பெண் என்னும் மானுட சக்தி கவிதை – து.பா.பரமேஸ்வரி
தாயாக தாலாட்டினாலும்
தாரமாக சீராட்டினாலும்
தலைமகனுக்காகத் தான்
தவித்துக் கிடப்பாள்…..
பெண் என்னும் பேதை..
தங்கையாய் கவிந்தாலும்
மூத்த தமக்கையாய் ஊட்டமளித்தாலும்
விட்டுக் கொடுக்காது வாழ்த்துவாள்..
வீரத்தை மனமார ஊட்டி வளர்ப்பாள்
சகோதரனின் சோதரியாய்
தோழியாய்த் தட்டிக் கொடுத்தாலும்
காதலியாய்க் கனிந்து நின்றாலும்
உரிமையுடன் திருத்திடுவாள்
உயர்ந்து சிறக்க பின்னணியாயிருப்பாள்
பிரியமான சிநேகிதியாய்
அர்த்தநாரியாய் உறைந்திருப்பாள்
பிள்ளைக்கனியமுதாய் இனித்திருப்பாள்
பூஜ்ஜியத்தைப் பௌர்ணமி போல மாற்றிடுவாள்
எவர்க்கும் அஞ்சிடாது எதிர்த்திடுவாள்
நறுமுகை சூடிய நாச்சியார்..
ஆடவனின் பின்புலமாக
அவனை நகர்த்தும் முன்னெடுப்பாக
உடன் பயணிக்கும் வழி மொழியாக
உயிர்ப்பூத்துக் கிடப்பாள்…
யாதுமானவளாய்…
மங்கை எனும் மகாசக்தி..
து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778
நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் ஓங்கூட்டு டூணா..! – து.பா.பரமேஸ்வரி
நூல் : ஓங்கூட்டு டூணா
ஆசிரியர் : தேனி சுந்தர்
விலை : ரூ.₹90
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
வகுப்பறை அலப்பறை
இலக்கைத் தொலைத்த வகுப்பறைகளும்
இருப்பையே தொலைத்த குழந்தைகளும்
மறந்து போன மந்திரம்…!
அதுவே “ஓங்கூட்டு டூணா” என்ற ஒற்றைத் தாரக மந்திரம். செல்லக் கோபங்களுக்கும் அதைப் பரிமாறிய பின்பாக முட்டிக் கொள்ளும் கண்ணீர் குமிழிகளுக்கும் இடையிலான பாலம். நீரில் எழுதிய எழுத்து போல…. முடிக்கும் முன்னமே கரைந்து விடும்…காற்றில் அடித்து செல்லும் புழுதிபோல கலந்து விடும் அவர்களின் வெள்ளை அன்பின் வளிவெளியில்.. கணநேரம் காணாமலே போய் விடும்.
“ஓங்கூட்டு டூணா” எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களின் அன்றாடம் தரிசிக்கும் வகுப்பாலயத்தின் மூலவர்களான பிள்ளைத்தெய்வங்கள் தனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களையும், நிதம் அர்ச்சிக்கும் அபிஷேக விசேஷங்களையும், பாராயணம் செய்யும் ஜெபங்களையும், வழிபாட்டுத் துதிகளையும் சேகரித்து கவின் உலகின் மழலைக் காவியமாகப் நமக்கு வழங்கியுள்ளது. வகுப்பறை வாசத்தைப் பள்ளிப் பருவத்தில் தொலைத்த வாசகருக்கு மீண்டும் மாணவர்களாகப் பயணிக்கும் தம்மை இவர்கள் மத்தியில் தேடவும் ஒரு வாய்ப்பாக நினைவாலயத்தின் அருங்காட்சியகமாக இந்நூல் திகழ்கிறது.
குழந்தைகளைப் பற்றி எழுத பெரிதாக என்ன தெரிந்திருக்க வேண்டும். பாரட்டும் அளவிற்கு அசத்தலாக என்ன செய்துவிட போகிறார்கள் என்கிற மேம்போக்கு கருதுகோளை முற்றிலுமாக தகர்கிறது நூற்தொகுப்பு. குழந்தைகளுக்கு என்ன தெரியும் தெரியாது என்பதைப் பற்றிய அடிப்படை ஞானமற்ற பெரியவர்களாகவே நாம் இன்றளவும் அவர்களை மட்டுப்படுத்துகிறோம். குறிப்பாக, வகுப்பறையை ஏட்டுக் கல்வியை சேகரித்த கற்பிதங்களைக் கொண்டு இதுகாறும் ஆசிரியர்கள் இயந்திரங்கள் போல பிள்ளைகளை சாதனங்களாக்கிச் செயல்படுத்தி வருகிறார்கள் உயிரோட்டமின்றி. வகுப்பறையை கருத்தரங்க மண்டபம் போல நடத்தும் தினுசை கைவிட வேண்டும்.ஆரவாரங்கள் கூட்டும் திரையரங்கமாக ஒலித்தக் கிடக்க செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பிள்ளைகளை அணுகும் ஒவ்வொரு அசைவும் தனக்குத் தெரிந்ததைக் கூட அவர்கள் முன் தெரியாததுப் போல சரணடையும் வித்தையில் மட்டுமே பிள்ளைகளின் அன்பையும் கற்பித்தலிலும் உயிர்ப்பையும் முழுமையாப் பெறமுடியும் என்பதை வகுப்பறையில் ஆசிரியர் நடைமுறைப்படுத்தியதை இத்தொகுப்பு நமக்குச் சான்றாகக் காட்டுகிறது .
போலவே, ஆசிரியருடன் பிள்ளைகள் பாகுபாடின்றிப் பிணைந்திருக்க முற்படும் தயக்கத்தையும் தீர்க்க முடியும். அவர்களிடம் நாம் பணிந்தால் மட்டுமே அவர்களை நம் வசமாக்கி நமது கற்பித்தல் காரியங்களைச் சாதிக்க முடியும். உருட்டலும் மிரட்டலும் பிள்ளைகளை கையாளும் தற்காலிக உத்தி. இறுதி வெற்றியை வழங்காது. ஆசிரியர் என்பவர் பெரிய ஆளுமை எல்லாம் இல்லை அவரும் நம்மின் ஒரு சாதாரண மனிதர் என்கிற நிலையை அவர்கள் மனதில் தவழவிடவேண்டும். அப்போதே ஆசிரியர் மாணவ நல்லுறவு வகுப்பறையில் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்.
பூவினியின் கற்றல் தீவிரத்திற்கும் கற்பித்தல் ஆர்வத்திற்கு முன் ஒரு ஆசிரியராய் பிள்ளையிடம் தெரிந்ததைக் கூட அவர்களின் பாணியில் அவர்களைக் குஷிப்படுத்தக் இணங்குவதில் கனமேதுமில்லை என்பதையே இந்த சம்பவம் நமக்குப் போதிக்கிறது.
8 என்கிற எண்ணை ஆசிரியர் பூவினியிடம் பயின்று பணிவு என்கிற வாழ்வின் ஆதாரப் பண்பைப் பிள்ளைகளுக்குச் செயல்வழிக் கல்வியாக்கிப் புகட்டியுள்ளார்.
நூறாண்டுக் காலங்களாக ஆசிரியர் என்றாலே பயந்து ஒடுங்கி விழிக்கும் பிள்ளைகளைக் கொண்ட கல்விச்சாலைகளைத் தரிசித்துப் பழகிய நமக்கு பிள்ளைகளின் முகத்தில் பிரவாகிக்கும் பேரானந்தத்திற்காக அவர்களின் உயரத்திற்குத் தம்மை நத்தைப் போல சுருக்கிக் கொண்ட பேராசிரியராகவே தோழர் சுந்தர் அவர்கள் இந்தத்தொகுப்பில் நமக்கு பரிச்சயமாகிறார்.
இங்கு ஒரு சம்பவம் என்பதை விட சமரசம் எனலாம்.. பல கோணங்களைத் திறந்துக் காட்டியது. போக,யாஷ்னா பாப்பாவின் முதிர்ச்சியும் என்னை அதிவியப்பில் ஆழ்த்தியது.
நேத்து மதியம்…
எல்லோரும்
சாப்பிட போயிட்டாய்ங்க…
நான் டேபிள்’ல
தலைக்கு கைய வச்சு
உக்காந்த வாக்குலயே
கொஞ்ச நேரம்
கண்ண மூடினேன்..
டேபிள்’ல டொக் டொக்குனு
தட்டிக்கிட்டே…
சார்… சார்..சார்ன்னு சத்தம்…!
கண்ணு முழிச்சு பாத்தா..
யாஷனா தான்…
“பள்ளிக்கூடத்தில தூங்குனா
படிப்பு வராது…
எந்திரிங்க சார்…!”
சாரெல்லாம்
சின்ன வயசுலயே
நெறைய படிச்சிட்டேன் பாப்பா…
சார்…
எங்களுக்கு படிப்பு வராது சார்..
எந்திரிங்க சார்..!
சட்டென சிரித்துவிட்டேன்.ஒவ்வொரு ஆசிரியரும் இவ்வாறாக பிள்ளைகளின் உலகிற்குள் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவர்களின் நடைப்பயில தனது அனைத்து வாசல்களையும் திறந்து வைத்துக் காத்து வருகிறார் தேனி சுந்தர் என்பது விசேஷம்.
பெரும் சமுத்திரத்தின் சிறு துளி போல தொகுப்பு முழுதும் மழலைகளின் கவிதைப் பிஞ்சுகள் கொடிபூத்து ஆக்கிரமித்துள்ளன.. வாசித்து அவர்களின் மொழியில் வசித்து வசியமான நிகழ் கணத்தின் படிமங்கள் அவை..
கதைச் சொல்வதென்றால் நம்ம அபிமன்யாவுக்கு ரொம்பவே பிடிக்கும் என்பது தொகுப்பின் மூன்று கதைகள் நமக்கு பறைசாற்றுகின்றன. மூன்றுமே மழலைக்கதைப் பேழைகள்.. காட்டுவிலங்குகளின் கதைகளாக .. கதை என்னவோ மூன்றும் ஒருபோல…ஆனால் ஒவ்வோர் முறையும் கதைகளின் விலங்குகள் மட்டும் மாறிக் கொண்டே வரும். மாறுபட்ட பரிணாமங்களை விரிக்கும்.இவ்வாறாகக் குழந்தைகளின் கதையலையில் நீந்தினால் மட்டுமே வியனுலகக் கரை சேர முடியும்..மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகைமையில் பிள்ளை கதையை இழுத்துப் பறித்துக் கொஞ்சுகிறது.. பிள்ளைகளிடம் தம்மை பெரிதுப்படுத்தாது மண்டியிடும் மாண்பு ஒரு சில ஆசிரியர்களிடம் மட்டுமே காண கிடைக்கும். தனக்கு எல்லாம் தெரியும் என்கின்ற மேம்போக்கு எண்ணத்தை உயர்த்திப் பிடிக்கும் நொடி முதல் வெறும் கற்பித்தல் கடன் மட்டுமே நிகழும் ஒழிய கற்றல் கடல் விரியாது.
