Kaviyoviyathodar Yuthageethangal - Oru Kondattam Irandu Voorvalangal 29 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள் 29

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள் 29 – நா.வே.அருள்




ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள்
*****************************
அதிகாரம்
தனது இறுதி ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருந்த போது
அமைதி
தன் முதல் ஊர்வலத்தை நடத்தத் தொடங்கியது.

இராவணனுக்குச் சமமாக
சுருட்டிவைத்திருந்த சொந்த ஆசனத்திலமர்ந்த
அநுமனைப் போல
அதிகாரங்களின் ஊர்வலத்திற்கு எதிராக
அமைதியின் முதல் ஊர்வலம்!

கருப்பையிலிருந்து வெளிவருகிற குழந்தையைப்போல
புரட்சி
விவசாயியின் கருப்பையிலிருந்து
இந்திய மண்ணை முகர்ந்து பார்க்கிறது.

அதிகாரம் –
தனது இறுதி முடிவை
சட்டங்களின் மூலமாக எழுதுகிறது
வன்முறையின் மூலமாக அமல்படுத்துகிறது
அமைதியின் காவலர்களோ
சமாதானப் புறாக்களை வானில் பறக்கவிட்டு
மனித குலத்தைப் பாதுகாக்கிறார்கள்.

விவசாயி
காட்டின் மகன்
அவன் கர்ப்பத்தில் காடு
மரங்களை நாற்காலியாக்கியவர்கள்
ஒரு காட்டையே அழிக்கிறார்கள்
மேலும் அந்த நாற்காலியைச் சுடுகாட்டில்
சிதையைப்போல அலங்கரிக்கிறார்கள்.

எரிமலைகள்
டிராக்டர்களில் ஊர்வலம்போகப் பழகிக் கொண்டன
எரிமலைக்குள்
அக்கினியின் வரலாறு
ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டது.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Viduthalai 28 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- விடுதலை 28

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: விடுதலை 28 – நா.வே.அருள்




விடுதலை
****************
ஒரு விவசாயியின் அரிசியில்
கடவுளின் கையெழுத்து இருக்கிறது
சாத்தான்களால் படிக்க முடிவதில்லை.

ஒரு விவசாயி
மணிலாவை உரிக்கிறபோது
உள்ளே உருளும் இரண்டு பிணங்கள்!.

வயக்காட்டின் சேற்றில்
விவசாயிகளின் வாழ்க்கைக் குறிப்பு இருக்கிறது.

அவர்கள் குடிக்கும் கூழ்
உங்கள் மதுக்கோப்பைகளில்
போதையைத் தருவதில்லை.

குருவிக்காரப் பெண்மணிகள்
மார்பில் குழந்தைகளைக் கட்டி வருவதுபோல
உழைத்துக் களைத்த விவசாயப் பெண்களின்
மடி நிறைய கீரைக் குழந்தைகள்.

இரவு எட்டு மணிக்கு மேல்தான்
அவர்கள் அடுப்பு புகைய ஆரம்பிக்கிறது.
அப்போதெல்லாம் உங்கள்
மதுச் சாலைகளில்
கோப்பைகளின் கிண்கிணியோசைகள்.

அவர்களின் நெற்றிப் பட்டைகள்
தேசியக் கொடிகள்
அவர்களின் வயிற்றுச் சுருக்கங்கள்
தேச வரைபடம்.

மனித மூக்குக்கு
மூக்கணாங்கயிறா?
அவர்கள் காளைகளின் திமில்கள்.

உங்கள் காதுகளில் அடைத்திருக்கும்
பஞ்சினை அகற்றித்தான்
அவர்களின் காயங்களுக்குக் கட்டுப்போட முடியும்.

முன்னோர்களின் ரத்தக்கறை படிந்த
விடுதலை மண்ணை விழுங்கிச் செரிக்க
நவீன சட்டங்களின் கறுப்பு எழுத்துகள் திணறுகின்றன.

உயிரை நீக்கியபின்
பிணத்திற்கு மருத்துவம் பார்க்கிற
விசித்திரங்களே
புதிய வேளாண் சட்டங்கள்!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்
அவர்களின் டிராக்டர்களுக்கு
விடுதலை விவசாயம் தெரியும்!!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Sundeligal 27 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- சுண்டெலிகள் 27

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: சுண்டெலிகள் 27 – நா.வே.அருள்




சுண்டெலிகள்
*********************
ஐயனாரும் சுடலை மாடனும்
மதுரை வீரனும் தூரத்திலில்லை
அவனது
குறுவயல்களின் கூப்பிடு தூரத்தில்!

