புலம் பெயர்ந்த இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடு எது?
உலக அறிவியலில் தளத்தில் இன்றைய சாம்பியன் சீனா
தொடர் 25: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
கல்வி சிந்தனையாளர்- 9: காய் யுவான் பீ – இரா. கோமதி
காய் யுவான் பீ (1868 -1940)
சீனாவின் கல்வி வரலாற்றை பின்னோக்கி சென்று பார்த்தோமாயின் மிக நீண்ட நெடிய காலமாக ‘ஏகாதிபத்திய தேர்வு முறை’ என்ற சொல்லாடல் நீக்கமற நிறைந்திருந்ததை நாம் காணலாம். சீன அரசு பிரபுத்துவத்திலிருந்து ஒரு தகுதிவாய்ந்த அரசாங்கத்திற்கு மாறுவதற்கான கருவியாக இத்தேர்வு முறை இருந்து வந்தது. கல்வியும் அதிகாரத்தின் அடையாளமாக காணப்பட்டது. ஏகாதிபத்திய தேர்வு முறையில் அர்த்தமற்ற மதிப்பெண்களை குவித்து, அதிகாரத்தின் ஒரு அங்கமாக திகழ்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட கல்விமுறையின் அட்டூழியத்தில் சிதைந்துபோன எத்தனையோ பிஞ்சுக் குழந்தைகளிலிருந்து வந்த ஒருவன் தனது 30 ஆவது அகவையில் ‘என்ன கல்வி முறை இது? எதற்காக நாம் இதை கற்றோம்! பள்ளிக்கூடங்கள் நமக்கு எதை கற்பித்தன! மதிப்பெண்கள் பெறுவதில் என் குழந்தைப் பருவத்தையும், கடுமையான விதிகளுக்கு உட்பட்டு நான் கற்றுத்தேர்ந்த மொழிப் புலமையை அறிஞர்கள் முன் எடுத்துரைத்து எனது புலமையை நிரூபிப்பதில் என் இளமைப் பருவத்தையும் தொலைத்ததை தவிர வேறொன்றும் இந்த கல்விமுறை எனக்கு தந்து விடவில்லை’ என்று தனது நியாயமான கோபத்தை உந்துசக்தியாக கொண்டு சீனாவின் கல்வி சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் சென்ற கல்வியாளர் காய் யுவான் பீ.
காய் யுவான் பீ அவர்கள் 11 ஜனவரி 1868 அன்று ஜெஜியாங் மாகாணத்தின் ஷாக்ஸிங்கில் பிறந்தார். அவரது தந்தை ஓர் உள்ளூர் வங்கியின் மேலாளர். வசதியான குடும்பத்தை சேர்ந்தவரான காய் 1890 ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஏகாதிபத்திய தேர்வு முறையின் வரலாற்றில் வெற்றிகரமான இளைய வேட்பாளர்களில் ஒருவரானார். மேலும் தனது 22வது வயதில் முனைவர் பட்டமும் பெற்றார். அதன் பின்னர் ஹன்லின் அகாடமியில் உறுப்பினரானார். இது ஒரு அறிஞருக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த மரியாதையாகும். இந்த அகாடமியில் 1894-ம் ஆண்டு கம்பைலர் தரத்திற்கு உயர்த்தப்பட்டார்.
காய் அவர்கள் ஒரு சமூகமாற்ற புரட்சியாளராகவும் சீனாவின் இன்றுவரையில் மிக சிறந்த கல்வியாளராகவும் மதிக்கப்படுகிறார்.இவர் 1916- 1926 வரை பெய்ஜிங்கிலுள்ள முக்கிய ஆராய்ச்சி பல்கலைக்கழகமான பீக்கிங் பல்கலைகழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார் . இவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் இப்பல்கலைகழகம் சீனாவில் தேசியவாதம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் புதிய உணர்வை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தது.
காய் தனது கல்விச் சீர்திருத்த வேலைகளை பழமைவாத கல்வி முறையை சாடுவதிலிருந்து துவங்குகிறார். தன்னுடைய முதல் புத்தகமான பள்ளி கலைத்திட்டம் 1901 இல் வெளியிட்டார். இப்புத்தகத்தில் தனது இளமைப் பருவ அனுபவங்களையும் சமகால சிந்தனைகளையும் பகுப்பாய்வு செய்து பார்க்கிறார். இப்புத்தகத்தில் கல்வியின் அடிப்படைத் தத்துவத்தை மிகவும் வலுவாக தெளிவுபெற கூறியுள்ளார்.
சீனாவின் பாரம்பரிய கல்வி முறையில் உள்ள குறைபாடுகளின் காரணங்களை கண்டுபிடிப்பதில் முனைகிறார். தேர்வுமுறைகளை அடிப்படையாக கொண்ட பழைமையான கல்விமுறையின் வரம்புகளை பற்றி சாடுகிறார். அதன் விளைவாக பாரம்பரிய கல்வி முறையின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றார். இவ் விமர்சனங்களை சீன மொழியின் ஆறு சொற்சுட்டுக்குறிப்புகளாக விளக்குகிறார். அவை
· தாழ்வானது
· ஒழுங்கற்ற
· மேலீடான
· அச்சமூட்டும்
· சோர்வடைய செய்கின்ற
· மாயமான
என குறிப்பிடுகிறார். இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணங்களை கீழ்வருமாறு விளக்குகிறார்.
1. கல்வியின் நோக்கம் தாழ்வானதாக இருக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவதை மட்டுமே சொல்லிக்கொடுக்கின்ற சுயநலமிக்க கல்விமுறை இழிவானதாகும்.
2. குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யாத, பழமைவாதம் கொண்ட மற்றும் மாற்றத்தை போதிக்காத பழமையான பாடப்பொருளை கொண்ட கல்வியை ஒழுங்கற்றது என்கின்றார்.
3. மொழியின் உள்ளீடுகளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் அப்போதைய கற்றல் கற்பித்தல் முறையினை மேலோட்டமானது என்கிறார்.
4. மாணவர் ஆசிரியர் உறவு முறையை அச்சமூட்டும் என்று குறிப்பிடுகின்றார் ஏனெனில் ஆசிரியர் என்பவர் முழு அதிகாரம் பெற்றவராகவும் மாணவர்கள் ஆசிரியர்களை கேள்வி கேட்கும் உரிமை அற்றவர்களாக இருந்தனர்.
5. மனரீதியாக கற்றலுக்கு ஊக்கமளிக்காத மகிழ்ச்சியற்ற சிறைசாலைபோல் பள்ளிகள் இருந்தன. இதையே சோர்வடைய செய்கின்ற என்று குறிப்பிடுகிறார்.
6. பள்ளிக் கல்வி முறையின் நோக்கம் பயனற்றதாகவும், பொருத்தமற்றதாகவும் இருக்கும்போது சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் வெற்றி பெறுவது ஒரு மாய தோற்றம் ஆகும். இது ஏமாற்றத்தை தரகூடியது மற்றும் பயனற்ற முறையாக இருந்தது.
