அந்த நொடி கவிதை – சுதா

அந்த நொடி கவிதை – சுதா




நான் சாக மாட்டேன்…
எனச் சொன்னவள் கருவிழி இரண்டும்
காணாது போய்க் கண்ணீர் கன்னம்
தாண்ட என் கைவிரல்களைப் பிடித்தபடி
காற்றோடு காணாதுபோன நொடி…

பெயர் வைத்தவள் பிணம் என்ற பெயரோடு
செல்கையில் என்னைச் செல்லமாய்
அழைத்த வார்த்தை மட்டும்
என் காதுக்குள் நுழைந்த நொடி…

நான்கு சுவற்றுக்குள்
சூழ்ந்த இருட்டின் மத்தியில்
சத்தமாகக் கதறி அழுத அந்த நொடி…

அன்பு சொந்தம் நட்பு
நம்பிக்கை இப்படியான வார்த்தைகள்
அர்த்தமிழந்து போக…அந்தரத்தில்
நூல் இழையில் தொங்கிய அந்த நொடி…

இங்கு அனைத்திற்கும் பிரதானம் பணம்
என்று உணர்ந்த நொடி…
பலரின் பற்கள் ,
மகிழ்ச்சியில் சிரிப்பதற்கு மட்டுமல்ல…
என்னைக் கொரிப்பதற்கும் காத்திருக்கிறது
என்று உணர்ந்த நொடி…

என் தோளில் கை போட்டு
என் தோல்வியை ரசிக்கும் மனிதரை
அடையாளம் கண்ட அந்த நொடி…

என்னைக் குத்திக் கிழித்துக் கூறு போட்டது
நான் கொடுத்த ஊன்றுகோலால்…

என அறிந்த அந்த நொடி…

இப்படியான நொடிகள் பல
நான் இறந்து இறந்து பிறந்த நொடி…
இப்போதும் பிறந்து விட்டேன் மீண்டும்
இறக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்…
இன்னும் எத்தனை நொடிகள் நான்
இறுதியாக இறப்பதற்குள்
இறந்து பிறப்பேன் என்பதுதான் புதிர்…

ஆனால் ஒவ்வொரு இறப்பும்
என்னை மீண்டும் பிறக்க வைத்தது
ஒவ்வொரு விழுதலும் மீண்டும் எழவைத்து…
அட…இதைவிட சுகம் என்ன…என்ற இந்த நொடி…

– சுதா

அணிலாடு முற்றம் கவிதை – வளவ. துரையன்

அணிலாடு முற்றம் கவிதை – வளவ. துரையன்




நேற்று மாலைவரை
கூடியிருந்த கூட்டம்
இரவில் எங்கோ போய்
அடைந்து விட்டது.

அது விட்டுப் போன
மிச்சங்கள் அழுதுகொண்டிருக்கின்றன

குடை ராட்டினமும்
பலூன் வியாபாரியும்
பஞ்சு மிட்டாய்க் காரனும்
நின்றிருந்த இடங்கள்
பரிதவித்து நிற்கின்றன.

அம்மாவைக் காணோம்
என்று அழுத சிறுவனுக்கு
அம்மா கிடைத்தது
ஆஸ்கார் வந்த்து போல.

அத்தை மகனும்
மாமன் மகளும்
அங்குமிங்கும் கண்களை
அலையவிட்டுக் கொண்டு
கள்ளப் பாரவையால்
கவனம் இழுக்கிறார்கள்.

திருவிழா முடிந்த திடலில்
அன்றும் இன்றும்
அணில்கள்தாம்
ஆடிக் கொண்டிருக்கின்றன.

– வளவ. துரையன்

இயற்கையும் நானும் கவிதை – சூரியாதேவி

இயற்கையும் நானும் கவிதை – சூரியாதேவி




இயற்கையே இயற்கையே
என் சொல்கின்றாய்?
உனை நான் என்னவென்பேன்..!
கானகப் பயிர்கள் கண்ணீர்விடும்
உன்னைக் காணாவிட்டால்,
மானுட உயிர்கள் மடிந்துவிடும்
உனை மறந்துவிட்டால்.

எராளத்தோடு நீ வந்தால்
ஏசுவதும் இவ்வுலகம்,
இப்போது நீ ஏன் வந்தாய்
என
பேசுவதும் இவ்வுலகம்.

என்று நான் சொல்லி முடித்தவுடன்
இயற்கை இயம்பலாச்சு….

“அடேய்…
மானுடப் பிறவிகளா!
மாசுகொண்டு
என் கண்களை அடைத்துவிட்டு,
தூசுகள்
எனை வந்து துன்புறுத்த,
எனது அழுகையை
அடக்க இயலாமல்
துடிக்கிறேன்,
தூற்றுகின்றேன்….

பெருங்காற்றாய், மழையாய்
உங்களோடு பேசுகிறேன்….

நீங்களோ…?
பழமையை மறந்ததோடு,
புதுமையைப் பேணாமல்
புத்தி தடுமாறி
உங்கள் முட்டாள்தனத்திற்கு
என்னை மூலதனமாக்கி ,
என் பெயரை பிரயோகித்து,
பெரும் பேச்சுப் பேசுகின்றீர்!

அன்று!
உங்களால் பருவக் காற்றாக
பக்குவத்தில் இருந்த நான்…

இன்று!
புயல் காற்றாக
சீறி, உருமாறி
உலகைப் புரட்டிப்போடுகிறேன்
உனக்குப் புரியவில்லையா?

எச்சரிக்கிறேன்..
ஆபத்தின் நுனிதான் இது
அறிந்துகொள் மானுடா.

இனியாவது
பழமையைப் பாதுகாத்து,
புதுமைக்குப் புத்துயிர்கொடு,

வருங்கால சந்ததிகளையும்
வாழவிடு…!

முகவரி:
சூரியாதேவி ஆ
3/130, பாண்டியன் நகர் ,
சிவரக்கோட்டை,
திருமங்கலம் (தா),
மதுரை 625 706
அலைபேசி : 63795 25988

Thaipal Enum Jeevanathi WebSeries 8 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்



ஆனந்தக் களிப்பினாலே சுரக்கிறது பார், தாய்ப்பால்!

வீட்டு முற்றத்தின் முல்லைக்கொடியில் புல்லைக் கோர்த்துக் கட்டிய சிட்டுக்குருவியின் சின்னஞ்சிறு கூட்டில் பிரசவித்த பிஞ்சுக் குருவியை இரகசிமாய் எட்டிப் பார்த்து இரசித்துச் சிரிக்கும் குழந்தைகளைப் போல, இன்னும் பிரசவித்த கதகதப்புகூட குறையாமல் தன்னிலிருந்து பிரிந்த மீச்சிறு சிறகைப் போல அருகே  படுத்திருக்கிற பிள்ளையைப் பார்க்கப் பார்க்க ஒரு தாயிற்கு எப்படித்தான் இருக்குமோ! எத்தனை முறை பார்த்தாலும் சலித்திடாத, உள்ளங்கையில் அள்ளி அன்பொழுக எவ்வளவு முத்தமிட்டாலும் போதாத அரிய தருணங்களை எப்படித்தான் கையிலிருந்து நழுவிவிடாமல் பார்த்துக் கொள்வதோ?

பிஞ்சுக் கரங்களுக்குள் சுட்டு விரல் நுழைத்து அவர்களின் பிடிக்குள் சேகரமாகிவிடுவதன் வழியே தன்னையே முழுவதும் ஒப்புக் கொடுத்தபடி உள்ளுக்குள் கரைந்து கொண்டிருக்கும் அவளைக் கையேந்திக் கரைசேர்ப்பார் யாரோ? நட்சத்திர ஒளிவீசிடும் குறு கண்களைக் கூசித் திறந்து இமைக்குள் அம்மையைத் தேடுகிற பிள்ளைக்குத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள முகத்தையே உற்றுப் பார்த்தபடி செல்லக்குட்டி..! அம்முக்குட்டி..! வாடா செல்லம்..! என்றெல்லாம் குழைந்து பேசிச் சிரிக்கிற தாயவளின் இன்பக் கேணியிலிருந்து அவளை எவர் தான் மீட்டெடுப்பதோ? முன்நெற்றிப்பட்டையில் சரிந்து விழுகிற சாம்பல்முடிக் கற்றையை கண்விளிம்பிலிருந்து ஒதுக்கித் தள்ளியபடியும், புல்லைப் போல் கோடாய் நீளுகிற புருவத்தை விரலால் நீவியபடியும் இருக்கும் அம்மாவின் அரவணைப்பிலிருந்து குழந்தையும் துயில் களைவது எப்போதோ?

