Sandwich Book by Dharani Rajendran Bookreview By Karuppu Anbarasan நூல் மதிப்புரை: தரணி ராசேந்திரனின் சாண்ட்விச் - கருப்பு அன்பரசன்

நூல் மதிப்புரை: தரணி ராசேந்திரனின் சாண்ட்விச் – கருப்பு அன்பரசன்

ஆண்மை என்றால்..

ம்ம்ம்… ஸ்டாப் ஸ்டாப் அப்படியே நிறுத்து..

அது கருப்பு மையா சிவப்பு மையா நீல மையா பச்சை மையா..?

தன் குறித்தான பொய்யான பிம்பத்தை ஊடகங்களின் துணையோடு கட்டமைத்து ஆட்சி அதிகாரத் திமிரின் உச்சத்தில் இருக்கக்கூடிய ஒரு ஆண் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பெண் ஒருவரை ரகசியமாக பின்தொடர்ந்த, அரசு நிர்வாகத்தால் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் நாடெல்லாம் பேசப்பட்டது.. சமூகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெடாமல் இருக்கவும் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்குமான காவல்துறைக்குள் ஆண் அதிகாரிகள் பலரால் அங்கு பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தொடர்ந்து வருவதை பலமுறை பத்திரிக்கையில் படித்து அறிந்திருக்கிறோம்.. பெண் குழந்தைகள் தொடங்கி வயது முதிர்ந்து பெண்கள் வரை பலரும் பாலியல் தொல்லைக்கு உட்பட்டு வருவதையும் பலர் காணாமல் போவதும் பலர் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும் தினம்தோறும் செய்தியாகிக்கொண்டே வருகிறது எல்லா வயதிலும் உள்ள திமிர் கொண்ட ஆண்களால்.

கல்வி அறிவு போதிக்கும் கூடங்களில் ஆண் ஆசிரியர்களால் பெண் குழந்தைகள் பல நேரங்களில் மனதளவிலும் உடலளவிலும் அனுதினமும் சிதைக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறார்கள் இன்றளவிலும்.

குடும்ப உறவுகளிலும் கூட தன்னுடன் பயணிக்கும் உறவுகள் தாயாக தங்கையாக அக்காவாக எவராக இருந்தாலும் அவரை பார்க்கும் பார்வைக்குள் அணுகுமுறையில் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும் செய்தித்தாளும் இன்னும் பல ஊடகங்களும் செய்தியாக்கிவிடும் பொழுது எந்தவித அதிர்ச்சியும் இன்றி கடந்து போகும் மனநிலையே இங்கே இரு பாலருக்கும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சமூக அமைப்பில் அரசு, தனியார் அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட பொது வெளிகளில் பெண் ஒருவரை நேர்கொண்டு பார்ப்பதற்கும்.. அவள் பார்க்கும்படியாக ஆண் ஒருவர் தன்னுடைய உதடுகளை மௌனமாக அசைப்பதைக்கூட அந்த பெண் விரும்பாத பொழுதினில் அந்த ஆண் மேல் குற்றச்சாட்டை முன்னிறுத்தி புகார் கொடுக்கலாம்.. பாலியல் தொந்தரவு செய்வதாக சொல்லி அவரை நடவடிக்கைக்கு உட்படுத்தலாம்.

பெண்கள் மீது நடைபெறும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக பல்வேறு வகையான சட்டதிட்டங்களும் ஒழுக்க விதிமுறைகளும் (ஒழுக்கம் என்று எவை இங்கு யாரால் வரை முறைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது அது யாருக்காக செய்யப்பட்டது என்பதெல்லாம் தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்) அறிவிக்கப்பட்டு சட்டமாக்கப் பட்டாலும் பெண்கள் மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் அச்சுறுத்த படுவது சிதைக்கப்படுவது என்பது நடைபெறாத நாழிகைகளே கிடையாது என்பதனை தினந்தோறும் ஊடகங்கள் செய்தியாக பெண்களை அழகி என்றும் இளம்பெண் என்றும் கள்ளக்காதலி என்றும் ஆண்களின் மனம் கோணாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறது எல்லாவற்றிற்கும் காரணம் பெண்களே என்கிற பொது பிம்பம் கட்டமைத்து வைத்திருக்கும் சிந்தனைக்குள்ளிருந்து வார்த்தைகளாக.

