சிறுகதை: அத்திப்பழம் – கே.என்.சுவாமிநாதன்
நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்
நூல் : பணமும் அர்ப்பணமும்
மொழி : மலையாளம்
ஆசிரியர் : சபாஷ் சந்திரன்
விலை : ரூ. 110
வெளியீடு : மாத்ருபூமி புக்ஸ், கோழிக்கோடு
விற்பனை : 2765381. 0495 2765388.
www.mathrubhumiboos.com
மலையாள மொழிப் பத்திரிகை மாத்ருபூமியின் சிறுவர் வெளியீடான பால பூமியில் ஆசிரியராக இருந்த சபாஷ் சந்திரனின் அவர்கள் அந்த இதழில் எழுதி வெளிவந்த, சிறுகதைகளின் தொகுப்பே இந்த பணமும் அர்ப்பணமும் என்ற சிறுவர் புத்தகம்.
இதில் இடம் பெற்றுள்ள முப்பத்தைந்து கதைகளும் உண்மை, நேர்மை, இலட்சியம், தியாகம், நம்பிக்கை, அறிவு, திறமை, ஒழுக்கம் போன்ற நேர்மறை சிந்தனைகளை சிறுவர்கள் மனதில் விதைப்பதாக இருக்கின்றன.
எடுத்துக் காட்டாக சில கதைகளின் சாராம்சங்களையும் அதன் நீதி போதனைகளையும் சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாமென்று எண்ணுகிறேன்.
பிரார்த்தனையும் ஆணவமும் என்ற முதற்கதையில் பிரார்த்தனையால் ஏற்பட்ட ஆணவத்தின் பலனை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆணவம் அழிவை நோக்கியே நம்மை அழைத்துச் செல்லும் என்ற சிறு உண்மையை விளக்குகிறார்.
கல்வி, செல்வம் இதில் எது நிலைத்து நிற்கும் என்ற விவாதத்திற்கு வித்யாதரனும் தனாகரனும் என்ற கதை ஓர் எடுத்துக்காட்டு. ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி மற்றொன்றாய் வருகிறது என்பதை திராட்சை ரசமும் செங்கலும் என்ற கதை வெளிப்படுத்துகிறது. செங்கல் என்பதன் உருவாக்கத்தையும், மது என்பதின் தயாரிப்பையும் ஒப்பிட்டு பகவான் ராமகிருஷ்ணரின் கருத்து மூலம் வெளிப்படுத்தி இருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மதுவின் ஆபத்தைப் பற்றிய அவரின் அறிவுரை பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணியாய் பதியும்.
கத்தியும் பேனாவும் என்ற கதையில் கத்தியினால் ஏற்பட்ட தோல்வியும், பேனாவினால் ஏற்பட்ட பெரும் பலனும் விளங்குகிறது. கத்தியை தீட்டாதே, புத்தியை தீட்டு என்று புத்திமதி சொல்கிறது.
ஆசிரியர் சுபாஷ்சந்திரன் மலையாளத்தின் முன்னணி எழுத்தாளர், சிறுவர்களுக்கான நிறைய தொகுப்புகள் வெளியிட்டிருந்தாலும், அவரின் மனுஷ்யனு ஒரு …. முகம் என்ற மலையாள நாவல் கேந்திரிய சாகித்ய அகாடமிவிருது, கேரள சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது, ஓடக்குழல் விருது என பன்னிரெண்டு பரிசுகளைப் பெற்றிருக்கின்றது. இந்த புத்தகம் A preface to Man என்று ஆங்கிலத்திலும் வெளி வந்திருக்கிறது.
இனி சில கதைகளுக்கு வருவோம். பணிவும் விவேகமும் என்ற கதை மூலம் விவேகத்தோடு கூடிய பணிவே வெற்றியை பெற்றுத் தரும் என்று விளக்குகிறார். ஒரு யானை தன் இனத்தில் யாரோடும் நண்பனாகாமல் மற்ற மிருகங்களிடம் நெருக்கமாக இருக்கும்போது, ஆபத்துக் காலத்தில் மற்ற மிருகங்களைவிட தன் இனத்து யானையே உதவிக்கு வருமென்று விளக்குகிறார். புது வருடத்தின் தேவதை என்ற கதை சோம்பலையும் அதை துரத்துவதையும் நாசூக்காகவும் நையாண்டியாகவும் ஒரு குழந்தையின் மூலம் விளக்குகிறார். வாசிப்பும் பேச்சும் என்ற கதை மூலம் பேச்சை விட செயலே சிறந்தது என்று இயம்புகிறார்.