பாட்டியின் சுருக்குப்பைக்குள் பேரனுக்கென வாஞ்சையோடு மறைத்து எடுத்து மடித்துக் கொடுக்கிற அழுக்கடைந்த அந்த ஐந்து ரூபாய் நோட்டின் வெம்மையைப் போல தன் சேலையின் கசங்கிய பொதிக்குள் அலாதியாய் துயில் கொண்டிருக்கும் பிள்ளையை எப்படித்தான் தாயும் கவனமாய் தூக்கிக் கொஞ்சிக் குழையப் போகிறாளோ? தன்னியல்பில் கண்ணங்கள் உப்பி குபேரனாய்ச் சிரிக்கிற, அப்படிக் கண்ணங்கள் கனிந்து குவிகின்ற போதே குள்ளநரிக்குழியாய் அமிழ்ந்து சுழிக்கிற சிறு கண்ணக்குழியில் சுற்றிக் கொண்டிருக்கிறது அவளது சின்னஞ்சிறு பூமி! கண்ணங்களைக் கிள்ளி முத்திமிடும் உதட்டின் குளிர்ச்சியில் துள்ளியபடி புரண்டுப் படுக்கிற குழந்தையினால் ஒருபக்கமாய் சாய்கிறது அவளது ஒட்டுமொத்த பிரபஞ்சமும்! அவள் விரல்நுனியின் ஒவ்வொரு தொடுகையிலும் காம்பைத் தேடியவாறே உதட்டைச் சுழித்து அம்மையின் விரல் சுவைக்க நாவைச் சுழற்றுகிற அவர்களின் அனிச்சையான நிகழ்வைப் பார்க்கப் பார்க்க இன்னும் எத்தனை யுகம் தான் அவர்களுக்கு வேண்டியிருக்குமோ?

பிள்ளை பற்றிய அவர்களின் இரவுக் கனவுகளையும் அந்தக் கனவுகள் மெய்ப்பட பிரசவித்துப் பிள்ளை பெற்ற தருணங்களையும் இதயம் முழுக்க நிறைத்துக் கொண்டு அந்த ஒட்டுமொத்த தித்திப்பின் திகட்டல் தாளாமல் ஊற்றாகிய உணர்ச்சிப் பெருக்கையெல்லாம் கோடைக் கண்ணீராய் கண்களின் கேணிக்குள் இறைத்து நிறைத்தபடி நிற்கையில் தாயும்கூட வளர்ந்ததொரு குழந்தையாகி விடுகிறாள். அவளது விழியோரம் கண்ணீர் எந்நேரமும் அலையடித்தபடி இருக்க கண்ணங்கள் வழியப் பொங்கி வருகிற பேரானந்தத்தைப் பார்க்கையில் அது உற்சவம் கூடிய தாய்மையின் தரிசனமாகத் தான் இருக்கும். இளம் மஞ்சள் வெயில் விசிறியடிக்கையில் கூடவே ஓங்கி சடசடத்துப் பெய்கிற தும்பல் மழையினால் ஒருசேர சூழ்கிற வெதுவெதுப்பைப் போல, அம்மாக்கள் அரற்றி அழுகிற போதே கரைந்து சிரிக்கிற தருணங்களையெல்லாம் நாம் இதுவரை எந்தக் கோவில் சிற்பங்களிலுமே கண்டதில்லை. அழுகிற போதே சிரித்தபடியும், சிரித்தபடியே அழுதபடியுமாக கண்ணீர் வடித்தே கணம் தோறும் மாறுகிற அன்னையின் உணர்ச்சித் ததும்பல் போராட்டங்களை எப்போது தான் அப்பாக்களின் உலகமும் இனி புரிந்து கொள்ளப் போகிறதோ?

இத்தகைய உணர்ச்சிமிக்க தருணத்தில் தாயவள் அழுதபடி கண்ணீரைப் பெருக்குகிறாளா அல்லது பொங்கிச் சிரித்து கண்ணங்கள் வீங்க கண்ணீரை வடிக்கிறாளா என்பதையெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படியான சமயத்தில் தான் பிள்ளைப்பேறு கண்டவள் மகிழ்வாய் இருக்கையில் தாய்ப்பால் கனிந்து நிறைவாகச் சுரக்குமென்கிற மருத்துவர்களின் அசரீரிக் குரலானது குகைக்குள்ளிருந்து எழுகிற தெய்வீகக் குரலைப் போல நமக்குள்ளே எதிரொலிக்கத் துவங்குகிறது. ஆனாலும் அழுகையில் கண்கள் மினுங்க வழிகிற கண்ணீரின் உருக்கத்தைப் போல, சிரிக்கிற போதே உணர்ச்சித் ததும்பலில் ஊற்றெடுக்கிற ஆனந்தக் கண்ணீரின் பெருக்கத்தைப் போல, மகிழ்வான தருணங்களின் போதெல்லாம் தாய்ப்பால் பெருகுவதைப் பற்றியும் நாம் நிச்சயமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

குழந்தை பெற்ற ஆனந்த போகத்தில் திளைத்து வருகிற கண்ணீருக்கும், மகிழ்ச்சி ததும்ப மார்பில் பிள்ளையைப் போடும் போது வற்றாச் சுனை போலச் சுரக்கிற தாய்ப்பாலுக்குமிடையே இருக்கிற ஒற்றுமையைப் பற்றி நாமும் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா! இதையெல்லாம் நாம் விளங்கிக் கொள்வதற்கு முதலில் ஆனந்தக் கண்ணீர் சுரப்பதற்கான உண்மையைப் பற்றி முழுவதுமாகத் தெளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

குழந்தைகளின் சிரிப்பையும், அழுகையும் கேட்ட உடனே உள்ளுக்குள் ஒரு உந்துதலும், பரவசமும், உணர்ச்சிவயப்படுதலும் ஏற்பட்டு நம்மை அறியாமலே மார்பு மெல்ல கனத்து தாய்ப்பால் ஊறிப் பெருக ஆரம்பிப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அச்சமயத்தில் நாம் உணர்ச்சிவசப்பட்டால் கூட தாய்ப்பால் மார்பில் சுரக்கிற பேரற்புதங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கையில் நமக்கெல்லாம் அது புதிதாகவும், அவையெல்லாம் பெரும் புதிராகவும் இருக்கிறது. அப்படிக் கண்ணீரையும், தாய்ப்பாலையும் இயல்பாகவும் இயற்கையாகவும் சுரக்க வைப்பதற்கு மூலகாரணமாகிய உணர்வுகளைப் பற்றியெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா! ஆனால் அதற்கு நம் தலைக்குள்ளே கண்ணீரைச் சுரக்க வைப்பதற்கென அருளப்பட்டிருக்கிற தொழில்நுட்பத்தைப் பற்றிய தெளிவினை நாம் முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் தாய்மார்களே!

முதியவர்களின் வயதான தோல் சுருக்கங்களைப் போலிருக்கிற நமது மூளையின் மேல்பட்டைக்குச் சற்று கீழே தான் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகவும் சுவாரஸ்யமான பகுதியிருக்கிறது. இங்கு தான் நம் உணவுப்பழக்கம், பாலியல் தேவைகள், அடிப்படை உணர்ச்சிகளென்று அத்தனையையும் ஒருவித ஒழுங்கிற்குள் வைத்துக் கொள்வதற்கான நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தபடி இருக்கிறது. அத்தகைய அதிநுட்பமான பகுதிக்குப் பெயர்தான் லிம்பிக் மண்டலம். லிம்பிக் என்றால் அகராதியில் ஓரத்தில் என்று பொருள் கொள்ளலாம். ஆக, மூளையின் அடிப்பாகத்தினது ஓரத்தில் இந்த லிம்பிக் மண்டலத்தினது பகுதிகள் அமைந்திருப்பதால் இப்பெயரை ஒரு நல்ல நாள் பார்த்து சூட்டியிருக்கிறார்கள் போலும்!

