மோடி-அதானி சாம்ராஜ்ய ஊழல் – சீத்தாராம் யெச்சூரி

மோடி-அதானி சாம்ராஜ்ய ஊழல் – சீத்தாராம் யெச்சூரி




அதானி குழுமம் தன்னுடைய கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை எப்படிக் கட்டி எழுப்பியிருக்கிறது என்பதையும், 2014இல் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் எப்படி கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறி சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. மோடி அரசாங்கம் எப்படி பிபிசி ஆவணப்படமானது “காலனிய மனோபாவத்தின் உற்பத்தி” (“products of a colonial mindset”) என்று முத்திரை குத்தியதோ அதேபோன்று அதானியும், தன்னுடைய கார்ப்பரேட் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டுள்ள விதம் குறித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, “இந்திய தேசத்திற்கு எதிரான தாக்குதல்” என்று கூறிக் கொண்டிருக்கிறார். இவர்களின் தில்லுமுல்லுகள் ஏதாவது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டால் உடனே அதை “இந்தியாவின் மீதான தாக்குதல்” (“attack on the ‘Indian Nation) என்று வகைப்படுத்துகின்றனர். கூட்டுக் களவாணி முதலாளித்துவம்தான் (crony capitalism) இவ்வாறு இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றது என்று இவர்களால் நியாயப்படுத்தப்படுகிறது. மோடி அரசாங்கத்துடன் நெருக்கமாகவுள்ள கூட்டுக் களவாணிகள் நாட்டின் சொத்துக்களை எப்படியெல்லாம் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் நலத் திட்டங்களுக்கு அளித்துவந்த செலவினங்களையெல்லாம் வெட்டிச் சுருக்கி தங்களின் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட மடைமாற்றம் செய்யப்படுவதன் மூலம் தாங்க முடியாத சுமைகளை சாமானிய மக்கள் மீது ஏற்றியிருக்கிறார்கள், எனக் கூறும் அனைவரும் ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்தி முழு அளவிலான எதேச்சாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நடைபெற்றுள்ள வெட்கங்கெட்ட துற்செயல்கள் குறித்து எந்தவிதமான விசாரணையும் தேவையில்லை என்று மோடி அரசு கருதுகிறது. கூட்டுக் களவாணி முதலாளித்துவத்துடன் உள்ள இந்தப் பிணைப்பு எவ்வாறு தகாத வகைகளில் செயல்பட்டிருக்கிறது, பொதுத்துறை நிதி நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்ஐசி ஆகியவற்றிலிருந்து மக்களின் கடின உழைப்பில் சேமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று விசாரணை மேற்கொள்ள, ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைப்பதற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஓர் உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து இந்த முறைகேடுகளை விசாரிக்கவோ மோடி அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தின் தாராள உதவிகள் இக்குழுமத்திற்கு கிடைத்துள்ளன. அரசு நிலங்கள் சொற்ப விலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றால் ஏற்படும் காலநிலை சீற்றங்களை கருத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழல் உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசுசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் சொத்துக்களை இக்குழுமம் வாங்க அரசு உதவி செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களையும், துறைமுகங்களையும் வாங்குவதற்கு அரசின் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிதியங்கள் மூலம் செயல்பட்டது மட்டுமல்லாமல், உள்பேர வர்த்தகம் (Insider trading) ஒரு நிறுவனத்தின் கூருணர்வு மிக்க ரகசியத் தகவல்களை தனது சுயலாபத்திற்காக வெளியிட்டு தவறாக செயல்பட்டு வர்த்தகம் புரிதல்), ‘ரௌண்ட் டிரிப்பிங்’ (round tripping) எனப்படும் சுற்றிவளைத்த வர்த்தகம் (அதாவது, தனது சொத்துக்களின் மூலம் வரும் வருமானத்தை சட்டவிரோத முறையில் ஊதிப்பெரிதாக்கிக் காட்டுவது), சூழ்ச்சி முறையில் பங்குகளை கையாள்வது போன்ற நடவடிக்கைகளில் அதானி குழுமம் ஈடுபட்டபோதிலும், இவற்றை சந்தை ஒழுங்குமுறை அமைப்புகள் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்துள்ளன.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்த பிறகு, அதானியின் சாம்ராஜ்ய மதிப்பானது 200 பில்லியன் டாலர்களிலிருந்து சரிபாதியாகக் குறைந்துள்ளது. அதானி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள்.
இந்தப் பின்னணியில்தான் இவர்களின் கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறிக் கூட்டணி எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும், அது இந்திய அரசு எந்திரத்தை முழுமையாகத் துஷ்பிரயோகம் செய்து கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தை ஊட்டி வளர்த்துக்கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியமாகும். இந்தத் திசை வழியில் ஒரு முயற்சியே இச்சிறு புத்தகமாகும்.

மோடி- அதானி சாம்ராஜ்ய ஊழல் இன் நூல் முன்னுரையில் இருந்து

சீத்தாராம் யெச்சூரி
பொதுச் செயலர் சிபிஐ(எம்)

விலை : ரூ.₹30/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்.. கவிதை – து.பா.பரமேஸ்வரி

என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்.. கவிதை – து.பா.பரமேஸ்வரி




என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்..

