குறும்படங்கள் ஏன் இன்று அதிகமாக எடுக்கப்படுகின்றன ? – பாரதிசந்திரன்

குறும்படங்கள் ஏன் இன்று அதிகமாக எடுக்கப்படுகின்றன ? – பாரதிசந்திரன்




குறும்படங்கள் மிக அதிக அளவில் இன்று வெளிவருகின்றன. பல இணையதளங்கள் மூலமாக அவை வெளியிடப்படுகின்றன. இவற்றை இக்காலகட்டத்தில் இவ்வளவு அதிகமாக எடுக்க வேண்டியது ஏன்?

இது இலக்கியத்தின் பிறிதொரு வளர்ச்சி நிலை என்பதை உணர முடிகிறது. மேலும், திரைப்பட உலகத்திற்குச் செல்வதற்கான அடையாள அட்டையாகவும். குறும்படங்கள் விளங்குகின்றன..
குறும்படங்கள் என்பது, குறைந்த செலவில், குறைந்த கதாபாத்திரங்களுடன், குறுகிய காலத்திற்குள் எடுக்கப் பெறும், ஒரு கதையுடன் கூடிய படங்கள் குறும்படங்கள் என அழைக்கப்படுகின்றன.

குறும்படங்கள், நடிகர்களின் நடிப்பை வெளிக்காட்டுவதற்கான சிறந்த களமாக விளங்குகிறது. எனவே, திரையுலகத்திற்கு நடிக்கச் செல்லுகின்ற ஆர்வம் உடையவர்களும், தனது நடிப்புத் திறமையைக் காட்டுவதற்கான முன்மாதிரியாக, குறும்படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

இந்த வழித்தடத்தில் அதிகமானக் குறும்படங்கள், இயக்குனர்கள் ஆவதற்கும், இசையமைப்பாளராக ஆவதற்கும், ஒளிப்பதிவாளராக ஆவதற்கும், இன்ன பிற துறைகளில் சாதிக்கவும் இத்துறையை நாடுகின்றனர்.

மாபெரும் கனவு உலகமாக இருக்கின்ற, பணம் நிறையச் சம்பாதிப்பதற்கான இடமாகவும் இருக்கின்ற துறைதான் திரைப்படத்துறை. அதில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று எண்ணுகிற கலைத்துறையைச் சார்ந்த அனைவரும் குறும்படம் என்கிற வழியாகப் பயணிப்பதற்கும் நுழைவதற்கும் விரும்புகின்றனர்.

இக்காரணமே மிகப்பெரும் காரணமாகக் குறும்படங்கள் எடுப்பதற்குக் காரணியாக அமைந்து இருக்கிறது.

குறும்படத்தின் சிறப்புகள் என்னவென்று ஆராய்ந்தால், அந்தத் துறை எவ்வளவு சிறப்பானது என்பதை அறிய முடியும். ஒரு குறும்படம் மிகக் குறுகிய காலத்தில் அதாவது ஒரு நிமிடத்தில் இருந்து 40 நிமிடங்கள் வரை குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு எடுக்கப்படும் குறும்படங்கள் மிக ஆழமான உணர்வுகளைப் பார்ப்பவர் மனதிற்குக் கடத்திச் செல்கின்றன. இலக்கியத்தின் மிகப்பெரும் வலிமையான ரசனை, குறும்படரசனையாக உச்சநிலையைப் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.

குறும்படம், பார்ப்பவர் மனதில் இனம்புரியாத கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்தி விடுகிறது. இறுதியாக அமையும் காட்சிகள் ஒருவிதமான சலசலப்பை மற்றும் எதிர்வினையை ஏற்படுத்தி ஒரு மாயாஜாலம் செய்துவிடுகிறது. இது பார்ப்பவரின் மனநிலையை இலக்கியத் தரமானதாகவும், ரசனை மிக்கதாகவும் மாற்றி விடுகின்றன.

குறும்படங்களை எடுப்பவரும், குறும்படங்களைப் பார்ப்பவர்களும் இந்த இலக்கிய நோக்கில் ஒரு புள்ளியில் இணைகின்றனர். அதன் காரணமாக இக்காலகட்டத்தில் இந்த இருவரும் சமூகத்தில் மிகுதியாக இருக்கின்றனர்.

மிக முக்கியமாகக் குறும்படங்கள் இவ்வளவு வளர்ச்சி பெறுவதற்குக் காரணம், தொழில்நுட்ப விரிவாக்கமே ஆகும். இன்றைக்கு அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. மேலும், தொலைக்காட்சிப் பெட்டிகள் இணைய வசதியோடு காணப்படுகின்றன. கணினி முழுவதும் இணையத்தொடர்போடு எங்குப் பார்த்தாலும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே நம்மைச் சுற்றி இணையம் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

அந்த வசதிகளைப் பயன்பாடுத்துகிற ஒருவர், நிமிட நேரத்திற்குள் அல்லது நொடி நேரத்திற்குள் காணொளிகளைக் காண்பதற்கு விரும்புகின்றனர்.