இந்த லிம்பிக் மண்டலத்தைப் பகுத்துப் பார்த்தால் அங்கே லிம்பிக் மடல், ஹிப்போகேம்பல், அமெக்டலா, தலாமஸ், ஹைப்போதலாமஸ் போன்ற அறிவியல்பூர்வமான பகுதிகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இணைபிரியா இரத்த உறவுகளாக ஒன்றுக்கொன்று அருகாமையில் இருந்தபடி ஏராளமாக நுட்பமான வேலைகளை ஒருங்கிணைந்துச் செய்கின்றன. அதிலொரு பணியாகத் தானே நம்மைக் கண்ணீர் பொங்க அழவைத்து உணர்ச்சிவசப்படுகிற மனுசியாகவும் ஆக்கி வைத்திருக்கிறது.

Thaipal Enum Jeevanathi WebSeries 8 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

இந்த லிம்பிக் சிஸ்டத்தில் இருக்கிற அமெக்கிடெலா என்ற பகுதியே கொஞ்சம் விசித்திரமானது தான். இங்கே தான் நம் சுற்றுப்புறத்திலிருக்கிற உணர்ச்சிவசப்படக்கூடிய அபூர்வமான நிகழ்வுகளையெல்லாம் ஐம்புலன்கள் வழியாகத் திரட்டி மாபெரும் தகவல் களஞ்சியமாக உள்ளுக்குள்ளே சேமித்து வைக்கப்படுகிறது. யாரேனும் நம்மை வருத்தமுறச் செய்கிற போது வென்று கண்ணைக் கசக்கியபடி அழுவது, ஒருவர் ஏதேனும் சொல்லி நம்மை மனமுவந்து பாராட்டுகையில் முகம் வெட்கிச் சிவந்து பூரிப்பது, கோபத்தில் நாசிகள் துடிக்க பற்களைக் கடிப்பதும், நாக்கைத் துருத்துவதுமான உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்ற எல்லாமே இதனுடைய கச்சிதமான இயக்குநர் வேலைதான். நாமெல்லாம் சந்திக்கிற அன்றாட நிகழ்வுகளின் தன்மைக்கேற்ப நம்முடைய அற்புதமான உடல் மொழியை வெளிப்படுத்துவதன் வழியே நம்மை உணர்ச்சியுள்ள மனிதனாக காட்சிப்படுத்துவதில் அமெக்டெலாவின் பங்கென்பது மிகவும் முக்கியமானது. இப்படிப்பட்ட அமெக்டெலாவானது நாம் உணர்ச்சிவசப்படும் போது நம்மை அழவைத்து எப்படி கண்ணீரைச் சுரக்க வைக்கிறதென்று தெரியுமா?

பிள்ளையின் அழுகுரல் கேட்டுப் பிரசவித்த களைப்பெல்லாம் களைந்துவிட்டு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தாயவளோ தத்தளித்துக் கொண்டிருப்பாள். அவளோ தன் பிஞ்சுக் குழந்தையின் அழகைக் கண் கொள்ளப் பார்க்கிறாள், தொட்டணைத்துத் தழுவிக் கொள்கிறாள், உச்சி முகர்ந்து முத்தமிடுகிறாள். இப்படி அணு அணுவாக பிள்ளையைப் தொட்டும், பார்த்தும், கேட்டும், நுகர்ந்தும், முத்தமிட்டும் ஐம்புலன்களால் உணரப்படுகிற அத்தனைத் தூண்டல்களும் முதுகுத்தண்டு நரம்பின் வழியே மூளைக்குச் சென்று அங்கே ஒரு சிலந்திவலைப் பின்னலின் முடிவில் அமெக்டெலாவுக்கே வந்து சேர்கிறது.

அங்கு ஏற்கனவே எந்தச் சூழலுக்கு எத்தகைய பாவணையிலான முகபாவத்தை, உடல்மொழியை வெளிப்படுத்த வேண்டுமென்கிற தகவலானது பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். அப்போது பேரானந்தத்தில் உச்சி குளிர்ந்து போயிருக்கிற அன்னையின் உணர்ச்சிவசப்படக்கூடிய மனம் திறந்த மடலை அமெக்டெலா வாசித்தறிகிறது. இறுதிப் பரிசீலினையில் அம்மாவின் எல்லா உணர்ச்சிக் கொந்தளிப்பையும் சமநிலைப்படுத்துகிற வகையில் மூளையின் கண்ணீர் சுரப்பு மையத்திற்கு மறுசேதி சொல்லி உடனடியாக கண்ணீர் மடையைத் திறந்து விடச் செய்கிறது. முழுக் கொள்ளளவு எட்டும் முன்னே முன்னெச்சரிக்கையாக அணையைத் திறந்துவிடச் செய்கிற நுட்பத்தைப் போலத்தான் நம்ம மூளையும் உணர்ச்சிவசப்பட்டு வலிப்பு வரும் முன்னே அதைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் கண்ணீர் பையைத் திறந்துவிடுகிறது.

இந்தச் செய்தி மின்னல் பாய்ச்சலில் மூளையிலிருந்து நரம்புகள் வழியாக கீழ் நோக்கிப் பயணித்து இரு விழியோரத்திலும் பக்கவாட்டில் பதுங்கியிருக்கிற கண்ணீர் சுரப்புப்பைகளுக்குச் செல்கிறது. மூளை நரம்புகளின் வழியாக வருகிற அவசரச் சேதியின் கட்டளைப்படி அது கண்ணீர்ப் பைகளை பிழிந்தெடுத்து இரண்டு கண்ணிலிருந்தும் கண்ணீரைத் தாரைதாரையாக சுரக்கச் செய்கிறது. மேலும் இந்த உணர்ச்சிகளின் சமிக்கையானது அமெக்டெலாவின் அக்கம் பக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்ட ஏனைய பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் வழியே முகத்தின் நுண்ணிய தசைகளின் இயக்கத்தையும் பொம்மலாட்ட வித்தையைப் போல் ஆட்டுவித்து விதவிதமான முகபாவணைகளாக நம் முகத்தில் உருப்பெறச் செய்கிறது. இதன் ஒட்டுமொத்த விளைவாகத் தான் முகத்தசைகள் ஒருவித கூட்டு இயக்கமாகி உதடுகள் விரிய அகலச் சிரிப்பதும், இரத்த வெள்ளப் பாய்ச்சலில் முகம் வெட்கிச் சிவப்பதும், தசைகளெல்லாம் தளர்ந்து போய் சோகத்தை சுமந்தபடி முகம் கவலையளிப்பதுமாகிய பாவங்களாக வடித்து நம்மைக் காட்சி வடிவில் வெளிப்படுத்துகிறது.

நம் தூசி விழுகிற கண்களில் இமைகளை மூடித் திறந்து கசடுகளைத் துடைத்தெடுப்பதற்கும், நொடிக்கொருமுறை கடற் சிப்பியையப் போல் கண்சிமிட்டித் திறக்கிற விழித்திரையின் உராய்வினைக் குறைப்பதற்கும் எப்போதுமே கண்களில் புலப்படாத அளவில் கண்ணீர் வழிய சுரந்து கொண்டேதான் இருக்கும். பொழுதிற்கும் பாதுகாப்பிற்காக கருவிழியின் மேல் படலமாய் சுரக்கிற இக்கண்ணீரெல்லாம் மீச்சிறு அளவிலேயே இருப்பதால் அவை நம் கண்ணங்கள் வழிய முகத்திலெல்லாம் வழிந்தோடுவதில்லை. இதனால் இதைப் பெரும்பாலும் நம்மால் பார்த்தறியவும் முடிவதில்லை.

ஆனால் நாம் உணர்ச்சிவசப்பட்டுத் தேம்பியழுகையில் கண்ணீர் அருவியாய் ஆர்ப்பரித்தபடி வழிந்து முகத்தில் வழித்தடத்தை அமைத்தவாறே சட்டைகள் நனைய அடம்பிடித்தழுகிற குழந்தையின் செய்கையைப் போலவே நம்மைக் காட்சிப்படுத்த வைத்துவிடுகிறது. அதிலும் உச்சகட்டமாக அழுகின்ற போதே நாசியிலிருந்து தடுமன் பிடித்ததைப் போல நீரொழுகும்படியான தோற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. இதையெல்லாம் நினைக்கும் போதே, இதென்ன கொடுமை! அழுதால் கூடச் சளி பிடிக்குமா? என்று நமக்கு அதிசயமாகவும் ஆச்சரியமாகவும இருக்கிறது. இப்படியெல்லாம் நம் மூக்கு சிவந்து நீராய் வழிவதும்கூட விழிகளில் சுரந்த அதே கண்ணீர்தான் என்பதையும் கூடவே நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா!