காய் அவர்களுடைய கல்வி பங்களிப்பு:
சீனாவில் புரட்சி ஏற்பட்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, சீன குடியரசு உதயமான அச்சமயத்தில் தான் சீன குடியரசின் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார் காய் அவர்கள். புதியதாக உருவாக்கப்பட்ட குடியரசின் கல்வி அமைச்சராக அந்நாட்டின் கல்வி முறை பற்றி காய் பெறும் பொறுப்பையும் அதேசமயம் கவலையையும் சுமந்து கொண்டிருந்தார். தான் படித்த கல்வி முறையில் உள்ள பெரும் குறைகளை தொடரக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதே சமயம் தான் படிக்கும் காலத்தில் இருந்தே மேற்கத்திய கல்விமுறையிலும், மேற்கத்திய நாடுகள் எவ்வாறு விரைவாக வளர்ச்சி காண்கின்றன என்பதின் மீதும் பெரும் வியப்பைக் கொண்டு இருந்தார். காய் அவர்கள் சீனாவில் வளர்ந்திருந்தாலும் அவ்வப்போது மேற்கத்திய நாடுகளுக்கு சென்று கல்வியும் கற்று இருந்தார். எனவே மேற்கத்திய கல்வி முறைக்கும் சீன கல்வி முறைக்கும் உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டு பார்த்து சீனாவில் கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை எவ்வாறு கலைவது என்பதற்கான திட்டங்கள் காயின் மனதில் இருந்தன. அத்திட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு மேற்கத்திய கல்வி முறையின் முக்கிய கூறுகளை உட்படுத்தி தங்கள் நாட்டுக்கு ஏதுவான ஒரு புதிய கல்வி முறையை அவர் முன்மொழிந்தார்.
அவை
1) இராணுவகல்வி (military/citizenship)
2) பயன்பாட்டுக் கல்வி (utilitarian)
3) அறநெறி கல்வி (moral)
4) உலகலாவிய கல்வி (a worldview)
5) அழகியல் கல்வி (aesthetic education)
போன்றவையாகும்.
புரட்சிகளும் போர்களும் புகை சூழ காணப்பட்ட சீனாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியமாக கருதப்பட்டது. சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு புரட்சியை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாட்டை சிதைத்து விடலாம் என்று பிற நாடுகள் கண் கொத்தி பாம்பாக உற்று நோக்கி கொண்டிருப்பதை உடந்த காய் அவர்கள் நாட்டின் மீது மக்களுக்கு பற்றை ஏற்படுத்த நல்ல குடிமக்களை உருவாக்கும் ராணுவ கல்வி தேவை என்று கருதினார். அக்கால கட்டத்தில் சீனா எதிர்கொண்டிருந்த அச்சுறுத்தல்களை கலைய நாட்டின் இளைஞர்களுக்கு தேசியத்தின் மீது பற்றை வளர்க்க வேண்டும், அதற்கு ராணுவ கல்வி உதவும் என்று அவர் நம்பினார். எனவே அதை செயல்படுத்தினார்.
மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை அந்நாட்டு மக்களின் நலனை புறம் தள்ளி, சுயநலமிக்க அரசியல் காரணங்களுக்காகவும், பொருளாதார வளர்ச்சியின் நகர்வுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டதை அவர் வெறுத்தார். கல்வி என்பது அடிப்படையில் இருந்து மக்களின் நலனை, மக்களின் வாழ்க்கை தரத்தை, மக்களின் நல் எண்ணங்களை போற்றி வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறான வளர்ச்சியே ஒரு நீடித்த நெடிய அறிவார்ந்த வளர்ச்சியாக இருக்கும் என காய் நம்பினார். மக்கள் நலனோடு கூடிய நாட்டின் வளர்ச்சியை தரக்கூடிய பயன்பாட்டு கல்வி முறையை அவர் முன்மொழிந்தார். ஜான் டூயி அவர்களின் நடைமுறை கோட்பாட்டில் இவர் உடன்பட்டு இருந்தார். எனவே நடைமுறை தேவைக்கு ஏற்றவாறு கல்வியை மாற்றி அமைக்க வேண்டும் என்று இவர் விரும்பினார்..
அறநெறிகள் சீனா கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகவே என்றும் பார்க்கப்பட்டது. ஆனால் அறநெறிகள் நம்மை அடிமைத்தனத்திற்கு அழைத்துச் செல்வதை அவர் விரும்பவில்லை பாரம்பரியம் என்ற பெயரில் இத்தனை ஆண்டுகளாக நிலவி வந்த மன்னர் ஆட்சி முறை சீனாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததை உணர்ந்திருந்த காய் அவர்கள் நாட்டு மக்களின் வாழ்வியலுக்கு ஏற்றவாறு அற நெறிகளை மாற்றி அமைக்க மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கல்விமுறையில் இணைக்க வலியுறுத்தினார். ‘மன்னர் எது சொன்னாலும் கேள்வி கேட்காமல் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது, மன்னர்களை கடவுளாக நினைப்பது, கன்பூசியஸை கடவுளாக வழிபடுவது போன்ற அறநெறிகள் குடியரசின் தன்மையை குறைப்பதாக அவர் சாடுகிறார். எனவே இம்மாதிரியான பிற்போக்குத்தனமான அறநெறிகளை பாடத்திட்டத்தில் இருந்து அறவே எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஆதாரமாகக் கொண்ட அறநெறிகளை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
21 ஆம் நூற்றாண்டில் உலகமயமாதல் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். உலகமே ஒரு சிறிய கிராமம் என்ற வாதங்களும் இன்று இருக்கின்றன. தொலைநோக்கு பார்வை கொண்ட காய் அவர்கள் அப்போதே உலகளாவிய கல்வி முறை வேண்டும் என்று எண்ணினார். மனிதவள அறிவியல் வளர்ச்சியும், ஜனநாயகத் தன்மையும், பொருளாதார வளர்ச்சியும் அன்றைய சீனாவின் தேவையாக இருந்ததை இவர் உணர்ந்திருந்தார். எனவே கல்வியில் உலக நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்தவை அனைத்தையும் சீனாவின் கல்வி முறையில் உட்படுத்த வேண்டும். ஒரு குறுகிய வட்டத்திற்குள் அல்லாமல் கல்வியின் ‘உலகளாவிய பார்வை’ சீனாவை உலகளாவிய வகையில் வளர்ச்சி பெற செய்யும் என்று எண்ணினார். பழைய காலங்களில் இருந்தது போன்ற தேர்வு முறை ஓட்டப் பந்தயங்கள் ஒரு அடிமைத்தனத்தையே உருவாக்கும், மாறாக அறிவியலும் தொழில்நுட்பமும் உலகளாவிய பார்வையும் சீன கல்வி நிறுவனங்களை மேற்கத்திய தொழில்துளை வளர்ச்சி அடைந்த நாடுகள் போல் மேம்படுத்தும். எனவே உலகளாவிய பார்வை கொண்ட கல்வியை அவர் முன்மொழிந்தார்.
மனிதனின் வாழ்வில் அழகிகள் சார்ந்த தேவைகள் நீக்கமற கலந்திருக்கும் என்று உணர்ந்திருந்த காய் அவர்கள் சீன கலாச்சாரத்தின் அழகியல் தன்மைகளான ஓவியம், இசை, நடனம் போன்றவற்றை புதிய கல்வி முறையில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். இது மாணவர்களை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், இலகுவாகவும் வைத்திருக்கும் என்று நம்பினார். அதுவரை அந்நாட்டில் பெருகிக் கிடந்த மதபோதனைகள் இளைஞர்களை குறுகிய பாதையில் கொண்டு சென்று மழுங்கடித்ததை எண்ணிப் பார்த்த காய் அவர்கள், அவ்வாறான மத போதனைகளுக்கு மாற்றாக இந்த கலை அழகியல் சார்ந்த கல்வி அமையும் என்று நம்பினார். இந்த அழகியல் சார்ந்த கல்வி மாணவர்களை சுயநலத்தில் இருந்து அப்பால் கொண்டு சென்று பொதுநலம் மனிதத் தன்மை போன்றவற்றை உணரவும் அவற்றை வளர்க்கவும் பயன்படும் என்று நம்பினார்.
