ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்கிற கொடூரமான சட்டத்தை ரத்து செய்திடுக – தமிழில்: ச.வீரமணி
அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் என்னும் சிறப்புப்படையினரால் நாகாலாந்து, மோன் என்னும் மாவட்டத் தலைநகரில் 14 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பது ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்கிற (AFSPA- Armed Forces (Special Powers) Act) மிகவும் கொடூமான சட்டம் குறித்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அக்கிரமமான இந்தச்சட்டத்தின்கீழ் பாதுகாப்புப் படையினர் வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சாமானிய மக்கள் மீது தொடர்ந்து அட்டூழியங்களைப் புரிந்து வருகின்றனர். ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியாளர்களைப் பிடிப்பதற்காக வந்திருந்த பாதுகாப்புப் படையினர் பதுங்கியிருந்த சமயத்தில், நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்துவிட்டுத் திரும்பிய எட்டு இளைஞர்கள் ஒரு வேனில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவர்களில் ஆறு பேரைப் பாதுகாப்புப் படையினர் கொன்றதற்கு எதிராக உள்ளூர் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட சமயத்தில் ஆயுதப்படையினரால் மேலும் எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுபோன்று மோன் நகரத்தில் நடைபெற்ற அட்டூழியம் தனித்த ஒன்று அல்ல. ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின்கீழ் சாமானிய மக்கள் தொடர்ந்து பல முறை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு படுகொலைகள் நடக்கும் போதெல்லாம், ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகச் சுட்டோம் என்று கூறித் தப்பித்துக்கொள்கின்றனர்.
ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் வட கிழக்கு மாநிலங்களில் 1958இலிருந்து அமலில் இருந்து வருகிறது. 1984இல் மணிப்பூரில் ஹெய்ரான்காய்தாங் என்னுமிடத்தில் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் போது 14 பேர் கொல்லப்பட்டனர். 1995இல் ரிம்ஸ் (RIMS) நிகழ்வின்போது 9 பேர் இறந்துவிட்டார்கள். 2000இல் மணிப்பூர் மாநிலத்தில் மாலோம் என்னுமிடத்தில் நடைபெற்ற படுகொலைச் சம்பவத்தில் 10 பேர் கொல்லப் பட்டார்கள்.
ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் மூன்றாவது பிரிவின்கீழ் ஒன்றிய அரசு, ஒரு மாநிலத்தை, அல்லது, ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியை, ஆயுதங்தாங்கிய கிளர்ச்சியாளர்கள் நிறைந்த பகுதி (disturbed area) என அறிவித்திட முடியும். பின்னர் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இந்தச் சட்டத்தை அங்கே பிரயோகிக்க முடியும். இந்தச் சட்டத்தின் கீழ், ஆயுதப் படையினருக்கு வகைதொகையற்ற அளவில் அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எவரொருவரையும் அவர் சட்டத்தை மீறினார் என்றும், ஆயுதங்கள், வெடிமருந்துகள் எடுத்துச் சென்றார் என்றும் கூறி அவரைக் கொல்ல முடியும். எவரொருவரையும் கைது செய்யலாம். எந்தக் கட்டிடத்திற்குள்ளும் எவ்விதமான பிடியாணையும் (warrant) இல்லாமல் உள்ளே நுழைந்து ஆய்வு செய்யலாம்.
ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1990இல் ஜம்மு-காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போதும் அது அங்கே அமலில் இருந்து வருகிறது. இந்தச்சட்டத்துடன் பொதுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர அரக்கத்தனமான நடவடிக்கைகளும் சேர்ந்து அங்கே ஒரு கொடுங்கோன்மையான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மக்கள்மீது கடந்த முப்பதாண்டுகளாக மிகவும் கொடூரமான அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின்கீழ் குற்றமிழைத்த பாதுகாப்புப் படையினர் எவர்மீதாவது வழக்குத்தொடர வேண்டுமெனில் அதற்கு ஒன்றிய அரசின் அனுமதி தேவை. இது, நடைமுறையில் சாத்தியமில்லை என்பதையே ஜம்மு-காஷ்மீர் அனுபவங்கள் காட்டுகின்றன. 2018 ஜூலை வரையில், அங்கே மாநிலத்தில் ஆட்சியிலிருந்த மாநில அரசாங்கங்கள் இவ்வாறு ஒன்றிய அரசின் அனுமதி கோரி 50 வழக்குகளை அனுப்பியிருந்தன. எனினும், இந்த வழக்குகள் அனைத்திலுமே ஒன்றிய அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. பத்ரிபால் என்னுமிடத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் அந்நிய நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் இவ்வழக்கை விசாரித்த போதிலும், இக்குற்றத்தைப் புரிந்தமைக்காக பாதுகாப்புப்படையினர் சிலர் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்திருந்தபோதிலும், இவ்வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் (court-martial) விசாரிக்கப்படும்போது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது முதல் நோக்கிலேயே (prima facie case) ஆதாரம் இல்லை எனக்கூறி, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஐரோம் சர்மிளா இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இது கிட்டத்தட்ட பதினாறு ஆண்டு காலம் நீடித்தது. 2004இல் ஐமுகூ அரசாங்கம் இச்சட்டம் செயல்படும் விதம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கோரி நீதியரசர் ஜீவன் ரெட்டி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக்குழு இந்தச் சட்டம் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்து 2005ஆம் ஆண்டிலேயே அறிக்கையை அளித்தது. எனினும், ராணுவமும், பாதுகாப்பு அமைச்சகமும் எதிர்த்ததன் காரணமாக இது நடைபெறவில்லை.
2004இல் மணிப்பூரில், தீவிரவாதி எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தங்ஜம் மனோரமா என்பவர் பாதுகாப்புப் படையினரால் மிருகத்தனமானமுறையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மிகப்பெரிய இயக்கம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இம்பால் நகராட்சிப் பகுதி மட்டும், இந்தச் சட்டத்தின் அதிகார வரம்பெல்லையிலிருந்து நீக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில், ஐமுகூ அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த சமயத்தில், உமர் அப்துல்லா அரசாங்கம், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இதர ஜனநாயக அமைப்புகள் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை, எல்லைப் பகுதி தவிர ஏனைய அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரின் இதர பகுதிகளிலும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தின. ஏனெனில் அந்த சமயத்தில் அங்கே தீவிரவாத நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்திருந்தன. அப்போதைய உள்துறை அமைச்சர் இதற்கு செவிமடுத்தபோதிலும், ராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அரசாங்கம் இதனை நிறைவேற்றிட வில்லை.
ஆயுதப் படையினரை அப்பாவி மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகும். அரசமைப்புச்சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான இந்தச் சட்டத்தை இத்தனை ஆண்டு காலமாக உச்சநீதிமன்றம் அடித்து வீழ்த்தாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
மோடி அரசாங்கம், மக்களின் அடிப்படை உரிமைகளை மிகவும் கொடூரமான முறையில் மிதித்துத் துவைத்து, நாட்டில் ஒரு ராணுவ அரசை நிறுவுவதற்காக, இத்தகைய ஜனநாயக விரோத, அரக்கத்தனமான சட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத் துரோகக் குற்றப்பிரிவு ஆகியவற்றுடன் இந்த ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தையும் தங்களுடைய எதேச்சாதிகார ராணுவக் கட்டமைப்பு ஆட்சியின் ஓர் அங்கமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அதிகார வரம்பெல்லையை, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சர்வதேச எல்லையிலிருந்து, 15 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டர் வரைக்கும் நீட்டித்திருப்பதை, இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும்.
நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்பியூ ரியோ அவர்களும், மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்மா அவர்களும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை தங்கள் மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் ரத்து செய்திட வேண்டும் என்று கோரியிருப்பது நல்லது. 2015இல் திரிபுராவில் இடது முன்னணி அரசாங்கம் இந்தச் சட்டத்தை ரத்து செய்தது.
எனினும், சில மாநிலங்களில் மட்டும் இந்தச் சட்டத்தை ரத்து செய்வது போதுமானதல்ல. நாகரிகமுள்ள ஒரு ஜனநாயக சமூகத்தில் இத்தகையதொரு சட்டத்திற்கு இடம் இருக்கக் கூடாது. இந்தச் சட்டம் முழுமையாக ரத்துசெய்யப்படுவதற்கு இதுவே தருணமாகும்.
(டிசம்பர் 8, 2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி