’முன் யாமத்தில்’ மொழி பெயர்ப்பு கவிதை – தங்கேஸ்

’முன் யாமத்தில்’ மொழி பெயர்ப்பு கவிதை – தங்கேஸ்




முன் யாமத்தில்
*******************
முன்யாமப் பொழுதில் கசியும் பனியும்
விசும்பும் மேகங்களும்
இந்த வீணையை மீட்டி
கொஞ்சம் அதிரவைக்கின்றன

மரவட்டையாக சுருண்டு கிடக்கும் காலம்
பதறி எழுந்து அறையை விட்டு
ஊர்ந்து செல்கிறது

சின்னஞ் சிறு மூங்கில் குச்சியால்
அதன் முதுகை கீறிக்கீறி
காயப்படுத்தியது போதும்

நம் பொருட்டு யாதும் எவரும்
காயப்படாமலிருக்க
இந்த இரவை எடுத்து நீ விழுங்கி விடு

நான் காத்திருக்கும்
சுவர்பல்லியின் முன்பு
சின்னஞ்சிறு பூச்சியாக நகர்கிறேன்

The melting snow and shivering clouds
both make this Veena vibrating
a little In the mid night

The Time that lying down like woodworm had woken up panically and crawling out of the room slowly

it is enough for you
to scratch and injure its back
with a small bamboo stick

To avoid any one not being hurt by us
Please you take this night and swallow it fully

I move like a tiny insect before the wall lizard waiting there for long time

– தங்கேஸ்

நூல் அறிமுகம் : கோவை சசிகுமாரின் “இலையுதிர் நிர்வாணங்கள்” கவிதை – ஜெயஸ்ரீ

நூல் அறிமுகம் : கோவை சசிகுமாரின் “இலையுதிர் நிர்வாணங்கள்” கவிதை – ஜெயஸ்ரீ




நூல் : இலையுதிர் நிர்வாணங்கள்
ஆசிரியர்: கோவை சசிகுமார்
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கியவட்டம்
பக்கங்கள்:112
விலை: ரூ.120

“இலையுதிர் நிர்வாணங்கள்” கவிஞர் கோவை சசிகுமார் அவர்களின் மூன்றாவது கவிதை நூல்.

நூலிற்கு மணி மகுடமாக கவிஞர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரையோடு அழகாய் துவங்குகிறது.

நூலின் ஒவ்வொரு கவிதைகளும் இயல்பான வார்த்தைகளால் எழுதப்பட்டிருந்தாலும் அவை கவிதையாய் கோர்க்கப்பட்டுள்ள விதம் புது பரிணாமமாய் விளங்குகிறது. முகநூலில் கவிஞர் கோவை சசிக்குமார் அவர்களின் கவிதைகளை வாசித்த எனக்கு இந்த கவிதை தொகுப்பு மிக ஆச்சிரியத்தை அளித்தது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கவிதை நூலினை வைக்க முடியாது அப்படியான கருத்தாழம் நிரப்பப்பட்ட சமூக சிந்தனை துளிகள்.

பொதுவாக கவிஞர்கள் நூலை தாய்க்கோ மனைவிக்கோ அல்லது ஆசான்களுக்கோ சமர்ப்பணம் என்று எழுதுவார்கள் ஆனால் இதில் அப்பாவுக்கு சமர்ப்பணம் என்று நூலின் நாலாவது பக்கமே ‘ஆஹா’ போட வைத்துள்ளது.

இதோ நான் ரசித்து படித்த சில வரிகள்.

“பத்தாண்டுகளுக்கு முன்னால்
நிரம்பி வழிந்த கிணறு
நீர்வற்றி வெளியேற முடியாத
தவளைகளின்
கொலைக்களமாகின்றது”

கிணற்று நீரில் நிலாவை பார்த்து தான் கவிதை வருமென்று இல்லை. தவளைகளின் கொலைக்களமாக வறண்ட கிணறின் காட்சியினை கொண்டுவந்து விட்டார் கவிஞர்.

“மழை மேகம்
தக்கவைத்துக் கொள்ள
தவறிய வானம்”

வானம் தவறியதா அல்லது நாம் தவறவிட வாய்ப்பு அளித்தோமா எந்த சிந்தனையை தூண்டும் வரிகள்.

“எல்லாம் ஒரு வியாபாரம் தான்
வியாபாரியின் வீட்டில் மட்டும்
ஆர்கானிக் உணவுகள்
பரிமாறப்படுகின்றன”

வீட்டை பெருக்கி குப்பை ரோட்டில் கொட்டுவதை போலவே சுயநலம் மிகுந்த வியாபார உலகத்தை நான்கு வரிகளில் கூறிவிட்டார்.