மிகச்சரி என தட்டிக் கொடுக்கவும் ஆரத்தழுவவும் மோகன் பாரதி அருகில் இல்லை. அப்படியான நிகழ்வு இது…ஆசிரியர் சமூகத்தையே தட்டிக் கேட்பது போல..
அறிவியல் தின நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதால் மதிய நேரம் போல நூலாசிரியர் தாமதமாகப் பள்ளி வந்ததைப் பார்த்த பிள்ளை மோகன பாரதி கொஞ்சமும் தயங்காமல்..
“ஏன் சார் இவ்வளவு லேட்டு…?
நாங்க இம்புட்டு லேட்டா வந்தா
பேசாம விட்ருவீங்களா…??
ஆசிரியர் என்ற தயக்கம் துளியும் இன்றி தவறு என்கிற வாக்கில் சுட்டிக்காட்டும் துணிச்சல் போதிக்கப்படவில்லை, அசலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.. பிள்ளைகளைத் தன்னியல்பில் வளர வழி விட்டுள்ளது ஆசிரியரின் கல்வி. பேச்சுஒழுங்கு மாணவவிதிகள் என்கிற எந்த வியாக்கியானத்திற்குள்ளும் முடக்காமல் நினைத்ததை நினைத்த மாத்திரம் பேசும் சுதந்திரம் ஊக்கப்படும் போதே அவர்களின் தன்னம்பிக்கை வேறூன்றும்.எதிர் காலத்தில் கண்முன் நடக்கும் அநீதிகளை எதிர்த்துக்குரல் கொடுக்கும் திராணி ஏற்படும் என்பதே நூலாசிரியர் மோகன் பாரதியின் கேள்விக்கு அமைதியாய் நின்றார்.
அடுத்து பால்வாடி அபிஷேக்கின் பஞ்சாயத்து ஒன்று…
வகுப்பில் சிலேட்டுகள் காணாமல் போக பிள்ளைகளின் பைக்கோடுகள் சோதனைச் செய்யப்பட்டன. பால்வாடி அபிஷேக் பைக்கோட்டில் காணாமல் போன அனைத்தும் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில் அபிஷேக்கின் தரப்பு வாதம் ஒரு விசித்திர வேடிக்கை வினோதம்.. களவாடுதல் என்பதெல்லாம் பிள்ளைகளுக்கு ஒன்றும் புரியாது. அவர்கள் கண்களை ஆட்சி செய்யும் எதுவாகினும் அதைக் கவர்ந்து விட நினைக்கும் பழக்கம் சில குழந்தைகளிடம் தென்படும். தனதாக்கிக் கொள்ளும் ஒருவித ஆர்வக்கோளாறே அது.
ஏண்டா இப்டி
களவாண்டு வச்சிருக்க…?
இது ஆசிரியர்..
கூலா சொல்றான்..
களவாணல சார்..
சும்மா எடுத்து வச்சிருக்கேன்…!
இது அபிஷேக் பதில்
அதான் ஏன் எடுத்து வச்ச..?
இதெல்லாம்
என்னோட கண்ணுக்குள்ள வந்துக்கே இருந்துச்சு…!
அடுத்தவங்க பொருள எடுத்தா அடி விழுகுமே..
அது உன் கண்ணுக்குள்ள வரலயா….?!
அதுவும் வந்துச்சு சார்..!
வெகுளித்தனத்தில் சாமர்த்தியம் தோய்ந்து மணக்கிறது.. .
தொகுப்பில் சில சம்பவங்கள் இன்னும் பல ஆய்வுகளுக்குள்ளும் கண்டுபிடிப்புகளுக்குள்ளும் நம்மைப் பிடித்து நிறுத்துகின்றன. ஒரு புள்ளியில் தவறவிட்ட நமது அறிவின் திண்மத்தை வெகு சாதாரணமாக தொட்டுவிடுகின்றன பிள்ளைகளின் நுட்பத்திறன்.
பேனாவுல எழுதினா
டீச்சரு..!
பென்சில்ல எழுதினா..
ஸ்டுடென்ட்டு…!
அவ்வளவே…..
இதைப் விட எளிமையாக ஆசிரியர் மாணவ வேறுபாட்டைப் பகுத்துக்காட்ட ஜீவிகளாலும் இயலாது.. மழலைகளின் அறிவார்ந்த சிந்தை எப்போதும் சிலிர்தே கிடக்கும்.
தாவரவியலின் அடிப்படைப் பாடத்தில் நடந்த ஒரு நிகழ்வின் பகிர்வு கூட இப்படித்தான் போகிற போக்கில் சாமான்யமாய் ஒரு அறிவுரையை வழங்கிச் செல்கிறது பவன்யாவின் பட்டவர்த்தனமான பேச்சு.
செடிகள் மரங்கள்’லாம்
உணவு தயாரிக்குதாம்…
உங்களுக்கு எதாச்சும்
அதப்பத்தி தெரியுமான்னு கேட்டேன்..
ஆசி
ஒண்ணாப்பு பவன்யாவுக்கு
ஒரே அதிர்ச்சி..
“என்னங்க சார்…
சின்னப் புள்ளைக கிட்ட
ஒங்க பாட்டுக்கு
இத்த தண்டி கேள்விய
கேட்டுருக்கிங்க..?!””
நல்லாருக்கு ல…
அடுத்தொரு கவிதை…. மொழி வளர்ச்சி என்பது பிள்ளைகள் தங்களுக்கு தாங்களே அவ்வப்போது புலனாய்வுச் செய்துப் புதுப்பித்துக்கொள்ள தங்களுக்கேற்றாப் போல அலட்டாமல் எளிமைப்படுத்திக் கொள்ளும் புழங்கு மொழி. இதில் யதார்த்தத்தை மட்டுமே காண முடியும்… மொழிச்சுத்தம் கம்பீரம் சொற்பாங்கு மொழிப்பற்று என்பதெல்லாம் அவர்களுக்கு அவசியமற்றது.
டிவி’ங்கிறது
இங்கிலீஷ் வார்த்தை…
தமிழ்ல என்ன சொல்லணும் தெரியுமா!?
“தமிழ் டிவி”சார்..!
அம்புட்டுத்தேன்… இதுக்கெதற்குப் பெரிய பெரிய அகராதி எல்லாம்… பிள்ளைங்களே பல்பொருள் தேடலில் முளைத்த அகராதி பிடித்த அகராதிகள் அல்லவா….
பிள்ளைகளின் நுட்ப அவதானிப்பு ஒவ்வொன்றும் கூரிய தன்மை கொண்டவை. பிள்ளைகளை கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒன்று விளங்கும்.அவர்கள் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களின் கவனத் திறன் சுற்றியுள்ள அனைத்து படிமங்களின் மீதும் படர்ந்து தான் இருக்கும். அனைத்தையும் உள்வாங்கிய படியே தங்கள் செயல்களிலும் மகிழ்ந்திருப்பர். செவிகளும் விழிகளும் அனைத்துத் திசைகளிலும் தொடர் இயங்கு தளத்தில் பணிக்கப்பட்டிருக்கும் அதிசய மனிதர்கள் நம் பிள்ளைகள். இதை என் சொந்த அனுபவத்தில் பலமுறை உணர்ந்துள்ளேன்.
தொகுப்பில் இரண்டு சம்பவங்கள் இந்தக் கருத்திற்கான ஆக்கமாக இங்கு பதிவிடப்பட்டுள்ளன..
தேச தலைவர்கள் தேசிய தினங்கள் பற்றிய அன்றைய வகுப்பில்..
மோடி தெரியுமா’ன்னு கேட்டதும் அம்ரிதா மொத ஆளா
கை தூக்க…
ஒனக்கு என்ன தெரியும்னு
நான் கேக்க…
” எப்ப பாத்தாலும்
ஏரோபிளேன்ல போவார்ல சார்.. அவரு தான் மோடி…!”
அடடா.. ஒரண்டைய இழுத்து விடுறாங்களே.. என ஆசிரியருடன் நானும் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனேன்..
கவனக்குறைவு, மறதி, பராக்குப் பார்த்துட்டே ஒரு வேலையும் உருப்படியா பண்றதில்ல, விளையாட்டுத்தனம் கூடுதல் என இனி பிள்ளைகள் மீதான முன்கணிப்பைப் பெற்றோரும் ஆசிரிய சமூகமும் கைவிட வேண்டும் என்பதே இந்தச் சம்பவம் நமக்கு வலியுறுத்தப்படுகிறது.
அடுத்த நிகழ்வு மிக முக்கியமான ஒரு பகுதி..
சாலை விபத்து பற்றிய பாடமொன்றில் ஆசிரியரின் விலாவாரியான வகுப்பில்..
ரோட்ல போகும்போது வேகத்தடை’லாம் போட்டுருப்பாங்க..
அது எதுக்குன்னு தெரியுமா??
இப்போ சாண்டில்யன் அதிரடி பதில் அலட்டாமல்..
“போலீசு வசூல் பண்றதுக்கு சார்…!”
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. எனக்குமே என்ன சொல்வதென்று விழிப்பிதுங்குகிறது.. அப்ப நம்ம சுந்தர் சார் அவர்களின் நிலை கண்முன் விரிகிறது… இப்படிப் பண்ணாய்ங்கனா…. எப்படித் தான் பாடம் எடுப்பது…? என்பது போல….
வீட்டிலும் வெளியிலும் பிள்ளைகள் போவது வருவதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாலையில் வாகனங்களில் பயணிப்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறுகின்றனர். அது அவர்களின் கூரிய அவதானிப்பின் நிகழ்கண கற்றல் திறன். வாய்மொழி வகுப்பறைக் கல்வியைத் தாண்டி சுய ஆர்வத்தில் தம்மைச் சுற்றியுள்ள அனைத்திலிருந்தும் கற்றுத் தேரும் அவர்களுக்கேயுரிய பிரத்யேக சுதந்திரக்கல்வி. பிள்ளைகளை வாசித்திராத பெற்றோர் எப்போதும் அவர்களைக் குறைக் கூறிக் கொண்டேயிருப்பர்.
தொகுப்பு பல பரிமாணங்களில் பிள்ளைகளின் சிந்தனைகள் செய்கைகள் பேச்சுகள் பாவனைகள் என பெற்றோர் கண்டடையாத அவர்களின் சுயதிறனை அவர்களின் புற சாகசங்களைக் காட்சிப்படுத்துகிறது.
