நூல் அறிமுகம்: ஆர். பாலகிருஷ்ணனின் JOURNEY of A CIVILISATION – இரா.இயேசுதாஸ்
JOURNEY OF A CIVILISATION
Indus to Vaigai…..
என்ற 503+பக்கங்கள்
கொண்ட ரூபாய் 2400/- விலையுள்ள
ஆங்கில நூலை “ரோஜா முத்தையா
ஆராய்ச்சி நூலகம்”பதிப்பிக்க..
பாரதி புத்தகாலயம் அதை மக்களிடம்
கொண்டு சேர்க்கும் பணியை மேற்
கொண்டு 2021ல் இரண்டாம் பதிப்பு
வெளிவந்துள்ளது.
கீழடி அகழாய்வு முடிவுகள் ..மற்றும் ஆதிச்சநல்லூரில் நூறாண்டுகள் கடந்து மீண்டும் அகழாய்வு….அங்கிருந்து தாழியிலிருந்து ஒரு முழு மனித எலும்புக்கூடு
பெங்களூருவுக்கு மதுரை உயர்நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் கொண்டு செல்லப்பட்டுஅங்கே எந்தவித பின்தொடர்வும் (followup) இன்றி இருக்கும் நிலையில் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள இந்த
ஆராய்ச்சி நூல் உயர்ந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நூலை பார்க்கும் போது படிக்க முடியுமா என் மலைப்பாகத்தோன்றிடினும்.. இன்றைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்நூலை நமது குடியரசுத்தலைவர்..
பிரதமர்..துபாய்…அபுதாபி ஆட்சியாளர்களுக்கு சிறப்புப் பரிசாக வழங்குவதை பார்த்த பின்பு ஆறு மாதத்திற்கு முன்பு வாங்கிய நூலை எப்பாடு பட்டாவது படித்தே தீர்வது என முடிவுசெய்து ஒன்பது நாட்களில் படித்து பின் ஓரிரு நாட்கள் மீள்வாசிப்பும் குறிப்புகளும் எடுத்தேன்.
ஒரு நூலைப் படித்து தான் புதிய தகவல்கள் பெறுவது…அதனினும் அதை பிறருடன் பகிர்ந்துகொள்வது இன்பமானது.. ஏராளமான பிரமிப்பூட்டும்….திகைக்க
வைக்கும்…சிந்திக்கத்தூண்டும்….ஏன்… நம்மையே ஆராய்ச்சிக் களத்தில் இயல்பாகவே இறக்கிவிட்டு விடும் அற்புத சாகசத்தை இந்நூல் நிகழ்த்துகிறது. ஒரு ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பது போன்ற நிலை..பொன்னியின் செல்வன் ஐந்துபாகமும் ஒன்றாக உள்ள நூலை படிப்பதுபோல….வேள்பாரி இரு பாகத்தை ஒன்றாக்கி
படிப்பது போன்றது இந்த வாசிப்பு.. ஆசிரியர் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று….பின் தமிழ்வழி ஐ.ஏ.எஸ்.எழுதி முதல் முயற்சியிலேயே தமிழகத்தில்
முதலிடம் பெற்று..இந்திய குடிமைப்பணியில் ஒரிசா மாநிலத்தில் பழங்குடிகள் பெருமளவு வசிக்கும் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுகிறார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பில் இவர் திரு.ஐராவதம்மகாதேவன் அவர்கள் எடுத்த “சிந்துச்சமவெளி நாகரிகம்”பற்றி எடுத்த வகுப்பும்..பின் களப்பணிக்கு சென்றபோது இவர் கண்ணில்பட்ட”தமிழி”(TAMILI) என்ற மைல்கல்லும் பெரும் திருப்பமாக அமைந்தன. தமிழிலக்கிய மாணவரான இவர் சங்க இலக்கியத்திலும்..அதில் விவரிக்கப்படும் தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கை முறையிலும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இருந்தார். இந்தப்பண்பாட்டிற்கான ஆதாரங்களை பொருள் வடிவில் தேடிக்கொண்டிருந்த இவருக்கு ஐராவதம் அவர்களின் சிந்துநாகரிகம்-திராவிட நாகரிகத் தொடர்பு பற்றிய உரையும் நூல்களும் இயற்கையாகவே ஆர்வத்தை ஈர்த்தன. இதனால் காலப்போக்கில் ஐராவதம் அவர்களுக்குப் பின் இவர் சிந்து நாகரிக ஆராய்ச்சிப் பணியில் ரோஜா முத்தையா
நூலகத்தில் பொறுப்பேற்றார்.
2010 கோவை செம்மொழி மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்து…அங்கே ரோஜா முத்தையா நூலகம் மூலம் கண்காட்சியும் ஏற்படுத்தி..சிந்து சமவெளி நாகரிகத்தின்
அடித்தளம் திராவிடம்…என்பதை ஏதோ மொழிவெறியோ…மாநிலப்பற்றோ..என்று இல்லாமல் நவீன அறிவியல் உலகின் எல்லா ஆராய்ச்சி வசதிகளையும் மிக நுணுக்கமாக…மிக மிக நேர்த்தியாக பயன்படுத்தி நிரூபணம் செய்கிறார்.. இதன் முழு வெளிப்பாடே இந்த அற்புதமான மகத்தான நூல்..
ஹரப்பாவிலும்….மொகஞ்சோதாராவிலும்… ஆதிச்சநல்லூரிலும்..கீழடியிலும்.. நாம் நேராகக்களத்தில் சென்று பார்த்தால் கூட இவ்வளவு தத்ரூபமாக புரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமே! ஏனெனில் ஏரியல் வ்யூ எனும்பருந்துப் பார்வையில் க்ரேன் கேமரா மூலம் பல புகைப்படங்கள் உள்ளன. அட்டவணைகள்(Tables),வரைபடங்கள் (Maps),அகழ்வாய்வில் கிடைத்த பொக்கிஷங்களின் நேர்த்தியான புகைப்படங்கள்(Colour Photos) வரை ஓவியங்கள்
(Line drawings) என் அனைத்துமே நம் வாசிப்பை சுவாரசியம் மிக்கதாக மாற்றுகின்றன.
முப்பது ஆண்டுகள் தொடர் கடின உழைப்பு.. ஒரிசா முதல்வரின் சிறப்பு ஆலோசகர்.. தலைமைச்செயலர்….ஒரிசாவில் பேரிடர் மேலாண்மையில் முன்னுதாரணமான சாதனை..இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்..என வித்யாசமாக பணி ஆற்றும் சூழலிலும் பணி நிமித்தம் மேற்கொள்ளும் பயணங்களையே தனது ஆராய்ச்சிக்கான களங்களாகவும் மாற்றிக்கொண்டது அதனினும் சிறப்பு.. முடியாத கட்டத்தில் ஓராண்டு ஓய்வு விடுப்பு எடுத்து ஆராயச்சியில் ஈடுபட்டதும்…பின் இந்நூலை எழுத முழுவதுமாக இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதும்….சாதாரண டாக்டர் பட்டத்துக்கு என்ற ஆராய்ச்சிப்
படிப்பு(Project )என்ற நிலையை மறுத்து உண்மையான ஈடுபாட்டுடன்….மன உறுதியுடன் மிகச்சிறந்த யாராலும் மறுதலிக்க முடியாத அளவிற்கு சான்று மேல் சான்று….சாட்சிக்கு மேல் சாட்சி என எல்லா கல்வித்துறை ஆராய்ச்சி அறிவையும் இதிலே பயன்படுத்தியுள்ளதே இநாநூலின் தலையாய சிறப்பம்சம்!.
நான் இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வேன்….ஒவ்வொரு வாசிக்கத்தெரிந்த மனிதனும் ஒரு வாரம் படிப்புக்கென விடுப்பு எடுத்துக்கொண்டு வாசிக்க வேண்டிய நூல்…இது கொஞ்சம் ஓவராக உங்களுக்குத் தோன்றினாலும்..இதில் கொஞ்சமும் மிகையில்லை. அவ்வளவு உழைப்பு…காலம்…பொருள்….பொறுமை..
இந்நூலுக்குச்செலுத்தப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தில் காணப்படும் செய்திகளுக்குச் சான்றுகளாக சிந்து சமவெளி நாகரிக அகழ்விடத்தின் காட்சிகளும் பொருட்களும் இன்று மறைக்க முடியாத சாட்சிகளாக உள்ளதை இந்நூல் பட்டியலிடுகிறது. ஊரின் பெயர்கள்…இங்கும்…அங்கும்….இன்றும் அப்படியே ஒன்றாக இருப்பதை யாராலும் இனி மாற்றமுடியாது!
சேவற்கோழிச்சண்டை….. சிபு காளையும்….காங்கேயம் காளையும்…. வன்னிமர வழிபாடு….. குயவருக்கு முக்யத்துவம்.. விவசாய விளைச்சலுக்கு பலி கொடுத்தல்..
சிவப்பு…பின் கறுப்பு-சிவப்பு…நிறத்திற்கு முக்கியத்துவம்…தாமிரம் -செம்பு பயன்பாடு.. பானை…தாழி….மணி(Beads), சங்கு வளையல்கள்…சிலம்பு..பெண்தெய்வ வழிபாடு….சாதாரண மக்களையே நாயகர்களாக(Hero/Heroin)போற்றும் அக பாடல்கள்..வீரம்…காதல்…இறந்த பின்பும் ஒருவருக்கு புகழ் நீடிக்க விரும்புதல்… மதக்குறியீடின்மை.. உன்னதமான மேம்பட்ட நாகரிகம்(யாதும் ஊரே…யாதும் கேளீர்),விட்டுக்கொடுக்கும் காதலர்(குட்டையில் உள்ள சில சொட்டுநீரை குடிப்பது போல் பாவனை காட்டும் மான்ஜோடி) செங்கல் தயாரிப்பில் நிபுணத்துவம்… இன்றைய நவ நாகரிகத்தையும் மிஞ்சும் நகரமைப்பு(பொது நீச்சல் குளம்…பெரும் கோட்டைச் சுவர்,சாக்ககடை-கழிவுநீர் வசதி, ஆக்ரமிப்பு இல்லாத சீரிய நேர்க்கோட்டு சாலைகள்…மேற்கிலிருந்து கிழக்கு சரிவான நகர் வடிவமைப்பு(Slope).. ஏழு(seven) எண்ணிற்கு முக்கியத்துவம்.. அரசர்களை/தளபதிகளைவிட புலவர்களுக்கு மரியாதை(தமிழ்ச்சங்கங்கள்..கடை எழு வள்ளல்கள்)..பழைய வரலாறை நினைவு கூர்ந்து பதிவுசெய்தல்(செய்யுள்/கல்வெட்டுகள்/நடுகற்கள்), தாயக்கட்டை விளையாட்டு…சிறு குழந்தைகளுக்கு பொம்மைகள்…ஆடற்கலை.(dancing girl)
கண்ணகி மார்பை அறுத்துவீசி சாபமிட்டது போல பல பதிவுகள்…மலைகளில் முருகன்.. கடலோரமாகவே நாகரிகம் ஆற்றங்கரை நகர் அழிவுகளை தொடர்ந்து புலம்பெயர்தல்.. கடல்வணிக வழிகளை் வாஸ்கோடாகாமா வழிகாண்பதற்கு முன்பே திராவிட நாகரிகத்தவர் கண்டுபிடித்தது..அன்னிய நாணயங்கள்..மீன்..படகு… ஓவிய அச்சுக்க்கள் கண்டுபிடிப்பு….இவை சங்கப்பாடல்களிலும்
இடம் பெற்றுள்ளது..