கல்வி சீர்திருத்தங்கள்:
சீன குடியரசின் புதிய கல்வி அவதாரத்தை தீர்மானித்தவர் காய். சீன குடியரசின் வளர்ச்சியின் அஸ்திவாரத்தை அறிவியல் சிந்தனையில் இருந்து கட்டமைக்க எண்ணினார். எனவே தான் தன் பொறுப்பில் இருந்த கல்வியை அறிவியல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தில் நிறுவினார். நாட்டை நவீனப்படுத்த கல்வியை நவீனமாக்குவதே முதற்படி என்று எண்ணிய காய் கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்.
கல்வியை நவீனப்படுத்துவதை பாரம்பரிய கல்வி முறையின் மீது கடும் தாக்குதலில் இருந்து துவங்கினார். புதிய நாட்டிற்கான சுயமரியாதையை கட்டமைக்க வேண்டுமாயின் கல்வியில் நவீனத்தை நோக்கி தனக்கென ஒரு பாதை அமைக்க வேண்டும் என்றார். எந்த ஒரு நாடாக இருப்பினும் அதற்கென்று பழம் பெருமைகளும் பாரம்பரியங்களும் இருப்பது இயல்பே. ஆனால் மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு பழமைவாதத்தில் பொருத்தம் உடையது பொருத்தம் அற்றது என்று பிரித்துப் பார்க்கும் நாடே முன்னேறும். மாறிவரும் சூழலுக்கு தகுந்தாற்போல் தனது கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மாற்றங்களை கொண்டு வர தயாராக இருக்கும் நாடே ஒளிரும். ஆனால் அப்போது இருந்த சீன கல்வியாளர்களோ தங்கள் பண்டை நாகரிகத்தின் அம்சங்களை மாற்ற தங்களை தயார் படுத்தாமலேயே இருந்தனர். நம் பழம் பெருமைகளை பேசிக்கொண்டே இருப்பதினால் தொடர் தோல்விகளும் அவமதிப்புகளும் நிகழும்.
காய் அவர்கள் மேற்கத்திய அறிவியல் மீது தீராத தாகம் கொண்டிருந்தார் அந்நாடுகளைப் போல் நம் நாடும் சிறப்புற்று மக்கள் மகிழ்வாக வாழ்ந்திட மாட்டார்களா என்ற ஏக்கம் அவர் மனதில் சுடர் விட்டு எரிந்து கொண்டே இருந்தது. அதற்காக நம் பாரம்பரியத்தை முற்றிலும் மறந்துவிட்டு கண்மூடித்தனமாக மற்றவர்களின் கோட்பாடுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதை காட்டிலும், நமக்குத் தேவையானதை நாமே ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். எனவே சீனாவின் அப்போதைய சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தில் உள்ள சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, நம் நாட்டின் சிறப்பு நிலைக்கு தகுந்த புதிய கோட்பாடுகளை செயல்படுத்தி பார்த்து உண்மையான சீர்திருத்தத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
அவ்வாறு உருவாக்கும் போது முதல் படி நிலையாக மேற்கத்திய நாடுகளின் அறிவியல் ஆர்வத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று என்றார். அறிவியல் ஆர்வத்தை கல்வியின் மூலமாக விதைப்பதே அந்நாடுகளின் வெற்றியின் ரகசியமாக இருக்கிறது என்கிறார். அறிவியல் ஆர்வத்தை உண்டு பண்ணி, அறிவியல் மனப்பான்மையை அதிகரித்து, அதன் மூலமாக மனிதனின் சிந்தனையை விரிவடைய செய்ய வேண்டும். சீனாவின் பழைய கலாச்சாரங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிடாமல் தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்து, அத்தோடு மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை சீனாவிற்கு தகுந்தார் போல் வடிவமைத்து இவை அனைத்தையும் ஒன்றாக கலந்த ஒரு கல்வி முறையை பரிந்துரை செய்து கல்வியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்.
கல்வியில் சுதந்திரம்:
கல்வி என்பது மனித அறிவையும், தனிமனித பண்பையும் வளர்க்க வேண்டுமே தவிர, யாருடைய சுயநலத்திற்காகவும் மனங்களை தயார்படுத்தும் ஒரு கருவியாகிவிட கூடாது. இதன் அடிப்படையில் நல்ல கல்வி நிறுவனங்கள் முற்றிலும் எந்த ஒரு தலையீடும், ஆதிக்கம் இல்லாத சுதந்திர நிறுவனமாக (Independent Schooling) கல்வியாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார்.
அப்போது சீனாவில் கல்வியில் அரசியல் மற்றும் மதங்களின் ஆதிக்கமும் குறுக்கீடும் இருந்து வந்தது. இதை எதிர்த்தார். கல்வி என்பது எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் கல்வியாளர்களிடையே தரப்பட வேண்டுமென கல்வியை காப்பாற்ற ஒரு புதிய நிர்வாக திட்டத்தை பரிந்துரைக்கிறார். அதுவே மாகாண பல்கலைக்கழக திட்டம்.(University Council)
ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க பரிந்துரைத்தார். பல்கலைக்கழகங்கள் அந்த மாகாணத்தின் பள்ளி கட்டமைப்பை பார்த்துக்கொள்ளவேண்டும். பல்கலைக்கழக பேராசிரியர்களைக் கொண்டு ஒரு சிறப்பு கல்வி குழு அந்த மாகாணத்தில் உருவாக்கப்படும் இக் குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பல்கலைக்கழக அதிபரை தேர்ந்தெடுப்பர். கல்வியாளர்கள் அனைவரும் சேர்ந்து விவாதித்து கல்விக் கொள்கையை தீர்மானிப்பார்கள். அந்தந்த மாகாணத்தில் பெறப்படும் வரியிலிருந்து கல்விக்கான நிதி வழங்கப்படும். நிதி பற்றாக்குறை இருப்பின் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கு தேவை அரசியல் மற்றும் மத நம்பிக்கைகளின் தலையீடுகள் அற்ற ஒரு சுதந்திரமான கல்விமுறை என்பதை அவரால் முழுமையாக செயல்வடிவம் தரமுடியாமல் போயிற்று. 1922 சீனாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக இது சாத்தியமற்றுப் போயிற்று.
கல்வி என்பது அரசியல் பிடியிலும் மதத்தின் பிடியிலும் இருக்கக் கூடாது என்பதே காயின் சிந்தனை. ஆனால் 1927 ஆம் ஆண்டு சீனாவில் நிறுவப்பட்ட குமிட்டான் தேசியவாத அரசுக்கு காயின் இந்த கல்விமுறை ஏற்புடையதாக இல்லை. பள்ளிகள் சுதந்திரமாக செயல்படுவதை எந்த ஆட்சியாளர்களும் விரும்பவில்லை என்ற கசப்பான உண்மையை காய் புரிந்து கொண்டார். ஆனாலும் தனது கொள்கையில் விடாப்பிடியாக வேலை செய்து கொண்டே இருந்தார்.
