நூல் அறிமுகம்: மதுரைபாலனின் லயம் நாவல் – ச.லிங்கராசு

நூல் அறிமுகம்: மதுரைபாலனின் லயம் நாவல் – ச.லிங்கராசு




தமிழர் தம் கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை காலம் தோறும் கைப்பற்றிக் கொண்டு, எல்லாமே எங்களால் என்று தம்பட்டம் அடித்துத் திரியும் கூட்டத்திற்கு தர்க்கரீதியில் பதிலடி கொடுக்கும் வேளையில் இறங்கி இருக்கும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், மதுரை பாலன் அவர்களும் தம் பங்களிப்பாக ‘ லயம்’ என்னும் நாவல் மூலம் ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைத்து தமிழிசை எப்படி கர்நாடக சங்கீதமானது என்பதை நிறுவ முயல்கிறார்.

அவரின் அறச்சீற்றத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது அவரின் எண்ண ஓட்டத்திற்கு வடிகாலாக நாவலை எழுதியவர்.

கதை மாந்தர்களை அற்புதமாகப் படைத்திருக்கிறார். தமிழிசையின் மேன்மையை உணர வைக்க, சதாசிவ சாஸ்திரி என்ற பாத்திரத்தை உருவாக்கி அவர் மூலம் தமிழிசைப் பற்றிய தரவுகளை சொல்ல வருகிறார் அவர் ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள பிராமணராகவும் நாவலில் வருகிறார்.

தமிழ் நீச பாஷை அதில் பாடுவதே அபச்சாரம் என்ற கொள்கையை கடைப்பிடித்த பிராமணர்கள், தண்டபாணி தேசிகர்பாடிய மேடையை’ ஜலம்’ விட்டு அலம்பி விட்ட அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் ‘ அரிய’ சேவை பற்றி எல்லாம் நாவல் சொல்கிறது. ஆபிரகாம் பண்டிதர் எழுதிய தமிழிசை பற்றிய ஆராய்ச்சி நூலில், எந்தெந்த தமிழிசை ராகங்களை கபளிகரம் செய்து அதற்கு மாற்று பெயர் சூட்டி கர்நாடக சங்கீதமாக பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதை பாலன் சாஸ்திரி மூலமே வெளி கொண்டு வருவது பாராட்டப்பட வேண்டியது.

இந்த மும்மூர்த்திகளுக்கு முன்பே தமிழ் மூர்த்திகளான முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசல கவிராயர் போன்றோர் தமிழிசையினை வளர்த்து வந்திருக்கிறார்கள். பல்லவி, அனுபல்லவி, சரணம். முறையே எடுப்பு, தொடுப்பு, மடிப்பு என்றெல்லாம் வழங்கி வந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலேயே தமிழிசையை பற்றி குறிப்பு இருக்கிறதென்று அறிகிறோம். இத்தனை பெருமையும் பழைமையும் கொண்ட இசைக்கு சொந்தக்காரர்கள் நாம். தமிழரிடத்தில் இசையே கிடையாது என்று வாய் கூசாமல் சில வான்கோழி கூட்டங்கள் இன்று கூவி திரிவதையும் பார்க்கிறோம்.

நாவலில் வரும் கதை மாந்தர்களான சதாசிவ சாஸ்திரி, சீராளன், சௌமியா, ரம்யா போன்றவர்களுடன் சீராளனின் உறவினர்களாக வருபவர்களும் நாவலை தூக்கிப் பிடிக்கிறார்கள். சிறையில் பெண்களின் நிலைப் பற்றி இதுவரையில் எவரும் எழுதினார்களா என்று தெரியாது.

ஆனால் மதுரை பாலன் தெளிவாக எழுதிச்செல்கிறார். ஆனால் அவர்களின் ‘பலவீனங்களையும்’ சொல்லும் இடம் சற்று நெருடலாக இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

நாவலில் ஒரு அத்தியாயத்தில், தன் கணவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்த தகவலை சொல்லும் மனைவி அந்தப் பெண்ணின் ஜாதியை சொல்வதைப் போல் பாலன் எழுதியது ஏற்றுக் கொள்ள தக்கதல்ல. ஒரு சிவப்பு சிந்தனை காரரிடமிருந்து இதை எதிர்ப்பார்க்கவில்ல. அவரின் இந்த நாவலை வாங்கிப் படிக்கும் பெண்களில் ஒருவர் கூட அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் இருக்க மாட்டார்களா? இந்த ஒரு குறையை தவிர நாவல் பல சமூகப் பிரச்சனைகளைத் தொட்டு செல்கிறது.

தமிழிசையின் சிறப்பை வலியுறுத்தும் இந்த நாவலுக்காக மதுரை பாலன் அவர்கள் நிறைய உழைத்திருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து, அவரின் உழைப்புக்கு மரியாதை செய்வது நம் கடமை.

ஆசிரியர் : மதுரை பாலன்
நூல் : பாலன் வெளியீடு
விலை : ரூ.220/-
பக்கங்கள் : 232
அலை பேசி : 8667296634

ச.லிங்கராசு
98437 52635

நூல் அறிமுகம்: தொ.பரமசிவனின் சாதிகள் உண்மையுமல்ல… பொய்மையுமல்ல… (நேர்காணல்கள்) – சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: தொ.பரமசிவனின் சாதிகள் உண்மையுமல்ல… பொய்மையுமல்ல… (நேர்காணல்கள்) – சு.பொ.அகத்தியலிங்கம்




தொ.ப வை வாசிக்க ஓர் திறவுகோல்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் எழுபதாவது அகவையில் நம்மை விட்டுப் பிரிந்தார் பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் . அவரின் சிந்தனைப் போக்கையும் எழுத்துகளையும் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் எளிய நூல் “சாதிகள் : உண்மையுமல்ல …பொய்மையுமல்ல…,” [ நேர்காணல்கள் ].

13 நேர்காணல்களின் தொகுப்பு . தொ. பரமசிவன் என்கிற பேராளுமையை நேர்காணல் செய்த ஒவ்வொருவருமே முத்திரை பதித்த ஆளுமைகளே . ஆகவே இந்நூல் பல கோணங்களில் தொ. பரமசிவத்தின் பண்பாட்டு நோக்கு , திராவிட இயக்கம் , தமிழ் தேசியம் ,
பெரியார் , கோவில் , சாதி , தமிழ் பண்பாட்டு வரலாறு இவற்றை மக்கள் வாய்மொழித் தரவுகளோடு ஆழமாகவும் அகலமாகவும் விவாதிக்கும் நூலாகிவிட்டது .

இந்நூலை திறக்கும் போது சிந்தனைக்கான பல புதிய வாசல்கள் திறக்கும் ; நூலாசிரியரோடு உடன்பட்டும் முரண்பட்டும் நிறைய கேள்விகள் எழும் . அதுவே இந்நூலின் வெற்றி .

தொ. பரமசிவன் வழக்காமான எழுத்துமொழி சார்ந்த ஆய்வினின்று விலகி வாய்மொழி வழக்காறுகள் என மக்கள் வாழ்வோடு ஊடாடி புதுதடத்தில் பயணித்தவர் . ”எழுத்து என்பதே அதிகாரத்தின் பிறப்பிடமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.” என திரும்பத் திரும்பச் சொன்னவர். அழகர்கோயில் சார்ந்து இவர் செய்த முனைவர் பட்ட ஆய்வு பெரிதும் பேசப்பட்டது .

இவர் பெரியாரை பெரிதும் முன்னிறுத்துகிறார் . அதே சமயம் கோயில் சமயம் நாட்டார் வழிபாடு குறித்து பெரிதும் ஆர்வம் காட்டுகிறார் . அதேபோல் , “ நான் தமிழ் தேசியர்தான்” என்று சொல்லும் போதே, “ நான் இந்து அல்ல” என பகீரங்கமாக அறிவிக்கிறார் . திராவிட சித்தாந்தம் குறித்து ஓர் வித்தியாசமான பார்வையை முன் வைக்கிறார் . அதே நேரம் கம்யூனிஸ்டுகளின் மீது சில நியாயமான விமர்சனங்களையும் சில மேலோட்டமான நியாயமற்ற விமர்சனங்களையும் வைக்கிறார் . அவை பெரும்பாலும் பேட்டி கண்டவர்கள் இவர் வாயிலிருந்து பிடுங்கியதாகவும் உள்ளன.

பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட நேர்காணல்களாக இருப்பதால் பலவற்றில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கேள்விகளும் பதிலும் இடம் பெறுவதால் ஆரம்பத்தில் இந்நூல் சிறிது சோர்வு தட்டுகிறது . ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கேள்விகளும் இருப்பது புரிதலை மேம்படுத்துகிறது . “ மொழிக்கல்வியும் மதிப்பீடுகளும்” என வ. கீதா , கோ. பழநி செய்த நேர்காணலும் , “ கோட்பாட்டுரீதியான பிரச்சனைகள்” எனும் தலைப்பில் சுந்தர் காளி மேற்கொண்ட நேர்காணலும் புதிய கோணத்தில் பார்வையை ஆழமாக விரிக்கிறது . கால்டுவெல் குறித்த நேர்காணலும் ,
ச. தமிழ்ச்ச்செல்வன், அ. முத்துலிங்கம் ஆகியோரின் நேர்காணல்களும் இன்னொரு கோணத்தை வெளிக்கொணர்கிறது . விரிவஞ்சி ஒவ்வொரு நேர்காணலையும் இங்கு நான் சுட்டவில்லை.