ஒருமுகமானோம் ஜனநாயக ஐக்கியத்தில்
முகவரிப் பெற்றோம் ஒற்று சார்நிலையற்ற குடியிருப்பில்

பேரரசுகளின் இறங்கல்
பிரிவினை சாம்ராஜ்யத்தின் சறுக்கல்
ஒழியப் பெற்றோம்…
அன்னியரின் ஆதிக்கத்தில்
ஓய்ந்துப் போனோம்..
சர்வாதிகார அகோரப் பிடியில்..

ஏர் பிடித்த மக்களாட்சி மாண்டு
கையூட்டாய் ஜனித்தது..
கார்பரேட் கலாச்சார ஒன்றிய ஆட்சி..

தலை தூக்கிய எட்டப்பர் எடுபிடி வாதம்
நிர்மூலமாகிய ஜனநாயக தனியுரிமம்..
நிலைகுலைந்தோம்..
நின்ற மேனிக்கே குறுகினோம்..

பின்னலிட்ட பிரிவினை தான் எத்தனை..
மதங் கொண்டு பின்னிய மதத்தீவினை தான் அத்துனை..

சாதிசிடுக்குகளில் சிதைந்துப் போனோம்..
சாமான்ய சமத்துவம் கூட அற்று சரிந்தே கிடக்கோம்..

வேற்றுமையிலும் ஒற்றுமை உண்டோம்..
இன்றோ‌..
ஓர்மையிலும் ஒன்றியத்தில் ஒடுக்கப்பட்டோம்…

எங்கு நோக்கினும் சகோதரம் தழைத்தோங்கியது
இன்றோ..
சகோதரனிடமும் சாணாக்கியம் இழைந்தோடுகிறது…

கொஞ்சிக் குலவிய சாமாண்யர் கூட
விஞ்சி மிஞ்சி மிதந்து
அரசியல் சக்கரத்தின் செக்குருட்டுகளாய் செதுக்கி நிற்கின்றனர்..

பொருள் ஊழி வாதம்
அடிமை சாசனவாதம்
பிரிவு தொற்று வாதம்
மத ஆழிசூழ் வாதம்
ஆதிக்க அரசியல்வாதம்
வாதம் யாவும்
மனிதவாதத்தை முடக்கி
மானுடர் மதியை மசக்கையாக்கி
மக்கிச் செய்தன..

குடியுரிமைக்குக் கூவ
குரல்வளை கருவிப்போயின..
குலப் பெருமை பாராட்ட மனித குலத்தை மசியலாக்கின..

இனப்பெருக்கத்தை புறந்தள்ளி
இனச்சரிவிற்கு இயைந்து போகும் மனிதரானோம்..

எங்கு தொலைத்தோம் நம் குடியை..
எங்கோ தொலைந்தோம் ஆதியறிவை..

து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778
சென்னை.

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களை வீழ்த்திட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி)

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களை வீழ்த்திட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி)




சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்: ச.வீரமணி)

[இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, அக்டோபர் 14-18 தேதிகளில் விஜயவாடாவில் நடைபெற்றது. அக்டோபர் 15 அன்று நடைபெற்ற துவக்கவிழா மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:]

அன்பார்ந்த தோழர்களே!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு இதமான சகோதர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் துவக்க விழா நிகழ்வுகளில் பங்கேற்க என்னை அழைத்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய தினம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக, இடதுசாரிக் கட்சிகளிடையே பரஸ்பரம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டிருப்பதற்காக இதர இடது சாரித் தலைவர்களையும் வாழ்த்துகிறேன்.

தோழர்களே, நண்பர்களே!

ஆந்திர மாநிலத்தின் அரசியல் மையமாக விளங்கும் விஜயவாடாவில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். இந்த மாநகரமானது பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர நடவடிக்கைகளில் மையமாக இருந்திருக்கிறது. அது இன்றளவும் தொடர்கிறது. நம் நாட்டில் நடைபெற்ற மிகவும் குறிப்பிடத்தக்க மாபெரும் மக்கள் போராட்டம் நடந்த இடங்களில், மிகவும் கொடூரமான நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிரதாக விவசாயிகள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் நடந்த இடங்களில் ஒன்றாக விளங்கும் அரசியல் மையத்தில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். இந்த ஆயுதப் போராட்டம், 18 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று, சுமார் 30 லட்சம் விவசாயிகளை விடுவித்தது. 16 ஆயிரம் சதுர மைல்களில் அமைந்திருந்த மூவாயிரம் கிராமங்களில் பத்து லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகளுக்கு விநியோகித்தது.

இந்த ஆயுதப் போராட்டமும், இதேபோன்று கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் வங்கத்தில் நடைபெற்ற தேபாகா போராட்டம், கேரளாவில் நடைபெற்ற புன்னப்பரா-வயலார் போராட்டம், மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற ஓர்லி பழங்குடியினர் போராட்டம், அஸ்ஸாமில் சுர்மா பள்ளத்தாக்கில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள்தான் நாட்டிலிருந்த ஜமீன்தாரி அமைப்புமுறை ஒழிப்பு, பல்வேறு நிலச்சீர்திருத்தங்களை நாட்டின் மையத்திற்குக் கொண்டு வந்தது. இவ்வாறு கம்யூனிஸ்ட் இயக்கம் நடைபெற்ற பகுதிகள் அனைத்திலும் ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிரான போராட்டங்கள் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் இம்மாநாடு நடைபெறுவது கம்யூனிச செல்வாக்கை மேலும் வளர்ப்பதற்கும், இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கும் உதவிடும் என நான் நம்புகிறேன்.