Thaipal Enum Jeevanathi WebSeries 8 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

நாம் அதீத உணர்ச்சிக்குள்ளாகும் போது கண்ணீர்ப் பையிலிருந்து பெருக்கெடுத்து வெளியேருகிற அதிகப்படியான கண்ணீரானது வற்றிய மணற்பாங்கான ஆற்றின் வலசைப்பாதையில் மீண்டும் வெள்ளம் அடித்துச் செல்வது போல கண்ணக் குழிகளின் வழியே அது வழிந்தோடுகிறது அல்லது இருவிழிகளும் சந்திக்கிற உச்சிப்பொட்டில் உள்முகமாய் இருக்கிற கண்ணீர் வெளியேற்று குழாய் வழியாக மூக்குப் பகுதிக்குள் நுழைந்து அது நாசித்துளையில் வெளியேறுகிறது. இதனால் தான் அழுகையில் கண்ணத்தில் வழிகிற கண்ணீரைக் கைக்குட்டைகள் நனைய துடைத்துக் கொண்டும், நாசியில் வழிகிற கண்ணீரைச் சளியென எண்ணிக் கொண்டு உர்ர்..ரென உறிஞ்சியபடியும் இருக்கிறோம். நம் கண்ணங்களின் கால்வாயில் வழிந்தோடுகிற கண்ணீரைப் பார்த்தவுடனே நம்மால் ஒருவரது பாசத்தின் மதிப்பீட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கண்ணீர்ப்பையின் வெளியேற்று குழாய் வழியே பாய்ச்சலோடு மூக்கில் வடிகின்ற கண்ணீரைப் பற்றி நாம் இன்னமும் புரிந்து கொண்டபாடில்லையே!

சரி, இப்போது உணர்ச்சிப்பட்டு அழுவதும் சிரிப்பதுமாக இருப்பதற்கும் அதனால் கண்கள் கொள்ள கண்ணீர் சுரந்து பொங்கி வழிவதற்குமான விளக்கத்தைப் பார்த்தாயிற்று அல்லவா! ஆக, இப்போது தாய்ப்பாலுக்கும் மகிழ்ச்சிகரமான உணர்ச்சிக்குமான பந்தம் என்னவென்பதைப் பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோமா!

மார்புக் காம்பில் குழந்தைகள் கவ்விச் சுவைக்கிற தூண்டுதலின் வழியே உற்சாகமாகிய மூளையானது தனது தாய்ப்பால் ஹார்மோனைச் சுரப்பதும், அதிலிருந்து தரிசனம் பெறுகிற மார்பகங்கள் குதூகலித்துத் தாய்ப்பாலை மார்பினில் பெருக்குவதும் ஒருபக்கம் இருக்க, அதற்கெல்லாம் தூபம் போடுவது என்னவோ அம்மாவின் உணர்ச்சிகள் தானே! எனவேதான் வீட்டுச் சூழலின் மனக்கசப்பில் பிள்ளை பெற்றவள் ஏதேனும் குழப்பத்துடனோ, அசௌகரியத்துடனோ, மனச்சங்கடத்துடனோ, அழுதபடியோ, தாய்ப்பால் போதாத கலக்கத்துடனோ, எப்போதும் பசியில் அரற்றி அலறுகிற குழந்தைகள் மீதான பதட்டத்தினாலோ, தூக்கமே பிடிக்காத அல்லது பிள்ளை மேலான கவனத்தில் தூங்க முடியாத எரிச்சலுடனோ பாலூட்டுகையில் இத்தகைய எதிர்மறையான உணர்ச்சிகளெல்லாம் மூளையின் லிம்பிக் மண்டலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தாய்ப்பாலைச் சுரக்கவிடாமல் செய்வதற்கான பெரும் பட்டிமன்ற விவாதமே நடக்கிறது.

இதில் எப்போதும் நீதிமானாகிய ஹைப்போதலாமஸ் தான் தன்னிடமிருக்கிற நரம்புகளின் புனிதநூலில் சொல்லப்பட்டுள்ள போதனைகளையெல்லாம் வாசித்து அது தன் இறுதிச் சாட்சியத்தை வழங்குகிறது. ஹைப்போதலாமஸிடமிருக்கிற ஆர்க்குலேட் மற்றும் பெரிவெண்டிரிகுளார் நரம்புகளின் மையக்கருக்கள் தான் அதனுடைய புனிதநூல்கள். அவை பெற்றவளினுடைய உணர்ச்சிகளை அலசிப் பார்த்து அதற்குண்டான தீர்ப்பாக தன்னிடமிருக்கிற டோபமின் என்கிற வேதிப்பொருளைச் சுரக்கிறது. இப்படி ஒவ்வொருமுறையும் நாம் எதிர்மறையாகச் சிந்திக்கிற போதெல்லாம் மூளையும் டோபமினது வேதிப்பொருளை நிறைய சுரக்கச் செய்தபடியே இருக்கும். இப்படி ஹைப்போதலாமஸிலிருந்து வெளியேறுகிற டோபமின் இரத்தக் குழாய்களின் வழியே நழுவி அடுத்துத் தந்திரமாக பிட்யூட்டரிக்குள் நுழைந்து விடுகிறது.

இந்த டோபமினுடைய வேலையே பிட்யுட்டரியில் தாய்ப்பாலைச் சுரக்கச் செய்கிற புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் உற்பத்தியாவதைத் தடுத்து நிறுத்துவதுதான். ஆகையால் தான் நாம் வருத்தமாக, சோகமாக, எரிச்சலாக, பயத்துடன் என இருக்கிற போதெல்லாம் டோபமினும் ஹைப்போதலாமஸிடமிருந்து வெளியாகி தாய்ப்பால் ஹார்மோன்கள் சுரப்பதைத் தடுத்துவிடுகிறது. ஆக, இப்போது புரிகிறதா, பெத்தவ மனசு கோணாம நடந்துகோங்கப்பா! என்று பெரியவர்கள் ஏன் சொல்கிறார்கள் என்பதை?

அதே சமயம் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையேயான பந்தபாசம் அதிகரித்தால் அத்தகைய உணர்வுகள் மீண்டும் மீண்டும் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவை லிம்பிக் சிஸ்டத்தை ஓயாமல் தட்டி எழுப்பியபடியே இருக்கிறது. இப்படி ஒவ்வொரு முறை தூண்டப்படுகிற போதெல்லாம் நரம்புகளும் ஹைப்போதலாமஸிடம் சென்று, எப்பா! கொழந்த அழுறது பத்தாதுனு அந்தம்மாவும் பாசத்துல பொங்கி அழுகுறதுக்குள்ளார, பிட்யூட்டரிக் கிட்டச் சொல்லி கொஞ்சம் சீக்கிரமா தாய்ப்பாலைச் சுரக்கச் சொல்லப்பா என்று கொஞ்சிக் குழைந்தே பணிய வைத்துவிடுகிறது. உடனே ஹைப்போதலாமஸூம் ம்ம்.. சரி சரி, ஆகட்டும்! என்று பிட்யூட்டரியிக்கு உண்டான தாய்ப்பாலூட்டுவதற்கான ஒப்பந்தப் பணி ஆணையை பிள்ளை பால்குடிக்கிற காலம் வரைக்கும் வழங்கிவிடுகிறது. பிட்யூட்டரியும், சரி அப்படியே ஆகட்டும்! என்று தாய்ப்பால் ஹார்மோன்களான புரோலாக்டின், ஆக்ஸிடோசினை குழந்தைகள் பால்குடி மறக்கிற காலம் வரையிலும் சுரந்து அதனால் தொடர்ந்து இரு மார்பகத்திலும் தாய்ப்பாலை அளவில்லாமல் பெருகச் செய்தபடியே இருக்கிறது.