பார்ப்பவர்களின் திறனுக்கேற்ப, உலகச் செய்திகளும், அதைத் தாண்டிய இலக்கியப் படைப்புகளும் காட்சி நிலையில் காண்பதற்கே விரும்புகிறார்கள். அந்த இடத்தில் குறும்படங்கள் அவர்களுக்கு மிகப்பெரும் தீனியாக இருக்கிறது.

மேலும், மூன்று மணி நேரம் திரைப்படம் பார்ப்பது என்பது இன்று முடியாத ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. எனவே, மிககுறுகியதான நேரத்தில் திரைப்படம் போன்ற ஒன்றைப் பார்ப்பதற்கு இளைஞர்கள் விரும்புகின்றனர். அந்தப் பொழுதில் குறும்படங்கள் முந்திக் கொண்டு, நான் இருக்கின்றேன் என வருகிற பொழுது, அவற்றின் இடம் முதன்மை பெறுகிறது.

தொடர்ந்து திரைப்படம் பார்க்கிற ரசிகர்கள், குறும்படங்களைப் பார்த்து திருப்தி அடைந்து விடுகின்றனர், அந்த அளவிற்குக் குறும்படங்களும் அதீதமான தீனியைத் தன் ரசிகர்களுக்கு அளித்துக் கொண்டு இருக்கின்றன.

குறும்படம் எடுப்பவர்கள் இன்றைக்கு அதிகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்திக் கதை கூறும் முறையிலும், வெளிப்பாட்டு முறையிலும், கதை அமைப்புக்கள் அனைத்தையும் மாற்றி நவீனமான முறைகளில் தருவதால், அவை மிக எளிதாக ரசிகர்களைச் சென்றடைந்து விடுகிறது.

காணொளிகளில் தேடுகிற விஷயங்கள் எல்லாவற்றையும், அதில் தேடி விடை கண்டு கொள்ளுகிறார்கள். அந்த இடத்தில் குறும்படங்களும் நுழைந்து திரைப்படத் தாக்கத்தையே தீர்ப்பதும் இலக்கியத் தாகத்தைத் தீர்ப்பதுமாக முன்னிலையில் இருக்கின்றன.

எனவே, காலத்தின் தேவையை நிவர்த்தி செய்ய இன்றைக்குப் புற்றீசல்கள் போலக் குறும்படங்கள் அளவுக்கதிகமாக எடுக்கப் படுகின்றன என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

திரைப்பட உலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் இன்றைக்குப் பயிற்சி எனும் பெயரில் பல கல்வி நிலையங்கள் பயிற்சி தருகின்றன. சான்றிதழ்களும் பட்டயங்களும் வழங்குகின்றன. அதிலிருந்து வெளிவருகிற மாணவர்களும் தங்களின் படிப்பிற்குச் செய்யப்படுகின்ற பயிற்சிகளாகக் குறும்படங்களை எடுத்துப் பயிற்சி செய்து பழகுகின்றனர். மேலும், தான் அந்தத் துறையில் வல்லுனராக ஆகிவிட்டேன் என்பதைத் தெரிவிக்கும் முகமாகவும் குறும்படங்களை எடுப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

குறும்படங்களுக்கு மதிப்பும், மரியாதையும் இன்று உலகளவில் அதிகமாகவே இருக்கின்றன. காரணம், இலக்கிய மரபில் நவீன தளத்தில் குறும்படங்கள் இயங்குவதே. இவ்வாறு எடுக்கப்படும் குறும்படங்களுக்கு உலக அளவில் பல விழாக்கள் நடத்தி, அதிலே குறும்படங்கள் வெளியிடப்பட்டும், சிறந்த குறும்படங்களுக்கு உலகளாவிய அளவில் பரிசும் விருதும், பணமும் தருவதைப் பல அமைப்புகள் செய்து வருகின்றன.

எனவே, இந்த அங்கீகாரத்தை நோக்கியும், எப்படியும் உலகளவில் சிறந்த குறும்படங்களுக்கான பரிசையும் விருதையும் நாம் வாங்கிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் பல குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன.

ஒரு காலத்தில் சிறுகதை என்னும் அமைப்பில் எழுதப்பட்ட இலக்கியம், இன்று காட்சிப் பின்புலத்தோடுச் சிறுகதையாக மாற்று வடிவம் கொண்டு குறும்படங்கள் ஆகியிருக்கிறது.

சிறுகதை படிக்கும் வாசகர், தனது வாழ்வனுபவங்களை அதோடு சேர்த்து இணைத்து அந்தக் கதையின் ஓட்டத்தில் தனது வாழ்க்கையின் அனுபவத்தையும் இணைத்து வைத்து படிப்பார். உணர்ந்து கொள்வார். எழுதியவரின் அனுபவங்களை பெரும்பகுதி வாசகர்கள் பெற்றுவிட முடியாது. இந்தச் சூழ்நிலை சிறுகதை படிக்கும் பொழுது முன்பு ஏற்பட்டது.