தன்னை காதலிக்க வில்லை என்பதற்காக கைகளில் கத்தியோடு அடர் திராவக குப்பியோடு அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்கள்.. தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி இன்னொரு சமூகத்தில் புழங்கி வரும் ஆண் ஒருவனை மனதளவில் நினைப்பது தவறு.. அந்த ஆண் மகளின் கரம் பிடிப்பது தான் சார்ந்த சமூகத்தை கேவலப்படுத்துவது தன் குடும்பத்தை அசிங்கப்படுத்துவது என்கிற சாதி ஆணவத்தோடு ஆண் திமிரும் சேர்ந்து கொள்ள அங்கே அது பெண் உடலை எரித்துக் கொள்கிறது, விஷம் வைத்துக் கொல்கிறது, நைலான் கயிற்றால் தூக்கிட்டு கொல்கிறது, தொண்டைக் குழியை அறுத்துக் கொல்கிறது..

Mee Too வில் இந்தியாவின் ஆளுமைகள் பலரின் முகமூடிகள் கிழித்தெறியப்பட்டது பாதிக்கப்பட்ட பெண்கள் பலரால்.. தன்னுடைய பெயரை எந்தப்பெண் எப்பொழுதும் எழுதுவாரோ பேசுவாரோ என்கிற அச்சத்துடனே பல தளங்களில் வேலை பார்த்து வந்த ஆண் சமூகம் இந்த நிமிடம் வரையிலும் தன்னுடைய சிந்தனைக்குள் பெண் குறித்தான பார்வையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் ஆண் என்கிற திமிரோடு அலைந்து வருவதே பெரும் சிறப்பு என்கிற மனநிலையை ஆண் பெண் இருவருக்குள்ளும் கட்டமைத்து வைத்ததின் தொடக்கப் புள்ளியின் காலம் எங்கிருந்து என்கிற தேடுதலை தொடங்கினால் பெரும் சமூகத்திற்கு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திச் சென்று பெண்ஆளுமை வீட்டுக்குள் அடக்கப்பட்டு, உடமையாக்கப்பட்டு, பண்டமாக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்ட சமூக அறிவியல் வரலாற்றை அறிய முடியும்.

அந்தத் தேடுதலை மணமுடித்த காதலன் காதலி மன உணர்வுகளில் இருந்து பெண் உடல் குறித்தான புரிதலிலிருந்து தொடங்கி இருக்கிறார் தன்னுடைய “சாண்ட்விச்” நாவலில் எழுத்தாளர் “தரணி ராசேந்திரன்”

எல்லோரும் உற்றுநோக்கும் படியாக முகநூல் தளத்திலும் கொஞ்சம் பெண்கள் தங்களுடைய கருத்துக்களை குறைந்தபட்ச சுதந்திரத்தோடு பகிரும் பொழுது அவரின் முகநூல் அடையாளத்தையும் பாஸ்வேர்டையும் வாங்கி வைத்துக்கொண்டு அவருக்கு தெரியாமலேயே திறந்து பார்க்கும் மனநிலையில் வாழும் காதலர்கள் கணவர்கள் பெரிய அளவில் வளர்ந்து வரும் சூழலில் இந்த “சாண்ட்விச்” வருகை அவசியமே.

ஆசிரியர் “தரணி ராசேந்திரன்” அவர்களுக்கும்.. நல்லதொரு நாவலை முதன்முறையாக வெளிக்கொண்டு வந்திருக்கும் வர டீ பதிப்பகத்திற்கும் அன்பு வாழ்த்துக்கள்.

