Posted inPoetry
டெரிடாவின் பெருக்கற் குறியீடு! – இலட்சுமண பிரகாசம்
1.
எனது உணர்ச்சிகளை தணித்துக்கொள்ள
புணர்தலின் மூலமோ
அல்லது
காயப்படுத்துதலின் மூலமோ
இந்த உடலின் மீதான வன்மத்தை வெளிப்படுத்துகிறேன்.
எனதுடலின் மீது இறுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்
எதிர்பால்-அதிகாரத்தின் செயல்
நடந்தேறிக் கொண்டிருக்கும் தருணத்தின் போது.
2.
இடைவெளிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
ஒரு கணம்
பொருளற்ற ஜடமென கிடக்கிறேன்.
மற்றொரு கணம் கனவில் மிதக்கிறேன்
பரிசுத்தமான அவனது காட்சி கிடைக்குமென்று.
எனது உள்ளத்தில் மறைந்து கொண்டிருக்கும் சாத்தானோ
இடிபோல் சிரித்துக் கொண்டிருக்கிறான்.
டெரிடா “கடவுளென” எழுதிவிட்டு
அதன்மேல்
பெருக்கற் குறியிட்டு
சந்தேகப் பலனாய் அதன்பொருளை கட்டவிழ்த்துவிட்டான்.
நீட்சேவும் கூறிவிட்டார்
கடவுள் இறந்துவிட்டானென்பதை.