இதனால் தான் குழந்தையின் ஞாபகம் வருகின்ற போதும், அவர்களின் அழுகுரல் கேட்கிற போதும் சட்டென்று அத்தகைய உணர்வுகள் லிம்பிக் சிஸ்டத்தால் உணரப்பட்டு தாய்ப்பாலும் மார்பில் கனத்து சுரக்கத் துவங்கிவிடுகிறது. பேரன்பிற்குரிய தாய்மார்களே! உங்களது பிள்ளையைப் பற்றி நினைத்தாலே தாய்ப்பால் சுரக்கிறதென்றால் தன் பிள்ளையே கதியென கிடக்கிற உங்களுக்கு அணுதினமும் தாய்ப்பால் சுரக்காமலா போய்விடும்? சொல்லுங்கள் பார்ப்போம்!

படுக்கையில் குழந்தைகள் கை, கால்களை உதைத்தபடி அழுவதையும், சிரிப்பதையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அம்மாக்கள் அருகிலேயே படுத்திருப்பார்கள். குழந்தைகள் ஒவ்வொரு விரல்களாகச் சப்பிக் கொண்டே அம்மாவைப் பார்த்து ங்கே.. ங்கே.. என மழலை மொழியில் பேசுவதைக் கேட்டவுடன் என்னடா செல்லம்! பசிக்குதா? என்று அம்மாக்களும் பதிலுக்கு கொஞ்சிப் பேசியபடியே இருப்பார்கள். இப்படியான மகிழ்ச்சியான நேரங்களிலெல்லாம் டோபமின் என்கிற வேதிப்பொருள் வெளியே கொஞ்சம்கூட எட்டிப் பார்ப்பதில்லை. இதனால் தாய்ப்பால் ஹார்மோன்கள் சுரப்பதற்கென்று எந்த இடையூறும் இறுதிவரை வருவதில்லை.

இதில் இன்னொரு விசயமாக, ஆக்சிடோசின் ஹார்மோன்கள் சுரந்தவுடனே அவை அம்மாவிற்கு வேறொரு உதவியும் செய்கிறது. இந்த ஹார்மோன்கள் மூளையின் லிம்பிக் சிஸ்டத்திற்குச் சென்றவுடன், பாருங்களேன் அம்மா! இனி ஒன்றுமே பிரச்சினையில்லை. எல்லாம் நல்ல படியாகத் தான் போய் கொண்டிருக்கிறது என்று அமைதிப்படுத்துகிற வேலையிலும் நம் பிள்ளை வயிறு நிறைவதற்கு கங்கையின் தீராத பெருந் தீர்த்தம் போல தாய்ப்பால் சுரந்து கொண்டே இருக்கையில் குழந்தையுடன் கொஞ்சிக் குழாவி விளையாடிக் களிப்பதைவிட இனி உனக்கு வேறென்ன வேலையிருக்கிறது!″ என்று அம்மாக்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிற வேலையிலும் ஈடுபடுகிறது. இதனால் தான் அம்மாக்கள் தன் பிள்ளை எப்படி இருந்தாலும் என் பிள்ளை தங்கமாக்கும், தெரியுமா? என்றே பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் இதற்கான காரணமெல்லாமே இந்த ஆக்சிடோசின் ஹார்மோன்கள் தான்!

இப்போது நாம் கண்ணீரைப் போன்றே தாய்ப்பாலும் உணர்வுப்பூர்வமாக சுரக்கக்கூடிய ஒன்றுதான் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டோம் அல்லவா! இத்தகைய உணர்வுப் பூர்வமான விசயங்களை கையாளுகிற ஒன்றைத்தான் நாம் நமக்குத் தெரிந்த மொழியில் காலங்காலமாக மனசு என்று சொல்லிக் கொண்டே வருகிறோம். இந்த மனசு எப்போதெல்லாம் சந்தோசமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உடம்பிலுள்ள எல்லா உறுப்புகளும் சரியாக வேலை செய்து கொண்டு தான் இருக்கும். அதாவது பிள்ளை பெற்றவளின் மனசு எப்போதெல்லாம் சந்தோசமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் தாய்ப்பாலும் தங்கு தடையில்லாமல் சுரந்து கொண்டே இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

அருமைத் தாய்மார்களே! தாய்ப்பாலூட்டும் காலங்களில் உடலுக்கு ஈடாக நம்முடைய மனதைப் பற்றியும் நாம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரப்பதற்கான மருந்து, மாத்திரைகள், உணவுகள் என்பதெல்லாம் தாண்டி பெற்றவளினுடைய சந்தோஷங்கள் தான் தாய்ப்பால் சுரப்பதற்கான மிக முக்கியமான விசயம் என்பதை நாம் இப்போது விஞ்ஞானப் பூர்வமாகவே உணர்ந்து கொண்டோம் அல்லவா! ஆக, இனிமேலாவது நாம் கட்டாயம் தாய்ப்பால் புகட்டுகிற அம்மாக்களை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொள்வோம் தானே!

முந்தைய தொடர்களை வாசிக்க:

தாய்ப்பால் எனும் ஜீவநதி 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

Kanneer Paatu Kavithai By Vasathadheepan கண்ணீர் பாட்டு கவிதை - வசந்ததீபன்

கண்ணீர் பாட்டு கவிதை – வசந்ததீபன்

கண்ணீர் பாட்டு
********************
பெண்ணின் தினத்தில்
கர்ப்பிணி பலி
கண்ணில் குருதி ஊற்றெடுக்கிறது
ஆணின் அதிகாரத்தின் திமிர் நறுக்கப்பட வேண்டியது
பெண் இன்றி ஆண் இல்லை
ஆண் இன்றி பெண் இல்லை
இருவரின்றி வாழ்வு இல்லை
பெயர் பெற்றவர்கள் இறந்தால்
நாடே துக்கப்படும்
பெயரற்றவர்கள் மறைந்தால்
சிறு சலனம் கூட எழாது
எவரையும் எதையும் எதற்க்கும்
மரணம் பொருட்படுத்தாது.
ஓரமாகவே செல்கிறேன்
ஒதுங்கி ஒதுங்கி விலகுகிறேன்
முட்டிமோத கனவுகள் ஓடி வருகின்றன.
காலார நடந்து செல்ல முடியவில்லை
ஆற அமர யோசிக்க முடியவில்லை
பதட்டமாகவே பொழுது கழிகிறது
உண்மை உன் முன்
குற்றுயிராய் கிடக்கிறது
கண்மூடி கடந்து போகிறாய்
இடி உன்னைத் தேடுகிறது
ஏழு சுரங்கள்
எண்ணமுடியா ராகங்கள்
சின்னஞ் சிறு இதயத்தில்
ஆயிரம் பாட்டுகள்.

Kalaiyarasiyin Kavithaigal இரா. கலையரசியின் கவிதைகள்

இரா. கலையரசியின் கவிதைகள்

மீன் கூடை
**************
கடல் கை விட்ட பிறகு
கண்ணீரில் மூழ்கிய மீன்கள்…
வலைகளின் வஞ்சனைகளில் சிக்கி
உயிரை இழந்து கரையைத் தொட்டன
கதம்ப மீன்கள்.

உப்புக் காற்றில் ஊர் கூடி
செத்த உடம்பை ஏலமிட
ரத்தம் ஊறிய செதிள்கள்
துடிதுடித்து இறந்து
நெய்தலில் காத்து கிடக்கின்றன.

ரகம் வாரியாகப் பிரிக்கப்பட்டவை
பெருமுதலாளிகள் பிடித்துச் செல்ல
மிச்சம் மீதி வந்து சேர்ந்தன
மிச்சம் இல்லாத வாழ்க்கைப் பாட்டில்
மீதியைக் கழித்துக் கொண்டிருக்கும்
கிழவி கஞ்சம்மாளிடம்.

முந்திக்கு பத்தாத சேலை
முகத்தின் சுருக்கங்களை மூடிட
கால்கள் களைத்துப் பின்ன
கூனாகி சாய்ந்த முதுகு
கழுத்தை நிமிர விடாமல் பிடித்தது.

கழித்து விடப்பட்ட மீன்கள்
கிழவியிள் கூடைக்கு மாறுதல்
கேட்காமலே மாறி இருந்தன.
இறந்த பிறகு நாறும் மனிதனே
மூக்கைப் பிடித்துக் கொள்கிறான்.