“காலச்சூழ்நிலையின் பருவமென
இலைகளை உதிர்த்து
தண்ணீருக்காக
தானமாக்கி நிற்கையில்

ரசிப்பதற்கென எழும்
சூரியனை கண்டு
வெட்கப்படுவதேயில்லை
விரக்தியில் நிற்கும்
இலையுதிர் நிர்வாணங்கள்”

நிர்வாணம் என்பது ஆடையற்ற மனித உடலுக்கானது மட்டுமல்ல இலைகளை இழந்திட்ட மரத்திற்கும் ஆனது தான். பருவச்சூழல் மாற்றத்திற்கு நாமும் ஒரு காரணம் என்பதை சொல்லாமல் சொல்லும் வரிகள்.

நம்மை சுற்றி சமூகத்தில் நிலவும் அவலங்களை பார்த்து கடந்து விட்டு செல்வது தான் தற்போதைய பரபரப்பான சூழல் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை. அதிலும் ஒரு தனித்துவத்தோடு கவித்துவம் நிரப்பி வார்த்தைகளோடு கோர்க்கும் பொழுது பெரும் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு தூண்டுகோலாக அமைந்து விடுகிறது. அப்படியான ஒரு கருத்தாழமிக்க கவிதை நூல் “இலையுதிர் நிர்வாணங்கள்” என்பதில் ஐயமில்லை. சிறப்பானதொரு படைப்பிற்கு கவிஞர் கோவை சசிகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளும் அன்பும்.

நன்றி.
ஜெயஸ்ரீ

Best Regards,

Jayasree
jshiraju89@gmail.com

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்




பறவைகள்
**************
மேகத்தை விழிகளில் சிறைபிடித்தவன்
இப்போது மேகமாகிவிட்டான்
தன்னந்தனியாக வானத்தில் பறக்கும் பறவைக்கு
சிறிது இளைப்பாறுதல் தர வேண்டும்
நீ சிறகின் வடிவில் குடையாக மாறிவிடு மேகமே

யார் கண்டது விண்ணிலிருந்து மகிழ்ச்சியின் வித்துக்களை தூவ
அது வெகுதூரம்
பறந்து வந்திருக்கலாம்

கடவுளர்கள் மறந்து போன புவியின் பொருட்டு
சாபவிமோசனம் தருபவை
என்றுமே பறவைகள் தானே

கவிதையைக் கொண்டாடுவது
**************************************
கவிதை போலத் தான் இதுவும்
சாத்தான் குடியேறுவதற்குள்
நன்றாக இருக்கிறதென்று சொல்லிவிடுங்கள்

சிறிது நேரம் அவகாசம் கொடுத்தால் கூட
தலையிலிருந்து ஒற்றை மயிரைப் பிடுங்கி
அதற்கு ஈடாக இந்தக் கவிதையை
நேர் செய்ய தயங்கமாட்டீர்கள்

மலரும் நினைவில்…
கொம்பு முளைத்த ஒனிடோ
பூதம் வேறு
வந்து முட்டித் தள்ளி விட்டுப் போய்விடும். உங்களை

தொண்டை வரையிலும் வந்து விட்ட பாராட்டுக்களை
ஏவாள் வந்து அழுத்திப் பிடிக்க
அது அங்கேயே நின்று ஆதாம் ஆப்பிளாக மாறிவிடும்

எதிர்பாராத நொடியில் விழுந்த
மின்னல் வெட்டில்
‘காணக் கிடைத்த சுயதரிசனத்தில்
மமதையின் மண் விழுந்து மூடிப்போக
போன ஜென்மத்து ஞாபகமாய்
போய் விடும் ரசனை

வாய்ப்பு கிடைக்கும் போதே
இந்தக் கவிதையைப் பார்த்துச் சொல்லிவிடுங்கள்
அற்பப். பதரே
மண்புழு போல நெளியும்
உன்னைக் கொத்த

இப்பொழுதே ஒரு கவிதை எழுதிப் போடுகிறேன் என்று.

சாதி ஒழிய
***************
என் சாதியின் பெயரை என் வீட்டு நாய் குட்டிக்கும் சூட்டியிருக்கிறேன்
புளகாங்கிதத்தில் வால் ஒரு அடி நீள
பாரபட்சம் பாராமல் யாரையும் கண்டபடிக் குரைத்து வைக்கும்

நாய் தான் என்றில்லை
எங்கள் வீட்டிற்கு வந்து போகும்
எலி பூனை கரப்பான் பூச்சி கட்டெறும்பு
யாவும் கொஞ்சம் சாதியை ஈஷிக்கொண்டுதான் நகர முடியும்

