நேம்சேக் : திரைவிமர்சனம் – ரமணன்
சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | நிவேதிதா லூயிஸுடன் நேர்காணல் – பிருந்தா சீனிவாசன்
இப்படியும் எழுதலாம் வரலாறு!
நிவேதிதா லூயிஸ்
நிவேதிதா லூயிஸின் ‘முதல் பெண்கள்’ கட்டுரைத் தொகுப்பின் மூலம் தொடங்கிய எழுத்துப் பயணம், ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’, ‘சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘வடசென்னை வரலாறும் வாழ்வியலும்’, ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ (இரண்டு தொகுதிகள்) என்று அடுத்தடுத்து நகர்ந்துகொண்டிருக்கிறது. நிவேதிதா லூயிஸுடன் உரையாடியதிலிருந்து…
பெண்கள் பெரும்பாலும் கவிதைகளையும் புனைவுகளையுமே எழுதுகிறார்களே?
பெண்கள் புனைவைத் தாண்டி வெளியே வர வேண்டும். ஆண், பெண் உறவு நிலை குறித்து மட்டுமே எழுதும்போது ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடக்கூடும். புனைவல்லாதவற்றை எழுதுவதற்கு நிறைய வாசிக்க வேண்டும், கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அது நம் அறிவை விரிவாக்கும். ராஜம் கிருஷ்ணன் போன்ற வெகுசில பெண் எழுத்தாளர்களே கள ஆய்வு செய்து கதை எழுதினார்கள். ஆங்கிலேயர்கள் எழுதியவற்றைத்தான் இப்போதுவரை வரலாறு எனப் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்தப் படைப்புகளில் காலனியாதிக்கக் கண்ணோட்டமே மேலோங்கியிருக்கும். சதாசிவபண்டாரத்தார், மயிலை சீனி.வேங்கடசாமி, தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோர் எழுதிய வரலாற்றைப் படித்தப்போதுதான் நாட்டார் கண்ணோட்டத்துடன் வரலாறு எழுதப்படுவதன் அவசியம் புரிந்தது. பெண்கள் பார்வையில், பெண்களையும் உள்ளடக்கிய வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதற்காகவாவது பெண்கள் புனைவிலிருந்து வெளியேவர வேண்டும்.
எழுத்துலகில் ஆணுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண்ணுக்கும் கிடைக்கிறதா?
சென்னை புத்தகக்காட்சியில் பல அரங்குகளில் ஆண் படைப்பாளிகளின் சிலைகளும் பெரிய அளவிலான உருவப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. பெயருக்குக்கூடப் பெண்களை வைக்க வேண்டும் என்று ஏன் யாருக்கும் தோன்றுவதில்லை? முற்போக்குக் கருத்துகளைப் பேசுகிறவர்கள்கூடப் பெரியாரின் சிலையை மட்டுமே வைக்கிறார்களே ஒழிய, கருத்தியல்ரீதியாக அவருக்கு இணையாக நின்று செயல்பட்ட மணியம்மையின் சிலையை ஏன் வைப்பதில்லை? திராவிடக் கொள்கையை உயர்த்திப் பிடித்த சத்தியவாணி முத்துக்கும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரும்பணியாற்றிய அம்புஜம் அம்மாளுக்கும்கூட நாம் சிலை வைக்கவில்லை.
பெண்களின் வாசிப்புத்தளம் விரிவடைந்திருக்கிறதா?
உண்மையில் பெண்களிடையே தேர்ந்தெடுத்த வாசிப்பு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான வீடுகளில் பெண்கள் எதை வாசிக்க வேண்டும் என்பதையும் பெண்கள் வாசிக்க வேண்டுமா என்பதையும் ஆண்களே முடிவுசெய்கிறார்கள்.
உங்களின் ‘முதல் பெண்கள்’ நூலை எழுதுவதற்கான தூண்டுதல் எது?
இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த 20 பெண்கள் குறித்துப் பெண்கள் இதழொன்றுக்காக எழுத ஒப்புக்கொண்டேன். இருவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி எழுதிவிட்டு, மூன்றாவதாக கமலா சத்யநாதன் குறித்து எழுதத் தொடங்கினேன். அப்போதுதான் அவரைப் பற்றிப் பல அரிய தகவல்கள் கிடைத்தன. கமலா சத்யநாதன் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்காக ஆங்கிலத்தில் பத்திரிகை நடத்தியிருக்கிறார். ஆனால், அவரைப் பற்றி ஒரேயொரு ஆய்வுக் கட்டுரை தவிர, வேறெந்தத் தகவலும் இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது.
அவர் நடத்திய இதழ்கள் சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருக்கும் தகவல் அறிந்து அவற்றை வாசித்தேன். முதல் இஸ்லாமியப் பெண் விமான ஓட்டுநர், உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி, முதல் பெண் வயலின் கலைஞர் என்று ஒவ்வொரு துறையிலும் தடம்பதித்த முதல் பெண்கள் குறித்து அப்போதே அவர் அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார். அதைப் படித்த பிறகுதான் தென்னிந்திய அளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் தடம் பதித்த முதல் பெண்கள் குறித்துக் கள ஆய்வு செய்து எழுத வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. அதற்கான தேடலும் பயணமும் என்னை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றன.
யாருடைய எழுத்துகள் உங்களுக்கு முன்மாதிரி?
பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் எனக்குப் பெரிய முன்மாதிரி. ஆ.சிவசுப்பிரமணியன், தென்தமிழகத்தில் கத்தோலிக்கம் என்பதை முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்த பேராசியர் ஜான், ராஜம் கிருஷ்ணன் போன்றோரும் எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டிகளே. போக்குவரத்து, தங்குமிடம், தகவல்தொடர்பின்மை என்று பல்வேறு சிரமங்களுக்கு இடையேதான் அவர்கள் அந்தக் காலத்தில் ஆய்வு செய்திருப்பார்கள். ஆனால், நாம் இன்று இவ்வளவு தொழில்நுட்ப வசதிகளை வைத்துக்கொண்டு குறைந்தபட்ச பயணங்களைக்கூட மேற்கொள்ளவில்லையென்றால் எப்படி?
பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in
நன்றி: இந்துதமிழ் நாளிதழ்
சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | நீதிநாயகம் சந்துருவுடன் நேர்காணல் – ஆசை
ஜெய்பீம் எதிர்ப்பாளர்கள் தேர்தலில் காணாமல் போனார்கள்
– நீதிநாயகம் சந்திரு
இந்திய நீதித்துறையில் எளிய மக்களுக்கான நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் கே.சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் கிட்டத்தட்ட குறுகிய காலத்தில் ஒரு லட்சம் வழக்குகளுக்கு விரைந்து தீர்ப்பு கூறி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய வழக்கைக் கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம் பெருவெற்றி பெற்றது. இப்போது அவருடைய சுயசரிதையான நானும் நீதிபதி ஆனேன்’ நூல் (அருஞ்சொல் வெளியீடு) வெளியாகி சென்னை புத்தகக்காட்சியில் அதிகம் பேசப்படும் நூல்களில் ஒன்றாகியிருக்கிறது.
பொதுவாக சுயசரிதை என்றால், தனிப்பட்ட வாழ்க்கையை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும். ஆனால், உங்கள் சுயசரிதையை உங்கள் பணிகள் வழியாகவே எழுதியிருக்கிறீர்கள். ஏன்?