தோழர்களே! நண்பர்களே!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, சுதந்திர இந்தியாவும் நம் மக்களும் அனைத்துவிதத்திலும் நெருக்கடிக்கு உள்ளாகி மிகப்பெரிய அளவில் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற நிலையில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பாஜக அரசாங்கம் பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலை மிகவும் வெறித்தனமாகப் பின்பற்றிக்கொண்டிருக்கிறது.  மதச் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களைக் குறிவைத்து, தன்னுடைய நச்சு வெறுப்புப் பிரச்சாரத்தையும் வன்முறை வெறியாட்டங்களையும் வெறித்தனமான முறையில் மேற்கொண்டு வருகிறது. இத்துடன் இந்தியக் குடியரசின் இன்றைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைத் தங்களின் சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதேசமயத்தில் பாஜக அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தங்களை, மதவெறி-கார்ப்பரேட் கள்ளப்பிணைப்பின் மூலமாக வலுப்படுத்தி, தன்னுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து நாட்டின் சொத்துக்களை சூறையாடிக்கொண்டிருக்கிறது, அரசியலில் லஞ்ச ஊழலை சட்டபூர்வமாக்கி இருக்கிறது. ஜனநாயக உரிமைகளையும் குடிமை உரிமைகளையும் எதேச்சாதிகாரமுறையில் முழுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

நண்பர்களே! தோழர்களே!

இந்தியக் குடியரசின் குணாம்சத்தை மாற்றுவதற்காக திட்டமிட்ட முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி அமைப்புமுறை, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகிய நான்கு அடிப்படைத் தூண்களும் இவர்களின் ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மிகவும் வெறித்தனமான முறையில் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார இறையாண்மையையே ஒழித்துக்கட்டும் விதத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் முயற்சிகள் எல்லையில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகளும் வாரிவழங்கப்பட்டு வருகின்றன.

அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கொள்கைகள் மீது கடும் தாக்குதல்கள். இவை அனைத்தும் மோடி அரசாங்கம், இந்தியாவை ஓர் இந்துத்துவா நாடாக மாற்றுவதற்காக மேற்கொண்டுள்ள எதார்த்த நடவடிக்கைகளின் சமிக்ஞைகளாகும்.

ஒன்றிய மோடி அரசாங்கமும், மாநிலங்களை ஆளும் பல்வேறு பாஜக அரசாங்கங்களும் மதவெறித் தீயை விசிறிவிடும் வேலைகளை நோக்கமாகக் கொண்டு சட்டங்களை இயற்றி இருக்கின்றன. இந்தச் சட்டங்கள் அப்பாவி சிறுபான்மையினரைக் குறிவைத்துப் பிரயோகிக்கப்படுகின்றன. அவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத்துரோகக் குற்றப்பிரிவு, தேசியப் பாதுகாப்புச் சட்டம் முதலானவை வகைதொகையின்றி பயன்படுத்தப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவுகள் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமல்ல, தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக்கூறும் இதழாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு எதிராகவும் ஏவப்படுகின்றன. தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறப்படுவதே, தேசத்துரோகம் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு கல்வி, அரசியல், சமூகம், கலாச்சாரம் மற்றும் நிதி போன்று பல முனைகளிலும் கூட்டாட்சி அமைப்புமுறையின்கீழ் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதைப் பார்த்தோம்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் செயல்பாடுகள் பாஜக-வின் அரசியல் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதையும் பார்க்கிறோம். அரசமைப்புச்சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவையும் பாஜக ஆட்சியாளர்களால் அரித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும், அதிலும் குறிப்பாக அமலாக்கத் துறையும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து, ஆளும் கட்சியின் ஓர் அரசியல் அங்கமாகவே செயல்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஜோடனை செய்யப்பட்ட செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆட்சியாளர்களின் இந்துத்துவா மதவெறி சித்தாந்தம் அறிவியலுக்குப் புறம்பானது, வரலாற்றுக்குப் புறம்பானது, பகுத்தறிவற்றதாகும். இந்து புராணங்களின் பத்தாம்பசலித்தனமான சிந்தனைகளையும், கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளையும் உண்மையான வரலாறு எனக் கூறி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

தோழர்களே! நண்பர்களே!

மோடி அரசாங்கமானது இந்தியா காலங்காலமாகப் பின்பற்றிவந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. இந்தியா இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக தன்னைத் தரம் தாழ்த்திக்கொண்டுவிட்டது. இஸ்ரேலுடன் போர்த்தந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் நாம் காலங்காலமாக பாலஸ்தீன போராட்டத்திற்கு அளித்து வந்த ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா பிணைப்பு ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் இந்தியா, அமெரிக்காவுடன் தன் ராணுவ ஒப்பந்தங்களைக் கெட்டிப்படுத்தி இருக்கிறது. சீனாவைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா-இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணியை (QUAD alliance) ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தோழர்களே! நண்பர்களே!

அரசாங்கம், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவிட்டோம் என்று என்னதான் தம்பட்டம் அடித்தபோதிலும், நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக அதலபாதாள நிலைமைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றைக் கையாள முடியாத கையாலாகத்தனத்தின் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. வேலையின்மை மிகவும் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. அதிகரித்துவரும் பணவீக்கம் கோடிக்கணக்கான மக்களை வறுமை மற்றும் பசி-பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளும், அதிகரித்துவரும் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளும், மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் மக்களின் போராட்டங்கள் உக்கிரமடைந்திருக்கின்றன.