கொற்கை-வஞ்சி-தொண்டி(Korkai-Vanchi-Thondi Complex)என்பதை விளக்கி ஆதாரத்தை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.கீழ்…மேல்……என்ற பொருள்(Concept)கவனம் பெறுகின்றது. கவரிமான் முடியில்லாமல் உயிர்வாழாது என நாம் பொதுவாக பேசிகாகொள்கிறோம்.. ஆனால் அது மான் அல்ல…கவரி என்ற இன்றும் இமயமலை உச்சியில் வாழும் ஒரு வகை மாடு என்பதையும்…. பாலைவனத்து ஒட்டகம் கடும் வறட்சியின் பசியில் எலும்பைத்தின்னும் என்பதும்.. குஜராத் கடற்கரையில் பொதிசுமந்து செல்லும் கோவேறுகழுதையின் கால்களை சுறாமீன் குட்டிகள் கடிக்கும்…..போன்ற பல வட நாட்டுச்செய்திகள் தமிழ்ச்சங்க பாடல்களில் இடம்பெற்றுள்ளது சிந்துச்சம வெளி நாகரிகத்தின் திராவிட அடித்தளத்தை ஐயமற நிறுவுகின்றன.
வைகைக்கும் சிந்துவுவிற்குமான தூரம் 1400கி.மீ…சிந்து நாகரிகம் முடிந்து திராவிட நாகரிகமாக தொடரும் கால இடைவெளி 1900ஆண்டுகள்.இந்த கால…..தூர… இடைவெளியை ஆதாரப் புள்ளிகள் மூலம் இணைக்கும் பணியை இந்நூல் செய்கிறது…வைகை….தாமிரபரணி ஆற்றங்கரை அகழாய்வுப்பணிகளின் கண்டுபிடிப்புகள் நடுநிலையோடு ஒன்றிய அரசால் நிறுவப்பட வேண்டும் என்ற பதைப்பும்…எதிர்பார்ப்பும் இந்நூலின் வாசகர் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்..
சுதந்திரத்திற்கு முன்பு அகழ்வாய்வில் ஈடுபட்ட ஆங்கிலேயனுக்கு இருந்த நேர்மை நம்மவர்(?)களுக்கு இல்லாமல் போனது போலிபண்பாட்டுப் பெருமை! இங்கே ஆரியர்-திராவிடர் என்ற பார்வை..
கேள்வி எழவில்லை…மஹாராஷ்ட்ராவிலும்.. குஜராத்திலும்….இன்றைய பாகிஸ்தான்.. பலுசிஸ்தான்..ஆப்கானிஸ்தான்…என நாகரிகத்தின் பயணப்பாதையின் மைல்கற்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளது.. வடக்கு..தெற்கு என்ற எல்லை விரிவடைந்து கொண்டே சென்று இன்றைய நவீன மனிதனின் ஆதிநிலமாக ஆப்பிரிக்க கண்டம் உள்ளது என்ற டோனி ஜோசப்பின் கருத்தும் இந்தநூலுக்கு வலு சேர்க்கிறது.
ஆழிப்பேரலைகள்…காட்டாற்று வெள்ளம்.. புயல் சூறாவளி பருவகால பேரிடர்கள். எரிமலை…மேம்பட்ட மிருகம்…வாகனம்.. ஆயுதங்களுடன் வரும் புது மனிதக்குழுவின் தாக்குதல்…கடல் ஆட்கொண்டது….என் பல காரணங்களால் மனிதனின் புலம் பெயர்வு தொடர்ந்து கொண்டே உள்ளது. அப்படிப் புலம்பெயரும் போது அவனோடு சேர்ந்து அவனது வளர்ப்பு மிருகம்..பறவை.. மரம்…விளையாட்டு..வழிபாடு..ஊர் பெயர்கள்..தானியம்..இலக்கியம்..பண்பாடு என் அனைத்தும் பயணிக்கின்றன.. இப்படித்தான் அழிவினிறுதியில் சிந்துசம வெளிநாகரிகம் குஜராத்…மஹாராஷ்ட்ரா.. என திராவிட நாகரிக அம்சங்களோடு தெற்கு முனையை அடைந்தது என இந்நூல் ஏராளமான ஆதாரங்களுடன் நிறுவுகிறது..
இன்று தமிழகத்தை DNA ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் 65000ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட நவீன மனிதனின் கலப்பில்லாத வாரிசு என்று யாரும் இருக்க மாட்டார்கள் என இந்நூல் கூறுகிறது..
ஆமாம்…5 சதவீதத்திற்கும் குறைவான அளவிலே இன்றும் அந்தமான் நிக்கோபார் அடர்காடுகளிலும்..இந்தியாவின் சில மலைப்பகுதிகளிலும் ஆதிப் பழங்குடியினர் மரபணு கலப்பின்றி வாழ்கின்றனர்.(இவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது) சிந்துச்சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.. குமரிக்கோடு கடல் கொள்ளப்பட்ட பின் தமிழ்ச்சங்கம் மதுரை நோக்கி புலம்பெயர்ந்தது என்பதும்.. தொல்காப்பியத்தில் ஏராளமான பழைய நூல்கள் முன்பு இருந்தது குறிப்பிடப்படுவதும்.,.அப்போது என்ன மொழி இருந்தது என்பதற்கும் இனி மேல்தான் ஆதாரங்கள் கிடைத்தாக வேண்டும். ஹரப்பாவிில் துணியின் மீது எழுதப்படும்ம் முறை இருந்ததாக ஊகிக்கப்படுகிறது. அவை அழிந்திருக்க்கூடும். திராவிடப் பண்பாடு தான் நம்நாட்டின் அடிப்படை என்பதையே சிந்து-வைகை அகழ்வாராய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த ஆய்வுகள் அண்மைக்காலமாகத்தான் தீவிர கவனம் பெற்றுள்ளன. கீழடியிலும்…ஆதிச்சநல்லூரிலும் இரும்பையும்..குதிரையையும் தேடியவர்கள் அவை இல்லாத காரணத்தால் கிடப்பில் போட்டிருந்தனர்..ஆனால் இன்று நாமே எதிர்பாராதவை சாட்சியங்களாய் வெளிப்பட்டு சவால் விடுகின்றன. மரபியல் ஆய்வுமுறை(DNA Test..Carbondating) சென்ஸஸ்்…வாக்காளர் பட்டியல், விலங்கியல்..தாவரவியல்…இலக்கியம்… வரலாறு…மனிதகுல வரலாறு…புவியியல்.. ஜியோ ஆர்பிட்டரி சிஸ்டம்..நேரடி கள ஆய்வு..நாட்டார் கதைகள்..சொலவடைகள்.. வழிபாடாடுமுறைகள்…திசை அடிப்படையில் வீடு கட்டுதல்…சில எண்களுக்கான
முக்யத்துவம்..குல தெய்வம்..கோயிலுக்கென ஸ்தல மரங்கள்…அணிகலன் அணியும் முறை..சொந்த பந்த உறவு முறை.உணவுப் பழக்கம்..விவசாய முறை.. வைத்திய முறை.. எழுத்து முறை..ஆடை.. உலோகம்..கணித முறை.திருமணமுறை…என பல்வேறு அம்சங்களை ஒப்பிட்டு சிந்து வெளி நாகரிகத்தின்..வைகை/பொருநை நதிக்கரை நாகரிகத்தின் அடிப்படை எது என விருப்பு வெறுப்பின்றி நிறுவும் முயற்சியை இந்நூல்!!
ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள இடம்பெற்றிருக்கும் சொற்கள் தமிழில் இடம் பெற்றிருந்தால் இன்னும் தமிழர் வாசிக்க எளிதாக இருந்திருக்கும். இரண்டு பாகங்களாக பிரித்து அச்சடித்திருந்தால் நூலை எளிதாக மலைப்பின்றி கையாள முடியும்.. விரைவில் தமிழ் வடிவத்தை எதிர்பார்க்கிறோம்!. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வந்தால் இந்திய அளவில் புரிதல் ஏற்படும். அனைத்துத்தரப்பு மாணவர்களும் படித்து அறிவை விரிவு செய்து கொள்ள அற்புதமான வாய்ப்பை நூல் தருகிறது!.
இரா.இயேசுதாஸ்
அறிவொளி வாசிப்பு இயக்கம்(WhatsApp 7010303347)
மன்னார்குடி 8903105814
rajueasudoss@gmail.com
சமகால மொழி அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள் – ச. தமிழ்ச்செல்வன்
வீழ்ந்துவிடா வீரம்! மண்டியிடா மானம்!!” என்பதைத் தன் முழக்கமாகக் கொண்டுள்ள திரு. சீமான் தலைமையிலான ‘நாம் தமிழர் கட்சி’ தன்னைத் தமிழின மீட்புக்கான கட்சி எனப் பிரகடனம் செய்து இயங்கி வருகிறது. அண்மையில் நடை பெற்ற சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி 30,41,974 (6.6%) வாக்குகள் பெற்று தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில், சீமானின் அறிவியல் பார்வையற்ற அதிரடிப் பேச்சுக்கள் ஒரு பகுதியினரால் கலாய்க்கப்பட்டாலும், மற்றொரு பகுதி இளைஞர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
தமிழ்த்தேசிய அரசியலின் ஒரே முகம் சீமான்தான் என்று சொல்லிவிட முடியாது. அவர் பேசுவதெல்லாமே தமிழ்த்தேசிய அரசியல் என்றும் சொல்ல முடியாது. தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி, தமிழ்த்தேச விடுதலை இயக்கம், தமிழ்ப்புலிகள் இயக்கம், மே-17 இயக்கம் போன்ற, அளவில் சிறிய இயக்கங்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக்கட்சி போன்றவையும் அவ்வப்போது திராவிட முன்னேற்றக்கழகமும் தமிழ்த்தேசிய அரசியலை/அதன் பல்வேறு கூறுகளை முன்னெடுத்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். பார்த்தும் வருகிறோம்..
மொழியை அரசியல் அணிதிரட்டலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் இயக்கங்கள் எல்லாமே தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பதாகக் கொள்ளலாம். வர்க்கத்தை அவர்கள் அடிப்படையாக கொள்வதில்லை. மக்கள் கொண்டிருக்கும் பல அடையாளங்களிலும் மொழி அடையாளமே அடிப்படை எனக்கொண்டு அவர்களின் அரசியல் அமைகிறது. வகுப்புவாத இயக்கங்களும் கூட தமிழ்த் தேசியத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்கேற்பவும் சில தமிழ்த் தேசியர்கள் பேசியிருக்கின்றனர்.
1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (தமிழ்நாடு கமிட்டி)யின் 5-ஆவது மாநில மாநாட்டு அறிக்கையில் அன்றைக்கு வளர்ந்து கொண்டிருந்த தி.மு.க பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது:
“இந்தியாவின் இதர சில மாகாணங்களில், காங்கிரஸ் கொள்கையினால் அதிருப்தி அடைந்த மக்களை வகுப்புவாதக் கட்சிகள் ஆகர்ஷிக்க முடிகிற மாதிரி, தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், தவறான கோஷத்தினடிப்படையில் மக்களில் சில பகுதி யினரை தி.மு.க. திரட்ட முடிகிறது. இந்தக் கட்சியின் பால் அனுசரிக்கப்படவேண்டிய கொள்கை, தமிழ் நாட்டில் ஒரு முக்கியமான அரசியல் பிரச்சினையாகும்.