அதேபோல பிள்ளைகளின் பூசல்கள் என்பவை எல்லாம் வெறும் பொய் கோபங்கள்.. எத்தனை வேகத்தில் வீரியமடைகிறதோ அத்தனை விசையில் நிதானத்தையும் அடைகிறது.. பனி படர்வுகள் போல.. வன்மமற்ற மனதின் ஆதிக்கத்தில் மறந்து விடும்..மறைந்துப் போகும்.. துரோகங்கள் பழிவாங்குதல் விரோதங்கள் போன்ற வக்கிர துவம்சங்கள் ஏதுமற்ற பால்பனி.. தூய்மையையும் பரிசுத்தத்தையும் மட்டுமே சூடிக்கொண்டுள்ள கோயில் அவர்களின் மனம்..
மொதல்ல அபிமன்யு வந்தான்… சார்..
எங்கூட யாருமே சேர மாட்ராய்ங்க….!
தொடர்ந்து திவ்யஸ் பூவினி என பிள்ளைகள் பத்து பேர் மாறி மாறி இதையே திருப்பித் திருப்பி புகார் தாக்கல் செய்த வண்ணம் ஒரே வாக்கியமாக… ஆசிரியரின் துணையுடன் வகுப்பறையில் நீதிப்பரிபாலனம். மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நமது சுந்தர் தோழர் எவ்வாறு கையாண்டார் என்பதை வாசக சுயபரிசீலனைக்கு ஆட்படுத்துகிறது தொகுப்பு.
வகுப்பறையின்
மிகப்பெரிய
மிரட்டல் வாக்கியமாக இருக்கு… “ஒங் கூட சேர மாட்டேன் போ…”
இது மிரட்டல் என்கிற கருதுகோள் நமது புரிதலின் கோளாறு. பிள்ளைகளைப் பொறுத்தவரை வகுப்பறையின் கலாட்டா அலப்பறை சிடுக்குகள் யாவும் அவர்களின் உள்நாட்டு பூசல்.. தற்காலிக ஒத்துழையாமை இயக்கம்.. நம்மின் தலையீடும் பஞ்சாயத்துக்கும் அவர்களுக்கு இடையூறாகவே இருக்கும். இயல்பான குணப்போக்கில் பிசகலை ஏற்படுத்தும். அடித்தாலும் பிடித்தாலும் ஒன்று கூடி விடுவர் இயல்பின் நிமித்தத்தில்..
எனது பள்ளியில் வகுப்பறை ஆர்பாட்டங்கள் பலவற்றை இந்தத் தொகுப்பின் பக்கங்கள் நினைவு படுத்தின… ஒரு ஆசிரியராக நானும் இப்படியான அனுபவங்களைக் கடத்திய மகிழ்ச்சி இன்றும் தித்தித்துக் கிடக்கிறது நினைவுக்கிடங்கில்.
சில சமயங்களில் அவர்களின் அறிவார்ந்த ஜீவித்தனம் அவர்களின் மீதான நமது முன் முடிவுகளைத் தளர்த்தியபடியே அவர்கள் முன் நம்மை அறியாமல் மண்டியிட்டு கிடக்க வைக்கும். விண்வெளியை தாண்டிய வேறொரு உலகத்திற்குக் கடத்திச் செல்லும் ஆகாச விமானமாகவே நமது பிள்ளைகளின் மொழிகளும் செய்கைகளும் கேளிக்கைகளும் ஆசிரியர் என்பதை மறக்கடித்து நமது பிராய காலத்திற்குக் கூட்டிச் செல்லும் மந்திரகோல்கள் பிள்ளைகள்.
பள்ளி வகுப்பறை ஆசிரியர் போன்ற காலதேச வர்த்தமானங்களைக் தாண்டி அவர்களுக்கான சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் வெளியாகவே ஆசிரியரின் கல்விச்சாலை அமைந்துள்ளது என்பதை இங்கு ஒரு ஆசிரியராக குறிப்பிட்டே ஆக வேண்டும்.
தொகுப்பு முழுக்க சின்ன சின்ன பூசல்களும் உடன் பெரிய பெரிய சந்தோஷங்களும் கவிந்துக் கிடக்கின்றன வாசித்துக் கொண்டாட.. குழந்தைகளுடன் உறவாடிப் பிணைந்திருக்க அவர்களை ஆகர்ஷிக்க அவர்களின் அகவைக்கு நம்மைக் குறைத்துக் கொண்டு அவர்களின் மொழியிலேயே அவர்களுடன் பயணிக்க வேண்டும். இதையே குழந்தைகளின் அன்றாட பரஸ்பர பரிபாஷணையாக “ஓங்கூட்டு டூணா” வாகை சூடுகிறது சிறார் இலக்கியத்தில்.
பிள்ளைகளிடம் தான் எத்தனை கோரிக்கைகள் எத்தனை விதமான வேண்டுதல்கள், பலதரத்தின் செயலூக்கங்கள், விதவிதமான கேள்விகள் என அத்தனையும் அவர்களுடன் பரிமாறிக் கொள்ளும் தளமாக வகுப்பறை என்னும் கல்விஆலயம் என்பது போதுமானதாக இருக்கிறது என்பது வாசிப்பிற்குப் பின் புலப்படுகிறது. அவற்றை வழிப்பாட்டுத்தளமாகவோ சிறைச்சாலை கம்பிகளாகவோ உருவாக்கும் கட்டுமானவித்தகராக பிள்ளைகள் எதிர்கால நலனில் அக்கறையுள்ள ஆசிரியராக சுந்தர் அவர்கள் உள்ளதை இந்தத் தொகுப்பு நிரூபித்துள்ளது. வாசிக்க வாசிக்க பிள்ளைகளின் வெள்ளை மனதிற்குள் முடங்கிக் கிடக்கும் பல முகங்களைத் தரிசிக்கலாம்
அகண்ட சமுத்திரத்தின் ஆழங்கள் மழலைகள்.. அதற்குள் மூழ்கி முத்தும் குளிக்கலாம் அன்பின் அலைகளில் ஆசுவாசமாய் மிதந்தே கரை சேரலாம். அத்தனை மாதுரியம் பிள்ளைகளின் உணர்வொன்றும். அவற்றையெல்லாம் வாசித்தே அனுபவிக்க வாய்த்த இந்தத் தொகுப்பின் அநேக பக்கங்கள் மனதிற்கான இதத் தூறல்கள்..
மெட்ரிக் பள்ளியிலிருந்து வந்த ஒரு பிள்ளை எப்போதும் அக்கா தாத்தா பாட்டி என யாரேனும் ஒருவர் நேரடி பார்வையில் இருக்க அடம் பிடிக்குமாம். உறவுகள் கண்களில் படவில்லை என்றால் வகுப்பறையை ஆட்டகளம் ஆக்கி விடுமாம் என்கிற அறிமுக வரியுடன் தொடங்கும் கவிதை மற்றுமொரு ஜனரஞ்சக ரசனை..
ஒரு நாள் நைசா பேசி கெஞ்சியெல்லாம் பார்த்தேன்…
” சார் உங்க கால்’ல கூட விழுகுறேன்..
என்னைய கொண்டு போயி
எங்க வீட்ல விட்ருங்க..
ப்ளீஸ் சார்…!”
பிள்ளையின் இந்த வேண்டலை நினைத்து ஒருகணம் சிரித்து விட்டேன்.. பாவமாக அவர்கள் கெஞ்சுவதை காட்சிப்படுத்தும் விதமாக கோர்த்து எழுதியுள்ளது, நிகழ்வை அப்பட்டப்படுத்தியது என ஆசிரியரின் எழுத்தின் உத்தி தொகுப்பிற்குக் கூடுதல் பலம்.
புறம் பேசும் பெரியவர்களின் அறியாமை முன்னம் குறையோ நிறையோ பிடித்தமோ ஒவ்வாமையோ உள்ளதை உள்ளபடிக்கே நேராகச் சொல்லிவிடும் இயல்பு பிள்ளைகளிடம் மட்டுமே தரிசிக்கலாம். ஆசிரியர் என்ற மிகையுணர்ச்சி சற்றும் இன்றி குடும்ப உறவு போல சுயகருத்தையும் விமர்சனத்தையும் தயக்கமின்றி பரிமாறிக் கொள்ளும் மாணவ சுதந்திரத்தை ஊக்கப்படுத்தும் ஆசிரியரையும் வகுப்பறையையும் தான் இந்த தொகுப்பு நமக்கு அடையாளங்காட்டுகிறது. இந்த யதார்த்த குணாதிசியங்களை பாராட்டியோ கடிந்தோ இடைமறிக்காமல் இருந்தாலே தன்னியல்பில் வளர்வார்கள் பிள்ளைகள் என்பதை ஆசிரியர் தனக்கு வழங்கப்பட்ட குருவிக் கூட்டங்களைக் கொண்டுச் சாதித்துள்ளார்.
இந்தச் சம்பவமும் மேற்கூறிய விஷயங்களை நிரூபிக்கிறது.
இன்னைக்கு
ஜிப்பா மாதிரி
சட்டை போட்டுக்கிட்டு போனேன். இது ஆசிரியர்..
இப்ப வித்யா பாப்பா..
“சார் இந்த சட்டையல
உங்கள பாக்கப் பாக்க
எனக்கு கோவம் கோவமா வருது சார்..!?”
எதுக்கு வித்யா…?
தெரியல சார்.. ஆனா கோவமா வருது…!
அப்ப சட்ட நல்லா இல்லையா வித்யா..?!
கேவலமா இருக்கு சார்…!!
எத்தனை ஆசிரியர் இத்தனை பேச பிள்ளைகளை அனுமதிக்கிறார்கள் என்பது இதுவரை பதிவிடப்படாதக் குறிப்புகள். ஆனால் பிள்ளைகள் தமக்குப் பிடித்தமான ஆசிரியரை உரிமையுடன் மட்டுப்படுத்தி நக்கல் செய்வது என்பது ஒருவித அதீத பிரியத்தின் பிரதிபலிப்பு என்பதை துளியும் கூச்சப்படாமல் வாசக வெளியில் பிள்ளைகளின் நையாண்டிகளைத் தானும் ரசித்து காலத்திற்கு நிலைக்கும்படியாக நமக்கும் ருசிக்க பதிவாக்கியுள்ளார் ஆசிரியர் சுந்தர்.
இதையொத்த சம்பவம் மற்றொன்று… கூடுதலாக ஆசிரியரின் மீது நன்மதிப்பைக் கூட்டுகிறது…
இன்னைக்கு
கூலிங் கிளாஸ்
போட்டுக்கு போனேன்..
எல்லாரும் சுத்திச் சுத்தி வந்தாய்ங்க..
” சார்..
சூப்பரா இருக்கு..