குடியுரிமைத் திருத்தத் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள், குறிப்பாக பெண்களும் இளைஞர்களும் பெரும் திரளாக அணிதிரண்டதைப் பார்த்தோம்.

ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், மிகவும் முரட்டுத்தனத்துடன் இருந்துவந்த மோடி அரசாங்கத்தை,  படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்தது. மத்தியத் தொழிற்சங்கங்களும் தொழிலாளர் சட்டங்களைத் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதற்கு எதிராக அகில இந்திய வேலை நிறுத்தங்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றன. சமீபத்தில் அவர்கள் மார்ச் 28-29 தேதிகளில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றது. சமீப காலங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நடத்திடும் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெற்றி பெற்று வருகின்றன.

மக்கள் போராட்டங்களை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றிட இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும். அதன் அடிப்படையில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியுடன் ஒருங்கிணைத்திட வேண்டும்.

அதே சமயத்தில் இந்துத்துவா மதவெறியர்களின் தாக்குதல்களைத் தனிமைப்படுத்தி, முறியடித்திட மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்ட வேண்டியதும் அவசியமாகும்.

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், தன்னுடைய மாற்று மக்கள் ஆதரவுக் கொள்கைகள் மூலமாக மக்களின் மத்தியில் நல்லாதரவைப் பெற்று, கேரளாவின் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அதன் சாதனைகள் காரணமாக கேரளம், நாட்டிலேயே மனிதவள வளர்ச்சி அட்டவணையில் உயர்ந்த இடத்தைப் பதிவு செய்திருக்கிறது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்திட ஆர்எஸ்எஸ்-உம், ஒன்றிய அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தவிடுபொடியாயின.   இடதுசாரி சக்திகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு இவர்களின் முயற்சிகளை முறியடித்திட வேண்டும்.

இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சக்திகளும் இணைந்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும், இந்திய மக்களின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம் சத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காக முன்னேறிச் செல்வதற்கும்,  நாட்டு மக்களை அணிதிரட்டுவதன் மூலம் இந்தக் கடமைகளை நிறைவேற்றிட முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கத்தை வீழ்த்திடுவோம்!

இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தி, ஒருங்கிணைத்திடுவோம்!

மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டங்களில் இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒருங்கிணைத்திடுவோம்!

இந்துத்துவா மதவெறிக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை விரிவான அளவில் அணிதிரட்டிடுவோம்!

மார்க்சிசம்-லெனினிசம் நீடூழி வாழ்க!

பாஜக வின் ச.ம.உ. சந்தை கட்டுரை – அ.பாக்கியம்

பாஜக வின் ச.ம.உ. சந்தை கட்டுரை – அ.பாக்கியம்




சந்தை மடம் ஆளுநர் மாளிகை:

சரக்குகளின் வகைகளுக்கு ஏற்ற முறையில் பல சந்தைகள் உள்ளது.
அப்படி ஒரு சந்தையாக பாஜக ச.ம.உ. களை வாங்க ஒரு சந்தையை உருவாக்கி உள்ளது.

மக்களிடம் வசூலிக்கும் வரிகளை எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்து முதலாளிகள் மூலம் பணத்தைப் பெற்று ச.ம.உ.சந்தைக்கு பல்லாயிரம் கோடி முதலீடு செய்து வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு 277 ச.ம.உ. களை வாங்கி உள்ளார்கள்.

கடந்த சில ஆண்டுகள் மட்டும் 6,300 கோடி ரூபாய் ச.ம. உ. க்களை வாங்குவதற்கு செலவு செய்துள்ளார்கள்.

கர்நாடகாவில், கோவா, மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, குஜராத் என பல மாநிலங்களில் விலை கொடுத்து வாங்கி ஆட்சியைப் பிடித்துள்ளார்கள்.

தெலுங்கானாவில் டி ஆர் எஸ் கட்சியின் ஒருச.ம.உ. விற்கு 100 கோடி ரூபாய் வரை விலை பேசி உள்ளனர்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ச.ம.உ. களை வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசி, அதிக எம்எல்ஏக்களை சந்தைக்கு கொண்டு வந்தால் 75 கோடி ரூபாய் வரை கொடுக்கப்படும் என்று விலை பேசி உள்ளனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி ச.ம.உ. களை வாங்குவதற்கு 800 கோடி வரை பேரம் பேசியுள்ளனர்.

ராஜஸ்தானிலும் ராஜேஷ் பைலட் மூலம் ச.ம.உ. களை வாங்க சந்தைக்கு அழைத்து உள்ளனர் .

இந்தியாவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை இதுவரை ஒரு சிலர் கட்சி மாறுவது கட்சி தாவுவது சில சலுகைகளை வாங்குவது என்ற நிலையை மாற்றி மக்களின் ஆதரவோடு என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனத்தோடு ச.ம.உ. களை வாங்கும் சந்தையை பகிரங்கமாகத் தெரிந்து உள்ளனர்.

இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பான மக்களின் அதிகாரத்தை உடைத்தெரியும் முயற்சியாகும். சந்தை மடமாக ஆளுநர் மாளிகை செயல்படுகிறது.