பெரியாரைப் பற்றி பல மதிப்பீடுகளைச் சொல்லிச் செல்கிறார் ,” பார்பனியம் கோலோச்சி நின்றபோது , ‘பார்ப்பான்’ என்ற சொல்லையே இழிசொல்லாக மாற்றிக் காட்டியதுதான் பெரியாரின் சாதனை . அவருடைய வெற்றி, அதிர்ச்சி மதிப்பீடுகளைக் கொண்டிருந்தது.” என்பது அதில் ஒன்று .

நீங்கள் பெரியாரை போற்றுகிறீர்கள் ஆனால் கோயில்களை ஆராய்ச்சி செய்கிறீர்கள் ஏன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் போது ,” எனக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை. அவற்றை வணங்குகிற மக்கள் மீது கவர்ச்சி இருக்கிறது ; நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் அழகை நான் ரசிக்கிறேன். கோவிலுக்கு போகும் அனைவரும் தினசரி சிவபூஜையோ விஷ்னுபூஜையோ செய்கிற மக்கள் அல்ல. கோவில் என்பதும் திருவிழா என்பதும் நிறுவனங்கள். திருவிழாக்களின்றி ஓர் சமூகம் இயங்க முடியாது .” என்கிறார்.

நாட்டார் சடங்குகள் விழாக்களில் காணப்படும் ஒரு வித ஜனநாயத்தன்மை ; நிறுவன மதங்களில் விழாக்களில் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார் . பல்வேறு அவைதீக மதங்களின் செல்வாக்கு ஓங்கியதையும் தேய்ந்ததையும் வெறுமே மூடநம்பிக்கை , ஆதிக்கம் என கடந்து போகாமல் , மக்களின் வாழ்வியல் தேவையோடு இணைந்து பார்த்துள்ளார் .

மதம் , கோவில் , சடங்கு , நாட்டார் வழிபாடு என பலவற்றை பண்பாட்டு அசைவாகக் காணும் இவரின் பார்வையில் உடன்படவும் முரண்படவும் இடம் உண்டு .

திராவிடப் பண்பாடென்பதை , நான்கு மாநில பொது பண்பாடென சொல்லிச் செல்லும் போது ; 1] தாய் மாமனின் முக்கியத்துவம் ,
2] இறந்தவரை தொட்டு சடங்கு செய்தல் 3] பெண்களை பொதுவெளியில் அடிப்பதை சகிக்காமை என சுருக்கிவிடுகிறாரோ ? சில இடங்களில் தாய் தெய்வ வழிப்பாட்டை இம்முன்றில் ஒன்றாக வைக்கிறார் .

சாதியை பொதுவாக எதிர்த்த போதிலும் அகமண முறையே சாதி நீடிப்பின் மையம் என்பதை போகிற போக்கில் ஒப்புக் கொண்டாலும் தாய்மாமன் உறவு சார்ந்த பெருமிதம் சாதிக்கூட்டுக்குள் திருமண பந்தத்தை திணிப்பதல்லவா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது .

சாதியைப் பற்றி நிறைய பேசுகிறார் . உண்மையுமில்லை… பொய்மையும் இல்லை என ஒரு நிலை எடுக்கிறார் .” சாதி ஒழிப்புப் பற்றிய நம் பார்வை எல்லாம் அடிப்படையில்லாத ஆர்வக்கோளாறுகளே” என்கிறார். மேலும்,” சாதி ஒழிப்பு என்பதை , ஏதோ கொசு ஒழிப்பு போல சுலபமாகப் பேசமுடியாது . சாதி என்கிற அமைப்பு அவ்வளவு எளிமையானது கிடையாது . சாதியை ஒழிக்க முடியாது ஆனால் சாதியைக் கரைக்க முடியும்.” என்கிறார் . கொசுவையும் ஒழிக்க முடியவில்லையே , எல்லாவிதமான கொசு அழிப்பு மருந்துக்கும் தன்னை தகவமைத்து மீண்டும் மீண்டும் புதிதுபுதிதாக உற்பத்தியாகிறதே. கிட்டத்தட்ட சாதியும் அப்படித்தானோ ? இவை ஆழமான விவாதத்துக்கு உரியவையே !

“ஒன்றே குலம், ஒருவனே தேவன் “ என்பதும் பன்மைக்கு எதிரான பாசிசக் குரலே என போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் தொ.ப . “ ஒரு நாடு , ஒரு மொழி , ஒரு கலாச்சாரம்” என்கிற குரல் பலமொழி பல பண்பாட்டை எதிர்ப்பதால் அதை பாசிச முழக்கம் என்பது மிகச்சரி ; ஆயின் சாதி வேற்றுமை , மத மோதல் இவற்றைத் தவிர்க்க “ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்” என்பது எப்படி பாசிசமாகும் என்கிற கேள்வி என்னுள் எழுகிறது .

“மொழித் தூய்மைவாதம் ஓர் எல்லைக்கு மேல் பாசிசமாகத்தான் போய்முடியும்,”எனவும் , “ மொழி மாறும் தன்மையுடையது; மாறுவதனால்தான் அது உயிரோடு இருக்கிறது,”எனவும் சரியாகவே மதிப்பிடுகிறார் . திராவிட இயக்கம் தமிழுக்கு கொடுத்த சொற்கொடை குறித்து பெருமிதம் கொள்ளும் தொ.ப, பொதுவுடைமை இயக்கம் தமிழுக்கு அளித்த சொற்கொடை குறித்து பேசவில்லை . தமிழில் அறிவியல் நூல்களை கொண்டுவந்து தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய என்சிபிஹெச் பற்றி தொ.ப நன்கு அறிவாரே ! ஏனோ தெரியவில்லை அது குறித்தெல்லாம் பேசவில்லை. “ பொதுவுடைமை வளர்த்த தமிழ்” எனும் என் [சு.பொ.அ] நூல் இது பற்றி நிறைய பேசுகிறது . தோழர்கள் தேடி வாசிக்கவும்.

பெரியாரை “எதிர் பண்பாட்டாளராக” தொ.ப காண்கிறார் . ”எதிர் பண்பாட்டின்” தேவையை வற்புறுத்துகிறார் . அனைத்து விதமான ”ஆதிக்க பண்பாடுகளுக்கும்” எதிராக ஓர் ”மாற்றுப் பண்பாட்டை” கட்டி எழுப்ப வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது . அதற்கான சிந்தனை வாசலை அகலத்திறக்கவும் ; எதிரும் புதிருமான கேள்விகளை எழுப்பி விடைதேடவுமான காலகட்டத்தில் இந்நூல் வந்திருப்பது பாராட்டுக்குரியது .

இன்னும் பேசப் பேச நீளும் . இந்த நேர்காணல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொ.ப குறித்து எந்த இறுதி முடிவுக்கும் வந்துவிட முடியாது . வந்துவிடக்கூடாது . நேர்காணல் என்பதால் கேள்வி கேட்பவரின் பார்வைக் கோணம் ; கேள்விகளிலும் பதில்களிலும் நிச்சயம் இருக்கும் . எனவே தொ.ப வின் எழுத்துகளையும் ஆக்கங்களையும் தேடிப் படிப்பதே சரியான விவாத களம் அமைக்க உந்தும். இந்நூல் அவற்றை தேடி வாசிக்க ஓர் திறவுகோல் .

நூல் : சாதிகள் : உண்மையுமல்ல… பொய்மையுமல்ல…, [ நேர்காணல்கள் ]
ஆசிரியர் : தொ.பரமசிவன் 
விலை : ரூ. 270 /-
பக்கங்கள் : 232 

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி]லிட்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934

[email protected]

சு.பொ.அகத்தியலிங்கம்.
4/9/2022.
முகநூல் பதிவிலிருந்து

தொடர் 28: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 28: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