புத்தகத்தின் தலைப்பைப் பெற்றிருக்கும் பணமும் அர்ப்பணமும் என்ற கதை ராஜராஜசோழன் காலத்தை ஒட்டியதாக வருகிறது. வறுமையிலும் ஒரு பெண்ணின் அர்ப்பணிப்பும் மன்னரின் மனமாற்றமும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
ஒன்பது வயது முதல் பதினாலு வயது வரை உள்ள சிறுவர், சிறுமியரின் வாசிப்பு ரசனையை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்நூலின் கதைகள். எல்லா சிறுவர் கதைகளிலும் உள்ளது போலவே இக்கதைகளிலும் காடுகள் வருகிறது, மலை வருகிறது, கடல் வருகிறது. மற்றும் யானைகள், பூனைகள், சிங்கம் புலிகள், வண்டுகள், குருவிகள், கிளிகள் போன்றவைகள் கதாபாத்திரங்களாக உலா வந்து சிறுவர்களின் மனதில் சந்தோச சலனத்தை உண்டு பண்ணுகின்றன. கற்பனை மனோபாவத்தை வளர்க்கின்றன. மேலும் மன்னர்கள், ராஜரிஷிகள் துறவிகள், திருடர்கள் இராஜகுமாரன்கள் கதை மாந்தர்களாக வருகிறார்கள். எல்லா கதைகளும் சொற் சிக்கனமும் வாசிப்பு லாகவமும், நீதி போதனைகளும் கொண்டவைகளாகவே உள்ளன.
அரேபியா, ஜப்பான் போன்ற வெளி நாடுகளும், கெளசாம்பிகா, மித்ரபுர், குருசேத்திரம், மகதம், காந்தாரம் போன்ற இந்திய நாடுகளும் கதைகளில் கதைச் சூழலாக அமைகிறது. அது வாசிக்கும் சிறுவர்களுக்கு ஒரு மண் சார்ந்த உணர்வை ஏற்படுத்தும்.
இன்றும் நாளையும் என்ற கதை பாண்டவர்கள் மூலம் நன்றே செய்க அன்றே செய்க, அதை இன்றே செய்க என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். வண்டுகள் கற்றுத் தந்த பாடம் ஒரு சுற்றுச் சூழல் பேருண்மையை குழந்தைகள் மனதில் விதைக்கிறது. புலியும் பூனையும் என்ற கதை முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தத்துவத்தை விவரிக்கிறது.
மன்னரும் திருடனும் என்ற கதை ஒரு திருடன் திருந்தினால் வீடு திருந்தும், வீடு திருந்தினால் நாடு திருந்தும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேல் என்ற தத்துவத்தை பேசிச் செல்கிறது பிரச்சினையும் தீர்வும் என்ற கதை.
கரிக்கட்டையும் வாழ்க்கையும் என்ற ஜப்பானியக் கதை உழைப்பின் உயர்வை உணர்த்திச் செல்கிறது. இறக்கையின் சக்தி ஆணவத்தின் ஆபத்தை உணர்த்துகிறது. கடைசி வாய்ப்பு என்ற கதையில் மகாபலி, வாமனன் மூலம் ஓணப் பண்டிகையின் தத்துவார்த்தங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. முத்தாய்ப்பாக கப்பலும் தடியும் மூலம் முயற்சியின் உயர்வு விளக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் முப்பத்தைந்து கதைகளும் பிஞ்சு உள்ளங்களில் நாட்டுப்பற்று, சுற்றுச்சூழல், நேர்மை, நீதி, தியாகம், செம்மை, அறிவின் தேடல் போன்ற உயர்ந்த சிந்தனைகளை விதைத்துச் செல்கிறது என்பது திண்ணம்.
– சுந்தரராமன்
பாம்புடன் ஒரு உரையாடல் சிறார் கதை – குமரகுரு
துரோகமறியாத பாம்புடன் சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.
பசித்தால் அதன் முட்டையை உண்ண சொல்லி பரிந்துரை செய்தது.