தட்டுத் தாடுமாறி வண்டியில்
தவழாத குறையாய் ஏற
மூக்கை அடைத்து கொண்டோர்
வாயையும் விட்டு வைக்கவில்லை.
கிழவியைத் தடுத்த தடித்த வார்த்தை
இரக்கமின்றி இறங்கச் சொன்னது.

வாயைப் பிளந்து கண்கள் திறந்து
வியந்து பார்த்தன
இறந்த மீன்கள்
கஞ்சம்மாளின் தேய்ந்த செருப்பு
சாலையில் காதல் பரப்பி
வர மறுத்து வம்பு செய்கிறது.

தலையில் அமர்ந்தபடி கண்களை
மூடி இறந்திருந்த மீன்கள்
வழியில் கண்ணில் பட்ட
மச்ச அவதாரத்தில் இருந்த
கடவுளைப் பார்த்து எதையோ
கேட்க நினைத்தது போலும்.?

சாவு
******
கண்கள் வழிந்த கண்ணீரின்
ஈரம் கிடைமட்டமாக சரிய
வானத்தை பார்த்த கண்கள்
மெல்ல தானே மூடிக் கொண்டது.
அழுகுரல்கள் அங்குமிங்கும் சிதறி

அசைவற்ற உடலை பயமுறுத்த
நீண்ட கால்களின் விரல்களை
தொட்டு பார்த்தது பட்டாம்பூச்சி.

தட்டுமுட்டு சாமான்களை ஒதுக்கி
குளியலைத் தொடங்கி விட்டனர்.
அழுத்து சலித்து வாழ்ந்த உடல்
துவண்டு விழுகவே விரும்பியது.

சாவுக்கு காத்திருந்த மனிதர்கள்
அழகாக அலங்கரித்தனர்.
பட்டு சேலை ஒன்று படர
பார்த்து பார்த்து கட்டினர்.

சவப்பெட்டிக்குள் கிடத்தபட்ட உடல்
சத்தமின்றி அமைதியாய் இருக்க
மாலைகளின் இடுக்குகளில்
முகத்தை எட்டி பார்த்தனர் சிலர்.

தாரை தப்பட்டைகள் வரிசைகட்ட
ஆளுக்கொரு மாலை அணிவித்து
பெருமை சேர்த்தனர் உடலுக்கு.

வீடு,வாசல் எல்லாம் பிரிச்சு
உயிலும் எழுதி முடிச்சாச்சு
சண்டை சச்சரவு இல்லாமல்
வராத கண்ணீர வழிச்சு
வழிச்சு போட்டாங்க புள்ளைங்க!

பூக்கார முனியம்மா நெஞ்சுல
அடித்து அழுது மாஞ்சிட்டா!
வடக்குதெரு வண்ணமயிலு
வழக்கமான சேலையில வந்திருந்தா!
பக்கத்து அக்கத்து வீட்டுக்காரங்க
வாயில துணிய வச்சு
அழுவோமா? வேண்டாமா?னு
யோசிச்சுகிட்டே இருக்காங்க.

பூக்கள் மட்டும் வாசமா இருக்க
மணத்த முகர தான் முடியல.
அழுத கண்ண தொடச்சுகிட்டு
அலாக்கா தூக்கிட்டாங்க என்னைய!
வீடு, வாசல் ஊரக் கடந்து
சுடுகாட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.

நல்லா தோண்டுன குழி காத்திருக்க
மண்ணக் கட்டிக்கிட இறங்கினேன்
பிடி மண்ண பூத்தூவலா தூவ
முகத்த தொட்டு பார்த்த ஆசையில
அப்படியே மேல தங்கிருச்சு.

முழுசா மூடின குழிமேட்டுல
மனுச பொழப்பு அவ்வளனுதான்னு
சொல்லிகிட்டே போன சத்தம்
கொஞ்சம் கொஞ்சமா
என்னை விட்டு போய்கிட்டே இருக்கு.

Naraiyan Book By Thamizhkavi Bookreview By Karuppu Anbarasan நூல் மதிப்புரை: தமிழ்க்கவியின் "நரையன்" - கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: தமிழ்க்கவியின் “நரையன்” – கருப்பு அன்பரசன்




“அன்றைக்குப் பிறகு அவளின் புருஷன் அவளை தொடுவதே கிடையாது”

என்னவாக இருக்கும்..? அவளே சொல்கிறாள். நேர்மையான மனதோடு அவசியம் வாசியுங்கள்.

செப்டம்பர் 10, 1993, வெள்ளிக்கிழமை காலை எப்பொழுதும்போல் அவனுக்கும் அவளுக்கும் விடிந்தது.. விடிந்தது என்னவோ அந்த வீட்டில் அவர்கள் இருவருக்கும் என்றாலும் வீட்டின் எல்லா வேலைகளையும் அந்த நிறைமாத கர்ப்பிணி மட்டுமே… அவனும் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பது மட்டுமே இந்தக் காலத்தில் அவளுக்கு செய்யவேண்டிய கடமையாக நினைத்து கொண்டு அவளின் மன உணர்வை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் வழக்கம்போல் அலுவலகம் செல்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக அவளுக்கு வலி ஏற்பட.. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவளை பிரசவ பகுதிக்குள் அட்மிட் செய்கிறார்கள்.. மூன்றாவது மாதத்திலிருந்து அந்த பெண்மணிக்கு தொடங்கிய மருத்துவ பரிசோதனை அடங்கிய நோட்டுப் புத்தகமும் அங்கே மருத்துவர்களின் மேசையில் அட்மிட் செய்யப்படுகிறது… நாள் முழுவதும் வைத்திருந்து வலி குறைந்தது கூடுவது காரணமாக அவருக்கு செயற்கையாக தொடர் வலி தருவதற்கு மறுநாள் தயாராகிறார்கள் மருத்துவர்கள்..

தலைமை மருத்துவர் அங்கே வந்து அந்த மருத்துவ பரிசோதனை புத்தகத்தை பார்த்த பொழுது அதில் இன்னும் 15 நாட்களுக்கு தேதி தள்ளி குறித்திருப்பதை கண்டுபிடிக்கிறார். உடனடியாக அந்தப் பெண்ணுக்கு செயற்கையாக வலி வருவதற்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது… (நல்லா பார்த்தாங்க டீடெயிலு..!) அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் அவரது கணவன் வீட்டுக்கு வந்து சேர்கிறான்… அந்த பிரசவத்திற்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாதது போல… ஏதோ அந்த இரண்டு நாளையும் அவள் அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டதைப்போல நினைத்துக் கொண்டு.

மீண்டும் இன்று வலி ஏற்பட, இதை தன் கணவருக்கு சொன்னால்.. எரிச்சலோடுதான் கேட்பார் என்று பயந்துகொண்டு பக்கத்தில் குடியிருக்கும் மீராவுக்கு தகவல் சொல்ல, மீரா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் அவளின் கணவனை அழைத்து அவளின் நிலையை சொல்கிறார். மீண்டும் அதே மருத்துவமனை.. மருத்துவமனையில் அந்த பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட படுக்கை எண் மட்டுமே மாற்றப்பட்டது.. மற்றபடி கடந்த வாரம் நடைபெற்ற அனைத்தும் முறையாக நடத்தினார்கள்.

அந்தப் பெண்மணிக்கு தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இடுப்பு வலி.. அப்பாடா எப்படியும் இன்னிக்கு குழந்தை பெற்றிடுவார் இன்னொரு நாளைக்கு நாம வரத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டு வெளியே காத்திருக்கிறார் அவரின் கணவர்.. வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய வலி அன்று பகலும் இரவும் தொடர்கிறது.. சனிக்கிழமை காலை வருகிறார் மருத்துவர்.. செவிலியர்களும் அவரை பரிசோதனை செய்து இன்று இரவுக்குள் பிரசவம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள்..

கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய அவரின் பிரசவவலி கூடிக்கொண்டே இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை வரையும் வலி அதிகரித்துக் கொண்டே.. வெள்ளி சனி ஞாயிறு என மூன்று நாட்களும் அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை வராண்டாவில் நடக்கிறாள் படுக்கையில் படுக்கிறாள்.. நடக்கிறாள் படுக்கையில் மீண்டும் படுக்கிறாள்.. அவனுக்கோ ஒருபுறம் எரிச்சலாகவும் இன்னொருபுறம் வேதனையாகவும்.. உணர ஆரம்பிக்கிறான் அவளின் வேதனையை அவளின் கண்கள் வழியாக.