ஃபிரெஞ்சு சினிமா- 1
விட்டல்ராவ்

உலக சினிமாவுக்கு பெரும் பங்காற்றிய நாடுகளில் ஃபிரான்ஸ் மிக முக்கியமானது. பின்னர் புறப்பட்ட புதிய அலை சினிமாவுக்கும் பிரான்ஸ் முக்கிய பொறுப்பு வகித்த நாடு. அத்தோடு நவீன இந்திய சினிமாவின் தோற்றத்திற்கும் பிரெஞ்சு திரைப்படகர்த்தா ஒருவரின் பங்கேற்பு முக்கியமானது. பிரெஞ்சு சினிமாவின் அறிமுகமும் தொடர்பும் பரிச்சிய அனுபவமும் இந்த பயாஸ்கோப்காரனுக்கு சென்னை பிரெஞ்சு கலையிலக்கிய மையத்தின் (Alliance Franchaise) தொடர்பால் ஏற்பட்டது. அப்போது என்னோடு ஓவியராய் செயலாற்றிக் கொண்டிருந்த காலஞ்சென்ற ஓவியர் வெ.ஜெயராமனின் தம்பியும் பிரெஞ்சிலிருந்து நேரிடையாக குட்டி இளவரசன் நூலை The Little Prince பிரெஞ்சு நூலாசிரியர் Antoine De saint Exupery) தமிழில் மொழி பெயர்த்தவரும், பிரெஞ்சு புதிய அலை திரைப்பட கர்த்தா, ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோவைப் பற்றிய Francois Truffaut நூலைத் தமிழில் எழுதியவருமான வெ.ராம், அலியான்ஸ் ஃப்ரான்சேஸ் மையத்தில் படங்கள் திரையிடல் பணியில் துணை புரிந்து வந்தவர். இவர்களின் வழிகாட்டலில் நானும் காலஞ்சென்ற ஓவியர் அச்சுதன் கூடல்லூரும் இன்னும் சில ஓவியர்களும் அம்மையத்தின் கலைப் பிரிவில் உறுப்பினர்களானோம். பிரெஞ்சு கலாச்சார மையத்தில் நாங்கள் எங்கள் ஓவியங்களைக் காட்சிப்படுத்தினோம். சென்னையிலிருந்தபோது அக்கிரகாரத்தில் கழுதை தமிழ்த் திரைப்படத்தை தயாரித்து இயக்கிக் கொண்டிருந்த மலையாள திரைப்பட கர்த்தா காலஞ்சென்ற ஜான் ஆப்ரகாம் அவர்கள் பிரெஞ்சு சினிமா பார்க்க வருவார். ஜான் இயக்கிய அம்மா அறியான் படத்தின் சில காட்சிகளில் பிரெஞ்சு திரைப்பட கலைஞர் Jean Cacteajj-ன் பாதிப்பு தெறிக்கும். அச்சுதன் கூடல்லூர் ஜானுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

இதை எழுதும் சமயம் ஆவணப்படங்கள் (Documentary Filim) குறித்து கொஞ்சம் பேசலாம் என்று வரலாறு, அன்றாட நிகழ்வுகள், இடம் பொருள் ஏவல் என்று பலதையும் மாற்றாமல் கலைத் தன்மையோடும்- அழகியலோடும் எடுப்பவை ஆவணப்படங்கள், ஓவியம் சிற்பம் குறித்த ஆவணப் படங்கள் கூடுதல் அழகை இயல்பாகவே கொண்டு விடுகின்றன. தமிழில் எடுக்கப்பட்ட, இந்தியாவில் எடுக்கப்பட்ட அரிய ஆவணப் படங்களையும், அவற்றின் கர்த்தாக்களையும் பற்றிய, சொல்லப்படாத சினிமா, என்ற அரிய தொகுப்பு நூல் நிழல் திருநாவுக்கரசு அவர்களால் தொகுக்கப்பட்டு நிழல் வெளியீடாக சில காலம் முன்பு வந்திருக்கிறது. சொல்லப்படாத சினிமா நூல் விமர்சகர்களால் சொல்லப்படாத நூலாகவே கிடப்பது தமிழின் துரதிர்ஷ்டம்.

அலியான்ஸ் ஃப்ரான்சேஸ் (Alliance Franchaise) 1978-79 காலக் கட்டத்தில் ழான் ரென்வாரின்
Le carrosse DDor’ (1952) (The Golden Coach) என்ற அரிய படத்தை திரையிட்டது. இச்சமயம் கலாச்சார மையம் சிறப்பு ஏற்பாட்டில் ஓவியர்களுக்காக உலகின் மிகச் சிறந்த ஓவியக் கலை நவீன ஓவியங்கள் மற்றும் நவீன பிரெஞ்சு ஓவியர்களைப் பற்றிய மிகச் சிறந்த பிரெஞ்சு ஆவணப் படங்களை ஒரு வாரம் முழுக்க திரையிட்டது. கலைத் தொடர்பான சிறந்த பிரெஞ்சு ஆவணப் படங்களின் திரையிடல் விழா -1977ல் அதி சிறப்பாய் நிகழ்த்தப்பட்டது. க்ளாட் மோனே, ஹென்றிரூஸோ, டாமியர், பஃப்பே, பற்றியும் சர்ரியலிஸம், க்யூபிஸம், இம்ப்ரெசனிஸம் ஆகிய ஓவிய கோட்பாடுகள் பற்றியதுமான வண்ண ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. பிக்காஸோ பற்றி மூன்று படங்களும் திரையிடப்பட்டன. மூன்றாவது படத்தில் பிக்காஸோ ஓவியந் தீட்டவும், புகழ் பெற்ற ரஸ்ய இசை மேதை ஸ்ட்ராவின்ஸ்கி (Stravinsky) இசைக் கோர்வை புரியும் பின்னணியும் காட்டப்படுகிறது. ஸ்ட்ராவின்ஸ்கியின் இசைக் கோர்வை ஒரு சமயம் அமைதிச் சூழலை, ெமளன வெளியை ஏற்படுத்தி மெல்ல மெல்ல உயர்த்தியும், மறு சமயம் இசையதிர்வுகளின் உச்சத்துக்கு சென்று அமைதியை அலைக்கழிக்கவும் செய்வதன் வழியே பிக்காஸோவின் ஓவிய உருவச்சிதைவுகள் Distortions) அவை மீண்டும் ஒன்று சேர்வது போன்று முப்பரிமாண வண்ணத் தீட்டுதல்களை கோர்வைபடுத்துகிறது.

மறுநாள் ஓவியர் ஜியார்ஜ் ப்ராக் (George Braaque)கிற்கு அஞ்சலி என்ற அரிய ஆவணப்படம் காட்டப்பட்டபோதும் மலையாள சினிமா இயக்குனர் ஜான் ஆப்ரகாம் வந்திருந்தார். ஜியார்ஜ் ப்ராக், கியூபிஸ பாணி ஓவியத்தின் ஒரு முன்னோடி. ஆனால் பிக்காஸோவுக்கு கிடைத்த உலகளாவிய பெருங் கைத்தட்டல்கள் ப்ராக்குக்கு கிடைக்கவில்லை. கிடைத்திருக்க வேண்டும். அன்று திரையிடப்பட்ட மற்ற மூன்று படங்களில் மார்க் சகல் குறித்து இரண்டும், ஹென்றி மத்தீஸ் (Henry Mathis) பற்றி ஒன்றுமானது. சகல் ரஸ்யாவில் பிறந்து பிரான்சுக்கு ஓடிப் போன ரஷ்ய யூதர்.
மீ மெய்யீய வகை ஓவியங்களில் திளைத்தவர் சகல். இவரை ஓர் அரிய நேர்காணலோடு ஆவணப்படுத்தியவர் மாரிஸ் ரேவல் Marice Ravel என்ற பிரெஞ்சு கலை விமர்சகரும் பிரெஞ்சு ஆவணத் திரைப்பட கர்த்தாவுமானவர் ஹென்றி மத்தீஸ் உலகப் புகழ்பெற்ற மற்றொரு பிரெஞ்சு ஓவியர். இவர்கள் இருவருமே பின் இம்ப்ரெஷனிஸ ஓவியர்கள். (Post Impressionism).

இந்த பிரெஞ்சு ஓவிய ஆவணத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இரு படங்கள் அதி முக்கியமானவை. ஒன்று, இம்ப்ரெஷனிஸம் மற்றும் நியோ- இம்ப்ரெசனிஸம் பற்றிய சற்று நீண்ட படம் அற்புதமானது. அகஸ்டி ரென்வார் இம்ப்ரெசனிஸ ஓவியக் கோட்பாட்டின் தந்தை எனப்படுவர். இவரது “சூரிய அஸ்தமனம் முதலான ஓவியங்களை முன் வைத்து சொல்லும் படம். இம்ப்ரெஸனிஸ வகைமையை அடுத்தும் அதனை மேற்கொண்டு எடுத்துச் சென்று பரவசப் படுத்திய ஓவியர்கள், அவர்களின் ஓவியங்கள் பற்றிய சிறந்த படம். அகஸ்டி ரொதானுக்கு அஞ்சலி (Homage to Rodin) எனும் கருப்பு வெள்ளை படம். அகஸ்டி ரொதான் செய்வித்த ஒரு சிற்பத்தை அணு அணுவாக பல்வேறு கோணங்களில் காமிரா நமக்குக் காட்ட, பின்னணியில் ஸ்டிராவின்ஸ்கியின் அற்புத இசைக் கோர்வை படத்தை முன்னுக்கு இழுக்கிறது. ரொதான் நமது உலகப் புகழ் பெற்ற வார்ப்புச் சிற்பமான நடராசர் சிற்பம் குறித்து அழகியல் ரசனை ரீதியாகவும் சிற்பக் கலை ரீதியாகவும் சிலாகித்துள்ளார். அதே சமயம், நடராஜர் குறித்து அரிய நூலை Dance of siva எழுதிய டாக்டர் ஆனந்த குமாரசாமியின் தத்துவ வெளிப்பாட்டுக்கு அப்பால் விலகியும் பேசியுள்ளார் ரொதான். ரொதானின் சிற்பக் கலை பாதிப்பில் உருவான புகழ்பெற்ற இரு இந்திய நவீன சிற்பிகள், டி.பி.ராய் சவுத்ரி மற்றும் சர்பரிராய் சவுத்ரி.

