ஒரு மீனின் பிரசவம் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா

ஒரு மீனின் பிரசவம் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா




கோடை முடியும் தருவாயில்… ஆடிமழை தேடிவரும் …சற்றே கடினமான காலக்கட்டம் அது. “சின்னான்” தன்.. தூண்டில், வலை சகிதம்.. மீன் பிடிக்க ஏரிக்கு புறப்பட எத்தனிக்க, மனைவி கருப்பி, “மூணு நாளா குடும்பமே பட்டினி… நீ மீன் புட்ச்சி விக்காபோனாலும் போட்டும்.. வீட்டுக்காவது ஒண்ணு ரெண்டு மீன புடிச்சிட்டு வா.. அத துண்ணாவது உசுரு வாழலாம்..கூறு கெட்ட மனுசன் !இவன நம்பி 3 புள்ள பெத்த என்னிய ஜோட்டால அடிக்கணும்” என கடைசி வார்த்தைகளைச் சற்றே அடக்கி உச்சரித்தாலும் அது அவன் காதில் சுத்தமாக ஒலித்து ரீங்காரம் செய்தது!

இதெல்லாம் அவனுக்கு, பழகிப்போன.. அண்ணாட வசவுகள்தான் என்றாலும.. இன்று ஏனோ அவன் மனம்  விரக்தியில்… தன்மேல் உயிரையே வைத்திருந்த, மாமன் மகள் அஞ்சலியின் காதலை நினைத்து  அலைக்கழிந்தது…! அழுக நீரின்றி வற்றிப்போன கண்களுடன் மௌனமாய் “அன்னம்பேடு” ஏரி நோக்கி மெல்ல நடையைக் கட்டினான் சின்னான்!

அந்த சீசனில் மீன்கள் அவ்வளவாகக் கிடைக்காது என்பதால்.. மீன்பிடிக்க யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது ஏரிக்கரை… ஏரியில் தண்ணீரும் பாதியாக குறைந்து, மழைக்கு ஏங்கி கொண்டு இருந்தது! அதுவுமின்றி… அது   மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் தொடக்க காலம் வேறு!

இவன்கூட வந்திருக்க மாட்டான்.. அவன் மனைவி நச்சரிப்பு தாங்காமல் தான் ..வேறுவழி இன்றி வந்தான்! வெகுநேரம் வெயிலில் தலை காய்ந்து சுற்ற தொடங்கியது தான் மிச்சம்.. ஒரு மீனும் கிடைக்க வில்லை…

‘இன்று வீட்டுக்கு  வெறுங்கையுடன் சென்றால் என்ன சண்டை நடக்க போகிறதோ?’என்று எண்ணியபடி வலையை இழுக்க முற்பட்டபோது.. என்ன ஆச்சரியம் ஒரு பெரிய மீன் மாட்டியிருந்ததை உணர்ந்து  துள்ளிக் குதித்து மகிழ்ச்சியோடு, லாவகமாக கரைக்கு வலையை இழுத்தபோது… சுமார் இரண்டு கிலோ எடையுள்ள மீன் சிக்கி உள்ளதை கண்டு மேலும் இன்புற்று  அதை மேலும் கிட்ட இழுத்து பார்த்தபோது ,அவனுக்கு பகீர் என்றது….

ஆம் அது கருவுற்று நிறைமாத கர்ப்பிணி போல், பெருத்த வயிற்றுடன், மூச்சு விடத் திணறியபடி, படபட என துடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து இவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.. அதை முற்றுமாய் வெளியே இழுக்காமல் பாதி நீரில் மூழ்க விட்டு, மெல்ல அதை ஆராய்ந்தான்!

ஆம் அது ஒரு “அரியவகை” மீன்.. மிக அதிக விலைபோகக் கூடிய மருத்துவ குணம் கொண்ட மீன்.. என்று அறிந்ததும் அவன் மனம் மேலும் சங்கடப்பட்டது.
அவன் மெல்லத் தண்ணீரில் வலைக்குள் கைவிட்டு அதன் வயிற்றை சோதித்த போது, அது இன்னும் ஓரிரு மணிநேரங்களில் நூற்றுக் கணக்கான குட்டிகளை
ஈன்றெடுக்கப்  போகிறது என்பதை அறிந்துகொண்ட..அவன் மனம் அதன்மேல் கழிவிரக்கம் கொண்டது. அந்த உச்சி வெயில் சூரிய ஒளியில் அதன் கண்களை
பார்த்து அப்படியே ஆடிப்போய்விட்டான். ஆம் அவன்  மீனின் கண்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் ஆற்றலை தன்  பத்து வருட மீன்பிடி தொழிலின்
வாயிலாக நன்கு அறிந்து வைத்திருந்தான்!

