிட
குழந்தை வேண்டும்.

நாளெல்லாம் கவனித்தும்,
தந்தையைப் பார்த்து
தாவி ஓடிடும்
செல்லக் குட்டி
குழந்தை வேண்டும்.

கரண்டியும் தட்டும்
இசை கருவிகளாக
மாறி நடனமிடும்
அழகைப் பார்க்கக்
குழந்தை வேண்டும்.

மதில் சுவர்களை
வண்ணமியற்றும் கைகளை
வண்ணத்துப் பூச்சிகள்
நிறத்தைக் கடனாக
பெறக் காத்திருக்கும்
காலத்தைப் பார்க்கக்
குழந்தை வேண்டும்.

வெற்றுக் காகிதங்களில்
கிறுக்கி எறியும்
பிஞ்சுக் கைகளை
அழுத்தமாய் வருடிட

குழந்தை வேண்டும்.

உடைந்த வளையல்
**********************
அடுக்கி வைத்த
கண்ணாடி வளையல்கள்
பார்த்து கண்ணடிக்க,
குட்டி கரங்களில்
நுழைந்துக் கொண்டன.
அவள் சிறுமியாய்
இருந்த போது!

தாய்மாமன் சீரில்
பல வண்ண நிறங்களில்
அடுக்கடுக்காய் அடுக்கி
வரிசை கட்டி இருந்தன!
அவள் பெரிய மனுஷியான
போது!

மஞ்சள் தாலி
கழுத்தில் ஏற
வெட்கத்தில் சிணுங்கியபடி
கைகளில் குலுங்கின
அவள் திருமணத்தின்
போது!

ஒவ்வொருவராய் கை பிடித்து
கன்னம் தடவி
வளையல்களை
அடுக்கினர்!
அவள் வயிற்றில்
குழந்தை இருந்த
போது!

கணவன் கட்டிலில்
கிடத்தி இருக்க!
முகத்தில் மஞ்சள்
வகிட்டில் குங்குமம்
கரைந்து ஓடி வர!
பல வண்ண வளையல்களை
உடைத்தனர் பெண்கள்.
அவள் கணவனை
இழந்த போது!

வெயிலோடு
***************
சுட்டெரிக்கும் வெயிலில்
இருளாய் தொடரும்
நிழலை அணைக்கிறேன்
வெயிலோடு!

ஒற்றை பெஞ்சில்
ஓராயிரம் கதைகள்
பேசுகிறேன் வெயிலோடு.!

முகத்தில் துளிர்க்கும்
வியர்வை துளிகளுடன்
அயர்ச்சி சேரும்
வேளையில்
வெயிலோடு!.

கீற்றாக அறுபட்ட
வெள்ளரிபிஞ்சுகள்
அரிசி விதைகளை காட்டி
சிரிக்கும் போது
வெயிலோடு.!

தெளிந்த நீல வானில்
சட்டென பறக்கின்ற
சிட்டுக்குருவி
கண்களை அள்ளி
செல்லும் நேரங்களில்
வெயிலோடு.!

கருப்பு தார் சாலையில்
பறக்கும் மகிழுந்துகளின்
அடைத்த சன்னலை
வெறித்து பார்க்கும்
சிறுவர்கள் வெயிலோடு.!

குட்டையில் குளிக்கும்
எருமைமாடுகள்
நோகாமல் அசை போடும்
வாய்களில் ஊறும்
ஈக்களை அன்போடு
படரவிட்டு வெயிலோடு.!

தகிக்கும் சூட்டினை
ஏந்திக் கொண்டு
உருளும் டயர்களை
வீரட்டும் மழலைகள்
வெயிலோடு.!

பூத்து குலுங்கும்
நூறு வயது பனை
விண்மீன்கள் சிதறலாய்
கண்களை களவாடியபடி
வெயிலோடு.!

கரைத்து வைத்த
கஞ்சி குளுமையாய்
சட்டியின் விளிம்பை
எட்டிப் பார்க்க
நாக்குகள் குத்தாட்டமிட்டு
வெயிலோடு.!

– இரா.கலையரசி

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 7 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -4
குழந்தையின் பசியைக் கவனித்தல்

சத்தம் போடாதே, கவனி! என்று பிள்ளைகளின் சத்தத்திற்கு ஏற்ப ஆசிரியரின் கூக்குரலும் வகுப்பறையில் அதிகமாகவே இருக்கும். அமைதியாக உதட்டைக் குவித்து விரலை அதில் அதக்கியபடியே கப்சுப்பென்று கவனித்திருக்கும் பிள்ளைகளுக்கு முன்பு ஆசிரியர் மட்டும் ஏனோ மடமடவென பாடத்தை ஒப்பித்துக் கொண்டிருப்பார். ஆனால் நமது பள்ளியறையிலோ குழந்தைகள் கியாமுயாவென்று கத்திக் கொண்டிருக்க மாணவப் பெற்றோர்களாகிய நாமெல்லாம் சாந்தமாக அமர்ந்து அவர்களைக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியிருக்கும். ஆம், அவர்கள் தானே இவ்வகுப்பறையில் நமக்கெல்லாம் வாத்தியார்களாக இருக்கப் போகிறார்கள்! பின்னே, குழந்தைகளின் பசியை வேறெப்படிக் கண்டறிவது?

குழந்தையின் வயிற்றுக்குள் தாய்ப்பால் செல்லச் செல்ல, அது நம்மைப் போலவே செரிமானமாக வேண்டி மெதுவாக குடலிற்குள் செல்வதற்கான அவசியமில்லாத காரணத்தால் அவர்கள் குடிக்க, சத்துக்களை குடல் உறிஞ்சிக் கொள்ள, மலம் சிறுநீரென கழிக்கவென்று சில நிமிடங்களிலேயே வெளியேறி வயிறும் சட்டென்று காலியாகிவிடும். அதுவும் நம்மைப் போல பற்களால், இரைப்பையால், குடல் நொதியால் அரைத்து அதை நையப்புடைத்து தாமதமாக மலத்தைக் கழிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருப்பதில்லை. ஆக, இத்தகைய காலியான வயிற்றினாலே அடிக்கடி அவர்களுக்குப் பசித்துக் கொண்டேதானிருக்கும்.

அதேசமயம் பிறந்த பிள்ளைகள் பொழுதன்னைக்கும் தூங்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் எழுவதற்கான, உடலை முறுக்கிக் கொள்வதான, கண்ணைக் கண்ணைச் சிமிட்டிக் கொள்வதான முயற்சிகளெல்லாம் பசிப்பதற்கென அவர்கள் உருவாக்கிக் கொள்கிற சமிக்கைகள் தானே! ஆக, ஆரம்பகால கட்டத்தில் அய்யா..! அம்மா..! பசிக்குதம்மா! என்றெல்லாம் அவர்கள் நம்மிடம் தாய்ப்பால் கேட்டு வரமாட்டார்கள். நாம் தான் பிள்ளையின் பசியறிந்து ஊட்ட வேண்டியிருக்கும்.

அதாவது பிள்ளைகள் வயிற்றுக்குள் இருக்கிறவரை நஞ்சுப்பைதான் ஒரு தானியங்கி இயந்திரம் போல குழந்தையின் ஒவ்வொரு மாத வளர்ச்சிக்கும் ஏற்ப அம்மாவின் இரத்தத்திலிருந்து சத்துகளைக் கவனமாகக் கறந்தெடுத்து, அதைச் சரியான அளவில் கணக்கிட்டு கருவிற்கு ஊட்டி ஊட்டி வளர்த்தெடுக்கிறது. இதற்கெல்லாம் நமது உடலில் இயல்பாகவே இருக்கிற உயிர்க்கடிகாரத்தின் இயக்கமும், ஒவ்வொரு பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கென்றே இருக்கிற நுட்பமான உயிரியல் வடிவமைப்பும் தான் காரணமே. இதனால் தானே மனம்பிறழந்தவளால்கூட பிள்ளையை வயிற்றுக்குள் சீராட்டி வளர்க்க முடிகிறது!

ஏனென்றால் அவளது பித்தம் தெளியாவிட்டாலும்கூட அவளுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிற உயிர்க்கடிகாரம் அவளது பிள்ளையை முறையாகக் கவனித்துக் கொள்ளும். ஆனால் அதேசமயத்தில் பிள்ளை பிறந்தவுடனே தாய்ப்பால் புகட்டுவது என்பதோ முற்றிலும் அம்மாவின் மனக்கணக்கைப் பொறுத்தே அமைந்துவிடுகிறது அல்லவா! ″பிள்ளை அரைமணி நேரத்திற்கு முன்னாடி தான் பால் குடித்தான், இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து குடிக்கட்டும்″ என்றோ, ″பிள்ளை தூங்குகிறானே! அவனை எப்படி எழுப்பிப் புகட்டுவது? இன்னும் சற்று நேரம் கழித்து புகட்டுவோம்!″ என்றோ நமது புரிதலை வைத்துப் புகட்டுவது தானே இப்போது பிள்ளை பிறந்த பின்னால் உடலிற்கு வெளியே நடக்கிறது. ஆக, நஞ்சுப்பை உள்ளே தன்னியல்பில் செய்த வேலையை நாமோ வெளியே இருந்து கொண்டு விழிப்புணர்வுடன் இதைப் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்துவிடுகிறதல்லவா! ஆனால், என்னவோ இதிலே தானே சிக்கலே வருகிறது?