பதின் பருவத்தில் ஆண் பெண் என இருபாலருக்கும் உடலியல் ரீதியாக மாற்றம் நிகழ்வதை உணர முடியும்.. அந்த மாற்றம் ஹார்மோன்களின் கிளர்ச்சியால் உள்ளத்தில் உணர்ச்சிகளை வருடி மெல்ல இன்பமயமான நெருப்பு ஒன்றினை பற்ற வைக்கும்.. அந்த நெருப்பு, இருபாலருக்கும் அவர்கள் விழிகளில் நேர் எதிர் பட்டவைகளைப் பார்த்து ரசித்து.. கண்டாடிடும் உறவுகளின் பழக்கவழக்கம்.. பெண்கள் குறித்தும், பெண் உடல் குறித்தும் மூத்தவர்களின் அனுபவத்திலிருந்து.. அவர்களின் பேச்சிலிருந்து கடத்தப்பட்டவைகளே அவரவர் சிந்தனைக்குள் எரியத் தொடங்கும்..

அப்படி எரிந்து கொண்டிருப்பதை ஆண்களுக்குள் அடங்கி, அவர்களின் சதை தீண்டலின் அழுக்கைத் தாங்கிக்கொள்ளும் வடிகாலாக இருக்க வேண்டும் என்று பெண்களின் மனதில் கொதிநீர் ஊற்றி வேக வைத்தும்.. சிந்தனைக்குள் திராவகத்தை தெளித்தும் பெண்களை அவர்களின் சிந்தனைகளை ஆண்களின் எல்லாவிதமான அத்து மீறல்களுக்கும் வாட்டமாக மாற்றி வைக்கிறார்கள்.. பெண்கள் மீது ஆண்கள் நடத்திடும் அனைத்துவித தாக்குதல்களுக்கு கௌரவ கிரீடம் அணிவித்து ஆண்கள் என்றால் இப்படி இருப்பதுதான் பெருமை மிகுந்த, மரியாதைக்கு உகந்தது என சிந்தனையில் எரிந்து கொண்டிருப்பதற்கு தூபம் போட்டு வைக்கிறார்கள் ஆளுமை மிகுந்த பெண் சமூகத்தை பண்டமாக மாற்றி வைத்தவர்கள்.

அப்படித் தூபம் போட்டதின்.. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பாகவே காலாகாலமாக பதின்பருவ பள்ளி மாணவர்கள்.. பதின்பருவ இளைஞர்கள்.. ஆணாகப் பிறந்த நானும் நீங்களும் கூடத்தான் பெண் உடல் வேட்கையால் உந்தப்பட்டு அவரவர் வாய்ப்பிற்கு ஏற்ற முறையில் தரணி ராஜேந்திரன் தன்னுடைய நாவலில் சொல்லியிருக்கும் சிவா உள்ளிட்டு நண்பர்களைப் போன்று பால் உணர்வால் தூண்டப்பட்டு சரோஜாதேவி புத்தகங்களை அப்பா அம்மாவிற்கு தெரியாமல் பள்ளியில் மறைத்து படித்துக் கொண்டும், நண்பர்களோடு சேர்ந்து உடலுறவு வீடியோ படங்களை பார்த்துக்கொண்டும் மறைவிடங்களில் போய் சுய இன்பம் செய்து சிற்றின்பமாக அனுபவித்திருக்கிறோம் மனதில் யாராவது ஒரு பெண்ணுடலை நினைத்துக்கொண்டு.

பெண் உடல் மீதான உரிமையும் வெறியும் பள்ளிகளிலேயே இதிகாசங்களின் வழியாகவும் புராணங்களின் வழியாகவும் சொல்லி பாடம் நடத்துகிறார்கள் பிடித்தவனோடு வாழமுடியாமல் ஐந்து பேரோடு வாழும் பாஞ்சாலியின் கதையிணையும்’ அவளை வைத்து சூதாடிய தருமனின் நேர்மையையும்(!).. ஆண் ஒருவன் தன் நடத்தையை சந்தேகப்பட்டு கேள்விக்குள்ளாக்கினால் பெண் தானாகவே முன்வந்து தீயில் எரிந்து ஒழிந்து போக வேண்டும் என்கிற சீதையின்.. ராமனின் கதைகளை நீதி போதனைகளாக (!). குடும்ப அமைப்பு தொடங்கி பள்ளிகள் வழியாக பொதுவெளியில் பெண்கள் குறித்தான பிம்பங்கள் அவள் உடல் குறித்தான பார்வைகள் ஆண்களின் சிந்தனைக்குள் நட்டு வைக்கப்படுகிறது.