“நண்பா!    நீ என்னைக் கொன்றுவிட்டால், நூற்றுக்கணக்கான அரியவகை மீன்குஞ்சுகளும் என்னுடன் சேர்ந்து இறப்பது திண்ணம்..நீ கருணை கூர்ந்து என்னை விட்டுவிட்டால், இந்த நூற்றுக்கணக்கான குட்டி மீன்கள் நன்கு வளர்ந்து உனக்கும் உன் இனத்தவற்கும் கிடைக்குமே! அது உங்களுக்கு பெருத்த

லாபம் தருமில்லையா? ஆகவே! தயவு செய்து என்னை விட்டு விடு.. பிரசவ வலி வேறு வந்து என்னை கொல்லுகிறது..” என அந்த கண்கள் இவனிடம் கெஞ்சுவது, இவனுக்கு நிதர்சனமாகவே புரிந்தது!

ஆனால் மறுபுறம் அவன் மனைவியின் முகம் அவன் கண்முன் தோன்றி “யோவ்! துப்புகெட்ட மனுஷா..! நாளைக்கு மட்டும் நீ மீனோட வர்லன்னு வெய்யி,
கண்டவனுக்கு முந்திய விரிச்சாவது.. நானும் எம் புள்ளைங்களும், வக்கணையா மீன்குழம்பு சாப்பாடு சாப்டுவோம்.. ! ஆமா சொல்லிபுட்டேன்!” என்று நேற்றிரவு..
இவனைக் காறித் துப்பாத குறையா அசிங்கபடுத்திப் பேசியதை எண்ணியும், நான்கு வயது  கடைக்குட்டி பெண் “அப்பா அப்பா! “மீன்சென” அவ்ளோ
ருசியாமேப்பா ? பக்கத்து வீட்டு மேரி சொன்னாப்பா..!. எனக்கு சாப்புடனம் போல ,ஆச ஆசையா இருக்குப்பா!” என அடிக்கடி தன் காலைப் பிடித்து கெஞ்சி,
கொஞ்சுவது.. அவன் நினைவில் வந்து நிழலாட.. ஒரு நிமிடம் அவன் தந்தை மனம் தன் மகள் பாசத்தால் தடம் மாறியது..!.

ஆனால் அடுத்த நொடியே அந்த மீனின் கண்களை மீண்டும ஒருமுறை உற்று நோக்க. அது துடிதுடித்தபடி.. “நண்பா! நீ ஒரு குழந்தை பற்றி மட்டுமே கவலை
படுகிறாய்!!, ஆனால் நானோ, இந்த உலகை முதல் முறையாய் தரிசிக்க நூற்றுக்கும் மேற்பட்ட என் குட்டிகளை பற்றி கவலை படுகிறேன்,!

தயவு கூர்ந்து என் குட்டிகளை எப்படியேனும் கைவிடாமல் காப்பாற்று!”   என்று (தன் மனக்குரலை ஒட்டுகேட்டு) , தன்னிடம் கெஞ்சுவது போல் அவன் உணர்ந்தான்… பிரசவ வலி அதிகரித்ததாலும், குட்டி போடும் நேரம் நெருங்கியதாலும்.. அதன் துடிப்பும் துள்ளலும் அதிகரிப்பதை கண்டு, என்ன முடிவு எடுப்பது என இருதலைக்
கொள்ளி எறும்பு போல்.. அவன் பெரும் குழப்பத்தில் சிக்குண்டு தவித்தான்!.. கடைசியாக அதன் கண்களை மீண்டும் ..உற்று சிலபல நொடிகள் பார்த்த அவன்…
அதன் மரணபயத்தையும்; குட்டிகளை இழக்க நேரிடும் துயரத்தையும் .. அந்த கண்களில் தீர்க்கமாக கண்டு… சட்டென உடனே ஒரு முடிவுக்கு வந்து !வலையில்
இருந்து அந்த அதிசய மீனை விடுவிக்க…  அது சர்ரென்று, விட்டால் போதுமென தப்பித்து ஓடாமல்…

இவன் அருகிலேயே.. தண்ணீரில் சிலபல வட்டமடித்துத் தன் நன்றியுணர்வை காண்பித்து… பிறகு மெல்ல நிதானமாக… தண்ணீருக்குள் புகுந்து … நீந்தி அதன் ஆழத்துக்கு சென்று மறைந்தது!