வலி ஞாயிற்றுக்கிழமையும் தொடர அந்த வலியின் உச்சமாக ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த பெண்ணுடைய குரல் மட்டுமே.. அழுகை ஒலி மட்டுமே.. அது அலறலாக எழும்ப மருத்துவமனையின் அமைதியை கிழித்துக்கொண்டு இருக்கிறது.. மருத்துவமனை வெளியில் அவன் மட்டுமே தனியாக அமர்ந்து அந்த வலியான அழுகையின் சத்தத்தை கேட்கும் மனவலிமை இல்லாதவனாக.. மருத்துவமனைக்குள் பசித்த பூனையைப் போன்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருக்கிறான்.. காதல் மணம் புரிந்த தம்பதி தான் இருவரும்.. அவளின் அலறல் அவருடைய மனதை பிசைந்து கொண்டே இருக்கிறது.. பிரசவ வலியின் வேதனை பெரும் துயரம் அன்று இரவு முழுவதும் அவனை கண்மூட விடவில்லை.. அவனுடைய அடிவயிற்றில் உருவமற்று ஏதோ ஒன்று சதையைக் கிழித்துக்கொண்டு குடல் வழியாக நெஞ்சாங்கூட்டை நெருங்குவதை போன்று அந்த நேரம்ததை உணர்கிறான்..

ஒவ்வொரு நிமிடமும் அறிய முடியாத அச்சம் பயம் இயலாமை அவனுக்குள் புகுந்து அவன் உடலையும் சிந்தனையையும் எதையோ செய்து கொண்டிருக்கிறது.. ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்கிற உதறல் அவனுக்குள் ஒவ்வொரு நாழிகையும் அதிகரித்துக்கொண்டே.. தூங்காத இரவாக ஞாயிற்றுக்கிழமை அவனின் மன வலுவை சிதைத்துக் கொண்டே இருக்கிறது.. அந்தப் பெண்ணின் வேதனை மிகுந்த வலிகொண்ட அலறல் அவனுடைய விழி ரப்பையின் முடிகளை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்து கொண்டே.. இன்னொரு உயிரை கொண்டு வருவதற்காக ஓருயிர் படும் அவஸ்தை அவனுடைய இருதயத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது.. அந்த பெண்மணியின் குரல் மட்டுமே அழுகையாக இரவு முழுவதும்..

திங்கள் கிழமை புலர் காலைப் பொழுதின் 5 முப்பத்தி நான்கு மணிக்கு குழந்தையின் அழுகுரல் ஒலி அமைதியாக உறங்கிக் கிடந்த கதிரவனை மெல்ல வெளியே வா என்று தாயின் குருதி படிந்த தன் இதழ்களால் தாயின் வயிற்றுச் சூட்டின் கதகதப்போடு முத்தம் ஒன்றினை பதிக்கிறான் வாஞ்சையாக.

பிரசவ வலியின்.. வேதனையின்.. அழுகையின்.. துன்பத்தை அந்த இரவு மிகப் பெரும் காதலாக தன் மனைவி மீது கொள்ளச் சொல்லி அவனுக்குள் நிகழ்த்திவிட்டு சென்றது. புதிய ஒரு உயிரின் இதயம் துடிப்பதற்கு தாயின் இதயம் எத்தனை வேகமாக துடித்திருக்கும் ரத்தம் தெறித்திட அழுதிருக்கும் என்பதை.. வலித்திருக்கும் என்பதை அன்றுதான் முழுவதுமாக உணரத் தொடங்கினான். அவன்தான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கருப்பு.. பிரசவ வலியால் துடித்தவராக எனது இணையர் சுமதி.. அவளின் உயிர் சுமந்த இன்னொரு உயிராக மகன் சத்தியபாரதி..

நரையன் தொகுப்பில் இடம் பெற்றிருக்கக் கூடிய “கொடுத்த இன்பம்” சிறு கதையை வாசிக்கும் பொழுது அன்று நான் அறிந்த அத்தனை வலிகளையும் உணர முடிந்தது. பெரும்பாலும் எந்த ஆணுமே தன்னுடைய மனைவி பேறுகாலத்தில் அவளின் தாய் வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லும் பொழுது அருகிலிருந்து பார்ப்பது என்பதும் அருகில் இருந்து அவளுக்கு தேவையான பணிவிடைகளை செய்வது என்பதுவும் குறைந்து போயிருக்கிறது. உலகமயமாக்கலும் நுகர்வு கலாச்சாரமும் நம் அனைவரையும் ஆட்கொண்டிருக்கும் இக்காலத்தில் கணவன் மனைவி உறவுகளுக்குள் மிகப்பெரியதொரு இடைவெளியினை அமைத்தும் உரையாடல்களையும் குறைத்தும் வைத்திருக்கிறது.

பேறுகால பெண்களுக்கு தேவைகள் என்பது பெரும்பாலும் ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும். அவளுடைய மன உணர்வுகளின் தேவை உணரமுடியாமல் தனித்து விடப்பட்டு எல்லாமும் மருத்துவமனைகளிலும் அங்கு பணி புரியும் செவிலியர்கள் இடமும் அவைகள் ஒப்படைக்கப்படுகிறது பேறுகாலத்தில் இக்காலங்களில். குழந்தை பிறப்பிற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அந்தப் பெண் படக்கூடிய பெரும் துயரங்களை வலிகளை அதன் அவஸ்தைகளை நேரில் பார்க்கக் கூடிய ஆண்களுக்கு மீண்டும் தன்னுடைய மனைவியை குழந்தை பிறப்பிற்குகான கருவியாக்கி உட்படுத்த மாட்டான் அவள் மீது நிஜமான நேசம் கொண்டவனாக இருந்தால்.

அன்பின் அடையாளம் புது உயிர்களை படைப்பது என்றாலும் புது உயிர்களை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவது என்றாலும் இயற்கையின் அற்புதங்களில் மேன்மை களில் அழகில் சிறப்பு வாய்ந்தது என்றாலும் அதில் அந்தப் பெண்உயிர் மட்டும் படக் கூடிய வலிகளை சொல்லிமாளாது.. எழுதி மாளாது.. எந்த எழுத்துக்குள்ளும் அடங்க முடியாத வலி குழந்தை பிறக்கும் பொழுது இருக்கக்கூடிய அந்த உயிரின் வலி. அந்த வலியை விட நூறு மடங்கு மகிழ்வு இன்னொரு உயிர் இந்த மண்ணில் வந்து தன் முதல் அழுகையோடு காற்றை சீண்டும் போதும் போதும், தாயின் பச்சை இரத்தத்தின் ஈரத்தோடு நிலத்தைத் தீண்டும் போதும். வயிற்றில் பிள்ளையை சுமந்திருக்கும் பெண்ணும்; மழையைத் தேக்கி வைத்திருக்கும் கருமேகமும் எப்பொழுது மடை திறப்பார்கள் என்று எவருமே அறிய முடியாது.. இயற்கையின் படைப்புகளில் இந்த இருவருமே பேரழகானவர்கள்.

பெண்கள் அனைவருமே இந்த வலியினை கடந்து வந்திருந்தாலும் சக பெண்ணொருத்திக்கு இப்படியான வலி ஏற்படும் பொழுது எல்லா பெண்களுமே தனக்கான வலியாக நினைத்து அந்தப் பெண்ணுக்கு சுகமான பிரசவத்தை நடத்தி முடிக்க ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும், ஆலோசனைகளையும் பேரன்போடு செய்திடும் அக்கறையில் இருக்கும் மனித உள்ளங்களின் அழகுதான்
எல்லாவற்றிலும் பேரழகு.

அப்படியான பேரழகுகளை இந்த “கொடுத்த இன்பம்” கதையில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார். கதையில் சுகந்தியும்.. சுகந்திக்கு வலி ஏற்படும் பொழுது உடனிருந்து துடித்திடும் பெண்களும் பேரழகானவர்கள்.

“தான் அவளுக்கு கொடுத்துப் பெற்ற இன்பத்தை, இப்படித் திரட்டித் தந்திருக்கிறாள் என்று வியப்புறும் ஆண்களுக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை அவள் பட்ட துன்பம்.. அதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யப் போவதுமில்லை ஆண்களின் உலகம்.