பூர்ஷுவா கட்டுக்கோப்புக்குள்ளேயே, தேர்தல்களை லட்சியமாகக் கொண்டு, பிரச்சாரத்தையே பிரதான வேலையாக வைத்து, ஒரு பூர்ஷ்வா ஸ்தாபன அமைப்பாகத்தான் தி.மு.க. உருப்பெற்று வருகிறது. வர்க்க ஸ்தாபனங்களை வளர்க்க விரும் பாததால், காங்கிரஸ் கட்சியுடன் அடிப்படையான கொள்கைகளில் மோதல் ஏற்பட இடமில்லை .”
அதே அறிக்கை மேலும் குறிப்பிடுவது:
“இவர்களுடைய சமூக அஸ்திவாரத்தைப் பின் வருமாறு நிர்ணயிக்கலாம்: கிராமங்களில் பண வசதியுள்ள விவசாயிகளின் பையன்கள், பள்ளிப்படிப்பு முடிந்து கிராமத்திலிருக்கும் இளைஞர்கள், சில மத்தியதர விவசாயிகள், சிறு தொழில் நடத்துப் வர்கள், மாணவர்கள், ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்படாத நகர உழைப்பாளிகளில் ஒரு பகுதி, சர்க்கார் சிப்பந்திகளில் கணிசமான பகுதி, பள்ளி உபாத்தியாயர்களில் ஒரு பகுதி, மேற்கூறிய பகுதிகளிடம் தி.மு.க. மேலும் பரவினால் ஆச்சரியப்படுவதற் கில்லை. இவர்களை அஸ்திவார மாகவும் பிரச்சாரக் கருவிகளாகவும் கொண்டு, இதர தொழிலாளிகள் விவசாயிகளிடம் இவர்கள் செல்வாக்கு நுழைவதும் சாத்தியம். சிற்சில இடங்களில் இது நடைபெற்றும் வருகிறது. –
சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பிரச்னைகளை எடுத்துப் போராட்டங்களை ஒடு முக்கிய அரசியல் வேலையாக திமுக நடத்து தில்லை. பொதுக்கூட்டங்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரம்தா ‘அவர்களுடைய பிரதான கட்சி வேலையாயிருக்கிறது.
முதலாளித்துவ வளர்ச்சி ஏற்றத்தாழ்வா இருப்பதும், தமிழ் மக்களை வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, முதலிய பல நெருக்கடிகளுக்கும் ஆளாக்கும் காங்கிரஸ் சர்க்காரின் கொள்கைகளும் நடைமுறையும், திமுக இயக்கம் வளர்வதற்கான சூழ்நிலையை அளிக்கின்றன. தமிழ் மறுமலர்ச்சி, பிரதேச தொழில் வளர்ச்சி, தமிழ் இன எழுச்சி, முதலியவற்றிற்கு தவறான ரூபத்தைக் கொடுத்து இவர்கள் மக்களிடம் ஆதரவு பெற முடிகின்றது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த இந்திய மக்களின் விடுதலை ஆர்வத்திற்கு ஒப்பாக, வடநாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் தமிழனின் விடுதலை இயக்கமாக, தமிழ்நாட்டு நிலைமையை சாமர்த்தியமாகவும், கவர்ச்சிகரமாகவும் திமுக தலைமை வர்ணித்து, மக்களைத் திசை திருப்பி விடுகிறது.”
இந்த வரலாற்று இணைகளைத் தொட்டுக்காட்டுவது அச்சுறுத்த அல்ல. ஆனால் இந்த அறிக்கை ஆய்வு செய்தது போல,. நா.த.க. உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியலை இன்று முன்னெடுக்கும் அமைப்புகளில் இணைந்துள்ள இளைஞர்கள், பொதுமக்களின் வர்க்கப்பின்னணி சமூகப்பின்னணி பற்றியெல்லாம் ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஆகவே தமிழ்நாட்டில் பல இயக்கங்களும் தங்கள் வளர்ச்சிக்குத் தேவை என்று கருதும் போதெல்லாம் தமிழ் இன அல்லது தமிழ் இனவாத அரசியல் முழக்கங்களைக் காலம் தோறும் எழுப்பியே வந்திருக் கின்றன. சில சந்தர்ப்பங்களில் சில பிரச்னைகளில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் தமிழ்த்தேசிய வாதிகளின் நிலைபாட்டுக்கு நெருக்கமான நிலைப்பாட்டை எடுத்ததுண்டு. ஆகவே தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒரு வரலாறு தமிழ் மண்ணில் இருக்கிறது. ஒரு கட்சி சார்ந்ததாக மட்டும் அது இருக்கவில்லை. பல இயக்கங்களும் கையிலெடுப் பதும் கீழே போடுவதுமான தன்மையுடன் அது இருந் துள்ளது. அந்தந்தக் காலச் சூழலுக்குள் வைத்து அவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மார்க்சும் எங்கெல்சும் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாக்கண்டம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு பிரச்னை தேசிய இனப்பிரச்னை. முதல் உலகப்போரை நோக்கி இட்டுச்சென்ற ‘சந்தைக்கான’ முதலாளித்துவ, பிரபுத்துவப் பங்கீட்டுச் சண்டைக்காலத்தில் ஆக்கிரமிப்பு யுத்தங்களின் மூலம் தேச எல்லைகள் அழிக்கப்படுவதும் மீண்டும் மீண்டும் புதிய தேசங்கள் உருவாக்கப் படுவதும் சிதைக்கப்படுவதுமான நிகழ்வுப்போக்கில். முன்னுக்கு வந்தவை ஆட்சி மொழி, பயிற்றுமொழிப் பிரச்னையும் அதை ஒட்டிய தேசிய இனப் பிரச்னையும்தான். எனவே, தேசிய இனப்பிரச்னை குறித்து ஆழமான கவனத்தை மார்க்சும் ஏங்கெல்சும் செலுத்தினர் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை .
உலகின் முதல் காலனியாக்கப்பட்ட நாடான அயர்லாந்தின் வரலாற்றில் துவங்கி ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வரலாறுகள் எல்லாவற்றையும் ஆழமாக ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதினர். ருஷ்ய தேசிய இனத்தின் ஒடுக்கு முறைக்கு ஆளான பல்வேறு தேசிய இனங்களின் பிரச்னைகள் குறித்து லெனின் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.
மார்க்சியவாதிகளிடத்தும் மார்க்சியவாதிகளாக ஆக விரும்புவோரிடத்தும் தேசிய இனப்பிச்னை குறித்துக் காணப்படும் வேலைத்திட்ட ஊசாலாட்டங் களைப் பரிசீலனை செய்யும் நோக்கத்துடன் தோழர் லெனின் 1913 செப்டம்பர் 5 பிராவ்தா இதழில் எழுதிய “மொழிப்பிரச்னை குறித்து மிதவாதிகளும் ஜனநாயக வாதிகளும்” என்கிற கட்டுரை, மொழி மற்றும் தேசிய இனம் சார்ந்த பிரச்னையை மார்க்சியர் எப்படி அணுகவேண்டும் என்பதற்கான வழிகாட்டும் வாசகங்களைக் கொண்டுள்ளது. அக்கட்டுரையின் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்: –
“தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காகப் போராடாத எவரும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறையையும் சமத்துவமின்மையையும் எதிர்த்துப் போராடாத எவரும் மார்க்சியவாதி அல்ல, ஜனநாயகவாதியுங்கூட அல்ல. அது சந்தேகத்துக்கு இடமில்லாதது”
“ பாட்டாளி வர்க்கம் குறித்துப் பேசுகையில் ஒட்டு மொத்தமாய் உக்ரேனியக் கலாசாரத்தை ஒட்டுமொத்தமாய் ருஷ்யக் கலாசாரத்துக்கு எதிராய் வைத்திடுவதானது, முதலாளித்துவ தேசியவாதத்தின் நலனை முன்னிட்டு வெட்கமின்றிப் பாட்டாளி வர்க்க நலன்களுக்குத் துரோகமிழைப்பதே ஆகும்.”
” ஒரு தேசிய இனத்தின் தொழிலாளர்கள் மற்றொன்றின் தொழி லாளர்களிடமிருந்து தனியே பிரிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவதையும், மார்க்சிய ”ஒன்று கலத்தல்” மீதான எல்லாத் தாக்குதல்களையும், பாட்டாளி வர்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒட்டு மொத்தமாய் ஒருதேசியக் கலாசாரத்தை ஒருமித்த தாய் இருப்பதாகப் பாவிக்கப்படும் இன்னொரு தேசிய கலாசாரத்துக்கு எதிராய் வைப்பதற்கான எந்த முயற்சிகளையும், இன்ன பிறவற்றையும் எவ்விதத்திலும் ஆதரித்து நிற்பதானது, முதலாளித்துவ தேசியவாதமே ஆகும். இந்த முதலாளித்துவ தேசியவாதத்தை எதிர்த்து ஈவிரக்க மற்ற போராட்டம் நடத்துவது அத்தியாவசியக் கடமையாகும்.”
இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாக நம்முடைய பார்வை இருக்க வேண்டும். இவற்றில் முதல் பத்தியை மட்டும் எடுத்துக்கொண்டு இனவாத எல்லைக்கும் போகக் கூடாது. எந்தத் தேசிய இனமானாலும் அந்தந்த தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க ‘ஒன்று கலத்தலின்’ மீது நின்றே தேசிய இன விடுதலையைப் பேச வேண்டும் என்கிற வழிகாட்டுதலை லெனின் தருகிறார். இந்தப்பார்வையை உட்கொண்டே நாம் தமிழ்த்தேசியத்தின் வரலாற்றுத் தடங்களைப் பார்க்க வேண்டும்.
தமிழ்த்தேசியத்தின் தடங்கள்:
கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளான எல்லிஸ், பர்னல், ரிச்சர்ட் கிளார்க் போன்றோர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் பின்பற்றும் சட்டங்கள், வழக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பையே ‘திராவிடம்’ என்றனர். ஆனால் அறிஞரும் கிறித்துவ மிசனரியுமான ராபர்ட் கால்டுவெல்தான் முதன் முதலாக ‘திராவிடம் என்பது தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் அடங்கிய மொழிக்குடும்பத்தைக் குறித்தது என்று சொன்னார். (மொழியாகிய தமிழ்-ந.கோவிந்தராஜன் – க்ரியா பதிப்பகம்)
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் எனத்துவங்கி
“கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!” என்கிற பாடலை (இன்று நம் தமிழ்த்தாய் வாழ்த்து) மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடுவதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் கால்டுவெல்.
ஆங்கிலேயர்களுக்கு அதுகாறும் எல்லாமே சமஸ்கிருதம் தான். சமஸ்கிருதம் தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்றே ஐரோப்பிய அறிவுலகம் நம்பியது. மாக்ஸ் முல்லர் போன்ற வர்கள் வடமொழி இலக்கியம் – பண்பாடு – கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை. திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசி வந்தனர். இதற்குப் பின்னால் ஒரு மொழி அரசியல்’ இருந்தது. அதை உடைத்து தமிழ்மொழியின் சிறப்புகளையும் அதன் செறிவுமிக்க இலக்கியங்களையும் ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றவர்கள் கிறித்துவப் பாதிரிமார்களே.