குழந்தைகள் பிறந்த பின்னால் என்னதான் உடலானது மார்பகத்தின் வழியே பிள்ளைக்குப் பாலூட்ட ஆயத்தமாக இருந்தாலும், தாய்ப்பால் புகட்டுதல் தொடர்பான நம்முடைய புரிதலின்மை காரணமாக பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் குறைபாடுகள் இருக்கத் தானே செய்கிறது. ஆகவே தான் பிள்ளையின் பசியை சரியாகக் கணக்கிட்டு அவர்களுக்குத் தக்க சமயத்தில் பசியாற்றுகிற வழிமுறையைக் கற்றுத் தேறுவதற்கு நம்முடைய பள்ளியில் கவனமாக இங்கே படிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு குழந்தைகளுக்கென்றும் பிரத்தியேகமாக ஒரு பாஷை இருக்கிறது. அதுதான் அவர்களின் உடல்மொழி. நாம் என்ன மொழி பேசினாலும் குழந்தைகளின் உடல்மொழியைக் கற்றுத் தேர்ந்தால் மட்டுமே நம் பிள்ளையை வளர்த்தெடுக்க முடியும். ஆக, இங்கு நாம் கற்றுக் கொள்ள போவது என்னவோ உடல்மொழிப் பாடம் தான் தாய்மார்களே! பேசா மடந்தைகளின் சைகை பாஷைகளைக் கற்றுத் தருகிற செவித்திறன் குறையுடையோர் பள்ளியைப் போலவே, நாமும் இங்கே குழந்தைகளின் சப்தங்களை, அசைவுகளை, முகமாற்றங்களை அவை ஒவ்வொன்றுக்குமான அர்த்தங்களை என்று முறையாகக் கற்றுக் கொள்ளப் போகிறோம். ஏனென்றால் அவர்கள் வெளிப்படுத்துகிற ஒவ்வொறு அசைவிற்கும் ஒரு அர்த்தமிருக்கிறதே!

தாய்மார்களே, நாமெல்லாம் இன்னும் பச்சைப் பிள்ளையாய் இருக்கிறோம்! குழந்தைகள் அழுதால் தான் அவர்களுக்குப் பசிக்கிறதென்று மேம்போக்காக இன்னமும்கூட நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனாலும் குழந்தைகள் அழுவதென்கென்று காரணமா வேண்டும்?

அருகாமையில் அம்மாவின் வாசமோ, தோலோடு தோலான நெருக்கமோ இல்லாமல் போகும் போதோ, பருத்தியாலான நைலான் போன்ற துணியின் மினுமினுப்பில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் குழந்தைக்கு அதனால் உண்டாகும் எரிச்சலிலோ, படுக்கை வாசத்திற்கு ஊர்ந்து வருகிற எறும்பின் கடியாலோ, அடிக்கடி உச்சா போவதினால், மலம் கழிப்பதினால் உண்டாகிற அசௌகரியத்தினாலோ குழந்தைகளும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தபடி இருக்கிறார்கள் தானே? ஆனாலும் இது என்னவோ காக்கி உடையணிந்தவர்கள் எல்லாம் கூர்காவாகிப் போன கதைதான்.

இந்த சமயத்தில் பிள்ளைகள் அழுவது ஒன்றுமட்டுமே பசிக்கான அர்த்தமல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒருவகையில் குழந்தைகள் பசிக்கையில் அழத்தான் செய்கிறார்கள் என்றாலும்கூட அது அவர்களது பசிக்கான இறுதிகட்ட முயற்சியாகத் தானே இருக்கிறது? ஆம், அழுகை என்பது பசித்து பசித்து ஒவ்வொன்றாக பிள்ளைகள் வெளிப்படுத்துகிற சமிக்கைகளை நாம் உதாசீனப்படுத்துகிற போதுதான் அவர்களின் கடைசி முயற்சியாக, அதுவும் ஒருவித விரக்தியாக அழுகையை வெளிப்படுத்துகிறார்கள்! இதைப் பற்றி புரிந்து கொள்ள பசிக்கான உணர்வை எப்படியெல்லாம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதான விசயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏற்கனவே நாம் சொன்னபடி தாய்ப்பால் அருந்த அருந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளே குழந்தையின் வயிறு மொத்தமாகவே காலியாகி வயிறும் கூப்பாடு போடத்துவங்கிவிடும். ஆம், பிள்ளையின் வயிறோ பேசத் துவங்கிவிடும். ஆனால், அம்மாவின் காதுகளுக்குக் கேட்கிற அளவிற்கு சப்தம் எழுப்பத் தெரியாத வாயில்லா பிள்ளையாகிய இரைப்பையானது வேறுவழியின்றி குழந்தையின் மூளையை பசியின் நரம்புத் தூண்டலால் கிள்ளிவிட்டு அதற்கேற்ப சமிக்கைகளை வெளிப்படுத்த வைக்கும். இப்படிக் காலியாகிற வயிற்றின் ஆரம்பகட்ட உணர்வுகளையெல்லாம் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு குழந்தைகளுமே தனித்துவமானவர்கள், ஒவ்வொருவருமே வெவ்வேறு விதமான சமிக்கைகளை ஒரே காரணத்திற்காக வெளிப்படுத்துவார்கள் என்பதையெல்லாம் நாம் ஏற்கனவே புரிந்து வைத்திருக்கிறோம் அல்லவா!

அதாவது பசியின் துவக்கத்தில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளோ சட்டென்று உடம்பை முறுக்கி எழுவார்கள். எழுவார்கள் என்றால், பிள்ளைகள் விசயத்தில் கண்ணை விழித்துக் கொண்டு காபி அருந்த படுக்கையிலிருந்து எழுவார்கள் என்று அர்த்தமில்லை. சாந்தமாக துயில் கொண்டிருக்கிற அவர்களோ கைகால்களை அசைத்தபடி உடலை நெட்டித்துக் கொள்வதும்கூட அவர்களைப் பொறுத்த வரையில் எழுவதுதான். ஒருசில குழ்நதைகள் அமைதியாக இருக்கும் போதே சட்டென்று சுறுசுறுப்பாகத் தெரிவார்கள். துருதுருவென முண்டத் துவங்குவார்கள். இதுவும் ஒருவகையில் பசியை வெளிப்படுத்துகிற சமிக்கைதான். வேறுசில குழந்தைகளோ இமைகள் மூடியபடியிருக்க அவர்களது கருவிழிகள் கடிகார நாக்கு அலைவுறுவதைப் போல அசைந்தபடி பசியை அறிவிப்பார்கள். சிலரோ கண்ணைக் கண்ணை சிமிட்டி தங்களது பசியை வெளிப்படுத்துவார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் வாயை அகலத்திறந்து மூடுவதும், பாம்பு போலான துருத்தலான நாக்கை நீட்டி காற்றிலே துலாவுவதும், அங்கு ஏதும் கிட்டாத இல்லாத போது உதட்டையே தழுவிச் சுவைப்பதும் அல்லது எவரேனும் தூக்கிக் கொஞ்சினால் அவர்களின் சட்டையையோ, தோலையோ விரல்களையோ சுவைப்பதும், அப்படியும் யாருமே அருகில் இல்லாத பட்சத்தில் தன் கைகால்களை முகத்தருகே கொண்டு வந்து விரல்களைச் சவைப்பதுமாக பசியுணர்ச்சியை தெரிவிப்பார்கள். சிலநேரங்களில் குழந்தைகளைச் சுற்றி போர்த்தியிருக்கிற துணியையே சவைத்தவாறு சப்தமெழுப்பியபடியும், வெறுமனே உதட்டைக் குவித்து பாலருந்துவது போலான சப்தமெழுப்பி நம்மைக் கவருவதைப் போலவும் செய்யத் துவங்குவார்கள். அப்படியும் இல்லாவிட்டால் ஙாக்…ஙாக்.. என்று கூவியபடி நம் கவனத்தைப் பெறுவதற்கு ஒரு ஆர்க்கஸ்ட்ரா நிகழ்ச்சியையே அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள். இச்சமயத்தில் அவர்களை அள்ளியெடுத்து மார்பருகே கொண்டு போனாலே அவர்களும் உடனே மார்பைக் கைகளில் பற்றி நுகர்ந்தபடி காம்பைக் கவ்விச் சுவைக்கத் துவங்கிவிடுவார்கள்.