இதுநாள் வரையிலும் எத்தனை பெண்களோடு கலவியில் ஈடுபட்டோம்.. காதலிப்பதாக சொல்லி படுக்கையறை சுகத்தோடு முடித்துக்கொண்ட பெண்கள் எத்தனை பேர் என்பவையெல்லாம் ஆண்களின் உலகம் சூழ்ந்து நிற்கும் பொழுது பெருமையாக பேசியும். அவைகளை எழுத்திலும் கொண்டு வந்து பெண் உடல் குறித்தான தம் பார்வைகளை ஆண் திமிரோடு பொதுவிலும் வைப்பார்கள் வெட்கம் ஏதுமில்லாமல் கௌரவம் என்றே.. கேட்கும் வாசிக்கும் நாமும் இவைகள் எல்லாவற்றையும் மிகச்சாதாரணமாக கடந்து போய்க்கொண்டே இருப்போம்..

குழந்தைப் பருவம் தொடங்கி பதின்பருவத்தை ஊடுருவி கட்டாயத் திருமணத்திற்கு விருப்பமின்றி தலையசைத்து, திருமண உறவில் மனம் ஒன்றாத சூழலில் அதனை பக்குவமாக புரிந்து ஏமாற்றி அனுபவித்த ஆண் உடல்கள் எத்தனை எத்தனை என்பதையும்.. தான் மனமுவந்து கலவியில் ஈடுபட்ட ஆணிடம் நம்பி பல உண்மைகளை பகிர்ந்து கொண்டாலும் அந்த ஆணின் பார்வையில் தன்னை யாராக பார்க்கிறான் என்பதையும் இங்கு வெடிப்புறப் பெண்கள் பேசத் தொடங்கிவிட்டால் ஆண்களின் உலகம் முற்றாக பொதுவில் நிர்வாணப்படுத்தப்பட்டு கேவலப்பட்டு நிற்கும். அந்த வேலையினை “கற்பெனப்படுவது” என்கிற சிறுகதையில் ஆழமாகவும் காத்திரமாகவும் பேசி பொதுக் குளத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் தமிழ்க்கவி அவர்கள்.

கலவியும் காதலும் இரு பாலருக்கும் பொதுவானது ஆனால் அவை குறித்து பேசுவது என்பது இங்கு ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாக மாறி இருக்கும் சூழலில் இந்த கதையில் பெண் ஒருவர் வலியோடு தான் கடந்து வந்த வாழ்வினைப் பேசுவார். “கற்பெனப்படுவது” இருபாலருக்குமானதே .

“பெண்ணுக்குள் என்ன உண்டு” என்கிற சிறுகதையிலும்.. அறிமுகமானவர்கள், அந்நியோன்யமானவர்கள் என நினைத்து பெண் பிள்ளைகளை அவர்களின் பாதுகாப்பில் விட்டுச் சென்றிடும் பொழுதினில் அங்கே இருக்கக்கூடிய ஆண்களால், மனதளவிலும் உடலளவிலும் பெண் குழந்தைகளின் உடல் என்னவாக இருந்தது.. எப்படிப் பார்க்கப்பட்டது.. நிகழும், தொடரும் கொடுமைகளை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை கதைக்குள் பெரும் வலியோடு கொண்டு கொண்டு வந்து இருக்கிறார் சிறுகதையாசிரியர்.

“சாவை நோக்கி” சிறுகதையில் எழுத்தாளரின் நேரடி கள அனுபவங்களிலிருந்து பெண் புலிகளின் மெச்சத் தகுந்த, மரியாதைக்குரிய, அனைவராலும் போற்றப்படுக்கூடிய வீரம் ஆண்களுக்கும் நிகரானது என்பதை சொல்கிறது. இலக்கு மட்டுமே குறிக்கோளாக கொண்ட போராளிகளின் நிகழ்கால சூழ்நிலை கணக்கில் எடுக்காமல் நேற்றைய நிலையிலிருந்து வடிவமைத்த திட்டத்தின் அடிப்படையில் செல்ல முற்படும் பொழுது எத்தகைய பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்.
அக் கதையில் வரக்கூடிய கடைசி வாக்கியம்..

“பிள்ளை… நான் சாகலாம்.. நீ சாகலாம்.. “நாங்கள்” சாகக் கூடாது என்பதை மறந்திட்டியா..” இதில் வரக்கூடிய அந்த “நாங்கள்” என்கிற வார்த்தை ஆழம் மிகுந்ததாக அர்த்தம் பொதிந்ததாக அமைந்திருக்கிறது. அர்த்தமற்று மனித இழப்புகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது “சாவை நோக்கி” சிறுகதை.

ஒப்பாரி என்கிற சிறுகதையில்.. செத்துப்போன பரமசிவத்தின் கடந்த கால வாழ்க்கையும்.. அவர் உடல் நலிவுற்றதும் மனைவி மற்றும் பிள்ளைகளால் சந்திக்கும் பாடுகளையும்.. கதையின் உச்சமாக மனைவியின் ஒப்பாரி வீடியோ படமாக்குவதாகும்.

சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு “நரையன்”.. தலைப்பின் பெயரில் இருக்கக்கூடிய சிறுகதை குறித்து நான் இங்கு எதுவும் சொல்லப் போவதில்லை. மிகவும் அழகிய நேசம் மிகுந்த வலிமிகுந்த கதை இது. அந்த உணர்ச்சியை அதிலிருக்கும் பேரன்பை நீங்கள் வாசிக்கும்போது அனுபவியுங்கள்.

தொகுப்பில் இருக்கக்கூடிய 15 கதைகளில் “காணி வைத்தியம்” என்கிற கதைக்குள் மட்டும் என்னால் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை..

“சிவில் பாதுகாப்பு” கதையோ காவல்துறையின் நிகழ்கால செயல்பாடுகளை பகடி செய்யக்கூடிய அளவில் இருக்கிறது.

“மாற்றங்கள்” என்ற கதை உலக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நம்முடைய நிலத்திற்குமான தொடர்பு எப்படி வகை மாற்றம் செய்து ஆளும் அரசுகளால் கள்ளத்தனமாக மக்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை பேசுகிறது.

கதைகள் சொல்லும் அட்டைப்படத்துடன் அழகிய முறையில் வடிவமைத்து ஆசிரியரின் 15 கதைகளை தேர்வு செய்து தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள் நடு வெளியீட்டகத்தார்.. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இலங்கைவாழ் தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளை அவர்களின் மொழியிலேயே கதையாக நம் கையில் கொடுத்து பல கதைகளின் வழியாக அமைதியாக இருக்கும் குளத்திற்குள் ஒரு கல்லினை வீசி அதிர்வினை ஏற்படுத்தி இருக்கும் தமிழ்கவி என்கிற தமயந்தி அவர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

நூல்: நரையன்
வெளியீடு: நடு_வெளியீடு
ஆசிரியர்: தமிழ்க்கவி
பக்கங்கள்: 128.
இந்திய விலை: 140/-
இலங்கை விலை: 400/-

கருப்பு அன்பரசன்.

Unarvu Poem By Shanthi Saravanan உணர்வு கவிதை - சாந்தி சரவணன்

உணர்வு கவிதை – சாந்தி சரவணன்




அன்பு
அகந்தை
அழுகை
அமைதி
கோபம்
காதல்
காமம்
சிரிப்பு
புன்னகை
மௌனம்
பசி
வலி
என உணர்வுகள் நம் உள்ளத்தில்
உலா வருகிறது!
உணர்வுகளை சொற்கள் பிரதிபலிக்குமா!
மொழியில்லா கற்காலத்தில் கூட உணர்வுகள் வெளிபட தானே செய்தது!
அப்படியிருக்க
சொல் அகராதியை கையாண்டு உணர்வை
முழுமையாக வெளி கொணர முடியுமா!
வார்த்தை முகமூடிகள் அணிந்து
உணர்வுகளை
முடக்குவது ஏன்?
உணர்வுகளை உணர்வால் தான் உணர முடியும்
என்பதை மறந்து மறுப்பது ஏன்?
இழை போன்ற
உணர்வை இதயத்தில் ஏந்தி உணர்ந்து மற்றவர்கள் இதயத்தில் வாழ்ந்து தான் பார்போமே!