பள்ளியில் சிவா உள்ளிட்ட நண்பர்களின் கதாபாத்திரம் எதார்த்தமான நிஜம் என்றாலும் எழுத்து வடிவில் அதை அப்படியே கொடுப்பது என்பது இன்னுமொரு சரோஜாதேவி புத்தகத்தை வாசிப்பது போன்று தான் இருந்தது. எதார்த்தத்தை பொதுவெளியில் மறைத்து இலக்கியத் தரம் வாய்ந்ததாக எழுதச் சொல்லவில்லை.. ஆனால் எழுத்தாளன் நினைத்தால் அந்த சாராம்சத்தையே அழுத்தமாகவும் காத்திரமாகவும் அதைவிட இன்னும் சிறப்பாகவும் எழுதுவதற்கு தமிழ்மொழி நமக்கு நிறைய வார்த்தைகளை அளித்திருக்கிறது.. எதார்த்தத்தை சொல்லவதற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் எழுத்தாளர் ராஜேந்திரன்.

பெண் உடல் குறித்தான ஆதிக்கப் பார்வையோடு சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட சிவா இயக்குனராக பரிணமிக்கும் பொழுது சில முகமூடிகளை அணிந்து கொண்டுதான் வெளியே பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுதான் எல்லா ஆண்களும் பொதுவெளியில் நேரத்திற்கு தகுந்தாற்போல் தேவையான முகமூடி அணிந்து இன்றும் கூட பல பொழுதுகளிலும். சிவா, பெண் உடல் மீது கொண்ட வெறியோடவே காமம் சேர்ந்து அவன் காதலிக்கத் தொடங்குகிறான் நவிராவை. உடலின் மீது தொடரும் ஆதிக்க வெறி கொண்டே அவனின் காதல் உரையாடலை காதலியோடு நடத்திக் கொண்டிருக்கிறான். அந்த உரையாடலை விரும்பியும் விரும்பாமலும் அவன் காதலை ஏற்க வேண்டிய இடத்தில் நிஜமாகவே காதல் வயப்பட்டு அவனை உள்ளன்போடு பேரண்பு உருகி வழிய பனித்துளியின் தூய்மையான மென்மையான காமத்தோடு காதல் உணர்வு மேலோங்க தென்றலின் ஆவேசத்தோடு காதலிக்கிறாள் அவனின் காதலி நவிரா.

காதலாக நினைத்து பயிற்றுவிக்கப்பட்ட காமஉச்சத்தின் சோதனைச் சாலையாக நவீரா.. புத்தகங்கள் பயிற்றுவித்த காமம் தோற்றுப்போக தன் உடல் குறித்த அதன் எதார்த்தம், சக்திதனை அவன் புரிந்து கொள்கிறான் உடலுறவின்போது. அதுகூட அவன் நவிராவிடமிருந்து கேட்டே பெறுகிறான். காமத்திற்கும் காதல் உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாமல் பயிற்றுவிக்கப்பட்ட அவன் காதலில் பெண்மன உணர்வுகளை புரிந்துகொள்ளத் தவறுகிறான்.. புரிந்து கொள்ள முற்படும் வேளையில் காமம் அற்று அவன் காதல் உணர்வுகளோடு பெண்ணின் மன உணர்வுகளையும் புரிந்துகொண்டு மனிதனாக.. நல்ல ஆணாக மாற முயற்சி செய்கிறான். மனதில் சிந்தனையில் பெண் உடல் குறித்தும் அவளின் மன உணர்வுகள் குறித்தும் தவறான புள்ளி அழிக்கப்பட்டு நல்லதொரு மனிதனாக பெண் மனதின் காதலை பிரியத்தை அன்பினை புரிந்துகொண்டு மாறக்கூடிய சூழலை மனிதனுக்குள் நிகழ்த்தப்படும் அந்த அற்புதமான தருணத்தை காலம் எப்படி அவனுக்கு அடையாளம் காட்டி சொல்லி நிற்கிறது என்பதை நீங்கள் நாவலை வாசிக்கும் பொழுது அறியமுடியும்.