குறும்படங்கள் பார்க்கும் பொழுது, யார் அந்தக் கதையை எழுதினாரோ அந்த எழுத்தாளரின் அனுபவம் படைப்பாக மாறி, அதே அனுபவம் நடிப்பின் மூலமாக, இசையின் மூலமாக, வசனங்கள் மூலமாக ரசிப்பவருக்குப் போய்ச் சென்றடைகிறது. எனவே, குறும்படங்கள் ஒரு எழுத்தாளர் சொல்ல வந்த செய்தியை அவரின் அனுபவப் பின்னணியோடு ரசிகர்களுக்குக் கொண்டு செல்கிறது. இந்த வகையில் குறும்படங்கள் ஒரு வேறுபட்ட வெளிப்பாட்டுத் தன்மையை இளைய தலைமுறைக்குத் தருகிறது. அது, அவர்களைச் சுண்டி இழுக்கின்றன.

பெரும்பாலான முன்னனி எழுத்தாளர்களின் சிறுகதைகள் இன்றைக்குக் குறும்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாகத் ”நவரசம்: எனும் சமீபத்தியத் திரைப்படம் பல சிறுகதைகளின் வெளிப்பாடு ஆகும். அதேபோலத் தற்போது வெளிவந்து இருக்கின்ற, பல விருதுகளை வென்ற, ”சிவரஞ்சனியும் மற்ற சில பெண்களும்” எனும் திரைப்படமும் மூன்று சிறுகதைகளின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது. எனவே, சில் சிறுகதைகள் குறும்படங்களாகவும், சில சிறுகதைகள் திரைப்படமாகவும் மாறுகின்ற இலக்கிய வளர்ச்சியை இங்கு நேரடியாகக் காணலாம்.

தொலைக்காட்சிகளில் வெளிவருகின்ற விளம்பரங்கள், மக்களின் மனதில் ஒருவிதமான பிடிப்பை ஏற்படுத்தி, அந்தப் பொருளை பயனாளியை வாங்க வைப்பதற்கு முயற்சி எடுக்கின்றன. அந்த விளம்பரம் பயனாளர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க வேண்டும் எனும் பொழுது, வியாபார உத்தியாகக் குறும்படத்தைப் போன்ற ஒரு விளம்பர உத்தியை அந்த இடத்தில் முதலாளிகள் கையாளுகின்றனர். இவ்விடத்திலும் குறும்படங்களைப் பல பொருள்களுக்கான விளம்பரப் படமாகவும் அமைந்து சிறக்கிறது.

குறும்படத்தில் வரும் காட்சிகள் பார்ப்பவரின் மனதைச் சுண்டி இழுத்து மனதிற்குப் பிடித்துப் போய், அந்த விளம்பரத்தில் வரும் பொருள்களை வாங்குவதற்குப் பழகுகின்றனர். எனவே, தொலைக்காட்சியில் வருகின்ற அல்லது ஊடகங்கள் எல்லாவற்றிலும் வருகின்ற விளம்பரங்களில் குறும்படங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கான இடம், மிகப்பெரிய தளமாகவே இருக்கிறது. இவர்களை, விளம்பர உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது கண்கூடாகப் பார்க்கின்ற ஒன்றாக இருக்கிறது.

விளம்பரப் படங்களில் தனது குறும்படங்களைக் கொண்டு வந்தால் அது சிறப்பைப் பெற்று, அந்த விளம்பரம் செய்யப்பட்ட பொருள் அதீத விற்பனையானது என்றால், அந்தக் குறும்படம் எடுத்த இயக்குனருக்கு அதிகமான வாய்ப்புகள் வந்து, மிக அதிகமாகப் பொருளீட்டுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. எனவே, அங்கும் குறும்படத்திற்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

உலகின் பல மொழிகளில் இதுபோன்ற குறும்படங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்நாட்டு மக்களின் சமூக ஒழுகலாறுகளை மற்றும் அவர்களின் பண்பாட்டைப் பழக்கவழக்கங்களை எல்லாவற்றையும் பிற நாட்டினர் அறிந்துகொள்வதற்கு இது தேர்ந்த வகையாக இருப்பதால் உலக நாடுகள் முழுவதிலும் எடுக்கப்படுகின்ற குறும்படங்கள் வெவ்வேறு நாடுகளில் நுண்மையாகக் கவனிக்கப்பட்டு ரசிக்கப்படுகினறன.

குறும்படங்களை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து அது குறித்த விமர்சனங்களை எழுதுவதற்குத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குப் ”பிலிம் சொசைட்டி” என்கிற அமைப்பு உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருப்பது சிறப்பான ஒன்றாகும். இந்தப் பிலிம் சொசைட்டி மூலமாகப் பல்வேறு நாடுகளில் வெளியிட்ட குறும்படங்களை நாம் இலவசமாகவே பெற்று பார்த்துவிட்டு அதற்கான விமர்சனங்களை அனுப்புவதற்கு நம் நாட்டிலுள்ள தூதரகங்கள் மிக அதிகமாக உதவுகின்றன.

ஆவணப்படங்கள் சில நேரங்களில் குறும்படங்களின் வேறு வடிவமாகவும் இருக்கின்றன. இதுபோன்ற ஆவணப்படங்கள் மிகப்பெரும் வரலாற்றுப் புதையல்களாக வெளிப்பட்டு உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றன.

படங்களை வெளியிடும் தளங்களான சில இணையதளங்கள், புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களைத் தனது இணையதளங்கள் மூலமாக வெளியீட்டு திரையரங்குகளாகவும் மாறி இருக்கின்றன. அவற்றில் சில இணையதளங்கள் குறும்படங்களை வெளியிட்டும் அதற்கான தொகையை ரசிகர்களிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். எனவே, இதுபோன்ற ஓ டி டி தளங்களில் திரைப்படங்கள் போலவே குறும்படங்களும் வெளியிடப்பட்டு இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் பணத்தை வழங்குகின்றன.