1606-ல் இத்தாலியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ராபர்ட்டி நொபிலி, 1700-ல் இத்தாலியிலிருந்து வந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்ட வீரமாமுனிவர் என்ற கான்ஸ்ட ன்டின் ஜோசப் பெஸ்கி, 1709-ல் ஜெர்மனியிலிருந்து வந்து தமிழ் கற்றுத் தொண்டாற்றிய சீகன் பால்கு, 1796-ல் இங்கிலாந்திலிருந்து வந்திறங்கி திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு ஆங்கி லத்தில் உரை எழுதிய எல்லிஸ் துரை, 1814-ல் ஜெர்மனியிலிருந்து வந்து திரு நெல்வேலியில் ‘சாந்தபுரம் -சந்தோஷபுரம்’ முதலிய பன்னிரண்டு கிராமங்களை உண்டாக்கிய இரேனியுஸ் அடி கள், 1838-ல் இங்கிலாந்திலிருந்து வந்து திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் என்று தமிழுக்குத் தொண்டாற்றித் தமிழ் மக்களை கிறித்துவத்துக்கு ஈர்த்த பாதிரிமார் பலர். –
கிறித்தவ மதமாற்றங்களுக்கு எதிர்வினையாகவும் கிறித்துவமும் தமிழும் என்பதற்கு மாற்றாகவும் சைவமும் தமிழும் என முழங்கித் தமிழ் அரசியலை முன்னெடுத்தார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர். அவருடைய குரலை தமிழ் நாட்டில் இயங்கிய சைவ மடங்களும் எதிரொலித்துத் தமிழ் அரசியலை (சைவத்தைக் காப்பதற்காக) அதன் ஆரம்ப வடிவில் பரவலாக்கினர். 1848 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியா சாலையை அமைத்தார். சென்னைக்கு வந்து அச்சு இயந்திரம் வாங்கிச்சென்று சைவ நூல்களைப் பதிப்பித்தார்.
சைவ மத அரசியலோடு பிணைந்ததாக இருந்த இப்போக்கைத் தமிழ் மொழிசார்ந்த இயக்கமாக மாற்றித் துணை புரிந்தவை இரண்டு அம்சங்கள். ஒன்று கால்டுவெல் துவக்கிவைத்த ஆரிய – திராவிட எதிர்நிலை மற்றொன்று 19 ஆம் நூற்றாண்டில் துவங்கியிருந்த அச்சுப்பதிப்பு இயக்கம். 1894 ஆம் ஆண்டு எட்டுத்தொகையினுள் ஒன்றான புறநானூறு மூலமும் உரையும் தமிழ்த்தாத்தா எனப் பின்னர் அடையாளப்பட்ட உ.வே.சாமிநாதையர் அவர்களால் பதிப்பிக்கபட்டது. 1000, 2000 எனப் பிரதிகள் அச்சிடப்பட்டு மக்களிடம் பரவியது. தமிழின் தொன்மையும் செறிவும் குறித்த பெருமித உணர்வு பரவிட இது ஒரு ஊக்கமாக அமைந்தது.
“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயிற் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே” என்று மகாகவி பாரதி உ.வே. சா.வைப் போற்றியதும் இக்காலத்தில்தான்.
பாண்டித்துரைத்தேவர் 1905 ஆம் ஆண்டு நான்காம் தமிழ்ச்சங்கம் என்கிற அமைப்பை உருவாக்கினார். தமிழ் மொழி சார்ந்த விவாதங்களை அது முன்னெடுத்தது.
தனித்தமிழ் இயக்கம்
அப்போது எழுதப்பட்டு வந்த தமிழ் உரைநடை மணி பிரவாளமாக இருந்தது. மணி ஒன்றும் பவளம் ஒன்றும் அடுத்தடுத்துக் கோத்து உருவாக்கப்படும் மாலையைப் போலத் தமிழ்ச்சொல் ஒன்று வட சொல் ஒன்றென அடுத்தடுத்துப் பயன்படுத்தி எழுதுவது மணிப்பவளம் என்னும் கலப்படத்தமிழ் நடையாகும்.
இத்தகைய நடையால் தமிழுக்குக் கேடுவிளையும் எனக்கண்ட தமிழறிஞர் மறைமலை அடிகள் 1916 இல் துவக்கிய இயக்கமே ‘தனித்தமிழ் இயக்கம்’.
வேதாச்சல சுவாமிகள் என்கிற தன்னுடைய பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றினார். தன் குடும்பத்தின் அத்தனை பேருடைய பெயர்களையும் திருஞான சம்பந்தன் – அறிவுத் தொடர்பன், மாணிக்கவாசகம் – மணிமொழி, சுந்தரமூர்த்தி – அழகுரு என்று மாற்றப்பட்டன. அவருடைய தங்கை பெயர் திரிபுர சுந்தரி – முந்நகரழகி என்று மாற்றப்பட்டது. மருமகன் பெயர் குஞ்சிதபாதம் – அது தூக்கிய திருவடியாயிற்று.
வெறும் பெயர் மாற்றத்தோடு நில்லாமல், ஆரி யத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் இவ்வியக்கத்தால் முன்வைக்கப்பட்டன. தமிழ்முறைத்திருமணம் என்கிற வழக்கம் இன்றளவும் தொடர்வதைப் பார்க்கிறோம்.
மறைமலை அடிகள், பாரதிதாசன், கா.சுப்பிர மணியபிள்ளை, வ.சுப்பையாபிள்ளை, தேவநேயப் பாவாணர், கா.அப்பாதுரையார், சி.இலக்குவனார், இளவழகனார்,வ.சுப.மாணிக்கனார், கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற அறிஞர்கள் தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களாக இருந்தனர். பல்வேறு சிந்தனைப்போக்கு உள்ளவர்களான இவர்கள் தனித்தமிழ் என்கிற ஒரு நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டி ருந்தனர். பல இதழ்களும் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுக்கத் துணை புரிந்தன. மறைமலை அடிகளாரின் “அறிவுக்கடல்” திருவி.க. நடத்திய நவசக்தி,பாவாணர் நடத்திய ‘தென் மொழி’ பாவேந்தர் நடத்திய ‘குயில்’ கி.ஆ.பெ. விசுவநாதத்தின் ‘தமிழர் நாடு’ போன்றவை அவ்விதழ்கள். தனித்தமிழ் இயக்கம் போலவே அதே காலத்தில் பாவாணர் ‘உலகத் தமிழ் இயக்கம்’ என்கிற அமைப்பையும் வ.சுப.மாணிக்கனார் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்கிற இயக்கத்தையும் நடத்தினர்.
‘தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி’ என்கிற சிறு நூலில் இவ்வியக்கம் பற்றிய தன் பார்வைகளை பேராசிரியர் கா.சிவத்தம்பி முன் வைத்துள்ளார். “பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அடையாளங்களை மீட்டெடுத்தல், பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த சாதி மறுப்பு, பெண் விடுதலை, பார்ப்பனியத்துக்கு எதிராகக் கிளர்ந்த ‘தென்னிந்திய நலவுரிமைச்சங்கம்’ எனப்பல்வேறு அசைவியக்கங்கள் ஊடாடிய தமிழ்ச்சூழலில் தமிழ், சைவம் என்னும் பின்னணியில் வரும் மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார்.” என்பது அவர் கருத்து.
நீண்ட காலமாகத் தமிழ் நிலப்பரப்பில் அந்நியர் ஆட்சி நடைபெற்று வந்த பின்னணியில் ஆட்சி மொழியாகத் தெலுங்கு, மராட்டியம், உருது, பாரசீகம் பின்னர் ஆங்கிலம் முதலியன கோலோச்சியுள்ளன. மக்கள் மொழியாகத் தமிழே இருந்தாலும் அது எப்போதும் ஆட்சிமொழி ஆனதில்லை. இந்த நெடிய மொழித்திணிப்பு வரலாற்றுக்கான எதிர்வினையாகவும் ஏக்கத்தின் வெளிப்பாடாகவும் தனித்தமிழ் இயக்கத்தைக்காண வேண்டும். இதில் ஒரு நியாயப்பாடு இருப்பதை நாம் புறக்கணிக்க முடியாது.
தோழர் ப. ஜீவானந்தம் அவர்களின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது:
“தனித்தமிழ்ப்போக்கால் லாபம் உண்டா? உண்டு என்பது என் கருத்து. இதனால் தமிழ்மொழி வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கிறது. ஆனால் இதை அளவுக்கு மீறி மொழி வெறியை எட்டுமளவுக்குக் கொண்டுபோகக்கூடாது.கூடுமான வரைக்கும் எல்லாவற்றையும் தமிழிலே, அழகான, எளிய தமிழிலே, எளிதாகப் புரியக்கூடிய தமிழிலே சொல்ல வேண்டும். வேண்டாத இடத்தில் வலிந்து கொண்டு வருவது கூடாது என்ற முறையில் தனித்தமிழ்ப்போக்கு சரியே” என்றார் ஜீவா.
இந்தித்திணிப்பு எதிர்ப்பு இயக்கங்கள்
தமிழ்த்தேசிய அரசியல் அலை ஓய்ந்துவிடாமல் காத்த இயக்கங்களில் முக்கியமானவை இந்தி எதிர்ப்பு இயக்கங்கள் எனலாம். 1937-38 காலகட்டத்தில் ராஜாஜி தலைமையிலான அரசு 125 பள்ளி களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியபோது இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் எழுந்தது.
சுதந்திர இந்தியாவில் 1950இல் உருவான இந்திய அரசியலமைப்புச்சட்டம் 15 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் இருக்கும் என்றும் 15 ஆண்டுகளுக்குப் பின் ”அல்லது ஆங்கில” என்கிற வாசகம் நீக்கப்படும் என்றும் கூறியது. இது நேருவின் வாக்குறுதி: மீண்டும் 1965 இல் இந்திப் பிரச்னை எழுந்தது. போராட்டமும் வீறு கொண்டு எழுந்தது. கல்லூரி மாணவர்கள் களத்தில் குதித்தனர். பக்தவச்சலம் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். ராஜாஜி உள்ளிட்ட பல கட்சித்தலைவர்கள் போராட்டத்தை ஆதரித்தனர். இரு மாதங்கள் வரை நீடித்த இப்போராட்டத்தில் 70 க்கு மேற்பட்டவர்கள் இறந்தனர், கொல்லப்பட்டனர். அதிகாரபூர்வமாக 70 பேர் என்றாலும் 500 பேர்வரை இறந்திருக்கலாம் என்ற கருத்து வலுவாக உள்ளது.
இதன் தாக்கம் 1967 தேர்தலில் வெளிப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தது.ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் திருத்தம் இந்திராகாந்தி பொறுப்புக்கு வந்தபின் கொண்டுவரப்பட்டது.
மொழியுணர்வும் மொழிசார்ந்த அரசியலும் இப்போராட்டங்களால் சூடு தணியாமல் தொடர்ந்தது. உதவியது ஒன்றிய அரசின் பிடிவாதமான மொழிக்கொள்கை எனலாம்.