சபாஷ் தரணி ராஜேந்திரன்.. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கக்கூடிய எதார்த்தமான நிஜங்களை அவர்களின் உணர்ச்சி மயக்கங்களை.. பெண்ணின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவளின் உடல் மீது மட்டும் காதல் மயக்கம் கொண்டு வெறியாக மாறித் திரியும் ஆண்களின் திமிரை முழுவதுமாக சாண்ட்விச் நாவலில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
குறுநாவல் என்றே அழைக்க வாய்ப்பு அதிகம் இந்த சாண்ட்விச்க்கு.

இன்னும் கொஞ்சும் நாவலுக்குள் எடிட்டிங் வேலையை பார்த்து இருந்தா நாவல் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். பெண்களின் மன உணர்வுகள் குறித்து புரிந்து கொள்வதற்கு இந்த நாவல் பெண்மன உணர்வுகளை புரிந்து கொண்டு அவளோடு இணைந்து வாழ முயற்சி செய்யும் ஆண்களுக்கு சிறிதேனும் உதவி செய்யும் என நம்புகிறேன். அந்த விதத்தில் இந்த நாவல் ஆகப்பெரிய சிறந்ததொரு படைப்பாகவே நான் பார்க்கிறேன். நூல் வடிவமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இன்னும் நிறைய விவாதத்துக்குறிய விஷயங்களை. பேச மறுக்கப்பட்ட சங்கதிகளை.. நாகரிகம் அநாகரிகம் என்ற சொற்களுக்குள் மறைந்து கிடக்கும் பல விஷய தானங்களை புனைவுகளாக மாற்றி தொடர்ந்து உங்களின் படைப்புக்கள் பழத்தைக் கொண்டு வாருங்கள்.

புணர்தலின் ஊடல் இனிதே❤️ பேரன்பும் வாழ்த்துக்களும்.

நூல்: சாண்ட்விச்
ஆசிரியர்: தரணி ராசேந்திரன்
வெளியீடு: வர டீ பதிப்பகம்.
விலை ₹130/-
பக்கங்கள் 153.

Nanum En Poonai Kuttigalum Book by Dharani Rajendran Bookreview by Karuppu Anbarasan. நூல் அறிமுகம் : தரணி ராசேந்திரனின் நானும் என் பூனைக்குட்டிகளும் – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம் : தரணி ராசேந்திரனின் நானும் என் பூனைக்குட்டிகளும் – கருப்பு அன்பரசன்




மனிதர்களின் ஒரு சிறிய புன்னகைக்குப் பின்னால் பிரியம் காட்டும் நேசம் இருக்கிறதா? வன்மம் இருக்கிறதா? வஞ்சம் இருக்கிறதா என்பதை யோசித்து முடிப்பதற்குள் இழப்போ அல்லது கூடுகையோ நடந்து முடிந்து விடுகிறது. அத்தனை வேகம் மிகுந்த வாழ்க்கையாக நகர்ப்புறத்தின் வாழ்க்கை நம்மை இயந்திரமாக மாற்றி வைத்திருக்கிறது.

இழப்பை பெரும் வலியோடும், கூடுகையை கொண்டாட்டாத்ததோடும் மனம் பழகி வைத்துக் கொண்டாலும், வலி என்பது எங்கேயாவது ஒரு மூலையில் அரித்துக்கொண்டே இருக்கும். அந்த வலி என்றாவது ஒருநாள் வன்மமாக.. வஞ்சமாக அந்த வலியை விட பேரன்பு கொண்டதாகவும் மாறிட வாய்ப்பு இருக்கும்.

கடந்த நவம்பர் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக 80 சதமான கூடுதல் மழை சென்னையை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. பெரும் நகரங்களின் சாலைகள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டிருக்கிறது.. அந்த சூழலில் முகநூலில் பதிவு ஒன்றினை பார்க்க நேர்ந்தது.. சென்னை அசோக் நகரில் சாலையோரம் தனது உயிர் பிடித்திருந்த முதியவர் ஒருவர் கடும் மழை நாளொன்றில் வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் என்கிற படத்தோடு.. செய்தியாகவே அது.