கல்வி நிர்வாகம் செயல்படும் விதத்தை மக்கள் முடிவு செய்யட்டும் என்ற வாதத்தை முன் வைத்தார். ஜனநாயகமான நிர்வாக முறையில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறார்:
1) பெருவாரியான மக்கள் பரிந்துரை செய்கின்ற திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2) காலத்திற்கு தகுந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு சிறந்த நிர்வாகியாகவும் கல்வியாளராகவும் திகழ்ந்த காய் அவர்கள் கல்வியின் அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது ஆபத்தானது என்றார். எப்போதும் தனது பொறுப்புகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ளவே விரும்பினார். கல்வி என்பது நேரடியாக அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களிடமும், கல்வியோடு தொடர்புடையவர்களிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறுவார். பீஜிங் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பேற்று இருந்த காய் உயர்கல்வியில் பெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு நிர்வாகமும் ஜனநாயக முறையில் நிகழும் போதே நிகழ வேண்டும் என்று எண்ணிய காய் அவர்கள் கல்வி உதவி திட்டங்களை உருவாக்கி, சிறந்த ஆராய்ச்சிகளையும் ஊக்குவித்து கல்விப் புரட்சியை ஏற்படுத்திக் காண்பித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சென் டியுக்சியோ (Chen Duxiu), ஜான்டூயின் சிந்தனைகளை சீனாவிற்கு அறிமுகம் செய்து கல்வி புரட்சிகளை மேற்கொண்ட ஹூ ஷிஹு(Hu Shih) போன்ற இன்னும் பல தலைவர்களை பீஜிங் பல்கலைக்கழகம் தந்த பெருமை காயின் நிர்வாக முறையை பறைசாற்றும்.
சீனாவின் நவீன கல்வி முறையில் மிகப்பெரும் மாற்றங்களை கொண்டு வந்த முதல் மற்றும் மிகப்பெரிய கல்வியாளர் காய். பழமைவாத கல்வி முறையை சாடுவதில் இருந்து, ஐந்து வகையான கல்வி கோட்பாடுகளை பரிந்துரைத்து, அவற்றுக்கு ஜனநாயக முறையில் செயல்வடிவமும் கொடுத்து, கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற முழக்கத்தையும் நிறுவிய காய் சீன கல்வி வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் ஆதிக்கமும் பெற்ற கல்வியாளராக போற்றப்படுகிறார்.
இரா. கோமதி
“கடன் பொறி இராஜதந்திரம் ” – அ.பாக்கியம்
சீனாவின் கடன் பொறியால் இலங்கை திவால்! பாகிஸ்தானில் நெருக்கடி! சொத்துக்களை கைப்பற்ற திட்டம்! என்று சீன எதிர்ப்பு சாக்கடைகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் ஊடகங்களை அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி இன்று அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளை கோபம் அடைய செய்துள்ளது. முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான கொள்கைகளை உடைய ஒரு நாட்டின் வளர்ச்சி அவர்களின் அடித்தளத்தையே ஆட்டிப்படைப்பதாக அச்சப்படுகின்றன. எனவே சீனாவிற்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளனர் அதில் ஒன்றுதான் இந்த கடன் பொறி ராஜதந்திரம்.
இந்த வார்த்தைகளை 2018 ஆம் ஆண்டு உருவாக்கி வலைதளங்களில் பரப்பி சுமார் சில மில்லியன்கள் தேட ஆரம்பித்தனர். டொனால்ட் ட்ரம்ப், பைடன், உலக வங்கி மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் சீனாவுக்கு எதிரான இந்த வார்த்தைகளை ஊதி பெரிதாக்கினார்கள். சீனா தற்போது அமலாக்கி வருகின்ற பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் 149 நாடுகள், 32 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் 200க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இவையெல்லாம் இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நெருக்கடிகளைக் கொடுக்கிறது. எனவே தான் சீனாவுக்கு எதிரான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டனர்.
முதல்கட்டுக்கதை:
சீனா பெல்ட் அண்ட் ரோடு தங்களை ஒருதலை பட்சமாக அறிவித்து பிற நாடுகளை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது! உண்மையில் சீனாவின் மேம்பாட்டு நிதியகத்தின் மூலமாக இரு தரப்பு தொடர்புகள், ஒப்பந்தங்கள் மூலமாக திட்டம் வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக கடன் பெறும் நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அந்த நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களின் அடிப்படையில் கடன் பெறுபவர்கள் இதை தீர்மானிக்கிறார்கள்.
இரண்டாவது கட்டுக்கதை:
சீனா கடன் வாங்கும் நாடுகளை சிக்க வைப்பதற்காக கடுமையான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்படுத்துகிறது! உண்மையில் சீனா உலக வங்கி மற்றும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் கொடுப்பதை விட மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை கொடுக்கிறது. வட்டியை தவிர வேறு எந்த நிபந்தனைகளும் சீனா விதிப்பது இல்லை.
கடன் வாங்கும் நாடுகள் கடனை மறுசீரமைப்பதற்கும் விதிமுறைகளை கொடுக்கிறது தவிர்க்க முடியாத நேரங்களில் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடிய சலுகைகளும் இந்த கடன் வழங்கும் திட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது
ஆகஸ்ட் 2022 17 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 23 வகையிலான வட்டி இல்லா கடன்களை தள்ளுபடி செய்தது. 2000-2019 இடையில் ஆன காலத்தில் சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களை மறுசீரமைத்துக் கொடுத்தது.
இந்தக் காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொடுத்த 3.4 பில்லியன்கள் மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்தது.
உலக வங்கி மற்றும் ஐ எம் எப் போன்ற நிறுவனங்கள் கடன் கொடுத்து நாட்டை அடிமையாக நிபந்தனை போடுகிறது சீனா வட்டிக்கு மட்டும் கடன் கொடுக்கிறது.
மிகவும் பின்தங்கிய அடிமட்டத்தில் இருக்கும் கூடிய நா, அதற்கு மேல் இருக்கக்கூடிய நடுத்தர நாடுகளுக்கும், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் கடன் கொடுக்க மறுக்கும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சீனா, அந்த நாட்டின் வளர்ச்சிக்காக கூடுதலாகவே கடனை வழங்கி வருகிறது.
சுமார் 150 நாடுகளுக்கு 1.5 ட்ரீல்லியன் டாலர்களை நேரடி கடனாகவும் வர்த்தக கடனாகவும் சீனா வழங்கி வருகிறது.
மூன்றாவது கட்டுக்கதை:
சீனா கடனை திருப்பி கொடுக்காத நாடுகளின் சொத்துக்களை கைப்பற்றிக் கொள்வது என்ற கதைகளை கட்டிவிடுகின்றனர். சீனா இதுவரை கடன் திருப்பி செலுத்தாத எந்த ஒரு நாட்டின் சொத்துக்களையும் கைப்பற்றவில்லை. ராணுவ தளங்களையும் அமைக்கவில்லை. மாறாக அமெரிக்கா 159 நாடுகளில் 845 ராணுவ தளங்களை வைத்துள்ளது. இதில் 1,73,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகம்:
இந்த கடன் பொறி ராஜதந்திரத்திற்கு இலங்கையின் அம்பாந் தோட்டைத் துறைமுகத்தை உதாரணமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். பெல்ட் அண்ட் ரோடு பகுதியாக தெற்கு கடற்கரை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கடன் கொடுத்து அதற்கு ஈடாக சீன கடற்படை ராணுவ தளத்தை அமைத்துக் கொண்டது என்று கதை கட்டுகிறார்கள்.