சார்…
சூப்பரா இருக்கு..
சார்…
சூப்பரா இருக்கு..!”
அதுல இந்த யோக ஸ்ரீ இருக்கே… யோகா ஸ்ரீ…?!
ஒரே போடு தான்…
அம்புட்டும் காலி..!
சார்…. நல்லாவே இல்ல… கண்ணாடிய கழட்டுங்க… வேற ஆளு மாரி இருக்கு…!” .
ஆகச் சிறந்த கவிதைகளும் நாணித் தவிக்கும் மழலையின் கனிமொழியில் பால்வாடி வித்யா சொல்றாங்க
“சார்.. நானும்…
நாம் பேர் எழுதிக்கு வரவா..?!
” நாம் பேரு”.. அழகு…இந்த கவிதை எந்த மொழியிலும் பெயர்க்கமுடியாத பிள்ளைத்தமிழமுது…
உறுதியும் நிலைப்பாடும் நம்மை விட பிள்ளைகளிடம் கூடுதலாக இருக்கும். இதை நாம் பிடிவாதம் அடம் பிடித்தல் என்று சாடுகிறோம் அவர்களை. அசலில் அது உயிர்களின் பிரத்யேக குணாதிசயம். அதேபோல் எதிலும் ஸ்திரத்தன்மை என்பதும் பிள்ளைகளின் சுயம் என்பதை பா.பவன்யா நிரூபிக்கிறாள்.
பக்கத்துல மண்டபத்தில் விசேஷம்..
காலையில இருந்து
ஒரே பாட்டு சத்தம்..
வாதம் இதான்..
பாட்டு போடுறது
சும்மா ஆடுறதுக்கா
இல்ல வார்த்தைகளை புரிஞ்சுக்கவா..
வழக்கு ஆசிரியரிடம் வந்தது.. இப்போது ஆசிரியர்..
பாட்டு..
சும்மா ஆட்றதுக்கா..
இல்ல புரிஞ்சுக்கவா.? ஆடறதுக்கா… புரிஞ்சுக்கவா..?!
மறுபடியும் மறுபடியும் கேட்டேன்.. பாட்டு..ஆடுறதுக்கா.. புரிஞ்சுக்கவா…?!
பா.பவன்யா மட்டும்
கடைசி வர மாறவே இல்லை “பாட்டுங்கிறது
வார்த்தைகளை நாம் புரிஞ்சிக்க தான் சார்…!”
அடுத்ததாக பிள்ளைகளின் வகுப்பறை நாயகர்களான பல ஆசிரியர்கள் ருசித்த அனுபவம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஆசிரியர். இந்த அனுபவத்தை நானும் ருசித்துள்ளேன். பிள்ளைகளைப் பொருத்தவரை தனது மனதைக் கவர்ந்த ஆசிரியர்களை அப்படியே பிரதியெடுப்பர். தங்களின் பிரியமான ஆசிரிய நாயகர்களின் ஒவ்வோர் வெளிப்பாடுகளுக்கும் தான் மட்டுமே உரிமைப் பாராட்ட வேண்டும் என்கிற பிரயாசையில் வெளிப்படும் அந்த அன்பின் தீவிர ஆக்கிரமிப்பு பார்க்கவும் ரசிக்கவும் பிரமிப்பாக இருக்கும். அது ஆசிரியர்கள் விரும்பிச் சுவைக்கும். மழலைபோதை. இதை அனுபவித்திராத ஆசிரியர்கள் பெரும்பாலும் வகுப்பறை சர்வாதிகாரிகளாகவே இருப்பர்.
வகுப்பறையின் மேசையைச் சுற்றிய பிள்ளைகளின் வளைவு வட்டத்திற்கு மத்தியில் சக ஆசிரியரின் திருமண ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் நமது ஆசிரியர் சுந்தர்.. அப்போது….
என்னயச் சுற்றி
ரெண்டு பக்கமும் நின்னுக்கிட்டாய்ங்க..
ஒவ்வொரு பக்கமா புரட்டினேன்..
அப்ப ரெண்டாம் வகுப்பு மா.பவன்யா வாயில் இருந்து
ஒரு முணுமுணுப்பு..
“கடவுளே.. கடவுளே..
எங்க சார் போட்டோ ஏம்பக்கந்தான் வரணும்…
கடவுளே.. கடவுளே..
எங்க சார் போட்டோ
ஏம்பக்கம் தான் வரணும்..!”
இந்த பிள்ளைப்பிரியவர்களை விடவா பெரிய விசிறிகள் இப்பூவுலகில் கண்டடைய முடியும். இந்த ரசிகக்கூட்டம் பிற துறைகளில் வாய்க்காத ஆசிரியத் தொண்டிற்கு மட்டுமே உரித்தான மகிமை.
ஆசிரியரிடமிருந்து தன்னை ஒலித்துக் கொள்வதாக முகம் திருப்பி முதுகு புறம் காட்டி உட்கார்ந்தும், நேற்றை நாளைக்கு என்று தனக்குத் தோதான மொழியாக்கிய அஜிஸ், குடும்பமே விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் படுக்கிடையாகக் கிடக்க பசியில் சோற்றுக்காக மட்டுமே பள்ளிக்கு வந்த யோகா பாப்பாவின்
“சார் இன்னும் சோறாக்கலையா” என்று கேட்ட அவளின் புன்னகையைக் காட்சிப்படுத்திய யோகாவின் புன்னகைப் பூத்த முகம் என் மனதில் ஆழமாய் புதைந்துவிட்டன.
உண்மையிலேயே என்பதை உம்மையிலேயே என்று கொஞ்சும் அபிமன்யு, ரத்தத்தை நத்தம் என்று தொத்தித் பேசும் ஒரு பாப்பா, ஃபர்ஸ்ட் எழுதி முடித்த சுபிக்ஷா செல்லம், “ஒங்கூட சேர மாட்டேன் என்று அழ வைக்கும் மழலை நட்புக்கூட்டம், முறைத்துப் பார்த்தே பயமுறுத்தும் வகுப்பின் நாயகன் ரக்ஷித், புத்தி புகட்டும் யக்ஷனா பாப்பா, பள்ளிக்கு லீவு போட்டதால் கண்ணீர் சுமந்த விழிகளுடன் வினிதா ஸ்ரீ பாப்பா, சாமியிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைக்கும் யோகேஷ், எதிலும் தன்னம்பிக்கையுடன் இருக்கும் மழலையாக சுபிக்ஷா, நாம் பேரு என்ற அஞ்சுக மொழி வித்யா, சாப்பிடு என்பதை “தாப்புடு” என்று தொத்திப் பேசி மயக்கும் கவிஸ் எத்தனை ரக மொழிகள்.. ரசிக்க இதைவிட வேறென்ன வேண்டும்..
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்…” என்பதே தேனி சுந்தர் அவர்கள் படைப்பின் நோக்கமாகும் பார்க்கிறேன்.
இந்த மலர் கூட்டங்களின் மழலை வாசத்தைப் சுவாசிக்கும் பக்தனாக ஒட்டு மொத்த பிள்ளைகளின் ஒருமித்த மூச்சாக “ஓங்கூட்டு டூணா” வாசகரிடம் ராசியாகிறது.
அழுகாமல் முடி வெட்டிக் கொண்டதால் பெரிய ஆள் ஆகிவிட்ட திவ்யேஸ்,கிள்ளி கிள்ளி வைக்கிறாள் சடைய சடைய அவிழ்த்து விடுகிறாள், உங்க அம்மா வெள்ளிக்கிழமை செத்துப் போகும் என்று சொல்கிறாள், பட்ட பேரு வெச்சி கூப்பிடுறா என வகுப்பறை புகார்கள் தான் எத்தனை.. தீர்க்கவும் தீர்ப்பு கூறவும் நேரம் போதாமை…கூடவே நாம் குழந்தையாக அவர்கள் முன் பணிந்து ஊடாடவும் வேண்டும். அப்போதே இந்தக் கொண்டாடங்களில் மகிழ்ந்திருக்க முடியும்.
சனிக்கிழமை என்றாலே ஞாயிறு விடுமுறை நாளை குறிப்பாக உணர்த்தும் ஒரு திருநாள். கூடுதலாக அன்றைய தினம் கலர் சட்டை போடும் வழக்கம் நான் பள்ளியில் படித்த காலத்திலேயே இருந்து வருகிறது. பிள்ளைகளின் பள்ளிச் சோர்வைப் போக்கும் பெருநாளாக சனிக்கிழமை அவர்களுக்கான நாள். இன்றைய நகர்ப்புற பள்ளிகளில் இப்படியான வழமை கைவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் கடைப்பிடித்து வருவதை நினைக்கும்போது பள்ளிக்கால எனது பாலியல் நினைவுகள் கண்முன் விரிகின்றன. தொகுப்பில் இந்தத் திருநாளை காட்சிப்படுத்திப் பதிவாக்கியது மலரும் நினைவுகளில் ஆழ்த்தியது. தொகுப்பு முழுதும் பெருவாரியான பகுதிகள் வகுப்பறை என்னும் கல்விவளாகத்தை பிள்ளைகளின் சுயத்தை வளர்த்தெடுக்கும் அவர்களுக்கான தனித்த உறைவிடவாகவே ஆசிரியரின் வகுப்பறை அமைந்திருப்பது உள்ளபடிக்கே மகிழ்ச்சி.
இத்தொகுப்பில் நிரம்பப்பெற்ற அஞ்சுக சம்பாஷணைகளின் அணி வரிசையில் சிலவற்றை மட்டும் அடிக்கோடிட்டு சிலாகித்து மீதமுள்ள பிள்ளைகளின் மொழிகளை தள்ளி வைத்துக் கடத்திவிட மனம் ஒப்பவில்லை. ஒரு ஆசிரியராக குழந்தைகளின் உயிர்ப்பு உறைந்திருக்கும் இத்தொகுப்பிற்குள் சில உயிர்களை மேடை ஏற்றியும் பலதுகளை வெறும் பார்வையாளர்களாக ரசித்துவிட்டு பேசுவது ஏதோ மதிப்பெண் தரவரிசை போல பாரபட்ச ஏற்றத்தாழ்வுகளில் பிள்ளைகளின் கனிமொழியை கவித்துவ துள்ளலை தரம் பிரிப்பது போல ஆகிவிடும் என்கிற கவனத்தில் கூடுமானவரை எல்லா பிள்ளைகளையும் எனது எழுத்துப் பார்வைக்குள் அரவணைத்துள்ளேன். வாசிப்பவருக்கு வேண்டுமானால் இந்த விமர்சனம் வறட்சியை தரலாம் அல்லது தொகுப்பின் அநேக பக்கங்களை ஆட்கொண்டதால் மதிப்பீட்டிற்கு இடையூறாக இருக்கலாம்.ஆனால் என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளின் சுயதேடலுக்கு வழிவிடும் பரந்த வெளியாக இருக்கும் சுந்தர் அவர்களின் வகுப்பறை, நாளொன்றிலும் நிகழ்த்திய ப ஆச்சரிய அனுபவங்கள். பிள்ளைகளின் மாய உலகின் அனைத்து விந்தைகளையும் ரசித்து பிசகாது குறித்து ஆவணப்படுத்திய குறிப்பேடாக இந்நூலை காலங்களைக் கடந்த அமரகாவியமாகத் திகழும் அனைத்து சாத்தியங்களும் பொதிந்துள்ளது.. இனிவரும் காலங்கள் இது போன்ற வகுப்பறை மலரும் நினைவுகளை ஒவ்வொரு ஆசிரியரும் குறித்து வைத்து படைப்பாக்கம் செய்யவேண்டும். அவர்களின் சிறு அசைவுகளும் கூட காவியமாகக் கவிதையுலகில் பொறித்து வைக்கப்பட வேண்டும். இந்தத் தொகுப்பு இலக்கிய உலகில் மாறுபட்ட ஒரு தளத்தை உருவாக்கப்படும் படைப்புப் புரட்சியாகவே காண்கிறேன்.