ழான் ரென்வார் 1894-ல் பாரிசில் மாண்மார்ட் எனுமிடத்தில் பிறந்தவர். இவரது தந்தை புகழ்பெற்ற பிரெஞ்சு இம்ப்ரெஷனிஸ ஓவியர் அகஸ்டி ரென்வார் ஆவார். ஓவியர்களோடு வளர்ந்த ழான் ரென்வார் முதலில் செராமிக் சிற்பக் கலைஞராக விளங்கியவர். பிறகு 1920களில் திரைக்கதையாசிரியராயிருந்து திரைப்பட ஆக்கத்திலீடுபட்டு 1930களில் வெற்றிகரமான இயக்குனரானார். (The Grand Illusion (1937) The Human Beast (1938) The Rules of the Game (1939) The River (1947) ஆகியவை ரென்வாரின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள். 1939பின் ரென்வார் அமெரிக்காவுக்குச் சென்று குடியேறினார். அவர் 1979ல் கலிபோர்னியாவிலுள்ள பீவர்லிஹில்ஸில் காலமானார்.

La Grand Illusion Grand Illusion 1937) போர் என்று வரும்போது மக்கள் தத்தம் சுயநலம், அந்தஸ்து மேலிட்ட நலன்களைக் காட்டிலும் பொதுவானதாக எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே முன் வைத்து முன் நகர்த்தி சிந்திப்பதும் செயலாற்றுவதுமாயிருப்பர். மனித வாழ்வின் விடம்பனமே ரென்வாரின் இந்த மகத்தான பிரமையாக திரைப்படமாகிறது. முதல் உலகப் போர். ஒரு ஜெர்மன் கைதி முகாமில் கைதிகளாக லெப்டினெணட் மேர்சால் மற்றும் காப்டன் டிபோல்டு என்பவர்கள் தங்கள் இதர பிரெஞ்சு சிப்பாய்களோடு, ஜெர்மன் அதிகாரி, வான் ராவ்ஃபென்ஸ்டீனின் சாந்தமான கண்காணிப்பின் கீழ் இருக்கையில் தப்பிச் செல்ல மகத்தான திட்டமொன்றை வகுக்கின்றனர். இருவரும் மகத்தான கற்பனையில் வாழ்கின்றனர். பிரெஞ்சு பாரம்பரியம், பரஸ்பர மரியாதை பேணும் பழக்கம் கவுரவமும் கனவான்தனமான சமூகம் என்று வெளியுலகை இந்த கைதி முகாமலிருந்தவாறு கற்பித்துக் கொள்ளுகின்றனர். அது ஒரு மாயை- கானல் நீர் என்பது புரிபடுவது படத்தின் இறுதிக் கட்டம். கானல் நீரான தம் லட்சியத்தையுடைய லட்சிய வெளியுலகை அடைய மிகவும் கஸ்டப்பட்டு சுரங்கம் ஒன்று தோண்டுகின்றனர். வெளியுலகை அடைந்த பிறகுதான் துப்பாக்கிக் குண்டுக்கு ரத்த வித்தியாசம் தெரியாதென்பதையும், கைதி முகாமின் வன்கொடுமைகளினூடே ஏற்பட்டிருந்த நெருக்கமான தோழமை என்பதுகூட பிரமை என்பதும், தப்பி வெளியில் போனதுமே பழையபடி திரும்பி வாழ்வின் கடுமையான யதார்த்தத்துக்கு திரும்புகின்றனர். இப்படத்தில் சித்தரிக்கப்பட்ட ஜெர்மன் அதிகாரி பிரெஞ்சு கைதிகளான அதிகாரிகள் பால் உண்மையிலேயே இரக்கமும் அக்கறையும் கொண்டவனாயிருப்பதை பின்னாளில் இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் ஜெர்மனி விரும்பவில்லை. நாஜிகள் பிரான்சை முற்றுகையிட்டு ஆக்கிரமித்திருந்தபோது, ரென்வாரின் இப்படத்தை தடை செய்துவிட்டது. பிரெஞ்சு அதிகாரிகளாக ழான் கேபின் (Jean Cabin), பியர் ஃப்ரெஸ்னே மற்றும் (Pierre Fresnay) ஜெர்மன் அதிகாரியாக எரிச்வான் ஸ்ட்ரோஹைம் (Erich von Stroheim) என்பவர்கள் சிறப்பாக நடித்திருக்கின்றனர். கிறிஸ்டியன் மட்ராசின் காமிரா கோணங்கள் பிரம்மாதம் முஸ்ஸோலினியின் கோப்பைக்கும், ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட இப்படம் வெனிஸ் திரைப்பட
விழாவில் பரிசு பெற்றது.

ழான் ரென்வாரின் மறக்க முடியாத மற்றொரு திரைப்படம் La bete Humaine The Humanbeast- 1938).
“நா நா என்ற 19ம் நூற்றாண்டு மகத்தான பிரெஞ்சு நாவலை வாசித்தவர்களோ, குறைந்தது கேள்விபட்டவர்களோ அல்லது அதைக் கொண்டு எடுக்கப்பட்ட பழைய திரைப்படத்தையாவது, பார்க்க நேரிட்டவர்களோ கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய அந்நாவலாசிரியரின் பெயரையும் நினைவில் வைத்திருப்பார்கள். அந்த பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஜோலா (Emile Zola) ஜோலாவின் ‘‘நா நா’’வும், ஃப்ளேபரின் மேடம் பொவாரியும், தோல்ஸ்தோயியின் அன்னா கரீனாவும் தத்தம் குணநலன்களில் ஒன்றுபட்ட அக்காதங்கச்சிகள். ஒரு காலக்கட்டத்து நாவல் வாசகர்களுக்கான முப்பெரு நாவல்கள். எமிலி ஜோலாவின் மற்றொரு மகத்தான நாவலைக் கொண்டு திரைக்கதையானது மனித மிருகம் என்று பொருள் கொள்ளும் “La Bete Humaine Yhe Human Beast. இக்கதை ஒரு ரயில் எஞ்சின், அதன் ஓட்டுனர், ஓர் அழகிய பெண் என மூவரிடையேயான முக்கோண காதல் உறவு பற்றியது. இக்கதையை திரைப்படமாக்கும் திட்டம் வகுக்கப்பட்டதையடுத்து அதை இயக்க வேண்டியவர் ழான் ரென்வாரே என்பதை ஓர் குழு தீர்மானித்தது. அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராக அன்றைய நாளில் சிறந்த பிரெஞ்சு சினிமா விமர்சகராயிருந்த ஒருவரும் இருந்திருக்கிறார்.

ஹியூமன் பீஸ்ட் திரைப்படத்தில் கதா நாயகன் ஒரு ரெயில் எஞ்சின் டிரைவர். அந்த காலத்து நீராவி எஞ்சினை ஓட்டிச் செல்ல கடினமான பயிற்சி தேவைப்படும். எஞ்சினில் நின்றவாறே பல மணி நேரத்துக்கு பல மைல் தொலைவுக்கு மிக்க வேகத்தில் உடல் உடையெங்கும் கரி பூசிக் கொண்டு நிலக்கரி எரிந்தபடியே இருக்க அனலில் ஓட்ட வேண்டும் இந்தியாவில் அப்போது ஆங்கிலோ இந்தியர்களே பெரும்பாலும் எஞ்சின் டிரைவர்களாயிருந்தார்கள். ரெயில் எஞ்சின்- ஸ்டேசன் தண்டவாளம், டன்னல்கள் என்று இந்தியாவிலும் கொஞ்சம் திரைப்படங்களுண்டு. ழான் ரென்வாரின் படத்தோடு ஒப்பிடவே முடியாதென்றாலும், ஒரு சில காட்சிகள் சிறப்பாய் எடுக்கப்பட்ட இந்திய படங்களில் அபு சன்சார் (சத்யஜித்ரே), நாயக் ரே மற்றும் 27 டெளன் (அவதார் கிருஷ்ண கெளல்) எனும் படங்களிருக்கின்றன. ரென்வாரின் மனித மிருகம் ஓர் இயந்திர மிருகத்தையும் (லிஸோன் என்ற பெயர் கொண்ட ரயில் எஞ்சின்) ஸ்டேசன் மாஸ்டரின் அழகிய மனைவி செவெரின் என்பவளையும் ஏக காலத்தில் காதலிப்பவன். எஞ்சின் டிரைவர் ஜாக்குவிஸ் லாண்டியர் (Jacques Lantier) மிகுந்த பிரியத்தோடு தான் The Lison என்று பெயரிட்ட தன் ரயில் எஞ்சினை எந்தளவுக்கு நேசிக்கிளானோ, அந்த அளவுக்கு மேலே ரித்விக் கடக்கின் அஜாந்திரிக் படத்து கதாநாயகன் பிமல் எனும் டாக்ஸி டிரைவர்தான். “ஜகட்தல் என்று பிரியமாய் பெயரிட்டு ஓட்டி வந்த அதரப் பழைய டாக்ஸியை நேசித்தவன்… ழான் ரென்வார் தனது நேர்காணலில் Human Beast படம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதை விளக்குகிறார். படம் முழுக்கவும் பெரிய ரயில் நிலையம், ஏராளமான இருப்புப் பாதைகள், எஞ்சின்கள், வண்டித் தொடர்கள், ரயில்வே சிப்பந்திகளால் நிறைந்திருக்கிறது. எஞ்சினின் ஆக்ஸில் உடைந்து விடுகிறது. ஒரு காட்சியில் லாண்டியரின் உதவியான் பயர்மேன் பெக்வே எஞ்சின் முன் பக்க வட்டமான மூடியைக் கழட்டிவிட்டு எஞ்சினுக்குள் சேர்ந்து கிடக்கும் சாம்பலை ஷவலால் வெளியில் கொட்டுவது மிகவும் யதார்த்தமானது.