அது குறும்படத் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் உதவியாக அமைந்துவிடுகிறது அதற்கும் இக்காலம் வழிவகைச் செய்து வைத்திருக்கிறது. முன்னணி எழுத்தாளர்கள் குறும்பட விமர்சனங்களை எழுதியும் இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். திரைப்படங்கள் காலத்தால் மாறி மாறி எதிர்காலத்தில் குறும்படங்கள் அதன் இடத்தில் முழுமையாக இருந்து தொழில்நுட்ப கருவிகளில் கோலோச்சும் என்பதில் ஐயமில்லை.

புதுஇயக்குனர்கள் குறும்படங்களை எடுப்பதில் இன்று அதிக கவனம் எடுக்கின்றனர். புகழும், பெருமையும், பணமும், செல்வமும் தன் திறமையை வெளிக்காட்டும் புலமையும் குறும்படங்களில் காணப்படுவதால், அதிகமான அளவிற்கு இன்றைக்குக் குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன.

-பாரதிசந்திரன்.
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி
ஆவடி.
9283275782
[email protected]

நூல் அறிமுகம்: ந.செல்வனின் ஒளிப்படக்கலையும் கலைஞனும் – அன்புக்குமரன்

நூல் அறிமுகம்: ந.செல்வனின் ஒளிப்படக்கலையும் கலைஞனும் – அன்புக்குமரன்




திருமணம் கழிந்து 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை ஒட்டி அண்மையில் நானும் என் மனைவியும் உள்ள ஒரு ஒளிப்படத்தை டிஜிட்டல் ஓவியமாக்கி அதை ஒரு பெரிய போட்டோபிரேமில் வைத்து எனது மைத்துனர் எங்களுக்கு பரிசளித்தார். எனக்கும் என் மனைவிக்கும் இதில் மிக்க மகிழ்ச்சி. எனக்கோ 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை நினைவுபடுத்தியது.

மறைந்த எங்கள் தாத்தாவின் வீடு பாகப்பிரிவினை செய்யப்பட்டு என் பெரியம்மாவின் குடும்பம் அதை விற்றதால் அந்த வீட்டில் உள்ள தேவையான பொருள்கள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்க சென்றோம் .காரணம் கூடிய சீக்கிரம் வீடு இடிக்கப்படும். முகப்பில் தாத்தாவின் பெற்றோரின் ஒளிப்படம் பெரிய அளவிலான போட்டோ பிரேமில் மாட்டப்பட்ட்டு இருந்ததைக் கண்டேன் .அதை எடுக்கலாம் என்று உள்மனது தோன்றியது, ஆனால் எனது பெற்றோர்கள் “எதுக்கு தேவை இல்லாமல் குப்பை சேர்க்கிறாய் ” என்றதும் எனது தாத்தா மற்றும் பாட்டியின் ஒரு கருப்பு வெள்ளை படத்தை எடுத்து கொண்டு வீடு திரும்பினேன்.

என் கொள்ளு தாத்தாவின் காலத்தில் ஒரு ஒளிப்படம் எடுப்பது என்பது எவ்வளவு அரிதாய் இருக்கக்கூடும். இனி கொள்ளு தாத்தா மற்றும் பாட்டியின் ஒளிப்படம் வேண்டும் என்றாலும் எனக்கு கிடைக்காதே என்ற வருத்தம் தோய்ந்து, எனக்கு பரிசளிக்க பட்டுள்ள போட்டோ பிரேமை பார்த்த வண்ணம் உள்ளேன். என் காலத்திற்கு பின் இது எந்த குப்பை மேட்டில் கிடக்கும் என்பதையும் நினைத்து பார்த்தேன்.
ஐயா ந.செல்வன் அவர்களின் புத்தகம் வாசிக்கும் முன் நான் இந்த மனநிலையில் தான் இருந்தேன். ஐயா ந.செல்வன் அவர்களது இரண்டு புத்தகங்களில் இது நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம்.

முதல் புத்தகம் அறியப்பட வேண்டிய ஆளுமைகள். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “எனது அருமை டால்ஸ்டாய்”, பவா செல்லத்துரை எழுதிய “மேய்ப்பர்கள்” புத்தகங்களின் வரிசையில் கலை மற்றும் இலக்கிய உலகில் பயணிக்கும் படைப்பாளிகளை பற்றியது என்பதால் இதனை முதலில் வாசித்தேன்.

ஒளிப் படக் கலையும் கலைஞனும் என்ற புத்தகத்தை பிறகு வாசிக்கலாம் என்று இருந்தேன். காரணம் நாக்கு சுட்ட பூனை போல் சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வாங்கி அதை ஒவ்வாமையால் வாசிக்க முடியாமல் இன்னும் கிடப்பிலேயே 11 ஆண்டுகளாக இருக்கிறது அலமாரியில்.