ஒவ்வொரு நூற் பார்வையிலும் முதல் ஒரு பக்கம் எனக்கானதான அறிமுகக் கட்டுரை ஒன்றிக்காக நான் ஒதுக்கிக் கொள்வேன் இது எனது பாணி. முதல் முறையாக பிள்ளைகளின் ஒவ்வொரு பச்சிளம் ரேகைகளின் செந்நிறத் தடங்கள் எனது எழுத்துரையில் பதியப்பட வேண்டும் என்கின்ற பேரவாவில் ஆதி முதல் அந்தம் வரை தொகுப்பின் இழையோரங்கள் இடுக்குகள் என ஒரு கூட்டி எனக்கான ஒரு நிறைவைப் பதிவிட்டுள்ளேன் என்கின்ற திருப்தியில் பிள்ளைகளின் நினைவரிசைகளைப்வாசித்துப் பேசியதில் உள்ளபடிக்கே பெருமிதங் கொள்கிறேன்.
து.பா.பரமேஸ்வரி
நூல் அறிமுகம்: அ.சி.விஜிதரனின் ‘ஏதிலி’ து.பா.பரமேஸ்வரி
நிலம் என்பது மண்ணால் ஆனதல்ல.”
ஆம். ஒரு நாடு என்பது உயர் தேசம் என்பது வெறும் காடுகளால் நதிகளால் மலைகளால் ஆறுகளால் சமுத்திரங்களால் மட்டுமே புடைசூழப்பட்டதல்ல. இவையனைத்தும் உயிர்களற்ற கானகத்தின் உயிரற்றவை போல மனித சமூகம் புழங்காதவரை. மனித உயிர் நிம்மதியாக வாழாத வரை காணி நிலமும் கள்ளறை சுமக்கும் நிதம் என்பது இயற்கையின் கோட்பாடு. அதிலும் மனிதருண்டு மனிதர் வாழும் மடமை என்பது உயிர்களின் படைப்பில் எங்கும் காணக் கிடைக்கா கருப்பு சரித்திரம். மனிதனை மனிதன் இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்கிற பாரதியின் ஆற்றாமை இன்றுவரை ஆற்றவியலா மாற்றத்தில் மட்டுமே உள்ளது. அதற்கான முன்னெடுப்பும் கசியவில்லை என்பதே இங்கு நம் வருத்தம். எந்த சாதியாக இருந்தால் என்ன.. எந்த மதமாக இருந்தால் என்ன… எந்த நிலமாக இருந்தால் என்ன…எந்த மறைத் தொழுபவர்களாக இருந்தால் என்ன.. எந்த மொழி பொழிபவர்களாக இருந்தாலென்ன…. எப்படியான உண்டி ருசிப்பவர்களாய் இருந்தாலென்ன… சக மனிதர்கள்.. இந்தப் பேரண்டவெளியில் ஜனித்த உயிர்கள் என்கிற படைப்பியக்கத்தின் அடிப்படையை உணர்ந்தால் போதுமானது. நிலத்தையும் நீரையும் இயற்கை வளத்தையும் கூறுபோடும் மனித மனமே மனிதரையும் பிரித்துக் கூறுபோட ஆரம்பித்தது.
ஆதி காலம் முதல் தொடர்ந்து வரும் போர்களும் படையெடுப்புகளும் அதிலும் சொந்த மண்ணிலேயே பிறந்த மாந்தர்களின் பிரிவினை, தேசத்தை விட்டு துரத்தப்படுவதும்அப்புறப்படுத்
ஆம். இலங்கையின் நம்மின மாந்தர்கள் ஈழத்தமிழர்கள் சிங்கள தேசத்தின் கோரப்பிடியில் குரல்வளை நெரிக்கப்பட்டது தமிழ் வரலாற்றின் இரத்தச் சரித்திரம். கொடுமை கொடுமை என்று ஓடோடி போனதற்கு அங்கே ஒரு கொடுமை தலைவிரித்து ஆடிய தாம். அபயம் தேடி அவயம் சுமந்து அபயக்குரல் ஓலமிட பிறந்த மண்ணில் நசுக்கப்பட்டு கையேந்தி வந்த மக்கட்கு உயிர்பிழைக்க நம்பிக்கையின் அதீதத்தில் சிறு வெளிச்சத்தைத் தேடி வந்த பரிதாபங்களுக்கு நம் தமிழ் மண் காண்பித்தது என்ன..? ஆதரவா அல்லது மெல்லமெல்ல சித்திரவதித்த ஆயுதமா.. சொந்த மண்ணை தொலைத்து அகதிகளாக உயிரை மட்டுமே தாங்கி அடைக்கலம் கேட்டு நம் மண்ணில் தடம் பதித்த அந்த முகங்களுக்கு அரசும் அரசாங்கமும் எப்படியான வரவேற்பை எதிர்காலத்தை வழங்கியது.. மனிதவாழ்வின் கணக்கிலடங்கா துயரங்களில் தலையானதாகக் கருதப்படும், இதுகாறும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த மண்ணை பிரிந்து அகதிகளாய் அயல்நாட்டில் கையேந்தி நிற்பது இது ஒரு நீடித்த பீடித்த சோகம். ஆம். அவர்கள் தாம் வாழ்ந்த இடத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவர்கள். நம்மிலிருந்து பிரிக்கப்பட்டவர்கள். இலங்கையின் ஈழத் தமிழர்களின் கோர காட்சிகள் முள்ளிவாய்க்கால் முனையில் முடிந்துப்போன பிணங்களின் கதறல்கள், இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சொந்த நாட்டில் பாதி அடைக்கலம் தேடி வந்த நாட்டில் முகாம்கள் என்ற பெயரில் மீதி என தங்களது உயிரையும் உடைமையையும் இழந்த இலங்கை அகதிகளை மையமாகக் கொண்டு கதைக்கிறது ஆசிரியர் விஜிதரன் அவர்களின் “ஏதிலி” நாவல்.. இல்லை கதறுகிறார்கள் ஏதிலிகள். ஈழத்தின் எல்லா போக்குகளையும் பேசுகிறது நாவல். பக்கங்கள் ஒவ்வொன்றும் ஏதிலிகளின் துயர ஓலமும் இரத்த வாடையும் நாசியைப் புடைத்து செவிகளைத் துண்டாக்குகின்றன.
அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் ஈழத் தமிழர்களின் வெவ்வேறு பாடுகளைக் கதைகளாக வரலாற்றுப் பதிவேடுகளாகக் காலம் முழுதும் அழியா கல்வெட்டுகளாகப் பதிந்து நிற்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் பேசுவது கதை அல்ல நிலத்தை இழந்த ஈழ மக்களின் கண்ணீர் மொழி. குருதித் தெளிக்க தசைகள் கிழிய நரம்புகள் புடைக்க வதனமெங்கும் ஆறவியலா ஆழமான ரணங்கள் சுமந்து நடைப்பிணங்களாக நிதம் வாழ்வைத் தொலைத்து இறந்தகால இனிமைகளை நெஞ்சில் சுமந்து எதிர்காலத்தை மட்டுமே கையில் பத்திரமாக இறுகப்பற்றி எங்கேனும் போய்ச் சேருவோம் இறுதியில் என்கிற ஒருவிதக் குருட்டு நம்பிக்கையில் தூரத்தில் தெரிகிற ஒரு புள்ளியை மட்டுமே கைத்தடியாகப் பற்றி இந்திய முகாம்களைத் தேடி உயிரேனும் ஒட்டியிருக்க ஏதேனும் வழியுண்டா என்று குரல்கள் அற்றவர்களாக இங்கு தஞ்சம் புகுந்தனர் பரிதாபத்தின் சின்னங்களான ஏதிலிகள்.
இப்படி மு காம் வந்து சேர்ந்த இவர்களின் நிலை என்ன.. என்று தெரியுமா.. அனுபவித்த கொடுமைகள் அரசின் சூழ்ச்சிவலை, அவர்களுக்கென்று போடப்பட்ட சதித்திட்டங்கள் இல்லை அடக்குமுறைகள், பேசினாலும் பேசாமலிருந்தாலும் குற்றம். உரிமை மறுப்பு உயிர் வாழலாம் ஆனால் நடைபிணமாய். சிறைச்சாலைகள் பரவாயில்லை இவர்களின் முகாம் திராபகக் கதவுகளின் நுழைவாயிலைக் காணும்போது. மந்தைகள் ஆக்கப்பட்டனர். எந்த கோரிக்கைகளும் கூப்பாடுகளும் இதுவரை கேட்பாரற்றுக் கிடக்கின்றன. திராணியற்றுக் கிடக்கிறார்கள் நம் சகோதரர்கள். தேசம் அறிந்திருக்குமா இவர்களின் கண்ணீரை.. ஏன் அறிந்திராது….. நாம்தான் செவியிருந்தும் செவிடர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். நாம் மட்டும் வாழ வேண்டும் நம் குடும்பம் உடன் இனிதே. நமக்கு அப்பாற்பட்ட எதையும் கண்ணுறும் கவனம் நமக்கு போதிக்கப்படவில்லை இதுகாறும். இவர்கள் உண்ட அவதிகள் இலங்கையில் கொண்ட பாடுகள் முகாம்களின் அட்டூழியங்கள் என அன்றாடம் நாம் கேட்டுத்தான் வருகிறோம் சூடான செய்திகளாக அன்றைய பொழுதின் சுவாரஸ்யமாக. பேசிப்பேசியே பொழுதைக் கழிக்கிறோம். ஆனால் இவர்களின் எல்லா குமுறல்களும் மௌன சாட்சியாய் ஈழ மண்ணும் நம் இந்திய முகாம்களும் அதையும் தாண்டி ஆசிரியர் விஜயதரன் அவர்களின் இந்த நாவல்.