எஞ்சின் டிரைவர் லாண்டியர் என்ற மனிதனுக்குள் மிருகம் பதுங்கியிருக்கிறது. அபூர்வமாய் சில மிருகங்களுக்குள்ளும் மனிதம் இருந்து ஏதாவது செயல்பாடுகளாய் வெளிவருவதுண்டு. மனிதனுக்குள் மிருகம் மிருகத் தன்மையிருப்பது அதிகம். ரயில் எஞ்சினுக்கு கிட்ட தட்ட சமமான மனித எஞ்சின் அவன். இப்படத்தில் அந்த எஞ்சினை ஒரு கதாபாத்திர அந்தஸ்துக்கு கொண்டு போயிருப்பதாய் ரென்வார் கூறுகிறார். ஆரம்பத்தில் ஒரு பெருங் குடிகாரனாயிருந்த தான் அதை அறவே ஒழித்துக் கட்டியதோடு தனது குடிகார மூதாதையர்களால் குடித்து அழிந்த இழப்புகளை நினைத்து வருந்துகிறான். எமிலி ஜோலாவின் சில நாவல்கள் குடி மது மோகிகளால் அழிந்த குடும்பங்கள் பற்றியதாயிருக்கும். Drunkard மற்றும் Earth நாவல்களைக் குறிப்பிடுகிறேன். Human Beast அதில் சேராதது என்றாலும் குடிப் பழக்கத்தின் கொடுமையையும் அதை விட்டொழித்ததையும் கதாநாயகனைக் கொண்டு பேச விடுகிறார் ஜோலா.

ஜோலாவின் சமகால ஓவியரும், நண்பரும், ழான் ரென்வாரின் தந்தையுமான பியர் அகஸ்தெரென்வாரின் ஒரு ஓவியத்தில் நன்றாக குடித்துவிட்டு முகம் உப்பிய கதியில் சாராய விடுதியில் இருவர் உட்கார்ந்திருப்பார்கள். எமிலி ஜோலா நமது வங்க நாவலாசிரியர் சரத் சந்திரருக்கு இவ்விசயத்தில் சற்று மூத்தவர்..

ஜாக்குவெஸ் லாண்டியரின் எஞ்சின் உதவியாள் அதாவது ஃபயர்மேன் பெக்குவா (Pecqueux இருவரையும் முதல் காட்சியில் ரென்வார், அதிவேகத்தில் ஓடும் எஞ்சினில் அறிமுகப்படுத்தும் காட்சியே அற்புதமானது. கருப்பு வெள்ளை காமிரா ஒளிப்பதிவின் சிகரமென்றே இத்திரைப்படத்தின் பல்வேறு சட்டகங்களையும் சொல்ல வேண்டும். இருப்புப் பாதையின் தண்டவாளங்கள் கண்முன் ஓடி நீண்டு பிரிந்து இணைந்து சுரங்கத்தில் நுழைந்து, மீண்டு அப்பப்பா, ரெயில்வே உலகின் மகத்தான விசயங்களை கேமிரா கோணப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கிளாட் ரென்வார் ஜீனியர் (Glaude Renoir JR) மிகவும் பாராட்டத் தக்கவர். படமாக்கப்பட்ட விதம் குறித்து தம் நேர் காணலில் விவரிக்கும் இயக்குனர் ரென்வார், அந்த எஞ்சின் 60 கிலோ மீட்டர் வேகத்திலிருக்கும்போது நாங்கள் அதற்கு இணையாக மற்றொரு இருப்புப் பாதையில் அதே வேகத்தில் ஓடும் இன்னொரு எஞ்சினிலிருந்தும், கதாபாத்திரங்கள் நின்றிருந்த எஞ்சினிக்குள்ளேயே நிலக்கரி தொட்டியை ஒட்டியும் கேமிராக்கள் பொருத்தி படமெடுத்தோம் என்கிறார். அத்தோடு கேமராமேன் க்ளாட் ரென்வார் எஞ்சினுக்கு அடியில் பெரிய சக்கரங்களை ஒட்டியே ஓர் இருக்கை போன்ற பலகையை இணைத்து அதில் தன்னையும் கேமிராவையும் இருத்தி வைத்து ஓடும் வண்டியிலிருந்து (60 கி.மீ.வேகம்) மற்றொரு கோணத்தில் படமாக்கியுள்ளார். எஞ்சினை இயல்பாகவும் லாவகமாகவும் ஓட்டுவதற்கு ஓட்டுனராக நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்தி நடித்திருக்கும் பிரெஞ்சு நடிகர் ழான் காபின் (Jean Gabin)கு பல மாதங்கள் நிஜமாகவே ரயில் எஞ்சின் ஓட்டுனர் பயிற்சியளிக்கப்பட்டதாக ரென்வார் தம் பேட்டியில் கூறுகிறார். எஞ்சினோடு இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் டிக்கட் வாங்கி உட்கார்ந்து பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் தம் தொடர்வண்டியின் எஞ்சினை இயக்கி ஓட்டுபவர் அசல் டிரைவரல்ல, ஒரு நடிகர் என்பதும், சினிமா ஒன்றுக்கான படப்பிடிப்பு பயணத்தோடு நடக்கிறது என்ற விசயங்கள் எதுவுமே இறுதிவரை தெரியாது
என்றும் ரென்வார் கூறுகிறார்.

ரயிலில் ஒரு கொலையும் நடக்கிறது. அதில் சம்மந்தப்படுபவர் ஸ்டேஷன் மாஸ்டர் ரெள பாண்டு என்பவர். இவரது அழகிய மனைவி செவரின் (Sevarin) என்பவள். இவளை எஞ்சின் டிரைவர் லாண்டியர் காதலிக்கிறா். அவள் அவனோடு ஓடிவந்து விடவும் தயாராக இருக்கிறாள். தன் ஸ்டேசன் மாஸ்டர் கணவனைக் கொன்று விடும்படியும் கேட்கிறாள். எல்லாமே ரெயில்வே எஞ்சின்களும் வண்டித் தடங்களும் நின்றபடியும் ஓடினபடியும் இருக்கும் Railway Yardndle தான் நடக்கிறது. லாண்டியருக்குள் கொலை பாதகம் செய்ய முயலும் மிருகம் இருப்பதும் சமயத்தில் அது தயாராகி வந்து உடனே அடங்கி விடுவதுமாயிருக்கிறது. தொடக்கக் காட்சிகள் ஒன்றில் இளம் பெண்ணொருத்தியின் கழுத்தைப் பிடித்து கிட்டதட்ட நெரித்துக் கொன்றுவிடுமளவுக்கு அவன் முயன்றவனே. அப்போதுதான் தனது மூதாதையர்கள் குடிப்பழக்கத்தால் அழித்து அழிந்ததை நினைவு கொண்டு, தான் அதை விட்டு நீ்கியதைப் பற்றியும் யோசிக்கிறான். ரெயில்வே யார்டில் இரவில் நடந்துவரும் ஸ்டேசன் மாஸ்டரை இரும்புக் கடப்பாறையால் கிட்டதட்ட அடித்துக் கொல்லும் முயற்சியில் இறங்கியவன் உடனே அதிலிருந்து பின்வாங்குகிறான். அவனுக்குள்ளிருந்த மிருகத்தை அவனுக்குள்ளிருக்கும் மனிதம் அடக்கியமுக்கிறது. இது செவெரினை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கி லாண்டியரை வெறுக்கிறான். காதலும் வேண்டாம் புண்ணாக்கும் வேண்டாம். இனி சிறு வயதிலிருந்தது போல வெறும் சினேகிதர்களாகவே பழகுவோம் என்கிறாள். செவெரின். பிறகு ஒரு நாள் அவளைச் சந்திக்கும் லாண்டியர் அவளை நிஜமாகவே கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தனது காதல் எஞ்சினை லிஸோனிலிருந்து ஓடிக் கொண்டிருக்கையில் குதித்து உயிரை விடுகிறான்.