ஏற்கெனவே சிறிய அளவில் சில பத்திரிகைகளில் என்னுடைய ஆரம்பட்ட வாழ்க்கை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இப்படித் தனிப்பட்ட சம்பவங்களின் வாத வாழ்க்கைக் கதையை எழுதுவதைவிடவும், ஒரு சட்ட மாணவனாக வழக்குரைஞராக, நீதிபதியாக என்னுடைய அனுபவங்களை எழுதுவது சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது. குறிப்பாக, மனித உரிமைகள் சார்ந்த செயல்பாடுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். அதேபோல, நான் நீதிபதியாகச் செயல்பட்ட விதத்தைப் பலரும் பல விதமாகப் பரந்துகொண்டிருந்தார்கள். அதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்று தோன்றியது முக்கியமாக நீதிபதிகள் நியமனம் குறித்து நிறையப் பேசப்படவேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான் இந்த நூல் படைக்கப்பட்டது.
பத்தகத்தை வாசிக்கும்போது, நீதித் துறையின் மீதான நம்பிக்கை மேலும் பிரகாசிக்கிறது. ஆனால், சமூகத்துக்கு இப்படி ஒரு நற்பிக்கையை உருவாக்கும் நீங்களே, பத்தகத்தில் வழக்கறிஞர் தொழில் கசந்து போனதாக எழுதியிருக்கிறீர்கள். இந்த முரண் ஏன்?
சாமானிய மக்களுக்குச் சட்ட அணுகுமுறையிலும், நீதித்துறை மீதும் நம்பிக்கைகள் அதிகமாகும் காலகட்டத்தில், வக்கீல்கள் தங்களுடைய தொழில் தர்மத்தைத் தவிர்த்துவிட்டு வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்ததுதான் அந்தத் தொழில் மீது கசப்பு ஏற்பட காரணம் ஆனது சக வழக்குரைஞர்கள் மீதான அக்கறையும் ஆதங்கமுமே அப்படி ஒரு கட்டுரையாக வெளிப்பட்டிருக்கிறது.
மாணவர் உதயகுமாரின் மரணம்தான் நிதித் துறையில் நீங்கள் நுழையக் காரணமாக இருந்தது. உதயகுமாருக்கு நீதி கிடைத்திருப்பதாக எண்ணுகிறீர்களா?
உதயகுமாருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் பெரிய அளவில் மாணவர்களைத் திரட்டிக் கொடிப் பிடித்தபோதும், அவரது தந்தையே அப்பிரச்சினையில் மறுதலித்து வாக்குமூலம் அளித்ததுதான் நீதி கிடைப்பதற்கான பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. இருப்பினும், அந்த அநீதிக்கு எதிராகத் தமிழக மாணவர் சக்தி ஒன்றுதிரண்டது பெரிய வெற்றி.
நூலில் நெருக்கடி நிலை தொடர்பான அத்தியாயத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அனுபவித்த சித்ரவதைகளைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளீர்கள். அது அந்தக் காலத்தை வாசகர்களின் கண்முன் அப்படியே கொண்டுவருகிறது. சட்டரீதியாக இந்தியா இன்னொரு நெருக்கடி நிலையைச் சந்திக்கும் அபாயத்திலிருந்து விடுபட்டுவிட்டது என்று நினைக்கிறீர்களா?
நெருக்கடி நிலைக்கு எதிராக ஜனநாயக நடைமுறையைக் கோரி அனைத்து சக்திகளும் அரசியல்ரீதியாகத் திரண்டதன் விளைவாக 1977-ல் ஜனதா கட்சி ஒன்றிய அரசில் ஆட்சியைப் பிடித்தது. அதன் விளைவாக அரசமைப்புச் சட்டத்தில் இரண்டு முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அரசின் அத்துமீறலுக்கு எதிராக நீதிமன்றங்களை அணுகுவதை ஒன்றிய அரசால் தடுக்க முடியாது என்றும், அடிப்படை உரிமைகளைத் தள்ளி வைக்க முடியாது என்றும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஒன்றிய அரசு கலைக்க முற்பட்டாலும், அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்ற மற்றொருதிருத்தமும் கொண்டுவரப்பட்டது. அதேபோல, ஏடிஎம். ஜபல்பூர் வழக்கு தீர்ப்பு தவறு என்று அறிவிக்கப்பட்டு, ‘நெருக்கடி நிலையானாலும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெறுவதைத் தடுக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தக் காரணங்களால், மீண்டும் ஒருமுறை நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டாலும், அதன் விளைவுகள் பழைய பாணியில் இருக்க முடியாது.