அம்பாந்தோட்ட துறைமுகத்தை கட்ட வேண்டும் என்று சீனாவால் அல்ல இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டது. பெல்ட் அண்ட் ரோடு திட்டம் உருவாவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு திட்டத்தை உருவாக்கியது.
இலங்கை அரசாங்கம் இத்திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் நிதி உதவியை கேட்டிருந்தது. இவர்கள் நிதி உதவி இல்லை என்று மறுத்து விட்டார்கள். இலங்கை அரசு சீனாவை அணுகியது. சீனாவின் “சைனா துறைமுக குழுமம்” ஒப்பந்தத்தை பெற்றது சீன வங்கி நிதியளிக்க ஒப்புக்கொண்டது. இவை அனைத்தும் 2007 ஆம் ஆண்டு அதாவது பெல்ட் அண்ட் ரோடு திட்டம் சீனாவால் துவங்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிந்து விட்டது. இதை சீனா பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்காக ஆலோசனை உருவாக்கி கடன் கொடுத்து பிடித்துக் கொண்டது என்று நடக்காத ஒரு விஷயத்தை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறது ஏகாதிபத்தியம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் சுமைக்கு சீனா தான் காரணம் என்று கதை கட்டுகிறார்கள். 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டு கடன் 50 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் சீனாவின் பங்கு மிகக்குறைவான 9%மட்டுமே. இலங்கையின் கடன்கள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்டது. சீனாவை விட உலக வங்கியும் ஜப்பானும் இலங்கைக்கு கூடுதலாக கடனை கொடுத்துள்ளார்கள்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், வெளிநாட்டு கடன் நெருக்கடி அதிகமானதால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியுடன் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்தது ஆனால் சர்வதேச நாணய நிதியகம் உதவி செய்யவில்லை.
வேறு வழியின்றி கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் குத்தகைக்கு விட முடிவு செய்தது. முதலில் இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவனங்களை இலங்கை அரசு அணுகியது. ஆனால் அவர்கள் குத்தகைக்கு எடுக்க தயாராக இல்லை மறுத்துவிட்டார்கள். இதன் பிறகு சீன அரசு நிறுவனமான China Merchants Ports Holdings பேச்சுவார்த்தை நடத்தி 1.12 பில்லியன் டாலருக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுள்ளது. இதனால் இலங்கை அரசு தனது கடன், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நோக்கத்திற்காகச் சீனா கைப்பற்றியது பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரச்சாரம் செய்கிறது. இது கட்டுக்கதை என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவாகு தெளிவுபடுத்தி உள்ளார். சீனா ஒரு பொழுதும் துறைமுகத்தை கடற்படை தளமாக பயன்படுத்தவில்லை என்று பயன்படுத்துவதற்கு அனுமதியும் இல்லை என்று இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் மக்கள் கொந்தளிப்புக்கும் உலக வங்கி சர்வதேச நாணய அமைப்பு காரணம் என்பதை மறைப்பதற்காக அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் சீனாவின்மீது பழிசுமத்தி திசைதிருப்புகிறார்கள்.
81% கடன் தொகை ஐ.எம்.எப் மற்றும் ஜப்பான் நாட்டினுடையது. குறுகிய காலத்தில் மட்டும் IMF இலங்கைக்கு 16 முறை கடன்வழங்கி உள்ளது. மேற்கத்திய நாடுகளின் நவீன தாராள மையக் கொள்கைகளை அமுல்படுத்த கட்டாயப்படுத்தியதும் சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியதில் தான் இலங்கை நெருக்கடிக்கு உள்ளானது.
உகாண்டாவில் உள்ள Entebbe சர்வதேச விமான நிலையம்:
கடன் பொறி ராஜதந்திரத்திற்கு உகண்டா நாட்டு விமான நிலைய கட்டுமானத்தைப் பற்றிய கட்டுக் கதைகளை உருவாக்குகிறார்கள்.
உகாண்டா நாட்டில் அமைந்துள்ள எண்டெபா விமான நிலையத்தை விரிவு படுத்துவதற்கான ஒப்பந்தம் சீனாவுடன் ஏற்பட்டது சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இந்த திட்டத்திற்காக நிதி வழங்கியது. 207 மில்லியன் டாலர் கடனை 2% வட்டிக்கு மட்டுமே கடன் கொடுத்தது. இத்திட்டம் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் வருவதாகும்.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜார்னல், இந்தியாவின் எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை, உகண்டாவின் சில பத்திரிகைகள் சீனா விமான நிலையத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது என்று எழுதி வருகிறார்கள். அது மட்டுமல்ல ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்றும் எழுதுகிறார்கள். உகாண்டா கையெழுத்து போடவே இல்லை என்று பொய் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.
ஒப்பந்தத்தின் நகலை பெற்று பகுப்பாய்வு செய்து கடன் அளிப்பவர் விமான நிலையத்தை கைப்பற்றுவதற்கான எந்த சரத்தும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டனர். சர்வதேச திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கான நிலையான விதி ஒன்று உள்ளது. அதாவது திட்டத்திற்கான அல்லது பண பிணையத்திற்காக எக்ஸ்ரே கணக்கு பராமரிக்கப்பட வேண்டும் என்று சரத்து உள்ளது. அமெரிக்க சார்பான பத்திரிகைகளின் பிரச்சாரத்தை உகாண்டா நாட்டின் சிவில் விமான போக்குவரத்து துறையே மறுத்துவிட்டது இருந்தாலும் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையான கடன் பொறி:
சீன “கடன் பொறி இராஜதந்திரம்” என்று பிரச்சாரம் செய்வது அமெரிக்காவும் சர்வதேச நாணய நிதியம், தங்களது மோசடிகளைத் திசைதிருப்புவதற்காக செய்யக்கூடியதாகும்.
அபரிமிதமான அதிக வட்டி விகிதங்களுடன் கொள்ளையடிக்கும் கடன்களை உலகளாவிய நாடுகள் மீது திணிக்கும் அமெரிக்காவின் கடன் பொறி ராஜதந்திரம்தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
சீனக் கடன்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன.அவை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. அவை தனியார்மயமாக்கல் திட்டங்கள், மற்றும் IMF மற்றும் உலக வங்கி கடன்களைப் போல கட்டமைப்பு சரிசெய்தல், சிக்கன நடவடிக்கை போன்றவற்றுடன் இணைக்கப் படவில்லை.
உண்மையில்,IMF, உலக வங்கி கடன்கள் பொதுத்துறைகளை தனியார்மயமாக்குதல், சமூக நலத்திட்டங்களைக் குறைத்தல், மேற்கத்திய முதலாளித்துவ நலன்களை வளப்படுத்த வர்த்தக தாராளமயமாக்கல், ஆகியவற்றின் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
கொள்ளையடிக்கும் வட்டி விகிதங்கள், இந்தக் கடன்களை ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது என்பதை உறுதிசெய்கிறது. கடன் வாங்கும் நாடுகளை ஏழைகளாக வைத்து, வளர்ச்சியடையாத நிலையில் அவர்களை அடைத்து, மேற்கத்திய முதலாளிகள் மேலும் கொள்ளையடிப்பதையும், வளங்களைப் பிரித்தெடுப்பதையும், இவர்களின் கடன் உறுதிசெய்கிறது. இதுதான் உண்மையான கடன் பொறி.