கோவணம் போலவே இறுக்கிக் கட்டிய
கோபத்திற்கு
அழுங்கல் மணம்!

பல்லிடை வைத்துக் கடித்த
பச்சை மிளகாயின்
கண் எச்சலிடும் காரத்தில்
அடிவயிற்று ஆத்திரத்தை
மயக்கிக் களிப்பேற்றும்
கம்மங்கூழ்!

கைப்பிடி சாணியில்
கட்டைவிரல் குங்குமம்
வரப்புமேல பிள்ளையார்
வந்து உக்கார்ந்தால்தான்
நாற்றங்கால் சேடையில்
வெரகால் விடுவார் வீரபத்ர மேஸ்திரி.

ஐயனார் சுடலை மாடன்
மாரியம்மா, மதுரை வீரன்
பேச்சியம்மா, பெரிய பாளையத்தா
காட்டேரி, கறுப்பு
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு சாமி
குலசாமி இல்லாமக் கும்பி நெறயாது.

குதிருக்குள் தானியங்கள் கொட்டும்முன்
உள்ளே குந்தியிருந்து குலம் காப்பவர்கள்
வரவூர் ஐயனாரப்பன்,
தீவனூர் பொய்யாரப்பன்,
பிடாரிப்பட்டுக் குளுந்தியம்மாள்.

இப்போ வயலும் சொந்தமில்ல
வாழ்க்கையும் சொந்தமில்ல

குடித்த கள் மயக்கத்தில்
குப்புற விழுந்து கிடக்கிறார்கள்
குலசாமிகள்!
காட்டு யானைகள் மேல்
கிஞ்சித்தும் பயமின்றி ஊர்ந்து செல்கின்றன
இரை பொறுக்கிக் கிடங்கில் சேர்க்க
எறும்புகள்!!!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Nakku Vithaikaran 26 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- நாக்கு வித்தைக்காரன் 26

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: நாக்கு வித்தைக்காரன் 26 – நா.வே.அருள்




ஊருக்கு ஊர் நுழைகிறான்
உடையெல்லாம் தந்திரம் தைத்த
உள்ளூர் மந்திரவாதி

ஊருக்குள் கூடாரமடித்து
முட்டைக்குள் குட்டிச்சாத்தானை
மோதி மோதி அழைக்கிறான்.

பாய்ந்து எடுப்பது போல்
பாவனைகள் செய்து செய்து
பாசாங்காகத் திரும்பியதும்
அவன்
மொழியின் திருகலில்
கூடாரத்து மூலையிலிருக்கும்
முட்டை
குதித்துக் குதித்து ஆடும்.

இத்தனை காலமும்
பாம்பு பிடிக்காத கீரியை
இன்றைக்கும்
ரத்த வாந்தி பயத்துடன்
ரசிக்கிற கூட்டம்போல்…
வேடிக்கை பார்க்கவென்றே
வெறும் கூட்டம் காத்திருக்கும்
அதற்கு
விடுதலை காலம் கூட
ஒரு வேடிக்கைதான்.

மை வைச்ச முட்டைக்குள்ள
குட்டிச்சாத்தான் வருமென்று
கூட்டம் காத்திருக்கும்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Ruthra Thandavam 25 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- ருத்ர தாண்டவம் 25

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ருத்ர தாண்டவம் 25 – நா.வே.அருள்




கடவுளிடம் ஆயுதமாக இருந்த
கலப்பையை
ஒரு விவசாயி
அட்சயப் பா த்திரமாக்குகிறான்.

ஏரியின் மதகுகளை
ஒரு தாயின் மார்பகங்களாக்குகிறான்.

ஒவ்வொரு இலையின்
நடுமுதுகு நரம்பும்
விவசாயியின் முதுகெலும்பு.

பாம்புப் பிடாரன்கள் பயமுறுத்திய போதும்
நாகங்கள் மேல் புரள
புஜங்கள் இரண்டும் புடைத்தெழ
நடனமிடும் சுடலையாண்டிகள்
விவசாயிகள்.

கங்கைப் பிரளயம் சிரசில் பாய
காளையின் திமிலில்
கால் பதித்தாடும் கபால சிவன்க்ள்

அடிக்கும் உடுக்கையில்
அதிர்கிறது உலகம்.
புலித்தோலாடை பூமியில் புரள
மேனியில்
பகைவர்களின்
மண்டையோட்டு மாலைகள்…..

இப்படி….இப்படியாகத்தான்….
புழுதியை
உடல் முழுதும் பூசிக்கொண்ட ருத்ரமூர்த்திகளின்
சுடலைத் தாண்டவம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஆனால்
போலி கடவுளர்களோ
கைலாயத்தைக்
களவாடி வைத்திருக்கிறார்கள்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar - Boomi 24 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் - பூமி 24

கவியோவியத் தொடர்: பீடங்கள் 24 – நா.வே.அருள்



பூமி
******
பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட
விசித்திரமான மூங்கில் கட்டில்களில்
நாற்புறமும் துப்பாக்கிகள் செருகப்பட்டிருந்தன.
அது ஒரு அதிகாரப் பல்லக்கு.

சிலாகிக்கப்பட்ட
துப்பாக்கிக் குழல்களின் வழியேதான்
நாட்டின் விடுதலைப் பகுதிக்குப்
பிரவேசிக்கமுடியுமெனும் அதிகார ஆணை.

கைவிடப்பட்ட பூமியில்
ஏர்க்கலப்பைகள்
சிலுவைகளாக நடப்பட்டிருந்தன
சிலுவையில் அறையப்படத் தயாராயிருக்கும் யேசுக்களுக்கு
மன்னிப்பு வழங்க அவகாசமிருப்பதாக
பிரான்ஹாஸ் மீன்களெனப் பீடிகைச் சிரிப்பு..

‘வெரகால்’ இல் கொப்பளிக்கும் விஷம்
நஞ்சூட்டப்பட்ட வயல்கள்
நெடுகிலும் நெகிழிப் பூக்கள்
கல்லறையின் வணிகப் பயிர்கள்
ஊர்வலத்தின் வரைபடம் இப்படியாகத்தான்
திட்டமிடப்பட்டிருந்தன.

தானிய சேமிப்புக் கிடங்குகளின் வதை முகாம்களில்
காவலிருக்கும்
வெளிநாட்டு சோளக்காட்டு பொம்மைகள்

எங்கெங்கும் தூவப்படும் விதைகளாய்
ஹிரோஷிமா நாகசாகியின்
இந்திய போன்சாய்கள்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar - Peedangal 23 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் - பீடங்கள் 23

கவியோவியத் தொடர்: பீடங்கள் 23 – நா.வே.அருள்




பீடங்கள்
************
ஒரு நாட்டுக்கு
காலத்திற்கு ஏற்ற மன்னனை நியமிப்பது
கடினமான காரியம்.

அவனது சித்திரத்தை
ஒரு பிரபலமான உலைக்களத்தில்
உலோக மனிதனைப்போல வடித்தெடுத்து
வரலாற்றை ஏமாற்ற வேண்டும்.

அதுவும் ஜனநாயக துதிபாடி
வெளிநாடுகளில்
சுற்றிவைக்கப்பட்ட கழிப்பறைத் தாள்களைப்போல
ஓட்டுச் சீட்டுகளின் உருளைகளில்
சுழன்றுவர வேண்டும்.

ரப்பர் பந்தாலான இதயத்தைப்
பொருத்திக் கொள்வதுடன்
கையில் பாசக் கயிற்றுடன்
பறக்கத் தெரிந்த எருமையில் நகர்வலம்.

துப்பாக்கியில் பொருந்துகிற
தோட்டாக்கள்போலக்
கச்சிதமான கண்கள்.

அறிஞர்களின் கொலைகளில் மௌனம்
எறும்பு மிதித்துச் செத்த
யானைக்கு அஞ்சலி

பூமி நாணயமிட
பன்னாட்டு உலோகங்களால் செய்த
புதிய உண்டியல்.
ஏலச் சந்தையில்
விடுதலையின் மியூசிக் ஆல்பம்.

நவீன மன்னனின் கடைசிப் பயிற்சிக் கூடம்
ஏர்க்கலப்பைகளின்
சித்திரவதைக் கூடங்கள்.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்