– அ.பாக்கியம்

செப்டம்பர் பிரச்சாரம் நோக்கி… – தமிழில்: ச.வீரமணி

செப்டம்பர் பிரச்சாரம் நோக்கி… – தமிழில்: ச.வீரமணி




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் மீதும், தனியார் மயம் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின்மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராகவும் மோடி அரசாங்கம் ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் ஏவியுள்ள தாக்குதல்களுக்கு எதிராகவும் நாடு முழுதும் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள அறைகூவல் விட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சாரம் செப்டம்பர் 14 தொடங்கி 24 வரை நடைபெற்று பிரச்சனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லவும், இப்பிரச்சனைகளுக்கு மாற்றுக் கொள்கைகளை மக்கள் மத்தியில் விளக்கிடவும் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின்போது கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் கடைப்பிடித்துவரும் மக்கள் ஆதரவு மாற்றுக் கொள்கைகளும் உயர்த்திப்பிடிக்கப்படும்.

விலைவாசி உயர்வு பிரச்சனை மக்களைப் பாதித்துள்ள மிகவும் கடுமையான ஒரு பிரச்சனையாகும். ஒட்டுமொத்த பணவீக்கம்
(wholesale inflation) தொடர்ந்து 15 விழுக்காடாக வட்டமிட்டுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், சில்லரைப் பணவீக்கமோ (retail inflation) மீண்டும் 7 விழுக்காட்டைத் தொட்டிருப்பதாக, ஆகஸ்டில் வெளியாகியுள்ள விவரங்கள் காட்டுகின்றன. விலைவாசி உயர்வுக்கு மிகவும் பங்களிப்பினைச் செய்யக்கூடிய காரணி என்பது, பல்வேறு செஸ் வரிகள் மற்றும் சர்சார்ஜ் வரிகள் மூலமாக, பெட்ரோலியப் பொருட்கள் மீது ஒன்றிய அரசாங்கம் விதித்துள்ள உயர் அளவிலான வரிகளால் மிகவும் உயர்ந்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளாகும். தற்போது ஒன்றிய அரசாங்கம் பெட்ரோல் மீது லிட்டருக்கு 28 ரூபாயும், டீசலுக்கு 22 ரூபாயும் வசூலித்துக் கொண்டிருக்கிறது. இது, சென்ற ஏப்ரலில் பத்து ரூபாய் செஸ் வரியைக் குறைத்தபின் உள்ள நிலையாகும்.

சென்ற 2021-22 நிதியாண்டின்போது ஒன்றிய அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களின் மீதான செஸ் வரிகள் மூலமாக நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்தது. இவ்வாறு ஒன்றிய அரசாங்கமானது பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிப்பதன் மூலமாக வருவாயை உயர்த்துவதற்கு முக்கிய காரணம், அது தான் சேவகம் செய்யும் கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது போதுமான அளவிற்கு வரிகளை உயர்த்த மறுப்பதேயாகும். இவ்வாறு ஒன்றிய அரசாங்கம், கார்ப்பரேட்டு ஆதரவு கொள்கையைப் பின்பற்றுவதன் காரணமாக, அதிக வருவாய் வேண்டி, சாமானிய மக்களைக் கசக்கிப்பிழிந்து கொண்டிருக்கிறது.

இடைவிடாத விலைவாசி உயர்விலிருந்து மக்கள் நிவாரணம் பெற வேண்டுமானால், அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்கள் மீதான செஸ் வரிகள் மற்றும் சர்சார்ஜ் வரிகளை விலக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பொட்டலம் கட்டப்பட்ட (packaged food articles) ஆட்டா, பால் பொருட்கள் மற்றும் பல உணவுப் பொருள்கள் மீது 5 விழுக்காடு ஜிஎஸ்டி விகிதம் விதித்திருப்பதையும் விலக்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த எட்டாண்டுகளில் மோடி அரசாங்கத்தின் மாபெரும் தோல்வி என்பது அது போதுமான அளவிற்கு வேலைவாய்ப்பினை உருவாக்கத் தவறியதாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது என்ன சொன்னது தெரியுமா? ஒவ்வோராண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று உறுதி அளித்தது. கடும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வேலையின்றி இருப்பது கடுமையாக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் (CMIE-Centre for Monitoring Indian Economy) அறிக்கையின்படி, 20க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதுள்ள இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 42 விழுக்காடு அளவிற்கு இருக்கிறது.

இதுதொடர்பாக உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்பவை, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும், ஒன்றிய அரசாங்கத்தின்கீழ் காலியாகவுள்ள சுமார் 10 லட்சம் வேலைகளை நிரப்பிட வேண்டும் என்பதுமாகும். மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் வேலை கோரும் ஒவ்வொருவருக்கும் வேலை அளித்திட வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரலிலிருந்து ஜூலை வரையிலும் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் வேலை கோரிய 7 கோடியே 26 லட்சம் பேர்களில் 20 விழுக்காட்டினருக்கு, அதாவது 1 கோடியே 47 லட்சம் பேர்களுக்கு வேலை மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2021-22இல் வேலை செய்தவர்களிலும் ஏராளமானவர்களுக்கு அவர்கள் வேலை செய்ததற்கான ஊதியம் இன்னமும் வழங்கப்படாமல் இருக்கிறது. இவற்றை உடனடியாக சரி செய்திட வேண்டும். மேலும் தேவைப்படுவது என்னவெனில் இத்திட்டத்தின் கீழ் வேலை நாட்களையும் அதிகரித்திட வேண்டும், ஊதியத்தையும் அதிகரித்திட வேண்டும். அதே சமயத்தில் இதேபோன்று, தேசிய நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் ஒன்றும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும். இதனை எவ்வளவு விரைவாகச் செய்யமுடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்திட வேண்டும்.