சொன்னால் நம்ப மாட்டீர்கள்
ஈராயிரம் வருடங்களுக்கும் முன்பே
நிலவை கண்டு பிடித்ததும்
சூரியனுக்கு ஆதவன் என்று பெயர் சூட்டியதும்
நதிகளை கடலோடு கலக்கவிட்டதும்
எங்கள் சாதிக்காரர்கள் தான்
அதாவது கடைசியில் ர்…என்று முடியும்
அடைமொழி சொன்னால்
இரத்தம் துடிக்கத் துடிக்க

இருக்கட்டும்
தேர் நிலைக்கு வர வேண்டுமென்றால்
நாங்கள் தான் வடம் பிடிக்க வேண்டும்
சப்பரம் என்றால் நாங்கள் தான் கட்டை சுமக்க வேண்டும்
எங்கள் தோள் மீது நிற்கும்
சாமிக்கும் ஆசாமிக்கும்
வலித்தாலும்
எங்களுக்கு வலிக்காது
நாங்கள் நிற்பதே
அடுத்தவன் தோள் மீது தானே

நாங்கள் ஆரியத்தை ஒழிப்போம்
திராவிடத்தை வளர்ப்போம்
( இந்த முறை நீலம் கருப்பு பதிப்பகங்களில் நல்ல விற்பனையாம்
ஒரு முறையும் அங்கு சென்றதில்லை)

திராவிடப் பாசத்தில்
தலைவர் சொன்னது தான்
அதாவது தமிழன் என்றொரு இனம் உண்டு
அதற்குள் சாதிகள்
பல உண்டு

சாதி ஒழிய வேண்டும்
அதில் எங்கள் சாதிக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை

சாதியை ஒழிப்பதற்கு
இந்த முறை புதிய தொரு விதி செய்துள்ளோம்

எங்கள் கிராமத்து தேநீர்க் கடைகளில்

இனி அனைவரும் சரிசமம்
என்றுஎழுதி போட்டாயிற்று

அவர்களுக்கும் கண்ணாடி தம்ளர்களில் தான்
தேநீர் தந்து கொண்டிருக்கிறோம்
என்ன இந்த முறை ஒரு சிறிய மாற்றம்
எங்களுக்கு மட்டும் அங்கே
எவர்சில்வர் தம்ளர்

சாதி ஒழிய வேண்டும்
என்பதில் எங்கள் சாதிக்கு என்றுமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்

Oliyindri Perisai Poem By Adhith Sakthivel ஆதித் சக்திவேலின் ஒலியின்றிப் பேரிசை கவிதை

ஒலியின்றிப் பேரிசை கவிதை – ஆதித் சக்திவேல்




காலம் பரிசளித்த பெட்டியைத்
திறந்து பார்த்தோம் ஆவலாய்
இருள் நிரம்பி வழிந்தது

“நீரைப் போல்
உன் நினைவுகளைத்
தேக்கிக் கொள்வேன் ” என்றாய்
“மேகங்கள் இன்றி வானம் அழும்” என்றேன்

“வசந்தத்தின் ஒளிரும் பச்சை
மேகங்களில் உலவும் சாம்பல்
மலர்களின் அந்தரங்க மகரந்தம்
நிலவின் குளிர்க் கிரணங்கள்

இவை இணைந்து மிதக்கும்
இசைக் கோர்வை ஒன்று உருவாக்கிக்
கடவுச் சொல்லைக் கொடு
பின்னர் பிரியலாம்

உயிரில் கலந்திடும்
இசையின் நேசம்
தீச்சுடராய் அதன் பிரகாசம்
நீ இல்லா பயணத்தில்
ஒளியூட்டும் வழித்துணையாய்
உன் நினைவுகளைக் கால வரிசையில்
கவிழ்த்துக் கொட்டி

சிந்தும் இசைத் துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கும் உன் உயிர்
என் நினைவுகளின் உயிராய்

வெப்பம் உமிழும் மணலாய்
என் பாலையின் பூக்கள் சுடாது
நீ தரும் தீரா இசையின் ஈரமாய்
இதழ்களில் நீ இருக்கும் வரை”
என்றாய் இறுதியில்

ஒலியற்றவற்றை
இசையாக்கக்
கற்றுக் கொடுத்த
உன் புன்னகையை
நீ சொன்னவற்றோடு
கலந்து வார்த்தேன்
உன் உயிரில் வழியும்

அப்பேரிசை
ஆதித் தேன் துளிகளாய்
கடலளவு அன்பை
சுண்டக் காய்ச்சியதில் திரண்ட
நீயே அதன் கடவுச் சொல்
மறப்பினும்
உன் வாசம் சூழ்ந்த
என் கல்லறையை
எளிதில் அடையாளம் கண்டு கொள்வாய்