ஒரு வேளை இது அது போன்று துறை சார்ந்த புத்தகமாக இருக்குமோ என்ற ஒரு நெருடல். அது மட்டும் இல்லாமல் இந்த புத்தகத்தின் பக்கங்கள் 304 என்பதும் ஒரு காரணம் தான்.

28 கட்டுரைகள் அடங்கிய இந்த கட்டுரைத் தொகுப்பு ஒரு ரசனையான மனிதனின் முதல் வெளிப்பாடாக பிறர்கள் படைத்த ஒளிப் படங்களை ரசித்து, பின்பு அந்த கலையின் மீது ஆர்வமிகுதியால், அதில் லயித்து, அதை கற்று, தானும் ஓரு படைப்பாளியாக ஆன கதையை சொல்கிறது .

பின்பு தன் அனுபவங்களை எழுத்தின் மூலம் பிறருக்கு செலுத்துகிறான். இதோடு இருந்திருந்தால் இந்த புத்தகம் இலக்கியமாக மாறி இருக்காது.

மாறாக, இந்த படைப்பாளி பின்பு தன் அனுபவங்களால் இந்த படைப்பின் சாத்தியக்கூறுகளை உணர்ந்து, சக மனிதனை, வாழும் சூழலை, அரசியலை, பிரபஞ்சத்தை மெல்ல நின்று கவனித்து, உள்வாங்கி, கலையின் குறிக்கோள் என்பது மனித நேயத்தை தொடுவது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இந்த கூறுகள் தான் இந்த புத்தகத்தை இலக்கியமாக்குகிறது என்று உணர்கிறேன்.

புகைப்படம் எடுக்கும் நேர்த்தி, அவை பதிவு செய்யும் போது தேவையான அளவுருகளை பட்டியலிடுலுதல், எந்த கேமரா நல்ல கேமரா என்ற குறிப்புகள் சார்ந்த எழுத்துகளில் இருந்து முற்றிலும் விலகி நம்மை சில பயணக் கட்டுரைகளின் மூலம் மெல்ல தனது நிலப்பிறப்பிற்கு கொண்டு செல்கிறார்.

கால இயந்திரம் சாத்தியமா என்று தெரிய வில்லை. ஆனால் கடந்த காலம் எப்போதும் நம்மோடு நிகழ் காலத்தில் எழுத்துக்களாக, ஓவியமாக, ஒலி நாடாவாக, ஒளிப் படமாக, திரைப்படமாக பேசிக் கொண்டே இருக்கின்றன.இது போல் வேறு வேறு கால வரிசையில் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து நம்மோடு எழுத்தாளர் உரையாடுகிறார்.

பயணக் கட்டுரையின் முன்னோடியான A.K.செட்டியார் அவர்களின் புத்தகங்களை ரசிப்பவர்கள் இந்த தொகுப்பில் இருக்கும் ஊர்த் திருவிழா, ஊருணி நீர் நிறைந்தற்றே மற்றும் உப்பள ஓவியங்கள் போன்ற கட்டுரைககளின் வாசிப்பு பரவசத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. காரணம் எழுத்தாளர் அவர்கள் பார்த்த/கண்ட/உணர்ந்த/உள் வாங்கிய நிலப்பரப்பை நம்மை காலம் இயந்திரம் கொண்டு அவரோடு மறைவாக நாமும் பயணிக்கும் மாதிரியான உணர்வை தமது எழுத்துகளில் தெறித்தது மட்டுமல்லாமல் புகைப்படங்களாகவும் நமக்காக இந்த புத்தகங்களில் பதிக்கப் பட்டிருக்கிறது ஒரு தனிச் சிறப்பு. இந்த கலவையான நிபுணத்துவம் பெற்ற கலைஞர்களைப் பார்ப்பது அறிது.

(ஓவியம், ஒளிப்பட கலை, குறும்பட மற்றும் ஆவணப்பட இயக்கம், வாசிப்பு, பள்ளிக்கூட ஆசிரியர் என்று இந்த கலவை)
ஒரு படைப்பானது என்ன செய்ய கூடும் என்பது சில சமயம், அந்த படைப்பாளிக்கும் படைப்புக்கும் கூட எட்டமால் காலமும் கால த்தைக் கடந்த வாசிப்பும் அதன் மூலப் பொருட்களை மீட்டெடுத்த வண்ணம் இருக்கும். இந்த புத்தகமும் அப்படித்தான்.
இந்த புத்தகத்தை ஒரே மூச்சாக வாசிக்க முடியவில்லை. காரணம் நடுவே புத்தகத்தை வைத்து என் நினைவு அடுக்களில் இருந்து சில நினைவுகளை அசை போட வைத்தது.

அமரம் தெருக்கூத்து நிகழ்வை இவர் பகிர்ந்த தருணத்தில் என் நினைவுகள் வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் வரும் தெருக்கூத்து காட்சிகள் வரை சென்றது. அதுவும் தர்மபுரி மாவட்டத்தில் நடப்பது தான். என்ன ஒரு ஒற்றுமை?

பின்பு இவரது முதல் Post wedding shoot அனுபவம் கட்டுரையில் வரும் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் ஏற்கனவே இவரது முகப்புத்தகத்தில் பார்த்திருந்தாலும், கருப்பு வெள்ளையில் வண்ணமில்லாமல் கூட உயிர்ப்போடு உள்ளதை கண்டு பிரம்மிப்பாக இருந்தது. முகப்புத்தகத்தில் இவர் பகிர்ந்த வண்ணப் படங்கள் பாலுமகேந்திராவின் வண்ணப் படங்கள் போன்று அழகியல் தன்மையோடு இயற்கை ஒளியில் இருந்தது.
பக்கங்களில் உள்ள கருப்பு வெள்ளை படங்கள் வண்ணப் படங்களுக்கு நிகராக நின்று பேசுகிறது.

புகைப்படம் இவ்வளவு வசியமாக இருக்க , இந்த புகைப்படத்திற்கு பின் இருக்கும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் வாசிப்பதற்கு அதனினும் இனிமை . இந்த ஒளிப்படம் தந்த நம்பிக்கை 30வருடமாக தொடர்ந்தது மனித உறவுகளுக்கான சான்றாக நம்மிடம் விரிகிறது.
இந்த புத்தகத்தை வாசிக்கும் போது நான் 20 வருடங்களுக்கு முன்பு film கேமராவில் எடுத்த ஒளிப்படங்களை மீட்டெடுத்து அதை நண்பர்களுக்கு அவ்வப்போது பகிர்ந்து அவர்களின் மகிழ்ச்சியில் நானும் மகிழச்சி அடைந்தேன்.

சினிமா முயற்சி என்ற கட்டுரையை மிக கவனமாக சினிமாத் துறையில் இருக்கும் யதார்த்தத்தை பதிவு செய்து அதே சமயம், இந்த துறையில் கால் பதிக்கவிருக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி முடித்திருப்பது உசிதம்.

அறியப்பட வேண்டிய ஆளுமைகள் புத்தகத்தில் கலைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் பங்களிப்பு என்று எந்த கட்டுரையிலும் தன்னிலையை புகுத்தாமல் கவனமாக கையாண்ட எழுத்தாளர் இங்கு பல இடங்களில் தன் ரசனையின் வெளிப்பாட்டை லாவகமாய் அழகுறப் பதிவு செய்திருக்கிறார். பச்சை நிறம் கேள்விப்பட்டிருக்கிறேன், இளம்பச்சை, கரும்பச்சை, ஏன்? கிளிப்பச்சை கூட கேள்விப்பட்டுள்ளேன், ஒளியின் மாயாஜாலத்தில் மதி மயங்கி தென் படும் பச்சைக்கு இவர் சூட்டிய பெயர் “மாயாஜாலப் பச்சை”

Hyperlink போன்ற ஒரு வடிவத்தில் இவரின் 6ஆவது கட்டுரையில் பாலுமகேந்திராவிடம் இவர் ஒளிப்படங்களை காண்பிப்பது போன்று ஒரு ஒளிப்படம் இருக்கும். இதற்கான விவரங்கள் பின்பு 11ஆவது கட்டுரையில் காணக்கிடைக்கும். இதிலும் ரசனையின் வெளிப்பாடுகள் தெறிப்பதை பார்க்கலாம். பாலுமகேந்திராவின் மௌன மொட்டு பாராட்டுகளாக பூத்தது என்ற வார்த்தை சரங்கள் ஏதோ போகிற போக்கில் வந்ததாக தெரியவில்லை. அழகியலைத் தாண்டி உலக படைப்புகளின் உட்கூறுகளை உணர்ந்தால் மட்டுமே இந்த வெளிப்பாடு சாத்தியம்.

ஒரு பக்கக் கதையின் மறுபக்கம்:
———————————————
“அவன் ஓவிய கல்லுரிக்குச் செல்ல விரும்பினான். தடையேதும் சொல்லவில்லை” என்று மு.நடேசன் அவர்கள் தன் மகன் செல்வனின் கல்லூரியைப் பற்றி சுரங்க நகரம் புத்தகத்தில் பதிவு செய்திருப்பார். -> இது தந்தையின் பதிப்பு .

மன வெளிப் பயணங்கள் என்ற கட்டுரையில் “ஓவியங்கள் பயில வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் இல்லை. ஒளிப்பதிவு பயில அனுமதிக்காத காரணத்தால், பாடப்புத்தகத்திலிருந்து தப்பிப்பதற்காக ஓவியம் பயில கும்பகோணம் கல்லூரிக்கு சென்றேன் ” -> மகனின் பதிப்பு.

தந்தையின் பதிப்பை வாசித்துவிட்டு இப்படி ஒரு தந்தையா! என்று சில்லறையை சிதறவிட்ட என்னை “தம்பி நில், இன்னொரு பக்கம் இருக்கின்றது. இதையும் கேளு” என்பது போல் இருந்தது.

தந்தையும் மகனும் ஒரே நிகழ்வின் சொல்லப்படாத பக்கங்களை தன் வரலாற்றில் பதிவு செய்து, அதை என்னை போன்று பித்து பிடித்த வாசகன் வாசித்தால் இதெல்லாம் இணைக்கத் தோன்றும்.