இந்தப் படமும் ரென்வாரும் உலகின் பல சிறந்த திரைப்படங்களையும் பல இயக்குனர்களையும் பாதித்திருக்க வேண்டும். ரென்வாரின் நண்பரும் இந்தியாவில் வங்கத்தில் அவர் தயாரித்த The River என்ற வண்ணப்படத்துக்கு படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து இட்டுச் சென்றவருமானவர் சத்யஜித்ரே. ரென்வாரின் மனித மிருகம் படத்தால் அங்கிங்கே பாதிப்படைந்து, அபுசன்சார் மற்றும் நாயக் என்ற தம் படங்களில் ரென்வாரைப் பின்பற்றியிருக்கிறார். பெரிய கரிய நீராவி ரெயில் எஞ்சின் தனியாக தண்டவாளத்தில் இலேசாக மூச்சு விட்டுக் கொண்டு புகைக்கசிய நிற்பது யானை நிற்பதுபோலாகும். இந்தக் காட்சிகள் ரென்வாரின் ஹியூமன் பீஸ்ட் படத்தில் நிறையவும் பிரமாதமாயும் வருகின்றன. ரெயின் அபு சன்சார் படத்தில், அப்பு தன் வீட்டையடைய பெரிய ரெயில்வே லைனைத் தாண்டிப் போவான். அப்போது ஒரு பெரிய கரிய நீராவி ரெயில் எஞ்சின் ஒண்டியாக நிற்பதை ரே அற்புதமாய்க் காட்சிப் படுத்தியிருப்பார் (காமிரா: சுப்ரதோ மித்ரா). தண்டவாளங்கள் ஒளியில் மின்னிக் கொண்டு நம் முன்னே ஓடுவதும் பிரிவதும் கூடுவதுமான காட்சிகள் நாயக் படத்தில் காமிரா சுப்ரதோ மித்ரா) நிறைய வருகின்றன. ஹியூமன் பீஸ்ட் படத்தில் எஞ்சின் டிரைவராய் நடித்த ழான் காபின் ஒரு டிரைவராகவே முற்றிலும் மாறிவிட்டார். ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி செவெரினாக சிமோன் சைமன் (Simone Simon) மிக எளிதாக அந்தப் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார். எஞ்சின் உதவியாள் ஃபயர்மேனாக ஜீலியன் காவெட் (Julien Cavette) இயல்பாக செய்திருக்கிறார். படத்தின்
காமிராவை கையாண்டிருப்பவர் ழான் ரென் வாரின் ஒன்றுவிட்ட சகோதரர் க்ளாட் ரெண்வார் – ஜூனியர்.
(Claude Renoir- JR).

நூல் அறிமுகம்: மார்கெரித் யூர்ஸ்னாரின் கீழை நாட்டுக் கதைகள்: (பொறுப்புக்கும், சுதந்திரத்திற்குமான போராட்டம். விதியின் வசமே முடியும் அவலம்!) – சந்தானமூர்த்தி

நூல் அறிமுகம்: மார்கெரித் யூர்ஸ்னாரின் கீழை நாட்டுக் கதைகள்: (பொறுப்புக்கும், சுதந்திரத்திற்குமான போராட்டம். விதியின் வசமே முடியும் அவலம்!) – சந்தானமூர்த்தி




ஒரு படைப்பு என்ன செய்ய முடியும். பிரபஞ்சத்தின் அடியாழத்தில் மூழ்கிக் கிடக்கும் சிறு துளி ஆன்மாவை வெளிக்கொண்டு வரமுடியும். உருண்டை வடிவமோ, சதுரமோ, செவ்வகமோ, எதுவோ ஒன்று, அதனை அப்படியே நாம் படுத்துறங்கும் திண்ணையில் வைத்து உருட்டி விளையாடவும் மேன்மை பொருந்தியதொரு படைப்பால் சாத்தியமே. கனமான பொழுதுகளை இலகுவாக்கவும், துயரங்களில் சஞ்சரிக்கும் ஆகச்சிறந்த தருணங்களை மீட்டுருவாக்கம் செய்யவுமான வல்லமை, ஆகச்சிறந்த படைப்புகளுக்கு உண்டு. அதற்கு இணையான தகுதி அதை உருவாக்கிய படைப்பாளிக்கும் உண்டு.

வெறும் அழகியலை மட்டுமே ஆதாரமாகக் கொண்ட படைப்புகள், அழகியல் குறித்த பார்வைகளும், வியாக்கியானங்களும் மாறுகிறபோது, ஒன்று அது தன் இயல்பை மாற்றிக்கொள்ளலாம், இல்லை, நீர்த்துப்போகலாம். இவை இரண்டுக்குமே நிறையச் சாத்தியங்கள் உண்டு., முன்வைக்கும் அழகியலைப் பொறுத்து அவை அமைந்துவிடுவதற்கும் அநேக சாத்தியங்களும் இருக்கின்றன.

ஆனால் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அதற்கு ஆதாரமாக விளங்குகின்ற கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைச் சுமந்து நீள்கிறதொரு படைப்பானது, அம்மக்களின் வாழ்வியல் தேவைகளோடும், அவர்தம் நடைமுறை அழகியலோடும், ஒருசேர பிணைந்திருப்பதால், அதனுடைய ஆயுள் என்பது வேர் சார்ந்ததும், அது பற்றி மேலழெ தவிக்கும் மண்ணோடும் தொப்புள்கொடி உறவு கொண்டது.

கீழை நாட்டுக்கதைகளுக்கும், அதன் உயிருக்கும் உடமைவாதியாகிய மார்கெரித் யூர்ஸ்னாரின் படைப்புகளின் மைய ஓட்டம் விளிம்புநிலை மக்களையும், அவர்கள் தெரிந்தோ, அறியாமலோ ஏற்றுக்கொண்ட ஒரு வாழ்வியல், அது முன்வைக்கும் மகிழ்வு, அதனூடாக வந்திறங்கும் துயரம், இரண்டின் நீட்சியாக கேள்விகளற்று பயணிக்கும், அம்மக்களின் ஆழமான நம்பிக்கை, இவற்றை எள்ளி நகையாடாமல், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அதிகார மையத்தின் பிடிப்பையும் போகிற போக்கில் தொன்மங்களினூடாக அடித்தளமிட்டுப் பேசி செல்வதோடு ஆகப்பெரிய விவாதத்தையும் அறுதியிடுகிறது.

மார்கெரித் கதைகளினூடாக பிரவேசிக்கும் கதாபாத்திரங்கள், தான் நேசித்த அதி உன்னதமான ஒன்றுக்காக, தங்களை, முழுமையாக விடுதலை செய்துகொள்ளும் மனோபக்குவம் வாய்ந்தவர்களாகவே அநேகமான கதைகளினூடாக வாழ்கிறார்கள். அல்லது வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பரந்து விரிந்த சமூகப்பரப்பில், அது வரையறுத்து ஒழுங்கமைத்த எந்தவொரு முகாந்திரத்தின் எல்லைகளுக்குள்ளும், பிரவேசிக்க மறுக்கும் சுதந்திரமான மனிதர்கள், மார்கெரித்தின் கதை மாந்தர்களாகச் சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்தவொரு திட்டவட்டமான வாழ்க்கையும், உறுதி செய்யப்பட்ட கொள்கைகளும், சார்பு நிலைகளும் இவரது கதாபாத்திரங்களை எதுவும் செய்யமுடிவதில்லை.

அதி உன்னத புத்திசாலிகளும், வெறும் கிராமத்து யதார்த்தமான மனிதர்களும், அவர்களது உணர்வுகளும் எல்லாமுமே ஒரு வாழ்வியலை முன்வைத்தும், அதனை எதிர்கொள்ளும், அல்லது விட்டு விடுதலையாகி ஓடும் இரண்டு விதமான மனநிலை வாய்க்கப்பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். இவருடைய கதாபாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவரவரளவில் எல்லையற்ற சுதந்திரம் இருந்து கொண்டே இருக்கிறது.

அதே சமயம் செய்து முடிக்கவேண்டிய பொறுப்புகளும் ஏராளமாய் நிறைந்து கிடக்கிறது. சுதந்திரத்திற்கும், பொறுப்புக்குமான இடைவெளியைச் சிறிதாக்கிக்கொள்ள இவர்களின் மன்றாடுதல் நீடிக்கிறது. அதே நேரத்தில் கீழைநாட்டுக்குறிய விதிகளின் கைப்பிடிக்குள் சிக்கி, இம்மனிதர்களின் சுதந்திரமும், பொறுப்பும் சிக்கித் தவிக்கத்தான் செய்கிறது. ஆக இருத்தலும், இருத்தல் சார்ந்த வியாபித்தலும் எல்லாக் கதைகளிலுமே வாழ்வியலாகவே நீடிக்கிறது. பொறுப்பு , சுதந்திரம், விதி மூன்றில் எதனை தேர்வு செய்வது என்ற குழப்பமும், அச்சமும், இறுதியில் விதி வசமே தங்களை ஒப்புவித்து , அதன் போக்கிலே நகர்ந்துகொள்கின்றது.

நாம் ஒவ்வொரு கதையாக வாசித்தகளுகிறபோது. இத்தொகுப்பின் முதல் கதையான உயிர் தப்பிய வாங்ஃபோ நம்மைக் கடைசிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வாங்ஃபோவின் ஓவியத்தின் மீதும், அந்த ஓவியங்களை நேர்த்தியாய் பிரசவிக்கும் தூரிகையின் மீதும், மேலதிகமாக வாங்ஃபோவின் எளிமையின் மீதும், தீராத காதலும், அபரிமிதமான வேட்கையும் கொண்டு வாழ்தலை அதன் பொருட்டு ஒப்படைத்த அவரது சிஷ்யன் லிங் நம்மை ஆட்கொண்டு விடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்,

இருந்தபோதிலும் லிங்கின் பின்னணி, அவன் வாழும் எதற்கும் பஞ்சமில்லாத சூழல், ஒரு செல்வ சாம்ராஜ்யத்தின் ஒரே வாரிசு, எல்லாவற்றையும் விட்டொழிந்தவனாய், சொற்களிலில்லை, செயலில் நிறைவேற்றிய விதம். லிங்கை, நாம் கெளதமப்புத்தரின் ஞானத்தோடு தொடர்புப்படுத்தி விவாதிக்கத் தோன்றுகிறது.