மொழிவாரி மாநிலங்களுக்கான போராட்டம்
இந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்திருந்தாலும், விடுதலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி அக்கருத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் இந்தியாவின் பல்வேறு வட்டா ரங்களில் வாழ்ந்த மக்களின் வேட்கையாகவும் கனவாகவும் அது இருந்தது. விடுதலைப்போராட்டத்தில் எல்லாப்பகுதி மக்களையும் இணைக்க வேண்டிய தேவை இருந்ததால் எல்லா மொழிகளுக்குமான சமத்துவம் பேணப்படும் என்று சொல்லி வந்தது. 1928இல் அனைத்துக்கட்சிகள் மாநாட்டில் அமைக்கப்பட்ட நேரு கமிட்டி முன் வைத்த அறிக்கை மொழி சார்ந்து உண்மையிலேயே ஜனநாயகப் பூர்வமாகப் பேசியது:
“ஒரு பிராந்தியம் தன்னைத் தானே பயிற்று வித்துக் கொள்வதற்கும், தனது சொந்த மொழியின் மூலமாக தனது அன்றாட வேலைகளைச் செய்து கொள்வதற்கும், ஒரு மொழிவாரி மாநிலம் அவசிய மாக இருக்க வேண்டும். அது பல மொழிகளைக் கொண்ட பகுதிகளாக இருக்குமானால், தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுவதோடு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிற்று மொழி மற்றும் பணி மொழிகளும் இருக்கும். எனவே, மொழிவாரி அடிப்படையில் பிராந்தியங்களைப் பிரித்து அமைக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். கலாச்சாரத்தின் பல்வேறு விசேஷத் தன்மைகளுடனும் இலக்கிய அம்சங்களுடனும் இணைத்து செல்வது மொழியாகும். மொழிவாரி மாநிலங்களில், இந்த அனைத்து அம்சங்களும் அந்த பிராந்தி யத்தின் பொதுவான வளர்ச்சியில் உதவிகரமாக இருக்கும்” (எஸ்.ஆர்.சி. அறிக்கை , பக். 13). –
இந்த அறிக்கையின் ஒரு வார்த்தைக்குக்கூட காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உண்மையாக இருக்கவில்லை. உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்தது. தேச ஒற்றுமை, தேசப்பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, ஐந்தாண்டுத்திட்டம் இதெல்லாம்தான் முக்கியம் என்று சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தது. இதற்கிடையே மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஆந்திர இயக்கம் பொட்டி ஸ்ரீராமுலுவின் 58 நாட்கள் உண்ணா விரதத்துக்குப் பிறகான மரணத்தை ஒட்டித் தீவிரமா னது. நாடெங்கும் மொழிவாரி மாநிலங்களுக்கான வெகுஜன எழுச்சியில் கம்யூனிஸ்ட்டுகள் முன்னிலை பாத்திரம் வகித்தனர். வன்முறையால் ஒடுக்க முயன்று தோற்ற நேரு அரசாங்கம் கடைசியில் 1953இல் மாநிலங்கள் சீரமைப்புக் கமிஷனை அமைத்து 01-11-1956 அன்று மொழிவாரி மாநிலங்களை அமைத்தது.
“தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை” என்கிற நூலில் தோழர் லெனின் எழுதியுள்ள இப்பகுதி இவ்விடத்தில் பொருத்தி வாசிக்கத் தோதாக உள்ளது:
“ருஷ்யாவில் தேசிய இயக்கங்கள் தோன்றி யிருப்பது இதுதான் முதல் தடவையல்ல; அது இந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சமும் அல்ல. உலகம் முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப் பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. விற்பனைப் பண்ட உற்பத்தியின் – முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்ஷ்வாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப்பட நிலப்பரப்புகள்’ அதற்கு வேண்டும்; அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக்கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும்.
இங்கேதான் தேசீய இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது. மனித உறவு களுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணி கத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், பெரிய உடைமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதற்கும் மிகமிக முக்கிய மாகத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும் தான்.
ஆகவே ஒவ்வொரு தேசீய இயக்கத்தின் போக்கும் நவீன முதலாளித்துவத்தின் தேவைகள் மிக நன்றாகப் பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ள தேசீய அரசுகள் அமைப்பதற்கான வழியிலானது. மிகமிகத் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் – இந்த இலக்கை நோக்கி இட்டுச் செல்லுகின்றன.”
இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை வெற்றி கொள்ளாமல் அதனுடன் சமரசம் செய்து கொண்டு தன் கூட்டாளியாகக் கொண்ட இந்தியப் பெரு முதலாளி வர்க்க அரசு பல்தேசிய மொழிகளின் 1. வளர்ச்சிக்குப் பாடுபட மறுத்து ஒற்றை இந்தி மொழியைத் திணித்துத் தன் ஒரே மார்க்கெட்டைப் பிடிக்க முயன்றது எனலாம்.
அடையாள அரசியலின் முக்கியமான ஒரு தேவை – அல்லது கூறு என்னவெனில் நாமல்லாத மற்றமை ஒன்றை எதிர் நிலையில் நிறுத்தி நாம் தமிழரல்லவோ என்கிற அணிதிரட்டலைச் செய்வது. காவிரி நதிநீர்ப் பங்கீடு ஒரு தீராப்பிரச்னையாக கர்நாடகத்துக்கு எதிராக தமிழ் உணர்வைத் தூண்டுகிறது. முல்லைப்பெரியார் அணைப் பிரச்னையில் கேரளம் எதிர்நிலையாக நாம் என்ற உணர்வூட்ட உதவுகிறது.
கச்சத்தீவு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு எனத் தமிழ் மக்கள் பாஜக அரசினால் வஞ்சிக்கப்படுவதான உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சோப லட்சம் இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாகத் திரண்டதில் மற்ற அம்சங்களோடு தமிழ்த்தேசிய அரசியல் கூறும் அதில் உண்டு . இவற்றில் பல மாநில எல்லைசார் பிரச்னைகள், சில அறிவியல் சார்ந்த பிரச்னைகள், சில ஒன்றிய அரசின் கார்ப்பொ ரேட் அடிவருடிக் குணத்தால் வரும் பிரச்னைகள். எல்லாவற்றையும் தமிழ்த்தேசிய அரசியல் தனதாக்கிப் பேசும் வல்லமை கொண்டுள்ளதுஎந்தப்பக்கமிருந்து பந்து வந்தாலும் ஓடி ஓடி அடித்துவிடுகிற மட்டைப்பந்து வீரனைப்போல.
சில அறிவியல் உண்மைகள்:
தமிழ்த்தேசிய அரசியலை எதிர்கொள்ளல் பற்றிய இறுதிப்பகுதிக்கு முன்னால் சில அறிவியல் உண்மைகளைக் குறித்துக்கொள்வது நல்லது. தமிழ்த் தேசியர் காலம் காலமாக முழக்கமாகவே எழுப்பிவரும் சில உணர்ச்சிகரமான வாதங்களை அறிவியலால் எதிர்கொள்ளலாம்.
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” நம் தமிழ்க்குடி என்பது ஒன்று. சேரன் செங்குட்டுவன் இமயம் வென்றான் இமயத்தில் கல்லெடுத்து கனகவிசயர் தலையில் ஏற்றித் தெற்கே கொண்டு வந்து கண்ண கிக்குச் சிலை வடித்தான்” என்பது இன்னொன்று. இந்த வசனங்களை எள்ளி நகையாடுவதால் எந்தப் பயனும் இல்லை . இதை நம்பும் ஒரு பகுதி மக்களுக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் சொல்லி வென் றெடுப்பதே நம் கடமை. ஆப்பிரிக்காக் கண்டத்துடன் ஒட்டியிருந்த இந்தியத்தட்டு அங்கிருந்து பிரிந்து நகர்ந்து வந்து ஆசியத் தட்டுடன் மோதியபோது உருவான மண் மேடுதான் இமயமலை. அங்கே உள்ள கல்லால் எதையும் செய்ய முடியாது. மண் கட்டிபோல உடைந்து நொறுங்கும் தன்மைதான் இமயமலைக் கல்லுக்கு உள்ளது.ஆகவே சேரன் செங்குட்டுவன் விந்திய சாத்பூரா. மலைகளிலிருந்து கல் கொண்டு வந்தான் என்று சொன்னாலாவது நம்பலாம்.
இன்னொரு நம்பிக்கை – இது இன்றுவரை ஆழமாக தமிழ்ச்சமூக உளவியலில் ஊடுருவி யுள்ளது இலங்கைக்குத் தெற்கே அண்டார்டிகா வரை விரிந்திருந்த குமரிக்கண்டம் அல்லது லெமூரி யாக்கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றினான். அவன் தமிழன். இக்கருத்து 1930-4 களில் துவங்கிய தமிழியக்க அறிஞர்களான மொழிஞாயிறு தேவ நேயப்பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார் துவங்கி இன்று யூ ட்யூப்பில் “ஆதி மொழி தமிழ். ஆதி மனிதன் தமிழன்” என முழங்கும் சீமான் வரை உயிர்த்திருக்கிறது.
புவியியல் அறிஞர் சு.கி.ஜெயகரன் அவர்களின் ‘மணல் மேல் கட்டிய பாலம்’ நூலில் உள்ள “குமரிக்கண்டம்-லெமூரியாக்குழப்பம்” என்கிற கட்டுரையின் இப்பகுதி இம்முழக்கங்கள் வெறும் கற்பிதங்கள் எனக் காட்டுகின்றன.
“பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தான் எழுதிய குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (1941) நூலில் லெமூரியாக் கண்டம் பற்றியும் அதன் நில அமைப்பு, அதில் வாழ்ந்த உயிரினம், மக்கள் பற்றியும் விவரங்களைத் தருகிறார். “இலெமூரியாக் கண்டத்தில் கிழக்குப் பகுதியின் மேல்பகுதியில் சில உயர்ந்த மலைகளே இன்று பஸிபிக் கடலின் தீவுகளாகியிருக்கின்றன. எரிமலைகளும், நில அதிர்ச்சியும் அக்கண்ட முழுமையும் என்றும் குலுக்கிக் கொண்டே இருந்தன. இலெமூரிய வாழ்க்கைக்காலம் நடுக்கற்காலமாகும். உள்நாட்டுச் சதுப்பு நிலங்களிலும், கடற்கரையோரங்களிலும், டினோஸர்கள் வாழ்ந்தன. ஊன்வெறியால் அவை உறுமும் பொழுதும், மரஞ்செடி கொடிகளை நெரித்து அவை நடக்கும் அரவம் கேட்கும் போதும் இலெமூரிய மக்கள் கவலையும், முன்னெச்சரிக்கை யும் கொள்வர்; இலெமூரிய மக்கள் தற்கால மக்களை – விட நெட்டையானவர்; ஆறடிக்கு மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர்; உடலின் எடை 160 – 200 கல் என்று கூறப்படுகிறது.” மேற்கூறிய தகவல்கள் அறிவியல் ஆதாரமற்றவை என்பது தெளிவு. இதில் முக்கியமான குழப்பம் டைனோஸர்களையும் ஆதி மனிதயினத்தையும் சமகாலத்தவராக்கியது. டைனோஸர்கள் அழிந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது என்பது நாமறிந்த அறிவியல் தகவல்.”