“காட்டாறு வெள்ளம் வழிகளை என்றும் பயன்படுத்தியதில்லை.”
ஆம். முற்றிலும் உண்மை வழிகளை எதிர்நோக்கிய வாழ்வு என்பது நிதர்சனமற்றது பயனற்றது. வாழ்க்கையை எப்போதும் அதன் சுவாரஸ்யத்தில் விட்டுவிட வேண்டும். அதில் எப்போதும் மகிழ்வுக்கான வெண்திரை மட்டுமே இருக்கும் என்ற எண்ணம் முட்டாள்தனம். சுமையும் சுகமும் வாழ்வும் தாழ்வும் அமைதியும் போராட்டமும் வெற்றியும் தோல்வியும் என..புதிர்களின் நகர்வுகளே வாழ்க்கை.ஏன் சில சமயங்களில் பெரும் தோல்விகளும் துயரங்களும் கூட சூழந்து அழுத்தலாம். அவற்றை முன்பே அறிய முற்படுபவன் சுவாரஸ்யத்தைச் சேகரிக்க முடியாது.அடுத்தடுத்தக் கட்டங்களை அடுத்தடுத்த நகர்வுகளில் விட்டுவிட்டுக் கடப்பதே வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதற்கான வழிமுறை என்பதையே முதல் அத்தியாயத்தில் அவன் இவன் இரண்டு நண்பர்களின் வாழ்வில் ஏற்பட்ட தொய்வுகள் திடீர் திருப்புமுனைகள் பாதிப்புகள் அவற்றையெல்லாம் இவனிடம் அவன் சிலுவை தாங்கிய அந்த இருள் நாட்களை எழுத கட்டாயப்படுத்தும் கருப்பு இயேசுவாக அவன்.
“உறுதியானவற்றை எழுதத்தானே பேனா வேண்டும்.”
ஆசிரியரின் இந்த வரிகள் பல கோணங்களில் நமக்கான படிப்பினை.. உறுதியற்ற வாழ்க்கைப் பாடுகளில் எதுவும் நிரந்தரமானவை அல்ல. எதை நிச்சயம் என்று நினைத்து அழியாத நிலைப்பாட்டில் அச்சிட முடியும். காலமும் மனிதனும் கடத்தல்கள் தானே. இருத்தல் என்பது இருந்தும் இல்லாது போவது.
யாழ்ப்பாணத்திலிருந்து உயிர் வாழ்ந்தால் மட்டுமே போதும் என்று தப்பித்துப் பிழைத்து யாழ்பாணத்திலிருந்து கள்ள கப்பல் வழியே நம் இந்தியப் பெருங்கடலே தமக்கான வெளி என்று கரை தேடி முகாம் சேர வந்தவர்கள் அமுதாவும் அவள் குடும்பமும்.
“படகில் ஏறி வரும் போதே பாடையில் ஏறியதாகவேப் பட்டது.”
என்ற அமுதாவின் ஆழ்மன அச்சுறுத்தல் வெளிப்படுத்தும் வரிகள் கலங்க வைத்தன. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று அடாத நம்பிக்கையில் நம் தமிழன்னை மடி வந்தடைந்த அவளுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல மீண்டும் ஒரு இடியே தலையில் விழுந்தது. காரணம் நமக்கு வேண்டுமானால் சாதிய சாக்கடை என்பது மூக்கைப் பிடித்துக் கடந்து செல்லும் அன்றாடம். கடல் கடந்து உயிர் பிழைக்க வந்த ஏதிலிகளிடம் சற்றும் இரக்கமின்றி நீங்க என்ன சாதி என்று கேட்கும் சிதில மனம் உலகிலேயே இங்கு நம் பாரதத்தில் மட்டுமே அதிலும் நம் தமிழ்நாட்டில் அதிகப் புழக்கம்.நமக்கே உரித்தான தன்னியல்பு.அத்துடன் முடிந்ததா என்ன.. நிலத்தில் தடம் பதித்த அவர்களுக்கு இதயத்தில் சம்பட்டியால் தடம் பதித்தனர் முகாமி அரசியலாளர்கள். நிலங்களின் அரசியலில் இதுவும் இருக்கும் தானே என ஆச்சரியம் இல்லை நமக்கு. அதிர்ச்சி தான் ஈழத்தமிழர்களுக்கு என்கிறது இரண்டாம் அத்யாயம்.
வாழ்க்கை ஒருவரை வாழக் கற்றுக் கொடுக்கிறது என்று கூறுவதைவிட கடினமான இந்த வாழ்க்கையை வாழ வாழ்பவரை கடினமானவராகத் தகவமைக்கிறது. காரணம் வாழ்க்கையை மாற்றும் திறனைக் காட்டிலும் எதிர் கொள்ளும் உறுதியும் வைராக்கியமும் ஒருவருக்கு போதுமானதாக இருக்கும் என்பதே காலம் நமக்கு வழங்கும் பாடம். இதையே ஷாமினியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. இப்படியானதொரு வாழ்க்கையை அன்றாட வாழ்வில் அனேக ஷாமினிகள் கடந்து வந்துள்ளனர் கடந்து கொண்டும் இருக்கின்றனர். ஷாமினியின் வாழ்வில் அவள் எடுக்கும் சொந்த முடிவுகள் மட்டுமே இதற்கான முக்கிய காரணமாக ஆசிரியர் முன்வைப்பது. வாழ்க்கைச் சூழலும் முகாமின் அகதி வாழ்க்கையும் அவளை இவ்வாறான தன்னிச்சையான முடிவுகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கும் கடின மனநிலையை வழங்கிச் செல்கிறது. ஒவ்வொரு தன்னிச்சை முடிவும் ஷாமினிக்கு வெற்றியின் அருகாமையையோ அவளது வாழ்க்கைப் பாடுகளுக்கான ஒரு இறுதித் தீர்ப்பையோ வழங்கி விடவில்லை ஆயினும் தனித்து எதிர்த்துப் போராடும் வல்லமையை வழங்கியது என்பதே மூன்றாம் அத்தியாய ஈழ ஏதிலியான ஷாமினி நமக்குக் குறிப்பாக நிற்கிறாள்.
“அடையாளம் இல்லாமல் போவது என்பது ஒரு இழப்பு என்றால் அடையாளம் காண முடியாமல் இருப்பது இன்னொரு இழப்பு.”
மனித வாழ்வு என்பது நம்மை சுற்றி இருப்பவர்களை அடையாளம் காண்பதிலிருந்தே தொடங்குகிறது. சொந்த மண்ணில் அந்நிய படுத்தப்படும் யாவரும் அகதிகள். அதேபோல் நிலத்தை விட்டு அகதிகளாய் புலம்பெயர்ந்தவர்கள் எப்போதும் அடையாளம் தொலைத்தவர்கள். தாய்நாடான இத்தாகாவிற்குத் திரும்பப் போராடிய ஒடிசியஸ் தமது தாயகம் அடைந்தபோது அது தனக்கானது தன்னுடையது என அடையாளம் காண முடியாத உரிமைப் பாராட்டவியலா அவல நிலையை அடைந்தார். அது மட்டுமல்லாது தம் நிலத்தை விட்டு வாழ்வாதாரத்திற்காக புலம்பெயரும் ஒவ்வொரு அகதியின் அசல் நிலையும் இதுவே என்கிறது நான்காவது அத்தியாயம்.
முகாமி அகதிகளின் வாழ்க்கையின் சோக நிலை, தமிழனே தமிழக அரசே தமிழ்நாடே கதி என்று சரணாகதி அடைந்த அகதிகளுக்குக் கிடைத்தச் சலுகைகள் என்ன.. வாழ்வு என்ன.. கண்ணீர் மல்கச் செய்கிறது ஐந்தாவது அத்தியாயத்தின் பக்கங்கள். உயிர்மட்டும் மிச்சமாய் மற்றவை எல்லாம் எச்சமாய் வழங்கப்பட்ட கோர சரித்திரம் அகதி முகாம். சிங்களர்களால் புறக்கணிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை நம் தேசம் அரவணைத்துக் கரைச் சேர்த்ததாய் மார்தட்டிக் கொக்கரிக்கும் நமக்கு மறைக்கப்பட்ட இருட்டடைப்பின் பிழைகள் ஒரு காத தூரம் வெறும் செய்தியாகவே தேனீர் இடைவெளி விவாதப் பொருளாகவே கடந்தும் சென்றது. அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் நமக்குப் பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை. இந்த அகதிகள் மண்ணை விடுத்து உலகம் முழுவதும் சுற்றி அலைகிறார்கள் வாழ்வாதாரத்திற்காக. பெரும்பாலும் இது ஒரு உலகளாவிய அரசியல் தானே. அரசு என்றானபின் அரசியல் என்பதும் விதிவிலக்கல்லவே. தொகுப்பின் ஆறாவது அத்தியாயம் முன்கதை பின்கதை என இரு வெவ்வேறு கதைகளைத் தனக்குள் உள்ளொடுக்கி உள்ளது. மையம் என்னவோ ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஆனால் பல போராட்டங்கள் வெறும் எழுத்துக்களாக எங்கோ பதுக்கி வைக்கப்படுவதை காட்சியப்படுததுகிறது பக்கங்கள். துணிந்து எதிர்ப்பவர்களுக்கு உலகின் எந்த மண்ணிலும் நீதி இல்லை. இனி போராட துளியும் மனிதர்களுக்குத் திராணி இல்லை.
வாழ்க்கையை அறிந்துக் கொள்ள முயற்சிப்பது ஒரு ஆகச் சிறந்த தவம். எந்த உறவாக இருந்தாலும் உன்னத அன்பு இழப்பை பொருட்டாகப் பார்க்காது. அதிலும் தூய காதல் சாதி மதம் வசதி வாய்ப்புகளைக் கடந்தும் பேரிழப்புகளில் கூட துணைநிற்கும் என்பதையே ஏதிலியின் ஆறாம் அத்தியாயம் குகனின் தூயக்காதலைப் புடம் போட்டு நமக்குக் காட்டுகிறது. கண்ணிவெடியில் தனதொரு காலை இழந்தக் காதலியை உவர்ப்பின்றி ஏற்று வாழும் தூயக் காதலையும் பேசத் தவறவில்லை நாவல். உறவுகள் உதறினாலும் இறுதிவரை கலங்காது தம் துணையைப் பாதுகாக்கும் உண்மை காதல் இன்னும் பெருவெளியில் சாகாது வாழ்ந்து தான் வருகிறது என்பதை ஆழப்படுத்துகிறது இந்த அத்யாயம்.
