கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




உன் தூரிகை நானாக
**************************
நீ தூரிகையை கையிலெடுக்கும் போதெல்லாம்-உன்
தூரிகை நானாகிறேன்…

போகுமிடமெல்லாம்  அரங்கேறும் அவலங்களைச்
சித்திரமாக்க…

புரையோடிய ஊழலையும்
கரைபுரளும் லஞ்சத்தையும்
வேரோடு களைந்தெறிய
கறுப்பு வர்ணங்களைத் தொட்டு
காணும் இடமெங்கும் வரைந்த சித்திரங்களால்….

வாய்மையெனும் வெளிச்சத்தைத்தேடி  இன்னும் அலைகிறேன்
ஊழலின் பிடியிலிருக்கும்  வறுமையெனும் பிணிபோக்க….

உன்னிரு விரல்களால்
விடைகொடு நீதிதேவதையே
உன் தூரிகை நானாக….

பூவாசம்
**********
பூக்களின்வாசம் வீசும் வழித்தடத்தில்
தனிமையில் பயணிக்குமொரு நாளில்
கைகள் நிறைய பூக்கள் பறித்து
வாசத்தை நாசிவழியே நுகர்ந்து
நுரையீரலிலுள்ள அசுத்தங்களத்தனையும்
வெளியேற்றிச் சுத்தமாக்கி
அக்கம்பக்கம் சுற்றிலும் பார்த்து
காவலாளியில்லாத வேளையில்
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
தன்னைத்தானே உலர்த்தி
துருப்பேறி  நகரும்போதெல்லாம்
கிரீச்சிடும் கம்பிவலைக் கதவுகளை  விலக்கி நுழைகிறேன்
முள்வேலிகளாலான பூந்தோட்டத்திற்குள்…

பூத்துக் குலுங்கும்  சோலைவனத்துக்குள்
எனக்குமுன்னே முன்கதவுகளை திறக்காமல்
இரகசியமாய் நுழைந்து களவாடும் கூட்டமொன்றை
விழிகள் விரித்துக்கண்டேன்
கண்காணாத காட்சிகளாய்…

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
பசுஞ்செடிகளின் பூக்களில் அமர்ந்தெழும் தேனீக்கள்
துளி துளிகளாய்ச்  சேகரித்த பூந்தேனைச் சுமந்து
போர்விமானங்களைப்போல
சிறகுகளிலிருந்து வெளிப்படும் ரீங்காரஓசையுடன்
பறக்கின்றன திசையெங்கும்….

கொத்துக்கொலைகளாய்க் கைகளில் சேகரித்து  வெளியேறி நுகர்கிறேன்
கையிலிருந்த பூக்களின் வாசத்தை…

பூக்களின்இதழ்களுக்குள் ஒளிந்திருந்த தேனீயொன்று
சிறகுகள் விரித்து பறந்தது வேறொரு சோலைவனத்தைத் தேடி…

–கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு
கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




நதியின் மரணம்
*********************

அமைதியாக சலசலத்தோடும் நதியில்
விடும்குஞ்சு மீன்களோடு இருகரையிலும்
விதைகளையும் தூவினால் நாளாகும்போது
இரண்டுமே வளர்ந்துவிடுகின்றன.

ஒரு கல்லைத்தூக்கி வீசும்போது
கூழாங்கற்களாய்ப் பெருகி நதிக்குள்ளயே
அங்குமிங்குமாய் நகர்ந்து விளையாடி
அழகாகும் அதிசயம் அரங்கேற

ஒரேயொரு நெகிழியை தூரத்திலிருந்து
தூக்கியெறிவதை தொடங்கிவைத்த ஒருவனால்
பின்னொரு நாளில்
நதியே ஸ்தம்பித்துப் போகுமென
அறியாமல் வீசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
வீணாகிப் போனவையெல்லாம்

கட்டடங்களின் உயர வித்தியாசமெதுவுமின்றி
குப்பிகளிலிருந்து உடைத்தொழுகும்
சயனைடு திரவங்களாய்
இரகசியக்குழாய்களின் வழியே
சாக்கடைநீராகி யாருடைய சம்மதத்திற்கும்
நிற்காமல் நதியின் மொத்த ஆழத்திலும்
ஊடுருவி
நச்சாய் பரவிக்கொல்கிறது
நதியை
நதியை நம்பியிருந்த உயிர்களை

மீன்களும் மரங்களும் அவற்றை நட்ட மனிதரும்
மெல்ல மெல்ல மரணிப்பதைக் கண்டு
மண்ணில் இனியும் ஒடிஒளிய வேறெங்கும்
இடமில்லையென்று
வறண்டே மரணிக்கிறது நதியும்

மழை…..

