நிழலில்லாத நினைவுகள்…!!!! கவிதை – ச.சக்தி

நிழலில்லாத நினைவுகள்…!!!! கவிதை – ச.சக்தி




ஒரு குட்டி சுவரில் வண்ணத்துப்பூச்சியை
வரைய ஆரம்பிக்கும்
சிறுவனின் கையில் படிந்திருக்கிறது
எப்பொழுதோ பறந்து போன
பட்டாம்பூச்சியின் சிறகு ,

யாரென்று
தெரியாத ஒருவரின்
அறுந்த செருப்பை
தைத்துக் கொண்டிருக்கும் அப்பாவின் விரல்களின்
இடுக்குகளில் படிந்திருக்கிறது
மூன்று காலங்களான
அவர் நடந்த. அவர் நடக்கிற.
அவர் நடக்கப்
போகிற பாதைகள்,

மணல்
வீடொன்றை
குடிசையின் கீழே கட்டி வைத்து விட்டுத்
தூங்கிக்கொண்டிருக்கும் சிறுமியின் கனவில்
அலை அலையாக
வந்து போகின்றது கடலில் சத்தம்,

மரத்திலிருந்து
பழுத்து விழுந்த
சருகுகளிடம் பேசிக்கொண்டிருக்கும்
மணல் மேடுகளும்
சிறிது
நேரத்திலே
நனைந்துவிடுகிறது
எப்பொழுதோ
விழுந்த மழையின் நீர் துளி,

கூரையின்
கீழே அமர்ந்து
மழையோடு பேசிக்கொண்டிருக்கும்
மழலையின் மனதில் பூத்துக்குலுங்குகிறது
சிரிப்பு அலைகள்,

தனக்குப்
பிடிக்காத
அப்பாவுக்காக
பிடிக்குமென்று கைக் கடிகாரம் வாங்கிக்கொண்டு

வரும் மகனின்
சிந்தனை முழுவதும்
முட்களாக
குத்திக்கொண்டு நிற்கிறது அப்பாவிடம் கடிகாரம்
கேட்டு அழுது
புலம்பிய பழைய நினைவலைகள்,

வெகு தூரமாக
பேருந்தில் பயணமாகும் பொழுதெல்லாம்
பயணச்சீட்டு வாங்காமலே நிழலாகவே
பயணத்தை தொடங்குகிறது எப்பொழுதோ
அப்பாவோடு பயணமாகிற
பழைய நினைவு,

கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்



கவிதை 1

சருகுகள் போல குவிந்திருக்கும் வார்த்தைகளின் மீது
கால்கள் மிதித்து செல்லும் போது
ஒலிக்கும் சரக் சரக் சப்தம்

குழாயிலிருந்து சொட்டும்
நீர்த்துளி போல
ஒலி எழுப்பும்
கடிகார முட்களின் சப்தம்

காதருகே வந்து
பூனை போல் குதிக்கும்
இதயத்தின் லப் டப் சப்தம்

ஒரு இரவுப் பூச்சியை பிடித்துண்ண
தாடை அசைக்கும்
வாசற் கவுளியின் சப்தம்

பின்னிரவை சிறகிலிருந்து உதறும்
தெருச் சேவலின் சப்தம்
யாவும் தேய்ந்து தேய்ந்து
என்னில் விழுந்து ஓய்ந்து போக
சொற்களற்ற தேசத்தில் வசிக்கும்
அதிசயப் பிராணி நான்

கவிதை 2

சிலிர்ப்புகள்
என்னைக் கண்டதும்
கலங்கிச் சேறாகும்
உன் கண்களுக்குள்
பரிதவிக்கின்றன
சுவாசமற்ற மீன்கள்

வார்த்தைகளற்ற மெளனத்தில்
நிகழும்
ஒரு சந்திப்பு
எத்தனை அதிர்வுகளை
எழுப்பி விடுகிறது
ஒரு உறைந்திருக்கும் மனதில்

துளியாகக் கடந்து போகும் ஒரு கணத்தை

கடலாக விரிந்து
பேரலைகளை எழுப்பிவிட்டுப்
போய் விடுகிறது
விதியின் மாயக்கரமொன்று

எதுவுமே தோன்றாமல்
சிலையாகி விடும் ஒரு கணம்
அத்தனை சிலிர்ப்புகளை
உண்டாக்கி விடுகிறது
ஒரு ஊமை ஆன்மாவில்

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்

Matram Kavithai By Dharma Singh மாற்றம் கவிதை - ஐ. தர்மசிங்

மாற்றம் கவிதை – ஐ. தர்மசிங்

விடியலை
கூவி எழுப்பியது சேவல்
கடிகாரமாய்
நேரம் காட்டியது சூரியன்

விரல் கொண்டு
மணலைக் கிளறி
எழுதிப் படித்தார்கள்

ஓலைச்சுவடிகளில்
வரலாற்றை
கண்டு கொண்டார்கள்
வியர்வைகளை
காசாக்கும்
வித்தைகளைக் கற்றார்கள்

ஏர்முனைகளால்
தேசத்தை
நிமிரச் செய்தார்கள்

கொண்டாடும் விழாக்களால்
ஒற்றுமையை
வளர்த்தார்கள்
பொங்கி வழியும்
பானைகளால்
மனம் நிறைந்தார்கள்

வரம்பின்றி
பெற்ற பிள்ளைகளை
இறைவனின் கொடைகளாகக்
கொண்டாடினார்கள்

குடிசை வீட்டிலும்
குறட்டையொலியொடு
தூங்கினார்கள்

கதைச் சொல்ல
நரைத்த தலையோடு பாட்டி
குழப்பத்திலிருந்து விடுபட
உதாரணங்களோடு தாத்தா

தோளில் சுமந்து செல்ல
தடந்தோள்களோடு
தாய்மாமன்

சுகமாக தலைகோத
அத்தையிடம்
அன்பான விரல்கள்

கட்டிப் பிடித்து முத்தம் தர
கருணை நிரம்பிய சித்தி
கைப்பிடித்து அழைத்துச் செல்ல
புன்னகையுடன் சித்தப்பா

காலங்காலமாக முற்றத்தில்
நினைவுகளைச் சுமக்கும்
கயிற்றுக் கட்டில்

கொல்லைப்புற தோட்டத்தில்
பட்டாம்பூச்சிகள் கொஞ்சி விளையாடும்
பசுமையான தோட்டம்

தொழுவத்தில்
கேட்டுக் கொண்டிருக்கும்
” ம்மா ” எனும் சப்தங்கள்
” ம்மே” எனும் சப்தங்கள்

வாசலில் விட்டு விட்டு ஒலிக்கும்
” லொள்…லொள்…” சப்தங்கள்
” மியாவ்… மியாவ்…” சப்தங்கள்

வெள்ளை மனங்களோடு
கலகலப்பாக இருந்தது
கூட்டுக் குடும்பமாய்
அந்தக் காலம்…

ஆரவாரங்கள் குறைந்து
அமைதியாக இருக்கிறது
இன்றைய டிஜிட்டல் உலகம்
ஆளுக்கொரு அலைபேசியோடு…

கடிகாரம் – சு.ரசிகா

கடிகாரம் – சு.ரசிகா

கடிகாரம் முதலாளி இல்லா முழுநேர உழைப்பாளி நீ முடிவுரை இல்லா முழு உரை நீ விலைமதிப்பில்லா விடியலும் நீ பகைவரும் இல்லா பங்காளியும் நீ பகட்டு இல்லா பதவியும் நீ பகலும் உன் வசம் இரவும் உன் வசம் இன்னலும் உன்…