அமைப்பின் கடுமையான விமர்சகர் நீங்கள். அப்படிப்பட்ட ஒருவரையும் உள்ளடக்கியது இந்திய நீதித் துறையின் நல்ல விஷயம். இதைப் பொதுவான போக்கு என்று சொல்ல முடியுமா அல்லது சந்துரு ஒரு விதிவிலக்கு என்று நினைக்கிறீர்களா?
அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு முதல் 20 வருடங்களில் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொத்துரிமை வழக்குகளில் அளித்த தீர்ப்புகளானவை மக்களின் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கின்றன என்ற விவாதம் பொதுவெளிகளில் எழுந்தபோது நீதித் துறை நியமனங்களைப் பற்றி முதல் தடவையாக கவனம் எழுப்பப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் மீது உண்மையிலேயே நம்பிக்கையுள்ளவர்களையும் சமூக நீதியில் நாட்டம் கொண்டவர்களையும் நியமிக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அதையொட்டி, பதவிக்கு வந்த நீதிபதிகள் விட ஆர் கிருஷ்ணய்யர், பி. என். பகவதி, ஒ. சின்னப்பரெட்டி, டி.ஏ.தேசாய் அக்கடமையை சரிவரச் செய்தனர். ஆனால், அதற்குப் பிறகு அப்படிப்பட்ட நியமனங்களில் மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டு நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் கொலிஜிய நடைமுறை நிறைவேற்றப்பட்டது. இதனால் சிறப்பான நியமனங்கள் நடைபெறுவது தடைபட்டது. இந்நியமன முறையில் ஒரு விதிவிலக்குகள் இருந்திருக்கலாம். ஆனால், ‘நீதித் துறை சுதந்திரம்’ என்ற பெயரில் இப்படிப்பட்ட நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதே உண்மை. இதை விவரிக்கும் விதமாகவே இந்தப் பத்தகத்தில் என்னுடைய நியமனத்தில் நடைபெற்ற பல்வேறு அவலங்களையும் பட்டியலிட்டுள்ளேன். இதனால் இந்த நியமன நடைமுறையை மாற்றுவதற்கு இந்நூல் உதவி செய்யும் என்பது என்னுடைய நம்பிக்கை.
இந்திய நீதியமைப்பில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருக்கிறீர்கள். இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தற்போது வரை பார்க்கும்போது நீதித் துறையின் சுதந்திரம் பலப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா, பலவீனப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
நீதித் துறையின் வீச்சும், செயல்பாடுகளின் தாக்கமும் பெருமளவில் கூடியிருந்தாலும் ஒட்டுமொத்தமாக அதிலுள்ள நீதிபதிகளின் தனிப்பட்ட அணுகுமுறைகள் மக்களை அயர்ச்சியடையவே வைக்கின்றன. மேலும், நீதித் துறைக்கு சமூகநீதியின்மீது ஒருமித்த கருத்து இல்லாததும், அரசின் அதிகார மீறலை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதில் சுணக்கம் இருப்பதும் மக்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது. ஆயினும் அங்கும் இங்குமாக ஒருசில ஒளிக்கற்றைகள் தெரிந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை நம்பிக்கை நட்சத்திரங்களா அல்லது நொறுங்கிவிழும் வால்நட்சத்திரங்களா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.