குமரிக்கண்டத்தின் வரைபடத்தைக்கூட கற்பனையாக வரைந்துள்ள நம் முன்னோர்கள், அப்படத்தில் குறிக்கப்படும் 700 காத தூரம் என்பது அண்டார்டிகாவையும் தாண்டி பூமிக்கு வெளியே வரை நீள்வதைக் கணக்கிடவில்லை. பய வர்க்கப்போரை நடத்தும் பாதையில் செல்லாத இயக்கங்களுக்கு, இத்தகைய கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. சமூகமும் இவற்றில் ஆவேசம் கொண்டு ஆசுவாசம் அடைகிறது போலும்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்றைக்கு மனித குலத்தின் தோற்றமும் பரவலும் பற்றிப் புகைமூட்டமாயிருந்த சித்திரத்தை மேலும் மேலும் தெளிவாக்கி வருகின்றன. மரபணு ஆராய்ச்சியின் மூலம் ஆதிமனிதர்களான ஹோமோ சேப்பியன்கள் உருவான இடம் ஆப்பிரிக்கா என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அறிவியலாளர் சு.கி.ஜெயகரன் எழுதிய “மூதாதையரைத் தேடி..” (காலச்சுவடு பதிப்பகம் முதற் பதிப்பு – 1991) என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்ட இப்பகுதி மேற்படிக் கற்பிதமாக கருதுகோள்களை உடைக்கிறது:
“மரபியல் ஆய்வுகளும், தொல்லியலாய்வு களும் ஆதிமனித இனம் தோன்றியது ஆப்பிரிக்கா என்பதை உறுதி செய்வதால் அக்கண்டமே மானுடத்தின் தொட்டிலாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 100,000 ஆண்டுகட்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஹோமோ செபியன் இனக்கூட்டத்திலிருந்து தற்கால மனிதர் தோன்றினர் என்பது ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. இதுவரை தெற்காப்பிரிக்காவில் நடத்தப்பட்ட அகழாய்வு களால் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லுயிரெச்சங்கள், எவ்வாறு ஹோமோ எரக்டஸிலிருந்து பழம் CourCuir Coulu (Archaic Homo Sapian) பரிணமித்து, அதன் வழித் தோன்றலான ஹோமோ செபியன் (தற்கால மனிதன்) உருவானான் என் பதைக் காட்டுகின்றன. இப்பரிணாம வளர்வின் பல்வேறு கட்டங்களைக் காட்டும் தடயங்கள் பல கிடைத்துள்ளன.
மேலும், பழம் ஹோமோ செபியன்கள் அப்போது உருவாகிக் கொண்டிருந்த சஹாரா, கலஹாரி பாலைவனங்களைத் தவிர்த்து அவற்றின் ஓரங்களிலிருந்த மலை, வனப்பகுதிகளிலும், அட்லாண்டிக் கடற்கரையையொட்டி கானகங்கள் இருந்த பகுதிகளிலும் ஏறத்தாழ 200,000 ஆண்டு களுக்கு முன் வாழ ஆரம்பித்தனர். கடற்கரை யோரம் வாழ்ந்த ஆதியினம் ஆழமற்ற கடற்பகுதி களில் கிடைத்த நத்தைகள், மீன்கள் போன்ற புரதச்சத்து அதிகம் கொண்ட உணவை உண்ண ஆரம்பித்தனர். இதனால் இவர்களது மூளையளவு பெருத்தது என அறியப்படுகிறது. இந்த இனத்தின் வழித்தோன்றல்களே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய ஹோமோ செபியன்கள்.

தாய்வழி வரும் மிட்டோகோண்டிரியல் டி.என்.ஏக்களின் (Mt DNA) ஆய்வுகளும் தந்தை வழிவரும் Y குரோமோசோம் டி.என்.ஏக்களின் ஆய்வுகளும் தற்கால மனிதர் 100,000 மற்றும் 20,00,00 ஆண்டுகட்கு முன் ஆப்பிரிக்காவில் உருவானதை உறுதிப்படுத் துகின்றன. அவர்களின் வழித்தோன்றல்களான தற்கால மனிதர் தலைநிலம் வழியாக ஐரோப்பாவிற்கும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளின் வழியாக இந்தியா, இந்தோ னேஷியா மற்றும் ஆஸ்திரேலியா வரையும் 50,000 – 60,000 ஆண்டுகளுக்கு முன் குடியேறினர். அக்கால கட்டத்தில் கடல் மட்டம் 100மீ.க்கும் அதிகமாக தாழ்ந்திருந்ததால், கண்டச் சரிவுகளின் (Contimental Shelf) பெரும்பகுதி நிலமாயிருந்தது. கடற்கரைகள் இன்றிருப்பதைவிட வெகுவாக அகன்றிருந்தன அப்பகுதிகளின் வழியாகவும் ஆதிமனிதக் குடியேற்றங்கள் ஏற்பட்டன.”
இது தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் தொகுத்து எளிய மொழியில் டோனி ஜோசப் என்கிற எழுத்தாளர் “ஆதி இந்தியர்கள்” என்கிற நூலில் அளித்துள்ளார். “கடந்த சில ஆண்டுகளில், உலகம் முழுக்க ஆயிரக் கணக்கான பண்டைய டி.என்.ஏ. மாதிரிகள் படியெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக் கின்றன. இவற்றின் முடிவுகளை வைத்து யார், எங்கு, எப்போது இடம்பெயர்ந்தார்கள், அவற்றின் மூலம் உலகின் பெரிய மக்கள் தொகைக் குழுக்கள் எப்படித் தோன்றின என்பன குறித்த துல்லியமான வரைபடத்தை உருவாக்க முடிந்திருக்கிறது.” என்று சொல்லும் டோனி ஜோசப் ஆப்பிரிக்காவிலிருந்து இந்திய நிலப்பரப்புக்குள் சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களே முதல் இந்தியர்கள் என்கிறார். 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஈரானின் ஸாக்ரோஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த உழவர் குழுவை இரண்டாவது இந்தியர்கள் என்கிறார்.
இந்த முதல் இரண்டு குழுக்களும் கலந்து உருவாக்கிய விவசாயப்புரட்சியே ஹரப்பா நாகரிகத்தை நோக்கி இட்டுச்சென்றது. கிழக்கு ஆசியாவிலிருந்து காசி,முண்டாரி போன்ற ஆஸ்த்ரோ -ஆசிய மொழிகளைக் கொண்டு வந்த குழு மூன்றாவது இந்தியர்கள். மத்திய ஆசியாவிலிருந்து நான்காவதாக வந்து சேர்ந்த, ஆரியர் என்று தம்மைக்கூறிக்கொண்ட குழுவை நான்காவது இந்தியர் என்கிறார். இன்று இந்தியாவில் வாழும் நாமெல்லோருமே இந்த நான்கு இந்தியர்களின் கலப்பில் உருவாகி வழிவழியாக வந்தவர்களே.
இந்த நூல் சங் பரிவாரங்களால் கடுமையாகத் தூற்றப்பட்டு வருவதே இதன் உண்மைத்தன்மைக்கு ஆதாரம் எனலாம். ஆரிய இனம் இந்தியாவின் பூர்வ குடி என்கிற சங் பரிவாரத்தின் கப்ஸாக்களையும் இந்நூல் அடித்து நொறுக்குவதால் சங்கிகள் மூலத்தில் மிளகாய் அரைத்துப் பூசியதுபோல இந்நூலுக்கு எதிராகக் கூக்குரலிட்டு வருகிறார்கள். இத்துடன் சு.கி.ஜெயகரன் எழுதிய “குமரி நில நீட்சி” என்கிற புத்தகம் குமரிக்கண்டம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பதற்கான அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களைத் தந்துள்ளது. இந்த இரு நூல்களையும் சேர்த்து வாசிக்க வேண்டும். இவ்விரு புத்தகங்கள் சில முக்கியமான முடிவுகளுக்கு நம்மை இட்டுச்செல்கின்றன.
தமிழ் இனத்தின் வரலாறு தெற்கேயிருந்து அல்ல. ஆதி மனிதன் தமிழன் அல்லன். உலகின் எல்லா மனிதர்களும் ஆப்பிரிக்காவிலிருந்து நடந்து நடந்து பரவியவர்களே.
அப்படியானால் நாம் யார்? தமிழர்களாகிய நாம் எங்கிருந்து வந்தோம்? –
“Journey of a Civilization Indus to Vaigai’ (ஒரு நாகரிகத்தின் பயணம்- சிந்து வெளியிலிருந்து வைகை வரை) என்கிற தன் ஆய்வு நூலில் திரு. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் மேற்குறிப்பிட்ட நூல்களின் தொடர்ச்சியாக புதிய கருதுகோள் ஒன்றை முன் வைக்கிறார். ஹரப்பா நாகரிகம் சிதைந்த பிறகு அங்கிருந்த மக்கள் எங்கே சென்றார்கள்? வடக்கிலிருந்து நகர்ந்து நகர்ந்து அவர்கள் தெற்கே வந்தார்கள். ஊர்ப்பெயர் ஆய்வுகள் மற்றும் சங்க இலக்கியத்திலுள்ள அகச்சான்றுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு இதை அவர் நிறுவுகிறார். ஹரப்பா விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்று என்கிறார். தமிழி, கொற்கை, வஞ்சி போன்ற ஊர்ப்பெயர்கள் ஆப்கானிஸ்தான் தொடங்கி தமிழகம் வரையிலும் நெடுகிலும் இருக்கின்றன.
பிடிமண் எடுத்துவருவதுபோல மக்கள் இடம் பெயரும்போது புதிய குடியேற்றங்களுக்கு தம் ஊர்ப்பெயரையே வைப்பது மரபு. அதன் வழித் தம் ஊர் நினைவுகளையும் அந்த வாழ்வையும் மீட்டெடுத்துக்கொள்கிறார்கள். சங்க இலக்கியம் அது எழுதப்பட்ட சமகாலத்தைப் பற்றிய இலக்கியமாக மட்டும் இல்லாமல் மீள் நினைவுகளையும் பேசுகிறது. இமயமலையில் உள்ள எருதுகளைப்பற்றியும் தார்ப்பாலைவனத்து ஒட்டகங்கள் பற்றியும் மேற்கிலிருந்து வீசும் வெப்பக்காற்று பற்றியும் அது பேசுவதெல்லாம் இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்குமான இலக்கியமாக அது இருப்பதை நிறுவுகிறது என்கிறார். வைகைக் கரையின் கீழடி வரையிலான தொல்லியல் ஆய்வுகளையும் வரலாற்றுத் தரவுகளையும் கொண்ட மிக முக்கியமான ஆய்வாக இந்நூல் விளங்குகிறது.
ஆக, கதை இப்போது தமிழ்த்தேசியர்களின் கற்பிதங்களையும் காலி செய்து விட்டது. நம்முடைய மூதாதையரும் ஆப்பிரிக்க மண்ணில் தோன்றியவரே. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தேயெல்லாம் மனிதர்களே தோன்றியிருக்கவில்லை. டினோசர்கள் தோன்றி அழிந்த பிறகுதான் இந்தியத்தட்டு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிந்து நகரத்துவங்கியது. அப்போது மனித இனமே தோன்றியிருக்கவில்லை.
இன்றைக்கும் தமிழ்நாட்டின் குமரிப்பகுதியில் மலையாளம், தமிழ் என இருமொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் கன்னடமும் தமிழும் பேசும் மக்கள் இருக்கின்றனர். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தெலுங்கும் தமிழும் புழங்குகின்றன. மதுரையில் சௌராஷ்ட்ரா, தமிழ் என இருமொழியாளர்கள். ஆந்திராவிலிருந்து நாயக்க மன்னர்கள் இங்கு ஆண்ட காலத்தில் புலம் பெயர்ந்து வந்து தமிழ்நாட்டின் கரிசல் வட்டாரத்திலும் கோவைப்பகுதியிலும் குடியேறிய மக்கள் இன்றளவும் தெலுங்கும் தமிழும் பேசுகிறார்கள், உருதும் தமிழும் என இருமொழி பேசும் இஸ்லாமியத் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தமிழர்கள் என்பதை மறுக்கும் தமிழ்த் தீவிர தேசியவாதிகளும் இருக்கிறார்கள். எளிய அருந்ததியர் மக்களைக்கூடத் தெலுங்கர்கள் எனச்சொல்லி வெளியேறச்சொல்லும் குரல்களை நாம் கேட்டிருக்கிறோம். மொழித்தூய்மை வாதம் இனத்தூய்மை வாதம் பாசிசத்தை நோக்கித்தான் இட்டுச்செல்லும்.