பலரின் பின்னூட்டங்கள் “ஐயோ” என்கிற அழுகை அடையாளத்தோடு முடிந்துபோனது. பலர் அப்பதிவை பார்த்தும் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்படி கடந்து போவதுதான் இயல்பு என்பதை நுகர்வுக் கலாச்சாரம் இன்றைக்கு மனித மனங்களை கட்டமைத்து வைத்திருக்கிறது. இவைகளை மீறி தனிநபரோ அமைப்போ இறந்த அந்த உடலை அடக்கம் செய்ய நினைப்பதும் செயல்படுவதும் என விதிவிலக்காகவும் பல இடங்களில் பலர் இருந்து கொண்டே வந்திருக்கிறார்கள். மனிதத்தின் அடையாளமான அவர்கள் எண்ணிக்கையில் மிகச் சொற்பமே.

சென்னை போன்ற பெருநகரங்களில் தன் உயிரிழை எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து போகும் எனத் தெரிந்தும், வாழ்வின் மேல் கொண்ட தீராக் காதலால்; எவரேனும் ஒருவர் பரிதாபத்தின் நிமித்தமாக உதவுவதால் குடும்ப ஆதரவில்லாத வயதானவர்களாக வாழ்ந்த பலர் கணக்கில் வராமலேயே இறந்து போயிருக்கலாம்; இறந்துபோனது மறைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது பேசப் படாமலேயே போயிருக்கலாம், அது மக்கள் தொகையின் எண்ணிக்கை ஒன்றினை குறைந்திருக்கலாம்.

பெரு மழை, கடும் கோடை காலங்களில் வாழ இடம் இன்றியும் உண்ண உணவின்றியும் எவரொருவர் ஆதரவும் மறுக்கப்பட்டு வீதியிலே விடப்பட்டவர்களே இப்படியானவர்கள். எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே இருந்தாலும் கூட செத்துப் போவது என்பது ஒரு மனித உயிர்.. சிரித்து, அழுது, கோபம் கொண்டு, வெட்கப்பட்டு வாழ்ந்த, நல்லவர்கள் எவர், கெட்ட எண்ணம் கொண்டவர்கள் எவர் என்பதை அவர்களின் செய்கையின் வழியாக குறைந்தபட்சம் சீர்தூக்கி யோசிக்கும் மனித உயிர்களுக்கு இப்படியான நிலை என்றால்.. இவைகள் எதுவுமே அறியாத எவராலும் சொந்தம் கொண்டாடப் பட முடியாத தெருவில் திரிந்து வரும் பூனைகளையும் நாய்களையும் நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா..?

பெரும் தொற்று காலத்தில் இறந்து போன தன் குடும்பத்தினரையும் கைதொட்டு உடல் தொட்டு தூக்க முடியாது பயத்தில் நம்மை நாம் நிறுத்தி வைத்துக் கொண்டு, இறந்து போன உடல்களை கூட அவர்களுக்கான இடுகாட்டில் அடக்கம் செய்ய முடியாது ஒரு அவல நிலைக்கு நம்முடைய மனித மனங்கள் பாதுகாப்பின் பெயரால் கட்டமைக்கப்பட்டு விட்டது. தன் உயிர் மீது கொண்ட காதல்; காதலித்த பிரியம் கொண்ட மனித உயிர்களை மலிவு படுத்தி வைத்தது.

பெரும் தொற்று நமக்குள் இருக்கும் மனிதாபிமானங்களை கேள்விக்குள்ளாக்கியது. மனிதர்களே சக மனிதனை நேருக்கு நேர் எதிர் கொண்டு பேசமுடியாத வீதியில் திரிய முடியாது ஒரு சூழலில் வாழ்ந்து கிடந்த பொழுது மனிதர்களின் ஈகையாலேயே மட்டும் உயிர் வாழக்கூடிய தெருவில் திரிந்து வரும் நாய்களைப் பற்றி அதன் வாழ்வினை பற்றி எப்பொழுதாவது நம்மால் யோசிக்க முடிந்திருக்குமா..? யோசித்திருக்க வேண்டும் ஏனென்றால் நாம் ஆறறிவு படைத்த சிரிக்கத் தெரிந்த மனிதர்கள்.