புத்தரின் ஞானத்திற்குக் குறைவில்லாத ,அதே அளவுக்குச் சமமான, இல்லை, இல்லை இன்னும் அதிகப்படியான ஞானத்தைப் பகிர்ந்தளித்து இருக்கிறான் என்றே சொல்லத்தோன்றுகிறது.

வாங்ஃபோவின் தீட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய முடிச்சுகளைச் சுமந்து செல்வதில் லிங்கிற்கு எப்பொழுதுமே ஒரு அலாதி பிரியம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த குருவும், சிஷ்யனும் ஹான் பேரரசின்(கி.மு 206 லிருந்து, கி.பி.220 வரை சீனாவில் ஆதிக்கம் செலுத்திய அரசம் பரம்பரை) தெருக்களைக்கடந்து எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள்.

தூரிகைகள், கொஞ்சம் சைனா மை, அரக்கும் அடங்கிய ஒரு டப்பா, சுருட்டிவைக்கப்பட்ட பட்டுத்துணி, அரிசி மாவினால் செய்யப்பட்ட காகித உருளைகள், ஆகியவற்றைத்தவிர உலகில் வேறு எந்தப் பொருளுமே உடைமையாக்கிக்கொள்ளத் தகுதியானது அல்ல என்று வாங்ஃபோவிற்கு தீர்மானமான எண்ணம். அவரது சிஷ்யன் லிங்கிற்கு, தனது குருவிற்கு உண்மையான, விசுவாசமான சீடனாக இருப்பதை தான் தனது ஆகச்சிறந்த பொறுப்பாக, ஏற்றுக்கொண்டு வாங்ஃபோவின் சொத்துக்களை, நேசத்திற்குரிய காதலியை சுமந்துசெல்வதுப்போல சென்றுகொண்டிருக்கிறான்.

வாங்ஃபோவும், லிங்கும், தங்களுக்கான சுதந்திரத்தைத் தேர்வு செய்துவிட்டார்கள். ஆனால் ஒரு சிறு வித்தியாசம், வாஃங்போவின் சுதந்திரம் இயற்கையுடனும், அதன் தன்னிச்சையான போக்குடனும் கட்டமைக்கப்பட்டு முன்னகர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் லிங்கின் சுதந்திரம் வாங்ஃபோவை மையங்கொண்ட நகர்கிறது. இரண்டாவதாக லிங் தனது பொறுப்பு என்று வாங்ஃபோவிற்கு சேவை செய்வதைத் தெரிவு செய்தும் நகருகிறான், அதன் படியே செயல்புரிந்தும் போகிறான். அவனது ஆழ்மனதிற்கு மட்டும் இதுதான் விதி என்ற உணர்வும் சீராக நீந்திக்கொண்டிருக்கின்றன.

தன் குருவிற்காகத் தனது சொத்துக்களை எல்லாம் இழக்க துணியும் லிங், இனி ஒன்றுமே இழப்பதற்கு இல்லை என்றான பிறகுதான் இப்படி போய்க்கொண்டிருக்கிறான். எல்லாப்பொலிவுகளும் அற்றுப்போன அந்தப் பிராந்தியத்தில் கற்றுக்கொள்ள ஏதுமில்லை என்ற பொழுதுதான் அவர்கள் ஹான் பேரரசிற்கு போனார்கள்.

வாங்ஃபோ தன் வண்ணக் கலவைகளால் அள்ளித்தெழித்த ஓவியங்கள் பேரரசின் இளவரசனை எப்பொழுதும் அச்சுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் வாங்ஃபோவோ, எந்தவொரு அரசவைக்கோ, அந்தப்புரத்திற்கோ போனது இல்லை.,

பேரரசர்களின் அவைக்கு அவர் சென்றதே இல்லை. குடியானவர்களின் குடிசைகள், நாட்டியக்காரிகள் இருக்கும், புறநகர் பகுதிகள் அல்லது கூலியாட்கள் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கும் இடங்கள் போன்றவற்றிற்கு எல்லாம் வாங்ஃபோவின் கால்களும், பசியோடிருக்கும் மனமும் சர்வகாலமும் பயணித்துக்கொண்டே இருக்கிறது. அவரது தூரிகை, வண்ணம் குழைந்து தீட்டியது என்னவோ, இந்த விளிம்பு நிலை பிரதிகளின் வாழ்வியலையும், அதன் அழகியலையும் தான்.

ஹான் பேரரசின் இளவரசன் உள்ளிட்ட, சகலருக்கும் இருந்தது பத்தாயிரம் வாழ்க்கை, ஆனால் வாங்ஃபோவிற்கு இருந்ததோ ஒரே ஒரு வாழ்க்கை, அதுவும் முடியும் தருவாயில். இதனை நினைத்து அவர்கள் இருவருமே ஒருபோதும் வருந்துவதேயில்லை.

மரணத்தின் பால், என்ற மற்றுமொரு கதை, ஆசியநாடுகளின் மிக ஆழமான கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், அதற்குள்ளாக நிகழ்கிற சம்பவங்களுமாகப் பயணிக்கிறது. மனிதர்கள் உயிரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியும், தங்களுக்குறிய தேவைகள் அதிகரிக்கிற போதும், சுயம் சார்ந்தும், சுயநலம் சார்ந்தும் எடுக்கும் முடிவுகள், மனிதர்களை தனிதனித்தீவுகளாக மாற்றத்தொடங்குகிறது. அதே சமயம், குரூரங்களையும், வஞ்சகத்தையும், சுமக்கும் பிரதிகளாகவும் பிரகாசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒரு ஊரில் மூன்று சகோதரர்கள் என்று தொடங்கும், இந்தக் கதை, நம்மூர் வாய்மொழிக்கதைகள் மாதிரியே நீண்டு, இறுதியில் ஒரு அப்பாவி, புத்திசாலிப்பெண்ணின் மரணத்தில் முற்றுப்பெறுகிறது. ஆனால் பால் குடி மாறாத, பசி பொறுக்காத அவளது குழந்தைக்காக, மட்டும் அவளது உயிரற்ற உடலில், இருந்து பால் சுரந்துகொண்டே இருக்கிறது. இது அல்பேனிய நாட்டு வழக்காறு கதையினை மையமாகவைத்து மார்கெரித்தால் அதன் ஈரம் கசியாமல் சொல்லமுடிகிறது.

துருக்கியைக் கொள்ளைக்காரர்களை வரவிடாமல் கண்காணிப்பதற்காக ஒரு கோபுரத்தை அந்த மூன்று சகோதரர்களும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்கள் கிடைப்பது அரிதாக இருந்ததாலோ, கூலி அதிகமாக இருந்ததாலோ, அல்லது சிறந்த குடியானவர்களுக்கே உரித்தான வகையில் தங்கள் கைகளை மட்டுமே நம்பியிருந்ததாலோ, கட்டட வேலையைத் தாங்களே பார்த்துக்கொண்டார்கள். அவர்களுடைய மனைவிகள் ஒவ்வொருவரும் தத்தம் முறைப்படி அவர்களுக்குச் சாப்பாடு எடுத்து வந்தார்கள்.

இப்படி பொக்கை வாய் கிழவி ஒருத்தி, நம்வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு, மழலை மாறாத தனது பேரப்பிள்ளைகளுக்குக் கதைசொல்வது போல எந்த சிரமமும் இல்லாமல், ஒரு கதை சொல்லியாக மார்க்கெரித் சொல்லிக்கொண்டே போகும் போது, ம்..ம்..ம் என்று சொல்லத்தோன்றுகிறது. அதே வேளை இறுதியை நெருங்கும் போது நம்மை ஒரு அமானுஷ்யம் சூழ்ந்துக்கொள்ளத்தொடங்குகிறது.

சகோதரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்துமுடித்துவிட்டுக் கோபுரத்தின் கூரையின் மேல் மூலிகைக் கொத்து ஒன்றை வைக்கப் போகும் போகும் ஒவ்வொரு சமயத்திலும் இரவில் வீசும் காற்றும், மலையில் வசிக்கும் சூனியக்காரிகளும், அதைக் கலைத்து விட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கோபுரம் இடிந்து விழுவதற்கு அநேக காரணங்கள் உண்டு. தொழிலாளர்களின் திறமையின்மை, பூமியின் விருப்பமின்மை, கற்களைப் பிணைக்க போதுமான அளவு காரைக்கலவை இல்லாதது என்று பல காரணங்களைச் சொல்லமுடியும் அல்லது கட்ட ஒதுக்கிய நிதியில், முக்கால் வாசியைப் பொறுப்பு வகிப்பவர்கள், தங்களது வங்கிக்கணக்கில் ஒதுக்கிவிடுவது இப்படி ஏராளமான விஞ்ஞானப்பூர்வமான காரணிகள் பலவும் உண்டு.