பெற்றோர்களாகிய நாம் இதை வைத்தே பிள்ளைகளின் பசியையும், அவர்கள் பசியெடுக்கிற போதெல்லாம் பிள்ளைகள் எப்படியான உணர்வுகளை, சமிக்கைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் கற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் இப்படியான உணர்வுகளை மட்டுமே பிள்ளைகள் வெளிப்படுத்த வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லை. நாமெல்லாம் பிள்ளைகளைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினாலே விளையாட்டுப் போக்கில் தங்களது பசியை வெளிக்காட்டுவதற்கு அவர்கள் செய்கிற சுட்டித்தனங்களை இன்னும்கூட நாம் நிறையவே கண்டுகொள்ள முடியும். தாயிற்கு மட்டுமே புரிகிற ஒரு மந்திரப் பார்வையோடு அவர்கள் பார்க்கிற போதும், மெலிசாக ஏக்கத்தைப் போலழுகிற பிள்ளையின் வித்தியாசமான குரலை வைத்தும், அவன் பால்தான் கேட்கிறான்..! என்று சில தாய்மார்கள் புரிந்து கொள்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதேசமயத்தில் அவர்களது பசியைக் கண்டுபிடித்து மார்பில் போட்டாலுமே சில குழந்தைகள் பாலைக் குடிக்காமல் மார்பில் வெறுமனவே வாய் வைத்துக் கொண்டு விளையாடியபடி இருப்பார்கள். வீட்டில் வளர்ந்த பிள்ளைகளே, எதைப் பார்த்தாலும் விளையாடுவதற்கு அதுவேண்டும், இதுவேண்டுமென்று அடம்பிடித்து எந்நேரமும் விளையாடத் துடிதுடிக்கிறார்களே! அப்படியிருக்க, இன்னும் தவழக்கூடத் தெரியாத பிள்ளைக்கு விளையாட உங்கள் மார்பைத் தவிர வேறென்ன இருக்கிறது, தாய்மார்களே?

குழந்தைகளைப் பொறுத்தவரை எதுவெல்லாம் உண்ணக் கிடைக்கிறதோ அதுவெல்லாம் விளையாடுவதற்குரிய விசயம்தான். அதனால் தான் உண்ணுவதற்கு சாதத்தைக் கொடுத்தால் சிதறடித்து விளையாடுவதும், விளையாட்டு பார்பி பொம்மையைக் கொடுத்தால் வாயில் சவைத்து பொன்னிற முடியைக் கடித்து தும்சம் செய்வதுமாக இருக்கிறார்கள். ஆக, மார்பில் போட்டு அவர்கள் விளையாடுகிறார்கள் என்றால் அதற்கும் நாம் அனுமதித்து மடியில் போட்டு தூங்க வைக்க வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை. ஆனால் போகிற போக்கிலே அவர்களும் பசிக்கேற்ப புசிக்கவும், பொழுதிற்கு விளையாடவும் மார்பைப் பற்றி புரிந்து கொள்வார்கள். அதேபோல நாமுமே மார்பில் விளையாடுகிறார்களா அல்லது பாலருந்துகிறார்களா என்பதை மார்பிலிட்ட அடுத்த கணமே கண்டுபிடிக்கிற அளவிற்குக் கற்றுத் தேர்ந்துவிட முடியும்.

ஆனால் இப்படியெல்லாம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி அதையெல்லாம் பெற்றோர்களாகிய நாம் கண்டுகொள்ளாத போதுதான் குழந்தைகளும் விரக்தியாகி அதற்குரிய கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். குழந்தைகளுக்கும் சிரிப்பு, அழுகை வருவது போல கோபமும் மனஅழுத்தமும் உண்டாகும் என்பதையும்கூட நாம் இக்கணத்திலே நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் தாய்மார்களே!

குழந்தையை தாயிடமிருந்து பிரித்து தனியே தொட்டிலில் போடுகிற போதும், உறவினர்கள் அடிக்கடி பிள்ளையைத் தூக்கி வைத்துக் கொஞ்சுகிற போதும் இப்படியான பிள்ளையின் தனித்துவமான உணர்வுகளை ஒரு தாயினால் கண்டுகொள்ள முடியாமல் போகிறது. அப்போதுதான் அம்மா மீதான கோபத்தில் பசிக்கு உணவில்லாத ஏக்கத்தில் உரத்து பிள்ளைகள் அழுகிறார்கள். பசிக்கு அழுதழுது சோர்ந்து போய் எரிச்சலடைந்து ஒருகட்டத்தில் மீண்டும் அவர்கள் உறங்கியும் விடுகிறார்கள். வீட்டில் பசியென்று நுழைந்து உணவில்லை என்றதும் சட்டென்று பெரியவர்களாகிய நமக்கே கோபமும் எரிச்சலும் வருகிற போது பிள்ளைகளுக்கு மட்டும் வராதா என்ன?

இப்படி விரக்தியடைந்துவிட்ட குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு முன்பாக நாம் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது. அழுகையின் துவக்கத்திலிருக்கிற பிள்ளைகள் மட்டும் மார்பில் போட்டதும் முரண்டு பிடிக்காமல் காம்பில் பொருத்தி மன்னிக்கும் மனப்பான்மையோடு நடந்து கொள்வார்கள். ஆனால் விரக்திநிலைக்குச் சென்ற, மார்பில் போட்டாலும் பால்குடிக்காமல் ஆர்ப்பாட்டம் பண்ணுகிற பிள்ளைகளை சில நொடிகள் அவர்களின் விரல்களை உதட்டில் சுவைக்க வைத்து அழுகையை ஆற்றுப்படுத்திவிட்ட பின்னரே பாலூட்ட செய்யலாம். அப்போது அவர்களும் அமைதியாய் நம் மார்பில் பாலூட்ட இசைவு தெரிவித்துவிடுவார்கள்.

இத்தகைய பசியுணரும் பயிற்சிகளை நாம் பள்ளியில் இருக்கிற காலத்திலேயே கற்றுக் கொள்ள முடியும். இதனால் பசித்து அழுவதற்கு முன்பே அவர்களின் ஆரம்பகட்ட பசியுணர்வைப் புரிந்து கொண்டு பிள்ளைக்குப் பாலூட்ட நாம் தயாராகிவிட முடிகிறது. துவக்கத்தில் எப்போதும் தூக்கநிலையிலேயே இருக்கிற பிள்ளைகளின் பசியுணர்வை அறிந்து கொள்ள கொஞ்சம் சிரமங்கள் இருந்தாலும் போகப்போக இதுவெல்லாம் சரியாகிவிடும் தாய்மார்களே! அதேசமயம் பிள்ளைகள் பசியில்லாமல் இருக்கையில் விடாப்பிடியாகப் பாலூட்டுவதையும் தவிர்த்துவிட வேண்டும். இதனால் அவர்கள் இயல்பாகவே பசித்து உண்ணுகிற உணர்வில் ஏதும் குழப்பம் வந்துவிடக் கூடாதல்லவா!

ஆக, இப்போது பிள்ளையின் பசியை எப்படியெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்று நாம் புரிந்து கொண்டாம். நம்முடைய ஆசானாகிய பிள்ளையிடமிருந்து நாமும் உடல்மொழிப் பாடத்தை இப்போது நன்றாகவே கற்றத் தேர்ந்துவிட்டோம். சரி, அடுத்தென்ன, இனி பாலூட்டத் துவங்கிவிடலாம் தானே!

– டாக்டர் இடங்கர் பாவலன்

பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள் கட்டுரை – தமிழில் கி.ரமேஷ்

பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள் கட்டுரை – தமிழில் கி.ரமேஷ்




பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள். பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள் – 26ஆவது செய்திக் கடிதம் (2022)
விஜய் பிரசாத்


C:\Users\Administrator\Downloads\unnamed.jpg

சலௌவா ரௌடா சௌகேர் (லெபனான்), கோரஸ், 1948

அன்பு நண்பர்களே,

ட்ரைகாண்டினண்டல்: சமூக ஆய்வுக்கான நிறுவனத்திலிருந்து வாழ்த்துகள்.