அ.பாக்கியம்
சீனாவின் கோவிட் நிலவரம் – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
விளக்கம்
சீனாவில் தற்போது கோவிட் தொற்று முன்னெப்போதும் இல்லாத அதிகரித்திருப்பதாகவும் மேலதிகமான மரணங்கள் நடந்து வருவதாகவும் மருத்துவமனைகளில் மூச்சுத்திணறலுடன் செயற்கை சுவாசக் கருவிகளில் நோயர்கள் படுத்திருப்பதையும் மரணித்தவர்கள் சவக்கிடங்குகளில் கிடத்தி வைத்திருப்பதையும் காணொளிகளாகப் பகிரப்படுகின்றன.
இந்தக் காணொளிகள் எந்த கால இடைவெளியில் எடுக்கப்பட்டவை, எந்த நகரில் எடுக்கப்பட்டவை என்பது குறித்த அதிகாரப்பூர்வ கருத்துகள் இல்லை. இந்தக் காணொளிகளை சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை ஆயினும் தற்போதைய சீனத்தின் கோவிட் நிலையை வெளிக்கொணரும் வகையில் இந்த காணொளிகளை ட்விட்டரில் அமெரிக்காவைச் சேர்ந்த கொள்ளைநோயியல் மருத்துவர் வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளிகள் நம்மிடையே மீண்டும் PTSD எனும் POST TRAUMATIC STRESS DISORDER விபத்துக்கு பின்னால் மீண்டும் அந்த விபத்தை நியாபகப்படுத்தும் விசயங்கள் தோன்றினால் மீண்டும் அதே வலி, பதட்டம், உறக்கமின்மை போன்றவை ஏற்படும்.
இதனால் பலரும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டமையால் விளக்கம் அளிப்பது கடமையாகிறது.
சீன நாடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கோவிட் பெருந்தொற்றைப் பொருத்தவரை
“பூஜ்ய கோவிட் கொள்கை” ZERO COVID POLICY
கோவிட் தொற்று எங்கு காணப்பட்டாலும் அங்கிருந்து வேறெங்கும் பரவாத வண்ணம்
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் கொரோனா பரிசோதனைகள் எடுப்பது
மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து அலுவல்களுக்கு அனுமதிப்பது
அறிகுறிகளற்ற தொற்றாக இருந்தாலும் சரி கண்டிப்பான முறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
அந்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் என்று அனைவரும் கட்டாயத் தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள்
ஒரு நகரில்
ஊரில் தொற்றுப் பரவல் நடக்கிறது என்றால் தொடர்ந்து லாக்டவுன் போடப்படும்.
இப்படியாக மூன்று வருடங்களாக
ஜீரோ கோவிட் பாலிசியை கடைபிடித்து வந்தது சீனா.
இதனால் மக்கள் விரக்தி அடைந்து பேதலித்து அடக்குமுறைக்கு எதிராக ஆங்காங்கே கண்டனக்குரல் எழுப்பியதாகத் தெரிகிறது
கூடவே அந்நாட்டின் உற்பத்தி பொருளாதாரமும் சுணக்கம் காணத் தொடங்க இனியும் மக்களை முடக்கி வைப்பது சரியன்று என்ற முடிவை சீனா எடுத்தது.
பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைப் போல அனைத்தையும் திறந்து விட்டது.
பரிசோதனைகள் இனி அவசியமில்லை என்றும் கூறிவிட்டது.
சில நகரங்களில் சாதாரண அறிகுறிகள் இருந்தாலும் வேலைகளுக்கு வரலாம் என்று கூட அறிவிப்புகள் வந்தன.
இதன் விளைவாக கொரோனா வைரஸின் ஓமைக்ரான் உருமாற்றம் அங்கே வேகமெடுத்துப் பரவி வருகிறது.
பெருந்தொற்று தொடங்கியது முதல் இப்போது வரை
வைரஸின் எந்த அலையையும் சந்திக்காத சீனாவில் முதல் கொரோனா அலை தற்போது அடித்து வருகிறது.
ஓமைக்ரான் உருமாற்றம் என்பது
முந்தைய உருமாற்றங்களை விட வேகமெடுத்துப் பரவக் கூடியது
ஆயினும் முந்தியவைகளை விட வீரியம் குறைவானது என்று அறியப்பட்டுள்ளது.
இந்த வேரியண்ட் மூலம் இந்தியாவில் மூன்றாவது அலையில் ( டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை) தொற்றடைந்தவர்களில் முதியோர்கள், பல்வேறு இணை நோய்களுடன் இருந்தவர்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகினர்.
சீனாவிலும் அதே நிலை இப்போது இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
எனினும் இந்தியா சந்தித்த ஓமைக்ரான் அலைக்கும்
சீனா சந்திக்கும் ஓமைக்ரான் அலைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் யாதெனில்
இந்தியா ஓமைக்ரான் அலையை சந்திக்கும் முன்பு
ஆல்பா வேரியண்ட் மூலம் முதல் அலையை 2020இன் மத்தியிலும்
டெல்ட்டா வேரியண்ட் மூலம் இரண்டாம் அலையை 2021இன் மத்தியிலும் சந்தித்து இருந்தது
கூடவே இரண்டாம் அலைக்குப் பிறகு 90% க்கு மேல் மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தனர்.
தடுப்பூசி பெற்றவர்களில் 90% பேர் கோவிஷீல்டும் 10% பேர் கோவேக்சின் பெற்றனர்.
2022 ஜனவரி மாதம் முதல் மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சீனாவில் நிலை – இதுவரை அங்கு தொற்றுப் பரவல் அலையாக ஏற்படவே இல்லை.
மேலும் சைனோவேக் / சைனோபார்ம் ஆகிய செயலிழக்கச்செய்யப்பட்ட வைரஸ் தொழில்நுட்ப தடுப்பூசிகள் 2021 ஆம் வருடம் போடப்பட்டது. அதன் மூலம் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களுக்கு பின் குன்றக்கூடிய நிலையை ஆய்வுகள் சான்று பகர்கின்றன.
இந்நிலையில் 90% சீன மக்களுக்கு நேரடி தொற்றின் மூலம் கிடைத்த எதிர்ப்பு சக்தியும் இல்லை
தடுப்பூசிகள் மூலம் கிடைத்த எதிர்ப்பு சக்தியும் குன்றியுள்ளது
இதுவே இந்தியாவின் நிலை யாதெனில்
முதல் அலை முடிவில் 20% பேருக்கு தொற்று மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தது
இரண்டாம் அலை முடிவில் 60%க்கு மேல் தொற்றின் மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தது
மூன்றாம் அலை முடிவில் 80-90% பேருக்கு தொற்று+ தடுப்பூசி மூலம் கூட்டு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.
எனினும் புதிதாக வேரியண்ட்கள் உருவாகும் போது அவை நம்மிடையே தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு நம்மிடையே இருக்க வேண்டும்.
இப்போது சீனா சந்தித்து வரும் பிரச்சனைகளை நாம் 2020 ,2021 ஆண்டுகளில் சந்தித்து மீண்டு வந்திருக்கிறோம்.
மேலும் ஓமைக்ரான் வேரியண்ட் நமது மக்களில் பெரும்பான்மையினருக்குத் தொற்றை கடந்த ஓராண்டில் ஏற்படுத்தி அதன் மூலம் நேரடி எதிர்ப்பு சக்தியை சம்பாதித்து வைத்துள்ளோம்.