ஆனால் அதிகார வர்க்கம் மக்களுக்கு ஒரு போதும் விஞ்ஞானத்தைச் சொல்ல முயலுவதில்லை, காரணம் விஞ்ஞான ரீதியாக மனிதன் யோசிக்கத்தொடங்கிவிட்டால், அதிகாரத்தின் மையம் அந்தக் கோபுரங்களைப் போல சரிந்து விழ ஆரம்பித்துவிடும் என்பதுதான். இந்த ஆண்டு விக்ரதி வருடம், இந்த வருடத்திற்குச் செவ்வாய் என்ற கிரகம்தான் அதிபதி, செவ்வாய்க்கு ஆயுதம் நெருப்பு, அதனால்தான் காளஹஸ்தி கோபுரம் வீழ்வதற்கு முன்னால், இடி விழுந்து எச்சரிக்கை மணியடித்தது. இது நம்மூர் நம்பிக்கைகள்.

ஆனால் செர்பிய, அல்பேனிய, பல்கேரியக் குடியானவர்கள் இந்த அசம்பாவிதத்திற்கு ஒரு காரணத்தைத்தான் கண்டார்கள். கட்டடம் இடிந்து விழாமல் அதன் அடிப்பகுதியில் ஒரு ஆணையோ, பெண்ணையோ நிற்கவைத்து அவர்களைச்சுற்றி சுவர் எழுப்பிவிட்டால் அவர்களுடைய எலும்புக்கூடு கற்களின் பளுவான சதையை இறுதி நாள் வரை தாங்கிக்கொள்ளும் என்று நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையின் விளைவுதான் மரணத்தின் விளிம்பில் கற்களுக்கு நடுவில் நின்றுகொண்டு இருக்கும் அந்த அப்பாவி, புத்திசாலிப்பெண். ஆனால் அவள் கேட்டுக்கொண்டதற்கு, வஞ்சகம் பொருந்திய அந்த இரண்டு ஆண்களும், அதாவது அவளுடைய கொழுந்தன் மார் இருவரும், அவளது மார்பகத்தை மட்டும் சில காலங்களுக்குக் கற்களை வைத்து மூடாமல் விட்டுவைத்திருந்தனர். அந்த தாயின் எல்லா உறுப்புகளும், மரணித்துப்போய்க்கொண்டே இருந்தாலும், அவளது குழந்தைக்காக அந்த மூடப்படாத மார்பகத்திலிருந்து சுரந்துகொண்டேயிருந்தது பால். குழந்தை பால் குடி மாறியதும். கற்களால் மூடிக்கொண்டது அவளுடைய மார்பகங்களும்.

மரணத்தின் பால் கதை விதியின் பொருட்டு எதையும் இழக்கும் மனம் வாய்க்கப்பெற்ற மனிதர்களையும், இது விதி என்று தெரிந்தபிறகு, அந்த விதிக்கு மற்றவர்களைப் பலி கொடுத்து,தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் மனிதர்களையும் அவரவர் சார்ந்து பேசுகிறது.

மூன்று சகோதரர்களும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதியின் பொருட்டே செயலாற்றத்தொடங்குகிறார்கள். மூத்தவன் தன் மனைவியை ரகசியமாக வெறுக்கிறான். அவளை எப்படியாவது இந்தத்திட்டத்தின் மூலம் கழித்துக்கட்டிவிட்டு, செம்பட்டை நிறக்கூந்தலுடன் இருக்கின்ற ஒரு அழகான கிரேக்கப் பெண்ணை அடைந்துகொள்ள இந்த வாய்ப்பை சாதகமாக்கிக்கொள்ளத் திட்டமிடுகிறான். இரண்டாமவனும் தன்னுடைய மனைவியை எச்சரிப்பதாகச் சொல்லிக்கொண்டே வீட்டுக்கு வருகிறான். கடைசி சகோதரன் மட்டும் அல்பேனிய, பல்கேரிய மூதாதையர்களின் நம்பிக்கையை, நிறைவேற்றும் நோக்கத்தோடு பெருத்த சோகத்துடன் வீட்டுக்குத் திரும்புகிறான்..

இப்படியாக மார்கெரித்தின் மரணத்தின் பால் கதை முடிகிறபோது நம்மை சூழ்ந்துகொண்ட அமானுஷ்யங்கள் விலகி. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. பூமிப்பந்தின் எல்லா பாகங்களிலுமே பெண் என்பவள் பொறுப்புகளுக்கும், சுதந்திரத்திற்குமான போராட்டங்களில் மட்டும் சிக்கித்தவிக்கவில்லை. ஆணாதிக்க கரங்களுக்குள்ளும், அதுவே விதி என்றும் மரணித்துப்போன கோடாணு கோடி பெண்கள்.இன்றும் உலக விளிம்புநிலை சமூகத்தின் பெண் தெய்வங்களாக மாறிப்போய் இருக்கிறார்கள்.

இவ்வாறு அநேக கதைகளும் கீழை நாட்டுத் தொன்மங்களுடனும், அதன் எச்சங்களுடனுமே பயணிப்பது வியக்கவைக்கிறது. மார்க்காவின் மோசமான நடவடிக்கைகளாகத் துருக்கியர்கள் பார்ப்பது, வழிவழியாக சொல்லப்பட்டு வந்த செர்ப்பியன் மோசமானவன் என்ற பார்வைதான். ஆனால் துருக்கிய மனிதர்களுக்கும் சுதந்திரமானவர்களும், ஈரம் நிரம்பியவர்களும் இருக்கிறார்கள் என்பது கதையை மட்டுமில்லை. பூமியைக்கூட சமநிலையில் வைத்துப்போகிறது.

ஸ்கூட்டாரி நகரத்தின் பாஷாவின் விதவை, மார்க்கோவைப் பற்றி இரவுகளில் கனாக்காண்பதிலும், பகலில் அவனுக்காகக் காத்திருப்பதிலும் பொழுதைக் கழித்தபடி இருக்கிறாள். கடலின் மென்மையான முத்தங்களால் உறைந்துபோயிருந்த மார்க்கோவின் உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிடுகிறாள். வேலைக்காரிகளின் பார்வையில் படாமல் தன் படுக்கையில் அவனுக்குக் கதகதப்பூட்டுகிறாள். இப்படி மார்க்கெரித் மார்க்கோவின் புன்சிரிப்பு என்ற கதையினூடாக துருக்கிய, செர்பிய நாட்டார் மரபுகளைப் பிணைத்துக் கொண்டு செல்கிறார்.

துருக்கியில் சிறைபிடிக்கப்பட்ட மார்க்கோவை, எப்படியும் பார்ஷாவின் விதவை காப்பாற்றிவிடுவாள். என்று நினைக்கத்தொடங்கிய சிறு வினாடிகளுக்குள் மார்க்கோவின் எதிராக பாஷாவின் விதவை மாறிவிடுவதும் எல்லோருக்குமான சமூக எதார்த்தம்.செத்தப்பிணமாய் கிடக்கும் ஒரு செர்பியனின் முகத்தில் லேசாக, மெலிதாக ஒரு புன்சிரிப்பு பிரவேசித்தால் சும்மாய் இருப்பார்களா? துருக்கியர்கள்,

எவர்கள் கண்களுக்கும் தெரியாத அந்த மார்க்கோவின் புன்சிரிப்பு ஹாய்ஷெவின் கண்களுக்கு மட்டும் படுகிறது. எங்கே காட்டிக்கொடுத்துவிடப்போகிறாளோ? என நம் ஆவல் மேலிட தூண்டுவது, உலகம் முழுக்க வாழ்ந்துச்சென்ற தாத்தாக்களும், பாட்டிகளும் நமக்காக நம்முடைய திண்ணைகளில் பரப்பிவைத்துவிட்டுப் போயிருக்கும் கதைகளுக்குரிய வலிமை.

மார்க்கோவின் புன்சிரிப்பை பார்த்துவிட்ட ஹாய்ஷெவினுக்கு அவன் மிகுந்த அழகாய் இருப்பதாகப்படுகிறது. அந்த புன்சிரிப்பை மறைக்கும் விதமாக அந்த துருக்கிய சுல்தான்களின் வம்சாவளிப் பெண்ணான ஹாய்செவின், தன்னுடைய கைக்குட்டையைக் கீழே தவறவிடுகிறாள். அதன் பிறகு பெருமிதத் தொனியில் சொல்கிறாள் இப்படியாக… இறந்து விட்ட ஒரு கிறித்தவனின் முன்னால் நடனமாடுவது சரியல்ல, அதனால்தான் அவனுடைய வாய் தெரியாமல் இருக்க அதை மூடிவிட்டேன் என்றும், அதைப் பார்த்தாலே பயமாயிருக்கிறது என்றும். இப்படியாக இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுக்குள்ளும், சுதந்திரத்துக்கும், விதிக்கும் இடையிலான போராட்டத்தில் சிக்கி தவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

– சந்தானமூர்த்தி
சிதம்பரம்