“வீடுகளுக்கு கம்பிகள் மட்டும் இல்லை அப்படி ஒரு வாழ்க்கை தான் இங்கு..”
சொந்த நாட்டிலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் என அகதிகளான இரு தோழிகள் தமது அவல வாழ்க்கையை கடித சம்பாஷணையில் பகிர்கிறதைப் பரிமாறுகிறது ஏழாவது அத்தியாயம். வேறு எந்த தேசத்திலும் நடைமுறையில் இல்லாத பிள்ளைகளுக்கான இந்திய மனப்பாடக் கல்வித் திட்டத்தைத் தமது பக்கங்களில் சில வரிகளில் சுட்டிக்காட்ட தவறவில்லை ஆசிரியர். முள்ளிவாய்க்கால் கோரங்கள் கண்முன் ஊசலாடுகிறது ஏழாவது அத்யாயத்தில்.சிங்களப் போர் சாதாரண மக்களையும் ஆயுதம் ஏந்தச் செய்த துர்பாக்கியம். ஒரு அழிவுப் போருக்குத் தாமாகவே முன்வந்து தயாரான மக்கள். ஆர்மிக்காரர்களின் இரக்கமற்ற அரக்க குணம்.
“மக்களுக்காகத் தானே நாடு.. மக்களே இல்லாமல் ஆக்கிவிட்டு எப்படி நாடு கிடைக்கும்..”
என்கிற அடிப்படை ஜனநாயகம் கூட அறிந்திராத சிங்கள அரசின் குண்டு தாக்குதலில் உயிரிழந்தும் உறுப்பிழருந்தும் பரிதவித்த மக்களைக்காட்சிப்படுத்துகிறது பக்கங்கள். சாமானிய ஜனங்கள் அரசுக்கு எதிராக இயக்கத்தில் பங்கேற்க என்ன காரணம். தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க.. இழந்ததைத் திரும்பப் பெற என எடுத்தியம்புகிறது ஏதிலி.
“ஒவ்வொரு நிமிடமும் ஒரு நாடு கிடைக்கப்போவது என்ற கனவில் தானே இருந்தோம்.”
ஒவ்வோர் ஏதிலியின் எதிர்பார்ப்பும் இதுவே. தமக்கான நிலத்தை தம் மண்ணை த்ம்மிடமிருந்துப் பிரித்திடாதிருக்க போராடும் மக்களின் இயலாமையை இப்படியான மனித அழிவுப் போருக்குத் தாமே தயாராகும் மக்களுக்கான இயக்கம். இவர்களின் அழுகுரல் எதனை கதறுகிறது.
“ஒன்று இந்த அரசாங்கம் இல்லாம போக வேண்டும். இல்லை நாங்கள் இல்லாம போக வேண்டும்.”
இரண்டுத் தேர்வுகளே மிகச்சரியான இந்த விருப்பத்தேர்வுகள் ஒருவரை இறுதிகட்ட அழிவுக்குக் கொண்டு சேர்க்கும் என்கிற மற்றுமொரு கம்பிகளற்ற முள்ளிவாய்க்கால் சிறைச்சாலைப் பற்றியும் பதிவிடுகிறது அத்தியாயம்.
“நம்பிக்கைகள் தான் இழப்புகளுக்குக் காரணம்.”
என அறிவுறுத்தும் எட்டாம் அத்தியாயம் போலீஸ் வழியில் தென்பட்டிடக் கூடாது என்ற அடர் நம்பிக்கை மேலோங்கிய நிலையில் ரமேஷ் வண்டியை ஓட்ட, நம்பிக்கை என்பது பொய்த்துப் போகும் என்று நிரூபணமானது.லைசன்ஸ் இல்லை என்று வேலைக்குச் சென்றுவிட்டுத் நள்ளிரவில் வீடு திரும்பும் முகாமை சேர்ந்த ரமேஷை
“இலங்கை தாயோழிகளா திருடிட்டு வந்தீங்களா..?
என்று கன்னத்தில் அறைந்து நிலைகுலையச் செய்தது தமிழக போலீஸ். முகாம் அகதிகள் என்றால் அத்துணை இளக்காரம். அவமானத்தால் கூனிக் குறுகி நின்றான் ரமேஷ். அகதி என்கிற ஒற்றை அடையாளத்தைக் கொச்சைப்படுத்திய போலீஸ் அதிகாரியின் அடக்குமுறை ஏளன ஆணவ அதிகாரத்தைத் விரியப்படுத்துகிறது நாவல். அத்துடன் நிறுத்திக் கொள்வார்களா நம் நாணயஸ்தர்கள்? 200 ரூபாய் பெற்ற பின்பே விடுவித்தனர் அவர்களை. உயிர் பிச்சை ஏந்தி தம்மையும் தம் மண்ணையும் நாடி வந்த ரஇந்த அப்பாவி எதிலிகளிடம் தங்கள் கையூட்டு சாகசங்களை நிகழ்த்தி வெற்றிக் கண்டது தமிழக போலீஸ் என்று சாடுகிறார் ஆசிரியர்.
“ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஒரு மனிதன் போகக்கூடாதா? எல்லைகள் ஏன் இப்படி இருக்கின்றன.”
வெளிநாட்டில் பிழைப்பிற்காக புலம்பெயரும் பெண்களின் சூழ்நிலையை இறப்பிற்குப்பின் பிணத்தைக் கூட தாயகம் அனுப்ப மறுக்கும் அரபு நாடுகளின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்துகிறது நாவல். இலங்கையின் ரிசானா நபீக், இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண் என புலம்பெயரும் பெண் தொழிலாளர்களின் மீது பலவித குற்றப் பத்திரிகைகள் சுமத்தப்பட்டு நடுவீதியில் தலையை வெட்டிக் கொன்று குவிக்கும் சவுதி நாட்டு வெள்ளை தாரிகள் உடுப்பில் ரத்தக்கறைத் தெறிக்காமலிருக்க பாதுகாக்கும் இந்த கொலை வெறியர்களின் மனது அடர்ந்த கொலைவெறிக் கறையை அப்பிக் கிடைக்கிறதே. வெட்டியபின் ஏதும் நடவாதது போல ஒரு அமைதி எங்கிருந்து இவர்களுக்குக் கிடைக்கிறது. குருதி உண்ட மனதும் உயிர் துடிப்பதைப் பருகிய விழிகளும் மறுத்துப் போனதே காரணம்.
“இறப்பு எப்படி மனிதருள் வலிமிகுந்த இழப்பாகக் கருதப்படுகின்றது..அது வரை யாரென்றே தெரியாத அவர்களின் இறப்பு எப்படி தாக்கம் செலுத்துகிறது..” வாழ்க்கையின் அடிப்படை தத்துவங்களை ஏந்தி நிற்கிறது ஒன்பதாம் அத்தியாயம். பிணத்தைக் கூட லஞ்சமின்றி தர மறுக்கும் அரசாங்கக் கையூட்டுகள் எங்கும் எல்லாத்துறையிலும் கருவேல மரமாய் வேரூன்றிக் கிடக்கின்றன. மலர் அக்காவின் சடலத்திற்கு இதே அவலநிலை.பாடையிலும் பழுதைக் தேடுகிறது நம் இந்திய லஞ்சக் கலாசாரம். தோலுரித்துத் தொங்க விடுகிறார் ஆசிரியர்.
“ஒழுக்க மயிரா இருக்கத் தெரியாதுனா எதையாவது வாங்கிக் குடிசிட்டு சாக வேண்டியது தானே. நீங்க வாழணும்னு யார் அழுதா..?”
ஒடுக்கப்பட்டவர்களுக்கு நம் நாட்டில் உரிமைக் கோரும் சலுகை இல்லை அறிந்ததே.. அகதிகளுக்குமா …
தனியே ஒழுக்க விதிகள் உண்டு போல.. முகாம் தேசத்தில் சாதாரண சமூகப்பிரச்சனைகள் கூட இவர்களுக்கு சாமான்யாரைக் காட்டிலும் அதி மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. முகாம் அகதிகள் என்றால் உரிமையும் கடமையும் அடிப்படை மனித செயல்பாடுகள் என எதுவும் அவர்களைத் தீண்டக்கூடாது. இதில் எதில் அவர்கள் தவறுதலாக தடம் பதிய நேர்ந்தால் அதில் தயவு தாட்சண்யமின்றி கால்கள் துண்டிக்கப்படும் என்பதே முகாம் அகதிகளுக்கான அதிகபட்ச தண்டனை. இந்த கொடுமைக்கு அவர்கள் தங்கள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதே வாழ முடியும்.இதற்கு சொந்த மண்ணிலேயே மடிந்து இருக்கலாம்.
“ஆட்டுக்குக் காவல் ஓநாய் என்ற கதை தான்.”
நிதர்சனமான நடப்பு. ஒரே இனம் மொழி குருதி சுமக்கும் உயிர்களான நம் ஈழத்தமிழருக்கு உதவ சுணக்கம் காட்டுவதும் அவர்களை முகாம் என்கிற பெயரில் சிறு தரமாக நடத்துவதும் அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுக்கும் பட்சத்தில் உலகில் உள்ள பிற நாடுகள் எங்கனம் இவர்களுக்கு உதவும்.
ஐநா சபை உட்பட அனைத்துமே இந்தப் சொந்த நிலமிழந்த அகதிகளை வைத்து அரசியல் நடத்தவே முற்படுகின்றன என்கிற நிதர்சனத்தை உலக அரசியலை உலக வெளிக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது பதினொன்றாம் அத்தியாயம். சுவாரஸ்யமான பல அரசியல் உண்மைகள். நம் சகோதரர்கள் காலம் முச்சொட்டிற்குமான வாழ்வைப் புடம்போட்டுக் காட்டுகிறது இந்த அத்தியாயம். ஐ நாவின் முகமூடியை அம்பலப்படுத்தியும் அமெரிக்க அரசின் பச்சாதாப நடிப்பையும் இந்திய அரசியலின் திரைக்குப் பின்னால் என அனைத்தையும் வெட்டவெளியாக்குகிறது இந்தப்பகுதி.
“எங்களின் நாங்கள் ஒதுக்கப்பட்ட மக்கள் தான்..”
ஈழத்தமிழர்களை தமிழகத்திலிருந்து தமிழ் மண்ணிலிருந்து புறத்தே ஒதுக்கி வைத்து பார்க்கும் அரசாங்கத்தின் கண்ணியமற்றப் பார்வை கம்பிகளில் சிறை கூண்டிற்குள் சிக்கி சித்திரவதைக்குள்ளாகும் இவர்களைப் பேசுகிறது பன்னிரண்டாவது அத்தியாயம்.