ஐ.நா.சர்வதேசக் குழந்தைகள் அவசர நிதி (UNICEF)யானது, உலகளாவிய உணவு நெருக்கடியால் கிழித்தெறியப்பட்டுள்ள பதினைந்து நாடுகளில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை பட்டினியில் தள்ளப்படுவதாகக் கூறுகிறது.  இந்தப் பதினைந்து நாடுகளில் பன்னிரண்டு நாடுகள் ஆப்பிரிக்காவில் (பர்கினோ ஃபாசோவிலிருந்து சூடான் வரை) உள்ளன, ஒன்று கரீபியனில் (ஹைதி) உள்ளது, இரண்டு ஆசியாவில் (ஆஃப்கானிஸ்தானும், ஏமனும்) உள்ளன.  முடிவே இல்லாத போர்கள் இந்த நாடுகளிலுள்ள அரசு நிறுவனங்களை உயர்ந்து வரும் கடன், வேலையின்மை நெருக்கடிகள், பணவீக்கம், வறுமை ஆகிய நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளன.  அதில் தற்போது ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியைச் சேர்ந்த இரண்டு நாடுகள் (குறிப்பாக மாலியும், நைகரும்) சேர்கின்றன. அங்கு பட்டினியின் நிலைமை ஏறத்தாழ கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டது. இந்த நிலைமை போதாதென்றோ என்னவோ, கடந்த வாரம் ஆஃப்கானிஸ்தானை ஒரு பூகம்பம் தாக்கி, ஆயிரம் மக்களுக்கு மேல் கொன்று விட்டது.  இது ஏற்கனவே 93% மக்கள் பட்டினியில் வீழ்ந்து விட்ட நிலையில் இன்னொரு அடி.

நெருக்கடியால் தாக்கப்பட்டுள்ள இந்த நாடுகளில் அரசுகள் மற்றும் ஐ.நா. உலக உணவுத் திட்டத்திலிருந்து உணவு உதவி வரும். இந்த நாடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் ஐ.நா. அமைப்புகளிலிருந்து வரும் உதவியை நம்பியே இருக்கிறார்கள். உலக உணவுத் திட்டமானது உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய உணவை வழங்கும். அது எண்ணை, நிலக்கடலை, பால் பவுடர், சர்க்கரை, தாவர எண்ணை, வைட்டமின்கள் அடங்கியது. அடுத்த ஆறு மாதங்களில் இவற்றின் விலைவாசி 16% உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவேதான் ஜூன் 20 அன்று, தனது ரேஷனை 50% குறைக்கப் போவதாக அறிவித்தது. இந்த ரேஷன் குறைப்பானது, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நான்கு அகதிகளில் மூவரை பாதிக்கும். அங்கு சுமார் 50 லட்சம் அகதிகள் வசிக்கிறார்கள். ”குழந்தைகளை வீணடிக்கும் தீவிர நிலைமைகள் தீப்பற்றும் நிலைமை இருப்பதை இப்போது நாங்கள் காண்கிறோம்” என்கிறார் யூனிசெஃப்பின் செயல் இயக்குனர் கேதரின் ரசல்.

C:\Users\Administrator\Downloads\unnamed (1).jpg

ஊசோ இகோனு (நைஜீரியா), நாடற்ற மக்கள், ஒரு கூட்டம், 1982

உணவுப் பொருள் விலையேற்றம் பட்டினி கிடப்போரின் அதிகரிப்புடன் தொடர்புடையது என்பது தெளிவு. இது உக்ரைன் மோதலால் மேலும் அதிகரித்துள்ளது. பார்லி, சோளம், பலாப்பழம், சூரியகாந்தி விதை, சூரியகாந்தி எண்ணை, கோதுமை, உரம் ஆகியவற்றை மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் ரஷ்யாவும், உக்ரைனும் ஆகும். உலக அளவில் உணவுப் பொருள் விலையில் போர் பேரழிவை உண்டாக்கியுள்ளது என்றாலும், அதுதான் விலையேற்றத்துக்குக் காரணம் என்று பார்ப்பது தவறானது. உலக உணவுப் பொருள் விலையேற்றமானது இருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. 2021 இல் அது கீழ்க்கண்டவை உட்படப் பல காரணங்களால் கைமீறிச் சென்றது:

1) பெருந்தொற்றுக் காலத்தில், நாடுகளுக்குள்ளும், அவற்றின் எல்லைகளிலும் இருந்த கடுமையான ஊரடங்குகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நகர்வுக்குக் கடுமையான தடைகளை ஏற்படுத்தின. இப்போது அகதிகள், அடைக்கலம் கேட்டு வருவோர் உள்ளிட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவசாய உற்பத்தியில் முக்கியமான பங்கை வகிக்கிறார்கள். அகதிகளுக்கு எதிரான மனப்பான்மையும், ஊரடங்குகளும் நீண்ட காலப் பிரச்சனையை பெரும் பண்ணைகளில் ஏற்படுத்தி விட்டன.

2) கோவிட் 19 பெருந்தொற்றின் விளைவாக விநியோகச் சங்கிலி உடைந்து விட்டது. உலக உற்பத்தியில் பெரும் அளவின் மையமான சீனா பூஜ்யத் தொற்றுக் கொள்கையைக் கடைப்பிடித்ததால், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் தொடர் பிரச்சனையை உருவாக்கியது.  துறைமுகங்கள் மூடப்பட்டு, மாதக்கணக்கில் கப்பல்கள் கடலிலேயே இருந்தன. சர்வதேச கப்பல் போக்குவரத்தும், உரம், உணவு உள்ளிட்ட தொழில் உற்பத்தி சாதாரண நிலைக்கு வருவது மிகவும் மந்தமாக நடந்தது. உணவு விநியோகச் சங்கிலியானது ஏற்பாட்டுப் பிரச்சனையாலும், உணவு பதப்படுத்தும் இடங்களில் ஊழியர்கள் குறைவாகக் கிடைத்ததாலும் மோசமானது.

3) உணவு முறையில் தீவிரமான காலநிலைகள் பெரிய பங்கை வகித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், வறட்சி, வெள்ளம், கடுமையான புயல் ஆகியவற்றால் 80லிருந்து 90% இயற்கைப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன. அதே நேரத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்தப் பூமியானது ஒவ்வொரு ஆண்டும், வறட்சியாலும், பாலைவனமாதலாலும் ஒரு கோடியே இருபது லட்சம் நன்செய் நிலத்தை இழந்துள்ளது; இந்தக் காலத்தில் நில அரிப்பாலும், மாசுபாட்டாலும் நாம் மூன்றில் ஒரு பங்கு விவசாய நிலத்தை இழந்துள்ளோம்.

4) கடந்த நாற்பது ஆண்டுகளில், உலக அசைவ உணவு நுகர்வு (பெரும்பாலும் கோழி) நாடக பாணியில் அதிகரித்தது.  ‘உச்சகட்ட இறைச்சி நுகர்வை’ எட்டி விட்டோம் என்று சில அறிகுறிகள்  காட்டினாலும், அது தொடர்ந்து உயர்கிறது. மிகப்பெரும் சுற்றுச்சூழல் தாக்கத்தை இறைச்சி உற்பத்தி உருவாக்குகிறது: விவசாயத்தின் மொத்த வெளிப்பாட்டில் 57% இறைச்சியிலிருந்து வருகிறது. (உலக கலோரி விநியோகத்தில் இறைச்சி வெறும் 18%ஐயே வழங்கினாலும்) பூமியின் விவசாய நிலத்தில் 77%த்தை கால்நடை உற்பத்தி எடுத்துக் கொள்கிறது.

C:\Users\Administrator\Downloads\unnamed (2).jpg

யோலண்டா வால்டிஸ் ரெமெண்டெரியா (மெக்சிகோ) (பன்முகத்தன்மை), 2009

உலக உணவுச் சந்தையானது உக்ரைன் மோதலுக்கு முன்பாகவே நெருக்கடியில் இருந்தது. நோய்த்தொற்றுக் காலத்தில் விலைவாசியானது பல நாடுகள் முன்பு பாத்திராத அளவுக்கு உயர்ந்தது. எனினும், போரானது ஏற்கனவே பலவீனப்பட்டுப் போன இந்த உணவு முறையை ஏறத்தாழ நொறுக்கி விட்டது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க பிரச்சனை உலக உரச் சந்தை. அது பெருந்தொற்றுக் காலத்தில் மீட்சியில் இருந்தது, ஆனால் இப்போது நெருக்கடியில் உள்ளது: ரஷ்யாவும் உக்ரைனும் நைட்ரஜன், பாஸ்பரஸ் உரங்களில் 28%த்தையும், உலக ஏற்றுமதியில் பொட்டாஷில் 40%

 ஏற்றுமதி செய்கின்றன. மேலும் ரஷ்யா உலக அம்மோனியம் நைட்ரேட்டில் 48%ஐயும், உலக யூரியாவில் 11%ஐயும் ஏற்றுமதி செய்கிறது.  விவசயிகளும், விவசாய நிறுவனங்களும் உயிரியல் உரத்துக்கு மாற விரும்பினால் தவிர, விவசாய நிபுணர்கள் உரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்தால் மகசூல் கடுமையாகக் குறையும். உணவுச் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், பல நாடுகள் தமது ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை வித்து விட்டன. இது உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத நாடுகளில் உணவு நெருக்கடியை மேலும் அதிகரித்து விட்டது.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது குறித்து நிறைய உரையாடினாலும், செயல்பாடு பெரிய அளவில் இல்லை என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் இறுதியில், உலகில் 141 நாடுகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் இருக்காது எனவும், உலகில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கும் 15.6 பில்லியன் மக்களில் 9.8 பில்லியன் மக்களுக்குத் தேவையான சத்துணவு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. உலக நாடுகளில் 14%தான் தன்னிறைவுடன் இருக்கும். ரஷ்யா, தாய்லாந்து, கிழக்கு ஐரோப்பா அகியவை உலகின் தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும். இத்தகைய இருண்ட முன்கணிப்பானது, நாம் உலக உணவு முறையை விரைவாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது; ட்ரைகாண்டினண்டல் வெளியிட்டுள்ள ‘பூமியைக் காக்க ஒரு திட்டம்’ என்ற கட்டுரையில் தேவையான கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சுருக்கமாக, ஐநாவின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குடிரெஸ் உக்ரைன் மோதலும், ரஷ்யாவுக்கெதிரான தடைகளும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு உலகச் சந்தையில் உணவு, உரத்தின் முக்கிய உற்பத்தியாளர்களான அந்நாடுகள் உற்பத்தியைத் தொடங்க வேண்டுமென்று தெளிவுபடுத்தியுள்ளார். 

