நாடிய உள்ளம் கவிதை – சக்தி ராணி

நாடிய உள்ளம் கவிதை – சக்தி ராணி




எங்கிருந்தோ…வந்த பறவை…
என் மீதுள்ள
நம்பிக்கையால்…
என் இல்லத்தில் கூடு அமைக்க…

வராத விருந்தினர்…
வருகை புரிந்தது போல்
ஒவ்வொரு நாளும் அதன்
நலம் விசாரித்தே…
அன்பாய்…உறவாட…

சுற்றங்களின் எண்ணிக்கை
அதிகரித்தது போல்…
முட்டையிட்டு…அடைகாக்க

காத்தலின் பயனாய்…
குஞ்சுகளும் ஒவ்வொன்றாய்
புது உலகைக் காண…வெளி வர

ஒவ்வொன்றிற்கும் பெயர்
வைத்தே…அன்போடு உறவாடி
தாய்ப்பறவை ஊட்டும் அழகை…
இமைக்காமல் ரசித்தே…
பொழுதைக் கடத்திட…

வளர்ந்த பறவைகளும்…
சிறகு விரித்த பயனாய்…தன்
வாழ்க்கை தேடிச்சென்றே…
வலசை போக…

கூடும்…நானுமாய்…
காத்திருக்கிறோம்…என்
இல்லம் நாடி வராவிடினும்…
என் உள்ளம் நாடும் என்றே…

சக்தி

சரவிபி ரோசிசந்திராவின் குழந்தைப் பாடல்

சரவிபி ரோசிசந்திராவின் குழந்தைப் பாடல்




ஒரு குழந்தைப் பாடல்
*****************************
ஆகாயத்தில் வசித்த நிலவு
ஆடிப்பாட வந்ததாம்
ஆடிப்பாடி முடித்தப் பின்னே
அசந்து போனதாம்
வீதியெல்லாம் புகைக்காற்று
திணறி மேலே சென்றதாம்
மேகமெல்லாம் அனல்காற்று
தொப்பென்று கீழே விழுந்ததாம்
மயக்கம் தெளிய நட்சத்திரம்
தண்ணீர் கொண்டு வந்ததாம்
மதி கொஞ்சம் மதி தெளிந்து
வானத்திற்குச் சென்றதாம்
புகை நமக்குப் பகையென்று
புரியவில்லை நமக்குத்தான்
புகையிலையாலே நோய்கள் வந்து
இறக்கின்றறோம் எதற்குத்தான்?
நல்ல பழக்கம் கொள்ளுவோம்
நமது உடலைப் பேணுவோம்
உள்ளம் முழுதும் நம்பிக்கை
உண்மைதான் நம் வாடிக்கை.