தூறல்களாய் விழும்போதெல்லாம்
கரையோர மரங்களின்
வேருக்கும் தெரியாமல்
கண்ணீர்சிந்தி வறண்டநதியின் கால்தடமும்
அழுகிறது
மழைத்துளியைக் கடன்வாங்கி

நீச்சல் பழகிய நீரோடையில் நீளத்துக்கும்
தோண்டியெடுத்த மணல் குழிகளிலிருந்து
மீளத் தெரியாமல்
அடுத்தத் தலைமுறையும் விழுகிறது தாகத்தில்

அயிரைகள் துள்ளிவிளையாடிய நதியில்
அழுக்குமூட்டைகளும் நெகிழிக்
காகிதங்களுமே

காற்றின் போக்கில்
நகர்ந்து நதியை நாசமாக்க

கரைகளையும் விட்டுவைக்க மனமில்லா
ஆக்கிரமிப்புகள்
வழிமறித்த பாவங்களால் விடாதுகொட்டும்
அடைமழை நாளில் விழும்
துளிகளொவ்வொன்றையும் எதிர்பார்த்து
காத்திருக்கிறது…

ஊரோரம் ஓடிய நதியும்
ஊரைவிட்டு வெளியேற…

–கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு

மழையின் கண்ணீர்
***********************
பனை ஓலையில் போர்த்திய மாட்டுச்சாளையின்
ஒருமுனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய்
அரித்து ருசிக்கும் கரையான்களும்
கூரைக்குள் ரகசியமாய்க் குடித்தனமிருந்து தொல்லைதரும் எலிகளும்
கூரைவேய்ந்தவனின்
நிம்மதியைக் கெடுக்க

துருப்படிந்த கடப்பாறையும்
உழுதவயலிலிருந்த மண்ணை ஒட்டிவந்த கலப்பையும்
அதன் உச்சியில் மாட்டுவாசத்தை பூசிக்கிடக்கும் நுகத்தடியும்
ஒன்றுக்கொன்று அவரவர் கதையை பேசிக்கொள்ள

உழுதே தேய்ந்த உழவனைப் பற்றியெதுவும் பேசாததால்
உடைசல்களில் விழும் மழைத்துளிகள் கரையானையும் கலப்பையையும்
கண்ணீரால் கழுவி சிற்றாறாய் ஓடுகிறது மூத்திர வாய்க்காலில்….

ப(ரு)சித்த மாடு
******************
வறண்ட பூமியும் சுவாசித்திட
பழமாய்ப் பிளந்து கிடக்கும் மண்ணில்
பச்சையங்களை இழந்து நிற்கும்
மரங்களின் நிழல்களில் இளைப்பாறும்
பசுவொன்று சுற்றும் முற்றும் பார்வைகளால்
கொட்டகையில் பசியோடிருக்கும் பச்சிளங்கன்றின்
பசிபோக்கும் உலர்ந்த இலைகளைத் தேடியதில்

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காற்றின் வேகத்தில் வீசும் மண்புழுதியைத்தவிர எதுவுமேயில்லாமல்
முடிச்சினை அவிழ்த்து பங்காளியின் பயிரினில் மேய்ந்ததால்
மொட்டைப்பனையில் கட்டிய பசுவுக்குத் தண்டனை
சமரச உடன்பாட்டில் அபராதம் செலுத்திடும் முதலாளி வரும்வரை….

–கோவை ஆனந்தன்
குமாரபாளையம்
கிணத்துக்கடவு
919003677002