அப்படி யோசிக்கத் தெரிந்த மனிதனாக. எல்லா உயிர்களிலும் அன்பு செலுத்தக்கூடிய மனிதனாக “நானும் என் பூனைக்குட்டி களும்” என்கிற நாவலை எவரும் எழுதாத தளத்தில் நின்று தன்னுடைய ஒவ்வொரு நாளின் அனுபவங்களையும் தன் குடும்பத்தோடு எப்படி இச்சமூகத்தின் தெருக்களில், தாம் வாழும் பகுதிகளில் பூனைகளோடும் நாய்க்குட்டிகளோடும் வாழ்ந்து வரும் பொழுது எதிர்கொள்ள நேரிட்டது எப்படி என்பதை எல்லோரும் வாசிக்கக்கூடிய எளிய எழுத்துக்களில் தமிழ் சமூகத்திற்கு; மனித சமூகத்திற்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் தரணி ராசேந்திரன்.

குட்டிகள் ஈன்று எடுக்கும் காலத்தில் மனிதர்களை விட பாதுகாப்பான இடத்தை தாய் பூனையும் பெண் நாயும் மிக சரியாக தேர்வு செய்யும் மனிதர்கள் வாழும் ஆனால் மனித நடமாட்டம் குறைந்து காணப்படும் இடங்களை.. அப்படியான ஒரு இடமாக ஒருநாள் பொழுதினை ஒரு தாய் பூனை பாலா வீட்டினை தேர்வு செய்கிறது.

தாய் பூனைக்கும் மூன்று குட்டிகளுக்கும் ஆதரவளித்த பாலா குடும்பத்தினர் பிறகு தெரு நாய் ஒன்றிற்கு உணவளிக்க அது 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கும் உணவளிக்கும் பேரன்பாக பரிணாமம் அடைந்தது எப்படி என்பதையும்.. அதே நேரத்தில் அந்த நாய்களின் வரவால் அந்த தெருவில் வசிக்கும் மனிதர்களின் அடாவடி செயல்களும் அரசல் புரசல் பேச்சுக்களும்.. தினம் தோறும் நடைபெறும் வாய் சண்டைகளும்.. ராணி நாய் மற்றும் அதன் குட்டிகளை பாதுகாக்க பாலா எடுக்கும் முயற்சிகளும்.. குடியிருப்பு வாசிகளின் நிர்பந்தத்தால் தாம் குடியிருக்கும் வீடு வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் பொழுது வெள்ளையால் அந்த மாற்றத்தை ஏற்க முடியாமல் படும் அவஸ்தையும்.. அதன் அவஸ்தைகள் சிக்கித் தவிக்கும் பாலா அவன் அம்மா இருவரின் மன நிலையையும்..
நாவலுக்குள்மென்மையாகவும் வலிமிகுந்த சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

பிறந்தது முதல் தன் மார் மீதும் தோள் மீதும் தூக்கி வளர்த்த மகனோ மகளோ சாதி மாறி இன்னொரு மனிதரை நேசிக்க முற்படும் பொழுது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சாதி உணர்வு தான் பெற்றெடுத்த உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது தினமும் வெறிகொண்டு இந்தியா முழுவதிலும். ஆனால் நாவலுக்குள் தான் உரிமையோடு குடியிருக்கும் வீட்டினுள் இன்னொரு உயிராக தெருநாய் ஒன்று வரும்பொழுது அதனோடு எந்தவிதமான பேதமும் இன்றி அவற்றிற்கும் இடம் கொடுத்து நேசம் காட்டும் பூனைக்குட்டிகள் கண்களின் வழியாக பல சேதி சொல்கிறது நாவலாசிரியரின் எழுத்துக்கள்.

நாவலுக்குள் பல இடங்கள் நம்மை நெகிழச் செய்கிறது.. தெரு நாய்களின் மனதாக இருந்து நாவலுக்குள் அவைகளின் வாழ்வியலை பேசியிருக்கிறார் ஆசிரியர்.
மனித வாழ்வியலை பேசும் பல நாவல்களுக்கு மத்தியில் இப்படி விலங்குகளின் வாழ்வியலையும் வீதியில் பசிக்காக உணவு கேட்டு அலைந்து திரியும் விலங்குகளுக்கும் மனிதனுக்குமான உறவுகளையும் பேச முற்பட்டு இருக்கிறது “நானும் என் பூனைக்குட்டிகள்” நாவல்.