மோடி அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவில் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. 2014க்குப்பின், ஒன்றிய அரசாங்கம் 3.63 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ) விற்றிருக்கிறது. இதனால் ஏராளமானவர்கள் வேலைகளை இழந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் செல்வ வளம் பெற்றிருக்கிறார்கள். இதனை மேலும் விரிவுபடுத்துவதற்காக ஒன்றிய அரசாங்கம் தேசிய பணமாக்கும் திட்டம் (NMP-National Monetisation Pipeline) ஒன்றையும் உருவாக்கி அதன்மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் சொத்துக்களை தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுவிட்டால், மின் விநியோகம் தனியார்மயமாகி, மின் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்திடும்.

பொதுத்துறை நிறுவனங்கள் மீது இவ்வாறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதுடன், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்களும் சேர்ந்துகொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு ‘லேபர் கோடுகள்’ (‘labour codes’) மூலமாக, முதலாளிகள் தொழிலாளர்களை வேலைவாங்கிவிட்டு, (hire and fire) விரட்டி அடித்திடலாம், வேலை நேரத்தை அதிகரித்திடவும் முதலாளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வழிமுறைகள் மாற்றப்பட்டிருக்கின்றன, தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன, நடைமுறையில் இருந்துவந்த தொழிலாளர் நலச் சட்டங்களும், அதன் அமலாக்க எந்திரமும் ஒழித்துக்கட்டப்பட்டிருக்கின்றன.

செப்டம்பர் பிரச்சாரம் தனியார்மயத்தால் ஏற்படும் கேடுகளைக் கூறி மக்களைக் கற்பித்திடும். ஆட்சியாளர்களின் கொள்கைகள் எப்படியெல்லாம் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்திருக்கிறது என்பதைக்கூறி தனியார்மயத்திற்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவாக அவர்களை அணிதிரட்டும்.

மூன்று வேளாண் சட்டங்களையும் விலக்கிக்கொள்வதற்கு இட்டுச்சென்ற வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டத்திற்குப் பின்னர், பல்வேறு வகையான விவசாயப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டரீதியாக நிர்ணயிப்பதற்கான பிரச்சனையும், விவசாயிகளின் அதிகரித்துக்கொண்டிருக்கும் கடன் பிரச்சனையும் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஊதியங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இருப்பது நீடிக்கிறது, அதேபோன்று அவர்களுக்கு வேலை அளிப்பது என்பதும் கணிசமான அளவிற்குக் குறைந்துகொண்டே செல்கிறது.

பிரச்சாரம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீதும் கவனம் செலுத்தும். விவசாயத்திற்கும் கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் அரசின் ஆதரவு அவசியம் என்பது பிரச்சாரத்தின்போது கூறப்படும்.

இந்தப் பிரச்சனைகள் அனைத்துமே மோடி அரசாங்கம் பின்பற்றிவரும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகளேயாகும். மேலும் இது ஜனநாயகத்தின்மீதும், மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் முழு அளவில் தாக்குதலையும் தொடுத்து வருகிறது, முழுமையாக எதேச்சாதிகாரமான முறையில் தன்னுடைய வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளையும், இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலையும் உந்தித்தள்ளுகிறது.

எவ்விதமான குற்ற உணர்வுமின்றி குடிமக்களின் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், இதழாளர்கள் முதலானவர்கள் மிகக் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (‘உபா’ சட்டம்), மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள தேசத்துரோகக் குற்றப்பிரிவுகளைப் பயன்படுத்தி சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். அமலாக்கத் துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள துறைகளின் மூலமாக எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் கீழ் ஆளப்பட்டுவரும் மாநில அரசாங்கங்கள், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்களின் உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற நடைமுறையே இழிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சனைகளை எழுப்பி பேச முடியாத நிலை. அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட அமைப்புகள் அனைத்தையுமே தங்கள் கட்டளைப்படி செயல்படவைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் தோலுரித்துக்காட்டும் வண்ணமும் இவற்றுக்கெதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் வேண்டும் என்கிற முறையில் பிரச்சாரம் கவனம் செலுத்தும்.

உழைக்கும் மக்களின் கோரிக்கைகளையும், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான அறைகூவலையும் முன்வைக்கும் அதே சமயத்தில், கட்சி ஆட்சியாளர்களின் நவீன தாராளமய இந்துத்துவா கொள்கைக்கு மாறாக, மாற்றுக் கொள்கைகளின் கீழான திட்டங்களை முன் வைத்திடும். கேரளாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் எப்படி இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் பொதுக் கல்விமுறை மற்றும் சுகாதார அமைப்புமுறைகளை வலுப்படுத்தி இருக்கிறது, எப்படி கேரளாவில் நாட்டிலுள்ள இதர மாநிலங்களைக் காட்டிலும் பணவீக்க விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது, இதற்கு எப்படி அங்கே செயல்படுத்தப்பட்டுவரும் வலுவான பொது விநியோக முறையும், மாவெலி ஸ்டோர்ஸ் வலைப்பின்னலும் உதவுகின்றன, எப்படி இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களைப் புதுப்பித்து, புத்துயிரூட்டி வெற்றிகரமாகச் செயல்பட வைத்திருக்கிறது, எப்படி கேரளம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் உயர்ந்த அளவில் குறைந்தபட்ச ஊதியம் அளித்துவருகிறது என்பன போன்ற இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கடந்த ஆறு ஆண்டு கால சாதனைகள் மக்கள் மத்தியில் உயர்த்திப்பிடிக்கப்படும்.