எனவே ஓமைக்ரான் மூலம் புதிய தொல்லை நமக்கு நேருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே கணிக்கிறேன்.
ஆயினும் சீனாவில் ஓமைக்ரான் கட்டுக்கடங்காமல் பரவும் போது வைரஸில் பாதகமான இடங்களில் உருமாற்றம் நிகழ்ந்தால் ( நிகழ்வதற்கு வாய்ப்பு குறைவு) புதிய பிரச்சனைக்குரிய வேரியண்ட் தோன்றலாம்.
சீனாவின் தற்போதைய அலை என்பது நமக்கு முன்பு நடந்தது இப்போது அவர்களுக்கு காலம்தள்ளி நடக்கிறது என்றே கொள்ள வேண்டும்
இதற்கான காரணம் அவர்கள் கடைபிடித்த ஜீரோ கோவிட் பாலிசி என்றும் கொள்ளலாம்
அந்த கொள்கையால் அவர்கள் அடைந்த சாதகங்கள்
1. வீரியமிக்க கொரோனாவின் வேரியண்ட்களான ஆல்பா/ பீட்டா/ டெல்ட்டா ஆகியவற்றால் அலையை சந்திக்காமல் பலம் குன்றிய ஓமைக்ரான் மூலம் அலையைச் சந்திக்கின்றனர். இதன் மூலம் ஏனைய நாடுகளை விட குறைவான உயிரிழப்புகளை சந்திக்கும் வாய்ப்பு.
2. தடுப்பூசிகள் மூலம் அவர்களது நாட்டினருக்கு எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திய பின்பு அலையைச் சந்திக்கின்றனர்
3. கடந்த மூன்று ஆண்டுகளில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தேவையான ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்திடக் கிடைத்த அவகாசம்
இந்தக் கொள்கையால் அவர்கள் அடைந்த பாதகங்கள்
1. மூன்று ஆண்டுகளாக மக்களை லாக் டவுன் / பரிசோதனைகள் என்று சுதந்திரத்தை வதைத்தது. இதனால் மக்கள் விரக்தி நிலையை அடைந்திருக்கக்கூடும்
2. உற்பத்தி பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொய்வு மந்தநிலை
3. சில முன்னணி நிறுவனங்கள் இந்த கொள்கையால் சீனாவை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பது
4. மூன்று ஆண்டுகள் ஆகியும் தாங்கள் நினைத்தவாறு கொரோனாவினால் பாதிப்பே இல்லாத நிலையை உருவாக்க இயலாமை
இவ்வாறாக தற்போது சீனாவிலும் அதை சுற்றியுள்ள நாடுகளிலும் ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலை
மூலம் நாம் செய்ய வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள்
– மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணியலாம்
– கூட்டமான இடங்களிலேனும் முகக்கவசம் அணியலாம்
– குறிப்பாக முதியோர் மற்றும் எதிர்ப்பு சக்தி குன்றியோர் முகக்கவசம் அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம்
– கைகளை சோப் போட்டுக் கழுவும் பழக்கம் எப்போதும் நல்ல பழக்கமே.
– காய்ச்சலுடன் சளி/இருமல் இருப்பவர்கள் அறிகுறிகள் நீங்குமட்டும் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
– இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வது குறித்து சிந்தித்து முடிவு செய்யலாம்.
– ப்ளூ தொற்றுக்கு எதிராக வருடாந்திர தடுப்பூசி முறை இருப்பது போல கொரோனா வைரஸுக்கு வேரியண்ட்டுக்கு ஏற்றாற் போல அப்டேட்டட் தடுப்பூசி வருடந்தோறும் கிடைத்தால் முதியோர் மற்றும் எதிர்ப்பு சக்தி குன்றியோர் / சுகாதாரப்பணியாளர்கள் பயன்பெறுவர்.
முடிவுரை
சீனாவில் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலை என்று வரும் காணொளிகளைப் பார்த்து நாம் தற்போது அச்சம் கொள்ளத் தேவையில்லை
நாம் 2020இலும் 2021இலும் சந்தித்தவைகளைத் தான் சீனா அதன் கொள்கையால் காலந்தாழ்த்தி சந்திக்கிறது
நமக்குத் தேவை எச்சரிக்கை உணர்வேயன்றி
அச்சமன்று
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
“யாரையும் விட்டு விடாதீர்கள்.” கட்டுரை – அ.பாக்கியம்
இந்த வருடம் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் சபை உலக நாடுகளுக்கு அறிவித்த கருப்பொருள்தான் “யாரையும் விட்டு விடாதீர்கள்”.
பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கும் முயற்சியில் உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய், சர்வதேச உறவுகளில் ஏற்பட்டிருக்கிற மோதல்கள், தீவிர வானிலை மாற்றம், போன்ற காரணிகள் உலகின் உணவு பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.
ஐநா சபை அறிக்கையின்படி உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2021-ல் 828 மில்லியனாக உயர்ந்து உள்ளது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 10% ஆகும்.
உலகப் பொருளாதாரம் மேம்பட்டிருந்தாலும் 2030-ம் வருடம் மேலும் 670 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட காரணத்தினால் ஐக்கிய நாடுகள் சபை இந்த வருடத்தின் கருப்பொருளாக “யாரையும் விட்டு விடாதீர்கள்” என்பதை தேர்வு செய்துள்ளது.
உலகின் உழைப்பாளி மக்களை சூறையாடி பெறும் நிறுவனங்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் மோடி, பைடன், சுனாக் போன்றவர்கள் இதைப் பற்றி கவலைப்பட போவதில்லை.
மக்கள் சீனம் உணவு பாதுகாப்பை முக்கிய கொள்கையாக ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை ஆதரித்து எதிர்வினை ஆற்றியுள்ளது.
உணவு பாதுகாப்பு என்பது எல்லா மக்களுக்கும் எல்லா நேரங்களிலும் போதுமான பாதுகாப்பான சத்தான உணவுகள் கிடைப்பதற்கான சமூக மற்றும் பொருளாதார உத்தரவாதத்தை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். அது மக்களின் உணவு விருப்பங்களையும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் சீனம் உணவு பாதுகாப்பு பற்றி தெரிவித்துள்ளது.
சீனாவின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்கு 25 சதவீதம் தானியங்களை சார்ந்தே இருக்கிறது. உணவு பாதுகாப்பில் தானியங்கள் முக்கிய பங்கு வைக்கிறது.
சீனாவின் தானிய உற்பத்தி 2015 ஆம் ஆண்டு 650 மில்லியன் டன் களிலிருந்து 682. 85 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
சீனாவில் 140 கோடி மக்களும் ஒரு வருடம் முழுவதும் உண்ணக்கூடிய அளவிற்கு அரிசி மற்றும் கோதுமைகளை இருப்பு வைத்துள்ளது.
சீனா உலகின் மிகப்பெரிய தானிய உற்பத்தியாளர். மூன்றாவது மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர். சோயா சோளம் மற்றும் பயிர் விதைகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு.
சீனா மக்களின் உணவு பாதுகாப்பை பற்றிய அதிக கவலை கொண்டுள்ளது எனவே உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பயிரிடப்படும் நிலத்தின் பரப்பை விரிவாக்கம் செய்கிறது இயந்திர மயமாக்கலை மேம்படுத்தி வளர்ச்சியில் கூடுதல் முதலீடுகளை செய்கிறது. உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய நாடாக சீனா இருக்கிறது.