C:\Users\Administrator\Downloads\unnamed (3).jpg
உணவு மற்றும் சத்துணவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு (ரெடே பென்சான்) பற்றிய பிரேசிலிய ஆய்வு வலைப்பின்னல் சமீபத்தில் நடத்திய ஆய்வானது, 60% பிரேசிலியக் குடும்பங்களிடம் தேவையான உணவு இல்லை என்பதை கவலையுடன் பதிவு செய்துள்ளது.  2 கோடி 12 லட்சம் மக்கட்தொகை கொண்ட நாட்டில் உண்ண எதுவுமில்லாதவர்களின் எண்ணிக்கை 2020க்குப் பின் 1.9 லட்சத்திலிருந்து 33.1 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு தேர்ந்தெடுத்த பொருளாதாரக் கொள்கைகளும், பெருந்தொற்றை மிக மோசமாகக் கையாண்டதும் நம் நாட்டில் இன்னும் அதிகமாக அவப்பெயருடன் கூடிய சமத்துவமின்மைக்கு இட்டுச் சென்றது’ என ரெடே பென்சானின் ஒரு மருத்துவப் பெருந்தொற்று நிபுணரான ஆனா மரியா செகால் கூறுகிறார்.  ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஐ.நா.வானது பட்டினியையும், வறுமையையும் நாடக பாணியில் குறைத்த பிரேசிலின் ஃபோம் ஜீரோவையும், போல்சா ஃபாமிலியா திட்டங்களையும் ஆதரித்தது. முன்னாள் அதிபர்கள் லூலா டி சில்வா
(2003-10), டில்மா ரூசூஃப் (2011-16) ஆகியோரின் தலைமையில்  பிரேசில் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து மிக்கேல் டெமர் (2016-18), ஜேர் பொல்சொனாரோ (2019 முதல் இப்போது வரை) ஆகியோரின் ஆட்சியில் கிடைத்த பலன்கள் இழக்கப்பட்டு பிரேசில் பழைய பட்டினி நிலைக்குப் பின்னடைவைச் சந்தித்து விட்டது. கவிஞரும், பாடகருமான சொலானோ ட்ரிண்டாட் பாடுகிறார், ‘டெம் ஜெண்டே காம் ஃபோமே” (பட்டினியுடன் மக்கள் இருக்கிறார்கள்)

பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்

பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்

பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்

பட்டினியுடன் மக்கள் இருந்தால்

உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்

பட்டினியுடன் மக்கள் இருந்தால்

உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்

பட்டினியுடன் மக்கள் இருந்தால்

உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்

அன்புடன்

விஜய்

தமிழில்: கி.ரமேஷ்

கேள்வி சிறுகதை – வெ.நரேஷ்

கேள்வி சிறுகதை – வெ.நரேஷ்




மூன்று வயது சமர், எங்கள் குட்டிச் செல்லத்தைப் பள்ளியில் சேர்த்து மூன்று வாரங்களே ஆனது. அதாவது எங்களுக்கு வீட்டுப் பாடம் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகி விட்டது!

முதலில் தமிழ் எழுத்துகள் கற்றுக் கொள்கிறோம் அவளோடு சேர்ந்து. அ ஆ இ ஈ என்று நாங்களும் அவளைப் போலவே குறிலுக்கு ஒரு மாதிரியாகவும் நெடிலுக்கு வேறு மாதிரியும் தலையை ஆட்டிச் சொல்லப் பழகிக் கொண்டோம். அடுத்து ஆங்கில எழுத்துகள். ABCD என்று போகும் ஆங்கில அகர வரிசையில் நான் A என்றால் அடுத்து B சொல்லணும் என்றால், சமர் முடியாது என்று சொல்லிவிட்டாள். எ ஏ, பி பீ, சி சி, டி டீ என்று தமிழில் உயிரெழுத்து வரிசை குறில் நெடில் போல் ராகம் போட்டுச் சொல்ல ஆரம்பித்தாள்.

சரியாப் போச்சு உன்னோட என்று சிரித்துத் தலையில் அடித்துக் கொண்டு, ABCD சொல்லிக் கொடுக்க ஒரு வழியாக மேடம் சமாதானம் ஆகித் திரும்பச் சொல்லிப் பழக ஆரம்பித்தார்கள்.

நடுவே நடுவே இதென்ன, அதென்ன, இது ஏன் இப்படி வளைஞ்சிருக்கு…. இது ஏன் இப்படி சாஞ்சிருக்கு…இது ஏன் ரெண்டு பக்கமும் கை நீட்டி நிக்குது..என்று கேள்விகள் வேறு…

எல்லாம் ஒழுங்காய்த் தான் போய்க் கொண்டிருந்தது, ஒரு நாள் நல்ல வேளை நான் தப்பித்தேன், என் மனைவி சிக்கிக் கொண்டாள்.

“இதென்ன எழுத்து மா?” என்று கேட்டாள் சமர்.

‘இது எம்,  அது டபிள்யு’ என்றாள் சமரின் அம்மா.

“ஏம்மா இது ரெண்டும் ஒரே மாதிரி தானே இருக்கு….ஏம்மா நீ எம், டபிள்யு ன்னு மாத்தி மாத்தித் தப்புத் தப்பா சொல்றே?” என்று கலகல என்று சிரித்துக் கொண்டே கேட்க, என் மனைவி என்னைப் பார்த்து சிரிக்க, நானும் சிரித்துக் கொண்டே சமருக்கு முத்தமிட்டுக் கை கொடுத்து மகிழ்ந்தேன்.

கேள்விகள் கேட்கப்பட வேண்டும் கேள்விகள் கேட்கப் பட்டால்தான். அதற்கான பதில் கிடைக்கும். சமர் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் உண்டா இல்லையா என்று என் கேள்விக்கும் பதில் தாருங்கள்.

– வெ.நரேஷ்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 4 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் வகுப்பறை-ΙΙ,
பாடம்-1
(பிரசவ வார்டின் சூழலைப் புரிந்து கொள்ளுதல்)

கருப்பைக் கூட்டுக்குள் அடைகாத்த பிள்ளையைப் பிரசவித்து ஈருடலாய் வார்டுக்குள் நுழைகிற தாயவளை வரவேற்க வாசற்படிகளில் குடும்பமே கால்கடுக்க காத்துக் கிடக்கும். இளஞ்சிவப்பு வர்ண ரோஜாச் செடியைப் பக்கமாகப் பதியமிட்டு வளர்த்தெடுத்த மற்றுமொரு பூச்செடியைப் போல தாயிடமிருந்து கிளைபிரிந்த சின்னஞ்சிறு மொட்டாகிய பிள்ளையைப் பார்க்கப் பார்க்க நமக்கு ஆவலாதியாக இருக்கும். வரவேற்பரையில் பூங்கொத்தை கைக்களித்து வழிநடத்திச் செல்கிற ஆரவார கூட்டத்தைப் போல செவிலியரும் தாயவள் கைகளில் பிள்ளையைக் கைத்தாங்களாகக் கொடுத்து வார்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.

பிரவசிக்கும் வரையிலும் உடனிருக்க அறிவுறுத்தப்படுகிற ஒரு உறவினப் பெண்ணைப் போலவே பிரசவித்த பின்னாலும் கண்ணுங் கருத்துமாய் கவனிக்க வேண்டி, வார்டிலும் கூட்டமாய் செவிலியர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. பிரசவத்தோடு உடனிருந்தவர்களோ அல்லது விரவம் அறிந்த முதிய பெண்களோ மட்டும் உடனிருந்து பெற்றவளை வழிநடத்திக் கொண்டால் இங்கே போதுமானதுதான். இது ஆண்களுக்கும், கூட்டமாய் படையெடுத்து வருவோருக்குமான தடைசெய்யப்பட்ட பகுதி.