“முட்டைகளுக்குள் உன் குழந்தைகள் இருக்கிறார்களே! என்னால் உண்ண முடியாது” என்று மறுத்தேன்…
“நான் இன்னும் அடைகாக்கவேத் துவங்கவில்லை உயிர் உருவாக நாளாகும்! பரவாயில்லை பிறவா உயிரைவிட உயிருள்ளவரின் பசி போக்குதல் முக்கியம் அல்லவா?” என்று சொன்னது.
இந்த பாம்பினால் எப்படி இவ்வாறு சொல்ல முடிந்தது? எனக்கு புரியவேயில்லை? நான் குழம்பி கிடக்கிறேன். தாய்க்கு பிள்ளைதானே முக்கியம்? இது ஒரு விந்தையான பாம்பாக இருக்கிறதே?
“இல்லை பாம்பே!! ஆயிரம்தான் இருந்தாலும் உனது கருணைக்கு முன் என் பசி ஒன்றுமில்லை? நான் வேறு எதையாவது சாப்பிட்டு கொள்கிறேன்!” என்றேன்.
“நண்பரே!! நேற்று இந்த வழியாக ஒரு ஜே சி பி சென்றது, இந்த மரங்களும், என் புற்றும் எல்லாம் இன்னும் இரு நாட்களில் சுக்கு நூறாகி விடும்!! எப்படியும் உடையப் போகும் முட்டைகள்தானே, இரண்டை எடுத்து உண்ணுங்கள். ஒரு தவறும் இல்லை!” என்றது
சற்று கலங்கிதான் போனேன், “உள்ளே எத்தனை முட்டைகள் இருக்கின்றன பாம்பே?” என்று கேட்டேன்.
“இருபது இருபத்தைந்து முட்டைகள் இருக்கும் நண்பரே! எதற்காக கேட்கின்றீர்கள்?”
“முதலில் நான் இதுவரை பாம்பு முட்டைகளைச் சாப்பிட்டதில்லை. அடுத்து, இவ்வளவு கருணையுள்ள பாம்பை நான் சந்தித்ததில்லை. மேலும், உனக்கு என்னால் ஏதும் உதவ இயலுமா என்று யோசிக்கிறேன்?” என்றேன்
“எனக்கு உதவுவதால் எந்த பயனுமில்லை. எனது முட்டையின் தோல்கள் மிகவும் மெலிதானவை. அவற்றை ஓரிடம் விட்டு மற்றோர் இடத்துக்கு மாற்றவும் முடியாது?” என்று நான் கேட்கும் முன் பதில் தந்தது.
“சரி! ஆனால், என்னால் உன் முட்டைகளைக் காப்பாற்றித் தர முடியும் என்று இப்போது சொன்னால் நீ நம்புவாயா?” எனக் கேட்டேன்
“எப்படி என்று எனக்குத் தெரியும்?”
“அப்படியா? எப்படி என்று சொல்?”
“மஞ்சள் குங்குமம் கொண்டு வந்து இங்கே பூசி பால் ஊற்றி வைப்பாய். இந்த மூடர்கள் என் புற்றைக் கோயில் என்று சொல்லி இடிக்காமல் போவார்கள்! இதுதானேத் திட்டம்?” என்றது.
என் மூளையில் உதித்தத் திட்டத்தை எப்படி இது அப்படியே கூறியதென்று எனக்கு வியப்பாக இருந்தாலும், அதனிடம் அதை ஒப்பு கொண்டு, அதை போல் செய்யலாமா என்று கேட்கத் தோன்றியது…”ஆம்! அதேத் திட்டம்தான்… அதைத்தான் செய்ய போகிறேன்!” என்றேன்…
“வேண்டாம் நண்பா!! இயற்கை ஒரு முடிவையும் மனிதன் ஒரு முடிவையும் எடுத்து, முரண்பட்ட வாழ்வில் என் போன்று பல உயிரினங்கள் உலகெங்கிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையின் படைப்பு நியதியில் எதுவொன்றும் மேலில்லை, எலுவொன்றும் கீழில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட விசத்தைக் கூட எப்போது எங்கே யார் மீது பயன்படுத்த வேண்டுமென்று சொல்லி கொடுத்த இயற்கைக்கு எங்களை காக்கவும் தெரியும், அழிக்கவும் தெரியும். ஆனால், இந்த மனிதர்கள் ஏனோ அவர்களுக்காகப் பிற உயிர்களைக் கொல்லும பல்வேறு விஷ யுக்திகளைக் கையாள்கிறான். காடுகளையெல்லாம் அழிப்பதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, ஆனால், பேராசையில் எங்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்து கொண்டேயிருக்கிறான்.