இப்போது .. அவனுக்கு சொல்லொணா மகிழ்ச்சி மனதில் தாண்டவமாடியது…! ஏதோ உயிர்களைப் படைக்கும்  “பிரம்மதேவன்” போல் தன்னை தானே உணர்ந்து
மகிழ்ந்தான்! அந்த நூற்றுக்கணக்கான மீன் குஞ்சுகள் தன்னை முத்தமிட்டு கொஞ்சுவது போல் கற்பனை செய்தான்… அந்த முத்தங்கள் தன் குழந்தைகளின்
முத்தத்தை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு இனிப்பாய்! இதமாய் இருந்தது! அவனுக்கு!!

அவன் மனைவி வசவு பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல்.. நேரே தன் பள்ளி நண்பனிடம் ‘ஒழக்கு’அரிசியும்,  போகும் வழியில் கந்தன் கோயில் தோட்டத்தில், பொன்னாங்கண்ணி கீரையையும் பறித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

அவளோ? கோபத்தின் உச்சியில்  “ஏன்யா! எங்கள என்ன ஆடு மாடுன்னு நினைச்சுட்டியா? கீர தழன்னு துண்றத்துக்கு…” என கெட்ட கெட்ட வார்த்தைகளில்
திட்டியபடி… கஞ்சியும் கீரைக் குழம்பும் செய்து உண்டாள்! … இவன “சாப்பிடு” என்று ஒரு வார்த்தை கூட கூப்பிடவில்லை. அவனுக்கும் மனம் நிறைந்து இருந்ததால்
பசிக்கவும் இல்லை..!

அடுத்தநாள்.. பொழுது விடிந்ததும், நேரே ஏரிக் கரைக்குச் சென்று அமர்ந்து அந்த அழகிய மீனை தேடி அவன் விழிகள் நீரில் அலைபாய்ந்தது. அவன்  எதிர்பார்ப்பு
வீண்போகவில்லை.. அந்த மீன் இவனை நோக்கி பாய்ந்தோடி வந்து மகிழ்ச்சியில் வட்டமடித்து வட்டமடித்துச் சுழன்றது!. இவன் கண்களோ மீன் குஞ்சுகளை தேடிச்
சற்றே ஏமாற்றம் அடைந்தபோது..

அந்த தாய் மீன் தன் வாயை அகலமாய் திறக்க.. நூறுக்கும் மேற்பட்ட குட்டி குட்டி குஞ்சுகள் வெளிவந்து தாயின் வாயருகே நீந்த அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை… அந்தத்  தாய் மீன் மீண்டும் அகலமாய் வாய் திறக்க ஒன்றில்லாமல் அனைத்துக் குஞ்சுகளும் அதற்குள் அடைக்கலம் அடைந்தன!

அவன் ஏதோ தேவலோகத்தில் இருப்பது போல் இன்புற்றான். சற்று நேரத்தில் அது அவனை விட்டு அகன்று சென்றது. இவன் நேரே “மோசஸ்” அரிசி மண்டிக்கு
விரைந்தான்..அங்கு மூட்டை தூக்கும் வேலையில் சந்தோசமாய் சேர்ந்து கொண்டான்!

அந்த வேலை அவனுக்கு புதிது என்பதால், மிகவும் கஷ்டப்பட்டான்!சில பல நாட்களில் அந்த வேலை பழகி போக… அவன் வீட்டில் அடுப்பு , தடையின்றி எரியத்
தொடங்கியது! தினமும் அதிகாலை ஏரிக்குச் சென்று தன் மீன் தோழியை சந்திக்க அவன் மறப்பதே இல்லை..ஒரிரு வாரங்கள் கழித்து, மீன் தோழி மட்டுமே
வந்தது.. அதன் குஞ்சுகளைக் காணவில்லை… !

ஆம்! அவை வளர்ந்து சுதந்திரம் பெற்று விட்டன என தெரிந்து கொண்டான். இப்போதெல்லாம் அவன் மீன் தோழி. அவன் கைகளில் தவழ்ந்து விளையாடியது!
அவனுக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சியது.!. பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ..அந்த மீனை அவன் ஒரு நாள் கூட முத்தம் கொஞ்ச மறந்ததே இல்லை! அன்பு
அனைத்துக்கும் அப்பாற்பட்டது  என்பதே அபரிமிதமான உண்மை!