இவ்வளவு அவசரகதியிலான மருத்துவமனைக் கூட்டங்களிலும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கென அம்மாக்களும் கைப்பிள்ளைகளும் தனித்து உலாவுவதற்கென்று பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட மழலையர் பூங்காக்களைப் போலவே பிரசவத்திற்குப் பிந்தைய வார்டுகளும் குழந்தைகளின் உலகத்தால் ஆக்கப்பட்டிருக்கின்றன. அங்கே நீண்டதான பளிங்கு கற்கள் பாவிய மண்டபம் போலான பெருவெளியில் ஆள் கடக்கும் இடைவெளி விடப்பட்ட தூரத்தில் பிள்ளை பெற்ற தாய்மார்கள் யாவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் தாங்கள் பெற்றெடுத்த பத்தரை மாத்துத் தங்கப்பிள்ளைகளோடு அருகருகே படுத்திருப்பார்கள். குழந்தைகளின் அழுகையும் ஆர்ப்பாட்டமும், பெற்றவளின் அதட்டலும் கெஞ்சலுமாக உருக்கொள்கிற பிரசவத்திற்குப் பிந்தைய வார்டின் அழகை என்னவென்று தான் வர்ணிப்பதோ?

கடல்கன்னிகளின் தேவலோக கனவுலகத்தைப் போல அருகருகே துள்ளலோடும் துடிப்போடும் கைகால்களை உதைத்தபடி ஒரு பெரிய வால்துடுப்பைப் போல படுத்திருக்கிற பிள்ளைகளைப் பார்க்கையில் அவர்களெல்லாம் அம்மாக்களின் விலாப்பகுதியிலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் கடல்கன்னிகளின் துடுப்புகளாவே தெரிகிறார்கள். ஒவ்வொரு படுக்கையும் இரண்டு கள்ளங்கபடமற்ற ஜீவன்களால் நிரப்பப்பட்டிருக்கும் பிரத்தியேக அறையில் தான் புத்தம் புதியதாக பிரசவித்து நுழைகிற நமக்கென்றும் தனித்த படுக்கையொன்றை செவிலியர்கள் ஒதுக்கித் தருகிறார்கள்.

இப்பகுதியின் அத்தியாவசியமான நோக்கமே தாயும் பிள்ளையும் தொடர்ந்து அருகாமையில் தனித்திருந்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டுமென்பது தான். இப்படி இருப்பதால் தானே எந்நேரமும் தாயும் சேயும் தோலோடு தோல் நெருக்கமாய் இருப்பதும், அருகாமையிலேயே துயில் கொள்வதும், இதனால் குழந்தையின் செய்லபாடுகளை பெற்றவள் கண்டுணர்ந்து கொள்வதும் விரைவிலேயே சாத்தியமாகிறது.

ஆனாலும் ஒருசில மருத்துவமனைகளில் குழந்தைக்கு ஒரு படுக்கையும், தாயிற்கென தனிப்படுக்கையுமென ஒதுக்கித் தருகிறார்கள். இதை ஏதோ கூடுதல் வசதியென்றே பிள்ளை பெற்ற குடும்பமும் நெகிழ்ச்சியில் மூழ்கிப் போகிறார்கள். வேறுசில இடங்களில் தனித்த மரத்தொட்டில்களில் பிள்ளையைப் படுக்க வைத்துவிட்டு தாயைக் கட்டிலில் ஒய்யாரமாகத் தூங்கச் செய்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் அம்மாக்களின் கட்டில் அகலம் என்னவோ மிகவும் ஒடுக்கமாக ஒருவர் மட்டுமே துயில் கொள்ளுமளவு இருப்பதால், தாயும் சேயும் ஒரே கட்டிலில் அணைத்துப் படுத்திருந்தாலும்கூட, அவர்கள் எத்திசையிலும் இங்கும் அங்கும் அசையாதிருக்கும்படியான அசௌகரியமான சூழலிலே அவர்கள் துயரத்தோடு துயில் கொள்ள வேண்டியதிருக்கும்.

அப்படியே இருவரும் சகலமாக படுத்துறங்கும் படியான கட்டிலை மருத்துவமனையில் அளித்தாலும்கூட தாயிடமிருந்து பிள்ளையை அடிக்கடி அழுகிறார்கள் என்றோ, பெற்றவள் களைப்பில் தூங்க பிள்ளையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்றோ தாயிடமிருந்து பிள்ளையைப் பிரித்து தனித்து வைத்திருப்பதான அடாவடித்தனங்களை எல்லாம் பிரசவத்திற்குப் பிந்தைய வார்டுகிளில் உறவினர்கள் செய்த வண்ணமாகவே இருக்கிறார்கள். ஆனாலும் கவலைப்பட வேண்டாம் தாய்மார்களே, நேசத்தையே புன்முறுவலாக்கி வைத்திருக்கிற செவிலியர்கள் இந்த அற்பக் காரணங்களையும் தவிர்த்துவிட்டு நம்மையும் நம் பிள்ளையும் ஒருசேர கட்டிலில் விசாலத்துடன் கூடிய வகையில் படுத்துறங்க ஏதுவாக படுக்கை அமைத்துத் தருகிறார்கள்.

அத்தோடு ஏற்கனவே பிரசவித்து இதே படுக்கையிலிருந்து பிள்ளைக்குப் பாலூட்டி சீராட்டி வளர்த்தெடுத்த பின்பு இம்மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்ட ஏதோவொரு பெற்றவளின் படுக்கையில் தான் இப்போது நமக்குமென்று ஒரு படுக்கையை ஏற்பாடு செய்துத் தருவார்கள். ஆகையில் உடலின் மீதான இரத்த கவிச்சை வாடையும், பிரத்தியேக மருந்துகளின் வாசமும் படிந்த படுக்கைத் துணிகளைத் துவைத்தெடுத்து நன்கு வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னரே நம் படுக்கையில் விரித்து நம்முடலைக் கிடத்தி எவ்வித கவலையுமின்றியே கண்ணயர்ந்து தூங்கச் செய்கிறார்கள். இப்படியான படுக்கையின் வியர்க்கை நெடியும், அழுக்கும், இரத்தப் பிசுபிசுப்பும், பாலூட்டிக் கசிந்த முந்தைய கறையும் ஒருவேளை சரியாக தூய்மை செய்யப்படாவிட்டால், அடுத்ததாக வந்து தங்கப்போகிற பெற்றவளுக்கு இதனால் வரப் போகிற கிருமித்தொற்றையும், இந்தக் கவிச்சை வாசத்தினால் சரியாகப் பாலருந்தாமல் குழந்தைகள் தவிர்ப்பதையும் பற்றி செவிலியர்களுமே நன்றாகப் புரிந்து வைத்திருப்பார்கள்.

பொதுவாகவே பிரசவத்திற்குப் பின்பான வார்டில் நாம் நுழைகிற போது நம்மை அறியாமலே ஒரு அந்நியத்தன்மை வந்துவிடுகிறது. இந்த இடம் நமக்குப் புதிது, அங்கிருக்கிற செவிலியர்கள், மருத்துவர்கள் நமக்குப் புதிதானவர்கள், ஏற்கனவே பிரசவித்து தங்கள் பிள்ளையோடு படுக்கையில் அக்கம் பக்கத்தில் வீற்றிருக்கிற தாய்மார்களும் நமக்குப் புதிதானவர்களே! அப்படியிருக்க இத்தகைய விசாலமான அறைகளோடு, சுற்றியுள்ள மனிதர்களோடு நாம் வெகுவிரைவிலேயே ஒட்டிக் கொண்டால் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதற்கு நமக்கு இலகுவாக இருக்கும். இத்தகைய பழக்கமில்லா இடத்திலிருந்து கொண்டு துணிந்து நாம் தாய்ப்பாலைப் புகட்ட வேண்டுமென்றால் எத்தகைய மனத்தடையுமின்றி இரண்டு மார்பகத்தையும் வெளியே எடுத்துப் போட்டு பிள்ளைக்குப் பால் கொடுக்க வேண்டியதிருக்கும் அல்லவா!

ஆகையால் தான் பிரசவத்திற்குப் பின்பான வார்டிற்குள் நுழைகிற போதே அங்கிருக்கிற இடத்தோடு, நமது படுக்கையோடு, நம் படுக்கையின் அருகாமையில் ஏற்கனவே பிரசவித்துப் படுத்திருக்கிற தாய்மார்களோடு, நமக்குத் தாய்ப்பால் பாடமெடுக்கிற ஆசானாகிய செவிலியர் மருத்துவரோடு விரைவிலேயே மனத்தடைகளை நீக்கி நெருக்கமாகிவிட வேண்டியிருக்கிறது. நாம் இப்போது பிரசவித்துப் படுத்திருக்கிற படுக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பிரசவித்துப் பாலூட்டி ஆரோக்கியத்தோடு மீண்டு வீடு சென்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு நெகிழ்ச்சியான விசயம், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்? நாம் படுத்திருக்கிற இதே இடத்தில் தான் சற்று முன்பு இன்னொரு தாயும் அவளது சேயும் துயில் கொண்டிருக்கிறார்கள் என்பது எப்பேர்ப்பட்ட மனதிற்கு இதமான ஞாபகம்! நாம் வீட்டிற்குச் சென்ற பின்னாலும்கூட நாமும் நம் பிள்ளையும் உறங்கியெழுந்த இதே இடத்தில் இன்னொரு தாயும் பிள்ளையும் வந்து துயில் கொள்ளத்தான் போகிறார்கள். ஆதலால் இவ்விடம் என்பது நமக்கு பெருமதிப்பிற்குரிய நினைவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள் தாய்மார்களே!