கெடு சூழல் உருவாக்கித் தான் மட்டும் வாழ வேண்டுமென்ற முனைப்பில், காற்றிலெல்லாம் மாசைக் கலக்கிறான்! என் போன்ற உயிரினங்களெல்லாம் மனிதனைக் கண்டு அஞ்சி நடுங்கத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறான். இன்னொரு முட்டைப் பொறிக்கும் நேரம். என் குட்டி எங்கே யாரால் கொல்ல படுமோ எந்த காரின் வீலில் சிக்கி சாகுமோ என்ற பயத்தில், அஞ்சியஞ்சி வாழ்கிறோம்! எங்களால் எலிகளைக் கூட இப்போதெல்லாம் பிடிக்க முடிவதில்லை… இன்னும் சற்று காலம் சென்றால் நாங்கள் பாம்புகள் என்பதையே நாங்கள் மறந்துவிட வாய்ப்புமிருக்கிறது! உன்னால் எனக்கு செய்ய முடிந்த ஓருதவி இருக்குமேயானால், ஊரருக்கு வெளியே இருக்கும் ஏதாவதொரு வனத்தில் என்னை அழைத்து சென்று விடு! அது போதும்!” என்ற நெடிய உரையைக் கேட்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது!
“நீ கண்ணீர் மல்க மன்றாடினாலும் இந்த மனுசப்பயல் மாற மாட்டான். ஆனால், எப்படி எல்லா பாம்புகளும் விசப்பாம்புகள் இல்லையோ அப்படிதான் எல்லா மனிதனும் பேராசைக்காரன் இல்லை. ஆனால், அந்த ஒரு சில பேராசைப் பிடித்த சுயநலவாதிகளால்தான் மனித இனமே நசுக்கப்படுகிறது. நீ எப்படி உன் பிள்ளைகளை எண்ணி வருந்தேகிறாயோ, மனிதர்களும் அதே போல் அவர்களின் பிள்ளைகளுக்கான வாழ்வை எண்ணி அஞ்சியஞ்சித் வாழ்ந்து வருகிறார்கள். உனக்கும் பெரும்பான்மை மனிதர்களுக்கும் ஒரே மாதிரி வாழ்வுதான். வா நாம் காட்டுக்கு போய்விடுவோம்… அங்கே ஜே.சி.பி வரும்வரை வாழ்ந்துதான் பார்ப்போம்!!” என்று நானும் பாம்போடு கிளம்பி விட்டேன்….
அழகு குழந்தைகள் கதை – இரா. கலையரசி
கழுத்தை ஆட்டி ஆட்டி “நான் நல்லா ஆடறேனா பா”னு கேட்டபடி வந்தது குட்டி மயில் குந்த்ரா.
“ம்.ம்.நல்லா இருக்கு”னு சொன்ன அப்பா மயிலை பார்த்து, “அப்பா, நீங்க அழகா இல்ல. அம்மா எவ்வளோ அழகா இருக்காங்க. அம்மா தோகை நீளமா விசிறி போல இருக்கு. எனக்கு வேர்த்தா விசிறி விடுவாங்க. நீங்க நல்லாவே இல்லப்பா.எனக்கு அம்மாவைத்தான் புடிக்கும்” னு சொல்லி ஓடியது குந்த்ரா.
அருகே வேய்ந்திருந்த மின் வேலியை நெருங்க அதில் அழகான கொடி படர்ந்து இருந்தது.
பல வண்ண நிறங்களில் பூக்கள் பூத்துக் கண்களைக் களவாடியது. குந்த்ரா மெல்ல வேலியை நெருங்கி விட்டது.
“அழகு பூ பாரு அழகு னா யாரு? வந்து என்னைப் பாரு”.
பாடிக்கிட்டே அலகை வேலியிடம் கொண்டு போக, பாய்ந்து வந்தது அப்பா மயில்.
இலேசாக மின்சாரம் அப்பா உடலில் உரசியது”.க்யாவ் ‘என கத்தியவாறு விழுந்தது அப்பா மயில்.
குந்த்ரா பயந்து ஓடி பார்த்தது. காயத்துடன் இருந்த அப்பா அழகாகத் தெரிந்தார்.
அழகு அன்பிலா? தோற்றத்திலா? குட்டீஸ். சொல்லுங்க பார்ப்போம்.