செப்டம்பர் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் இந்தத் தருணம் மிகவும் முக்கியமானதாகும். பாஜக-விற்கு எதிராகவும் மோடி அரசாங்கத்திற்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கட்டி எழுப்பு வேண்டிய கட்டாயம் அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்கிட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். சமீபகாலங்களில் நடைபெற்ற ஒன்றுபட்ட போராட்டங்கள் காரணமாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வும் அவசியமாகி இருக்கிறது. சம்யுக்த கிசான் மோர்ச்சாவினால் தலைமை தாங்கப்பட்ட ஒன்றுபட்ட விவசாயிகள் போராட்டமும், மத்தியத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதும் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற ஒன்றுபட்ட போராட்டங்களும் எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட நடவடிக்கையின் அவசியத்திற்குப் பங்களிப்பினைச் செய்திருக்கின்றன.

பாஜகவிற்கு எதிரான விரிவான ஒன்றுபட்ட மேடை வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்குத் தங்களைப் பாதித்துள்ள பிரச்சனைகளின் மீது பல்வேறு மக்கள் பிரிவினரின் போராட்டங்களில் விரிவான ஒற்றுமை ஏற்பட வேண்டியது அவசியம். பிரச்சனைகள் என்று சொல்கிறபோது அவை மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் மட்டுமல்ல. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக விரிவடைந்த ஒன்றுபட்ட மேடைகளை வளர்த்தெடுக்க வேண்டியதும் அவசியம். கட்சியால் சுயேச்சையான முறையில் இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள செப்டம்பர் பிரச்சாரம், பல்வேறு மேடைகளின் மூலம் மக்களின் ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்குப் பங்களிப்பினைச் செய்திடும்.

(செப்டம்பர் 14, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

பச்சைக்கொடிக்குள்ளே  ஒரு சிவப்பு வண்ணம்…!!! கவிதை – ச.சக்தி

பச்சைக்கொடிக்குள்ளே ஒரு சிவப்பு வண்ணம்…!!! கவிதை – ச.சக்தி




தோளில்
கிடந்த பச்சைத் துண்டு
மரத்தில்
தொங்கிக்கொண்டிருந்தது
மீத்தேன்
பறவையொன்று
தூக்கிக்கொண்டு போன
கோழிக்குஞ்சுகளான விவசாயிகள் ,

பயிரிடப்பட்ட
நிலம் முழுவதும்
செழிப்பாக வளர்ந்திருந்தது
இறந்து போன
விவசாயிகளின் கல்லறைகள் ,

மண்வெட்டியும்
கடப்பாறையும்
ஓய்வில்லாமல் குழிகளைப்
பறித்துக்
கொண்டிருந்தன
ஆறடி விவசாய
மரமொன்றைப் புதைப்பதற்காக ,

நிலத்தில்
தூவிய உரத்தில் நஞ்சு
கலந்திருந்தது
தொண்டை அடைத்து விக்கி
செத்துக்கொண்டிருந்தார்
விவசாயி,

அமோக
விளைச்சலை
ஏற்றுமதி செய்து
கொண்டிருந்தார் விவசாயி
கழுத்தளவு வளர்ந்திருந்தது
வட்டியும் கடனும் ,

விவசாயக் கிணறுகளில்

நீர் வழிந்து வெளியேறி
கொண்டிருந்தது
கார்ப்பரேட் காக்கைகள்
போட்டுக் கொண்டிருந்த
கற்களாக விவசாயிகளின் பிணங்கள் ,

மாடுகள்
உழுத வயலில்
கூட்டம் கூட்டமாக
கழுகுகளின் வருகை
விவசாயின் பிணங்களாக மண்புழுக்கள் ,

சுடுகாட்டுக் களத்தில்
அடுக்கி வைக்கப்பட்ட
நெல் மூட்டைகளாக
விவசாயிகளின் பிணங்கள்
தூரத்தில் தெரிகின்றன
வட்டியும் தகனமேடையும் ,

வற்றிப்போன மலட்டாற்றில்
திடீரெனப் பெருக்கெடுத்துப்
வெள்ளமெனப் பாயும்
விவசாயிகளின் கண்ணீர்த் துளிகள் ,

பூட்டிய
மோட்டார் அறையிலிருந்து
வெளியேறும்
நாற்றம் நாடாளுமன்ற
வளாகம்
வரை வீசுகிறது
இறந்துபோன
விவசாயிகளின் மூச்சுக்காற்றின்
முடைநாற்றம்!