இன்னும்கூட நம்மைப் போலவே எத்தனையோ தாய்மார்களை, பிள்ளைகளை நம் கர்ப்பப்பையில் சுமப்பதைப் போல தாங்கிக் கொள்வதற்கு மருத்துவமனைப் படுக்கைகள் இன்னும்கூட சித்தமாயிருக்கின்றன. இவையெல்லாம் ஒருவேளை இயேசுபிரானைச் சுமந்த இரும்புச் சிலுவைகள் தானோ என்னவோ? சிறுகச் சிறுகச் சீவி சிறுத்துவிட்ட பென்சிலைக்கூட கைவிடாமல் தனக்கு நெருக்கமானதாக வைத்திருக்கும் ஞாபகங்களைப் போல நாம் ஏன் பிரசவித்த படுக்கையை வாழ்நாளின் முக்கியமான நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்ளக் கூடாது?

இப்படியாகப் பிரசவித்த தாய்மார்கள், தங்கள் அடிவயிற்றுப் பிள்ளைச் சுமையை இறக்கியவுடனே நெல்மணிகளை உதிர்த்த தட்டைகளைப் போல உடலும் இலகுவாகிப் போகும். ஆனாலும் தாய்ப்பால் புகட்டுவதில் சிறிது ஆசுவாசத்தோடு இருப்பதற்கு அத்தகைய அறையில் கொஞ்சம் அடித்து வீசுகிற தூய நல்காற்றும், மஞ்சள் பூசிப் படருகிற சூரிய வெளிச்சமும் இருக்கிற பட்சத்தில் அம்மாவும் பிள்ளையும் தங்கள் அந்நியத் தன்மையை உதிர்த்துவிட்டு வீட்டினது இணக்கமான சூழலை மருத்துவமனையிலேயே உணரத் துவங்கிவிடுவார்கள்.

அதோடு நம் அருகாமையில் ஏற்கனவே பிரசவித்துத் தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருக்கிற தாய்மார்களிடம் நாம் இணக்கமாகி நட்பு பாராட்டுகையில் தாய்ப்பால் புகட்டுவது தொடர்பான சந்தேகங்களை அனுபவ ரீதியில் அவர்களேகூட நமக்கு வந்து உதவக்கூடும். தங்கள் பிள்ளைகளை மார்பில் போட்டு நேரடியாகவும் அவர்கள் நமக்கு விளக்கிச் சொல்வற்கு முன்வருவார்கள். ஒருவேளை நமக்குத் தாய்ப்பால் வரவில்லையென்று உள்ளுக்குள் ஆதங்கப்பட்டாலோ, அடிக்கடி தாய்ப்பால் வேண்டுமென்று கேட்டுப் பிள்ளை பசித்து அழுதாலோ அவர்களது மடியிலே நம் பிள்ளையைக் கிடத்தி அவர்களது பிள்ளையாகப் பாவித்து மார்பிலே பாலருந்தச் செய்து நமக்கு உறுதுணையாக இருப்பார்கள். நாம் பிரசவித்த அறையில் எத்தனையோ தாய்மார்களிருக்க தாய்ப்பால் போதவில்லையென்று புட்டிப்பாலைக் கொடுப்பதைக் காட்டிலும், நம்மைப் போன்ற தாயிடம் இரவல் கேட்டு பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பதென்பது பெரும் மகத்தான காரியமல்லவா!

நாம் பிரசவித்த அதே மருத்துமனையில், அதே நாளில், அதே நேரத்தில், நம்மோடே பிரசவித்து பிள்ளை பெற்ற தாய்மார்களிடம்கூட நாம் வாழ்நாள் நட்பை வளர்த்துக் கொள்ளலாம் தானே! அப்படி வருடாவருடம் ஒன்றாக பிரசவித்த தாய்மார்களெல்லாம் ஒன்றுகூடி ஒரேயிடத்தில் பிறந்த நாளை, தாங்கள் பிரசவித்த பெருநாளை கொண்டாடினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்? ஒவ்வொரு வருடமும் தங்கள் பிள்ளையை அழைத்துக் கொண்டு போய் தான் பிரசவித்த மருத்துவமனையில், தங்களுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரோடு பிறந்த நாள் கொண்டாட்டத்தை நிகழ்த்துகிற பெற்றோர்களும்கூட இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியான சின்னச்சின்ன ஞாபகங்களை நாம் மருத்துவமனையிலிருந்தும் நம் வாழ்வில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் தானே!

பேரன்பிற்குரிய தாய்மார்களே! ஆகையால் தான் நாம் பிரசவித்து உள்ளே நுழைந்தவுடனே அத்தகைய சூழலை உள்வாங்கிக் கொண்டு எவ்வித கூச்சமும் பதட்டமும் இல்லாமல், செவிலியர்கள் சொல்வதைக் கேட்டு, அருகிலிருக்கிற தாய்மார்கள் வழிகாட்டுவதைப் புரிந்து கொண்டு இயல்பாக உங்கள் பிள்ளைக்குப் பாலூட்ட விரைவிலே தயாராகுங்கள் என்று துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறோம்.

குடும்பம் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்

குடும்பம் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்




அழும் குழந்தைக்காக மனைவியிடம்
பேச்சுக்கு அடி வாங்கி
வெறுமனே கண்ணை கசக்கி அழும்
குடும்ப ஆண்களை விட
அழகான கவிதை ஒன்று சொல்லுங்களேன் கேட்போம்…..!

சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140

வெ.நரேஷ் – கவிதைகள்

வெ.நரேஷ் – கவிதைகள்




* பால் குடித்த ஞாபகத்தில்
விரல் சூப்புகின்றன
பெற்றோரை இழந்த குழந்தைகள்.

* ஆழ்துளைக் கிணற்றில்
மாட்டிக்கொண்ட குழந்தைக்கு
இது ஜன்னல்கள் இல்லா வீடு என்பது தெரியாது.

* தொப்புள் கொடி அறுத்தாலும்
தொலைதூரத்தில் சத்தம்
அம்மா என்ற சொல்
தொலைப்பேசியில்

* நீ பிறக்கும் போது நானழுதேன்
நான் இறக்கும் போது நீ அழுதாய்
இரண்டும் உமக்குத் தெரியாதே (தாய்)

* ஆலயத்திற்கு வெளியே
பாலுக்கு ஏங்கும் குழந்தை
ஆலையத்தினுல் அபிஷேகம்
அமைதியாய் கிடக்கும் ஆண்டவன்.

* இருப்பதை விட
இறப்பது மேல் என்று
கோபத்தில் கசிந்து விடும்
அன்பான அம்மா
கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை
இறந்து போவேன் என்று.

-வெ. நரேஷ்

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




படித்தீர்களா_அவற்றை
****************************
உலகின் அனைத்துப் பகுதிகளிலும்
ஏதோ ஒரு தகவல்
நம்மைச் சுற்றிப் பரவிக்கொண்டே இருக்கும்….
படித்தீர்களா அவற்றை…!

யாருடையை கருத்தும்
எவரையும் ஒத்திருக்கவில்லை,
மாற்றமும் ஏமாற்றமும் நிறைந்துள்ளன
படித்தீர்களா அவற்றை…!

மனிதனின் உடல் நிலைப்பொருத்து
அவன் தலை முதல் கால் வரை…
மனம் முதல் நோய் வரை…
நிலம் முதல் வானம் வரை…
பத்தினி முதல் பத்மினி வரை…
அனைத்தும் இக்காலகட்டத்தில்
தகவல்களுடன் பரிமாற்றத்தில்
அடங்கிவிடுகின்றன..
படித்தீர்களா அவற்றை…!

அக்கால தகவல்கள் ஓலையில் எழுதப்பட்டு
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு
ஒற்றன் மூலம் கொண்டு செல்லப்பட்டது….
தற்பொழது சொடுக்கிடும் வேளையில்
தனிநபருக்கோ, தலைமையை கொண்ட குழுவினருக்கோ
அடுத்த நொடியே சென்றடையும் அளவிற்குத்
தற்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் முன்னேறி உள்ளது…
படித்தீர்களா அவற்றை…!