அடையாள அரசியலை எதிர்கொள்ள
தமிழ் மொழிக்கென்று சில தனித்தன்மைகளும் செறிவான எழுத்துப்பாரம்பரியமும் உலகில் எம் மொழியிலும் காணக்கிடைக்காத திணைக்கோட்பாடும் பெருமளவுக்கு மதச்சார்பற்ற சங்க இலக்கியமும் போன்ற சிறப்புகள் உள்ளன. அவற்றுக்காக நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். அவற்றைப் பேசவும் வேண்டும். ஒடுக்கும் தேசிய இனம் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற உரையாடல் மார்க்சியத்தில் உண்டு. பொருளாதாரச் சுரண்டல் அல்லாத பிறவகைச் சுரண்டல்களும் மார்க்சிய உரையாடலில் உண்டு. அவற்றை அறிவியல்பூர்வமாக முன்னெடுப்பது அவசியம்.
எப்போதும் அடையாள அரசியல் எழுப்புகின்ற முழக்கங்கள் கோரிக்கைகளில் அடையாள அரசியல் அல்லாத சில நியாயமான பிரச்னைகளும் இருக்கும். ஆவேசமான உணர்ச்சிகளுக்கு அப்பால் துலக்கமாகும் அத்தகைய கோரிக்கைகள் மீது அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ்த்தேசிய இயக்கத்திற்கு நீண்ட கால வரலாறு இருக்கிறது. அது ஒருபடித்தானதாகவோ, இடையறாத் தொடர்ச்சி உடையதாகவோ இல்லை என்றபோதும். எப்போது என்ன பெயரில் தமிழ்த் தேசிய அரசியல் எழுந்தாலும் இந்த வரலாற்றி லிருந்து நெருப்பெடுத்துத் தங்கள் பந்தங்களை அவர்கள் பற்ற வைப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களைப் பின் தொடரும் எளிய மக்களுடன் அவர்களைப் பொருட்படுத்தி உரையாடலைத் தொடர வேண்டும்.
நன்றி: மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் (ஜூலை)
தமிழ் நாட்டின் வளர்ச்சியும் திராவிட இயக்கமும் – பேரா. அருண்கண்ணன்
சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியானதாக இல்லை. சில மாநிலங்களின் வளர்ச்சி மேலை நாடுகளோடு ஒப்பிடும் அளவிற்கும் சில மாநிலங்களின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கும் இருந்துள்ளன. 90 களில் நடைமுறைப் படுத்தப்பட்ட தாராளமயம், தனியார் மயம், உலகமயம் கொள்கைகள் மாநிலங்களுக்கு இடையிலான இந்த வேறுபாட்டை மேலும் கூர்மைபடுத்தியுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்ததற்குப் பிந்தைய சூழலில் மாநிலங்கள் / பிராந்தியங்களின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிப் போக்கால் பெரிதும் தாக்கம் பெறுகிறது. ஆகையால் மாநிலங்கள் / பிராந்தியங்களின் வளர்ச்சிபற்றி ஆய்வுகள் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளன. இந்த பின்னணியில் பகவதி மற்றும் சென் இடையிலான இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேறுபாடுகள் குறித்த விவாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இங்கு குஜராத்தின் வளர்ச்சி பற்றி ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டன. அதே போன்று ‘கேரள மாதிரி’ யின் வளர்ச்சி குறித்தும் இங்கு பல்வேறு உரையாடல்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதில் குஜராத் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அடைந்திருந்தாலும் சமூக வளர்ச்சியிலும் மானுட மேம்பாட்டுப் புள்ளிகளிலும் போதுமான வளர்ச்சி பெறவில்லை. அதே போல் கேரளா சமூக வளர்ச்சியிலும் மானுட மேம்பாட்டுப் புள்ளிகளிலும் பெரும் முன்னேற்றங்களை அடைந்து இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள முன்னணி மாநிங்களில் ஒன்றாக திகழ்கின்றது. அதேவேளையில் சமூக வளர்ச்சியில், மானுட மேம்பாட்டுப் புள்ளிகளிலும் பெரும் முன்னேற்றங்களை அடைந்த முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியின் காரணங்களை ஆராய்ந்து புள்ளி விவரங்களுடன் இந்திய அளவிலும் மேலும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டும் எப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவம் வாய்ந்தது என்பதை விளக்குகிறது. பேராசிரியர் கலையரசன் மற்றும் பேராசிரியர் விஜயபாஸ்கர் இணைந்து எழுதிய “தி திராவிடியன் மாடல்” (The Dravidian Model) என்கிற ஆங்கில புத்தகம்.

இந்தப் புத்தகம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. பாரதிய ஜனதா மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் செயல்படுகின்ற பல வலது சாரிகளும் ஏதோ தமிழகம் இந்தியாவில் பின்தங்கிய மாநிலம் போன்றும் 50 ஆண்டுகால திராவிட இயக்கக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பெரிதும் பின்னடைவை சந்தித்திருக்கிறது போன்றதுமான ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய சூழலில் இந்த புத்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படவேண்டும். அதேபோல் அவர்கள் பெரிதும் கொண்டாடுகின்ற குஜராத்தைவிட கல்வி சுகாதரம் போன்ற காரணிகளில் தமிழகம் முன்னேறி உள்ளதை புள்ளிவிவரங்களுடன் விவரித்துள்ளது, மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
பார்ப்பன எதிர்ப்பும் சனாதன இந்து மதத்திற்கு எதிரான செயல்பாடுகளும் தமிழக வரலாற்றில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளன. கிறித்துவ மிஷினரிகளின் பங்களிப்பின் காரணமாக கல்வி பெற்ற பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பார்ப்பன ஆதிக்கத்திற்கெதிரான செயல்பாடுகள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்ததை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். அதன் நீட்சியாக உருவான நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் போன்ற அமைப்புகள் தமிழகத்தில் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கியதில் முக்கியமான பங்கு வகித்துள்ளன. இடதுசாரிகள் நில சீர்திருத்தத்தை மறுபங்கீட்டிற்கும் சமத்துவத்திற்கும் முக்கியமாக கருதிய பொழுது திராவிட இயக்கங்கள் அதில் இருந்து சற்று வேறுபட்டு நவீன கல்வியை விரிவாக்கி அதில் பார்ப்பனரல்லாத மற்ற சமூகத்தினர் அதிகம் பயன் பெற வேண்டும் என்றும் மேலும் நவீன தொழில் துறைகளை வளர்த்து அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதில் பார்ப்பனரல்லாத மற்ற சமுகத்தினர் அதிகம் பயன் அடைய வேண்டும் என்பதை பிரதான கொள்கையாகக் கொண்டு செயல்பட்டனர். இங்கு நிலவிய பார்ப்பனிய ஆதிக்கத்தையும் சாதிய வேறுபாடுகளை களைவதற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பார்ப்பனர்கள் அல்லாத மற்ற சமூகத்தினர் பங்கு பெறுவதே சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியமான ஆயுதமாக திராவிட இயக்கம் கருதியது. இதுவே சாதியைக் கடந்து தமிழ் தேசியம் என்கிற ஒரு குடையின்கீழ் பரந்துபட்ட மக்கள் திரளை திராவிட இயக்கங்கள் திரட்டும் வாய்ப்பை வழங்கியது. இந்த அணிதிரட்டலை தமிழகத்தில் ஏற்பட்ட ஒரு தனித்துவமான வளர்ச்சி போக்கிற்கு முக்கியமான காரணியாக பார்க்கின்றனர் புத்தகத்தின் ஆசிரியர்கள்.
இந்த மாற்றத்திற்கான ஆரம்ப விதைகள் 1920களில் நீதிக் கட்சியின் ஆட்சியில் தூவப்பட்டன. 1922ஆம் ஆண்டு பனகல் ராஜா அவர்களின் தலைமையில் இருந்த அரசு முதல் முதலில் சென்னையில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தது. நீதிக்கட்சிக்குப் பிறகு 1937இல் ஆட்சிக்கு வந்த ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் ஆன காங்கிரஸ் அரசு இந்த முயற்சிகளை கைவிட்டது. அதுபோல இவருடைய ஆட்சி காலத்தில் 600 பள்ளிகள் நிதியைக் காரணம் காட்டி இழுத்து மூடப்பட்டன. அவருக்குப் பிறகு 1954இல் ஆட்சிக்கு வந்த காமராஜரின் தலைமையிலான அரசு இந்த பள்ளிகளை மீண்டும் திறந்ததோடல்லாமல் மேலும் சில பள்ளிக்கூடங்களையும் திறந்து வைத்தது. அத்துடன் 1956ஆம் ஆண்டு மீண்டும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தையும் அமல்படுத்தியது. 1967இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசாங்கம் மையப்படுத்தப்பட்ட உணவுக்கூடங்களை உருவாக்கி சமைப்பதற்கென்று தனி பணியாளர்களை நியமித்து இத்திட்டத்தை மேலும் செழுமைப்படுத்தியது. இதை 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.யாரின் தலைமையில் இருந்த அதிமுக அரசு மேலும் இத்திட்டத்தை விரிவு படுத்தி மேல் வகுப்பு மாணவர்கள் மற்றும் நகர்ப்புற மாணவர்களும் பயன் பெறச் செய்தது. இந்த மதிய உணவுத் திட்டம் ஏழை எளிய மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கும் தொடர்ந்து படிப்பதற்கும் பெரும் உந்து சக்தியாக இருந்ததை எடுத்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.
நீதிக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான நடேச முதலியார் அவர்கள் சென்னையில் பார்ப்பனர்கள் அல்லாத மாணவர்கள் தங்கி படிப்பதற்கு திராவிடியன் ஹோம் என்ற பெயரில் விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இது போன்ற நீதிக் கட்சியின் ஆட்சி காலத்தில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் படிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1967 இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசாங்கம் ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ததுடன் மேலும் தலித்துகள் மற்றும் பின் தங்கிய சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கு தங்கும் விடுதிகளை திறந்து வைத்தது. இதோடு மட்டுமல்லாமல் நீதிக் கட்சி காலம் தொடங்கி பின்னால் ஆட்சிக்கு வந்த இரண்டு திராவிட கட்சிகளும் மாணவர்களுக்கு நிதி உதவி, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கியது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி வழங்குவது போன்ற பல்வேறு புதுமையான திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தின. பொதுவாக அகில இந்திய அளவில் சுதந்திரத்திற்குப் பிறகான காலங்களில் அரசு கல்விக்கு ஒதுக்கிய நிதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறும் வண்ணம் பள்ளிக்கல்விக்கு பயன்பட்டதை விட மேல் தட்டு வர்க்கம் பயன் படும் வண்ணம் உயர்கல்விக்கு மடை மாற்றப்பட்டதாக மைரோன் வெய்னர் போன்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதில் இருந்து வேறுபட்டு தமிழ்நாடு தொடர்ச்சியாக பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளதை இந்தப் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இதுவே 2017-18 ஆம் ஆண்டின் நிலவரப்படி கல்விகற்றோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு இந்தியாவில் நான்காம் இடத்தில் உள்ளதற்குக் காரணம் ஆகும் என்பதையும் நூல் கூறுகின்றது.