ஏதோ சுவாரஸ்யத்திற்கு ஒரு சோக நிகழ்ச்சியை பயன்படுத்தாமல், சக ஒளிப்பட கலைஞனின் வீழ்ச்சியை பதிவு செய்திருப்பது , ஒரு புகைப்பட கலைஞனுக்கு உடல் நலம் மற்றும் மனோதிடம் இவை இரண்டுமே இன்றியமையாதது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்ததுதான் , வாழ்கின்ற மற்றும் இனி வரும் கலைஞருக்கான செய்தி.

இதை வாசிக்கும் போது இசையமைப்பாளர் R.K.சேகர் (A.R.ரகுமானின் தந்தை) அவர்களின் கதையை 13 வருடத்திற்கு முன் காமினி மத்தாய் அவர்களின் புத்தகத்தில் வாசித்தது நினைவில் வந்தது.

இந்த பாதிப்பால் ரகுமானின் தாய் , தன் மகனுக்கு இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக உடல்நலனில் அக்கறை செலுத்தியிருக்கிறார் என்பதையும் பதிவு செய்திருப்பார் எழுத்தாளர் காமினி.

“Everyone except Sekhar could see that the overtime was taking its toll on his health. He was getting thinner by the day tired, irritable and sickly. Working eighteen or twenty hours a day, he took to drinking as a way to coping with stress and lack of sleep.” – A.R.RAHMAN THE MUSICAL STORM by Kamini Mathai.

கலைஞனுள் கசியும் ஈரம் :
———————————-
வேல்ஸ் நாட்டில் உள்ள கோன்வி அருவியை கானச் சென்று அங்கு அந்த அருவியை ரசித்தபடி நின்ற பொழுது ஒரு ஒளிப்பட கலைஞர் அங்கே ஒரு சிறுவன் அருவியில் தவறி விழுந்து மரணித்ததையொட்டி அவன் நினைவாக ஒரு வாசகத்தை ஸ்தூபத்தில் செதுக்கி இருந்ததைக் கண்டு வருத்தப்பட்டு “sad isn’t it” என்று என் முகத்தைப் பார்த்து சொன்னார். நானும் பதிலுக்கு ஆம் என்று சொன்னேன். அந்த வாசகத்தை நானும் என் மனைவியும் அந்த ஒளிப்பட கலைஞர் வருவதற்கு முன்பே கண்டோம். எங்களுக்கு அது ஒரு கடந்த கால நிகழ்வாகத்தான் இருந்தது.ஒரு வேலை நாம் கல் நெஞ்சக்காரர்களோ? என்றெல்லாம் தோன்றியது.என்றோ மரணித்த சிறுவனுக்காக இன்று வருத்தப்படும் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை. இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

பின் வரும் வாசகங்கள் வெறும் எழுத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு கலை கலைஞனை என்ன செய்யும் என்பதை வெளிப்படுத்தியதுதான் இந்த புத்தகத்தின் உச்சம்.

“ஆரம்ப காலங்களில் எனது படங்கள் முதலில் அழகியல் சார்ந்து இருந்தது. பின்பு அவை சமூகத்தை தன்னுள் இழுத்துக் கொண்டது.”

“கலைகளின் மெய்யியல் வாழ்க்கையின் குறிக்கோளை காண்பிக்க முற்படுகின்றன ”

தோழர் பி.ஆர்.ராவின் அழைப்பின் பேரில் கவின் கலை கல்லூரிக்கு சென்று அங்கு கண்ட சிற்பத்தின் தாக்கம் மற்றும் ஒளிப்படக் கலைஞனும் மனசாட்சியும் என்ற கட்டுரையில் வசந்த் என்கிற ஒளிப்பட கலைஞரின் பங்களிப்பு பற்றிய குறிப்புகள் இந்த புத்தகத்தில் எழுத்தாளர் செல்வன் அவர்கள் தொட்டிருக்கும் இன்னொரு உச்சம்.

சீனு ராமசாமி அவர்கள் இயக்கிய நீர் பறவை திரைப்படத்தில் உப்பள தொழிலாளர்களின் வாழ்க்கையை ஓர் அளவுக்கு பதிவு செய்திருப்பார். எழுத்தாளர் செல்வன் இன்னும் சற்று அருகே சென்று அந்த நிலப்பரப்பையும் அதில் வாழும் தொழிலாளர்களையும் ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்திருக்கிறார்.

காலத்திற்கேற்ப நவீன உலகில் உலவும் ஒளிப்பட கலாச்சாரத்தை துரித உணவோடு ஒப்பிடும் எழுத்தாளர் செல்வன், இந்த கட்டுரை தொகுப்பிலும் அதையே கடைபிடித்திருப்பது போல் இருந்தது. தொடக்கத்தில் உள்ள கட்டுரைகளில் உள்ள அளவுக்கு பக்கங்கள் பின் வரும் கட்டுரைகளில் காண முடியவில்லை. கட்டுரைகளின் நீளம் சுருங்கி இருப்பதை உணர்ந்தேன்.ஆனால் அது வாசிப்பை எந்த விதத்தையும் பாதிக்கவில்லை. காரணம் நாம் அத்தியாயங்களை வேகமாக வாசித்து முடிக்கிறோம் என்ற மன நிறைவைத் தருகிறது. இது தேவையா இல்லையா என்பது விவாதத்திற்குரியது!