காலையில் எழுந்ததும் கண் விழிப்பது புலனம் என்றானது…
கண்ட செய்திகளும் அதனுள்ளே…
கருத்துகள் நிறைந்த செய்திகளும் அதனுள்ளே…
படித்தீர்களா அவற்றை…!

கைக்குட்டை அளவிற்கு
தகவல் தாள்கள் வண்ணவண்ணமாகப் பரவிக் கிடக்கின்றன..
யாரும் எடுக்காத காரணத்தினால்
கால்நடை தீவனமாய் மாறிவிட்டன… படித்தீர்களா அவற்றை…!

எத்தனையோ தேவை செய்திகள்
யார் யாரோ கால் பட சாலைகளில் பறக்கின்றன…
காற்று படித்த மீத செய்திகள் அனைத்தையும்…
படித்தீர்களா அவற்றை…!

ஏதோ சில அவசரத் தேவைகள் நிறைந்த எழுத்துக்களை
யார் யாரோ உள்ளங்கைகள் மறைத்த பேருந்து நிறுத்தங்கள்
ஏராளம்…என்னதான் கூறியுள்ளனர்…
படித்தீர்களா அவற்றை…!

உண்மையான செய்திகளும்..
உலகாளும் விருதுகளும்
எவரெல்லாம் வாங்கி சென்றனர்…
எவரெல்லாம் இழந்து சென்றனர்…
படித்தீர்களா அவற்றை…!

உனக்கான இடம் யாருக்குக் கிடைத்ததென்றும்…
உன்னுடைய உறவு யாரிடம் இணைந்த்தென்றும்
எதார்த்த வார்த்தைகளில்
படித்தீர்களா அவற்றை…!

சர்ச்சைக்குரிய சாமியாரும்,
சமயோசித சீஷயையும்
சிந்தனைக்கடலில் சிலுமிசத்துடன் இணைந்த தகவல்…
படித்தீர்களா அவற்றை…!

மனைவியை சேர்க்க இடமில்லை…
இறந்தபின் கொண்டு செல்ல வண்டி இல்லை…
கண்கலங்கிக் கொண்டே தூக்கிச் சென்றான் கணவன்..
படித்தீர்களா அவற்றை…!

அலைகள் நிறைய விழுந்தாலும்
மூன்றாம் அலையை நோக்கி ஓடும் நாடு…
யாரெல்லாம் இருப்பர்..யாரெல்லாம் இறப்பர்…..
படித்தீர்களா அவற்றை…!

நோய் வந்து சாகாமல்
பசிவந்து இறந்தார்கள்..
பற்ற வைக்க இடமின்றி
கண்ட இடமெல்லாம் எரித்தார்கள்…
படித்தீர்களா அவற்றை…!

தொடரும் தகவல்களைத்
தினம் தினம் சூடாய் எடுக்கும் நாளிதலும்,
படிக்கும் நாளிதழ்களிலும்
படித்து வைக்கும் வரை கையைச் சுடுகிறதே….
மனதையும் சேர்த்து சுடுகிறதே…
படித்தீர்களா அவற்றை…!

மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்…
என்றென்றும்
படித்தீர்களா அவற்றை…!

அந்த ஆணின் பிம்பத்தில் யார் அவர்கள்
***********************************************
உலகில் எத்தனையோ வகை ஆண்கள் உண்டு…
யாரும் பார்த்திடாத ஆண்கள் உண்டு…
நம்பிக்கையின் வழியில் கரம் பிடித்து நடக்கும் ஆண்கள் ஆயிரம்…
உழைப்பில் உயர்வுண்டு என்று அதில் வெற்றி பெரும் ஆண்கள் ஆயிரம்….

கட்டாந்தரை படுக்கையில் காலம் களிக்கும் ஆண்களுண்டு..
கை நிரம்பும் சீட்டுகட்டுகளில் குடும்பத்தை சோக்கர் ஆக்கும் ஆண்களுண்டு…

அத்தனை ஆண்களில் இவர்களும் உண்டு..

யார் அவர்கள்….

அரை டவுசர் காலம் முதல்
சைக்கிள் உந்தி அரிசி மூட்டை சுமந்து
அந்த அண்ணாச்சிக் கடையில் கொடுத்துவிட்டு
கிரிஸ் நிறைந்த சைக்கிள் செயினை
விரல் விட்டு நேர் செய்து மை துடைத்த டவுசர் கொண்ட
இளமை கால என் அப்பா அவர்…..!

ஆடு்மாடு மேய்த்து பட்டியிலிட்டு…
தலைமேல் கரும்பைச் சுமந்து
மாட்டுக் கொட்டகையில் தஞ்சம் அடைந்து
சொந்த இடத்தில் வாடகை இல்லாத எரவாணத்தில்
காற்றுக்கும் மழைக்கும் சவால்விட்டு
கோவணத்தின் மறைப்பில்
குளிர் மறைந்த என் அப்பா அவர்….!

திருமணத்தின் விவரம் அறியா துணையாக
என் அம்மையைக் கொண்டு …!

அறியாத பருவமாக அந்த தருணத்தைக் கையில் கொண்டு
உழைப்பை மட்டும் உயர்வாகவும்,
கௌரவத்தைக் குடும்பமாகவும் கொண்டு
உழைத்துக்கொட்டிய என் அப்பா அவர்….!

அப்பனின் அச்சைப்பெற்று
வீட்டின் மூத்தவனாய் முந்திக்கொண்டு பிறந்து
முற்றுப் பெறாத படிப்பினைப் பெற்று
முடித்த மேல்நிலையில் வேலை சென்று
வீட்டிற்கு உழைக்க சென்றவர் என் அண்ணன் அவர்….!

காலகாலத்தில் கல்வி பெற்று..இல்லை இல்லை கல்வி இழந்து…!

வயது இழந்த திருமணம் கொண்டு
வாழ்க்கையில் போராட்டத்தைக் கையில் கொண்டு
குடும்பம் ஒன்றே உலகாய் கொண்டவர்…என் அண்ணன் அவர்….!

எத்தனையோ ஆண்களை நாம் அன்றாட வாழ்வில் பார்த்திருப்போம்….!

ஒரு அரைமணி நேரம் நாம் சாலையில் பயணிப்பதாகக் கொள்வோம்……!

அதோ..

அவசரவசரமாகக் கிளம்பும்
ஐந்தாயிரம் ஊதியம் பெறும் அடகுக் கடை ஊழியராய்…!

உண்பதைக் கட்டிக்கொண்டு
மதிய உணவைக் குறைத்துக் கொண்டு
ஓயாமல் பாடுபடும் ஏதோ ஒரு கார்பரேட்டின் கடைமட்ட ஊழியனாய்….!

கட்டிய கைலி கழண்டு விழாத கட்டுயிட்டு
முண்டாபனியலில் முழுதாகக் குளித்து..
முண்டாசு அவிழ்த்து கழுத்து துடைக்கும் மூட்டை மடை ராமசாமியாய்….!

மூக்கைப்பிடித்துக் கொண்டு மூலையில் நிற்கும் ஆணாய்……!

அவன் முன் ட்ரௌசரில் கழிவுநீர்க்குழி இறங்கும் துப்புரவாளனாய்….!

நிமிர்ந்து பார்த்தால் மின்கம்பியில் தைரியவானாய்…!

தடுக்கிவிழுந்தால் உயிர்போகும் டவர்களின் மேல் ஏறும் தைரிய இளசாய்….!

இப்படி சொல்லிக்கொண்டே போகும் வண்ணம்..!

தூய மனிதனாய்…!
துள்ளித்திரியும் காளையாய்…!
துவண்ட மனமாய்…!
தைரிய விளக்கமாய்…!
தத்ரூப மாந்தனாய்…!
மானசீகக் காதலனாய்…!
குடும்பப் பொறுப்பாளனாய்…!
குடியில் மன்னனாய்…!
குட்டிக்குழந்தையின் தகப்பனாய்…!
வளர்ந்த குழந்தையின் கணவனாய்….!
பேரன் பேத்தியின் தாத்தனாய்…!
தகப்பனில்லா மகளுக்கு அப்பனாய்…!
தாயில்லாக் குழந்தைக்கு அன்னையாய்…!

வீரம் கொண்ட தங்கைக்கு அண்ணணாய்…!
பயம்கொண்ட அக்காளுக்குத் தம்பியாய்…!
நோய் வாய் பட்ட குடும்பத்திற்கு மருந்தாய்…!
நொடிந்த அப்பனுக்கு நம்பிக்கையில் தடியாய்…!
நாள்காட்டியை கிழிக்கும் மகனாய்…!
நல்லது கெட்டது அறியா மகனாய்…!
குழந்தையில் நெஞ்சில் உதைக்கும் பேரனாய்…!
வளர்ந்தும் நெஞ்சில் உதைக்கும் மகனாய்..!

எத்தனை ஆண்களடா…!
அந்த இத்தனை ஆண்களின் பிம்பத்தில் யார் அவர்கள்…!

– சே கார்கவி