– கவிஞர்; ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி வட்டம்,

எப்போது முடியும் இந்த நாடகம்? கவிதை – ச.லிங்கராசு

எப்போது முடியும் இந்த நாடகம்? கவிதை – ச.லிங்கராசு




மீண்டும் ஒரு கபட நாடகத்தை
அரங்கேற்றத் துடிக்கும் அவலம்
இங்கே ஆரம்பித்து விட்டது
பேதத்தை மறந்ததைப் போல் காட்டி
வேதத்தை முன்நிறுத்தச்செய்யும்
வேலைகள் இங்கே மிக வேகமாக

நரிகளே தோற்றுப் போகும்
நயவஞ்சக தந்திரங்கள்
இந்த நலிந்தோரிடம் எடுபடுவதுதான் கொடுமை
நெருப்பைத் தீண்டும் குழந்தைகளாய் நிறைந்து
வருகிறார்கள் இந்த அப்பாவிகள்

எல்லா இனத்திலும் ஊடுருவி
ஏணியில் ஏற்றிப் பின்னர்
சநாதனத்தின் வெறி கொண்டு
சாய்த்து விடுவதில் மன்னர்கள்
இந்த சாபகேடுகள்

சிறு கூட்டத்தின் சாமர்த்தியம்
இன்று பெருங்கூட்டமாய்த் திரண்டு
மதமென்னும் ஒற்றைச் சொல்லில் மாற்று மதம் வெறுக்கிறது.

என்று இந்த ஏமாற்றம் அறிவார்
இந்த எளியோர்கள்?
அன்றுதானே இங்கு ஆனந்தம்
எங்கெங்கும்!

தேச விடுதலைக்குத் தோள்
கொடுக்காதவர்கள்
தேச துரோகம் பற்றி ஒப்பாரி
வைக்கிறார்கள்
சுதேசியம் கூட ஒரு காலத்தில்
பேசிப் பார்த்தவர்கள்
இன்று சர்வதேச கார்ப்பரேட்டுகளுக்கு
ஏஜென்டுகள் ஆனார்கள்!

– ச.லிங்கராசு

உழவுக்கு வெந்நீர்! கவிதை – கோவி.பால.முருகு

உழவுக்கு வெந்நீர்! கவிதை – கோவி.பால.முருகு




உழவுக்கு வெந்நீரை
ஊற்றுகின்றான்-கார்ப்பரேட்
உரம்பெறவே தண்ணீரைப்
பாய்ச்சு கின்றான்!
நிழலுக்குள் நெருப்(பு) அள்ளி
வீசுகின்றான்-கார்ப்பரேட்
நிலைத்திடவே நிழமல்தந்து
போற்று கின்றான்!

சேற்றிலே நிற்போனைத்
துரத்துகின்றான்-கார்ப்பரேட்
செழித்திடவே அவன்காலை
நக்குகின்றான்!
சோற்றிலே நஞ்சினைக்
கலக்குகின்றான்-கார்ப்பரேட்
சோம்பேறி வாழ்வுபெற
போற்றுகின்றான்!

கஞ்சிக்கு உழைப்போனைக்
கலங்க வைப்பான்!-கார்ப்பரேட்
கால்பிடித்து அரியணையில்
அமர வைப்பான்!
கிஞ்சித்தும் உழுவோனைக்
கருத மாட்டான்-கார்ப்பரேட்
கீழிருக்கும் வஞ்சகத்தை
உணர மாட்டான்!

பொன்முட்டை இடும்வாத்தை
அறுத்துப் பார்ப்பான்-கார்ப்பரேட்
பொல்லாதக் குழு வாழ
விருந்துவைப்பான்!
கண்குத்தி உழுவோனைக்
குருட னாக்கி-கார்ப்பரேட்
கண்ணுக்கு விருந்திட்டு
மகிழு கின்றான்!

– கோவி.பால.முருகு

Saguavarathan Poems. சகுவரதன் கவிதைகள்

சகுவரதன் கவிதைகள்




பின் புத்தி
=========
தலைப்பைப் பற்றி
தலையை
சொரிந்துகொண்டிருக்கையில்
கவிதை வரிகளில்
அலைந்துகொண்டிருந்த
எறும்பு
சுருக்கென கடித்துவிட்டது.
நசுக்கிய பிறகுதான்
யோசித்தேன்.
என்ன சொல்ல வந்திருக்கும் ?

கார்ப்பரேட்
=========
விலை அதிகமென்று
வேண்டாமென
உதறி நடந்தேன்.
வாங்கச் சொல்லி
நச்சரித்தபடியே
வருகிறது
மல்லி வாசனை.

ஆறுவது சினம்
=============
உரோமங்கள் சிலிர்ப்பதை
நன்கு உணர்கிறேன்.
உதடுகள் துடிக்க
குத்தீட்டியாய்
நிற்கிறது மீசை.
சிவந்த கண்களுடன்
நறநறவென
பற்களைக் கடிக்கிறேன்.
ஆயினுமென்ன…
நிரப்பிய பெட்ரோலுக்கான
விலையை
புன்முறுவலுடன்தான்
கொடுக்கிறேன்.

கௌரவம்
=========
பசிக்கிறதா என்றேன்.
இல்லை.
இப்போதுதான்
தின்று முடித்தேன்
பசியை
என்றான்.

மெய் பிம்பம்
=============
மிஸ்ஸைப்போலவே
அபிநயம் பிடிக்கிறாள்
சிறுமி.
பார்க்கப் பயந்து
கண்ணை
மூடிக் கொண்டது
கண்ணாடி.