“நாங்கள் இந்த மண்ணில் அகதியாகக் காலடி வைத்த போது எங்களை எண்களாக தான் பார்த்தார்கள். நீ பிணங்களாக பார்த்து விடாதே மினு..”
ஏதிலிகள் என்றல்ல சொந்த மண்ணில் புறக்கணிக்கப்பட்ட அனைவரும் அகதிகளே. உயிராக சதைப் பிண்டமாக அரசும் அதிகாரிகளும் ஏன் பொது மக்களும் கூட கருதுவதில்லை இந்தப் பரிதாபப் சின்னங்களை. தாழ்த்தியும் ஏளனப்படுத்தியும் ஒதுக்கும் இவர்களின் மனங்கள் சிதிலமடைந்த சாக்கடைகள். வலியும் வேதனையும் உயிருக்கே உரித்தானதை உணராத மனிதர்கள் அல்லவா சுமந்துள்ளது இம்மாநிலம்.
“மொழி ஒன்றாக இருந்தாலும் நிலம் வேறு அல்லவா.’
வலியால் வலிமை தாங்கிய இவர்களை பக்கம் ஒன்றிலும் பதியமிட்டுப் பதறிய ஆசிரியர் வாசகரை கண்ணீர் காமாலையில் மூழ்த்துகிறார்.
“மக்களின் நிலைமைகளுக்குப் பதில் தேடினால் அரசின் கரங்கள் உங்கள் கைக்கு கைதுகள் என விலங்கு மாலை வழங்கும்.”
உண்மை தானே. இது அகதிகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதல்ல. சமகால அனைவருக்கும் பொருந்தும் ஒரு கூற்று.மற்றவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என அகதிகளைப் போல் இங்கு ஏராளம் காணலாம். ஆனால் அவர்கள் அப்படியேதான் விடுபடவேண்டும். அவர்களுக்கென கரம் உயர்த்துவோர் வாய்க்குப் பூட்டு போட்டும் கரங்கள் சங்கிலியிடப்பட்டு விடும்.
“மதம் பெருசுன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்குது.திங்கிறதுக்கு சோறு இல்ல. இதுல பேஸ்புக்ல கடவுளுக்கு சண்டை..”
மதம் எனும் மதம் பிடித்த மனிதர்கள் மதம், கடவுள் வழிபாடு, பாரம்பரியம், பண்பாடு சடங்குகள் என மனிதத்தை மறந்து மதத்தைக் கூறு போடுகின்றனர். மதப் பித்து மக்களை கோவில்களுக்கும் மடங்களுக்கும் பணத்தை வாரி இரைக்கச் செய்கிறது. ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்கவோ அடிப்படை வசதிக்காகவோ இல்லாமையை சமன்படுததவோ உதவுவதற்கோ தங்கள் பணத்தை வழங்க மறுக்கும் மதவியாதிகள்.
இலங்கை அகதிகளை பொறுத்தவரை சிங்கள தேசத்தில் வாழ்வா சாவா என்ற போராடுவதை விட இந்த சிறை வாழ்க்கையே தேவலாம் போல என்ற மன நிலைக்குத் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர். காரணம் இங்கு அசலில் சேரியும் முகாமும் ஒரு போலவே. ஒடுக்கப்பட்டவர்கள் எளியவர்கள் என்றான பின் சொந்த நாட்டை சேர்ந்த சேரிகளும் ஒன்றே புலம்பெயர்ந்த அகதிகளும் சமமே இங்கு.
SRILANKA WHAT NEXT…
என்கிற அகதிகளுக்கு எதிரான..
சிங்கள போரின் முடிவிற்கு பின்பாக இலங்கை அரசு இந்தியாவில் அகதிகளாகப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களைத் தங்கள் வசம் நாடு திருப்ப வேண்டி பற்பல உத்திகளைக் கையாள்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது இறுதிப்பகுதி. முள்ளிவாய்க்கால் வரலாறு, இலங்கையின் போருக்குப் பின்பு சிறையிலடைக்கப்பட்ட தமிழர்களின் கண்ணீர் காதை, ஐநா சபை சொந்த தேசம் திரும்பும் அகதிகளுக்கு ஒரு லட்சம் சன்மானம் தருவதாக அறிவித்தக்கப்பட்டதைப் பற்றிய தகவல் என இறுதிப் பக்கங்கள் சிங்களப் போர் பின்பான தந்திரங்களின் படிமங்கள்… இங்கிருந்தாலோ உயிர் மிச்சம் கொண்டு கிடைக்கும் வேலை செய்து பிழைக்கலாம் முகாம் சிறைச்சாலை என்னும் சுதந்திர சாலையில்.. அதே வேளை இலங்கை சென்றால் பிழைப்பிற்கு வழியின்றி வாழ்வாதாரத்தை எப்படி நடத்துவது என்பது ஒரு புறம் இருக்க மீண்டும் குரூரத்தின் கோரத்தில் மூழ்த்தி விட்டால்.
ஒவ்வொரு பக்கமும் வியாக்கியானங்களை மட்டும் கொட்டி ஆதங்கத்தை ஆற்றும் படைப்பாக முற்றிலும் இல்லை. மாறாக நம் ஈழ ஏதிலி மக்களின் துயரங்களை உண்டு பண்ணும் வினையூக்கிகள் பற்றியும் அவற்றுக்கான தீர்வாக ஆசிரியர் தமது கருத்துக்களை இறுதி அத்தியாயத்தில் பாடுகளோடு பதிவிட்டுள்ளார். கோரிக்கைகளையும் கூப்பாடுகளையும் முன் வைத்த தமது சொந்த மண்ணில் இவர்களின் உணர்வுகள் கேட்பாரற்று கிடந்தன. தன்னிலத்திலேயே அனாதைகளாக அகதிகளாக நீண்ட நெடிய காலங்களை இந்த ஏதிலி மக்கள் கடந்துள்ளனர். அங்கேயும் அகதிகளாக இருந்து மிச்சமாக உயிர் மட்டுமே வாழ வழி தாருங்கள் என்று பாதம் பற்றி மன்றாடிய அவர்களுக்கு நம் தேசமும் மற்றொரு முள்ளிவாய்க்கால் தான் வழங்கியது. அகதிகளாக வாழ்வதில் அப்படி என்ன சிரமம்? சொந்த நாட்டிலே வக்கற்றுத் தானேஇங்கு வந்தனர். சற்றே முன் பின் இருந்தால் என்ன என்கிற நம் ஏளன பேச்சுகளுக்கு முகாம்களில் இழைக்கப்பட்ட கைதி வாழ்க்கை அவலத்தைக் காட்சிப்படுத்துகிறது நாவல். இதை வெறும் புனைவாகக் கண்டு அவ்வளவு எளிதாக வாசித்து கடத்தி விட முடியாது. பல்லாயிரக்கணக்கான நம் தமிழின மக்களின் கண்ணீரில் நின்று வறண்ட துயரங்களை தவிப்புகளை நரகத்தின் மிச்ச சொச்சங்களை அவர்களின் முகங்கள் தனக்குள் சூடிக்கொண்டு சேமித்த பாடுகளை ஒதுக்கி கனத்த மனத்துடன் எழுத்தின் வழியே படிமங்களாக வடிவம் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு நாவலின் பின்புலம் தம்மை அதிர்ந்த அசைத்த ஏதோ ஒன்றின் தாக்கம் வரி வடிவமாகும். அவற்றில் நாவலாசிரியர் பாத்திரங்களாக நின்று பேசுவார். ஆனால் ஏதிலியைப் பொருத்தவரை ஈழம் என்கிற வார்த்தைக்கான விளைவுகளை அனுபவித்து உயிர் சாட்சியாக நிற்கிறார் ஆசிரியர் விஜிதரன். ஏதிலி உயிருள்ள ஒரு ஓவியம் என்பதற்கான இதைவிட ஒரு சாட்சி ஏது.
“நிலத்தை மனதில் தாங்கியவர்கள். ஆனால் வேரை இழந்தவர்கள்.”
ஆம். நிலத்தை மனதில் மட்டுமே தாங்கியவர்களுள் ஆசிரியரும் ஒருவர் என்பதே ஏதிலியின் ஜனனம். வாழ்நிலையே மனிதனின் மனநிலையை தீர்மானிக்கிறது. பலர் இங்கிருந்தபடியே எதிர்கொள்கின்றனர் போராடுகின்றனர். பலர் வாழ்நிலையில் சிக்கிக்கொள்கின்றனர். அரசாங்கத்தின் தயவை எதிர் நோக்கியே இந்த ஊழியர்கள் உத்திரவாதமற்ற நிலையில் மண்ணை பிரிந்து சொந்த பந்தங்களைத் தொலைத்து நிச்சயமற்ற வாழ்க்கைக்கான சாட்சிகளாக நிற்கின்றனர். நாவல் முழுதும் பலதரப்பட்ட பாத்திரங்கள். மனப்பிறழ்வு கொண்டவர், இயலாமையில் இன்னல் படுபவர், துயரங்களை உண்ணபழகியவர், அவமானத்தில் வாழக் கற்றவர், பாதுகாப்பின்மையை உணரும் ஏதிலிகள் என பாத்திரங்களின் அணிவகுப்பு அவர்களின் பாதிப்புகளை நமக்குள் சுமத்திவிட்டு செல்கிறது. நம் பசிக்கு நாமே புசிக்க வேண்டும் நம்மவர் பட்ட துயரங்களை நாம் தானே எழுத வேண்டும். அப்போதே அதன் வலியும் வாதையும் சமூகத்தின் முன் உயிர்ப்பான விரியப்படுத்த முடியும். அவர்களுக்கான குரலை உயர்த்திப் பிடித்து விட முடியும் என்கிற அப்படத்தை நாவலின் வழியே உறுதிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். திரைக்குப் பின்பான முகாம் இனமக்களின் சோகங்கள் ஏதிலியாக வெளிப்படுத்திய ஆசிரியரின் எண்ணமும் லட்சியமும் எழுத்தில் பூரணத்தைத் தந்த போதிலும் அவரின் கனவு நனவாக வேண்டும் என்கிற வாழ்த்துதலுடன் எம் சகோதரர்களின் வரலாற்றை வாசித்தும் விமர்சித்தும் கனத்த மனத்துடன் நிறைவு செய்கிறேன்.
அற்புதமான ஒரு வரலாற்று ஆவணத்தை இலக்கிய உலகில் பதிவிட்ட ஆசிரியர் விஜிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
நன்றி.
நூல்: ஏதிலி
ஆசிரியர்: அ.சி.விஜிதரன்
விலை: ரூ. 250/-
பக்கம்: 294
வெளியீடு: சிந்தன் புக்ஸ்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com