எதார்த்தமாக நடைபெறும் பல சம்பவங்களை நீங்கள் வாசிக்கும் பொழுது அறியலாம்; அந்தச் சம்பவங்கள் எப்படி மனித உளவியலுக்குள் தெரு நாய்கள் குறித்து சித்தரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை.

நாம் வசிக்கும் பகுதி எங்கும் அழுக்குகளையும் துர்நாற்றம் களையும் நம்முடைய கழிவுகளால் தொற்று நோய்களாக வளர்த்தெடுக்கும் நாம்தான் தெருக்களிலும் வீதிகளிலும் அலைந்து திரியும் நாய்களினால் மனித உடலுக்கு தொற்று நோய் பரவுகிறது என்கிற புகாரினை அரசுக்கு அனுப்பி அவைகளை பிடித்து கொடுத்து ஜம்பம் காட்டுகிறோம். கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட நாய்கள் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இயற்கையால்படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுமே இன்னொரு உயிரின் வாழ்வியல் தேவைக்காக படைக்கப்பட்டதுவே..பசி இருக்கும் வரை வாழ்வியல் தேவைகளும் இருக்கும்.. அதற்காக ஒவ்வொன்றும் இன்னும் ஒன்றிணைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கும்.. மனித உயிர்கள் மட்டுமே தமக்கு உகந்தது எது என்பதை தேர்ந்தெடுத்து அதனை தனதாக்கிக் கொள்ளும்.. அப்படியான ஒரு தேவை மனித உயிர்களுக்கு தெருநாய்கள் வழியாக கிடைக்கிறது என்கிற ஒரு புதிய விஞ்ஞானம் அறிவித்தால் மட்டுமே தெரு நாய்களுக்கு நம்மைப் போன்ற மனிதர்களால் பாதுகாப்பு கிடைக்கும்.. அதுவரை அந்த தெரு நாய்கள் வீதிகளிலே அடிபட்டு சாகும் அன்பில்லாத மனிதர்களால் கல்லால் அடித்து கொலை ஆகும்.. அரசும் தன் பங்கிற்காக வெறிநாய்கள் பட்டியலில் தெருநாய்களை இணைத்து சத்தமில்லாமல் கொலை செய்யும்.

இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் நிச்சயம் வாசித்தவர் தான் தெருவில் அலையும் நாய்க்கு ஒரு பிஸ்கட் செய்வது வாங்கிப் போடுவார்.. சிறு பிள்ளைகள் தெரு நாய்கள் மீது கல் எடுத்து வீச முற்படும் பொழுது அதை தடுக்க முயற்சி செய்வார்.. தேநீர் கடைகளுக்கு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு நாய்க்கு ஒரு காய்ந்த ரொட்டி ஒன்றினை வாங்கிப் போடுவார்.. நாளை இதே நேரத்தில் நீங்கள் அந்த தேனீர் கடை அருகே செல்லும் பொழுதிலா அல்லது வேறு எங்கேயாவது அந்த நாயை நீங்கள் கவனிக்கும் பொழுதிலோ அது உங்களை பார்த்து வாலை குழைத்துக்கொண்டே வந்து நிற்கும்.. அதனுடைய கண்களில் நீங்கள் அன்பினை பார்க்கலாம்.

அன்புவலியை மட்டுமல்ல வலிமையையும் சேர்த்து தருகிறது என்பதனை நாவலுக்குள் வலியோடும் வலிமையோடும் சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர் தரணி ராசேந்திரன்.

உயிர்களிடம் அன்பு செய்வோம்.
வாழ்த்துக்கள் தரணி ராஜேந்திரன்!
நீங்களும் ஒரு முறை வாசியுங்கள்
“நானும் என் பூனைக்குட்டிகளும்”

நானும்_என்_பூனைக்குட்டிகளும்
தரணி_ராசேந்திரன்
எழுத்து_வெளியீடு.
விலை ரூபாய்.150/-