அதே நேரத்தில் சீனா உலக மக்களின் பசியை போக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. இதற்கான உறுதியை அளித்துள்ளது. உணவு விநியோகத்தில் சர்வதேச ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதற்காக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இணைந்து தெற்கு தெற்கு ஒத்துழைப்பு என்ற அறக்கட்டளை நிதியை நிறுவி நிதி உதவி செய்து வருகிறது.
சீனா மலரும் நாடுகளில் 25 விவசாய திட்டங்களை தொடங்கியுள்ளது அந்த திட்டப் பகுதிகளில் பயிர்களின் விளைச்சலை 30 முதல் 60% வரை உயர்த்தி உலக அளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு பலனை அளித்துள்ளது.
உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழில்நுட்பங்களை ஊக்கிவிக்கும் உதவிகளை செய்துள்ளது.
140 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் விவசாய பரிமாற்றங்களை நடத்தி வருகிறது.
சீனாவின் விவசாய வல்லுநர்கள் பல்வேறு நாடுகளின் துறைகளில் செயல்பட்டு உள்ளூர் விவசாயிகளின் சிறந்த வாழ்க்கையை உருவாக்க உதவி வருகிறார்கள்.
சீன நாட்டின் விவசாயத் துறை கண்டுபிடித்த கலப்பின அரிசி அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் 8 மில்லியன் ஹெடேர்களில் வளர்ந்து வருகிறது. சராசரி வருட மகசூல் உள்ளூர் அரிசியைவிட ஹெக்டேருக்கு 2 டன்கள் அதிகமாக மகசூல் செய்யப்படுகிறது.
வளரும் நாடுகளுக்கு 30 ஆயிரம் கண்களுக்கு அதிகமான அளவில் தானியங்களை அவசர மனிதாபிமான உதவியாக சீனா வழங்கியுள்ளது.
உள்ளூர் மக்களின் உணவு பாதுகாப்பையும் உலக மக்களின் பசியை போக்குவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் முயற்சிகள் வெல்லட்டும்.
– அ.பாக்கியம்
மாறிவரும் உலகத்திற்கு சீனாவின் பங்களிப்பு கட்டுரை – அ.பாக்கியம்
சீனாவின் வளர்ச்சி மாதிரியை மற்ற நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்யாது, மற்ற நாடுகளிலிருந்து மாதிரிகளை இறக்குமதி செய்யாது; மற்ற நாடுகள் தங்கள் மாதிரிகளை சீனா மீது திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்; ஒவ்வொரு நாடும் அதன் சொந்த சூழ்நிலைக்கு ஏற்ற நவீனமயமாக்கலுக்கு அதன் சொந்த வழியை ஆராய வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது தேசிய காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சன் யெலி கூறினார்.
சீன நவீனமயமாக்கல் என்பது அமைதியான வளர்ச்சியின் நவீனமயமாக்கலாகும். நாங்கள் போர், காலனித்துவம் மற்றும் கொள்ளை போன்ற பழைய பாதையில் நடக்கவில்லை. ஆனால் அமைதி, வளர்ச்சி மற்றும் வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நாங்கள் நடந்து கொள்கிறோம்,” என்று சன் கூறினார், ஒவ்வொரு நாடும் அமைதியான வளர்ச்சி மாதிரியை தொடர முடியும் என்று சீனா நம்புகிறது.
உலகம் கோவிட்-19, பொருளாதார மந்தநிலை மற்றும் மோதல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. வளர்ந்து வரும் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளின் பின்னணியில், சீனா உலகத்துடனான தனது உறவுகளை மேம்படுத்தி வருகிறது.
“மனிதகுலத்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க சீன மக்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் கைகோர்த்துச் செயல்பட தயாராக உள்ளனர்” என்று ஜி கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய மொத்த நாடுகளின் எண்ணிக்கை172 லிருந்து 181 ஆக அதிகரித்துள்ளது.
“நாங்கள் 113 நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் கூட்டாண்மைகளை நிறுவியுள்ளோம்.உலகம் முழுவதும் நண்பர்களை உருவாக்கி, உலகளாவிய கூட்டாண்மை வலையமைப்பை ஏற்படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில், ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஐந்து கண்டங்களில் உள்ள 69 நாடுகளுக்கு 42 முறை விஜயம் செய்து, 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்களை உள்நாட்டில் சந்தித்து சீனாவின் கூட்டாண்மைக்கு ஒரு பெரிய அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்.
சீனாவால் முன்மொழியப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) ஒரு சர்வதேச பொது முன்முயற்சியாகவும், உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான தளமாகவும் மாறியுள்ளது.
தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின்படி, ஜூலை 2022 இறுதிக்குள், சீனா 149 நாடுகள் மற்றும் 32 சர்வதேச அமைப்புகளுடன் 200க்கும் மேற்பட்ட BRI ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
உலக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ஒரு வருடத்திற்கு முன்பு முன்வைத்த Global Development Initiative (GDI) ஆகும்.
கோவிட்-19 தொற்றுநோயால் உலகளவில் ஏற்பட்ட பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கு செப்டம்பர் 21, 2021 அன்று ஐநா பொதுச் சபையில் மெய்நிகர் உரையில் சீன அதிபர் ஜி முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். ஜி தனது அறிக்கையில் உறுதியளித்தது போல், “நாம் பொருளாதாரத்தைப் புத்துயிர் பெற வேண்டும் மற்றும் மிகவும் வலுவான, பசுமையான மற்றும் சமநிலையான உலகளாவிய வளர்ச்சியை தொடர வேண்டும்.”
நிலையான வளர்ச்சிக்கான ஐநா சபையால் முன்மொழியாக்கப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்த உதவும் முதன்மை முயற்சியாக, சீனா முன்வைத்த உலக வளர்ச்சிக்கான முயற்சி என்ற திட்டம் உதவி செய்யும். முன்னுரிமைப் பகுதிகளில் வறுமைக் குறைப்பு, உணவுப் பாதுகாப்பு, COVID-19 தடுப்பூசிகள், வளர்ச்சிக்கான நிதி, காலநிலை மாற்றம் மற்றும் பசுமை மேம்பாடு, தொழில்மயமாக்கல், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும்.
GDI ஆரம்பம் முதல் சர்வதேச சமூகத்தால் அன்புடன் வரவேற்கப்படுகிறது. 100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்த முயற்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. அதே நேரத்தில் 60 க்கும் மேற்பட்டோர் ஜனவரி 2022 இல் ஐநாவில் சீனாவால் தொடங்கப்பட்ட GDI நண்பர்கள் குழுவில் இணைந்துள்ளனர்.
சீனாவும், சர்வதேச பங்காளிகளும் இணைந்து விவசாயம், கல்வி, கோவிட்-19 எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் பலதரப்பு ஒத்துழைப்பிற்காக நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு, செப்டம்பர் 21, 2022 அன்று, நியூயார்க்கில் ஐநா பொதுச் சபை அமர்வை ஒட்டி நடைபெற்ற GDI நண்பர்கள் குழுக்களின் அமைச்சர்கள் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மேலும் ஏழு நடைமுறை நடவடிக்கைகளை அறிவித்து வெளியிட்டார். GDI திட்டக் குழுவின் முதல் பட்டியல், 50 உறுதியான ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் 1000 மேலும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்படுகின்றன.
– அ.பாக்கியம்