உங்களுடைய வழக்கை முன்வைத்து எடுக்கப்பட்ட “ஜெய்பீம்‘ படத்துக்கு ஒரு பக்கம் பெரிய வரவேற்பு இருந்தாலும், இன்னொரு பக்கம் சர்ச்சையும் ஏற்பட்டது. காவலர் கதாபாத்திரம் மாற்றியமைக்கப்பட்டது போன்ற மாற்றங்கள் உங்களுக்குத் தெரிந்துதான் நடந்தனவா? இந்த சர்ச்சைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஜெய்பீம்’ படம் நாடு தழுவிய வரவேற்பைப் பெற்றது ஒருபுறம் என்றால் ஒருசிலர் எவ்வித ஆதாரமுமின்றி அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க முன்வந்தது துரதிர்ஷ்டமே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் காலச்சூழலில் அடித்துச் செல்லப்பட்டனர். எந்தத் திரைப்படம் வந்தாலும் அதற்கு ஆதாரமின்றி எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கூட்டம் இரண்டாவது தணிக்கை முறையொன்றை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே படத்தின் ஆரம்பத்தில் கூறியது போல், இப்படம் ராஜாக்கண்ணுவின் காவல்நிலைய சித்ரவதையால் ஏற்பட்ட மரண வழக்கை தழுவிய கதையாக இருப்பினும் படத்திலுள்ள சித்தரிப்புகள் கற்பனைதான் என்று கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஆதாரமில்லாமல் சர்ச்சை எழுப்பியவர்களுடைய உண்மையான நோக்கம் நிறைவேறாததோடு நகராட்சித் தேர்தல்களில் அவர்கள் காணாமல்போனார்கள். மேலும், இப்படம் தமிழ்நாடு எல்லையைத் தாண்டி இந்தியா முழுவதும் பெரிய அலையை உருவாக்கியுள்ளது. அங்கெல்லாம் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடமேதும் இன்றி ஜெய்பீம் என்ற முழக்கம் அனைவரது உதடுகளில் ஒலித்துவருவதே இப்படத்தின் வெற்றி.
ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
நன்றி: இந்துதமிழ் நாளிதழ்
சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | ‘நிழல்’ திருநாவுக்கரசுடன் நேர்காணல் – ஆர்.சி.ஜெயந்தன்
தமிழகத் திரைப் படைப்பாளிகள் பின்தங்கிவிடக் கூடாது
– நிழல் திருநாவுக்கரசு
திரையிடல், திரைப்படப் புத்தகங்கள், பயிற்சிப் பட்டறைகள். இந்தப் பயணம் எப்படி?
இம்மூன்றுமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன. கிராமங்களுக்கு நல்ல படங்களைக் கொண்டுசெல்வது என முடிவெடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பல கிராமங்களில் திரைப்படக் குழுக்களை உருவாக்கினேன். அவர்களை இணைப்பதற்காகத்தான் ‘நிழல்’ தொடங்கப்பட்டது. செயலுக்கான முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘நிழல் – பதியம்’ இணைந்து ‘குறும்படப் பயிற்சிப்பட்டறை’களை தமிழ்நாடு முழுவதும் நடத்திவருகிறோம். இந்திய அளவில் 60 பட்டறைகள் என்பது ஆச்சரியமே! இதன் மூலம் இன்று 200 பேர் திரைத் துறையில் பணியாற்றிவருகின்றனர். 6,000 கிராமப்புற மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 10 வெற்றித் திரைப்படங்களை எடுத்திருக்கிறார்கள்.
திரைப்படக் கலையை அதற்குரிய கல்வி நிறுவனங்களில் முறையாகப் பயில முடியாதவர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் மாற்றாக அமையும் என்று நம்புகிறீர்களா?