கோட்டாக் நிறுவனம் தனது பிலிம் கேமரா உற்பத்தியை நிறுத்துவத்தைக் கண்டு முதலில் வருத்தமடைந்தேன் என்று சொன்ன பாலுமகேந்திரா டிஜிட்டல் கேமராவில் உள்ள குறைப்பாடுகளை அறிவதற்கு எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. அவ்வளவுதான் மற்றபடி ஒளிப்பதிவின் கூறுகள் அப்படியேதான் உள்ளன என்று ஒரு நேர்காணலில் கூறுகிறார். “A Separation” என்ற இரானியன் திரைப்படத்தைக் கண்டு தான் எழுதும் தலைமுறைகள் என்ற திரைக்கதையை மெருகேற்ற உந்துதலாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

எழுத்தாளர் செல்வனும் காலத்திற்கேற்ப நம்மை புதுப்பித்தல் அவசியம் என்று சொல்வதோடு மட்டும் இல்லாமல் செயல் வீரராகவும் இருக்கிறார். கைப்பேசியிலேயே ஒளிப்படம் எடுக்கும் கருவி வரம் மற்றும் சாபம் இரண்டுமே என்கிறார். எங்கள் காலத்தில் எப்படி தெரியுமா?

என்று சொல்வதை விட்டுவிட்டு, காலத்தோடு இசைந்து செல்லும் மனப்பாண்மை இவரின் இளமையான மற்றும் முற்போக்கான கலைஞராக நம் முன் நிறுத்துகிறது.

பெருமிதம் கொள்ளாமல் இந்த செய்தியை நமக்கு அளித்துவிட்டு “போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. வயதும் கொரோனா தொற்று காலத்தையும் கருத்தில் கொண்டு கொஞ்சம் பொறுமையை கடைபிடிக்கலாம். ” என்ற எண்ணங்களோடு கடைசி பக்கத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவரது புகைப்படம் அமைந்துள்ளதை ரசித்தேன்.

“ஒளியால் புது உலகைப் படைப்போம்!” – என்று இறுதியில் வரும் வாசகம் புதிய தொடக்குத்துக்கான உந்துதலை தருவது நிறைவு!

ஜோதிடம் மற்றும் ஓகம் பற்றிய புத்தகத்தை வாசித்து அந்த கலையில் சில காலம் பயணித்து கொண்டிருக்கிறேன் . இந்த புத்தகத்தை வாசித்து பழைய பிலிம் கேமரா வில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை மீட்டு அமைக்கும் பணியில் இருக்கிறேன். இப்படியே ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு செயல் பொருளை என்னுள் விதைத்தால் மீதம் இருக்கின்ற 50 புத்தகங்களை எப்போது வாசிப்பது என்பது தான் புலன் படாமல் உள்ளது.
புரட்சியாளர் சேகுவேரா ஒரு பயணத்தால் ஒரு புரட்சியாளன் ஆனான். அவனது வாழ்க்கை ஒரு நாயகனின் வாழ்க்கையாக முழுமை பெற்றது.
எழுத்தாளர் செல்வன் ஒரு மனிதனின் முழுமையை கலைஞனின் வடிவில் அடைந்திருக்கிறார் என்றே திண்ணமாக சொல்லுவேன்.
காலந்தாழ்ந்த வாசிப்புக்கு மன்னிக்கவும்.

ஒளிப்பட அனுபவங்களை எளிமையாக பகிர்ந்த ஆசிரியர் ந.செல்வன் அவர்களுக்கும் புத்தகத்தை சிறப்பாக பதிப்பித்த உயிர் பதிப்பகத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்.

நாம் இன்று ஆவணப்படுத்தும் ஒவ்வொரு ஆவணமும் எதிர்காலத்துடன் கதைக்கும் காலயந்திரமே. ஆவணப்படுத்துவோம்!
மனிதனின் முழுமையை எந்த மார்க்கத்திலாவது அடைந்துவிடலாம் என்று பகல் கனவு காணும்

-அன்புக்குமரன்

நூல் : ஒளிப்படக்கலையும் கலைஞனும்
ஆசிரியர் : ந.செல்வன்
விலை : ரூ: ₹300
வெளியீடு : உயிர் பதிப்பகம்

ஒளிப்பதிவாளர் நிவாஸ் காரை வீட்டுக்கும், கட்டாந்தரைக்கும், எண்ணெய் வழியும் தலைக்கும், வெற்று கருப்பு உடம்புக்கும் காமிரா வழி உயிர்கொடுத்தார் – அஜயன் பாலா

ஒளிப்பதிவாளர் நிவாஸ் காரை வீட்டுக்கும், கட்டாந்தரைக்கும், எண்ணெய் வழியும் தலைக்கும், வெற்று கருப்பு உடம்புக்கும் காமிரா வழி உயிர்கொடுத்தார் – அஜயன் பாலா

ஒளிப்பதிவாளர் நிவாஸின் மரண செய்தி சற்று முன் நண்பர் சிஜே ராஜ்குமார் பதிவிட்டிருந்தார் . 16 வயதினிலே படத்தின் ஒளிப்பதிவு மூலம் அவர் தமிழ் சினிமா காட்சியியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை துவக்கிவைத்தவர் . அப்படம் மூலம் அவர் நிகழ்த்தியது மிகப்பெரிய…