அதே போல் உயர்கல்விக்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது தமிழ்நாடு. 1954ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 54 கல்லூரிகளும் 2 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. உயர்கல்வித்துறை அபார வளர்ச்சி அடைந்து 2020 யின் நிலவரப்படி தமிழ்நாட்டில் 2608 கல்லூரிகளும் 59 பல்கலைக்கழகங்களும் உள்ளன. 1967க்கும் 1977க்கும் இடையில் தி.மு.க.வின் ஆட்சி காலத்தில் வருடத்திற்கு சராசரியாக 9 கல்லூரிகள் தொடங்கப்பட்டு அதற்கு முன்னர் 105 ஆக இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 194 ஆக இரட்டிப்பு அடைந்தன. அதற்கு பிறகும் தொடர்ச்சியாக கல்லுரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 1980 களுக்கு பிறகு தொழில் நுட்ப கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தன.

Book by Kalaiyarasan A and Vijayabaskar M| Cambridge University Press | பக்.220 | ரூ.950
மேலும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது போன்ற ஆக்கபூர்வமான தலையீட்டின் காரணமாகவே 2017-18யின் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில்18-23 வயதுக்கு உட்பட்டவர்களில் 50% பேர் உயர்கல்வி பயிலுகின்றனர். இது கேரளா போன்று கல்வியில் பெரும் முன்னேற்றங்களை அடைந்த மாநிலங்களை விட அதிகமாகும். தமிழ்நாட்டின் கல்வி ஜனநாயகப் படுத்தப்பட்டு அனைத்து சாதியினரும் கல்வியில் பங்கேற்கும் வண்ணம் சுதந்திரத்திற்கு பின்னான மாற்றங்களை சுட்டிக்காட்டுகின்ற அதேவேளையில் 1980களுக்குப் பிறகு தமிழகத்தில் பெரிதும் கல்வி குறிப்பாக உயர்கல்வி தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் கல்விபெற நேர்ந்திருந்தாலும் கல்வியின் தரம் போன்று பல்வேறு நெருக்கடிகள் உருவாகி உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல். கல்விக் கட்டணம் வரையறை இட ஒதுக்கீடு போன்ற சில தலையீடுகளை தனியார் கல்வி நிறுவனங்களில் திராவிட இயக்க அரசுகளால் செய்ய முடிந்தாலும் கூட அதைத்தாண்டி கல்வி தளத்தில் ஏற்பட்டுள்ள வேறு பல நெருக்கடிகளை சரிசெய்யப்படாமல் இருப்பதையும் கவனப்படுத்துகிறது இந்த நூல்.
நீதிக்கட்சி ஆட்சியின் காலத்தில் பார்ப்பனர் அல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் மருத்துவ படிப்புகளை படிப்பதற்கான வாய்ப்பை நீதிக்கட்சி உருவாக்கிக் கொடுத்தது. மருத்துவக் கல்வியில் 1950ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டின் காரணமாக பார்ப்பனர் அல்லாத சாதியைச் சேர்ந்தவர்களும் கிராமப்புற மாணவர்களும் மருத்துவத்துறையில் பெரிதும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பை தொடர்ச்சியாக திராவிட இயக்கங்கள் உருவாக்கிக் கொடுத்தன. இதன் மூலம் உருவான பெருவாரியான மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் இந்த அரசுகள் தொடர்ந்து மேற்கொள்கின்றன. பொதுவாக மருத்துவத்திற்கான அரசின் நிதி ஒதுக்கீடு மற்ற மாநிலங்களைவிட பெரிதும் வேறுபடாவிட்டாலும் கூட தமிழகம் மருத்துவத் துறையில் மிகச் சிறந்த மாநிலமாக விளங்குவதில் பல காரணிகள் உள்ளன. அதில் மருத்துவப்படிப்பில் இடஒதுக்கீடும் முக்கிய பங்காற்றுகிறது.
குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்து ஐக்கிய நாடுகள் சபை (united Nations) நிர்ணையித்த மிலினியும் வளர்ச்சிக்கான இலக்கை (Milenium Development Goals) அடைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. அதேபோல் நீட் போன்ற தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பின் நியாத்தையும் அது எப்படி நம்முடைய மருத்துவத்துறையில் பெற்ற முன்னேற்றங்களுக்கு தடையாக இருக்கப்போகிறது என்பதையும் எடுத்து கூறுகிறது இந்நூல். மகப்பேறு காலத்தில் 99% தலித் பெண்கள் மருத்துவமனைகளை தமிழ்நாட்டில் அணுகுகின்றார்கள். இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உயர் சாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். பல மருத்துவ குறியீட்டில் தமிழ்நாடு எந்தளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிற அதேநேரம் கல்வியை போலவே மருத்துவமும் பெரிதும் 90 களுக்குப் பிறகு தனியார் மயமாகியுள்ளதுடன் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதில் ஆதிக்கம் செலுத்துவதையும் சுட்டிக்காட்டுகின்றது இந்நூல்.
நீதிக்கட்சி ஆட்சியின் காலத்தில் பல முக்கியமான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 1923 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவும் சட்டமும் ஒன்றாகும். இது இங்கு புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு உதவி வழங்கி இங்கு தொழில் துறையை வளர்த்தெடுப்பதற்கான முக்கியமான முயற்சியாகும். சுதந்திரத்துக்கு முந்திய தமிழகத்தில் ஒரு அளவுக்கு தொழில் துறை வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்றைய பாம்பே, வங்காளம் போன்ற மாகாணங்களை ஒப்பிடும் பொழுது சற்று பின்தங்கியே இருந்தது. 1950களில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, என்கிற கோஷம் வலுவாக திராவிட இயக்கங்கள் முன்வைத்தது. தமிழகம் தொடர்ந்து தொழில் துறையில் புறக்கணிக்க படுகிறது என்று அந்த நேரத்தில் இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு திராவிட இயக்கங்கள் நெருக்கடி கொடுத்ததின் விளைவாக திருச்சியில் பெல், ஆவடியில் ராணுவ பாதுகாப்பு வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கங்கள் தொடங்கப்பட்டன. அதோடு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் போன்றவை உருவாக்கப்பட்டன. 1967 இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை மேலும் வளர்த்தெடுத்தது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் மூலமாக ஸ்பிக் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இதுபோல் 1990 கள் வரை இரண்டு திராவிட கட்சிகளும் பல்வேறு தொழில் துறை நிறுவனங்கள் தொடங்கப்பட காரணமாக இருந்தனர்.1990 களுக்குப் பிறகு உலக மயமாக்கலால் ஏற்பட்ட மாற்றங்களை தமிழகம் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு சாப்ட்வேர், ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் அபார வளர்ச்சி அடைந்தன. இந்த வளர்ச்சி போக்கில் உருவான தமிழக நிறுவனங்களில் 68% தனியார் நிறுவனங்கள் இடை நிலை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் 14% தனியார் நிறுவனங்கள் தலித்துகளுக்கும் வெறும் 18% தனியார் நிறுவனங்கள் மட்டுமே உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் சொந்தமானதாக உள்ளன என்கிற புள்ளிவிவரத்தின் வாயிலாக இங்கு மூலதனம் எவ்வாறு ஜனநாயகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இது போன்ற பல புள்ளிவிவரங்கள் வாயிலாக கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்துறை போன்றவற்றில் ஒப்பீட்டளவில் தலித்துகள் பெற்றுள்ள முன்னேற்றங்களை சுட்டிக்காட்டுவதின் மூலமாக திராவிட இயக்கங்கள் மேல் உள்ள விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளனர்
கேரளா, மேற்குவங்கம் போன்று இங்கு நிலச்சீர்த்திருத்தம் நடைமுறைப் படுத்தப்படாவிட்டாலும் கூட வேறு பல அரசுத் தலையீட்டின் மூலமாகவும் போராட்டங்களின் மூலமாகவும் இங்கு நிலம் பார்ப்பனர் மற்றும் வேளாளர்கள் போன்ற நில உடமையாளர்களிடம் இருந்து மற்ற சாதியைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளிடம் நிலங்கள் கைமாறியுள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 1970 களில் 70% மாக இருந்த சிறு குறு விவசாயிகள் 2016ஆம் ஆண்டின் கணக்குப் படி 94% மாக உள்ளனர். அதே போல் விவசாயத்தில் இருந்து வெளியேறி வேறு தொழில்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மற்ற எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தில் மிகவும் அதிகமாகும். 1993-2017 காலகட்டத்தில் விவசாயத்தில் இருந்து தமிழ்நாட்டில் மட்டும் 65 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறியுள்ளனர். மார்க்ஸ் கூறுவது போல் தொழிலாளர்களின் சேமப்படை (Reserve Army of Labour) என்பது முதலாளித்துவ வளர்ச்சியில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகும். எனவே விவசாயத்தில் இருந்து வெளியேறிய அனைவருக்கும் நிரந்தரமான தரமான வேலை வாய்ப்பு என்பது கடினமான ஒன்றாகும். 2017-18 கணக்குப்படி ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் வேலை செய்பவர்களில் வெறும் 46% தொழிலாளர்கள் மட்டுமே மாத வருமானம் பெறும் நிரந்தர பணிகளில் உள்ளனர். திராவிட இயக்கங்கள் பல ஆக்கபூர்வமான முயற்சிகளை தொடர்ச்சியாக செய்து வந்தாலும் 90 களுக்கு பிறகு தனியார் துறைகளை சார்ந்த வளர்ச்சி என்பது இவர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
2008க்குப் பிறகு உலகப் பொருளாதாரம் தொடர்ச்சியாக நெருக்கடியில் இருந்து வரும் நிலையில் கொரோனாவின் காரணமாக அது மேலும் கூர்மை அடைந்துள்ளது. இதன் தாக்கம் தமிழகத்திலும் பிரதிபலிப்பதை நாம் கடந்த பல ஆண்டுகளாக காண முடிகிறது. 2014இல் இருந்து ஆட்சி செய்கிற பா.ஜ.க அரசு மாநிலங்களுக்கு இருந்த பல உரிமையை பறித்து வருகிறது. ஜி.எஸ்.டி. போன்றவற்றால் மாநிலங்களுக்கு இருந்த நிதி ஆதாரங்களை பறித்துவிட்டன.
இது போன்ற சவால்களை எதிர்கொண்டு நிலைப்புரு வளர்ச்சியை உத்திரவாதம் செய்யவும், சமூக நீதியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்யவும் எவ்வாறு திராவிட இயக்கங்கள் செயல்பட போகின்றன என்பதை வரலாறுதான் பதில் சொல்லும். தமிழ் நாட்டின் தனித்துவமான வளர்ச்சி போக்கிற்கு திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. அதேபோல் தமிழகத்தில் முகலாயர்களின் ஆட்சியில் தொடங்கி அதன் பிறகு வந்த காலனிய ஆட்சியாளர்கள் மற்றும் கிருத்துவ மிஷினரிகள் இதற்கான அடித்தளம் அமைத்து கொடுத்ததையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு நூற்றாண்டு கால தமிழகத்தின் சமூக பொருளாதார வரலாற்றை ஒரு சேர படிப்பதற்கான வாய்ப்பை நமக்கு இந்தப் புத்தகம் வழங்கியுள்ளது.
– பேரா. அருண்கண்ணன்
இயக்குநர்- தொழில் கல்விக்கான லயோலா கல்விக்கழகம்,
லயோலா கல்லூரி,
சென்னை
நன்றி: புத்தகம் பேசுது