நிச்சயமாக… குறிப்பாக கலை, தொழில்நுட்பம் குறித்துத் தாய்மொழியில் பதிப்பிக்கப்படும் நூல்கள் விரைந்து கற்றுகொள்ள உதவுகின்றன. தமிழில் முதன்முறையாக எடிட்டிங்தொழில்நுட்பத்தை ‘படத்தொகுப்பு – கலையும் அழகியலும்’ என்ற நூலாகக் கொண்டுவந்தோம். இது போலவே நடிப்பு, திரைக்கதை, கேமரா பற்றியும் வெளியிட்டோம். தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக்கின் ‘சினிமாட்டிக் உடல்கள்’, குறும்படம் மற்றும் ஆவணப்படத் தொகுப்பான ‘சொல்லப்படாத சினிமா’, ‘ஈரானிய சினிமா’ போன்றவை பெரிய வரவேற்பைப்பெற்றன. தமிழ் சினிமாபேசத் தொடங்கியபின் 1931முதல் 60 வரை வெளிவந்த படங்கள் பற்றி பல்வேறு இதழ்களிலிருந்து வந்த விமர்சனங்களைத் தொகுத்து ‘தமிழ் சினிமா விமர்சனம்’ என்கிற நூலை ஊடகத் துறை பேராசிரியர் சொர்ணவேலும் நானும் கொண்டுவந்திருக்கிறோம். இப்படி இன்னும் பல.
இன்றைய தமிழ்க் குறும்பட உலகை எப்படி மதிப்பிடுவீர்கள்?
உலகப் புகழ்பெற்ற பல இயக்குநர்கள் குறும்படம் எடுத்துக் கற்றுக்கொண்ட பிறகுதான் பெரிய படங்கள் எடுத்திருக்கிறார்கள். குறும்படம் எடுப்பதன் மூலம், ‘இதை நம்மால் செய்ய முடியும்’ என்கிற நம்பிக்கை முதலில் வரும். இன்று தமிழ்நாட்டின் குறும்படப் படைப்பாளிகள் எடுக்கும் பலபடங்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்துவருகிறது. தனா எடுத்த ‘மீனா’ என்கிற படத்துக்கு அமெரிக்காவில் பரிசு கிடைத்துள்ளது. வசந்த், முரளி திருஞானம், மருதன் பசுபதி, பாண்டியன் சூறாவளி, சரவணன் போன்றவர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.
திரைப்படங்களை, ஊடகங்களைப் புரிந்துகொள்வதற்கான ‘மீடியா அப்ரீசியேஷன்‘ பயிற்சி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெறும் கனவா?
அரசு கல்வித் துறைவழியாக முன்னெடுக்க வேண்டிய ஒன்றுதான். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள பல தனியார் கல்லூரிகளில் காட்சி ஊடகத் துறை மூலம் பயின்றுவரும் மாணவர்கள் அடிப்படையான ‘மீடியா திறனாய்வு’ பயிற்சி பெற்று வெளிவருவது ஆறுதல். நாங்கள் நடத்திவரும் குறும்படப் பயிற்சிப் பட்டறைகளில் படங்களைத் திரையிட்டுத் திறனாய்வுக் கலையை வளர்த்துவருகிறோம்.
‘திறன்பேசிகளைக் கொண்டு குறும்படமெடுக்கப் பயிற்சி’ என்கிற உங்கள் முன்னெடுப்பு எந்தக் கட்டத்தில் இருக்கிறது?
இந்திய அளவில் முதன்முறையாக ‘செல்போன் பிலிம் மேக்கிங்’ குறும்படப் பயிற்சியைத் திட்டமிட்டுள்ளோம். வரும் மார்ச் 7முதல் 10வரை சென்னை, பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம் பாலையா தோட்டத்தில் நடத்தவிருக்கிறோம். பிரெஞ்சு இயக்குநர் ழான்-லுக் கோதார் (Jean-Luc Godard), “எல்லோரும் பேனா வைத்துக்கொள்வதுபோல கேமரா வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார். அப்போதுதான் சினிமாவில் ஜனநாயகம் வரும் என்றார். திறன்பேசி கேமரா மூலம் அது இன்று சாத்தியப்பட்டுவருகிறது. பெரிய படங்கள்கூட இன்று திறன்பேசி கேமரா மூலம் எடுக்கப்பட்டு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்கின்றன. தமிழகப் படைப்பாளிகள் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பட்டறை.
– ஆர்.சி.ஜெயந்தன், தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
நன்றி: இந்து தமிழ்




